FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Anu on February 20, 2012, 10:09:16 AM

Title: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:09:16 AM

மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்... மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி.

ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். 14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.

அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான். அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:11:38 AM
மகாபாரதம் பகுதி-2

 
நஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால், இவனுக்கு கோபமே வராது. இவனது பொறுமையை வியாசரே பாராட்டினாராம். இந்த பொறுமைசாலிக்கு, அசுரகுரு சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயானையைத் திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதியர் இனிதே நடத்திய இல்லறத்தில், யது, துருவஸ் என்ற மகன்கள் பிறந்தனர். பொறுமைசாலியான யயாதிக்கும் இறைவன் சோதனையை கொடுத்தான். ஒருநாள், அசுரகுல மன்னனான விருஷவர்பனை அவர்களின் குலகுரு சுக்ராச்சாரியார் அழைத்தார். விருஷா! என் மகள் தேவயானையை யயாதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதை நீ அறிவாய். கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்கு உற்ற துணை யாருமில்லை. எனவே, உன் மகள் சன்மிஷ்டை தேவயானையுடன் அரண்மனையில் தங்கட்டும். தேவயானையும், அவளும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர். தோழிகளாகவும் விளங்குவர், என்றார். விருஷவர்பன் குலகுருவின் கட்டளைக்கு அடிபணிந்தான். உடனடியாக சன்மிஷ்டையை தேவயானையின் வீட்டில் கொண்டு சேர்த்தான். அவர்கள் உற்ற தோழிகளாயினர். இந்நேரத்தில் அரசாங்க பணியாக வெளியூர் சென்றிருந்த யயாதி வந்து சேர்ந்தான். தன் அரண்மனையில் ஒரு அழகுச்சிலை நடமாடுவதைக் கண்ட மன்னன் அவளை யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டான். தோழியின் கணவன் என்ற முறையில், சன்மிஷ்டை யயாதியுடன் அடிக்கடி பேசுவாள். யயாதி பொறுமைசாலி தான்! ஆனால், உணர்வுகள் இல்லாதவன் இல்லையே! தன் மனைவியை விட பேரழகு மிக்க சன்மிஷ்டையை அவன் காதலிக்க ஆரம்பித்தான். சன்மிஷ்டையும், அந்த பேரரசனின் வலையில் விழுந்து விட்டாள். இந்த விஷயம் தேவயானைக்குத் தெரியாது.

காதலர்கள் தனிமையில் சந்தித்தனர். தாலி கட்டி மனைவியாக்கினால், தேவயானைக்குத் தெரிந்து விடும். எனவே, அவளை கந்தர்வ மணம் (மானசீகமாக திருமணம் செய்தல்) செய்து கொண்டான். பிறகென்ன! தம்பதியர் ஒளிவாக வாழ்ந்தனர். ஆனால், காலம் சும்மா இருக்குமா! சன்மிஷ்டை கர்ப்பவதியாகி விட்டாள். பின்னர் தேவயானையை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அவள் தனி மாளிகை ஒன்றில் குடி வைத்தான் யயாதி. இப்படியாக பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பூரு, த்ருஹ்யு, அநு என்ற மகன்களைப் பெற்றாள். மூன்று குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் யயாதி தன் முதல் மனைவியிடம் மாட்டி கொள்ளாமல் தான் இருந்தான். ஒருநாள் தந்தையைத் தேடி குழந்தைகள் அரண்மனைக்கு வந்து விட்டனர். அவர்கள் தேவயானையின் கண்ணில் பட்டனர். மூவருமே, யயாதியை அச்சில் வார்த்தது போல் இருக்கவே, சந்தேகப்பட்ட தேவயானை இதுபற்றி விசாரித்தாள். சன்மிஷ்டையும், யயாதியும் தனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்பது புரிந்து விட்டது. அவள் யயாதியுடன் கடுமையாக சண்டை போட்டாள். அழுது புலம்பினாள். மாமன்னரே! நீர் பொறுமைசாலி என்றும், அமைதியானவர் என்றும் பெயர் பெற்றிருந்தீர். உம் அமைதியின் பொருள் இப்போது தானே எனக்கு விளங்குகிறது! வளவளவென பேசுபவர்களை நம்பலாம். வாய்மூடி மவுனிகளை நம்பவே கூடாது என்ற உலக வழக்குச்சொல் உண்மை என நிரூபித்து விட்டீர். இனி உம்மோடு வாழமாட்டேன். என் தந்தை வீட்டுக்குச் செல்கிறேன். சுக்ராச்சாரியார் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறேன், என சபதம் செய்து விட்டு, அவனைப் பிரிந்து விட்டாள். தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது யயாதிக்கு தெரிந்து விட்டது. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த தேவயானை, தகப்பனாரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி அழுதாள். பெற்ற மகள் கண்ணீர் வடித்தாலும், போம்மா! ஏதோ நடந்து விட்டது.

கட்டியவன் தான் உனக்கு புகல், என்று கூறும் சாதாரண தந்தையா சுக்ராச்சாரியார். அசுரர்களுக்கே அவர் குருவல்லவா! அதிகாரம் மிக்க அவர், யயாதியை தன் வீட்டுக்கே வரச்சொன்னார்.துரோகி! உன்னிடம் இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி காதல் நாடகம் நடத்தினாய். இனியும், உன்னை விட்டு வைத்தால், என் மகளை போல பல அபலைகளை உருவாக்கி விடுவாய். சன்மிஷ்டை மீது நீ கொண்டது காதல் அல்ல! காமம். அதனால் தானே மூன்று குழந்தைகள் பெறும் வரை இதை மறைத்து வைத்திருந்தாய்! கொடியவனே! உனக்கு இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி செய்தாய். ஒழியட்டும் உன் இளமை. இனி நீ கிழவனாக பூமியில் வலம் வா! உன்னைப் பார்ப்பவர்கள் காமத்தால் அறிவிழந்த துரோகி என தூற்றட்டும், என்றார். யயாதி உடனடியாக கிழவனானான். அசுரகுருவே! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறேன். தேவயானைக்கு நான் அநீதி இழைத்து விட்டேன். எனக்கு தாங்கள் சாபவிமோசனம் அளியுங்கள், என அவர் காலில் விழுந்தான்.யயாதி! நீ மீண்டும் இளமையைப் பெற ஒரே ஒருவழிதான் இருக்கிறது. உன் முதுமையை ஒரு இளைஞனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, அவனுடைய இளமையை நீ வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு வழியில்லை, என சொல்லி விட்டான். தேவயானை அவனுடன் வர மறுத்து விட்டாள்.அவன் வருத்தத்துடன் சன்மிஷ்டையிடமே சென்றான். அவள் யயாதியைக் கண்டு அதிர்ந்தாள்.யயாதி பலரிடமும் இளமையை யாசித்தான். யார் தருவார்கள்? அவன் கண்ணீர் வடித்த போது, ஒரு இளைஞன் அவன் முன்னால் வந்து நின்றான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:13:15 AM
மகாபாரதம் பகுதி-3

வந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்!அப்பா! தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக இருக்கிறான். சொல்லுங்கள்! நான் என்ன செய்ய வேண்டும்? என்றான். அன்பு மகனே! ஒரு தந்தை மகனிடம் யாசிக்கக் கூடாத ஒன்றை யாசிக்கிறேன். இந்த உலகத்திலேயே கொடூரமான வியாதி பெண்ணாசை. அது என்னிடம் அதிகமாகவே இருக்கிறது. உன் பெரிய அன்னையான தேவயானையை மணம் முடித்திருந்தும் கூட, அவளது தோழியான உன் அன்னை மீதும் ஆசைப்பட்டேன். மன்னர் குலத்துக்கு இது தர்மம் தான் என்றாலும், பெரியவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். என் மாமனார் சுக்ராச்சாரியார் என் இளமையைப் பறித்து விட்டார். உடல்தான் முதுமை அடைந்துள்ளதே தவிர, மனதில் இளமை உணர்வு அகல மறுக்கிறது. இந்த நோயில் இருந்து விடுதலை வேண்டுமானால், எனக்கு இளமை மீண்டும் வேண்டும். இளமை திரும்பினால் தான், உன் தாய் என்னை அருகே அனுமதிப்பாள், என்றான் கண்ணீர் வடித்து.தந்தையின் நிலைமைமகனுக்கு புரிந்தது. அவன் தந்தையைக் கட்டியணைத்தான். அருமைத் தந்தையே! தாங்கள் மட்டுமல்ல. இளமை சற்றும் மாறாத லோகத்திலேயே ரூபவதியான என் தாய்க்கும் பெற்ற கடனைத் தீர்க்க நேரம் வந்திருக்கிறது. நான் உங்கள் முதுமையை ஏற்கிறேன். என் இளமையை உங்களுக்கு தருகிறேன். சுக்ராச்சாரியார் சொன்னபடி சாப விமோசனம் பெற்று, என் அன்னையோடு சுகமாக வாழுங்கள். என்று உங்களுக்கு என் இளமையைத் திருப்பித் தர முடியுமோ அன்று தாருங்கள், என்றான்.

மகனைப் பாராட்டிய மன்னன், அவனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டான். பதிலாக தன் மனைவியோடு காலம் கழிப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான். ஒரு கட்டத்தில், ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகனிடம் இளமையைக் கொடுத்து விட்டு முதுமையைப் பெற்றுக் கொண்டான்.இப்படியாக சந்திரவம்சம் தியாக வம்சமாகத் திகழ்ந்தது. பூருவின் வம்சம் விருத்தியாகிக் கொண்டே வந்தது. இவர்களின் பரதன் என்ற மன்னன், மண்ணுலகில் மட்டுமின்றி, விண்ணுலகிலும் வெற்றிக்கொடி நாட்டினான். இந்த வம்சத்தில் வந்த மற்றொரு மன்னனான ஹஸ்தியின் ஆட்சிக்காலம் தான் சந்திர வம்சத்தின் முக்கிய காலம். இவன் தன் பெயரால் ஒரு பட்டணத்தை அமைத்து, அதை தன் நாட்டுக்கு தலைநகர் ஆக்கினான். அவ்வூரே ஹஸ்தினாபுரம் எனப்பட்டது. ஒரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் வந்தார். அந்த யானை, இந்திரத்யுநன் என்ற பெயரிலும், முதலை அநுரு என்ற பெயரிலும் பூமியில் மாமன்னர்களாகப் பிறந்தனர். அவர்களும் சந்திரகுலத்து அரசர்களே. இதன் பின் குரு என்ற மன்னன் பொறுப்பேற்றான். இவன் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததால், சந்திரகுலம் என்ற பெயர் மறைந்து குரு குலம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது.குருகுலத்தில் பிறந்த மன்னன் சந்தனு பேரழகன். வேட்டையாடுவதில் விருப்பமுள்ளவன். ஒருமுறை காட்டில் தாகத்தால் தவித்தவன், குதிரையில் வேகமாக கங்கைக்கரைக்குச் சென்றான். கரையில் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தாள். தண்ணீர் அருந்த வந்த சந்தனு, தாகத்தை மறந்தான். பதிலாக தாபம் அவனைத் தொற்றிக் கொண்டது.

ஆஹா...இப்படி ஒரு பேரழகியா? மணந்தால் இவளைத் தான் மணக்க வேண்டும். இவள் எந்த நாட்டு இளவரசி? இவளைப் பெண் கேட்க வேண்டுமே! என்ற வேட்கை உந்தித்தள்ள, சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. துணிச்சலுடன் அவளருகே சென்றான். அழகுப்பெண்ணே! நீ யார்? யாருமில்லாத இந்த இடத்தில் தனியாகத் திரிகிறாயே! உன் அழகுக்கு உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய்? உன் இருப்பிடத்தைச் சொல். உன்னைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறேன், என்றான். அவள் கலகலவென நகைத்தாள். மங்கையர் திலகமே! உன் நன்மை கருதி தான் எச்சரிக்கிறேன். நீயோ கேலி செய்வது போல நகைக்கிறாயே! இருந்தாலும், முத்துகள் சிதறுவது போல், அந்த நகைப்பும் இனிமையாகத்தான் இருக்கிறது! என்று கண் சிமிட்டினான். அவள் திரும்பவும் நகைத்தபடியே, இளைஞனே! எனக்கு பயமா? இன்று நள்ளிரவில் நீ இங்கே இரு. நீ பயப்படுகிறாயா? நான் பயப்படுகிறேனா என்பது உனக்குப் புரியும். இரவும், பகலுமாய் நான் இங்கே தான் இருக்கிறேன். இனியும் இருப்பேன். இந்த பூமி உள்ளளவும் இருப்பேன். இன்னும் பல யுகங்கள் இருப்பேன். ஆனால், அழியும்  மானிடப்பிறப்பெடுத்த நீ, என்னை இங்கிருந்து போகச் சொல்கிறாய், என்று அலட்சியமாகப் பேசினாள். அப்படியானால் நீ தேவ கன்னிகை தான். சந்தேகமேயில்லை. பூலோகத்தில், இத்தகைய லட்சணமுள்ள பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சரி...இருக்கட்டும். தேவதையான உன்னை பூமியில் பிறந்ததால், நான் அடைய முடியாதோ? உன்னை அடையும் தகுதி தான் எனக்கில்லையா? என்ற சந்தனுவைப் பார்த்த அப்பெண், தனது தற்போதைய நிலையை நினைத்தாள். அவளது பெயர் கங்கா. ஒரு சமயம் அகம்பாவத்தின் காரணமாக, பூமியில் ஒரு மானிடனிடம் காலம் கழிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றவள். அதற்கு இவன் சரியான ஆள் தான். அழகாகவும் இருக்கிறான். மன்னனாகவும் விளங்குகிறான். தன் வினைப்பயனை இவனிடமே அனுபவிப்போம் எனக் கருதிய கங்கா, அவன் யார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவள், அன்பனே! என் பெயர் கங்கா. நானே இதோ ஓடும் இந்நதி. நதிகள் பெண்ணுருவமாக இருப்பதை நீர் அறிந்திருப்பீர். ஒரு சாபத்தால் இந்த பூமிக்கு நான் வந்தேன், என்றாள்
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:14:59 AM
மகாபாரதம் பகுதி-4

கங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே! நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அழகுக்கன்னியை நான் என் வாழ்நாளில் பார்த்ததும் இல்லை. நான் இந்த பூவுலகில் மிகச்சிறந்த அரசன். உன்னை மணந்து கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எனக்கு வேண்டும். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று சங்கோஜத்துடன் கேட்டான்.அதைக்கேட்டு வெட்கப்பட்ட கங்காதேவி தலை குனிந்து நின்றாள். மவுனமொழி சம்மதத்துக்கு அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட சந்தனு, பெண்ணே! உன் மவுனத்தைக் கலைத்து நேரடியாக பதில் சொல், என்றான். அவள் சந்தனுவிடம், மன்னா! உம்மைத் திருமணம் செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால், எனது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கு சம்மதமென்றால், திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம், என்றாள். அவளது அழகில் லயித்துப் போயிருந்த சந்தனு, அவள் விதித்த நிபந்தனைகளைக் கேட்டான். மன்னா! நான் உம் மனைவி யான பிறகு, நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்கக்கூடாது. அதாவது, நான் உம் மனம் கஷ்டப்படும்படி நடந்தாலும் என்ன ஏதென்று கேட்கக்கூடாது. உலகமே வெறுக்கும் காரியத்தைச் செய்தாலும் ஏன் செய்தாய் என்ற கேள்வி எழக்கூடாது, என்றாள்.மன்னனுக்கு இவற்றை ஏற்பதா வேண்டாமா என்று குழப்பம் இருந்தாலும், பெண்ணாசையின் பிடியில் சிக்கியிருந்த அவன் சரியென சம்மதித்து விட்டான். மகாபாரதத்தின் துவக்கமே மனிதகுலத்துக்கு பாடம் கற்றுத்தருவதாக அமைந்திருப்பதை கவனியுங்கள். பெண்ணாசைக்கு ஒருவன் அடிமையாகக் கூடாது. அப்படி அடிமையாகி விட்டால், அவன் படப்போகும் துன்பங்களின் எல்லைக்கு அளவிருக்காது. இதோ! சந்தனு தன் அழிவின் முதல் கட்டத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறான். கங்கா! கலங்காதே, நீ என்ன சொன்னாலும் கேட்பேன். நீ நாட்டைக் கேட்டால் உன் பெயரில் எழுதி வைக்கிறேன். அரச செல்வம் உன்னுடையது. நீ என்ன சொல்கிறாயோ, அதன்படி நடக்கிறேன், எனச் சொல்லி அவள் முன்னால் மண்டியிட்டு நின்றான்.

சந்தனு வார்த்தை மாறமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட கங்கா, அவனைத் திருமணம் செய்து கொண்டாள். உலகிலேயே சிறந்த அந்த அழகியை அனுபவிப்பதில் மட்டுமே சுகம் கண்ட சந்தனு, ராஜ்ய விஷயங்களைக் கூட மறந்து விட்டான். எல்லாம் கங்காவின் இஷ்டப்படியே நடந்தது.இந்த நிலையில் கங்காதேவி கர்ப்பமானாள். சந்தனுவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. அவளைக் கண்ணைப் போல் பாதுகாத்தான். அவளது உடல் அதிரக்கூடாது என்பதற்காக மலர்களை பரப்பி அதில் நடக்க வைத்தான். பிரசவ நாள் வந்தது. கங்கா அழகான ஆண்மகனைப் பெற்றாள். சிறிதுநாள் கடந்ததும், குழந்தையை கங்கா எடுத்துக் கொண்டு கங்கைக்கு சென்றாள். இவள் யாரிடமும் சொல்லாமல் எங்கே போகிறாள் என சந்தனு பின்னால் சென்றான். அவள் செய்த செயலைப் பார்த்து அதிர்ந்து நின்று விட்டான். அதுவரை இனிய மொழி பேசும் கிளியாக, சாந்தமே வடிவமாகத் திகழ்ந்த கங்கா, இப்போது அரக்கியாகத் தெரிந்தாள். ஆம்...பெற்ற குழந்தையை ஆற்றில் வீசி எறிந்தவளை என்ன சொல்வது? ஆத்திரத்தின் விளிம்பிற்கே போன சந்தனுவிடம் அவனது இதயம் பேசியது. சந்தனு நில்! நீ காம வயப்பட்டு, இவளை மணந்தாய். இவள் தன்னை மணக்கும் முன், நான் என்ன செய்தாலும், கேள்வி கேட்கக்கூடாது. அது கொடூரமான செயலாக இருந்தாலும் சரி... என சொன்னாள் அல்லவா? இப்போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அவளைக் கேட்கப் போகிறாய்? என்றது.சந்தனு சூழ்நிலைக் கைதியாய் நின்றான். ஏதும் பேசாமல் திரும்பிய அவன், சில நாட்களில் எல்லாவற்றையும் மறந்தான். மீண்டும் கங்காவின் பிடியில் சிக்கினான். அவள் வரிசையாய் ஆறு பிள்ளைகளைப் பெற்றாள். ஆறு குழந்தைகளையும் தண்ணீரில் வீசினாள். அவளைக் கேள்வி கேட்க முடியாமல் தவித்த சந்தனு, எட்டாவது ஆண்குழந்தை பிறந்ததும் கங்கா அதைத் தூக்கிக் கொண்டு கங்கை நதிக்கு போவதைப் பார்த்தான்.

