தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~

<< < (2/19) > >>

MysteRy:
பாப்லோ பிக்காஸோ (’நவீன ஓவியங்களின் பிரம்மா' ) - வரலாற்று நாயகர்!

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை பொதுவாக 'கலைவல்லுநர்கள்' என்றழைக்கிறோம். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு தலைமுறை மாற்றத்தையோ, அல்லது ஒரு பிரெளயத்தையோ ஏற்படுத்தும் ஒரு சிலரைத்தான் 'கலைஉலக பிரம்மாக்கள்' என்றழைக்கிறோம். ஓவியத்துறையை பொருத்தமட்டிலும் ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள்தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் உதித்த மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும் அந்த இரண்டு பரிணாம வரையறையைத் தகர்த்து முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை அசத்தினர், ஓவியத்துறைக்கு இன்னொரு முகத்தை கொடுத்தனர்.

அவர்கள் மறைந்த பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் தர முடியவில்லை. கேமரா மற்றும் புகைப்படங்களின் வரவு வேறு ஓவியக்கலையை சற்று பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தது. ஓவியர்கள் எவ்வுளவுதான் தத்ரூபமாக வரைந்தாலும் அந்தப் படைப்புகளால் ஒரு புகைப்படத்தின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஓவியக்கலை கிட்டதட்ட மரணித்துப்போகுமோ? என்று அச்சம் முளைவிடத் தொடங்கிய அந்தத் தருணத்தில் உதித்தார் ஓர் அற்புத ஓவியர். அவர்தான் 'கியூபிசம்' (cubism) என்ற புதிய ஓவிய பாணியை உலகுக்குத் தந்ததன் மூலம் 'நவீன ஓவியங்களின் பிரம்மா' என்ற புகழைப் பெற்றிருக்கும் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso).



1881-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் ஸ்பெயினில் பிறந்தார் பிக்காஸோ. அவர் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறது ஒரு வரலாற்றுக்குறிப்பு. குழந்தை இறந்தே பிறந்து விட்டது என்று எண்ணிய தாதி குழந்தையை மேசையில் வைத்துவிட்டு சென்று விட்டார். அதனைக்கண்ட அவருடைய மாமா ஓடிப்போய் உடனடியாக மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை வழங்கியதால்தான் உயிர் பிழைத்தார் பிக்காஸோ. பேசத் தொடங்கும் முன்பே கையில் பென்சிலை வைத்துக்கொண்டு வட்டம் வட்டமாக கிறுக்கிக்கொண்டிருப்பாராம் பிக்காஸோ. அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வளர்த்தார். Malaga கடற்கரையில் மணலில்கூட ஓவியம் தீட்டுவாராம் பிக்காஸோ. பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும் நன்கு கற்றுக்கொண்டார்.

1904-ஆம் ஆண்டு தனது 23-ஆவது வயதில் கலைகளின் தலைநகரம் என்றழைக்கப்படும் பாரிஸூக்கு வந்தார் பிக்காஸோ. அன்றிலிருந்து மரணம் வரை அவர் பிரான்சில்தான் வாழ்ந்தார். அவரது திறமையையும், புகழையும் கண்ட பிரெஞ்சு அரசாங்கம் எத்தனையோ முறை பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும் அவர் தனது ஸ்பானிய குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. பாரிஸூக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அவர் வரைந்த  'Les Demoiselles d'Avignon' என்ற ஓவியம் உலகை ஸ்தம்பிக்க வைத்தது. அதில் ஐந்து பெண்களை அவர் வரைந்திருந்த வித்தியாசமான பாணி அவருடைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல நவீன ஓவியத்துறைக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வளைவுகள் அதிகமின்றி நேர்க்கோடுகளும், முக்கோண வடிவங்களும் கொண்டு அது வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியம்தான் 'கியூபிசம்' என்ற ஓவிய பாணியைத் தொடங்கி வைத்தது.

