குரு ஒருவருக்கு அழகான மகள் ஒருத்தி இருந்தாள்.அவளை மணமுடிக்க பலர் போட்டி போட்டனர்.
குருவுக்கு ஒரு யோசனை தோன்றியது.தன் மகளை மணமுடிக்க போட்டி போடுபவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு யார் சரியாக பதில் அளிக்கிறார்களோ அவர்களுக்கே எனது மகளை மணமுடித்து கொடுப்பேன்" என்றார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடினார்கள்.
குரு அவர்களை பார்த்து " உலகிலேயே மிக இனிமையான பொருள் ஒன்று கொண்டு வாருங்கள்" என்றார்.
ஒருவன் தேனை கொண்டு வந்தான். இன்னொருவன் கரும்பை கொண்டு வந்தான். இப்படி எல்லோரும் கிடைத்த இனிமையான பொருட்களை கொண்டு வந்தார்கள்.
வரிசையின் கடைசியில் குருவின் ஏழை சீடனும் நின்றிருந்தான்.
குரு அவனை பார்த்து நீயுமா என்று கேட்டார்.
சீடன் " நான் உங்கள் மகளை காதலிக்கிறேன்" என்று சொன்னான்.
குரு " நீ என்ன கொண்டு வந்தாய்" என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்த பெட்டியை திறந்து காட்டினான்.
அதை பார்த்ததும் குரு அதிர்ச்சி அடைந்தார்.
அது ஒரு மாட்டின் நாக்கு.
குரு "என்ன இது? எதற்காக இதை கொண்டு வந்தாய்?" என்று கேட்டார்.
சீடன் "குருவே நீங்கள் உலகத்திலேயே இனிமையான பொருளை கொண்டு வரச் சொன்னீர்கள். நாக்கை விட உலகில் இனிமையான பொருள் வேறு ஏது? மனிதனுடைய நாக்கை கொண் டு வர முடியவில்லை. அதன் குறியீடாக மாட்டின் நாக்கை கொண்டு வந்தேன். நாவிலிருந்து இனிமையான சொற்கள் வருகின்றன. அதை நோயாளி கேட்டால் குணமடைகிறான். சோகத்தில் இருப்பவன் கேட்டால் மகிழ்ச்சி அடைகிறான்." என்றான்.
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். பாராட்டுகள்" என்றார்.
சீடன் இரண்டாம் கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு "உலகிலேயே கசப்பான ஒரு பொருள் ஒன்று கொண்டு வர வேண்டும்" என்றார்.
மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருட்களுடன் வந்தார்கள்.
ஒருவன் எட்டிக்காயை கொன்டு வந்திருந்தான். இன்னொருவன் வேப்பங்காயை கொண்டுவந்திருந்தான்.
கடைசியாக சீடன் வந்தான்.
அவன் கையில் அதே பெட்டி.
அவன் அதை திறந்து குருவிடம் காட்டினான்.
அதே மாட்டின் நாக்கு.
குரு " நீ என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன், நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டேன், அதே நாவை கொண்டு வந்திருக்கிறாய். இதற்கு என்ன அர்த்தம்?" என்று கோபத்துடன் கேட்டார்.
சீடன் "தீய சொற்களை பேசும் நாவை விட உலகத்தில் கசப்பான பொருள் வேறு உண்டா? அதிலிருந்து வரும் கசப்பான சொற்களை கேட்டால் மகிழ்ச்சியாக இருப்பவனும்
வருத்தப்படுவான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறிவிடுவான். எனவே நாக்கு தான் உலகிலேயே மிகவும் கசப்பான பொருள்" என்று கூறினான்.
சீடனின் அறிவை கண்டு வியர்ந்து குரு தன் மகளை அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.
நாவு ஒரு அதிசய திறவுகோல். சொர்கத்தின் கதவை திறப்பதும் அது தான். நரகத்தின் கதவை திறபப்பதும் அது தான்.
நெருப்புக்கு நாக்கு உண்டு. அது சுடும்.
நாக்கும் நெருப்பை போலவே சிவப்பாக இருக்கிறது. அதும் சுடும்.
நெருப்பினால் சுட்ட புண் ஆறிவிடும். நாவினால் சுட்ட புண் ஆறாது.
நெருப்பினால் விளக்கையும் ஏற்றலாம். வீட்டையும் எரிக்கலாம்.
நாவினால் ஒருவர் வாழ்வில் விளக்கேற்றலாம். அந்த வாழ்க்கையை எரிக்கவும் செய்யலாம்.
பாஸ்பரஸ் எரிக்க கூடியது. அதனால் அதை திரவத்தில் போட்டு வைத்திருப்பார்கள். நாவும் எரிக்க கூடியது. அதனால் தான் அதை இறைவன் ஈரத்தில் வைத்திருக்கிறான்.
நாவு ஒரு பயங்கர மிருகம். அதனால் தான் அதை இறைவன் குகைக்குள் கட்டிப் போட்டு முப்பத்திரண்டு காவலர்களை சுற்றி நிறுத்தி வத்திருக்கிறான்,
அப்படியும் அது பாய்ந்து குதறி விடுகிறது.
நபிகள் நாயகம் அவர்களிடம் ஒருவன் என்னை பாதுகாக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
அதற்கு அவர் அளித்த பதில்
"நா காக்க"