கொடியவளே! நில். இந்த குழந்தையையும் கொல்லப் போகிறாயா? உன்னைக் கேள்வி கேட்கக்கூடாது என்ற நிபந்தனை இத்தனை நாளும் என்னைத் தடுத்தது. நானும் போகட்டும், போகட்டும் என பார்த்தால், உன் கொடூரம் எல்லை மீறி விட்டது. பெற்ற குழந்தைகளைக் கொல்லும் கொடூரக்காரியான உன்னை திருமணம் செய்ததற்காக வெட்கப்படுகிறேன். குழந்தையைக் கொடுத்து விடு, என்றான். இதைக் கேட்டு கங்காவின் கண்கள் கொவ்வைப்பழமாகச் சிவந்தன. மன்னா! நன்றாக இருக்கிறது நீ கேட்பது! நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்க மாட்டேன் என்ற நிபந்தனைக்கு கட்டுப்பட்டு தானே என்னை மணம் முடித்தாய். ஏழு குழந்தைகளைக் கொல்லும் வரை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்காத நீ, இப்போது கேள்வி கேட்கிறாய். ஏனென்றால், பெற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விட காமமே உன் மனதில் நிரம்பி நின்றது. அன்று கேளாதவன் இப்போது கேள்வி கேட்கும் உரிமையை எப்படி எடுத்துக் கொண்டாய். நான் சில காரணங்களால் இப்படி குழந்தைகளைக் கொல்கிறேன். அதைக் கேட்டால் நீ இதை விட அதிர்ச்சியடைவாய். நான் தேவலோகத்து கங்காதேவி, நான் இந்த பூமிக்கு வந்து, இந்தக் குழந்தைகளைக் கொன்றதற்கான காரணத்தைக் கேள், என்று சொல்லி தன் கதையை ஆரம்பித்தாள். அவள் சொல்லச் சொல்ல சந்தனு மயிர்க்கூச் செறிய நின்றான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:18:22 AM
மகாபாரதம் பகுதி-5

மன்னா! கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த வாயுபகவான் தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடைய மார்பு தெரியும்படியாக ஆடையை காற்றடித்து பறக்க வைத்தான். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட தேவர்கள் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டனர். ஆனால், வருணன் மட்டும் என் அங்கங்களை ரசித்தான். இதனால், அங்கிருந்த பிரம்மன் கடும் கோபமடைந்தார்.ஏ வருணா! ஒரு பெண்ணை அவளறியாமல் ரசித்த நீ பூமியில் மானிடனாகப் பிறப்பாய் என சாபமிட்டார். என்னை பார்த்து, எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன் மானத்தைக் காக்க முயன்றிருக்க வேண்டும், காற்றடித்த வேளையில் நீ அதைச் செய்யத் தவறியதுடன், ஒரு ஆண்மகனின் மனம் பேதலிக்கவும் காரணமாக இருந்தாய். எனவே நீயும் பூமியில் மனுஷியாகப் பிறப்பாய். இந்த வருணனுக்கு வாழ்க்கைப்பட்டு சாப விமோசன காலம் வரை வாழ்ந்து, இங்கேமீண்டும் வருவாய் என்றார்.நான் மிகுந்த கவலையுடன் பூலோகம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது எட்டு திசைகளின் காவலர்களான அஷ்டவசுக்கள் என் எதிரே வந்தனர். அவர்களில் பிரபாசன் என்பவனும் ஒருவன். அவர்களும் கவலை பொங்கும் முகத்துடன் காட்சியளித்தனர். கவலைக்கான காரணத்தை நான் கேட்டேன்.தாயே! இந்த பிரபாசன் தன் மனைவி மீது மிகுந்த மோகம் கொண்டு, அவள் சொன்னதையெல்லாம் செய்வான். அவள் பேராசைக்காரி. நினைத்ததையெல்லாம் அடைய விரும்புபவள். வசிஷ்டரின் ஆசிரமத்தில் நினைத்ததை தரும் காமதேனு என்ற பசு இருந்தது. அதைப் பிடித்து வந்து தன்னிடம் தரும்படி கணவனிடம் அவள் சொன்னாள். இவனும் அவள் மீதுள்ள ஆசையால், பசுவைத் திருட ஏற்பாடு செய்தான். அவனை கண்டிக்க வேண்டிய நாங்கள், நண்பன் என்ற முறையிலே அவனுக்கு துணை போனோம். வசிஷ்டரின் ஆசிரமத்துக்குள் புகுந்து, காமதேனுவைத் திருடினோம். அவர் கோபமடைந்து, நாங்கள் பூமியில் மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டார்.

எங்களுக்கான சாப விமோசனம் பற்றி கேட்டோம். நீங்கள் பூமியில் பிறந்தவுடன் இறந்து விட்டால், மீண்டும்திசைக்காவலர் பதவியைப் பெறலாம் என அவர் கருணையுடன் சொன்னார். அதனால் பூமியில் பிறக்கவும், எங்களை உடனே கொல்லும் மனதுடையவளுமான ஒரு தாயை தேடி கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்டனர்.நானும் என் சாபம் பற்றி அவர்களிடம் சொல்லி, அவர்களிடம் இரக்கம் கொண்டு, குழந்தைகளே! வருணபகவான் பூமியில் சந்தனு என்ற மன்னனாகப் பிறப்பான். நான் அவனது மனைவியாவேன். உங்களை என் வயிற்றில் பிரசவிக்கிறேன். பிறந்த உடனேயே உங்களை ஆற்றில் எறிந்து கொன்று, உங்கள் பதவியை உடனடியாகக் கிடைக்கச் செய்கிறேன் என்றேன். அதன்படியே எனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றேன். மனைவியின் மோகத்தில் சிக்கிய பிரபாசனே இந்த எட்டாவது குழந்தை. வசிஷ்டரின் சாபப்படி இவன் இந்த பூமியில் பெண்ணாசையே இல்லாமல் வாழ்வான். உலகம் உள்ளளவும் இவனது புகழ் பூமியில் நிலைத்திருக்கும், என்றாள்.தானே உலகிற்கு மழையளிக்கும் வருணபகவான் என்று சந்தனு மன்னன் சந்தோஷப்பட்டாலும், இப்பிறவியில் தன் குலம் விருத்தியடையாமல் போனது பற்றி வருத்தப்பட்டான்.கங்கா! நம் ஏழு குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இவனும் பெண்ணாசை இல்லாமல் இருந்தால், நம் சந்திரகுலம் எப்படி விருத்தியடையும்? என்னோடு என் குலம் அழிந்து விடுமே. நாம் இன்னும் குழந்தைகளை பெறுவோம். அதன்பின் இருவருமே தேவலோகம் செல்லலாம், என்றான். கங்கா விரக்தியாக சிரித்தாள். மன்னா! நீ என் நிபந்தனையை மீறி கேள்வி கேட்டாய். எப்போது கேள்வி கேட்கிறாயோ, அப்போது நான் உன்னைப் பிரிந்து விடுவேன் என்று சொல்லித்தானே உன்னைத் திருமணம் செய்தேன். இனி உன்னோடு நான் வாழமாட்டேன். இந்த மகனுடன் நதியில் கலந்து விடுவேன்.

அவன் வாலிபன் ஆனபிறகு உன்னிடம் ஒப்படைப்பேன், என்று கூறி விட்டு கங்கையில் மறைந்து விட்டாள். கங்காவின் நினைவில் சந்தனு மூழ்கி கிடந்தான். அவள் எப்போது வருவாள் என காத்திருந்தான். கங்காதேவிக்கு முன்னதாக அவன் சில பெண்களைத் திருமணம் செய்திருந்தான். அவர்களால் அவனைத் தங்கள் வசப்படுத்த முடியவில்லை. வேட்டைக்கு போய் தன் மனதை அதில் திருப்ப முயன்றான். அப்போது கங்கைக்கரைக்கு போய், தன் மனைவி வரமாட்டாளா என காத்துக்கிடப்பான். ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் அவன் கங்கைக்கரையில் நின்ற போது, பூணூல் அணிந்து கையில் வில்லேந்திய வாலிபன் ஒருவனைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் தன் மகன் தான் என்பதை உள்ளுணர்வால் புரிந்துகொண்டான். அவனை நோக்கி ஓடிவந்தான். அந்த வாலிபன் சந்தனு மீது மோகனாஸ்திரத்தை எய்தான். அவன் தனது தந்தை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சந்தனு மயக்கமடைந்து கீழே விழுந்தான். அவன் மீது இரக்கம் கொண்ட கங்கா, தன் மகனுடன் கரைக்கு வந்தாள். அவன் தலையை அன்போடு வருடினாள். தன் மகனிடம், இவர் உன் தந்தை, என்றாள். அவள் கைப்பட்டதுமே அவன் எழுந்தான். அவனை அன்போடு தழுவிக் கொண்ட கங்கா, அரசே! நான் இன்று தேவலோகம் கிளம்புகிறேன். உங்களிடம் சொன்னபடி உங்கள் மகனை ஒப்படைத்து விட்டேன். இவன் பெயர் தேவவிரதன். பரசுராமரின் திருவருளால் அவரது ஆயுதங்களையே பெற்றவன். சிறந்த வில்லாளி வீரன். இவனோடு சேர்ந்து நீங்கள் இனி நாட்டை ஆளலாம், என்று சொல்லிவிட்டு, அவன் பதிலுக்கு காத்திராமல், நதியில் சென்று மறைந்தாள்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:20:12 AM
மகாபாரதம் பகுதி-6

மகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் விட்டான். கங்காதேவியின் செயலிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், சூழ்நிலைக் கைதியாகி விட்ட தன் நிலையை எண்ணி வருந்தினான்.பின்னர் தன் மகனை தேரில் ஏற்றிக் கொண்டு ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான். மன்னன் தன் மகனுடன் வருகிறான் என்ற செய்தி ஊருக்குள் பரவி விட்டதால் முக்கியஸ்தர்களும், நாட்டு மக்களும் ஊர் எல்லையில் வந்து தங்கள் இளவரசரை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் வந்தவுடன் இளவரசர் தேவவிரதன் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.சந்தனு தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான். இருவருமாக இணைந்து நல்லாட்சி நடத்தி வந்தனர்.ஒரு சமயம் சந்தனு வேட்டைக்குச் சென்றான். இளைப்பாறுவதற்காக யமுனைக்கரைக்கு வீரர்களுடன் வந்த அவனது நாசியில் சந்தன மணம் பட்டது. வரவர மணத்தின் அளவு கூடியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சந்தன மரங்கள் ஏதும் காணப்படவில்லை. பிறகெப்படி வாசம் வருகிறது? சந்தனு குழம்பினான்.கிட்டத்தட்ட ஒரு யோஜனை தூரம் (8கி.மீ.) நடந்தான். நதிக்கரையில் ஒரு பெண் நின்றாள். அவள் பரிசல் ஓட்டுபவள். அவள் நின்ற இடத்தில் இருந்து தான் அந்த மணம் வீசியது. சந்தனு அவளை நெருங்கினான். அவள் உடலில் இருந்து நறுமணம் வீசுவது புரிந்து விட்டது.பெண்ணே! நீ யார்? உன் உடலில் இருந்து சந்தன வாசனை வீசும் மர்மம் என்ன? நீ சந்தனம் பூசியது போலவும் தெரியவில்லையே! என்றான்.ஒரு ஆண்மகன், அதிலும் அரச தோரணையில் இருப்பவன் தன்னிடம் இப்படி கேட்டதும், அப்பெண்ணுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. நாக்குழறியது. வெட்கத்துடன் தலை குனிந்தாள்.சந்தனு அவளுக்கு தைரியம் சொன்னான்.மாதர் திலகமே! நீ மிகவும் அழகாகவும் இருக்கிறாய். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தயங்காமல் சொல், என்றான்.

அவள் மிகவும் மெதுவாக, பிரபு! என் பெயர் யோஜனகந்தி. நான் இவ்வூர் பரதர் (செம்படவர்) குல தலைவனின் மகள். பிழைப்புக்காக பரிசல் ஓட்டுபவள். தாங்கள் ஆற்றை கடக்க வேண்டுமா பிரபு! நான் அழைத்துச் செல்கிறேன், என்றாள்.சந்தனு அவளது அழகை மேலும் மேலும் ரசித்தான். அவளோ நெளிந்தாள். சற்றுநேரம் அவளையே உற்று பார்த்து விட்டு, தன் தேரோட்டியை அழைத்தான்.சாரதி! நீ இந்தப் பெண்ணின் தந்தையிடம் என்னை அழைத்துச் செல். இவளைப் பார்த்ததும், முன்பு கங்காதேவியைப் பார்த்தவுடனே ஏற்பட்ட மோகம் போல என் உடல் வருந்துகிறது. இவளை மணம் முடிக்க மனம் விரும்புகிறது. நாம் அங்கு சென்றதும், நீ பரதர் தலைவனிடம் என் விருப்பத்தைச் சொல். நயமாகப் பேசி சம்மதம் பெற்று விடு, என்றான்.சாரதி மன்னனுடன் தேரேறி விரைந்தான்.பரதர் குலத்தலைவன் அவர்களை வரவேற்றான்.மாமன்னரே வர வேண்டும். தாங்கள் இந்த ஏழைகளைச் சந்திக்க வந்தது எங்கள் பாக்கியமே, என்றான்.சமயம் பார்த்து சாரதி சொன்னான்.பரதர் தலைவனே! பாக்கியம் என்றால் சாதாரண பாக்கியமல்ல! உங்கள் குப்பம் இனி சொர்க்கமாகப் போகிறது. காரணம் உன் மகள் யோஜனகந்தியல்லவா இந்த நாட்டின் ராணியாகப் போகிறாள்! என்றான்.பரதர் தலைவன் ஆச்சரியமும், குழப்பமும் விஞ்ச விழித்தான்.பரதர் தலைவா! உன்னை அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. நம் மகாராஜா உன் மகள் யோஜனகந்தியை யமுனைக்கரையிலே பார்த்தார். பார்த்தவுடனேயே அவள் மீது மோகம் கொண்டு விட்டார். இப்போது பெண் கேட்டு வந்திருக்கிறார். மகள் ராணியாகிறாள், நீ இனி பரதர் குல தலைவன் அல்ல! நாடாளும் ராணியின் தந்தை! பொன்னும், பொருளும் உன்னையும், உன்னைச் சார்ந்தோரையும் வந்து குவியப் போகிறது, என்றான்.பரதர் தலைவன் இப்போது சிரித்தான்.

யோஜனகந்தியை மாமன்னர் பார்த்தார், மோகம் கொண்டார், பெண்ணும் கேட்கிறார். மடுவிடம் மலை பெண் கேட்கிறது. எங்கள் மடு இன்னும் மலையாகப் போகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்! என் மகளை ஹஸ்தினாபுரத்து அரசருக்கு கொடுப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால், என் கேள்விக்கு மன்னர் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே மன்னருக்கு தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான். அவன் இளவரசு பட்டம் சூட்டப்பட்டு சந்தனுவிற்கு பிறகு மன்னனாக பொறுப்பேற்க தயாராக இருக்கிறான். அப்படியானால், என் மகளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அதன் நிலைமை என்ன? மன்னரே! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை! நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். உமக்குப் பிறகு இந்த தேசத்தை என் மகளுக்கு பிறக்கப்போகிறவன் தான் ஆளவேண்டும். சம்மதமா? என்றான்.அவ்வளவு தான்! மன்னனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கே அவன் நிற்கவே இல்லை. விடுவிடுவென்று தேரில் ஏறிவிட்டான். தேர் பறந்தது. ஹஸ்தினாபுரத்து அரண்மனைக்குள் நுழைந்தது.மன்னன் படுக்கையில் போய் விழுந்தான். யோஜனகந்தியை அவனால் மறக்க முடியவில்லை. அவளது நினைவில் அவன் உடலும் மெலிந்து விட்டது. தந்தையை கொஞ்சநாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் தேவவிரதன். அவர் ஏதோ பறிகொடுத்ததைப் போல இருந்ததைப் பார்த்தான். வேட்டைக்குச் சென்று வந்த பிறகு தான் இந்த மாற்றம்? எதற்கும் சாரதியிடம் விசாரிக்கலாம் என்று அவனை அழைத்தான்.சாரதி நடந்ததைச் சொன்னான். அடுத்த கணமே தேவவிரதனின் தேர் செம்படவர் பகுதியை நோக்கி விரைந்தது.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:21:58 AM
மகாபாரதம் பகுதி-7

இளவரசர் தேவவிரதன் வந்திருக்கிறார் என்ற தகவல் செம்படவர் தலைவனுக்கு எட்டியது. அவன் ஓடிவந்து இளவரசனின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். இளவரசே! தாங்கள் மீன்வாடை வீசும் எங்கள் பகுதிக்கு வந்தது நாங்கள் செய்த நற்பாக்கியம். இளவலே! தாங்கள் வந்த நோக்கம் தெரிவித்தால், அதன்படி செயல்பட காத்திருக்கிறோம், என்றான்.தேவவிரதன் ஆரம்பித்தான்.பாட்டனாரே! தாங்கள் இவ்வளவு பணிவுடன் என்னுடன் பேச வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நான் உங்கள் பேரன். என்னை ஒருமையில் பேசும் உரிமை தங்களுக்கு உண்டு, என்ற தேவவிரதனை ஆச்சரியமாகப் பார்த்தான் செம்படவத்தலைவன்.தாத்தா! நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். தங்கள் மகள் யோஜனகந்தி இனி என் தாய். என் தந்தை தங்களிடம் அவளைப் பெண் கேட்டு வந்த போது, தாங்கள் விதித்த நிபந்தனையை சாரதி மூலமாக அறிந்தேன். உங்களுக்கு என்னைப் பற்றிய பயம் வேண்டாம். இனி நான் கங்காதேவியின் மகனல்ல. யோஜனகந்தியின் மகன். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தையே இந்த நாட்டை ஆளட்டும். நான் என் தம்பிக்கு இந்த நாட்டை விட்டுத் தருகிறேன். நீங்கள், யோஜனகந்தியை தயங்காமல் என் தந்தைக்கு திருமணம் செய்து வையுங்கள். அவள் மீது அவர் மிகுந்த காதல் கொண்டுள்ளார், என்றான் தேவவிரதன். இளவரசே! தாங்கள் சொல்வதை ஏற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உங்களுக்கு திருமணம் நடந்து, ஒரு குழந்தை பிறக்குமானால் அதுவும் அரசுரிமை கோருமே. அப்போது, என் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எப்படி ஆட்சி கிடைக்கும்? அப்போதும் சண்டை தானே வரும்! என்ற செம்படவத் தலைவனிடம், தாத்தா! அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். நான் பெண்ணாசையைத் துறக்கிறேன். எக்காரணம் கொண்டும் திருமணம் செய்யவே மாட்டேன்.

என் தந்தையின் மீதும், என்னைப் பெற்ற தாய் கங்கா மீதும், எனக்கு தாயாக வரும் யோஜனகந்தி மீதும், இந்த மண்ணின் மீதும், பரந்த ஆகாயத்தின் மீதும், இந்த பூமியிலுள்ள இதர வஸ்துக்களின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன். என் தந்தையின் சுகமே என் சுகம், என்று தேவவிரதன் ஆவேசமாக சபதம் எடுக்கவும், அதை ஆமோதிப்பது போல வானில் இருந்து தேவர்களும், முனிவர்களும், தெய்வப்பெண்மணிகளும் பூமாரி பொழிந்தனர்.பீஷ்மா...பீஷ்மா...பீஷ்மா... என்ற வாழ்த்தொலி எழுந்தது. பீஷ்மன் என்றால் மனஉறுதி உள்ளவன் என்று பொருள். எப்படிப்பட்ட தியாகம் இது? பெற்ற தந்தையின் சொல்லைக் கேளாமல் தறுதலையாய் பிள்ளைகள் இன்று எப்படியெல்லாமோ திரிகிறார்கள். இதில் ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. பெற்றவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து படிக்க வைப்பதை எத்தனை மகன்களும், மகள்களும் நினைத்துப் பார்க்கிறார்கள்! இவர்களில் எத்தனை பேர் மோசமான பாதையில் எல்லாம் போகிறார்கள். இதோ! இந்த பீஷ்மர் அப்படிப்பட்டவரல்ல. இவர் தன்னைப் பெற்ற தந்தை விரும்பிய பெண்ணையே அவருக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார்! அதற்காக, தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்ளப் போகிறார். பெண் சுகமின்றி வாழ எத்தனை இளைஞர்கள் இன்று முன் வருவர்? எவ்வளவு பெரிய தியாகம் இது! நமது இதிகாசங்கள் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதால் தான் அவற்றை படிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.இப்படியாக தேவவிரதனாக இருந்து பீஷ்மராக மாறிய அந்த இளைஞன் ஊர் திரும்பினான். தந்தையிடம் நடந்ததைச் சொன்னான்.தந்தை சந்தனு கண்ணீர்வடித்தான்.மகனே! எந்த ஒரு பிள்ளையும் இப்படி ஒரு தியாகத்தைச் செய்ய முன் வரமாட்டான். நீயோ, என் உடல் சுகத்திற்காக, உன் உடல் சுகத்தை விட்டுக் கொடுத்தாய். நீ எனக்கு செய்த அளவுக்கு, உனக்கு எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் ஒரு வரத்தை தருகிறேன்.