அதன்பின் பலர் அந்த ஓவிய பாணியை பின்பற்றத் தொடங்கினர். உலகம் முழுவதிலிருந்த ஓவிய விற்பன்னர்களின் மரியாதையை பெற தொடங்கினார் பிக்காஸோ. இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் பிக்காஸோவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறுவயதிலிருந்தே ஓவியனாக வரவேண்டும் என்ற நிறைவேறா கனவுகளோடு வளர்ந்த கொடுங்கோலன் ஹிட்லரோ பிக்காஸோவின் ஓவியங்களை ஒரு பைத்தியக்காரன் கிறுக்கியது என்று சொல்லி அந்த படைப்புகளை ஜெர்மனியில் தடை செய்தார். இருப்பினும் ஜெர்மனி பிரான்சின் மீது ஆதிக்கம் செலுத்தியபோதுகூட பிக்காஸோவை பகைத்துக்கொள்ள ஜெர்மன் படைகள் தயங்கின. அந்தளவுக்கு பிக்காஸோ உலகப்புகழ் பெற்றிருந்ததே காரணம்.

1936-ஆம் ஆண்டு பிக்காஸோவின் தாய்நாடான ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அப்போது ஹிட்லரின் நாசிப்படைகள் 'Guernica' என்ற நகரின் மீது கடுமையான ஆகாயத்தாக்குதல் மேற்கொண்டன. அந்த தாக்குதலில் Guernica நகர் சின்னாபின்னமாக சிதைந்தது. மரண ஓலம் ஒலித்த அந்த நகரின் வேதனை பிக்காஸோவின் நெஞ்சை பிழிந்தது. தனது உணர்வுகளை அவர் கேன்வஸ் துணியில் ஓவியமாகத் தீட்டி அதற்கு 'Guernica' என்று பெயர் சூட்டினார். தனது நாட்டில் இறந்து போனவர்களுக்காக அவர் தீட்டிய அந்த அதீத ஓவியம் இறவாப்புகழ் பெற்றது. ஹிட்லரின் நாசி ஆட்சியை எதிர்க்கும் சின்னமாக அந்த ஓவியம் கருதப்பட்டது. அந்த சின்னத்தை மட்டுமல்ல உலகிற்கு இன்னும் ஓர் அற்புத சின்னத்தையும் வழங்கினார் பிக்காஸோ.



கம்யூனிச கொள்கைகளால் கவரப்பட்ட அவர் பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அமைதி தொடர்பாக அந்த கட்சி ஏற்பாடு செய்த பல அனைத்துலக கூட்டங்களில் கலந்து கொண்டார். அவ்வாறு 1950-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதி மாநாட்டுக்காக அவர் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தில் அவர் அமைதியை ஓர் வெள்ளைப்புறாவாக உருவகப்படுத்தி வரைந்திருந்தார். அற்புதமாக அமைந்திருந்த அந்த ஓவியத்தையே அமைதியின் சின்னமாக ஏற்றுக்கொண்டது உலகம். சீனா ஒருபடி மேலே சென்று அந்த ஓவிய சின்னத்தை தன் தபால் முத்திரையில் பதித்துக் கொண்டது. ஓவியக்கலையில் மட்டுமின்றி ஆடை வடிவமப்பதிலும் திறமைக் காட்டினார் பிக்காஸோ. ரஷ்யாவின் புகழ்பெற்ற பேலெ நடனக்குழுவுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த நடனக்குழுவில் இடம்பெற்றிருந்த Olga Khokhlova என்பவரை பிக்காஸோ மணந்துகொண்டார். 

ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி சிற்பங்கள் செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார் பிக்காஸோ. அவர் புனைந்த சில கவிதைகள்கூட மிகச்சிறந்தவை என்று சமகால கவிஞர்களால் பாராட்டப்பட்டன. 78-ஆண்டுகளில் அவர் உலகிற்கு வழங்கிய படைப்புகளின் எண்ணிக்கை எவ்வுளவு தெரியுமா? சுமார் 13500 ஓவியங்கள், சுமார் 34000 illustration எனப்படும் விளக்கப்படங்கள், சுமார் 400 சிற்பங்கள். அவரது ஒட்டுமொத்த படைப்புகளின் தற்போதைய மதிப்பு சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.



ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஓவியக்கலைக்கு ஓர் புது உற்சாகத்தைக் கொடுத்த அந்த அற்புத ஓவியன் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தமது 92-ஆவது வயதில் பிரான்சில் காலமானார். தனது படைப்புகளில் பிக்காஸோ பின்பற்றிய சித்தாந்தம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒருமுறை கூறினார் இவ்வாறு....

"ஒரு காட்சியை நமது கண்கள் எப்படி பார்க்கின்றனவோ அதை அப்படியே ஓவியமாக வரைவதில் என்ன புதுமை இருக்க முடியும்? அந்தக் காட்சி நம் மனத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை பிரதிப்பலிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அந்தக்காட்சியின் அசல் பிரதிப்பலிப்பாக இருக்கக்கூடாது".

இப்படி 'Thinking out of the box' எனப்படும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படும் முறையை பின்பற்றியதால்தான் பிக்காஸோவால் உலகப்புகழ் பெற முடிந்திருக்கிறது. 'நவீன ஓவியம்' என்ற வானத்தையும் வசப்படுத்த முடிந்திருக்கிறது. பிக்காஸோவைப் போலவே எதனையும் புதுமையாக சிந்தித்து வித்தியாசமாக செயல்பட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித்துணிவோருக்கும், துணிந்து செயல்படுவோருக்கும் அவர்கள் விரும்பிய வானமும் நிச்சயம் வசப்படும்.

MysteRy:
நெல்சன் மண்டேலா - வரலாற்று நாயகர்!

உலக வரலாற்றில் சுதந்திர போராட்டம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சமஉரிமைக்காகவும், சமத்துவத்திற்க்காகவும் வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். மற்றொன்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சொந்த ஆட்சி அமைக்க வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். இந்த இரண்டு வகை சுதந்திரத்திற்க்காகவும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர்கள் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை இருபதாம் நுற்றாண்டு வரலாறு பொன் எழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறது. ஒருவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை ஒழித்து இந்திய மண் சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்து தந்த அண்ணல் காந்தியடிகள். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உயிரை பரிசாக தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவரையுமே ஏற்கனவே நமது வரலாற்று நாயகர்கள் தொடரில் சந்தித்துவிட்டோம். அவர்கள் இருவருக்குமே துப்பாக்கி குண்டுகளைத்தான் உலகம் பரிசாக தந்தது.


இருபதாம் நூற்றாண்டு வரலாறு நினைவில் வைத்திருக்கும் மூன்றாமவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அவரை வாழும் காந்தி என்றுகூட சிலர் வருணிக்கின்றனர். அவர்தான் நவீன இருபதாம் நூற்றாண்டில்கூட இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை. 1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் Transkei என்ற பகுதியில் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.



சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனத்தில் பதிந்தது. Fort Hare-பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. Witwatersrand-என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத்தில் இருந்தது. தொன்று தொட்டு கருப்பர்கள்தான் தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடியேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கிலேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருக பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள். தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் என்பது விழுக்காட்டினராக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமணைகள், பூங்காக்கள், கட்டடங்கள். அங்கே கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து என்பது விழுக்காட்டினர் மக்களால் போராடியிருக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளையர்கள் புத்திசாலிகள் அவர்கள் மொழிகளின் பெயரால் கருப்பர்களை பிரித்து வைத்திருந்தனர். ஆனால் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.



இனி அகிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973-ஆம் ஆண்டு மற்றும் 1983-ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மன உறுதி கருப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.

மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டுழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W.de Klerk நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. அவ்வுளவு கொடுமைகளுக்குப்பிறகு அதிபரான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்......



'நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்'.

இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழும் காலத்திலேயே வாழ நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும், அதிபர்  F. W. de Klerk அவர்களுக்கும் 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு அவராகவே அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27-ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவுடன் நெல்சன் மண்டேலா வெள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் நாம் அதற்கு நியாயம் கற்பித்திருக்கலாம். சராசரி மனிதர்களின் இயல்பு அது. ஆனால் சராசரி மனிதனிலிருந்து அவர் உயர்ந்து நிற்கிறார் அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள்....

"மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா.... 
இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா"....

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை தந்தாலும் ஒரு பாடம் உயர்ந்து நிற்கிறது. அதுதான் மன்னிப்பு எனும் பாடம். தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்போருக்கும், தவறு செய்தவர்களை மன்னிக்கத் தெரிந்தோருக்கும் நிச்சயம் எந்த வானமும் வசப்படும்.

MysteRy:
ஜொஹானேஸ் குட்டன்பெர்க் (அச்சியந்திரம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனுக்குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தொடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினார்.

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சியந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர் அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg).



சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Menu scripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.   

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார்.



குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு 'Movable type' எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.



தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள்  நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.



1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த  Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.   

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு  Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.



சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .



குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும்.

MysteRy:
ரூசோ - வரலாற்று நாயகர்!

உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே  கூர்மையாக செயல்பட்டிருக்கிறது. வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் 'பிரெஞ்சு புரட்சி'யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

வாழும்போது வறுமையுடன் போராடிய அவர் மறைந்தபோது ஒரு சராசரி மனிதனாக கருதப்பட்டு சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டார். ஆனால் பதினாறு ஆண்டுகள் கழித்து அவருக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கவே புதைக்கப்பட்ட அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் அலங்கரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து வர புகழ்பெற்ற Pantheon-அரங்கில்  மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. உலக வரலாற்றில் இப்படிபட்ட மரியாதையை பெற்றவர் அவர் ஒருவர்தான் அவர் பெயர் ரூசோ. 1712-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28-ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் (Geneva) ஐசக் ரூசோ, சுசேன் பெர்னார்ட் ரூசோ தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் ரூசோ. பிறந்த ஒருவாரத்திற்குள் அவரது தாயார் காலமானார். எனவே தந்தையின் கண்காணிப்பில்தான் வளர்ந்தார் ரூசோ.



தந்தை கடிகாரம் பழுது பார்க்கும் வேலையில் இருந்தார். குடும்பம் ஏழ்மையில் வாடியது. தந்தைக்கு தலைசிறந்த தத்துவ நூல்களைப் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் ரூசோவுக்கும் பரவியது. குடும்ப ஏழ்மை காரணமாக அவர் முறையாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. ரூசோவுக்கு ஏழு வயது நிரம்பும் முன்னே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுத்தார் தந்தை. அந்த சிறிய வயதிலேயே கிரேக்க காவியங்களையும், ரோமின் வரலாற்றையும் மகனுக்கு படித்துக் காட்டுவார் தந்தை. அதனால் பலவித நூல்களை படிக்கும் ஆர்வம் ரூசோவுக்கு இளம்வயதிலேயே ஏற்பட்டது. பதினான்காம் வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வேலைக்கு சேர்ந்தார் ரூசோ. நீதிமன்ற தீர்ப்புகளை நகல் எடுப்பது அவரது பணி. அந்த வழக்கறிஞர் தன்னை நடத்திய விதம் பிடிக்காமல் போகவே வேலையை விட்டு வெளியேறினார்.   

வறுமை காரணமாக ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை எனவே ஒரு சிற்பியிடம் வேலைக்கு சேர்ந்தார். அந்த சிற்பி ரூசோவை அடிமைபோல் நடத்தியதாலும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் காட்டுமிராண்டித்தனமாக தண்டித்ததாலும் அந்த வேலையை விட்டும் அவர் வெளியேறினார். 'ஒருவனை சார்ந்து வாழ்வதைவிட சாவதே மேல்' என்ற எண்ணம் அவரிடம் தோன்றியது. இருந்தாலும் வறுமை விரட்டியதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பல்வேறு வேலைகளை செய்தார். என்னதான் பிரச்சினை வந்தாலும் அவர் நூல்கள் வாசிப்பதை கைவிட்டதில்லை. எப்போதும் ஏதாவது நூலை படித்துக்கொண்டே இருப்பார். அவர் மனிதர்களோடு பேசியதைவிட புத்தகங்களோடு பேசியதுதான் அதிகம். ஒருமுறை கடையில் ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தார் ரூசோ. அதை எப்படியாவது வாங்கி வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஆனால் கையில் பணம் இல்லை என்ன செய்தார் தெரியுமா? தனது உடைகளை விற்று அந்த புத்தகத்தை வாங்கினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு சாப்பாடு இல்லை இருந்தும் புத்தகத்தை படித்து முடிப்பத்திலேயே அவர் கவனம் செலுத்தினார்.

