தமிழ்ப் பூங்கா > அகராதி

இலக்கணம் - தொல்காப்பியம்

<< < (6/6)

Maran:
 7. உவமயியல்


வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகை பெற வந்த உவமத் தோற்றம்.    1
விரவியும் வரூஉம் மரபின என்ப.    2
உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை.    3
சிறப்பே நலனே காதல் வலியொடு
அந் நால் பண்பும் நிலைக்களம் என்ப.    4
கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும்.    5
முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய.    6
சுட்டிக் கூறா உவமம் ஆயின்
பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே. 7
உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்.    8
பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும்.    9
பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய.    10
அவைதாம்,
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப
என்ன மான என்றவை எனாஅ
ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க
என்ற வியப்ப என்றவை எனாஅ
எள்ள விழைய விறப்ப நிகர்ப்ப
கள்ள கடுப்ப ஆங்கவை எனாஅ
காய்ப்ப மதிப்ப தகைய மருள
மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅ
புல்ல பொருவ பொற்ப போல
வெல்ல வீழ ஆங்கவை எனாஅ
நாட நளிய நடுங்க நந்த
ஓட புரைய என்றவை எனாஅ
ஆறு ஆறு அவையும் அன்ன பிறவும்
கூறும் காலைப் பல் குறிப்பினவே.    11
அன்ன ஆங்க மான விறப்ப
என்ன உறழ தகைய நோக்கொடு
கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்.    12
அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும்.    13
எள்ள விழைய புல்ல பொருவ
கள்ள மதிப்ப வெல்ல வீழ
என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம்.    14
கடுப்ப ஏய்ப்ப மருள புரைய
ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று
அப் பால் எட்டே மெய்ப்பால் உவமம்.    15
போல மறுப்ப ஒப்ப காய்த்த
நேர வியப்ப நளிய நந்த என்று
ஒத்து வரு கிளவி உருவின் உவமம்.    16
தம்தம் மரபின் தோன்றுமன் பொருளே.    17
நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே.    18
பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப.    19
உவமப் பொருளின் உற்றது உணரும்
தெளி மருங்கு உளவே திறத்து இயலான.    20
உவமப் பொருளை உணரும் காலை
மரீஇய மரபின் வழக்கொடு வருமே.    21
இரட்டைக்கிளவி இரட்டை வழித்தே.    22
பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி
முன்னை மரபின் கூறும் காலை
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே.    23
உவமப் போலி ஐந்து என மொழிப.    24
தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப.    25
கிழவி சொல்லின் அவள் அறி கிளவி.    26
தோழிக்கு ஆயின் நிலம் பெயர்ந்து உரையாது.    27
கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும்.    28
ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே.    29
இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும் என்ப.    30
கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே.    31
கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே.    32
தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற்கு உரியர் கொள் வழியான.    33
வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கின் கொள் வழிக் கொளாஅல்.    34
ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே.    35
உவமத் தன்மையும் உரித்து என மொழிப
பயனிலை புரிந்த வழக்கத்தான.    36
தடுமாறு உவமம் கடி வரை இன்றே.    37
அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே
நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம்
வரன் முறை வந்த மூன்று அலங்கடையே.    38