நீ எப்போது இந்த உயிரை விடுத்து சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்று எண்ணுகிறாயோ அப்போது தான் உன்னை மரணம் நெருங்கும். அதுவரை யாராலும் உன்னை அழிக்க முடியாது,என்றான்.திருமண ஏற்பாடுகள் நடந்தன. செம்படவத் தலைவனுக்கு ஓலை பறந்தது. யோஜனகந்தி அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டாள். செம்படவத்தலைவன் சந்தனுவின் காலில் விழுந்து, மாமன்னரே! என் மகள் இனி உங்களுக்கு உரியவள். அதற்கு முன் இவளைப் பற்றிய ஒரு ரகசியத்தையும் சொல்லி விடுகிறேன், என்றவன், இவள் நான் பெற்ற மகளல்ல. வளர்ப்பு மகள், என்றான்.எல்லாரும் ஆவலுடன் அவனை நோக்கித் திரும்பினர்.செம்படவத்தலைவன் மன்னனிடம், மன்னா! தாங்கள் ஒரு மீனவப்பெண்ணைத் திருமணம் செய்கிறீர்களே என்று இங்கிருப்பவர்களில் சிலர் மனக்குறை அடையலாம். உண்மையில் இவள் ஒரு ராஜகுமாரி. தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர் போல், ஒரு காலத்தில் சேதி என்ற குலம் இருந்தது. அந்த குலத்தில் வசு என்பவன் இருந்தான். அவன் தேவேந்திரனை நினைத்து தவமிருந்து வானத்தில் பறக்கும் புஷ்பக விமானம் ஒன்றைப் பரிசாகப் பெற்றான். ஒருநாள் அதிலேறி வானத்தில் பறந்த போது, அவனது மனைவி கிரிகை என்பவளின் நினைப்பு வந்து விட்டது. அப்போது உணர்ச்சிவசப்ட்டு சுக்கிலத்தை வெளியிட்டான். அதை ஒரு இலையில் பிடித்து சியேனம் என்ற பறவையிடம் கொடுத்து, அதை கிரிகையிடம் கொடுத்து விடும்படி கூறினான். அந்தப் பறவை பறந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இன்னொரு பறவை ஏதோ உணவை அந்தப் பறவை கொத்திச் செல்வதாக நினைத்து அதனுடன் சண்டையிட்டது. அப்போது இலை தவறி கீழே விழுந்தது. யமுனை நதிக்குள் விழுந்த அந்த சுக்கிலத்தை ஒரு மீன் விழுங்கி கர்ப்பமானது. உண்மையில் அதுவும் மீனல்ல. தேவர்குலத்தை சேர்ந்த ஒரு பெண், முனிவர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகி, மீனாகச் சுற்றிக் கொண்டிருந்தாள்.ஒருநாள் எங்கள் மீனவர்கள் யமுனையில் வலை வீசிய போது அந்த மீன் அகப்பட்டுக் கொண்டது, என்றவன் கதையைத் தொடர்ந்தான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:24:42 AM
மகாபாரதம் பகுதி-8

நாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த குழந்தைக்கு மீனவன் என்று பெயர் வைத்தான். பெண் குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டான். அவளுக்கு யோஜனகந்தி என பெயரிட்டு நான் வளர்த்தேன். அவள்தான் இப்போது உங்களுக்கு மனைவியாகப் போகிறவள். இவளைமீனவப் பெண் என நினைக்க வேண்டாம். உங்களுக்கே உரித்தான அரசர்குலத்தில்தான் பிறந்தவள். எனவே இவளை நீங்கள் தயக்கமில்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம். இன்று மிகச்சிறந்த முகூர்த்தநாள். இந்த நாளிலேயே இவளை ஏற்றுக்கொள்ளுங்கள், என செம்படவர் தலைவன் சொல்லி முடித்தான். அன்றைய தினமே சந்தனுவுக்கும் யோஜனகந்திக்கும் திருமணம் நடந்தது. தந்தையார் புதிய மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தியதால், அரசபதவியை பீஷ்மர் ஏற்றுக்கொண்டார். அவரது அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில ஆண்டுகளில் யோஜனகந்திக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவருமே சூரியனையும் சந்திரனையும் போன்று ஒளிமிக்கவர்களாக திகழ்ந்தனர். ஒருவனுக்கு சித்ராங்கதன் என்றும், மற்றொருவனுக்கு விசித்திர வீரியன் என்றும் பெயரிட்டனர். தன் சித்தி பெற்றெடுத்த புத்திரர்களை தன் உடன்பிறந்தவர்களாக கருதி பீஷ்மர் அவர்களுக்கு போதிய கல்வியறிவை புகட்டினார்.இதனிடையே சந்தனு இறந்து போனான். சித்தி பெற்றெடுத்தமக்களில் மூத்தவன் சித்ராங்கதனுக்கு பீஷ்மர் முடிசூட்டினார். சித்ராங்கதன் மானிட பிறப்பாக பூமியில் இருந்தாலும் இதே பெயரைக் கொண்ட கந்தர்வன் ஒருவன் வானலோகத்தில் சுற்றிவந்தான். அவனுக்கு தன் பெயரைக்கொண்ட சித்ராங்கதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தான். ஆனால் பீஷ்மர் மீதிருந்த பயத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருமுறை மிகவும் தந்திரமாக அரண்மனைக்குள் சென்று சித்ராங்கதனைக் கொன்றுவிட்டான்.மகன் இறந்த துக்கத்தில் யோஜனகந்தி மிகவும் துயருற்றாள். வேறு வழியின்றி இரண்டாவது தம்பி விசித்திரவீரியனுக்கு முடிசூட்டப்பட்டது. இந்த நேரத்தில் தங்கள் வம்சத்தைப் பெருக்கிடும் வகையில் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்துவைக்க பீஷ்மர் எண்ணினார். அப்போது காசியை ஆண்ட மன்னன் காசிராஜன் தன் மூன்று புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோருக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தான். இதற்காக சுயம்வர அறிவிப்பையும் வெளியிட்டிருந்தான். தம்பியையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் சுயம்வரத்திற்கு சென்றார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் பீஷ்மர் கங்கைக்கரையில் மிகுந்த களைப்புடன் தங்கினார். அப்போது பீஷ்மரின் தாய் கங்காதேவி நதியிலிருந்து எழுந்து வந்தாள். தன் மகனின் களைப்பைப் போக்கும் வகையில் தண்ணீர் துளிகளை அவர்மேல் தெளித்தாள். பீஷ்மர் தாயை வணங்கிவிட்டு காசி போய் சேர்ந்தார். காசி மன்னனுக்கு பீஷ்மரின் திறமை பற்றி நன்றாக தெரியும். எனவே மற்ற மன்னர்களை வரவேற்றதைவிட பீஷ்மருக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்றான்.அங்கு வந்திருந்த மற்ற மன்னர்களுக்கு மனதில் சந்தேகம் ஏற்பட்டது. காலம் முழுவதும் திருமணமே செய்யமாட்டேன் என விரதம் பூண்டிருந்த பீஷ்மருக்கு இங்கு என்ன வேலை? இங்கு சுயவரமல்லவா நடக்கிறது என்பதே அந்த சந்தேகம்.ஒவ்வொருவரும் பீஷ்மரின் பராக்கிரமம் பற்றி பேசியது மூன்று சகோதரிகளின் காதிலும் விழுந்தது. அவர்களில் அம்பா நீங்கலாக மற்ற இரு சகோதரிகளும் பீஷ்மரையே திருமணம் செய்துகொண்டால் என்ன என எண்ணினர். ஆனால் பீஷ்மருக்கு வயதாகிவிட்டது என்ற விஷயம் அவர்களுக்கு தெரியாது. சுயம்வர மண்டபத்திற்கு மாலையுடன் வந்த அவர்கள் பீஷ்மரைத் தேடினர்.

பீஷ்மர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டதும் அவர் அருகில் சென்று பார்த்தபோது தாடி, மீசையுடன் வயதாகிப் போயிருந்ததைப் பார்த்து பின் தங்கினார்கள். விசித்திரவீரியனை அவர்கள் விரும்பவில்லை.அவர்கள் தயங்குவதைக் கண்டு பீஷ்மர் ஓரளவு யூகித்துக்கொண்டார். உடனே மூன்று பெண்களையும் அரண்மனைக்கு வெளியே இழுத்துவந்தார். மற்ற நாட்டு மன்னர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். யாரையும் பிடிக்காமல் இந்த பெண்கள் பின்வாங்குகின்றனர். இந்த சமயத்தில் பீஷ்மர் அவர்களை இழுத்துச் செல்கிறார் என்றால் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என பொருமினர்.பீஷ்மரை பின்தொடர்ந்து எல்லா மன்னர்களும் விரட்டினர்.வில்வித்தையில் கைதேர்ந்தவரான பீஷ்மர் பாணங்களால் அந்த மன்னர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினார். பிறகு அஸ்தினாபுரம் வந்துசேர்ந்தார். அந்த பெண்களில் ஒருத்தியான அம்பா கண்ணீருடன் காணப்பட்டாள்.மகளே! நீ எதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் மற்ற சகோதரிகளிடம் இதுபோன்ற வருத்தம் காணப்படவில்லையே! என் தம்பி விசித்திரவீரியனுக்காகவே நான் சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். அவனைத் திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதம்தானே! என்றார்.அவள் கண்ணீரைப் பெருக்கி, நான் தங்களின் சகோதரனை திருமணம் செய்துகொள்ள இயலாது. ஏனென்றால் நான் சாளுவ தேசத்து அரசன் பிரம்மதத்தனை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தை என் தந்தை தகர்த்துவிட்டார். அவருடைய கட்டாயத்துக்காகவே சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். ஆனால் நீங்களோ என்னைக் கடத்தி வந்துவிட்டீர்கள். என்னை அவரிடமே அனுப்பி வைத்துவிடுவீர்களா? என கேட்டாள்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:26:33 AM
மகாபாரதம் பகுதி-9

அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை மணந்து கொண்டு சந்தோஷமாக இரு, என வாழ்த்தி, தக்க படைபலத்துடன் அவளை சாளுவ தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.அம்பா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாளுவதேசத்துக்கு சென்றாள். அரண்மனைக்குச் சென்று பிரம்மதத்தனை அப்படியே அள்ளி அணைத்தாள்.மன்னவரே! பீஷ்மரிடம் பிடிபட்டவர்கள் தப்பித்த வரலாறு உண்டா? நான் உங்கள் மீது கொண்ட காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரது தம்பியை மணந்து நிம்மதியாக வாழ முடியாது. மனதில் ஒருவனையும், வீட்டில் ஒருவனையும் சுமந்து கொண்டு வாழ முடியாது என்றேன். என் கருத்தை பீஷ்மர் ஏற்றார். என்னை விடுவித்து விட்டார். பிரம்மதத்தரே! இனி நம்மை பிரிக்க யாருமில்லை. நம் மணநாளைக் குறியுங்கள், என படபடவென பொரிந்தாள். சீ மானம் கெட்டவளே! வெளியே போ, என அரண்மனையே அதிரும் வகையில் கத்தினான் பிரம்மதத்தன். அம்பா அதிர்ந்தாள். ஏ அம்பா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். அந்த பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரியனுக்காக உன்னை அழைத்துச் சென்றான். அவன் உன்னிடம் உல்லாசமாக இருந்திருப்பான். அங்கே இருந்துவிட்டு இங்கே வர உனக்கு எப்படி தைரியம் வந்தது? இங்கிருந்து ஓடிவிடு. உன்னை நான் இனியும் திருமணம் செய்ய மாட்டேன். ஏற்கனவே ஒருவனால் கடத்தப்பட்ட உன்னை திருமணம் செய்துகொள்ள நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல, என்று வாய்க்கு வந்தபடி பேசினான்.மனம் உடைந்துபோன அம்பா, தலைகுனிந்து அவமானப்பட்டு அங்கிருந்து அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள்.

பீஷ்மரின் முன்னால் சென்ற அவள் நடந்த சம்பவத்தை அழுதபடியே விவரித்தாள். பீஷ்மர் அவளுக்கு ஆறுதல் கூறினார்.அம்பா பீஷ்மரிடம், அன்பரே! உங்களால் கடத்தி வரப்பட்டதால்தான் என்னை திருமணம் செய்ய முடியாது என பிரம்மதத்தன் சொல்லி விட்டான். உங்கள் தம்பியை திருமணம் செய்தால் நீ பிரம்மதத்தனுடன் எத்தனை நாள் இருந்தாய் என அவர் என்னிடம் கேள்வி கேட்பார். இந்த நிலையில் நான் உங்களை மட்டுமே நம்பியுள்ளேன். நீங்கள்தான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள், என்றாள்.பீஷ்மர் தன் நிலைமையை அவளிடம் விளக்கி சொன்னார். தனது தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் ஏற்றிருப்பதையும், இந்தப்பிறவியில் தனக்கு திருமணம் என்ற ஒன்று இல்லை என்றும் அழுத்தமாக சொன்னார். அம்பா பிடிவாதம் செய்தாள்.இருந்தாலும், அவளது வாதம் எடுபடாததால் தந்தை காசிராஜனின் வீட்டிற்கே திரும்பிவிட்டாள். மகளின் நிலைமையைக் கண்டு காசிராஜன் நொந்துபோனான். அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னான்.மகளே! பீஷ்மர் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பது உண்மையே. ஆனால் அதை உடைக்கும் சக்தி இந்த உலகில் ஒரே ஒருவருக்குத்தான் இருக்கிறது. அவர்தான் பரசுராமர். பரசுராமரிடம் பீஷ்மர் வில்வித்தை கற்றார். குருவின் சொல்லை சீடனால் மறுக்கமுடியாது. மேலும் பரசுராமர் அரசகுலத்திற்கு எதிரானவர். அரசர்கள் ஏதேனும் தவறுசெய்தால் அவர்களை கொல்லவும் தயங்கமாட்டார். நீ பரசுராமரிடம் செல். அவரது பாதங்களில் விழுந்து கதறி அழு. உன் நிலைமையை எடுத்துச்சொல். நிச்சயமாக அவர் உனக்கு உதவுவார். சென்று வா, எனச்சொல்லி வழியனுப்பி வைத்தான்.

அம்பா பரசுராமரின் ஆஸ்ரமத்திற்கு சென்றாள். ஒரு அபலைப்பெண் தன் ஆதரவைத்தேடி வந்திருப்பதை அறிந்த பரசுராமர் அவளிடம் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். நிச்சயமாக அவளுக்கு உதவுவதாக வாக்களித்தார். அவளை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார்.பரசுராமர் தன்னை பார்க்க வருகிறார் என்பதை அறிந்த உடனேயே பீஷ்மர் அவர் வரும் வழியிலேயே சென்று வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குருவைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரை வெகுவாக விசாரித்தார்.சீடனே! இந்த அம்பாவுக்காக பரிந்துபேச நான் வந்திருக்கிறேன். இவளை நீ திருமணம் செய்ய முடியாது என சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. எந்த ஆண் மகனால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளோ, அவனே அவளை ஏற்றுக்கொள்வதுதான் தர்மம். என் சீடனான நீ, தர்மத்தை மீறி நடக்கமாட்டாய் என நம்புகிறேன். உன் குரு என்ற முறையில் அம்பாவை திருமணம் செய்துகொள்ள கட்டளையிடுகிறேன். திருமணத்திற்கு ஏற்பாடு செய். நானே இருந்து நடத்தி வைக்கிறேன், என்றார்.குருவின் இந்த வார்த்தைகள் பீஷ்மரின் காதுகளில் அம்பெனப் பாய்ந்தது. அவர், குருவே! என் தந்தைக்காக நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ளேன். எனக்கு திருமணம் என்பதே கிடையாது. ஒரு வேளை நான் கங்கா மாதாவின் வயிற்றில் இன்னொரு முறை பிறந்தால் அது நடக்கலாம். நடக்காத ஒன்றுக்காக தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள், என்று பணிவோடு சொன்னார்.பரசுராமருக்கு கோபம் வந்துவிட்டது. கண்களில் அனல் பறந்தது.உனக்கு நான் குருவாக இருந்து சொல்லிக்கொடுத்தது அனைத்தும் இந்த நிமிடத்தோடு வீணாகப் போயிற்று. குரு சொல் கேளாதவன் மனிதனே அல்ல. கடைசியாக சொல்கிறேன். இவளை மணக்க முடியுமா? முடியாதா? என்றார்.பீஷ்மர் மறுத்துவிட்டார்.
அப்படியானால் இந்த பிரச்னைக்கு போர் ஒன்றுதான் தீர்வு. நான் உன்மீது போர் தொடுக்கப் போகிறேன். நீ தோற்றுப்போனால் நான் சொன்னதை ஏற்கவேண்டும், என்று சொல்லியபடியே வில்லையும் அம்பையும் எடுத்தார் பரசுராமர்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:28:13 AM
மகாபாரதம் பகுதி-10

பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் பொழிந்தாராம் பீஷ்மர். தன் தோல்வியை சிஷ்யனிடம் ஒப்புக்கொண்ட பரசுராமர் அங்கிருந்து சென்று விட்டார்.அம்பா அழுகையும், கோபமும் ஒன்றையொன்று மிஞ்ச, தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்து விட்ட நிலையில், அங்கிருந்து காட்டிற்குச் சென்றாள். அவள் கடும் தவம் ஒன்றை இருந்தாள்.இறைவனிடம், கடவுளே! பீஷ்மன் என்னும் அபாரசக்தி கொண்ட ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன். அவனால் என் வாழ்க்கை அழிந்தது. நான் இருக்கும் இந்த தவத்தை ஏற்று அவனை என்றேனும் ஒருநாள் போரில் ஜெயிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும், என வேண்டினாள். பத்தாண்டுகள் உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பாதம் மீது மற்றொரு பாதத்தை வைத்து கைகளை தலை மேல் கூப்பிய நிலையில் செய்த அவளது தவம் பலித்தது. அவளது மறைவுக்குப் பின் யாகசேனன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தாள். சிகண்டி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினான் யாகசேனன்.இந்த நிலையில் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்த விசித்திரவீரியன் அவர்களைக் கூடாத நாளே இல்லை என்றாலும், இரண்டு பெண்களுக்கும் கருத்தரிக்கவே இல்லை. அது மட்டுமல்ல! பெண் இன்பத்தை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெறும் க்ஷயரோக நோயால் அவன் இறந்தே போனான். தாய் யோஜனகந்தி துக்கத்தில் ஆழ்ந்தாள். சந்திரவம்சம் இத்தோடு தொலைந்து விட்டதே, என்ன செய்யலாம்? என்ற ஏக்கத்தில் பீஷ்மரை அழைத்தாள். பீஷ்மா! நான் சொல்வதைக் கேள். நீ உன் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நாட்டின் நலன் கருதி கைவிட வேண்டிய நிலைமை இப்போது வந்து விட்டது. மேலும், தாயின் அனுமதியுடன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதில் தவறேதும் இல்லை.

தேவமுறை என்ற தர்மத்தின்படி, சகோதரன் குழந்தையின்றி இறந்து போனால், நாட்டை ஆளும் பொருட்டு, அவனது இன்னொரு சகோதரன் அப்பெண்ணைக் கூடி குழந்தை பெறலாம். அதன்படி நீ அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெறு. நாட்டைக் காப்பாற்று. இது என் உத்தரவு, என்றாள். இடியோசை கேட்ட நாகம் போல் நடுங்கி விட்டார் பீஷ்மர்.அம்மா! இது கொடுமை அல்லவா? தம்பியின் மனைவிகளை நான் தொடுவதாவது? மேலும், எந்த நிலையிலும் என் பிரம்மச்சரிய விரதத்தை கைவிடுவதில்லை என்ற சத்தியத்தை உங்கள் தந்தைக்கு செய்து கொடுத்தேன். என் தந்தையிடமும் வாக்கு கொடுத்தேன். வேண்டாம் தாயே. ஆனால், இன்னொரு யோசனை இருக்கிறது. அதை பரிசீலியுங்கள் தாயே! என்றார்.யோஜனகந்தி அவசர அவசரமாக, சொல்! பீஷ்மா, எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்க வழியிருக்கிறதா? சந்திரவம்சம் அழியாமல் இருக்க மார்க்கம் இருக்கிறதா? நாட்டை ஆள ஒரு புத்திரன் பிறக்கப் போகிறானா? சொல்...சொல்...ஏக்கமும் ஆவலும் என்னை பதட்டமடையச் செய்கின்றன, என்றாள்.தாயே! பரசுராமர் அரசகுலத்தின் மீது கோபம் கொண்டு, எல்லா அரசர்களையும் வேருடன் கிள்ளி எறிந்து விட்ட காலம் ஒன்று இருந்ததைத் தாங்கள் அறிவீர்கள். அப்போது கணவனை இழந்த அரசிகள் எல்லோரும் ஒன்றுகூடி, முனிவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அந்த விதியின் படி அம்பிகா, அம்பாலிகாவைக் குழந்தை பெறச் செய்யலாம், என்றதும், யோஜனகந்தி ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினாள். பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.அப்போது யோஜனகந்தி மிக மிக அழகாக இருப்பாள். அவளது தொழில் படகோட்டுவது தானே! ஒருநாள் பராசரர் என்ற முனிவர் யமுனைக்கரைக்கு வந்தார். அந்த நேரத்தில் உலகம் அதுவரை கண்டிராத ஒரு அதிர்ஷ்டகரமான கிரகநிலை ஏற்பட்டது.

