Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: thamilan on May 29, 2012, 08:58:59 AM
சிறகு முளைத்திட்ட சிறுவர்கள் நாங்கள் நேற்றய நினைவு நினைவில் இல்லை நாளைய நினைவு எங்களுக்கில்ல்லை நண்பர்கள் நாங்கள் கூடி விட்டால் இன்பம் தவிர வேறெதுவுமில்லை
கண்ணீரில் நனைந்து கசங்கிப் போகப் போகும் அந்த சிரிப்பை நாங்கள் அனுபவிப்பது இந்த சிறு வயதில் மட்டும் தான்
இன்று அரும்புகளாக தெய்வீக மணம் பரப்பும் நாங்கள் நாளை உலகில் கரங்களுக்குள் சிக்குண்டு கசங்கிப் பிழியப் பட்டு துர்மணம் வீசப் போகிறோம்
இப்போது தேவதைகளாக இருக்கும் நாங்கள் காலத்தின் செதுக்கலில் சாத்தான்கள் ஆகிவிடுவோமே
இப்போது கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒளிந்திருப்பவர்களை தேடிக் கண்டு பிடிக்கிறோம் நாளை வாழ்க்கை எனும் ஆட்டத்தில் நம்மை நாமே தேடிக்கொண்டிருக்கப் போகிறோம்
ஆகவே நாளைய கவலை எமக்கில்லை இன்றைய பொழுது இன்பத்தின் எல்லை
ஜாதிகள் இல்லையடி பாப்பா இது சிறுவர்கள் எங்களுக்காக மட்டும் பாரதி பாடிய பாட்டு நாங்கள் சிறுவர்கள் எனும் ஒரே ஜாதி நட்பு எனும் ஒரே மதம் மகிழ்ச்சி ஒன்றே எங்கள் வேதம்
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: vimal on May 29, 2012, 09:12:45 PM
இவர்கள் ஆணோ பெண்ணோ என்ன சாதியோ! என்ன குலமோ! என்ன மதமோ! இவர்களுக்குள் இப்படியோர் ஒற்றுமை சந்தோஷ சங்கிலியில் பிணைக்கப்பட்டு,
அரும்புகளாய் அன்பு எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலும் புரியாமலும் அன்பால் இணைக்கப்பட்டு,
உள்ள உணர்வுகளை உணராமல், தெருக்கள் பல இருந்தாலும் பார்த்து,சிரித்து,பேசி,மகிழ்ந்து ஒன்றோடு ஒன்றாய் கலக்கப்பட்டு,
பார்பவர்களின் உள்ளத்தை இம்மாம்பிஞ்சிகள், இவன் சாதி,மதம்,குலத்தால் பெரியவன்,சிறியவன் என்ற இறுமாப்பை அகற்றி,
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: கார்க்கி on May 31, 2012, 04:55:08 PM
ஓட ஓட ஓட தூரம் கொறையல
பாவாடை நுனியில்
கடிக்கப்பட்ட
பாதி மிட்டாய்களின்
பிசினிலிருந்து எடுக்கபடுகிறது
நம் நட்புக்கான அஸ்திவாரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடலும் கடல் சார்ந்த இடமும்
வனமும் வனம் சார்ந்த இடமும்
மலையும் மலை சார்ந்த இடமும்
என கூடும் பொழுதுகளில்
விரிகிறது
நம் நட்பும் நட்பு சார்ந்த இடமும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொடுக்காபுளிக்கு ஸ்லேட்டுக்குச்சி
தீப்பெட்டி அட்டைக்கு மஞ்சள் ரிப்பன்
பொட்டுக்கடலைக்கு அச்சுவெல்லம்
அட
நம்மிடமிருந்தே
உலகிற்கு அறிமுகமானது
பண்டமாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்லாங்கா , லகோரி
கோலிகுண்டு , கிட்டி புல்
தட்டாமாலை , ஐஸ்பாய்
விளையாட்டுகளுக்கும்
சலிக்கிறது
நம்மோடு