Maran:
 8. செய்யுளியல்


மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடை வகை எனாஅ
நோக்கே பாவே அளவு இயல் எனாஅ
திணையே கைகோள் கூற்று வகை எனாஅ
கேட்போர் களனே கால வகை எனாஅ
பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ
முன்னம் பொருளே துறை வகை எனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின்
ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும்
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என
வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே.    1
அவற்றுள்,
மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்
மேல் கிளந்தனவே என்மனார் புலவர்.    2
குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி
நேரும் நிரையும் என்றிசின் பெயரே.    3
இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே
நேர்பும் நிரைபும் ஆகும் என்ப
குறில் இணை உகரம் அல் வழியான.    4
இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை.    5
தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது.6
ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம்.    7
முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும்.    8
குற்றியலுகரமும் முற்றியலுகரமும்
ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே.    9
அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே.    10
ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும்
சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே.    11
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்.    12
முன் நிரை உறினும் அன்ன ஆகும்.    13
நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால.    14
இயலசை ஈற்று முன் உரியசை வரினே
நிரையசை இயல ஆகும் என்ப.    15
அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.    16
ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப.    17
இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப.    18
வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே
வெண் சீர் அல்லா மூ அசை என்ப.    19
தன் பா அல் வழி தான் அடைவு இன்றே.    20
வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய.    21
வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்
இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே.    22
கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ.    23
கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர்
நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே.    24
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா.    25
இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்
அசைநிலை வரையார் சீர் நிலை பெறவே.    26
இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே
தளை வகை சிதையாத் தன்மையான.    27
வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே.    28
இன் சீர் இயைய வருகுவது ஆயின்
வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே.    29
அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்
ஒன்றுதல் உடைய ஓர் ஒரு வழியே.    30
நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே.    31
அடி உள்ளனவே தளையொடு தொடையே.    32
அடி இறந்து வருதல் இல் என மொழிப.    33
அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே.    34
நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து
ஏறிய நிலத்தே குறளடி என்ப.    35
ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே
ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான.    36
பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே
ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே.    37
மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப.    38
மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப.    39
சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது
நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும்.    40
எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே
குன்றலும் மிகுதலுsம் இல் என மொழிப.    41
உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ
உயிர்த் திறம் இயக்கம் இன்மையான.    42
வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும்.    43
தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே.    44
முச் சீரானும் வரும் இடன் உடைத்தே.    45
அசை கூன் ஆகும் அவ்வயினான.    46
சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே.    47
ஐ வகை அடியும் விரிக்கும் காலை
மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்
எழுபது வகையின் வழு இல ஆகி
அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே.    48
ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே
பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை.    49
ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய.    50
விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே.    51
தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும்
இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய
தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா.    52
சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின்
ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும்.    53
குறளடி முதலா அளவடி காறும்
உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப.    54
அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய
தளை வகை ஒன்றாத் தன்மையான.    55
அளவடி மிகுதி உளப்படத் தோன்றி
இரு நெடிலடியும் கலியிற்கு உரிய.    56
நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும்
வரை நிலை இன்றே அவ் அடிக்கு என்ப.    57
விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே.    58
இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே.    59
வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ் சீர் அடியும் உள என மொழிப.    60
அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு
நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே.    61
எழு சீர் அடியே முடுகியல் நடக்கும்.    62
முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும்.    63
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்
மூ வகை அடியும் முன்னுதல் இலவே.    64
ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின்
தோற்றம் முச் சீர்த்து ஆகும் என்ப.    65
இடையும் வரையார் தொடை உணர்வோரே.    66
முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும்.    67
வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே.    68
வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்
அசை சீர்த்து ஆகும் அவ் வழியான.    69
நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும்
சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப.    70
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும்
வரைவு இன்று என்ப வாய் மொழிப் புலவர்.    71
எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே.    72
வெண்பா இயலினும் பண்புற முடியும்.    73
எழுத்து முதலா ஈண்டிய அடியின்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர்.    74
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்.    75
மரபேதானும்,
நாற் சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று.    76
அகவல் என்பது ஆசிரியம்மே.    77
அதாஅன்று என்ப வெண்பா யாப்பே.    78
துள்ளல் ஓசை கலி என மொழிப.    79
தூங்கல் ஓசை வஞ்சி ஆகும்.    80
மருட்பா ஏனை இரு சார் அல்லது
தான் இது என்னும் தனிநிலை இன்றே.    81
அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார்.    82
தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப.    83
மோனை எதுகை முரணே இயைபு என
நால் நெறி மரபின தொடை வகை என்ப.    84
அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும்.    85
பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும்
அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே.    86
நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும்
மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப.    87