இப்படி புத்தகங்களை படித்துப் படித்து தன் அறிவை பெருக்கிக்கொண்ட ரூசோ தமது முப்பதாவது வயதில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இத்தாலி, பாரிஸ் என்று இரண்டு இடங்களிலும் சில ஆண்டுகளை கழித்தார். அங்கும் எந்த வேலையிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. சுயசிந்தனையும், தன்மான உணர்வும் கொண்ட ரூசோவினால் எவரிடமும் அடங்கிப் பணியாற்ற முடியவில்லை. இடையில் நாடகம் கவிதை என நிறைய எழுதினார். ஒருமுறை பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்று 'அறிவியல் வளர்ச்சி மனிதனின் ஒழுக்கத்தை உயர்த்தியிருக்கிறதா' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. தமது எண்ணங்களை அழகாகவும், தெளிவாகவும் எழுதி அந்த போட்டிக்கு அனுப்பினார் ரூசோ. அந்த போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பாரிசிலேயே பல ஆண்டுகள் தங்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார். 



ரூசோ எழுதிய மிகச்சிறந்த தத்துவ நூல் 'The Social Contract' எனப்படும் சமுதாய ஒப்பந்தம். "மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால் எங்கும் அடிமை சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்" என்ற புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்கும் அந்த நூல் 1762-ஆம் ஆண்டு வெளியானது. அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனாய் உருவானவன். மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற வரையில்தான் அவன் அரசன். அவ்விதிகளை அரசன் மீறும்போது மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீறலாம் என்பதுதான் அந்த நூலில் அவர் கூறியிருந்த கருத்து. அதன்பிறகு அவர் எழுதிய 'Emile' எனும் நூல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. குழந்தைகளுக்கு கல்வி கற்கும் முறை பற்றி எடுத்துரைத்தது அந்த நூல்.

ரூசோவின் வெற்றிகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் அந்த இரண்டு நூல்களுமே சமயத்திற்கு எதிரானது என்ற பிரச்சாரத்தை தொடங்கினர். பிரான்சும், ஜெனிவாவும் அந்த நூல்களை தடை செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் அவரது எதிர்ப்புப்போக்கை வெறுத்ததால் பாரிஸ் நீதிமன்றத்திற்கு முன் அவரது நூலை தீயிட்டுக் கொளுத்தியது. ரூசோ கிளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று அஞ்சி அவரை பிரான்சுக்குள் நுழையக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது. பின்னர் தாம் எழுதிய 'Perpetual peace' என்ற நூலில் ஐரோப்பிய நாடுகளுக்கென கூட்டுசங்கம் ஒன்று உருவாக வேண்டும். ஒவ்வொரு நாடும் போரை வெறுக்க வேண்டும். ஏதாவது ஒரு நாடு அவ்வாறு செய்யத்தவறினால் மற்ற நாடுகள் அதனை புறக்கணிக்க வேண்டும். அதோடு ஐரோப்பிய படைகள் அந்த நாட்டை நசுக்க வேண்டும். என்ற கருத்துகளை கூறியிருந்தார் ரூசோ. அந்த கருத்துதான் பல ஆண்டுகள் கழித்து ஐக்கியநாட்டு சபை உருவாக காரணமாக இருந்திருக்கும் என சில வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.   