விளையாடி விளையாடி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காட்டுக்குள் இருக்கும்
அய்யனார் கோவிலருகே
சமைக்கப்படும்
கூட்டாஞ்சோறு
தீயில் எரிகிறது
உன் வீட்டு ஜாதியும்
என் வீட்டு மதமும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆலம் விழுதோடு போராடி
ஆற்று நீரில்
எருமைகளோடு ஊறி
புழுதிக்காட்டில் பிரண்டு
....... போராடி ஊறி பிரண்டு
திளைக்கிறது நட்பும் கூட
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் வீட்டிற்கு
நான் கூட்டிவந்த
நிலாவிற்கும்
என் வீட்டிற்கு
நீ கூட்டிவந்த
நிலாவிற்கும்
ஏழு வித்தியாசம்
சொல்லும்
நம் நட்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாங்காய்களும்
குருவி முட்டையும்
கள்ளி பழமும்
திருட திருட
நட்பும் சேர்ந்தே
இனிக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மயில் றெக்கையும்
சோளத்தட்டையும்
புளியங்கொட்டையும்
பொறுக்கி பொறுக்கி ....
பொறுக்கி பொறுக்கி ....
ச்சீ ச்சீ
பொறுக்கியான நட்பு
நம் நட்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதை நீ எடுத்தாயோ
அது இங்கிருந்தே
எடுக்கப்பட்டது
எதை நீ கொடுத்தாயோ
அது இங்கிருந்தே
கொடுக்கப்பட்டது
ஆம்
நட்பிலிருந்தே
கொடுக்கப்பட்டதும் எடுக்கப்பட்டதும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வாறான
உவகை ஊட்டும்
பொழுதுகளில்
பால்வெளியில் மிதக்கிறது
நட்பும்
காற்றைப் போலவே
பி . கு : தொலைந்து போன பால்யத்தை பற்றி எழுதுவது மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொருவருள்ளும் பால்யத்தின் சிறு துளி ஈரம் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போன்றது. கிரிக்கெட்டும் , ப்ளே ஸ்டேஷன்னுமாக உருண்டு பிரளும் இக்கால குழந்தைகளுக்கு ஒரு முறையேனும் விளையாடி காட்டவேண்டும் கிட்டிப்புல்லும் , பம்பரமும் , கோலி குண்டும் ....................
நான் தொலைத்த பால்யமும் , பால்ய கால நட்பிற்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on May 31, 2012, 08:33:18 PM
அழகான என் நட்பு அரை குறையாய் போனபோதும் அழியாத நினைவுகளை அந்த நாள் ஞாபகங்கள்...
கூட்டாக சேர்ந்து குருவிகளாக கும்மாளம் அடித்து அதிபரிடம் குட்டு வாங்கும் போது பள்ளிக்கூடம் வெறுத்து ... பழிவாங்கும் முகமாக மொட்ட மண்டை... பட்டபெயர் வைத்தபோது வலிகளும் மறந்தது ...
ரகசியமாக வினாத்தாள்களின்¨ விடைகளை பரிமாறி ஒரே புள்ளிகள் பெற்றபோது நாம் ஒற்றுமைகளை நினைத்து பள்ளி அறையே வியந்தபோது நமுட்டாக சிரித்தபோது சோதனைகளும் சுகமாகதான் இருந்தது ...
கோவில் திருவிழாக்களில் சொல்லி வைத்து ஆடை அணிந்த போதும் அவனுக்கும் கொடு என்று சொல்லி கச்சானை பகிர்ந்த போதும் ஆண் பெண் பிரிவின்றி நட்பும் ஜொலித்து ...
பருவத்துக்கு வந்தபோது பக்குவம் சொல்வதாய் பால்ய சினேகிதனுக்கும் பத்தடி தூரம் வைத்து கலாச்சாரம் ..