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை.    88
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்.    89
ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய.    90
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.    91
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே.    92
அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே.    93
ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின்
பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே.    94
இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப.    95
சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்
சொல் இயற் புலவர் அது செந்தொடை என்ப.    96
மெய் பெறு மரபின் தொடை வகைதாமே
ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ற்றொடு
தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று
ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே.    97
தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும்.    98
தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப.    99
மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே.    100
ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என
நால் இயற்று என்ப பா வகை விரியே.    101
அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய
மும் முதல் பொருட்கும் உரிய என்ப.    102
பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு
ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப.    103
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலி என மொழிப.    104
வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே.    105
வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.    106
வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே
செவியறிவுறூஉ என அவையும் அன்ன.    107
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்
தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே.    108
அவையடக்கியலே அரில் தபத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று
எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே.    109
செவியுறைதானே,
பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே.    110
ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்
குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப.    111
குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும்.    112
மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும்
செந்தூக்கு இயல என்மனார் புலவர்.    113
நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே
கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின.    114
கைக்கிளைதானே வெண்பா ஆகி
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே.    115
பரிபாடல்லே தொகை நிலை வகையின்
இது பா என்னும் இயல் நெறி இன்றி
பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப.    116
கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும்.    117
சொற்சீர் அடியும் முடுகியல் அடியும்
அப் பா நிலைமைக்கு உரிய ஆகும்.    118
கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்
முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்
மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும்
சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே.    119
அங்கதம்தானே அரில் தபத் தெரியின்
செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே.    120
செம்பொருள் ஆயின வசை எனப்படுமே.    121
மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும்.    122
செய்யுள்தாமே இரண்டு என மொழிப.    123
துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின்
செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்.    124
வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்
அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்.    125
ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே
கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே.    126
அவற்றுள்,
ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும்.    127
இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என
நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப.    128
தரவேதானும் நால் அடி இழிபு ஆய்
ஆறு இரண்டு உயர்வும் பிறவும் பெறுமே.    129
இடைநிலைப்பாட்டே,
தரவு அகப்பட்ட மரபினது என்ப.    130
அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர்
நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி.    131
போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே
தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே
புரை தீர் இறுதி நிலை உரைத்தன்றே.    132
ஏனை ஒன்றே,
தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே.    133
அதுவே,
வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே.    134
வண்ணகம்தானே,
தரவே தாழிசை எண்ணே வாரம் என்று
அந் நால் வகையின் தோன்றும் என்ப.    135
தரவேதானும்,
நான்கும் ஆறும் எட்டும் என்ற
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும்.    136
ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே
தரவின் சுருங்கித் தோன்றும் என்ப.    137
அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும்.    138
முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே.    139
எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே
சின்னம் அல்லாக் காலையான.    140
ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும்.    141
கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும்.    142
தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்
தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்
எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும்
அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
கொச்சக ஒருபோகு ஆகும் என்ப.    143
ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே.    144
அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே
செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை.    145
எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்
அடக்கியல் வாரமொடு அந் நிலைக்கு உரித்தே.    146
ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான்
திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே.    147
தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும்
ஐஞ் சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும்
வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்
பாநிலை வகையே கொச்சகக் கலி என
நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே.    148
கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும்
போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே.    149
ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை
ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே.    150
நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே
குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே.    151
அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும்.    152
கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்
செவியறி வாயுறை புறநிலை என்று இவை
தொகு நிலை மரபின் அடி இல என்ப.    153
புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத்
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்
பண்புற முடியும் பாவின என்ப.    154
பரிபாடல்லே,
நால் ஈர் ஐம்பது உயர்பு அடி ஆக
ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை.    155
அளவியல் வகையே அனை வகைப்படுமே.    156
எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
அடி வரை இல்லன ஆறு என மொழிப.    157
அவைதாம்,
நூலினான உரையினான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறை மொழி கிளந்த மந்திரத்தான
கூற்று இடை வைத்த குறிப்பினான.    158
அவற்றுள்,
நூல் எனப்படுவது நுவலும் காலை
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே.    159
