ஒவ்வொரு பண்டிகைக்கான குதூகலமும் அந்த அந்த
மாதங்களில் ஆரம்பிக்கையில்,
பொங்கும் உள்ளமாய்
வருட நாட்காட்டியை
வாங்கும்பொழுதே
கண்கள் தேடி நோக்குவது
என்றைக்கு தீபாவளி என்று தான்!
தீபாவளி மாதம் நெருங்க நெருங்க
ஒவ்வொரு மனதிற்கும்
ஒவ்வொருவித உற்சாகம்
ஒவ்வொருவித கனவுகள்
ஒவ்வொருவித ஏக்கங்கள்.
குழந்தைகளின் மனங்களில்
புத்தம் புதிய உடையகளும்
வண்ண வண்ண பட்டாசுகளும்
வட்டமிடும் பட்டாம்பூச்சியாய் கனவுகளில் திரிய,
வீட்டுப் பெண்களின் கைககளோ
அரக்க பறக்க அரிசி மாவை
அரைத்துக் கொண்டும்,
பரணில் இருக்கும் முறுக்கு அச்சுகளை
தேடிக்கொண்டிருக்கும்.
ஆர்வத்தோடும், குறுகுறுப்போடும்
வரவு செலவுகளை கணக்கிட்டு
கையிலடங்கா செலவுகளை
எண்ணி துவண்டும்
பிறகு
வருடத்திற்கு ஒரிரு முறைதானே
என குடும்பத்தின் கனவுகளை
வலுப்படுத்திக்
கொண்டிருக்கும் சில மனதுகள்.
தொலை தூரத்திலிருந்து வரும்
சொந்தங்களுக்காக
திறந்தே கிடக்கும் வீடுகளும் மனதுகளும்.
நாட்கள் நெருங்க நெருங்க
நண்டு சிண்டுகளுக்கு
ஒன்று போதாதென இரண்டும்
இரண்டு போதாதென மூன்றும்
உடைகள் எடுத்து,
"எனக்கு இந்த கலரே பிடிச்சிருக்கு"
என 'தாராள மனதுடன்'
கம்மி விலை உடைகளை
எடுத்துக்கொண்டு
தன் நத்தைக் கூட்டுக்குள் சுருங்க நினைக்கும் தாயின் வழமையான
விட்டுக்கொடுத்தல்களும்,
"பெரிய தியாக செம்மல், பிடிச்சத எடுத்துக்கோ" என அதட்டலோடு அரவணைக்கும் தந்தையும்
ஒரு கூட்டு பறவைகளை தாங்கி நிற்கும் ஆலமரம் போல்
நிறைவும், சுணக்கமும், பிணக்கமும் நிறைந்து வழியும்
ஜவுளி கடைகளில்
வீதியெங்கும் திருவிழா கோலம் போடும்
புது புது பட்டாசு கடைகள்
தெருவில் செல்லும் குழந்தைகளை
கைப்பிடித்து இழுக்கும்.
அடம்பிடித்து
அவர்களின் தந்தைகளையும்
கைப்பிடித்து இழுக்கும்
இந்த வெடி வாங்குவதா அந்த வெடி வாங்குவதா
என குழப்பம் நிறையும் மனதுகளுக்கு
இரண்டையும் வாங்கும்படி
தூபம் போடும்
கடைக்காரரை ஓரக்கண்ணாலேயே
விரட்டும்
தந்தையின் கண்கள்.