பராசரர் இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அந்த கிரகநிலை மாறி விடும். அதற்குள் இந்த பூமியில் ஒரு குழந்தை பிறந்தால், அது உலகம் புகழும்படி வாழும். உலகத்துக்கு அரிய பல கருத்துக்களைத் தரும் என்று அவர் மனதில் பட்டது.யோஜனகந்தியின் படகில் ஏறினார். ஆற்றின் நடுவே சென்ற போது, பெண்ணே! உலகம் இதுவரை கண்டிராத ஒரு அதிசய கிரகநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதனால் இந்த உலகமே பலனடையும். இங்கே நீயும், நானும் மட்டுமே இருக்கிறோம். நான் உன்னோடு கூடுகிறேன். நீ அந்தக் குழந்தையைப் பெறும் பாக்கியவதி ஆகிவிடு. குழந்தை பிறந்ததும் நீ மீண்டும் கன்னித்தன்மை உடையவளாகி விடுவாய். இது சத்தியம், என்றார்.யோஜனகந்தி கோபப்பட்டாள்.முனிவரே! உம் தரத்துக்கும் தகுதிக்கும் இந்த வார்த்தைகள் அழகா! கல்வியறிவற்றவள் என நினைத்து தானே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்! நீர் சொல்வதை நம்ப முடியவில்லை, என்றாள்.நேரம் செல்லச்செல்ல பராசரர் பதட்டப்பட்டார். தனது நிலையில் உறுதியாக நின்றார்.கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுமல்லவா? யோஜனகந்தியும் கரைந்து விட்டாள். தன் உடலில் இருக்கும் மீன்வாடை அவரை நெருங்க விடாது என அவரிடம் கூறினாள். அந்த மணத்தை அப்படியே மாற்றிய பராசரர் அவளது உடலுக்கு சந்தன மணத்தைக் கொடுத்தார். யோஜனா மகிழ்ந்து போனாள். அதேநேரம், பகிரங்கமாக நட்ட நடு ஆற்றில் உறவு கொள்வது எப்படி என வெட்கப்பட்டாள்.அப்போது பராசரர் தன் சக்தியால் அந்த இடத்தில் இருள் கவியச் செய்தார். அந்த நிலையில் அவர்கள் கூடினர். அவள் கர்ப்பமானாள்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:30:53 AM
மகாபாரதம் பகுதி-11

அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருளில் பிறந்ததால் அது கரிய நிறமுடையதாகக் காணப்பட்டது. அந்தக் குழந்தை தான் வியாசன். பிறக்கும் போதே அவனுக்கு ஜடாமுடி இருந்தது. பிறக்கும் போதே அவன் என்னிடம் பேசினான். அம்மா! நீ மீண்டும் கற்பு நிலையை அடையப் போகிறாய். அப்படியிருக்க நான் உன்னோடு இருக்க இயலாது. நான் தவம் முதலானவை இயற்றிக் கொண்டு கானகங்களில் வசிப்பேன். நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போது உன் முன் தோன்றுவேன். உனக்கு ஏதேனும் சிரமமான சூழ்நிலைகள் வந்தால், என்னை அழை! என்று சொல்லி விட்டு மறைந்து விட்டான். இன்று அவன் பெரியவனாக இருப்பான். அவனை நான் வரவழைக்கிறேன். அம்பிகா, அம்பாலிகாவுக்கு அவன் அத்தான் முறை ஆகிறது. முறை பிறழாமல், அரச தர்மத்தை மீறாமல், அவர்களை குழந்தை பெறச் செய்வோம், என்றாள் யோஜனகந்தி. பீஷ்மர் மகிழ்ந்தார். தாயே! இறைவன் யாரையும் கைவிடுவதில்லை. ஒரு பாதை அடைபட்டால், இன்னொரு பாதையைத் திறந்து விடுவான் என்பது இதுதான் போலும். கவலையை விடுங்கள்! நீங்கள் வியாச மாமுனிவரை அழையுங்கள். நம் கவலை நீங்கும், என்றார். யோஜனகந்தி அந்தக் கணமே, மகனே வியாசா, வா என் செல்வமே, என்றாள். மிகப்பெரிய ஜடாமுடி தரையில் புரள, கன்னங்கரிய நிறத்துடன், ஆஜானுபாகுவான ஒரு உருவம் அவள் முன்னால் வந்தது. என்னைப் பெற்றவளே, வணக்கம்.

உத்தரவிடுங்கள் தாயே! கட்டளைக்கு காத்திருக்கிறேன், என்று சாஷ்டாங்கமாக  அன்னையின் பாதத்தில் விழுந்தது அந்த உருவம். ஆம்... வியாசர் வந்து விட்டார். மகனை அள்ளியணைத்து உச்சி முகர்ந்தாள் யோஜனகந்தி. மகனே! என் நிலையை நீ அறிவாய். முக்காலமும் உணர்ந்த உனக்கு, எல்லாம் தெரிந்த உனக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாட்டுக்கு வாரிசு வேண்டும். பீஷ்மனால் வாரிசுகளைத் தர இயலாத நிலையில் நீ தான் அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெற்று தர வேண்டும், என்றாள். தாய் சொல்லைத் தட்டவில்லை வியாசர். அம்பிகா, அம்பாலிகாவிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி, வியாசருடன் மகிழ்ந்திருக்க சம்மதம் பெற்றாள் யோஜனகந்தி. அன்றிரவில், அம்பிகையும், அம்பாலிகாவும் பஞ்சணையில் படுத்திருக்க வியாசர் உள்ளே நுழைந்தார். அவ்வளவு நேரமும் அவரைப் பார்க்காத அந்தப் பெண்கள் அதிர்ந்து விட்டனர். வியாசர் என்றால் செக்கச்சிவந்த கோவைப்பழமாக இருப்பார் என நினைத்தோம். குறைந்த பட்சம் ஒரு இளமைத் தோற்றமாவது இருக்கும் என நினைத்தோம். இதென்ன ஜடாமுடியும், தாடியுமாய்... ஐயோ! சுந்தரன் ஒருவன் வருவான் என பார்த்தால், கோரத்தின் சொரூபமாய் ஒருவன் வருகிறானே. வியாசர் அம்பிகாவை நெருங்கினார். அவளை அள்ளி அணைத்தார். அவளோ அவரது உருவத்தைக் காண சகியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். வேண்டா வெறுப்பாக தன்னை அவரிடம் ஒப்படைத்தாள். அடுத்து அம்பாலிகா விடம் சென்றார் வியாசர். அவளோ பயத்தில் வியர்த்து விறுவிறுத்தாள். உடலில் உள்ள ரத்தமெல்லாம் வற்றி வெளுத்து விட்டது.

அந்த நிமிடமே அவர்கள் குழந்தைகளைப் பெற்றனர். ரிஷிகளுக்கு உடனடியாக குழந்தைகளைக் கொடுக்கும் சக்தி உண்டு என்கின்றன நமது இதிகாசங்களும், புராணங்களும். கந்த புராணத்தில் காஷ்யப முனிவர் அசுரக் குழந்தைகளை உடனுக்குடன் உருவாக்கியதாக தகவல் இருக்கிறது. மகாபாரதத்தில் வியாசர் பிறந்ததும் அப்படியே. அதுபோல், இப்போதும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். குழந்தைகளை ஆசையோடு எடுத்தார் வியாசர். அந்தக் குழந்தையை அசைக்கவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. பத்தாயிரம் யானைகளை ஒரு சேர தூக்க முடியுமா? அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது அந்தக் குழந்தை. அதன் கண்களைப் பார்த்த வியாசர், இது பார்வையில்லாமல் பிறந்திருக்கிறதே, பிறந்தும் பயனில்லையே. இந்தக் குழந்தையால் எப்படி நாடாள முடியும்? என்றவராய், அம்பாலிகாவின் குழந்தையைப் பார்த்தார். அதன் முகம் வெளுத்துப் போயிருந்தது. மற்றபடி குறைகள் ஏதுமில்லை. இதனால் ஆறுதலுடன் வெளியே வந்து, யோஜனகந்தியிடம் நடந்ததை விவரித்தார். பீஷ்மர் தன் தாயிடம், அம்மா! நாடாள நல்லதொரு புத்திரன் வேண்டும். இன்னொரு முறை முயற்சித்துப் பார்ப்போம், என்றார். மூத்தவள் அம்பிகாவுக்கு பார்வையற்ற பிள்ளை பிறந்துள்ளதால், நல்ல குழந்தைக்காக அவளையே அனுப்பி வைக்க எண்ணினர். அவளும் சம்மதிப்பது போல நடித்தாள். ஆனால், துறவியைப் போல் கோரமாய் தோற்றமளிக்கும் இவனுடன் இன்னொரு முறை செல்வதா என வெறுப்படைந்து, தன்னைப் போலவே அலங்கரித்து தன் தோழிப் பெண் மாதுரியை அனுப்பிவிட்டாள். இருளில் அவளை வியாசர் அடையாளம் காணவில்லை. ஒருவேளை அவருக்கே இது தெரிந்திருந்தாலும் கூட, எது விதிக்கப்பட்டதோ அதன்படியே நடந்து கொண்டார். அவள் அந்த மகானை அடைவதை தன் பாக்கியமாகக் கருதி, நல்ல மனநிலையுடன் தன்னை ஒப்படைத்தாள். அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பேரழகுடன் விளங்கினான். வியாசரைப் போல் கருப்பாக இல்லாமல், தாயைப்போல் சிவப்பாய் இருந்தான். தாம்பத்ய வாழ்க்கையில் மனமொத்த நிலை வேண்டும். சண்டை போட்டுக் கொண்டோ, குடித்து விட்டோ, விருப்பமில்லாமலோ, இருவரில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் கட்டாயத்துக்காகவோ உறவு கொண்டால், பிறக்கும் குழந்தைகள் உருவத்திலும், குணத்திலும் மாறுபாடு கொண்டதாக இருக்கும். கெட்ட குணமுடையவர்களை உருவாக்குவதே பெற்றவர்கள் தான்.வியாசர் விடை பெற்றார். மீண்டும் தன் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு தாயிடம் வேண்டினார். முதல் குழந்தைக்கு திருதராஷ்டிரன், அடுத்த குழந்தைக்கு பாண்டு, மூன்றாவது குழந்தைக்கு விதுரன் என பெயர் சூட்டினர்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:32:43 AM
மகாபாரதம் பகுதி-12

குழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி வழங்கப்பட்டது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் பீஷ்மர். திருதராஷ்டிரனுக்காக காந்தார தேசத்துக்கு சென்றார் பெண் பார்த்தார் பீஷ்மர். அந்நாட்டு மன்னன் சுபலன். அவனுக்கு பீஷ்மர் குடும்பத்தில் பெண் கொடுக்க வேண்டும் என்றால் கசக்கவா செய்யும்? தன் மகள் காந்தாரியை அழைத்தான். அழகுப்பதுமையான அவள் தந்தை முன் வந்து நின்றாள். அம்மா! பீஷ்மர் வந்திருக்கிறார். தன் குலம் காக்க வந்த திருதராஷ்டிரனுக்கு உன்னைப் பெண் கேட்க. என்னம்மா சொல்கிறாய்? தந்தையே! இதெல்லாம் என்ன கேள்வி! பெற்றவர்களைப் பெருமைப்படுத்துபவளே பெண். நான் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? என் நன்மை என்னை விட தங்கள் கையில் தான் அதிகம் இருக்கிறது, என்றாள் பணிவோடு காந்தாரி. குடும்பத்திற்கேற்ற குலவிளக்கு, என பாராட்டினார் பீஷ்மர். காந்தாரியின் அண்ணன் சகுனி அங்கே வந்தான். காந்தா! தந்தையார் உன்னிடம் சம்மதம் கேட்பதில் ஒரு உட்பொருள் இருக்கிறது. உனக்கு பார்த்துள்ள மாப்பிள்ளைக்கு பார்வை கிடையாது. அதையும் யோசித்துக் கொள்,.

அண்ணா! இதில் யோசிக்க ஏதுமில்லை. என் சகோதரனுக்கும், தந்தைக்கும் தெரியாதது என்ன? அவர் பார்வையில்லாதவராக இருந்தால் என்ன? நானும் இந்தக்கணமே என் பார்வையை இழந்து விடுகிறேன், என்றவள், வேகமாகத் தன் அறைக்குச் சென்று, பொன்னால் செய்யப்பட்ட ஒரு பட்டையை எடுத்து வந்தாள். அதைத் தன் கண்ணில் கட்டினாள். எனக்கு வரப்போகும் கணவரால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதே போல நானும் இவ்வுலகத்தைப் பார்க்க மாட்டேன், என சொல்லிவிட்டு குனிந்த தலையுடன் தோழிப் பெண்களின் துணையுடன் தன் அறைக்குப் போய் விட்டாள். மகாபாரதத்தை ஏன் படிக்கச் சொல்கிறோம் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தான். பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்கும் பெண்கள் இப்போது குறைந்து போய் விட்டார்கள். குறிப்பாக திருமண விஷயத்தில், பெற்றவர்கள் எடுக்கும் முடிவை பல பெண்கள் ஆமோதிப்பதில்லை. போதாக்குறைக்கு காதல் என்ற படு குழியில் வேறு விழுந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். ஒரு பார்வையற்றவனை மணக்கக்கூட அந்தக்காலத்துப் பெண் சம்மதித்திருக்கிறாள். அதற்காக தன் சுகத்தையும் அழித்துக் கொண்டாள் என்று பாரதத்தில் படிக்கும் போது அக்காலப் பெண்களைப் பற்றி நம் நெஞ்சு மகிழ்ச்சியால் விம்முகிறது. இந்த தேசம் இத்தனை வன்முறைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நிற்கக்காரணம் இவளைப் போன்ற பெண்கள் செய்த தியாகத்தால் தான். பெண்கள் பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். காந்தாரியின் சம்மதம் கிடைத்ததும் ஒரு நல்லநாள் பார்க்கப்பட்டது. அக்காலத்தில் மன்னர்கள் பல பெண்களை திருமணம் செய்ய அனுமதி இருந்தது. அதன்படி திருதராஷ்டிரனுக்கு பல மனைவிகள் ஏற்கனவே இருந்தாலும், காந்தாரியே பட்டத்தரசியானாள்.

இங்கே இப்படியிருக்க, சுரதை என்ற பெண்மணி துர்வாச முனிவருக்கு பல சேவைகள் செய்து வந்தாள். துர்வாசர் என்றாலே எல்லாருக்கும் தெரியும். அவர் பெரிய கோபக்காரர் என்று. சுரதை ராஜகுமாரி என்றாலும் கூட, அவர் மனம் கோணாமல் சேவை செய்து வந்தாள். இவள் சூரன் என்ற மன்னனின் மகள். அவளை குந்திபோஜன் என்ற மகாராஜா, தன் மகளாக சுவீகராம் எடுத்துக் கொண்டான். குந்திபோஜனின் அரண்மனைக்குத் தான் துர்வாசர் வந்திருந்தார். வந்தவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள மகளையே நியமித்திருந்தான் மன்னன். குந்திபோஜனின் மகளான பிறகு சுரதைக்கு அவளது சொந்தப் பெயர் மறைந்து விட்டது. அவளுக்கு குந்தி என்று பெயர் நிலைத்து விட்டது. இப்போது குந்தி சிறுமியாகத்தான் இருந்தாள். அவள் தன் தோழியரோடு அம்மானை ஆடுவாள். ஆற்றுக்குச் சென்று தோழியருடன் நீச்சலடித்து மகிழ்வாள். ஊஞ்சல் கட்டி ஆடுவாள். இப்படி விளையாட்டு பருவமுள்ள சிறுமி கோபக்கார துர்வாசருக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்று மன்னன் கொஞ்சமும் எண்ணி பார்க்கவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் அந்த பணியை ஒப்படைத்துவிட்டான். குந்தியும் தன் விளையாட்டுகளையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, முனிவருக்கு தேவையான பணி விடையை அவரது மனம் கோணாமல் செய்து வந்தாள். துர்வாசருக்கு சந்தோஷம். எப்போதும் கடுகடுவென இருப்பவர்களைக் கூட பொறுமை மகிழ்ச்சிகரமாக்கி விடுகிறது. துர்வாசர் சமயத்தில் கோபபட்டாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் சிறுமி குந்தி சேவை செய்தாள். துர்வாசரே அசந்து விட்டார். அம்மா! குந்தி, நான் புறப்படுகிறேன். இங்கிருந்த காலத்தில் எனக்கு வேண்டிய பணிவிடைகளை நல்ல முறையில் செய்தாய். உன்னைப் போன்ற பொறுமையுள்ள பெண்ணை பூமியில் நான் இதுவரை பார்க்கவில்லை. உபசாரம் என்பது பெரியகலை. பிறர் மனம் கோணாமல் உபசரிப்பவர், சொர்க்கத்திற்கு செல்வார்கள். இந்த உபசரிப்புக்காக பரிசொன்று தரப்போகிறேன். நீ பெற்றுக் கொள், என்றாள். என்ன இருந்தாலும் குந்தி குழந்தை தானே! மேலும் அவர் கோபக்கார மகரிஷி. வேண்டாம் என்று சொல்லி அவர் சபித்து விட்டாலோ, தந்தையிடம் புகார் சொன்னாலோ என்னாவது? குந்தி பணிவுடன் கைகட்டி நின்றாள். அவளை அருகில் அழைத்த மகரிஷி, தன் மடியில் இருத்திக் கொண்டு, அம்மா! ஒரு ரகசிய மந்திரம் ஒன்றை உனக்கு கற்றுத் தரப்போகிறேன். இது யாருக்கும் கிடைக்காத அரிய பரிசு. கவனமாகக் கேள், என்றார்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:37:04 AM
மகாபாரதம் பகுதி-13

 
குந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது? மகளே! தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வருவார்கள். அவர்களால் நீ கர்ப்பமடைவாய். தெய்வ மைந்தர்களைப் பெறுவாய். அவர்களது புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். நீயும் தெய்வத்தாய் என்ற அந்தஸ்தைப் பெறுவாய், என்றார். குந்தி அப்போது தான் வயதுக்கு வந்திருந்தாள். தழதழவென்ற உருவம். அவளைப் பார்க்கும் ஆண்களின் கண்கள் பார்வையை விலக்கவே விலக்காது. அவளைத் திருமணம் செய்ய பல நாட்டு மன்னர்களும் துடித்துக் கொண்டிருந்தனர். வயதுக்கு வந்திருந்தாலும், விளையாட்டு புத்தி அந்தப் பெண்ணுக்கு இன்னும் மாறவில்லை. அது மட்டுமல்ல! மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று? காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய்! டிபன் பாக்சிலே இன்று உனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். இங்கேயே திறந்து பார்க்காதே. ஸ்கூலில் போய் பார், என்பாள். பையன் பாதி வழி தான் போயிருப்பான். உடனே டிபன் பாக்சை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து விடுவான். குறிப்பாக குழந்தைகளிடம் இந்தக் குணம் அதிகமாகவே உண்டு. டிவியில் இன்ன நிகழ்ச்சியைப் பார்க்காதே என்றால், பெற்றவர்கள் அசரும் சமயத்தில், குழந்தை அந்த சானலைக் கண்டிப்பாக திருப்பிப் பார்ப்பான்.

குந்தியும் குழந்தை தானே! அவளுக்கும் ஆசை. இந்த முனிவர் ஏதோ வரம், குழந்தை என்றெல்லாம் சொன்னாரே! சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே! இன்று யாரையாவது பார்த்தால் என்ன? அப்படியெல்லாம் வரவா செய்வார்கள்! இவர் ஏதோ கதை சொல்லியிருக்கிறார், என்றவளாய், வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.
கண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன! வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே! திடீரென இங்கு வந்த தாங்கள் யார்? என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம்? பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ? என்றாள் சிறு கோபத்துடன். அவன் கலகலவென சிரித்தான். அன்பே! நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும்? தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே! என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன் அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.