ரூசோவின் சிந்தனைகள் படித்தவர்கள், இளையர்கள், தொழிலாளிகள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்றது. தன் எழுத்தாலும் சொல்லாலும் மக்களை சிந்திக்கத் தூண்டியவர் அவர். அப்போது பிரான்சின் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருந்தது. எங்குப்பார்த்தாலும் ஊழலும், அதிருப்தியும், அதிகார துஷ்பிரயோகமும்தான் நிலவின. அரசன் மிகப்பெரிய சர்வாதிகாரி என்று கருதப்பட்ட அந்தக்காலக்கட்டத்தில் மக்களின் நலன் காப்பதை அரசன் மீறும்போது மக்களும் கட்டுப்பாட்டை மீறலாம் என்ற புரட்சிக்கருத்தை வெளியிட்டார் ரூசோ. அதனால்தான் 1789-ஆம் ஆண்டு மக்கள் ஒன்று கூடி அரசனுக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை செய்தனர். அந்த பிரெஞ்சு புரட்சியில் மன்னன் லூயியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு பிறகு உலகில் ஏற்பட்ட ரஷ்ய புரட்சி, இந்திய விடுதலை போராட்டம் போன்றவற்றுக்கும் ரூசோவின் சிந்தனைகள் உதவியிருக்கின்றன.



அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிக்கு வித்திட்ட ரூசோ 1778-ஆம் ஆண்டு ஜுலை 2-ஆம் நாள் தமது 66-ஆவது வயதில் காலமானார். அவர் இறந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரெஞ்சு புரட்சி வெடித்தது. ரூசோ இல்லாதிருந்தால் பிரெஞ்சு புரட்சியே ஏற்பட்டிருக்காது என்று மாவீரன் நெப்போலியன் கூறியிருக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை வறுமையில் கழித்தும் வளமான சிந்தனைகளை உலகுக்கு தந்தார் ரூசோ. முறையாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் அவரால் உலகம் போற்றும் சிந்தனைகளை தர முடிந்தது. ஒரு தேசத்தையே வீறுகொண்டு எழச்செய்ய முடிந்தது. அதற்கு காரணம் அவரிடம் இருந்த சிந்தனைத்தெளிவும் அடிமைத்தனம் என்பதே இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணமும்தான். ரூசோவைப்போன்று நல்ல எண்ணங்களையும், தெளிவான சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளும் எவராலும் புரட்சிகளை உருவாக்க முடியும் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும். 

MysteRy:
ரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வரலாற்று நாயகர்!

சிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவிரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி எப்படி இருந்தது தெரியுமா? மிகப்பெரிய சத்தத்துடன் கோபமாக பெருமூச்சு விடும் ராட்சஷனைப்போல் இருந்தது காரணம் அந்த இரயில் வண்டி நீராவியால் இயங்கியது. 1700-களின் இறுதியில் 'ஜேம்ஸ் வாட்' என்ற வரலாற்று நாயகர் ஸ்டீம் என்ஜின் ('Steam Engine') எனப்படும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்று முன்னொரு வரலாற்று நாயகர் தொடரில் தெரிந்து கொண்டோம். 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த அதே நீராவி இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் இரயில் வண்டியை 1804-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார் இன்னொரு வரலாற்று நாயகர். அந்த கண்டுபிடிப்புதான் உலகம் முழுவதும் நெடுந்தூரத் தரைப்பயணத்திற்கு அடிப்படையை வகுத்து தந்திருக்கிறது. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்கும் அந்த வரலாற்று நாயகர் (Richerd Trevithick) ரிச்சர்ட் ட்ரெவிதிக்.

இங்கிலாந்தின் 'Cornwall' என்ற பகுதியில் 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார் ரிச்சர்ட் ட்ரெவிதிக். அவருடைய தந்தை வெள்ளிய சுரங்கம் ஒன்றின் நிர்வாகியாக இருந்தார் அதனால் ட்ரெவிதிக்கும் சுரங்கத்தொழிலுக்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டது. சிறுவயது முதலே ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை செய்து புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. அதனால் எப்போதும் ஏதாவது  இயந்திரங்களை வடிவமைப்பதிலும் அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக அவர் பள்ளிப்படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எப்படியோ படிப்பை முடித்து ஒரு சுரங்க பொறியாளராக தேர்ச்சி பெற்றார். அந்தக்காலத்தில் சுரங்கங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கி விடும். அதனால் சுரங்கப்பணிகள் முடங்கிப்போகும் அப்படி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நீராவி இயந்திரங்கள்தான் பயன்பட்டன.



