பால் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒன்றரை கப், வெல்லம் - ஒன்றரை கப், தண்ணீர் - 2 கப், பால் - 1 கப், தேங்காய்ப்பால் - அரை கப், ஏலக்காய் (பொடித்தது) - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசி மாவுடன் உப்பைக் கலந்து, கொதிக்கும் நீரைத் தேவையான அளவு சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சி, தனியே வையுங்கள். வெல்லத்தைப் பொடித்து, 2 கப் தண்ணீரை அதனுடன் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் கரையும்வரை கொதிக்க விடுங்கள். பின்னர் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிடுங்கள். இரண்டு கொதி வந்தபின், பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறிதளவு எடுத்து, தேன்குழல் அச்சில் போட்டு, கொதித்துக் கொண்டிருக்கும் வெல்லத் தண்ணீரில் பிழிந்துவிடுங்கள். அதை ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கரண்டிக் காம்பால் லேசாகக் கிளறினால், துண்டுகளாக உடையும். மீண்டும் கொதி வரும்போது, சிறிதளவு மாவை அச்சில் போட்டு, அதில் பிழியுங்கள். ஒரு நிமிடம் கழித்து கரண்டிக் காம்பால் கிளறுங்கள். இதேபோல் எல்லா மாவையும் செய்துகொள்ளுங்கள் (மறந்தும்கூட கரண்டியால் கிளறி விடாதீர்கள். பிழிந்த மாவு எல்லாம், உருவம் தெரியாமல் கரைந்துவிடும்). மாவு முழுவதையும் பிழிந்து முடித்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வேகவிடுங்கள். கடைசியில் தேங்காய்ப்பால், பால், நெய், ஏலக்காய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, இளம்சூடாகப் பரிமாறுங்கள். அதிக சூட்டோடு சாப்பிட்டாலும், மிகவும் ஆறினாலும் இதன் சுவை போய்விடும். ‘இளம்சூடு’தான் இதற்கு சரியான பதம். குறிப்பு: குழலில் பிழியாமல், சீடைபோல உருட்டியும் போடலாம். ஆனால், ஒன்று! ஒரு கை சீடை உருண்டைகளை அடுப்பில் இருக்கும் பாகில் போட்டு, அவை கொதித்தபின்தான் அடுத்த ஈடு போடவேண்டும். பிழிந்தபின் ஒவ்வொரு முறையும் ஒரு நிமிடம் நன்கு கொதிக்கவிட்ட பின்தான் கிளறவேண்டும் என்பதை மறக்காதீர்கள். வெல்லத்துக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். -