சூரிய பகவானே! இதென்ன தகாத செயல். முனிவர் சொன்னாரே என்பதற்காக ஏதோ விளையாட்டாக மந்திரத்தைச் சொன்னேன். அதை நிஜமென நம்பிக் கொண்டு, நீர் இப்படி அடாத செயலைச் செய்வது தேவர் குலத்துக்கு இழுக்கை விளைவிக்கும். போய் விடும், என்று சப்தமாகச் சொன்னாள் குந்தி. சூரியன் அவளை விடவில்லை. மீண்டும் அவளை அணைத்தான். அழகுப்பதுமையே! இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய்? என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள். பகலவனே! என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே! கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள். அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், என்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான். அந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம்! குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா! பிறக்கும் போதே வீரச் சின்னங்களுடன் பிறந்திருக்கிறான்!
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 10:38:58 AM
மகாபாரதம் பகுதி-14

பெற்ற மகனைப் பார்த்து உள்ளம் பூரித்த அதே வேளையில், குந்திக்கு பயமும் வந்து விட்டது. ஐயோ! தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும்? குடும்ப மானம் காற்றில் பறக்குமே. சூரியனுக்கு இந்த பிள்ளையைப் பெற்றேன் என்றாலும் கூட, கன்னியாக இருந்து கொண்டே காமலீலை நடத்தினாயடி, கள்ளி, என்று தகப்பனார் திட்டுவார். ஊரார் என்ன சொல்வார்கள்? அட காமந்தகாரி, மனஅடக்கம் இல்லாத நீயா எங்கள் இளவரசி என்று வசை பாடுவார்களே, ஓ என்ன செய்வது? அப்போது அவளது அந்தரங்கத் தோழி வந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தும் அவளுக்குத் தெரியும். அவளிடம், என் அன்புத் தோழியே! பெண்கள் ரகசியங்களைப் புதைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். ஆனால், நீ அப்படிப்பட்டவள் அல்ல. என் நலத்தை மட்டுமே நாடுபவள். இந்த அந்தரங்கத்தை வெளியே சொல்லமாட்டாய் என நான் அறிவேன். நான் மீண்டும் கன்னியாகி விட்டேன். இப்போது இவன் என் குழந்தையல்ல. இவன் தெய்வத்தின் குழந்தை. இவனை இதோ இந்த பாகீரதி (கங்கை) ஆற்றில் விட்டு விடு. ஒரு பெட்டிக்குள் வைத்து விட்டால் ஆபத்தின்றி தப்புவான். யாராவது இவனைக் காப்பாற்றி விடுவார்கள் என நம்புகிறேன், என்றாள். தோழி குந்தியின் நிலையைப் புரிந்து கொண்டாள். இளவரசி! விளையாட்டு வினையாகி விட்டதை நானும் உணர்வேன். உன் நிலையில் நான் இருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன். என் உயிர் உள்ளவரை இந்த ரகசியம் வெளியே வராது. கவலைப்படாதே, என ஆறுதல் சொல்லி, சித்திரவேலைப்பாடுள்ள ஒரு அழகிய பெட்டியில் குழந்தையை வைத்தாள். குந்தி அன்று அழுது பெருக்கிய கண்ணீரின் அளவு கங்கையையும் தாண்டியது.

அந்த அழகு மகனை அவள் கங்காதேவியிடம் தாரை வார்த்தாள். புனித கங்காமாதா அந்தப் பெட்டியை மிக பத்திரமாக சுமந்து சென்றாள். ஏனெனில், பெட்டிக்குள் இருப்பவன் சூரிய மைந்தன். இந்த தேச மக்கள் சுபிட்சமாக வாழ கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாகப் போகிறவன். அலைபுரண்டு ஓடினாலும், சுழல்களுக்குள் சிக்கினாலும் பெட்டி எந்த சேதாரமும் இல்லாமல் சென்றது. நீண்ட தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் அதிரதன் என்பவன் தன் மனைவியுடன் புரண்டோடும் பாகீரதி நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்நாட்டு தேர்ப்பாகன்களின் தலைவன். அதிரதனின் மனைவி தூரத்தில் ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கணவனிடம் சுட்டிக்காட்டினாள். வெள்ளமென்றும் பாராமல், நதியில் குதித்து அதை தள்ளிக் கொண்டே வந்து கரைசேர்த்தான் அதிரதன். அதிரதனின் மனைவி அவசரமாக பெட்டியைத் திறந்தாள். உள்ளே குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அவனது முகப்பிரகாசத்தை ரசிப்பதா? அல்லது உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக காதில் குண்டலமும், மார்பில் கவசமும் பளபளத்ததை ரசிப்பதா? இது என்ன ஆச்சரியம்? இவ்வளவு அதிசயமும், அழகும் கொண்ட குழந்தையைப் பெற்றவள் ஏன் தண்ணீரில் மிதக்க விட்டாள்? அவள் ஒரு பெண்தானா? என்றெல்லாம் பலவாறாகப் பேசியபடி குழந்தையை எடுத்து அள்ளி அணைத்தாள் அந்த மாதரசி. இருக்காதா பின்னே! அவர்களுக்கு கடவுள் குழந்தை செல்வத்தை தரவில்லை. மரணத்துக்கு பிறகு பிதுர்க்கடன் செய்ய இதோ ஒரு மகன் வந்து விட்டான். அவர்கள் ஆனந்தப்பட்டனர். குழந்தையையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு இல்லம் போய் சேர்ந்தனர்.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தனர். குழந்தையின் கைகள் அடிக்கடி மூடித்திறந்ததைப் பார்த்து, ஓ இவன் வள்ளல். கொடுக்கும் குணமுடையவன். இவனுக்கு கர்ணன் என பெயர் சூட்டுவோம், என முடிவெடுத்தனர். அரசகுலத்தில் பஞ்சு மெத்தையில் அயர்ந்துறங்க வேண்டிய அந்தக் குழந்தை ஒரு ஏழை வீட்டு மரத்தொட்டிலில் படுத்திருந்தான். இங்கே இப்படியிருக்க, இது எதையும் அறியாத குந்தியின் தந்தை விராதன் குந்திக்கு திருமண சுயம்வர ஏற்பாடு செய்தான். பல நாட்டு மன்னர்களும் வந்திருந்தனர். வந்தவர்களில் பாண்டுவும் ஒருவன். அவனை
குந்திக்கு பிடித்து போய் விட்டது. மணமாலையை அவனுக்கே அளித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. குந்தியும், பாண்டுவும் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. பாண்டுவின் பெருமையைக் கேள்விப்பட்டான் மந்திர தேசத்து மன்னன் ருதாயன். அவனுக்கு மாத்ரி என்ற மகள் இருந்தாள். அவளையும் பாண்டுவுக்கு திருமணம் செய்து வைத்தான். மாத்ரியின் சகோதரன் சல்லியனுக்கும் இந்த திருமணத்தில் பெரும் விருப்பம் இருந்தது. தங்கைக்கு நல்ல கணவன் கிடைத்தது கண்டு மகிழ்ந்தான். இந்த ஆண்வர்க்கம் இருக்கிறதே... அதனிடம் ஒரு பலவீனம் உண்டு. பெண்கள் முன்னால் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றால் விழுந்து விழுந்து காட்டுவார்கள். கிருதயுகம் முதல் கலியுகம் வரை இது இருக்கத்தான் செய்கிறது. பாண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? புதுமனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவன் காட்டுக்கு போனான். மனைவிகளை அருகில் வைத்துக் கொண்டு, இதோ பார் புலி, அதைக் கொல்கிறேன், என்று சொல்லி அம்பெய்தி புலியைக் கொன்றான். யானைகளைப் பிடித்தான். சிங்கங்களை அழித்தான். யாழிகள் என்ற இனம் அக்காலத்தில் இருந்தது. சிங்கமுகமும், தும்பிக்கையும் கொண்ட இந்த அதிசய மிருகங்களையும் கொன்றான். இதையெல்லாம் பார்த்த, புதுமனைவியர் தங்கள் கணவனின் வீரம் கண்டு அகம் மகிழ்ந்தனர். ஓரிடத்தில் இரண்டு மான்கள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. குந்தி, மாத்ரி, பாருங்கள். அந்த மான்களை இங்கிருந்தே அடிக்கிறேன், என்றான். தூரத்தில் அந்த இரண்டு மான்களும் தங்களுக்கு எமனாக வரும் அம்பைப் பற்றி அறியாமல் இன்ப சுகத்தில் மூழ்கியிருந்தன. ஆனால், அந்த அம்பு பாண்டுவுக்கும் சேர்த்து எமனாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது என்பதை அவனும், அவனது தேவியரும் அப்போது உணரவில்லை
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:12:15 PM
மகாபாரதம் பகுதி-15

பாய்ந்து சென்ற அம்பு அந்த மான்களை ரத்தச்சேற்றில் தள்ளியது. இரண்டும் உயிருக்கு துடிதுடித்தன. பாண்டுவின் மனைவியர் தன் கணவனின் திறமை கண்டு புளகாகிதமடைந்திருந்த வேளையில், அந்த ஆண்மான் ஒரு தவசீலனாக உருவெடுத்தது. அந்த முனிவர் பாண்டுவிடம் கோபத்துடன் வந்தார். பாண்டு அவரிடம், தவசீலரே! நான் பாண்டு மன்னன். வேட்டைக்காக வந்த இடத்தில் மான்களை நோக்கி அம்பெறிந்தேன். ஆனால், நீங்கள் மானிட உருவம்...அதிலும் முனிவராக வந்து நிற்கிறீர்கள். தாங்கள் யார்? என்றான் பதட்டத்துடனும் பணிவுடனும். முனிவர் அவனது பணிவு கண்டு சற்றே கோபம் அடங்கி, மன்னா! என் பெயர் கிந்தமன். முனிவர்களுக்கு எப்போதாவது ஒருமுறை இன்ப உணர்வு தலை தூக்கும். அந்த உணர்வை மன்மதன் என்னிடம் தூண்டி விட்டான். நான் அதை தாங்கமுடியாமல் தவித்தேன். இந்த நடுக்காட்டில் என்னால் என்ன செய்ய இயலும்? எனவே, நானும் என் மனைவியும் மான்களாக மாறி கூடி களித்துக் கொண்டிருந்தோம். அந்த வேளையில் நீ எங்கள் மீது அம்பெய்தாய். எங்கள் இன்பத்தை தொலைத்து விட்டாய். உலகிலேயே கொடிய பாவம், இன்பமுற்றிருக்கும் தம்பதிகளைப் பிரிப்பதாகும். அது உனக்குத் தெரியுமல்லவா? என்றார். அறிவேன் முனிவரே! ஆனாலும், இது தெரியாமல் நடந்துவிட்டது. மன்னிக்க வேண்டும் என்னை, என்ற மன்னனிடம் சற்றும் கருணை காட்டிய முனிவர், மன்னா! எங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் பிரித்து விடும். இந்த கொலைப்பாவம் உன்னை பிடிக்காது என்றாலும், தம்பதிகளைப் பிரித்த நீ, இனி உன் மனைவிகளிடம் சுகம் கண்டால் இறந்து போவாய், என சாபம் கொடுத்து விட்டு இறந்தார்.

பெண் மான் வடிவத்தில் இருந்த அவரது மனைவியும் சுயவடிவம் எடுத்து அக்னியில் விழுந்து மாண்டாள். பாண்டு கலங்கிப் போனான். ஐயோ! இனி நான் தாம்பத்ய வாழ்வு நடத்த முடியாதா? எனக்கு இரண்டு பட்டத்தரசிகள் இருந்தும் அவர்களைத் தொட முடியாதவன் ஆகிவிட்டேனே? இந்த தேசம் என்னாகப் போகிறதோ? அவன் கண்ணீர் வடித்தான். பின்னர் தன் மனைவியருடன் வனத்திற்கு சென்று அங்குள்ள தவசாலை ஒன்றில் தங்கினான். அங்கிருந்த போது அவனுக்கு ராஜாங்க காரியங்கள் இல்லாததால், யோசிக்க அதிக நேரம் கிடைத்தது. நிறைய வேதாந்தங்களையும் கேட்டான். உலகில் மனிதனாகப் பிறந்தவனுக்கு குழந்தை பிறக்காவிட்டால் அவனால் மோட்சத்தை அடைய முடியாது என்று வேதாந்தங்களைப் படித்து தெரிந்து கொண்டான். ஆனால், குழந்தை  இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு வழியையும் தெரிந்து கொண்டான். குந்தியை அழைத்தான். தங்கள் தாய்மார்களான அம்பிகாவும், அம்பாலிகாவும் வியாசர் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது போல, தர்மத்திற்கு உட்பட்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ள தன் மூத்த மனைவி குந்தியை வற்புறுத்தினான். கணவனே இப்படி சொல்லும் போது என்ன செய்வது? அவள் யோசித்த வேளையில், பாண்டு அவளிடம், குந்தி! உனக்கொரு விஷயம் தெரியுமா? என் தந்தை வியாசமுனிவர் ஒருநாள் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு வந்தார். காந்தாரி அவரிடம் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்தினாள். அவர் தன் சக்தியால் அவளை கர்ப்பமுறச் செய்தாள். அதன் மூலம் நூறு குழந்தைகள் பெறப்போகும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாள் காந்தாரி.

நமக்கும் சந்ததிகள் வேண்டும். நாம் இறந்த பிறகு பிதுர்காரியங்கள் செய்ய பிள்ளைகள் அவசியம் என்பதை நீயே அறிவாய். நீயும் அரச தர்மப்படி, முனிவர்களைச் சேர்ந்து குழந்தைகளைப் பெறு, என்றான். தயங்கி நின்ற குந்தி, அன்பரே! என்னிடம் ஒரு விசேஷ சக்தி உண்டு. நான் சிறுமியாய் இருந்த போது துர்வாசருக்கு செய்த சேவையால் கிடைத்த சக்தி அது. நான் எந்த தேவனை நினைக்கிறேனோ, அவன் மூலம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே அது. ஆனாலும், கற்புடைய பெண் எப்படி இதற்கு சம்மதிக்க முடியும்? என்று சொல்லி தயங்கினாள். ஆனால், தனக்கு ஒரு குழந்தை ஏற்கனவே பிறந்ததை மறைத்து விட்டாள். பாண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குந்தி, உடனடியாக செயலில் இறங்கு. நமக்கு உடனே பிள்ளைகள் வேண்டும். உம், தேவர்களை வரவழைத்து அவர்களைத் தழுவு. குழந்தைகளைப் பெறு, என பரபரத்தான். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் நாட்டுநலன் கருதி இந்த யோசனைக்கு சம்மதித்த குந்திதேவி, கணவனை வணங்கினாள். பின்னர் அஞ்சும் தன்மையுடையவனும், அதே நேரம் நீதிமானுமான தர்மராஜாவாகிய எமதர்மனை அழைத்தாள். எமன் வந்தான். குந்தியின் அழகில் சொக்கிப்போய் அவளோவு இணைந்தான். ஒரு குழந்தை பிறந்தது. தர்மராஜாவுக்கு பிறந்த அவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயர் சூட்டினாள். இவனே தர்மன் என்றும் அழைக்கப்படுவான். இந்த செய்தி காந்தாரியை எட்டியது. அவள் கர்ப்பமாக இருந்தாளே தவிர, குழந்தை பிறக்கவில்லை. தனக்கு முன்னதாகவே குந்திக்கு குழந்தை பிறந்த செய்தி அவளை வாட்டியது. பொறாமைக்கனல் பொங்கியது. மூத்த மருமகளான நான் குழந்தை பெறும் முன்பு நீ பெற்று விட்டாயா? என்னால் தாங்க முடியவில்லையே, ஆவேசமாக புலம்பினாள்.  தன் அறையில் அங்குமிங்குமாக தடதடவென நடமாடினாள். கர்ப்பஸ்திரீகள் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அத்தனையும் செய்தாள். இங்கே ஒரு அறிவியல் கருத்தும் விளக்கப்படுகிறது. ஒரு பெண் குழந்தை பெறும் சமயத்தில் நல்ல மனநிலையுடன் இருந்தால், பிறக்கும் குழந்தைகளும் நல்லவர்களாக இருப்பார்கள். தங்கள் அறிவை உலகநலனுக்கு பயன்படுத்துவார்கள். அப்படி பிறந்தவன் தான் தர்மன். ஆனால், காந்தாரி என்ன செய்தாள் தெரியுமா? பொறாமையால் தன் வயிற்றில் ஓங்கி அடித்தாள். பொறி கலங்கியது போல் வலி ஏற்பட்டது. வயிற்றில் கர்ப்பம் கலைந்து விட்டது. அவசரப்பட்டு செய்த செய்கைக்காக அவள் அழுது புலம்பினாள். வியாச பகவானே! தங்கள் வரம் பொய்க்கலாமா? எனக்கு கர்ப்பம் கலைந்து விட்டதே, என்ன செய்வேன்? என அரற்றவும், வியாசர் அங்கே தோன்றினார்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:14:46 PM
மகாபாரதம் பகுதி-16

அப்போது காந்தாரியின் வயிற்றில் இருந்த கரு மொத்தமாக கீழே விழுந்து ரத்தம் பெருகியது. காந்தாரி வலியாலும், துக்கத்தாலும் கதறினாள். அவசரப்பட்டு வயிற்றில் அடித்ததற்காக அவள் மனம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. வியாசர் அவளைத் தேற்றினார். காந்தாரி! கவலை கொள்ளாதே! நீ சாதாரணமானவளா? கணவனுக்கு கண் இல்லை என்பதற்காக உன் கண்ணைக் கட்டிக் கொண்ட கற்புக்கரசியல்லவா? அந்த கற்பின் வலிமை இந்த கர்ப்பத்தைக் காப்பாற்றும், என்றவர், கீழே விழுந்த கருவை துண்டு துண்டாக வெட்டினார். நூறு துண்டுகள் இருந்தன. வெட்டியது போக ஒரு துண்டு மீதி வந்தது. காந்தாரி, நெய் நிரம்பிய நூறு கும்பங்களை எடுத்து வா, என்றார். காந்தாரி அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவே, தோழிப்பெண்கள் கும்பங்களை எடுத்து வந்தனர். அவற்றில் துண்டுகள் ஒவ்வொன்றையும் போட்டார் வியாசர். தனியாக இருந்த துண்டை ஒரு பானையில் போட்டு விட்டார். காந்தாரி! இவற்றை நீ பத்திரமாக பாதுகாத்து வா. இவை ஒவ்வொன்றும் வளர்ந்து ஒவ்வொரு குமாரனை உனக்கு தரும். ஆஸ்திக்கு எத்தனை ஆண்கள் பிறந்தாலும், ஆசைக்கு ஒரு பெண் வேண்டுமல்லவா? அந்தப் பானையில் உள்ள கரு பெண்ணாய் பிறக்கும், என சொல்லி விட்டு மறைந்து விட்டார். கருக்கள் வளர்ந்தன. முதல் கும்பத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அவன் தான் துரியோதனன். அவன் பிறந்த போது மங்கலமுரசு முழங்கிக் கொண்டிருந்தது.

அதே நேரம் எங்கிருந்தோ பல நரிகள் ஒன்றுசேர்ந்து ஊளையிட, மங்கலச்சத்தம் அடங்கி விட்டது. கெட்ட நேரத்திற்கு அது அறிகுறியாக இருந்தது. துரியோதனன் பிறந்த விபரமும், அவனைத் தொடர்ந்து காந்தாரிக்கு நூறு குழந்தைகள் பிறக்க இருக்கும் விபரமும் பாண்டுவை எட்டியது. ஆஹா...என் அண்ணியாருக்கு நூறு குழந்தைகள் பிறக்கப் போகிறதாம்! எனக்கு ஒரு குழந்தை தான் இருக்கிறது. குந்தி! மீண்டும் தேவர்களை நினை. அந்த நூறு பேருக்கும் சமமான வலிமையுள்ள குமாரனைப் பெறு, என்றான் பாண்டு. கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த குந்தி, வாயு பகவானுக்குரிய மந்திரத்தைச் சொன்னாள். வாயு வந்தான். இருவரும் கூடிக் கலந்தனர். கர்ப்பமானாள் குந்தி. ஒருநாள் நடுப்பகலில் நல்ல முகூர்த்த வேளையில் ஒரு குழந்தை பிறந்தது. அவன் பிறந்த வேளை நல்வேளையாக அமைந்ததால் யாக குண்டங்களில் அக்னி வலப்பக்கமாக எரிந்தது. (கும்பாபிஷேகம் நடக்கும் போது யாக குண்டங்களில் அக்னி வலப்புறமாக எரிந்தால் அந்த ஊருக்கே நல்லது). அந்தக் குழந்தை தான் பீமன். பாண்டுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இங்கே இப்படியிருக்க, காந்தாரியின் அரண்மனையில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழிந்தது. அங்கே கிரகங்கள் மோசமாக இருந்த நிலையில், கொடுமையின் ஒட்டுமொத்த வடிவான துச்சாதனன் பிறந்தான். இவனைத் தொடர்ந்து, வரிசையாக நாளொன்றுக்கு ஒரு குழந்தை வீதம் பிறக்க குழந்தைகளின் அழுகுரலால் அந்த அரண்மனை சிரித்தது. ஹஸ்தினாபுரத்து மக்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். ஆனால், மேகக்கூட்டங்கள் இந்த பூமிக்கு வந்துள்ள அபசகுனத்தை அறிவிக்க ரத்தமழை பொழிந்தன.

