Author Topic: சுவடுகள்...!  (Read 863 times)

Offline இளஞ்செழியன்

சுவடுகள்...!
« on: October 06, 2021, 03:08:20 PM »
திசைக்கொன்றாய்
என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன்
எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின்
குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க
அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக
நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன்,
இனி எப்போதும் நான் முன்பு போல்
இருக்கப் போவதில்லை..என்று
என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது
எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம்,

முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது
யார் யாரோ வந்தார்கள்,
ஏதேதோ கேட்டார்கள்,
பேசிச் சிரித்தார்கள்,
பூக்களை சிலர் பரிசளித்தார்கள்,
புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள்,
கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள்,
ஏமாந்தேன் என்றார்கள்....
சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன
என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி
ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது
என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி
இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது...
அப்போதும் துடித்துக் கொண்டிருந்த
என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல்
யாருக்கானதாய் இருக்கும் என்று
இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று
என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட்டார்கள்...

பூக்களால் தன்னை நிரப்பிக் கொள்ளும்
அதே பூமியின் இன்னொரு பக்கத்தில்
வெடித்துப் பிளந்து கிடக்கும் நிலத்திற்குள்
வேர் நாக்குகளை செலுத்தி தாகம் தீர்த்துக் கொள்ள
முயன்று முயன்று தோற்றுப் போய் கோபமாய்
நிற்கின்றன முள் மரங்களுக்கு எப்படித் தெரியும்
துரோகத்தையும், நியாயத்தையும்
ஒரே பாத்திரத்திலிருந்துதான் இந்த வாழ்க்கை
எடுத்து பரிமாறிக் கொண்டிருக்கிறது என்று....

யாருக்கோ என்னைப் பிடித்தது,
யாரையோ எனக்குப் பிடித்தது,
இரண்டுமே இப்போது ஒன்றுமில்லை
அறுபடாத இந்த மனதின்  கன்னத்தில்
தீக்குளம்பாய் வழிந்து கொண்டிருக்கும்
தகிக்கும் கண்ணீரை துடைக்க முடியாமல்...
அமீபாவாய் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...நான்...
எங்கு போவது...?
யாருக்காய் போவது..?என்றெழும் கேள்வியை மட்டும்
அறுத்தெறிந்து விட்டால் போதும்....
பிழைகளோடு ஆனவன்...