அதுவேதானும் ஒரு நால் வகைத்தே.    160
ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்
இன மொழி கிளந்த ஓத்தினானும்
பொது மொழி கிளந்த படலத்தானும்
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று
ஆங்கு அனை மரபின் இயலும் என்ப.    161
அவற்றுள்,
சூத்திரம்தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே.    162
நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர்.    163
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்.    164
மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்
தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப.    165
பாட்டு இடை வைத்த குறிப்பினானும்
பா இன்று எழுந்த கிளவியானும்
பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று
உரை வகை நடையே நான்கு என மொழிப.    166
அதுவேதானும் இரு வகைத்து ஆகும்.    167
ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே
ஒன்றே யார்க்கும் வரை நிலை இன்றே.    168
ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவது கிளந்த துணிவினானும்
என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே.    169
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப.    170
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப.    171
எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி
பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியே.    172
பாட்டிடைக் கலந்த பொருள ஆகி
பாட்டின் இயல பண்ணத்திய்யே.    173
அதுவேதானும் பிசியொடு மானும்.    174
அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்
அடி இகந்து வரினும் கடி வரை இன்றே.    175
கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின்
அளவியல் வகையே அனை வகைப்படுமே.    176
கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும்
முன் கிளந்தனவே முறையினான.    177
காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும்
பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று
ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு
மறை என மொழிதல் மறையோர் ஆறே.    178
மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும்
இவை முதலாகிய இயல் நெறி திரியாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே.    179
மெய் பெறும் அவையே கைகோள் வகையே.    180
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவு இயல் மரபின் அறு வகையோரும்
களவின் கிளவிக்கு உரியர் என்ப.    181
பாணன் கூத்தன் விறலி பரத்தை
ஆணம் சான்ற அறிவர் கண்டோ ர்
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ
தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர்.    182
ஊரும் அயலும் சேரியோரும்
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்
கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது
கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும்.    183
கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும்
நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது.    184
ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு
கண்டோ ர் மொழிதல் கண்டது என்ப.    185
இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு
வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன்.    186
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு
மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே.    187
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்
நினையும் காலை கேட்குநர் அவரே.    188
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.    189
பரத்தை வாயில் என இரு வீற்றும்
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயன் இலவே.    190
வாயில் உசாவே தம்முள் உரிய.    191
ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவை அல பிறவும் நுதலிய நெறியான்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்.    192
ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும்
கரும நிகழ்ச்சி இடம் என மொழிப.    193
இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.    194
இது நனி பயக்கும் இதன் மாறு என்னும்
தொகு நிலைக் கிளவி பயன் எனப்படுமே.    195
உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின்
மெய்ப் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும்.    196
எண் வகை இயல் நெறி பிழையாதாகி
முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே.    197
சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்.    198
இவ் இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று
அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம்.    199
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி
இது ஆகு இத் திணைக்கு உரிப் பொருள் என்னாது
பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப.    200
அவ் அம் மக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவண் வரினும் திறவதின் நாடி
தம்தம் இயலின் மரபொடு முடியின்
அத் திறம்தானே துறை எனப்படுமே.    201
அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல்
மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின்.    202
மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி
உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே.    203
வண்ணம்தாமே நால் ஐந்து என்ப.    204
அவைதாம்,
பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று
ஆங்கு என மொழிப அறிந்திசினோரே.    205
அவற்றுள்,
பாஅ வண்ணம்
சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும்.    206
தாஅ வண்ணம்
இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும்.    207
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே.    208
மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே.    209
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே.    210
அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்.    211
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்.    212
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்.    213
சித்திர வண்ணம்
நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே.    214
நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்.    215
அகப்பாட்டு வண்ணம்
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே.    216
புறப்பாட்டு வண்ணம்
முடிந்தது போன்று முடியாதாகும்.    217
ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்.    218
ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்.    219
எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்.    220
அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும்.    221
தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்.    222
ஏந்தல் வண்ணம்
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்.    223
உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்.    224
முடுகு வண்ணம்
அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே.    225
வண்ணம்தாமே இவை என மொழிப.    226
வனப்பு இயல்தானே வகுக்கும் காலை
சில் மென் மொழியான் தாய பனுவலின்
அம்மைதானே அடி நிமிர்வு இன்றே.    227
செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின்
அவ் வகைதானே அழகு எனப்படுமே.    228
தொன்மைதானே
உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே.    229
இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்
தோல் என மொழிப தொல் மொழிப் புலவர்.    230
விருந்தேதானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.    231
ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப்
புள்ளி இறுதி இயைபு எனப்படுமே.    232
சேரி மொழியான் செவ்விதின் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே.    233
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது
குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து
ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின்
இழைபின் இலக்கணம் இயைந்ததாகும்.    234
செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவ உள எனினும் வந்தவற்று இயலான்
திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.    235