பிறந்த குழந்தைகளுக்கு திருதராஷ்டிரன் பெயர் சூட்டினான். துரியோதனன், துச்சாதனன், யுயத்சு, துச்சகன், துச்சலன், துர்முகன், விளிஞ்சதி, விகர்ணன், சலசந்தன், சுலோசனன், விந்தன், அதுவிந்தன், துர்த்தருஷன், சுவாகு, துர்ப்பிரதருஷணன், துர்மருஷ்ணன், துருமுகன், துர்க்கருணன், கர்ணன் (துரியோதனாதிகளில் ஒருவனுக்கும் இப்பெயர் உண்டு), சித்திரன், உபசித்திரன், சித்திராக்கன், சாரு, சித்ராங்கதன், துர்மதன், துர்பிரகாஷன், விவித்சு, விகடன், சமன், ஊர்ணநாபன், பத்மநாபன், நந்தன், உபநந்தன், சேனாதிபதி, சுடேணன், கண்டோதரன், மகோதரன், சித்ரவாகு, சித்ரவர்மா, சுவர்மா, துருவிரோசனன், அயோவாகு, மஹாவாகு, சித்திரசாயன், சுகுண்டலன், வீமவேகன், வீமபாலன், பாலகன், வீமவிக்ரமன், உக்ராயுதன்... இப்படி 50 பேருக்கு பெயர் சூட்டப்பட்டது. அடுத்து பிறந்த 50 குழந்தைகளுக்கு வீமசரன், கனகாயு, திருஷாயுதன், திருஷவர்மா, திருஷகத்ரன், சோமகீர்த்தி, அநூதரன், சராசந்தன், திருஷசந்தன், சத்தியகந்தன், சுகச்சிரவாகு, உக்ரச்சிரவா, உக்ரசேனன், சேனானி, மகமூர்த்தி, அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன், துராதரன், திருஷகத்தன், சுகத்தன், வாதவேகன், சுவர்ச்சசன், ஆதித்யகேது, வெகுவாதி, நாகத்தன், அநுயாயி, நிஷல்கி, கவசி, தண்டி, தண்டதரன், தனுக்கிரகன், உக்கிரன், பீமரதன், வீரன், வீரவாகு, அலோலுபன், அபயன், ரவுத்ரகம்மன், திருஷரதன், அநாதிருஷ்யன், குண்டபேதன், விராவி, தீர்க்கலோசனன், தீர்க்கவாகு, மகாவாகு, வியுகுடாகு, கனகரங்கதன், குண்டசித்து, சித்திரகன் என்று பெயர் வைக்கப்பட்டது. பானையில் இருந்த பிறந்த பெண் குழந்தைக்கு துச்சளை என்று பெயர் சூட்டினர். உலகத்திலேயே நூறு அண்ணன்மாரைப் பெற்ற பாக்கியவதியாக அவள் வளர்ந்தாள். பாண்டுவுக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. குந்தி! என் அண்ணி மிக மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாளாம். நூறு பிள்ளை பெற்று விட்டதால் கர்வம். எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும். உனக்கு பிடித்த இன்னொரு தேவனை கூப்பிடு, என்றான். பொறாமை மனிதனை அழிக்கிறது. பாண்டு நல்லவன் என்றாலும், பிறர் வீட்டில் ஒரு நல்ல விஷயம் என்றால் அவனால் பொறுக்க முடியவில்லை. இந்தப் பொறாமைத் தீ அவனது குழந்தைகளை என்ன பாடு படுத்தப்போகிறது என்பதையும் அவன் உணரவில்லை. குந்தியோ, கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டும், அக்கால தர்மப்படியும் தேவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருந்தாள். இப்போது அவள் தேவர் தலைவன் இந்திரனை அழைத்தாள். இந்திரன் வந்தான். குந்தியோடு கூடினான். கர்ப்பவதியான குந்தி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் குழந்தையைப் பெற்றெடுத்தான். வெற்றிக்கென்றே பிறந்தான் விஜயன் என்னும் அர்ஜூனன்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:16:07 PM
மகாபாரதம் பகுதி-17

இதோடு விட்டானா பாண்டு... குந்தியை அழைத்தான். அன்பே! உன்னளவில் நீ எனக்கு பெரிதும் உதவியிருக்கிறாய். நமக்கு பிறந்த மூவருமே மைந்தர்கள். உன் சகோதரிக்கு (மாத்ரி) என்னால் குழந்தை பாக்கியம் தர இயலவில்லை. அவளுக்கும் நீ இந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தால், அவளுக்கும் குழந்தை பிறக்க வழி பிறக்குமல்லவா? அன்பே! எனக்காக நீ இதைச் செய்யமாட்டாயா? என்று கெஞ்சலாகக் கேட்ட கணவனின் விருப்பத்திற்கு சம்மதித்தாள் குந்தி. கற்பு நிறைந்த பெண்கள் கணவர் சொல் தட்டுவதில்லை. மாத்ரியை அழைத்தாள். சகோதரி! கணவரின் அனுமதியுடன் தேவர்களுக்கு நான் மூன்று பிள்ளைகளைப் பெற்றேன். உனக்கும் அதே மந்திரத்தைக் கற்றுத்தரச் சொல்லியுள்ளார் பாண்டு மன்னர். உனக்கும் குழந்தைகள் பெறும் ஆசை இருக்கத்தானே செய்யும். நான் மந்திரத்தைச் சொல்கிறேன். கேள், என அந்த ரகசிய மந்திரத்தை அவளது காதில் ஓதினாள் குந்தி. மகிழ்ச்சியடைந்தாள் மாத்ரி. தேசத்தின் நலன் கருதி கணவர் அல்லாத மனமாசில்லாத ஒருவரிடம் குழந்தை பெறுவது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதையும், அதனால் கற்பிற்கு பாதிப்பில்லை என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவள், அசுவினி தேவர்களை அழைத்தாள். அவர்கள் இவ்வுலகிலுள்ள எட்டு திசைகளின் காவலர்கள். அந்த எட்டு பேரும் வந்தனர். ஒரே உருவம் எடுத்தனர். மாத்ரியை கட்டியணைத்தனர். அவளுக்கு ஆசி வழங்கி விட்டு சென்றனர். கர்ப்பமானாள் மாத்ரி. அவளுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் வகையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு நகுலன், சகாதேவன் என்று பெயர் சூட்டினான் பாண்டு.

புத்திரர்கள் ஐவரும் செல்லமாய் இங்கே வளர, அஸ்தினாபுரத்தில் துரியோனாதிகள் நூறு பேரும் இன்னும் செல்லமாக வளர்க்கப்பட்டனர். பாண்டு புத்திரர்களின் நண்பர்கள் யார் தெரியுமா? புலிகளும், சிங்கங்களும். இளம் வயதிலேயே பயத்தை விரட்டுவது என்பது பெரிய கலை. பாண்டு புத்திரர்களான பாண்டவர்கள் ஐவரும் சிறு வயதிலேயே வீரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஆயகலைகள் அறுபத்து நான்கும் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. வீரம் மிக்கவர்களுக்கு மனிதாபிமானமும் முக்கியம். பாண்டவர்கள் இளம் வயதிலேயே பல தர்மங்களைச் செய்தனர். இந்த பூமியின் அளவை விட அவர்கள் வழங்கிய பொருளின் அளவு அதிகமாக இருந்தது. வாலிப வயதை அடைந்து விட்டார்கள் பாண்டவர்களும், துரியோதனாதிகளான கவுரவர்களும். இந்த நிலையில் ஒரு வசந்தகாலம் வந்தது. பாண்டுவுக்கு வயது ஏறியிருந்தாலும், அவன் கிந்தம முனிவரிடம் பெற்ற சாபத்தால் அவனால் மனைவியரின் அருகே நெருங்க முடியவில்லை. வசந்த காலத்தின் மன்மத பாணங்கள் அவனைத் துன்புறுத்தியது. ஒருநாள் அந்த பாணங்களின் தாக்குதலுக்கு மிகக் கொடூரமாக ஆளான அவன் முன்னால் மாத்ரி வந்து நின்றாள். அவளது அழகை கண்களால் அள்ளிப்பருகிய பாண்டு, அவளை அணைத்தான். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்ட ஸ்பரிசத்திற்கு மாத்ரியும் கட்டுப்பட்டாள். நடக்கப்போகும் விபரீதம் அவளுக்குத் தெரியவில்லை. சற்றுநேரம் சென்றது. பாண்டு அவள் மீது பிணமாகக் கிடந்தான். இன்பம் பெற வந்த மாமன்னன் துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்தானே என மாத்ரி கதறினாள்.

ஐயோ! கணவருக்கு புத்திமதி சொல்லாமல், அவரது இச்சைக்குப் பணிந்து அவரது உயிரையே பறித்து விட்டதே! என் இதழ்களில் இருந்து நீங்கள் பருகிய அமுதம் உங்களை விஷமாக்கி கொன்று விட்டதே! மனமொத்த தம்பதிகளை உலகில் யார் ஒருவர் பிரிக்கிறாரோ, அவர்களுக்கு உங்கள் வாழ்க்கை ஒரு பாடமாகி விட்டது. ஆம்...நீங்கள் கிந்தமரிடம் பெற்ற சாபம் தீவினையாக மாறி உங்களை அழித்து விட்டதே! நான் என்ன செய்வேன். ஐந்து புதல்வர்களை வளர்க்கும் பொறுப்பை இரண்டு விதவைகளிடம் ஒப்படைத்து விட்டீர்களே!என புலம்பினாள். மாத்ரியின் புலம்பலைக் கேட்டு வந்த குந்தி, நடந்து விட்ட விபரீதத்தை எண்ணி கதறித்துடித்தாள். இந்த பட்டத்தரசிகளின் ஓலம் கேட்டு பாண்டு புத்திரர்கள் ஓடி வந்தனர். அரண்மனையில் தங்கியிருந்த முனிவர்கள், மகான்கள் எல்லாம் வந்தனர். முனிவர்களில் முதியவரான காஷ்யபர், சதசிருங்கர் போன்றவர்களெல்லாம் வருத்தப்பட்டார்கள். மாத்ரியால் கணவனின் இறப்பைத் தாங்க முடியவில்லை. மேலும் அவரது சாவுக்கு காரணமாக அமைந்தது தன்னுடன் இன்பம் துய்த்தது என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் உயிர் வாழ விரும்பவில்லை. தான் பெற்ற பிஞ்சுகளை ஏற இறங்க பார்த்தாள். எப்படியும் குந்தி அவர்களைக் காப்பாற்றி விடுவாள் என்ற நம்பிக்கை பிறந்தது. குந்தி! இனியும் நான் உயிர் வாழமாட்டேன். அவரது பிரிவைத் தாங்கும் சக்தி எனக்கில்லை. மைந்தர்களே! குந்தியின் சொல் கேட்டு நடக்க வேண்டும். நீங்கள் வீர மைந்தர்களாய் வாழுங்கள், என வாழ்த்தி விட்டு, சிதை மூட்டச்சொல்லி உத்தரவிட்டாள். அந்த தீயில் இறங்கி தன் உயிரை விட்டாள். கற்புடைய ஒரு பெண் வேறென்ன செய்வாள்! இதற்குள் இறந்து போன பாண்டு மன்னன் சொர்க்கம் போய் சேர்ந்தான். அங்குள்ள கற்பக மரத்தின் நிழலில் தங்கியிருந்தான். மாத்ரியும் அவனை அடைந்தாள். இருவரும் ஆகாயகங்கையில் நீராடினர். மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தனிமையில் ஐந்து புத்திரர்களுடன் என்ன செய்வாள் குந்தி? அவளையும், புத்திரர்களையும் ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் சென்றார்கள் முனிவர்கள். திருதராஷ்டிரன் தன் தம்பி மனைவியையும், குழந்தைகளையும் அன்போடு வரவேற்றான். தங்கள் ஐந்து சகோதரர்களையும் பார்த்து துரியோதன சகோதரர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பெரியப்பாவின் பாதத்தில் விழுந்து வணங்கினர் பாண்டு புத்திரர்கள். அவர்களைக் கண்ணீரோடு அணைத்துக் கொண்டான் திருதராஷ்டிரன். அப்போது அங்கு வந்தார் பரமாத்மா கிருஷ்ணன்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:17:35 PM
மகாபாரதம் பகுதி-18

பரமாத்மா மட்டுமா வந்தார்! அவரது தந்தை வசுதேவர், தாய் தேவகி, குந்தியின் தந்தை குந்திபோஜன் மற்றும் உறவுகளெல்லாம் வந்தனர். பெரிய துக்கமல்லவா! கண்ணனுக்கு குந்தி அத்தை. ஏனெனில், அர்ஜூனன் கண்ணனின் சகோதரி சுபத்ராவைத் திருமணம் செய்தவன். மைத்துனரின் தந்தையல்லவா மரணமடைந்திருப்பவர். மகளின் துக்கத்தில் பங்குகொள்ள குந்திபோஜனும் வந்துவிட்டான். எல்லோரும் நெருங்கிய சொந்தங்கள்.
பீஷ்மர், விதுரன் ஆகிய மகாத்மாக்கள் கூட குந்தி புத்திரர்களின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். பரமாத்மா கண்ணன் மட்டும் பாரதத்தின் எந்த மூலையிலும், ஏன் அவரது இந்த அவதாரத்தில் எங்குமே கண்ணீர் வடித்ததில்லை. அவர் ஒரு புன்னகை மன்னன். ஏனெனில், நடக்கின்ற சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமே அவர் தானே! மேலும், அழ வேண்டியதையெல்லாம் இதற்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்திலேயே அழுது தீர்த்துவிட்டாரே! போதாதா! கண்ணனின் தாய் தேவகி துக்கத்தில் ஆழ்ந்திருந்த குந்திக்கு சொன்ன ஆறுதல் மொழிகள் கொஞ்ச நஞ்சமல்ல! பெண்கள் ஒருபுறமிருக்க, ஆண்கள் ஒருபுறம் எதிர்காலம் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தார்கள். திருதராஷ்டிரனின் அண்ணன் மகாத்மா விதுரர், கண்ணா! பூபாரம் தீர்க்க வந்தவனே! உன் உதவி இருக்கும்போது பாண்டவர்களுக்கு என்ன கவலை. நீ தான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும், என்றார். கண்ணனும் அதை ஆமோதித்தார்.

வந்த விஷயம் முடிந்ததும், அவர்கள் திரும்பி விட்டனர். துக்கவீட்டில் ரொம்ப நாள் தங்கக்கூடாது. வந்தோமா, போனோமா என்று இருக்க வேண்டும் என்ற நீதி இங்கே எடுத்துச் சொல்லப்படுகிறது. இப்படியிருக்க, ஆரம்பத்தில் துரியோதன சகோதரர்கள், பாண்டு புத்திரர்களுடன் நன்றாகத்தான் இருந்தனர்.  ஆனால், பீமன் மட்டும் யாருடனும் ஒத்துப்போக மாட்டான். சிறுவன் தான் என்றாலும், துரியோதன சகோதரர்களை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதற்காக அவன் வம்பு செய்வதில்லை. ஒதுங்கி இருந்து கொண்டான். இந்தப்போக்கு துரியோதனனுக்கு பிடிக்கவில்லை. அவன் தன் மாமா சகுனியிடம் ஓடினான். காந்தாரியின் அண்ணன் தான் இந்த சகுனி. தங்கை வீட்டில் தங்கியிருப்பவன். மாமா! இந்த பீமன் மட்டும் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. பெரிய முரடன். ஏதாவது பேசினால் முறைக்கிறான். வம்புக்கு போனால் வேறு வினையே வேண்டாம். அவன் என் மீது விழுந்தாலே போதும். நான் தரையோடு தரையாக நசித்துப் போய்விடுவேன். அரண்மனையில் வேகும் அரிசியில் பாதிக்கு மேல் இவனுக்கே போய்விடுகிறது. இந்தப்பயலை அடக்க ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். இந்த சகுனிக்கு பாண்டு புத்திரர்களின் நாட்டையும் சேர்த்து கொள்ளையடிக்க ஆசை. அதற்கு தடையாக இருந்த பாண்டு ஒழிந்து விட்டான். குந்தியோ, இவர்கள் பிடியில். இந்த சிறுவர்களாலும் ஏதும் செய்ய முடியாது. காலம் கனியட்டும் என காத்திருப்பவன். மருமகனே! இதென்ன பிரமாதம்! இதோ! உன் நண்பன் கர்ணன் இங்கே தான் படுத்திருக்கிறான். அவனை துணைக்கு வைத்துக் கொள். பீமன் தூங்கும் போது அவனை கட்டு. அப்படியே தூக்கிக் கொண்டு போய் கங்கையின் நடுவில் வீசிவிடு, என அந்த பிஞ்சுமனத்தில் கொலை வெறியை விதைத்தான்.

கர்ணனும், துரியோதனனும் விரைந்தனர். உறங்கிக் கொண்டிருந்த பீமனை காட்டுக்கொடிகளைக் கண்டு கட்டினர். பீமன் திமிறினான். அவனை ஒரு
படகில் ஏற்றி, கங்கையின் நடுவே தள்ளிவிட்டனர். பீமனாவது, இதற்கெல்லாம் மசிவதாவது! தண்ணீரில் மூழ்கியவன், ஏதோ சந்தோஷமாகக் குளிப்பவன் போல தலையை இங்கும் அங்கும் அசைத்தான். தன் பலத்தை ஒன்றுதிரட்டி கையை உதறினான். காட்டுக்கொடி போன இடம் தெரியவில்லை. ஒரே மூச்சில் வெளியே வந்தான். கர்ணனும், துரியோதனனும் அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் வருவதற்கு முன்பே, அரண்மனை சிம்மாசனத்தில் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருந்தான். ஆசாமிகள் இருவருக்கும் கடும் அதிர்ச்சி! இவனை தண்ணீரீல் வீசினால், நாம் திரும்புவதற்குள் இவன் வந்து விட்டானே. ஏ கர்ணா! இவன் கண்ணில் படாதே. பட்டால், இந்த இடத்திலேயே அடிப்பான். இங்கே வந்தால், நாம் 101 பேரும் சேர்ந்து தான் வரவேண்டும் புரிகிறதா? என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். மறுநாள் பீமனுடன் சமாதானம் செய்வது போல் நடித்துக்கொண்டான். பீமா! நீ எவ்வளவு பலசாலி என்பதை நேற்றே தெரிந்து கொண்டேன். வா! இன்றும் விளையாடப் போகலாம், என்று அழைத்தான். பீமனும் கிளம்பிவிட்டான். அவனுக்குத் தெரியும்! துரியோதனன் ஏதோ சதித்திட்டத்துடன் தான் அழைக்கிறான் என்று! அன்றும் கங்கையில் தான் விளையாட்டு. தண்ணீர் அலைகளை வாரி இறைத்துக்கொண்டு மின்னலென போய்க் கொண்டிருந்தது. முதலில் துரியோதனன் கங்கையில் குதித்து நீராடினான். பீமா! நீ இந்த இடத்தில் குதி, என ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினான். பீமனின் கண்கள் ஆழ்ந்த பார்வை கொண்டவை. துரியோதனன் குதிக்க சொன்ன இடத்தில் ஏதோ நீட்டிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. மேற்பகுதியில் ஏதோ வண்டு போலவும் இருந்தது. ஆராய்ந்து பார்த்ததில் அத்தனையும் ஈட்டிகள் என்பதும், பீமன் குதித்ததும் அவை அவனை குத்திக்கிழிப்பது போலவும் நேராக நடப்பட்டிருந்தன. பீமன் சுதாரித்து விட்டான். எந்த இடம் வரை ஈட்டிகள் நடப்பட்டிருந்ததோ, அதைத் தாண்டி குதித்து, ஒன்றுமே தெரியாதவன் போல கரையேறி விட்டான். துரியோதனின் இந்த திட்டமும் வீணானது. துரியோதனன் துடிதுடித்தான். இவனுக்கு இதெல்லாம் சரி வராது. இந்தப்பயலைக் கொல்ல ஒரே வழி சாப்பாடு தான். இவனோ சாப்பாட்டு ராமன். சாப்பாட்டில் விஷம் கலந்து விட்டால், இஷ்டத்துக்கு அள்ளித்தின்று எமலோகம் போய்விடுவான் என திட்டமிட்டான். நினைத்தது போலவே நடத்தியும் காட்டினான். உணவில் விஷம் கலந்தது தெரியாமல், பீமன் அத்தனையையும் சாப்பிட்டான். அவனது கண்கள் சுழன்றன
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:19:06 PM
மகாபாரதம் பகுதி-19

பீமன் மயங்கி விட்டான். இனி அவன் இறப்பது உறுதி என முடிவு செய்த துரியோதனனுக்கு உள்ளத்தில் திடீரென சந்தேகம் ஏற்பட்டது. யாராவது இவனைப் பார்த்து காப்பாற்றிவிட்டால்.... சந்தேகம் பெரிய வியாதி. அது இருப்பவன் எதிலும் திடமான முடிவெடுக்க முடியாது. அந்த சந்தேகம் அவர்களையே அழித்து விடும். துரியோதனன் என்ற இந்த சந்தேகப்பேர்வழி என்ன செய்தான் தெரியுமா? மயக்கமடைந்த பீமனை கயிறால் கட்டி, மீண்டும் கங்கையில் தூக்கி வீசிவிட்டான். மயக்கமடைந்து விட்ட பீமன், தண்ணீரின் அடிக்கே போய் விட்டான். அவன் போன இடத்தின் அடிப்பாகம் மிகப்பெரிய துவாரமாக இருந்தது. அந்த துவாரத்தினுள் புகுந்து விட்ட அவனை அங்கிருந்த நாகங்கள் கடித்தன. அதனால் நிலைமை எதிர்மறையானது.  நாகங்கள் கக்கிய கடும் விஷம், ஏற்கனவே அவனது உடலில் இருந்த விஷத்தை முறிக்கவே, அவன் மயக்கம் தெளிந்தான். தண்ணீரின் அடியில் கிடப்பதைப் பார்த்து சுதாரித்துக் கொண்டான். தன்னைச் சுற்றிலும் கிடந்த நாகங்களைப் பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டான். நாகங்கள் அந்த பலசாலியைக் கண்டு நடுங்கின. சில நாகங்கள் ஓடிப்போய் தங்கள் தலைவனிடம் விஷயத்தைக் கூறின. நாகராஜன் விரைந்து வந்தான். வந்திருப்பது பீமன் என்பது அவனுக்குத் தெரியும். அவனது பெயர் வாசுகி. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது, மேருமலைக்கு மத்தாக இருந்தவன் இந்த வாசுகி. அதற்குப் பரிசாக அமுதத்தை குடம் குடமாகப் பெற்றிருந்தான். அதை கங்கைக்குள் இருக்கும் தன் சாம்ராஜ்யத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.

