தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 290
Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 290
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
VenMaThI:
தமிழே
எதுகையும் மோனையும் இல்லாமல்..
இலக்கண விளக்கமும் இல்லாமல்..
என் மதியில் தோன்றிய எண்ணங்களை..
என் நடையில் எழுதிய புதுக்கவிதை
ரசித்து எழுத மனம் மட்டும் போதுமே
தமிழே உன்னை வணங்குகிறேன்
அன்னையே
அற்புதமான வடிவமும்
அழகான உச்சரிப்பும்
ஆணவம் கொள்ள வைக்கும்
என்னை மட்டுமல்ல
உன்னை உணர்ந்த அனைவரையும்...
கருவில் சுமக்காத தாயே
என் கவிதை பசிபோக
கொஞ்சம் கடன் தருவாயோ...
உன்னை பற்றிய சிந்தனைகளை.....
கல்லும் மண்ணும் தோன்றாக்காலம்..
அதுவே நீ தோன்றிய காலம்..
காலம் பல சென்றாலும்
உனக்கு ஈடு இல்லை..
கர்வத்தோடு சொல்வேன் தாயே
உனக்கு நிகர் நீயே...
என்றும் இளமையாய்
வற்றாத நதியாய்
இலக்கணமாய்
இலக்கியமாய்
உதிரமாய்
உணர்வாய்
எங்கள் உயிராய்.. என்றும் நீயே தமிழே
முத்தெடுக்க மூழ்க வேண்டும்
ருசி அறிய புசிக்க வேண்டும்
ஆழம் அறிய இறங்க வேண்டும்
நிமிர்ந்து பார்த்தால் மட்டுமே ஏற்றம் தெரியும்
உன்னில் மூழ்கி
உன்னை ருசித்து
உன்னில் இறங்கியும் நிமிர்ந்தும் பார்த்தால் மட்டுமே
உன் பெருமையை உணர முடியும்..
தமிழன்னையே..
தலை விரி கோலமாய் இருபதேனோ?
பெண்மைக்குரிய மென்மை எங்கே?
பாலூட்டி வளர்த்த பிள்ளை
புறம் தள்ளிய பாவத்தை நான் அறிவேன்...
தமிழுக்குரிய சிறப்பாய்
ழகரம் இருக்க
தமிழனுக்குரிய சிறப்பாய்
தொன்று தொட்ட தமிழிருக்க..
அந்நிய மொழியை அரியாசனத்தில்
வென்சாமரம் வீசி அமர வைத்தாயே...
தமிழ் தாயை புறம் தள்ளி..
மாற்றான் மொழிக்கு மலர்மஞ்சம்...
ஏற்கவில்லை என் நெஞ்சம்
மதி கெட்ட மடயனே.
உன் மதியில் உரைக்கும் படி சொல்கிறேன் கேள்...
தமிழன்னை கொடுத்த தமிழ்ப்பால்
உன் உதிரத்தில் கலந்தது உண்மையானால்...
அந்நிய மொழியை உதறிதள்ளி...
உரக்கச்சொல் தமிழ் என் மூச்சென்று..
மறந்து போக இது ரயில் பயணமல்ல
தமிழ் என்பது நம் தொப்புள் கொடி உறவே....
வாழ்க தமிழ்
Sun FloweR:
உலகின் முதல் கல்லும் அறிந்ததில்லை..
உலகின் முதல் மண்ணும் அறிந்ததில்லை..
அன்னையிவள் பூமியிலே அவதரித்த கதையையும்...
அம்சமாய் தரணியிலே வளர்ந்த கதையையும்...🙏
வெள்ளைக்காரனும் ஏற்றுக் கொள்ளும்
திருக்குறள் ...
பெண்ணாலும் புரட்சி செய்ய முடியும் என
உணர்த்த சிலப்பதிகாரம்...
உணவு கொடுத்தவரை உயிர் கொடுத்தவராய் மாற்ற மணிமேகலை...
மண்ணாசை, பெண்ணாசையை மாய்த்து விட மகாபாரதம்..
மாற்றான் மனைவி மேல் கொண்ட மோகத்தை வெட்டிவிட ஓர் இராமாயணம்...
இவையாவும் சொல்லிடும்
அனைத்திற்கும் மூத்தவளாய்
உலக மொழிகளுக்கு முன்னோடியாய்
இவள் முகிழ்த்த கதையையும்
முன்னேறிய கதையையும் ...🙏
விழிகளிலே வீறு கொண்டு பிறமொழிகளுடன் வீரத் தமிழாய்
என்றும் வதம் செய்பவள்...
வேறெந்த மொழிகளிலும் இல்லாத
'ழ'கரத்தை எழில் ஆயுதமாய் ஏந்தியவள் ...🙏
சங்கம் வளர்த்த மதுரையிலே
செந்தமிழாய் செழித்து வளர்ந்தவள்..
கம்பனுக்கும் பாரதிக்கும் கவிபாடும்
ஆற்றல் தந்து அன்னைத் தமிழாய் ஆகியவள் ...🙏
ஐந்திலக்கணங்களை தன்னுள் அடக்கியவள்..
வல்லின மெல்லின இடையினங்களை
அரிதாரமாய் பூசியவள் ...