எவ்வளவு எவ்வளவு என்று வாங்கினாலும்
போதவில்லை என கூறும் மனதிற்கு
மத்தாப்பூ கொளித்திச் செல்லும்
இறுதியில்
கடைக்காரர் இலவசமாய் தரும்
கம்பி மத்தாப்பு பெட்டி
முதல் நாள் இரவு அம்மா இடும்
வட்ட வட்ட மருதாணி பொட்டுகள்
யாருக்கு அதிகம் சிவக்கும் என
தொலைத்தூரத்தில் ஒலிக்கும் வேட்டு சத்தங்களை
கேட்டபடி
கனவுகளோடும், ஆசைகளோடும் உறங்கச் செல்லும்
இளந்தளிர்கள்
எப்பொழுது விடியும் எப்பொழுது விடியும்
எனக் காத்திருந்து
ஊரின் முதல் வேட்டு சத்தம் கேட்கும்
அதிகாலையில் அதிசயமாய் விழிப்பு வரும்
ஐப்பசி மாத குளிருடன்
மருதாணி குளுமை
சேர்ந்து இறுகியிருக்கும் விரல்களை அவசர அவசரமாக
கழுவிக்கொண்டு,
சற்று நேரத்தில் வெடிக்கப் போகும் வெடிகளையும்
சற்று நேரத்தில் அணிய போகும் ஆடைகளையும்
தடவி தடவி பார்த்து
உற்சாகும் கொள்ளும் சிறு மனது
தலையிலிருந்து வழிந்தொழுகும்
எண்ணையுடன் சேர்ந்த சிகைக்காய்
கண்களை உறுத்த
கங்கா ஸ்நானமும் காவிரி ஸ்நானமும்
கடமைக்கென நிகழ
புது உடைகளின் மீது
கைவைக்கும் நேரம்
இட்லி அவியும் மணமும், கடுகு தாளிக்கும் சத்தமும்
மிதந்து வரும்
அடுப்பங்கரையில் இருந்து
சேர்ந்தே ஒலிக்கும் அம்மாவின் குரல்
புது உடைகளுக்கு மஞ்சள் வைக்க சொல்லி
முதல் வெடியின் திரி கிள்ளி பற்ற வைக்கும் பரவசமும்,
வெடித்து முடித்த வெடி மருந்தின் வாசமும்,
திரி கிள்ளிய கைகளின் கருப்பும்,
உடையின் பொத்தான்களை பிரித்து அணியும் குதூகலமும்,
புது உடையின் வாசனையும்,
தின்று தின்று தீராத முறுக்குகளும், அதிரசங்களும்,
கலகலக்கும் அணிகலன்களுடன்
வீடுகளில் பலகாரத்தட்டுடன் ஏறி இறங்கும்
வண்ண வண்ண சிட்டுகளும்,
வாசலில் இட்ட கோலங்கள் மீது
சிதறி கிடக்கும் காகிதங்களும்
கையில் வெடி பிடித்து அலட்சிய பார்த்து திரியும் காளைகளும்,
காளைகளை கடைகண் பார்வை பார்த்து செல்லும்
வாலைகளும்,
ஒரு வேலை முடிந்ததுவென
தொலைக்காட்சியில் புதைத்துக் கொள்ளும் பெரியவர்களும்,
சிலருக்கு பரபரப்பாகவும்
சிலருக்கு பரபரப்பின்றியும்
மற்றுமொரு நாளென கடந்து செல்லவியலாத
தாக்கத்தோடு
இரவில் ஒளிரும் வானவெடிகளும், சங்குசக்கிரங்களும்
முடிந்தது முடிந்தது
என அறிவிக்கும் கடைசி சரவெடிகளும், மத்தாப்புகளும்
முடித்து வைக்கும் பாவனையுடன்
தெருவோரங்களில் குவிந்து கிடக்கும் காலி அட்டைப்பெட்டிகளுடனும்
மீதமிருக்கும் வெடிகளும்
பலகாரக பட்சணங்களும்
பண்டிகை நாள் முடிந்ததற்கான சாட்சியங்களுடன்
அசந்து கிடக்கும் உடல்களுக்கும் உள்ளங்களுக்குமிடையே
மெல்லியதாய் ஒலிக்கும் ஒரு குரல்,
“ம்மா அடுத்த வருசம் எப்ப தீபாவளிம்மா” !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தீபங்களின் வரிசை அரங்கேறும் நேரம்
மனவானில் ஒரு ஓரத்தில் வெள்ளி முளைக்கும்
பிறக்கின்ற அவ்வொளி, தீபவொளி போல
இருண்மை நிறைந்த மனங்களுக்கு
வெளிச்சத்தைபாவி செல்லட்டும்
பகிர்தலின் பண்டிகையில் விருப்பு வெறுப்பு கடந்து, அன்பை மட்டும் பகிர்ந்தளிப்போம்.
நண்பர்களுக்கு இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்