நீராவி இயந்திரங்களின் செயல்பாட்டை  ட்ரெவிதிக் நன்கு அறிந்திருந்ததால் எந்த சுரங்கத்தில் நீராவி இயந்திரங்கள் பழுதானாலும் அவற்றை சரி செய்ய அவர்தான் அழைக்கப்படுவார். அவற்றை பழுதுப்பார்ப்பதோடு நின்று விடவில்லை  ட்ரெவிதிக்கின் ஆர்வம், குறைந்த அழுத்தமுடைய அந்த நீராவி இயந்திரங்களிள் சில முன்னேற்றங்களை செய்து சுரங்கங்களில் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே அவரது அன்றாட எண்ணமாக இருந்தது. முதலில் உச்ச அழுத்தமுடையதாக நீராவி இயந்திரத்தை மாற்றி அமைத்தார். பின்னர் அதனை எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்லும் அளவுக்கு வடிவமைத்தார். அப்போதுதான் தானாகவே நகர்ந்து செல்லும் ஒரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அப்படிபட்ட ஒரு கருவியை உருவாக்கிவிட வேண்டும் என்று கனவு காணத்தொடங்கினார். அந்தக்கனவை பதினெட்டாம் நூற்றாண்டு மக்களிடம் அவர் சொல்லியிருந்தால் மற்ற சாதனையாளர்களுக்கு கிடைத்தது போன்ற பரிகாசம்தான் அவருக்கும் கிடைத்திருக்கும்.   

தனது கனவை நனவாக்க அயராது உழைத்து 1801-ஆம் ஆண்டு நகரும் நீராவி இயந்திரத்தை அவர் உருவாக்கினார். Cornwall வீதிகளில் அதனை ஓட்டியும் பார்த்தார். ஆனால் எதிர்பாராவிதமாக ஏதோ கோளாற்றினால் அந்த இயந்திரம் தீப்பிடித்து எரிந்து போனது. அதனால் வீதியில் ஓடிய அந்த முதல் நீராவி இயந்திரம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு எந்த சான்றும் இல்லாமல் போனது. சோதனைகள் வரும்போது சோர்ந்து போவோருக்கு வாழ்க்கையும், வானமும் வசப்பட்டதில்லையே! வரலாற்றில் நிலைத்து நிற்க விரும்பியதால்  ட்ரெவிதிக்கும் அந்த முதல் தோல்வியால் சோர்ந்து போய் விடவில்லை. இரண்டே ஆண்டுகளில் இன்னொரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினார். அது இயங்கும் முறையை தன நண்பர்களுக்கு காண்பித்தபோது அது விளையாட்டு பொம்மை என்று கூறினார்கள். ஆனால் அது பொம்மை அல்ல உண்மையான ரயில் வண்டி என்பதை நிரூபிக்க அதனை வீதியில் ஓட்டிக்காட்டினார் ட்ரெவிதிக்.

'குக்' 'குக்'... என்று பேரிரைச்சலுடன் பெருமூச்சு விட்டபடி ஓடிய அந்த வண்டியைப் பார்த்து பயந்துபோன மக்கள் 'Puffing Devil' அதாவது பெருமூச்சு விடும் பேய் என்று அலறியபடி ஓடி ஒளிந்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.  ட்ரெவிதிக் உருவாக்கிய அந்த நீராவி இயந்திர இரயில் மணிக்கு எட்டு முதல் ஒன்பது மணி வேகத்தில் ஓடியது. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்  ட்ரெவிதிக்கின் அந்த புதிய கண்டுபிடிப்பைக்கண்டு தங்கள் பிழைப்பில் மண் விழப்போகிறது என்று கோபம் அடைந்தனர் குதிரை வண்டிக்காரர்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தரைப்பயணத்திற்கு குதிரை வண்டியைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது.  ட்ரெவிதிக்கின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்கூட குதிரை வண்டிக்காரர்கள் திட்டம் தீட்டினர். ஆனால் தனது முயற்சியை தொய்வின்றி தொடர்ந்த  ட்ரெவிதிக் 1804-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் South Wales-ல் நீராவி இயந்திரத்தால் பொருட்களையும், பயணிகளையும் இழுத்து செல்ல முடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார்.