Maran:
 9. மரபியல்


மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே.    1
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப.    2
பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.    3
அவற்றுள்,
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை.    4
தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன.    5
மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய.    6
பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை.    7
நாயே பன்றி புலி முயல் நான்கும்
ஆயும் காலை குருளை என்ப.    8
நரியும் அற்றே நாடினர் கொளினே.    9
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார்.    10
பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை
கொள்ளும் காலை நாய் அலங்கடையே.    11
யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே.    12
கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப.    13
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப் பாலான.    14
யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.    15
எருமையும் மரையும் வரையார் ஆண்டே.    16
கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.    17
ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.    18
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.    19
ஆவும் எருமையும் அது சொலப்படுமே.    20
கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும்.    21
குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின் அப் பெயர்க்கு உரிய.    22
குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை
கிழவ அல்ல மக்கட்கண்ணே.    23
பிள்ளை குழவி கன்றே போத்து எனக்
கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே.    24
நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே.    25
சொல்லிய மரபின் இளமைதானே
சொல்லும் காலை அவை அல இலவே.    26
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.    27
புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.    28
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.    29
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.    30
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.    31
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.    32
மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.    33
ஒரு சார் விலங்கும் உள என மொழிப.    34
வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல்.    35
கேழற்கண்ணும் கடி வரை இன்றே.    36
புல்வாய் புலி உழை மரையே கவரி
சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும்.    37
வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன.    38
ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும்.    39
பன்றி புல்வாய் உழையே கவரி
என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய.    40
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன.    41
கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே.    42
பெற்றம் எருமை புலி மரை புல்வாய்
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே.    43
நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய.    44
மயிலும் எழாலும் பயிலத் தோன்றும்.    45
இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய.    46
கலை என் காட்சி உழைக்கும் உரித்தே
நிலையிற்று அப் பெயர் முசுவின்கண்ணும்.    47
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின்கண்ணே.    48
சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மா இருந் தூவி மயில் அலங்கடையே.    49
ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப.    50
ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய
பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய
காண்ப அவை அவை அப்பாலான.    51
பிடி என் பெண் பெயர் யானை மேற்றே.    52
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை
பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய.    53
புள்ளும் உரிய அப் பெயர்க்கு என்ப.    54
பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்.    55
கோழி கூகை ஆயிரண்டு அல்லவை
சூழும் காலை அளகு எனல் அமையா.    56
அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே.    57
புல்வாய் நவ்வி உழையே கவரி
சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே.    58
பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை.    59
பிணவல் எனினும் அவற்றின் மேற்றே.    60
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே.    61
பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய.    62
எருமையும் மரையும் பெற்றமும் நாகே.    63
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே.    64
மூடும் கடமையும் யாடு அல பெறாஅ.    65
பாட்டி என்ப பன்றியும் நாயும்.    66
நரியும் அற்றே நாடினர் கொளினே.    67
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி.    68
குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த அவ் வழக்கு உண்மையின்
கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே.    69
பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே.    70
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய.    71
படையும் கொடியும் குடையும் முரசும்
நடை நவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.    72
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.    73
பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்
நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே.    74
ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.    75
தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப.    76
இடை இரு வகையோர் அல்லது நாடின்
படை வகை பெறாஅர் என்மனார் புலவர்.    77
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.    78
மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார் அப் பாலான.    79
கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே.    80
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி.    81
வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே.    82
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே.    83
வில்லும் வேலும் கழலும் கண்ணியும்
தாரும் மாலையும் தேரும் மாவும்
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய.    84
அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.85
புறக் காழனவே புல் என மொழிப.    86
அகக் காழனவே மரம் என மொழிப.    87
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்.    88
இலையே தளிரே முறியே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப.    89
காயே பழமே தோலே செதிளே
வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன.    90
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத்
திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.    91
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபு வழிப் பட்ட சொல்லினானே.    92
மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்.    93
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான.    94
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
உரை படு நூல்தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின.    95
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்.    96
வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும்.    97
வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்.    98
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே.    99
ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி
ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத்திரு வகை உத்தியொடு புணரின்
நூல் என மொழிப நுணங்கு மொழிப் புலவர்.    100
உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம்
புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்
விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு
புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே.    101
மேற் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு
சில் வகை எழுத்தின் செய்யுட்கு ஆகி
சொல்லும் காலை உரை அகத்து அடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகி
பல வகையானும் பயன் தெரிபு உடையது
சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர்.    102
பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின்
கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும்.    103
விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி
சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்
மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே.    104
சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற
இன்றியமையாது இயைபவை எல்லாம்
ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே.    105
மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்
தன் நூலானும் முடிந்த நூலானும்
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி
தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்.    106
சொல்லப்பட்டன எல்லா மாண்பும்
மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே.    107
சிதைவு இல் என்ப முதல்வன் கண்ணே.    108
முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும்
வல்லோன் புணரா வாரம் போன்றே.    109
சிதைவு எனப்படுபவை வசை அற நாடின்
கூறியது கூறல் மாறு கொளக் கூறல்
குன்றக் கூறல் மிகை படக் கூறல்
பொருள் இல கூறல் மயங்கக் கூறல்
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனம் கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்று விரி ஆகும்.    110
எதிர் மறுத்து உணரின் அத் திறத்தவும் அவையே.    111
ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்
நுதலியது அறிதல் அதிகார முறையே
தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல்
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்
மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்
வாராததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்
முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே
ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல்
தன் கோள் கூறல் முறை பிறழாமை
பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்
இறந்தது காத்தல் எதிரது போற்றல்
மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்
தான் குறியிடுதல் ஒருதலை அன்மை
முடிந்தது காட்டல் ஆணை கூறல்
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்
மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்
பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல்
பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல்
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்
தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிற அவண் வரினும்
சொல்லிய வகையான் சுருங்க நாடி
மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே.    112

பொருளதிகாரம் முற்றிற்று

MysteRy:

Maran:


மொழி சிதைவுறாமல் காப்பதற்குத் துணை நிற்பவை இலக்கணங்கள். இன்றும் நம் தமிழ் மொழி ஒரு கட்டுக்குள் இருக்கிறதென்றால் காரணம் நம்முடைய தொன்மையான இலக்கண நூலாக விளங்க கூடிய தொல்காப்பியமே. தொல்காப்பியத்திற்குப் பிறகு பல இலக்கண நூல்கள் தோன்றியிருந்தாலும், அடிப்படை இலக்கணத்தின் வித்து தொல்காப்பியத்தில் தான் இருக்கின்றது. தொல்காப்பியத்தை தெளிவுற கற்றோம் என்றால் மொழி நம் வயப்பட்டுவிடும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

மற்ற மொழி இலக்கண நூலில் இல்லாத சிறப்பு தொல்லகாப்பியத்தில் உள்ளது என்னவென்றால் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்திருப்பது தான். அதாவது பொருளதிகார மரபு தமிழ் இலக்கணத்ததில் மட்டுமே காணப்பெறுகின்றது.



Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version