கங்கையில் அப்படி என்ன விசேஷம் என்பவர்கள் இந்த இடத்தை உற்றுக்கவனிக்க வேண்டும். அமுதம் ஆயுளை அதிகரிக்கக் கூடியது. சாகாவரம் தருவது. தேவர்கள் சாகாமல் இருப்பார்கள். மனிதர்களுக்கு அது கிடைத்தால், தீர்க்காயுளுடன் வாழ்வதுடன், அதன்பின் பிறப்பற்ற நிலையடைந்து பரமானந்தம் பெறுவார்கள். அதனால் தான் கங்கையில் ஒரு தடவையாவது நீராடி விட வேண்டும் என துடிக்கிறார்கள் பக்தர்கள். வாசுகி, பீமனின் பலம் பற்றி அறிந்தவன். அவன் நினைத்தால் தங்கள் இனத்தையே நசுக்கி விடுவான் என அவனுக்குத் தெரியும். அவன் தன் லோகத்துக்கு அவனை அழைத்துச் சென்று குடம் குடமாக அமுதம் கொடுத்து உபசரித்தான். இதைக் குடித்ததால், பீமனின் மேனி ஒளிபெற்றது. அவன் தீர்க்காயுளுடன் வாழும் வரத்தை பெற்று விட்டான். அழிக்க நினைத்து ஆற்றுக்குள் வீசப்பட்டவன் இங்கே ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். வாசுகி அவனை எட்டு நாட்கள் தன்னுடன் தங்க வைத்தான். சாப்பிடப் போன பிள்ளை திரும்பவில்லை என்றதும், குந்தி கவலையடைந்தாள். நாட்கள் அதிகமாகவே அழ ஆரம்பித்து விட்டாள். விதுரர் அவளைத் தேற்றினார். அண்ணன் தர்மரும், மற்ற தம்பிகளும் காடு, ஆற்றங்கரை என எங்கெல்லாமோ சுற்றிப்பார்த்து ஆளைக் காணாமல் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தனர். அம்மாவோ பீமன் இல்லாமல் யாரும் வீட்டுப்பக்கம் வரக்கூடாது என விரட்டி விட்டாள். துரியோதனனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம், நாள் எட்டைக் கடந்து விட்டதால். எதுவுமே தெரியாதவன் போல, அவனும் நல்லவன் போல், பீமனைத் தேட ஆரம்பித்தான். அவன் முகத்தை வைத்தே, அவன் தான் பீமனுக்கு தீங்கிழைத்து விட்டான் என்பதை பாண்டவர்கள் புரிந்து கொண்டனர். இருந்தாலும் கேட்க முடியாத நிலை.

இந்நிலையில் குந்தி பிள்ளையை காணாமல் சாப்பிட மறுத்து விட்டாள். பீஷ்மருக்கு தெரிந்து விட்டது. பீமன் பத்திரமாக நாகலோகத்தில் இருக்கிறான் என்று. ஏனெனில், அவர் முக்காலமும் அறிந்த ஞானி. இருந்தாலும், இதை வெளியிடவில்லை. பிற்காலத்தில் அவன் நிகழ்த்தப்போகும் அற்புதங்களுக்கு அவனுக்கு நாகலோகத்தில் கிடைக்கும் அமிர்தமே பலம் என்பதை அவர் அறியாதவரா என்ன! குந்தி! கவலைப்படாதே, பீமன் வந்து விடுவான், என தேற்றினார். இக்காலத்தில் கோயில்களில் சாமியாடி குறி சொல்கிறார்கள் இல்லையா? அந்த வழக்கம் அப்போதும் இருந்தது. அரண்மனையில் உள்ள சில சாமியாடுபவர்கள், ஆட்டம் போட்டு, பீமன் வருவான் என்று குறி சொன்னார்கள். இருந்தாலும், பெற்ற மனம் பிள்ளையைக் காணாமல் தவித்தது. அது சரி...கங்கையில் மூழ்கியவனுக்கு மூச்சு அடைக்காதா! அவன் எப்படி தண்ணீருக்குள் அப்படி கிடக்க முடிந்தது, என்றும் நீங்கள் கேட்பீர்கள். பீமன் யாருடைய மகன்? வாயு பகவானின் மகனல்லவா! பிறகென்ன கவலை! காற்றின் மைந்தனை அந்த காற்றே கொல்லுமா? அதனால் அவன் அனாயசமாகத் தண்ணீரில் கிடந்தான். எட்டுநாள் கழிந்ததும், பல வலிமை மிக்க நாகங்களை அழைத்த வாசுகி, பீமனை மேற்பரப்பு வரை சுமந்து சென்று கொண்டுவிட உத்தரவிட்டான். பீமன் அவனிடம் விடைபெற்று, மேலே வந்து சேர்ந்தான். அம்மா தன்னைத் தேடி அழுவாள் என்று அவனுக்குத் தெரியும். ஒரு தாய்க்கு தான் பெற்ற எல்லா குழந்தைகளையுமே பிடிக்கும். அதிலும், அதிகமாகச் சமர்த்தாக சாப்பிடும் பிள்ளைகளை ரொம்பவே பிடிக்கும். சில பிள்ளைகள் எனக்கு அவியல் வேண்டாம், எனக்கு சாம்பார் பிடிக்காது, எனக்கு தேங்காய் சட்னி பிடிக்காது, எனக்கு சப்பாத்தி ஒத்துவராது என அடம்பிடிப்பார்கள். இவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைப்பதற்குள் அம்மாவுக்கு போதும் போதுமென்றாகி விடும். நம்ம பீமன் இருக்கிறானே! அவன் அப்படிப்பட்ட ரகம் கிடையாது. என்ன கொடுத்தாலும் சரி... ஐம்பது, நூறு என வயிற்றுக்குள் அடுக்கி விடுவான். அப்படிப்பட்ட சமர்த்து பிள்ளையைத் தாய் மனம் தேடாதா என்ன! அவன் வேகமாக வந்தான். அம்மாவின் பாதத்தில் விழுந்தான். மற்ற பிள்ளைகள் என்றால் என்ன சொல்வார்கள்? அம்மா! அவன் என்னை ஆற்றுக்குள் பிடித்து தள்ளி விட்டான். அவன் பள்ளிக்கூடத்தில் என்னை கிள்ளி விட்டான், என்று. பீமன் தன் தம்பி அண்ணன் துரியோதனனைக் காட்டிக் கொடுக்கவில்லை. அங்கு போனேன், இங்கு போனேன் என சமாளித்து விட்டான். எப்படியோ, மகன் வந்தானே...என்று குந்தியும் மகிழ்ந்து போனாள்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:20:31 PM
மகாபாரதம் பகுதி-20

துரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி. இவனுக்கு விஷம் கொடுத்தோம். சாகாவிட்டாலும் பரவாயில்லை. விஷம் தாக்கி கருப்பாகவாவது மாறியிருக்கிறானா? சூரியனைப் போல் செக்கச்செவேலென மின்னுகிறானே! இவன் எப்படி பிழைத்திருக்க முடியும்? என்ன நடந்தது... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி சகோதரர்களுக்கு இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்க, தன் பேரக் குழந்தைகளுக்கு வித்தை கற்றுக் கொடுக்க ஆசாரியர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார் தாத்தா பீஷ்மர். கிருபாச்சாரியார் என்பவர் அரண்மனையில் ஏற்கனவே குருவாக இருந்தார். இவர் சாதாரணப்பட்டவர் அல்ல. தவத்தில் சிறந்த கவுதம முனிவரின் பேரன். இவரது தந்தையின் பெயர் சரத்துவான். சிறந்த வில்வித்தையாளர். இவரிடம் 105 பேரும் வில்வித்தையை சரளமாகக் கற்றனர். இன்னும் மற்போர், போரில் வியூகம் அமைக்கும் முறை என பல கலைகளையும் கற்றுத்தந்தார் கிருபர். கிருபாச்சாரியாருக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் கிருபி. இவரைத் துரோணர் என்னும் பெரும் வில்வித்தையாளருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். துரோணர் ஆங்கிரஸ முனிவரின் குலத்தில் தோன்றியவர். ஆங்கிரஸரின் வம்சாவளியில் வந்த பரத்துவாஜ முனிவர், ஒருமுறை கங்கா தீரத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, தேவகன்னிகையான மேனகையைக் கண்டார். அவளைப் பார்த்தவுடனேயே தவம் மறந்து உடலில் கிளர்ச்சி ஏற்பட்டது. தன் மோகத்தை ஒரு கலசத்தில் செலுத்தினார். அந்த கலசத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே துரோணர். ரிஷிகளுக்கு அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சக்தி இருந்திருக்கிறது.

துரோணரின் இளமைக்கால வரலாறை இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கிவேச முனிவர் என்பவரிடம் பரத்வாஜர் தன் இளம் மகன் துரோணனை பாடம் கற்க அனுப்பி வைத்தார். அங்கிவேசரின் குருகுலத்தில் தங்கிப் படித்த போது துரோணனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் பாஞ்சால தேசத்து அரசன் பிருஷதனின் மகன். பெயர் யாகசேனன். இவனை துருபதன் என்று பட்டப்பெயரிட்டு அழைப்பார்கள். அப்பெயரே அவனுக்கு கடைசி வரை நிலைத்தது. நட்பென்றால் அப்படி ஒரு நட்பு. நகமும் சதையும் போல் பிரியாமல் இருவரும் சுற்றித்திரிவார்கள் இந்த சிறுவர்கள். குருகுல படிப்பு முடிந்து அவரவர் இடத்திற்கு திரும்பும்நாளில் நண்பர்கள் இருவரும் மிகவும் வருத்தப்பட்டனர். துருபதன் தன் நண்பன் துரோணனை அணைத்தபடி, துரோணா, நீ எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்க பாஞ்சால தேசத்திற்கு (இன்றைய பஞ்சாப்)வரலாம். என் தந்தையின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு நான் அரசன் ஆவேன். அப்போது, என் நாட்டில் பாதியை உனக்குத்தந்து உன்னையும் அரசனாக்குவேன். இது சத்தியம், என்றான். நண்பனின் உபசார வார்த்தைகள் கேட்டு துரோணன் நெகிழந்து போனான். இப்படியாக காலம் கழிந்து விட்டது. கிருபி துரோணருக்கு மனைவியானாள். அவர்களுக்கு சிவபெருமானின் பேரருளால் அஸ்வாத்தாமன் என்ற மகன் பிறந்தான். பிறந்தது கடவுளின் அருளால் என்றாலும் கூட, பிராமணரான துரோணரால் மகனை வளர்க்கும் அளவுக்கு சம்பாதிக்க இயலவில்லை. தவம், யாகம், பூஜை என சுற்றிக் கொண்டிருந்த அவர், பாலுக்காக ஏங்கியழும் மகனைக் கண்டு வருத்தப்படுவார். கிருபி அதை விட நூறு மடங்கு வருந்துவாள். ஐந்து வயது வரை அந்தக் குழந்தை எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை.

ஒருநாள் நண்பன் துருபதனின் ஞாபகம் துரோணருக்கு வந்தது. இளம்வயதில் அவன் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வரவே, பாஞ்சால தேசம் நோக்கி புறப்பட்டார் அவர். இப்போது துருபதன் பாஞ்சால தேசத்தின் மன்னனாக இருந்தான். நண்பனிடம் நாடு கேட்பதற்காக அவர் போகவில்லை. ஒரு பசுவை வாங்கி வந்தால், குழந்தை பசித்து அழும்போது பாலாவது கொடுக்கலாமே என்ற எண்ணத்துடன் புறப்பட்டார். அரண்மனைக்குச் சென்று துருபதனைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு பார்க்க வருவதால், நண்பன் ஓடோடி வந்து அணைத்துக் கொள்வான் என நம்பிச் சென்றார் துரோணர். அரண்மனைக்குள் சென்றதும், துருபதன் அவரைப் பார்த்தான். அவன் கேட்ட முதல் கேள்வியே துரோணரின் நெஞ்சில் அம்பாய்ப் பாய்ந்தது.  அந்தக் கேள்வி என்ன தெரியுமா? நீ யார்? என்பது தான். நீண்ட நாளாகி விட்டதால் அவன் தன்னை மறந்திருப்பானோ என்று, நண்பா! நான் துரோணன்... என்று இழுக்கவே, எந்த துரோணன்? என்று துருபதன் பதில் கேள்வி கேட்கவும் நொந்து நைந்து விட்டார் துரோணர். அப்போது ஜாதி துவேஷத்தைக் கிளப்பினான் துருபதன். நீ ஜாதியில் பிராமணன் என்பது உன்னைப் பார்த்ததுமே தெரிகிறது. நான் க்ஷத்திரியன். உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? என்றான். இதன் மூலம் தான் ஒரு மன்னன் என்றும், துரோணர் ஏழை அந்தணன் என்றும் குத்திக்காட்டினான். அடுத்து அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பரிகாசச் சொல்லாய் அமைந்தது. கேவலம் பசி தீர்க்க இவனிடம் உதவி கேட்க வரப்போய் நிலைமை இப்படியாகி விட்டதே! துரோணரின் உடல் கூனிக்குறுகியது. அதுவே ஆவேசமாக பொங்கி எழ, அட நம்பிக்கைத் துரோகியே! நீ எனக்கு இளம்வயதில் நாடு தருவதாகச் சொன்னாய். நான் ஒரு பசுவை யாசகமாக கேட்க வந்தேன். என் ஏழ்மையை பரிகசித்தாய். இப்போது சொல்கிறேன் கேள். நான் உன் நாட்டில் பாதியை நீ சொன்னபடி நிச்சயமாக அடைவேன். உன்னுடன் போர் செய்வேன். உன்னைத் தோற்கடித்து தேர்க்காலில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் செல்வேன். இது சத்தியம், என்று சபதம் செய்தார். அப்போது பல நாட்டு அரசர்கள் அவையில் இருந்தனர். துரோணரின் கர்ஜனை அவர்களை அசர வைத்தது. துருபதனின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:22:10 PM
மகாபாரதம் பகுதி-21

நண்பனால் வஞ்சிக்கப்பட்ட இந்த துரோணர் தான் பாண்டவ, கவுரவர்களுக்கு குருவாக பொறுப்பேற்கிறார். அவரை கிருபாச்சாரியார் சந்தித்தார். பீஷ்மர் அவரை வணங்கினார். சுவாமி! சிநேகிதன் ஒருவன் உங்களுக்கு செய்த துரோகம் எங்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இதோ! இவர்கள் எல்லாருமே என் பேரன்கள். இவர்களை தாங்கள் வில்வித்தையிலும், சகல போர்க்கலைகளிலும் வல்லவர்களாக்கி, இவர்களின் உதவியுடன் தங்கள் சபதத்தையும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள், என்றார். துரோணர் மகிழ்ந்தார். அவரை மேலும் மகிழ்விக்கும் வகையில் பீஷ்மர் அவரிடம், துரோணர் பெருமானே! தாங்கள் துருபதனால் நாடு கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டீர்கள். ஆனால், நாங்கள் உங்களை எங்கள் தேசத்து அரசனாகவே பாவிக்கிறோம். ஆம்...இனி நீங்களும் எங்கள் தேசத்து அரசர் தான். இதோ! வெண் கொற்றக்குடையையும், அரசருக்கு கிரீடம், செங்கோல் முதலான சின்னங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்,என்றார். பீஷ்மரின் அன்பில் துரோணர் நெகிழ்ந்து விட்டார். தன் குழந்தையின் பசிதீர்க்க ஒரு குவளை பாலுக்கு அலைந்த அவர், இன்று ராஜாவாகி விட்டார். மனிதர்களின் நிலைமையே இப்படித்தான். நேற்று வரை கஞ்சிக்கும். கூழுக்கும் அலைபவன் இன்று காரில் பவனி வருவான். மனிதனின் நிலையை காலம் மாற்றி விடுகிறது. அவனது திறமைக்கும், கல்விக்கும் உரிய புகழ் என்றேனும் ஒருநாள் கிடைத்தே தீருகிறது, அவனோ அவனது முன்னோரோ புண்ணியங்கள் செய்திருக்கும் பட்சத்தில்!