பறந்தாடி பல குட்டை குளமெல்லாம் நுழைந்தாடி ... புழுதியெல்லாம் குளைந்தாடி குச்சிமிட்டாய் திருடி அடிவாங்கி ... மாமரத்து அணில்களாய் மரம் தாவி ... மங்களம் மாமியிடம் அடிவாங்கி மனதோடு சபித்தபோதேல்லாம் இனித்த நட்பு .....
இன்று நினைத்தாலும் ஏக்கம் கொள்கிறது ... என் சிறுவயது நட்பு வேண்டும் சிறுக சிறுக சில்மிஷம் செயும் என் பால்ய பருவம் வேண்டும்..
எல்லாம் இழந்து .. இன்றும் வாழ்கிறேன் என் இணையத்து அருமை தோழர் தோழிகளால் ...
நான் இருக்கும்வரை என் நட்பும் நம் தோழமையும் என்றும் வாழும் என் தோழர்களே ...
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Tamil NenjaN on June 01, 2012, 06:20:09 AM
கள்ளமி்ல்லா நெஞ்சத்துடன் கவலையே இல்லாமல் கழிந்து போன நாட்கள் பசுமையாய் வீற்றிருக்கும் மனதில் என்றும் இளமையின் நினைவுகள்
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஸ்ருதி on June 01, 2012, 05:15:05 PM
பள்ளி பருவத்தில் பக்குவம் இல்லாத போதும் கள்ளம் இல்லா உள்ளதோடு கலகலப்பாய் வந்த நட்பு பாசத்தை கூட போட்டிபோட்டு பரிமாறி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து அழகாய் அன்போடு பழகி வந்த காலம் அவை...
கல்லூரியில் கால்தடம் பதித்து இளமையின் துள்ளலில் ஏகாந்தமாய் , சந்தோசத்தை மட்டுமே குறிக்கோளாய் காலத்தை மறந்து கவலைகளை தூக்கில் இட்டு இனிப்பான நட்பை திகட்ட திகட்ட பரிமாறிய காலம் அவை..
ஆளுக்கொரு இடமாய் தூரமாய் சென்று விட போதிலும் என்றாவது சந்திக்கும் தருணத்தில் என் நட்பின் முகத்தில் சந்தோஷத்தை காணும் பொழுதில் வாழ்க்கை போராட்டத்தில் நட்பு சற்று பின்னே தள்ளப்பட்டதை நினைத்து கண்ணீரில் தோழியை கட்டி தழுவுகையில் தேவையான பிரிவு போதுமானது என்று மீண்டும் நட்பை புதுப்பித்து அலைபேசியில் தொடரும் காலம் அவை...
ஏதோ ஒரு தேடலில் ஏதோ ஒன்றை தேட அரட்டை பக்கங்கள் அளவில்லாமல் கண்முன் காண நட்புக்கான அரட்டை பக்கத்தை நான் தேடி நாடி வந்த இடம் இது.. நண்பர்கள் தமிழ் அரட்டை பக்கம் கண்முன் பளிச்சிட நண்பர்களின் கூட்டத்தில் நடுவில் கண் இமைக்காமல் அரட்டை அடிக்கும் நாட்கள் இவை..
முகம் பார்க்காத நட்பாய் இருபினும் பெயரில் முகம் பார்த்து பழகி வருகிறோம்... ஒரு நாள் பாராவிடினும் முழுமை பெறாத நாளாய் என் நாட்கள் முடிந்து போவதை வெறுக்கிறேன் என் நட்பே உன்னை நாடி வருகிறேன் பள்ளி கல்லூரி நட்புகளின் வரிசையின் இன்று புதிதாய் என் இணையத்து நண்பர்களின் வருகை.. யாராக இருபினும் நட்பாக இருந்தால் நட்பாய் தந்து நட்பாய் பெறுவேன் என்று நட்போடு நான்,..