Author Topic: குழந்தைகளின் உயரம் பற்றி கவலையா பெற்றோர்களே?  (Read 2635 times)

Offline kanmani

தொலைக்காட்சியை ஆன் செய்தாலே போதும் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் விளம்பரங்கள்தான் அதிகம். ஒரு குழந்தையை தொங்க வைக்கின்றனர், ஒரு குழந்தையை ஓட வைக்கின்றனர். இதை குடித்தால் உயரம் வளரும், அந்த பானத்தை குடித்தால் இரண்டு சென்டி மீட்டர் அதிகமாக வளரலாம் என்றுதான் விளம்பரப்படுத்துகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் கொஞ்சம் குட்டையாக இருந்துவிட்டால் போதும் பெற்றோர்களுக்கு பெரும் கவலையாகிவிடும். ஏனெனில் குட்டையாக இருப்பவர்களை விட உயரமானவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர் பெற்றோர்கள்.

மரபணு தீர்மானிக்கிறது

குழந்தைகளின் உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

உங்கள் குழந்தைகள் சராசரியை விட உயரம் குறைவாக இருப்பது போல் தோன்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.

ஊட்டச்சத்துணவு

உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. கடைகளில் விற்பனை செய்யப்படும் ஊட்டச்சத்து பானங்களை மட்டுமே கொடுப்பதை விட சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணெய், வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவை உயரத்தை அதிகப்படுத்தக் கூடியவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி

உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது. உயரமாக வளரவேண்டும் என்பதற்காக அவர்களை வருத்தி எடுக்கவும் வேண்டாம் என்பது உளவியல் நிபுணர்களின் ஆலோசனை.

குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள். அதேசமயம் உயரம் குறைவாக இருந்த அறிஞர் அண்ணா, லால்பகதூர் சாஸ்திரி போன்றோர்களும் தங்கள் உயரத்தை பொருட்டாக மதிக்காமல் சாதனை புரிந்தவர்கள்தான் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.