70 பயணிகளையும் 10 டன் எடையுள்ள இரும்பையும் ஒன்பது மைல் தூரத்திற்கு இழுத்து சென்றது அந்த இரயில் வண்டி. ஆனால் இன்று போல் அப்போது தண்டவாளங்கள் கிடையாது என்பதால் இரும்புத்தகடு நிரப்பிய பாதையில்தான் அந்த இரயில் வண்டி ஓடியது. இரயில் வண்டியின் கணம் தாங்காமல் அந்த தகட்டுப்பாதை பழுதானது. எனவே அது அதிக செலவு பிடிக்கும் ஒரு சமாச்சாரம் என்று எண்ணி எந்த தொழிலபதிரும் இரயில் கட்டமைப்பில் முதலீடு செய்ய முன்வரவில்லை. அதனால் வெறுப்படைந்த  ட்ரெவிதிக் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரது கண்டுபிடிப்புகளைப்பற்றி நன்கு அறிந்திருந்த தென் அமெரிக்கா அவரை இருகரம் கூப்பி வரவேற்றது. 1816-ஆம் ஆண்டு Peru-விற்கு சென்ற  ட்ரெவிதிக் அங்குள்ள சுரங்கங்களுக்கு நீராவி இயந்திரங்கள் அமைத்துக் கொடுத்தார். சுரங்கங்கள் நல்ல லாபம் ஈட்டத்தொடங்கின.

1826-ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் அமேரிக்கா முழுவதும் பயணம் செய்தார். இருந்தாலும் தனது கனவை நனவாக்க முடியாமல் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்  ட்ரெவிதிக் அப்போது தான் கண்டுபிடித்த நீராவி இரயில் சில முன்னேற்றங்களுடன் புழக்கத்திற்கு வந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார். எனினும் தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இரயில் வண்டி உருவானது என்பதால் தனக்கு உதவிப்பணம் தருமாறு அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேலை இல்லாமல் சிரமபட்ட  ட்ரெவிதிக்குக்கு தனது நிறுவனத்திலேயே வேலை கொடுக்க முன் வந்தார் ஒருவர். அவர் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இயந்திரத்தின் அடிப்படையில் புதிய இயந்திரத்தை வடிவமைத்து பிரபலமான இரயில் வண்டியை உருவாக்கியவர். எனவே நன்றி உணர்வுடன் அவர்  ட்ரெவிதிக்குக்கு அந்த வேலையை தர முன் வந்தார். 



முதலில் சம்மதித்தாலும் பின்னர் அங்கு வேலை செய்ய மறுத்து விட்டார்  ட்ரெவிதிக். வறுமையிலும், வேதனையிலும் வாடிய அவர் 1833-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் தனது 62-ஆவது வயதில் காலமானார். அவர் வாழ்ந்தபோது கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் அவருக்குரிய மரியாதையை வழங்காமல் போயிருக்கலாம். மனிதன் தவறு செய்தாலும் வரலாறு தவறு செய்வதில்லை. எனவேதான் ட்ரெவிதிக்கை 'இரயில் வண்டியின் முன்னோடி' என்று இன்றும் அது நினைவில் வைத்து போற்றுகிறது. இப்போது நாம் சொகுசாக பயணம் செய்யும் பெருவிரைவு இரயில்கள் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இரயிலின் வழித்தோன்றல்தான் என்று நன்றியோடு நினைத்துப் பார்த்தாலே அந்த வரலாற்று நாயகருக்கு நாம் மரியாதை செய்தவர்களாவோம்.   

இன்று உலகம் முழுவதும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இரயில்கள் எல்லாமே ட்ரெவிதிக் விட்டு சென்றுள்ள நினைவு சின்னங்களே. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்க ட்ரெவிதிக் என்ற வரலாற்று நாயகருக்கு உதவிய பண்புகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு, மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம். அந்த பண்புகளை பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது வரலாற்றின் கடமையாகும்.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version