பிரியமானவர்களிடம்
சண்டையிட்ட பின்னர்,
"இனி எப்போதும் பேசுவதில்லை"
என்று முகத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்த பிறகு தான்,
அவர்களை தவிர்ப்பதில் உள்ள
நிஜமான திண்டாட்டம் பெருக்கெடுக்கும். அதுவரை தன்னை சமரசத்திற்கு
தயார் படுத்தாத மனம்,
உரையாடலுக்காய் ஏங்கிச் சாகும்.
அதற்குப் பின்னர் தான்...!
பேசுவதற்கான காரணங்கள் எவ்வழியிலாவது வந்து சேராதா என,
மனம் அங்கலாய்க்கிறது. தப்பித்தவறியாவது
நலம் விசாரித்துவிட மாட்டார்களா என,
மனம் தன்னை
வரிந்து கட்டிக் கொண்டு
கேள்விகளோடு நிற்கின்றது.
பிரிவதற்காக சொல்லப்பட்ட
அத்துனை காரணங்களையும்
பொய்ப்பித்து,
நியாயம் கற்பித்தாவது
"வந்து பேசிவிடு" என்பது போல
மனம் இளகி, உருகி தவிக்கிறது.
தன்னை குற்றப்படுத்திக் கொண்டு நின்றாலும் பரவாயில்லை!
நியாய தர்மங்கள் எல்லாவற்றையும்
ஒதுக்கி வைக்க,
மனம் உத்தேசிக்கிறது.
"நானும் தான்
வருந்திப் போய் கிடக்கிறேன்"
என்பதைக் கூட
வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
மீண்டும் இயல்புக்குத் திரும்ப
மனம் ஆவலுருகிறது.
எங்கோ, எப்போதோ,
யாரெல்லாமோ என,
ஏகப்பட்ட முகங்கள்
நம்மோடு பேசிக் கொண்டிருந்தாலும்,
மனம் ஏனோ
அந்தப் பிரியப்பட்ட முகத்திடம்
மட்டும் தான்,
தன்னை சரணாகதிக்கு
பழக்கி இருக்கிறது.
தனக்கு அதுவரை வாய்த்திருந்த
வேறெந்தக் குரலினாலும்
தான் முழுமை பெறவில்லை
என்பதனை,
அப்போது தான்
உணரத் துவங்குகிறது.
இருப்பின் பிடி தளர்ந்து,
தன்னை விட்டும் பிரியமானவர்கள்
தவறிச் செல்கின்ற
இடத்தை எல்லாம்
கச்சிதமாய் மனம் புரிந்து கொண்டு,
அதனை சரி செய்து கொள்ள
அன்பு எப்போதும்
தவறுவதேயில்லை.