அணி இலக்கணம் கொண்டு கவிதைகளுக்கு அழகு சேர்ப்பவள்..
உயிர், மெய் எழுத்தாய் என்றும் ஆட்சி செய்பவள்...🙏
செம்மொழியாய் தம்மை உயர்த்திக் கொண்ட மொழிகள் ஆறு...
நம் தமிழ் அன்னை செம்மொழியாய்
உயர்ந்த தினம் 2004 ஜூன் ஆறு....,🙏
ஒரு நாள் மட்டும் போதுமா?
எம் அன்னையைக் கொண்டாட?
ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்.. ஒவ்வொரு தினமும் கூத்தாடுவோம்..
நம் தாய்மொழியை நம் தமிழ்மொழியை...
வாழ்க தமிழ்🙏வளர்க தமிழ்🙏
AgNi:
எந்த மொழி உலகெங்கும்
விரவி கிடக்கின்றது....
கல்தோன்றி மண் தோன்றா
காலத்தின் முன் எழுந்து
இன்றும் வாழும் வலிமை சொற்கள்?
எந்த தேசத்தில்...
உயிர்ப்போடு வீசி மணக்கின்றது...
ஆதியும் அந்தமுமில்லா
அர்த்தங்கள் பொதிந்த
வார்த்தைகளின் அணிவகுப்பு..?
எந்தகலாச்சாரத்தில்...
கலையும் நாகரிகமும் மிகுந்த
கலந்து செழித்து நவீன யுகத்துக்கும்
பொருந்தும் நளின செய்யுள்களும்
காப்பியங்களும் காவியங்களும்
நடனமாடி கொண்டிருக்கின்றன?
எந்த நாட்டு இலக்கியத்தில்..
எதுகையும் மோனை நயத்தோடு
அறவுரையும் அறிவுரையுமான
திருக்குறள் போன்றவை
காணக்கிடக்கின்றது?
எந்த கண்டத்தில் பேசும்மொழி
வழக்கு மொழி, எழுத்துமொழி
இயல்மொழி, இசைமொழி,
நாடகமொழி என அனைத்து
செம்மொழி பண்புகளும்
சீருற அமைந்துள்ளது?
அகிலத்தின் பற்பல ஆதிமொழிகளும் காணாமல் போக
அன்று பனையேட்டிலும்
இன்று இணையதளத்திலும்
எங்கும் வியாபித்து தரணியாளும்
என் இனிய தமிழ் அணங்கே!!
நீ ஒரு சிரஞ்சீவி!
நீ ஒரு தேவதை!
உன் கையில் ஏன் சூலம்?
மாற்று மொழியினர் உனை
துவேசித்தாலும் நேசிப்பவள்
நீ அல்லவா?
உன் அருமை அறியாத
சிற்றறிவு மாக்களை மன்னித்து
ஏற்றம் கொடு!
வாழ்க நின் புகழ்!
வளர்க நின் பெருமை!
Abinesh:
தாயே கருப்பு நிறத்தில்....
காலில் சிலம்பு அணிந்து....
"ழ"என்கிற வேல் எந்தி.....
தலை முடி உக்கிரமாய்....
பின்புறம் சிவப்பு நிறத்தில் இருக்க.....
உலகத்தின் முதல் மொழி தமிழ் என்று...
அவர்கள் மறந்து விட்டார்கள் போலும்...
தாயே உம் கோபம் "யாம்"அறிவோம்.....
அவர்கள் அறியாது எம் நீதி தேவதையே.......
செல்ல செம்மொழி..! _ எவரும்
கொல்லா உயிர்மொழி..!
மொழிகளின் ஆணிவேர்..! _ பர
விழிகளில் அன்பு தேர்..!
அமிழ்தின் ஒலி வடிவம்.!
ஆண்டவனின் எழுத்து வடிவம்..!
இலக்கியங்களின் இதயம்..!
இன்ப வாக்கியங்களின் இமயம்.!
குன்றிடாத உலக கிழவி..!
குறையில்லாத உலக அழகி..!
காலத்துக்கு ஏற்ப மாறும் மாயாவி..!
ஞாலம் கொண்டாடும் மலர் தூவி..!
என்று பிறந்தாள் அறிந்திலார்..!
ஐம்பூதங்களை போல் அழிவிலாள்..!
வாழ்வை கொண்டாட முத்தமிழ்..!
வாழ்வை நெறிப்படுத்த அறத்தமிழ்..!
கடவுள் சங்கம் நடத்தி
வளர்த்த தமிழ்..!
கணினி சங்கமம் கொடுத்து
வளரும் தமிழ்..!
உலக பொதுமறையின்
உயிர் நாடி..!
உலகமே பொதுவென
கொண்ட உயர் நாடி..!
காற்றை சல்லடையால்
சலித்தால் _ தமிழாய்
கொட்டும்.!
வானத்தை சலவையால்
வெளுத்தால் _ தமிழாய்
மின்னும்..!
தமிழன் என்று சொல்லும்போது
இறந்த செல்லும் உயிர் பெறும்..!
தாய் மொழி மறந்து போகும் போது
இனம் உயிர் அற்று போகும்...
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version