பொறுப்பேற்ற நாளிலேயே பாடங்களை ஆரம்பித்து விட்டார் துரோணர். ஒரு செயலைச் செய்வதாகப் பொறுப்பேற்ற பிறகு, காலநேரம் பார்ப்பது, தயங்குவது இவையெல்லாம் இருக்கவே கூடாது என்பது இந்த இடத்தில் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடம். பாண்டவ, கவுரவர்கள் ஆர்வத்துடன் துரோணரிடம் போர் வித்தைகளைக் கற்றனர். எல்லாருமே வித்தைகளைத் தெளிவாகப் படித்தனர் என்றாலும், ஒரு வகுப்பில் முதல் தர தேர்ச்சி பெறும் மாணவனைப் போல, அர்ஜூனன் எல்லாரையும் விட ஆயுத வித்தைகளில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். குறிப்பாக, வில் வித்தையில் அவனே ஜெயக்கொடி நாட்டினான். அவனை விஜயன் என செல்லமாக அழைப்பார் துரோணர். ஒருநாள் கங்கையில் நீராடி கொண்டிருந்தார் துரோணர். அப்போது, அவரது கால்களைக் கவ்விக் கொண்டது ஒரு முதலை. ரத்தம் பெருக்கெடுத்து தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்தது. துரோணர் அலற ஆரம்பித்தார். கரையில் பாண்டவ, கவுரவர்கள் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். குருவின் அலறல் சத்தம் கேட்டதும், விஷயத்தைப் புரிந்துகொண்டு, என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். தண்ணீருக்குள் முதலை எந்த இடத்தில் கிடக்கிறது என தெரியாமல், வில், அம்பை எடுத்து குறி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அர்ஜூனன் தன் வில்லை வளைத்தான். முதலை இருக்குமிடத்தை குறிப்பால் அறிந்தான். அவ்விடத்தில் அம்பைச் செலுத்தினான். முதலை துடிதுடித்து தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்து விட்டது. அம்புகளை சரமாரியாகப் பாய்ச்சி அதைக் கொன்று விட்டான். துரோணர் பிழைத்தார். யானையாகப் பிறந்த நாராயண பக்தனான கஜேந்திரன், முதலையிடம் சிக்கித்தவித்த போது, அந்த ஆதிமூலமே வந்து காப்பாற்றினான். அதுபோல், நீயும் என் உயிரைக் காத்தாய், என அவனை உச்சிமோந்தார். அத்துடன் தன்னிடம் இருந்த அரியவகை அஸ்திரம் ஒன்றை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

ஒருவழியாக ஆயுதப்பயிற்சி நிறைவடைந்தது. துரோணர் தன் சீடர்களிடம், பாண்டவ, கவுரவர்களே! இத்துடன் பயிற்சி முடிந்து விட்டது. இனி பரிட்சை நடத்தப் போகிறேன். அதாவது, பொதுமக்கள் முன்னிலையில் நீங்கள் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட இது ஒரு போட்டி போலவே அமையும். உங்களுக்குள்ளேயே நீங்கள் மோதிக் கொள்ள வேண்டும். இந்தப் போட்டியை ஆரோக்கியமாக நடத்த வேண்டும். ஒருவர் இன்னொருவரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. போட்டி விதிகளை எள்ளளவும் மீறக்கூடாது, என்றார். சீடர்கள் ஆர்வத்துடன் தலையசைத்தனர். இதையடுத்து பீஷ்மர் தன் பேரன்களின் வித்தையைப் பார்க்க ஆர்வத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். யுத்த அரங்கம் அலங்கரிக்கப்பட்டது. மக்கள் அமர்ந்து பார்க்க மேடைகள் அமைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் இரண்டு கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன் ஏக்கப்பெருமூச்சு விட்டான். ஜாதியால் தாழ்ந்து பிறந்தோமே! இதோ! இந்த அந்தணர் தன் அந்தண சீடர்களுக்கு ஏராளமான ஆயுதக்கலைகளை அளிக்கிறாரே! காட்டில் வசிக்கும் வேடர் குலத்தில் பிறந்த நமக்கு இப்பயிற்சிகள் கிடைக்க வில்லையே! இவர் இந்த இளைஞர் களுக்கு கற்றுத்தந்த கலையை தினமும் கண்கொட்டாமல் கவனித்து, நாமும் ஓரளவு உயரிய நிலையில் தான் இருக்கிறோம். இருப்பினும், இதை யார் ஒத்துக் கொள்வார்கள்? உன் குரு யார் எனக் கேட்பார்களே! ஆயினும், முயற்சி நல்வினை தரும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அந்த மகானை அணுகுவோம், என்றவனாய் துரோணரின் முன்னால் வந்து நின்றான் அந்த இளையவேடன். ஐயா! என் பெயர் ஏகலைவன். தாங்கள் இந்தக்காட்டிற்கு வந்து, தங்கள் சீடர்களுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுப்பதை கவனித்தேன். நீங்கள் கற்றுக் கொடுத்தவற்றில் வில்வித்தையை நான் முழுமையாக கவனித்தேன். இதோ பாருங்கள்! என் வித்தையைப் பார்த்தபிறகு, முறையாக இவற்றை எனக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் சீடர்களிலேயே உயர்ந்தவனாக நான் இருப்பேன், என்றவனாய் சில வித்தைகளையும் செய்து காண்பித்தான். அர்ஜூனனின் வித்தையை விட அது மிகவும் நேர்த்தியாக இருந்தது. துரோணர் இந்த இளைஞனுக்கு வித்தை கற்றுத்தர இயலாத நிலையில் இருந்தார். அதற்கு காரணம் ஜாதியல்ல! அர்ஜூனனிடம் அவர் ஒரு வாக்கு கொடுத்திருந்தார். அர்ஜூனா! உன்னிலும் மேம்பட்ட ஒரு மாணவனை நான் பார்த்ததில்லை. உன்னை விட ஒரு உயர்வான மாணவனை நான் இனி உருவாக்கவும் மாட்டேன், என்று சொல்லியிருந்தார். என்ன செய்வதென யோசித்தார்.
 
 
     

Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:23:44 PM
மகாபாரதம் பகுதி-22

 
ஏகலைவா! நீ என் மாணவனாக இருக்க அனுமதிக்கிறேன். நான் நேரடியாக உனக்கு பயிற்சி கொடுக்க அவகாசமில்லை. எனினும், நீ என் மாணவன் தான். என்னை மானசீக குருவாகப் பாவித்து பயிற்சி எடுத்து வா! அதன்பின் உனக்கு தேர்வு வைக்கிறேன், என்றார். ஏகலைவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவன் காட்டுக்குள் சென்றான். துரோணரைப் போலவே ஒரு பொம்மை செய்தான். அந்தப் பொம்மையை தன் குருவாகவே கருதி, பயிற்சி எடுத்தான். அவனது வித்தை அர்ஜூனனை விட மேம்பட்டதாக இருந்தது. இதையடுத்து அவன் துரோணரிடம் வந்தான். தேர்வு வைக்கச் சொன்னான். துரோணர் அவனிடம், என் அன்பு மாணவனே! உனக்கு தேர்வு வைக்கும் முன்பு, நீ என் முன்னால் எடுத்த பயிற்சிக்கான குருதட்சணையை தந்து விடு, என்றார். என்ன வேண்டும் சுவாமி? என அவன் கேட்க, ஏகலைவா! உன்னிடம் ஏராளமான பொன் பொருள் கேட்பேன் எண்ணி விடாதே. உன்னிடம் இருக்கும் ஒன்றைத் தான் கேட்கப் போகிறேன், என்ற துரோணரிடம், குருவே! தாங்கள் கேட்பது என்னிடம் இருக்குமானால், அதை மறுக்காமல் தருகிறேன், இது சத்தியம், என்றான். துரோணர் சிரித்தார். ஏகலைவா! உன் வலதுகை பெருவிரலை என்னிடம் கொடு, என்றார் துரோணர். ஏகலைவன் தயக்கமே கொள்ளவில்லை. அவர் கண் முன்னாலேயே தன் கட்டைவிரலை வெட்டிக் கொடுத்து விட்டான். இதன்பின் தேர்வு ஆரம்பித்தது. மிக சிறப்பாக அம்பு வீசினாலும் கூட, கட்டைவிரல் இல்லாததால், அர்ஜூனனனைப் போல் அவனால் முழு சக்தியுடன் அம்பு வீச இயலவில்லை.

துரோணர் மனதிருப்தி அடைந்தார். அவரது சத்தியமும் பலித்தது. ஒரு மாணவனை நிராகரித்தோம் என்ற அவப்பெயரும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வின் மூலம் பாரதம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. ஒரு மாணவனிடம் சிரத்தை இருந்தால், அவன் ஆசிரியர் இல்லாமலே பாடங்களைப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். நம் மாணவர்களும், பள்ளிக்கு ஆசிரியர் வரவில்லைல, பாடம் நடத்தவில்லை, புரியவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. சுயமுயற்சியே வாழ்க்கையை பலமாக்கும் என்பதை இந்நிகழ்ச்சி மூலம் உணர வேண்டும். மேலும், ஒருவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற இன்னும் சிலர் பாதிக்கப்படுவதனால், அந்த பாதிப்பை பெரிதெனக் கொள்ளாமல், சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதையும் இந்நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. அதே நேரம் பாவம் செய்தவர் அதற்குரிய பலனைப் பெற்றே தீர வேண்டும். இன்னும் சில நாட்களில் துரோணர் இதற்குரிய பலனைப் பெறப் போகிறார். என்ன பலன் அது? படித்துக் கொண்டே செல்வோமே! குறிப்பிட்ட நாளில், கவுரவர்களும், பாண்டவர்களும் யுத்த அரங்கத்தில் கூடினர். துரோணர், கிருபர், பீஷ்மர், திருதராஷ்டிரன், அவனது தம்பி விதுரன் என ஏகப்பட்ட முக்கியஸ்தர்கள் அங்கே குவிந்தனர். போட்டி துவங்கியது. எல்லாரும் தங்கள் வித்தையை சிறப்பாகக் காட்டினர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் நடந்த போட்டியை, பிரமாதம், பிரமாதம் என மக்கள் புகழ்ந்தனர். சிலர் தேரில் ஏறி மின்னல் வேகத்தில் செலுத்தி வீரத்தை வெளிப்படுத்தினர். எல்லாருக்குமான வித்தைகள் முடிந்த வேளையில் துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதாயுதப்போர் நடந்தது. இருவரும் கடுமையாக மோதினர். பீமனை துரியோதனனுக்கு பிடிக்காது என்பதால், துரியோதனன் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நிஜமாகவே தாக்க ஆரம்பித்தான். பீமன் என்ன சாதாரணமானவனா! விடாக்கண்டனாயிற்றே! அவனும் துரியோதனனை உதைக்க ஆரம்பித்தான். அந்த இருவரும் பத்தாயிரம் யானை பலம் கொண்டவர்கள் போல் தாக்கிக் கொண்டனர் என்று சொல்கிறது வில்லிப்புத்தூரார் பாரதம்.

சற்று நேரத்தில் இருவரும் போர்விதிகளை மறந்து விட்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். உடனே, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அவர்களிடையே புகுந்தான். வீரர்களே! இது போர் அல்ல! போட்டி! போதும், போதும், உங்கள் விளையாட்டு. இருவரும் வெளியேறுங்கள், என்றான். ஒருவரை ஒருவர் முறைத்தபடி இரண்ட மாவீரர்களும் களத்திற்கு வெளியே சென்றனர். பின்னர் அர்ஜூனன் தன் வித்தையைக் காட்ட ஆரம்பித்த போது அரங்கமே அதிரும் வகையில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் மக்கள். அதிபயங்கர அஸ்திரங்களை மேலே எய்து, அவற்றின் உக்கிரத்தை மற்ற அஸ்திரங்களை எய்வதன் மூலம் தணித்தான். இப்படி கூட்டத்தினர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஒரு மாவீரன் தன் ஆசனத்தில் இருந்து எழுந்தான். துரோணாச்சாரியார் முன்னால் சென்றான். அவரது பாதங்களில் பணிந்தான். பெருமானே! நானும், இந்த யுத்த அரங்கத்தில் என் வில் வித்தையைக் காட்ட விரும்புகிறேன். அனுமதி கொடுங்கள், என்றான். துரோணர் தலையசைத்தார். என்ன அதிசயம்! அந்த வீரன் வில்வித்தையில் அர்ஜூனனை மிஞ்சி விட்டான். அர்ஜூனனின் வித்தைகள் இவன் வித்தைக்கு முன்னால் தூசு துரும்பாக இருந்தது. ஏகலைவனை அடக்கி அனுப்பி விட்டோம். அந்தப் பாவம் என்னை இந்த புதிய வீரனின் வடிவத்தில் தாக்குகிறதோ....? துரோணர் அதிசயித்து போய்விட்டார். அர்ஜூனனும் தனது நிலைக்காக வெட்கப்பட்டான். இவ்வளவு அரிய கலைகளை இவன் எப்படி படித்தான்? நமக்கு இதில் ஏதும் தெரியாதே? அவன் தலை குனிந்து நின்றான். கூடியிருந்த மக்களெல்லாம், அர்ஜூனனை விட புதிய வீரனே சிறந்தவன் என கொண்டாடினர். இந்த புதிய வீரன் துரியோதனனின் உயிர் நண்பன். பரிதாபத்திற்குரிய பிறவி. ஒரு தாய் செய்த தவறின் விளைவாக உருவான பிள்ளை. அரண்மனையில் வளர வேண்டிய இவன், ஒரு தேரோட்டியின் வீட்டில் வளர்கிறான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:26:34 PM
மகாபாரதம் பகுதி-23

கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் குணம் கொண்டவன். பிறக்கும் போதே காதில் குண்டலமும், மார்பில் கவசமும் கொண்டவன். சந்தர்ப்பவசத்தால் துரியோதனனை நட்பாக்கி கொண்டவன். பெயர் கர்ணன். அந்த மாவீரனை அனைவரும் கொண்டாடியதும், அவன் அர்ஜூனனிடம், ஏ அர்ஜூனா! நீ மாபெரும் வீரன் என அனைவரும் கொண்டாடினர். இப்போது என்னைக் கொண்டாடுகின்றனர். இப்போது நடந்தது தனிப்பட்ட வித்தைப் பயிற்சி தான்! இப்போது, நீயும் நானும் நேருக்கு நேர் நின்று போர் செய்வோம். நம்மில் யார் வெற்றி பெறுகிறார் என்பதைக் கொண்டு போட்டியின் முடிவு அமையட்டும், என்றான். பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த துரியோதனனுக்கு கர்ணனின் இந்தப் பேச்சு அமுதமாய் இனித்தது. அவன் கர்ணனை வாழ்த்தினான். நண்பா! உன்னை வெல்ல வல்லவர் யார்? என்று அன்பு ததும்ப கூறி மார்போடு அணைத்துக் கொண்டான். அர்ஜூனனுக்கும் கோபம்! அடேய் கர்ணா! வெறும் வார்த்தைகள் போட்டியின் முடிவைத் தீர்மானிக்காது. என் அந்தஸ்துக்கு நீ எவ்வகையிலும் தகுதியில்லாதவன், என்றான். கர்ணன் விடவில்லை.அடக்கோழையே! முதலில் போருக்கு அறைகூவல் விடுத்தவனே நான் தான். நீ மட்டும் அதற்கு தயார் என்றால் தோற்கப்போகும் உன் தலையை வெட்டி, ரத்தத்தால் இந்த யுத்த களத்தில் வழிபாடு நடத்துவேன், என்றான். இந்நேரத்தில் கிருபாச்சாரியார் குறுக்கிட்டார்.

கர்ணா! நீ சாதாரண தேரோட்டியின் மகன். அரச குலத்தவன் அல்ல! அரசகுலத்தவர் தான் அரச குலத்தவரோடு வீரம் பேச தகுதியுள்ளவர்கள். நீ அர்ஜூனனிடம் பேசியது குற்றம், என்றார். உடனே துரியோதனன் கொதித்தெழுந்தான். ஆச்சாரியரே! தாங்கள் சொல்வதை ஏற்க மாட்டேன். படித்தவர்கள், பேரழகிகள், கொடையாளர்கள், வீரர்கள். மன்னர்கள், ரிஷிக்களுக்கு ஜாதியோ, மதமோ கிடையாது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் பேசுவது முறையல்ல. ஏனெனில், நீங்களே ஒரு நாணல் புல்லில் இருந்து பிறந்தவர் தான். நாராயணர் நரசிம்மராக பிறந்தது ஒரு தூணில் இருந்து. சிவபெருமான் மூங்கிலில் இருந்து அவதரித்தார். அகத்தியமாமுனியும், துரோணரும் பிறந்தது கும்பத்தில் இருந்து! எனவே தாங்கள் பேசுவது ஏற்புடையதல்ல. சரி...ஒருவேளை அரசகுலத்தில் பிறந்தவன் தான் அர்ஜூனனனுடன் சண்டையிட வேண்டுமானால், இப்போதே இந்தக் கணமே கர்ணனும் அரசன் தான். இதோ! என் தேசத்துக்கு உட்பட்ட அங்கதேசம் இனி கர்ணனுக்குரியது. அவனே அங்கநாட்டின் மன்னன். அவனுக்கு தன் கிரீடத்தையே எடுத்து சூட்டினான். தன் சிம்மாசனத்தில் அவனை அமர வைத்து, அவன் அருகிலேயே சரிசமமாக அமர்ந்து கொண்டான். இப்படி நட்புக்கு இலக்கணமாக விளங்கிய துரியோதனனை நன்றிப் பெருக்குடன் ஆனந்தக்கண்ணீர் விழிநுனியில் தொக்கி நிற்க பார்த்தான் கர்ணன். அத்துடன் யுத்த அரங்க போட்டி வேளை முடியவே பிரச்னையும் முடிந்து விட்டது. மறுநாள் துரோணர் தன் சீடர்கள் எல்லோரையும் அழைத்தார்.

என் அன்பு மாணவர்களே! நீங்கள் நேற்று போர் அரங்கத்தில் காட்டிய வித்தைகளை நினைத்து பெருமிதமடைகிறேன். இப்போது நீங்கள் எனக்கு குருதட்சணை தர வேண்டும். என்னை பாஞ்சால தேசத்து மன்னன் துருபதன் அவமானப்படுத்தினான். அவனை நீங்கள் கைது செய்ய வேண்டும். அவன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது. அவனைக் கொல்லாமல் உயிரோடு தேர்க்காலில் இட்டுக்கட்டி இழுத்து வாருங்கள். இதைச் செய்வீர்களா? என்றார். அனைவரும் ஆர்வமுடன் செய்கிறோம் குருவே என்றனர். சற்று கூட தாமதிக்காமல், பாண்டவ, கவுரவ சேனை புழுதிப்படலத்தைக் கிளப்பிக்கொண்டு கிளம்பியது. பாஞ்சாலதேசம் முற்றுகையிடப்பட்டது. துருபதன் இதுகண்டு கலங்கவில்லை. அவனும் மாபெரும் வீரன் தான். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து திடீர் தாக்குதல் நடத்தினாலும் கூட அஞ்சாநெஞ்சம் கொண்ட அந்த மாவீரன், பாண்டவ கவுரவப் படையைச் சந்திக்க, தனது சேனையை குறுகிய காலத்தில் திரட்டிக்கொண்டு எதிர்த்து போரிட வந்தான். இந்த இடத்தில் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடத்தைக் கவனிக்க வேண்டும். மனித வாழ்க்கை என்பதே துன்பம் நிறைந்தது தான். எதிர்பார்த்த துன்பத்தை நாம் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். ஆனால், எதிர்பாராமல் வரும் துன்பங்களை நம்மால் சகிக்க முடிவதில்லை. நிலை குலைந்து போய்விடுவோம். இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் தலைவர் திடீரென இறந்து விட்டார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரது வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தது அந்தக் குடும்பம். அவரது மறைவால், அவர்கள் உலகமே இருண்டு விட்டது போன்ற நிலையை அடைந்து விடுகின்றனர். பின்விளைவுகளை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட கொடும் துன்பம் தாக்கும் நேரத்தில் கூட, தோல்வியோ, வெற்றியோ...எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் போராட பழக வேண்டும் என்பதையே துருபதனின் எதிர்போராட்டம் எடுத்துச் சொல்கிறது. துருபதன் தன்னை தாக்க வந்தவர்களுடன் கடுமையாகப் போராடினான். அவனது தாக்குலைத் தாக்கு பிடிக்க முடியாமல் துரியோதனும், அவனது சகோதரர்கள் 99பேரும் திணறினர். துரியோதனனின் படைகள் பின்வாங்கின. ஒரு கட்டத்தில் உயிருக்குப் பயந்து அவர்கள் அஸ்தினாபுரத்துக்கே ஓடி விட்டார்கள். துருபதனின் அம்புமழையை ஒரே ஒருவன் தான் தாக்குப் பிடித்தான். அந்தமாவீரனுடன் ஆனந்தமாக அனுபவித்து போர் செய்தான் துருபதன். ஆனால், எதிர்பாராதவிதமாக அர்ஜூனன் விட்ட அம்பு துருபதன் மீது பாய்ந்தது. அவன் சாய்ந்து விழுந்தான். அவனைக் கைது செய்த அர்ஜூனன், அவனைத் தேர்க்காலில் சேர்த்துக் கட்டினான். தேரை அஸ்தினாபுரத்துக்கு விரட்டினான். துரோணாச்சாரியார் தன் சிஷ்யப்பிள்ளைகள் பாய்ந்தோடி வருவதைப் பார்த்தார். தேர்க்காலில் துருபதன் அவமானம் குன்ற கிடந்தான். தேர்ச்சக்கரங்கள் சுற்றியதில் அவன் களைத்துப் போயிருந்தான். துரோணர் அவனை நோக்கி ஏளனமாகச் சிரித்தார். ஏ துருபதா! நம்பிக்கை துரோகியே! நான் நினைத்தால் இப்போதே உன்னை கொன்று ஒழிக்க முடியும். என் பிள்ளைக்கு பசிக்கிறது என உன்னிடம் வந்து நின்ற போது, ஒரு அந்தணன் என்றும் பாராமல் என்னை விரட்டியடித்தாயே! இப்போது உன் நிலையைப் பார்த்தாயா? உனக்கு நான் சமஎதிரியல்ல! என் சிஷ்யர்களிடமே நீ சிக்கிக் கொண்டது அவமானமாக இருக்கிறதல்லவா! உன்னை வென்றதன் மூலம் பாஞ்சால தேசம் இன்றுமுதல் எனக்குச் சொந்தம். இருந்தாலும், நீ சொன்னபடி பாதி ராஜ்யத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். உனக்கு உயிர்பிச்சையும் தருகிறேன். இவனை விடுதலை செய்துவிடுங்கள். உயிர்ப்பிச்சை கொடுக்கிறேன், என்றார்
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:28:04 PM
மகாபாரதம் பகுதி-24

துருபதனை அவிழ்த்து விட்டான் அர்ஜூனன். அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து பாஞ்சாலம் நோக்கி நடந்தான். செல்லும் வழியில் அவமானம் அவனைப் பிடுங்கித்தின்றது. இந்த துரோணனைக் கொன்றே தீர வேண்டும். அவன் உயிர்போகும் நாள் தான் எனக்கு இனிய நாள். ஐயோ! கடவுளே! என் வாழுநாளுக்குள் அது நிறைவேறாவிட்டால், என் வம்சாவழியினராவது அவனைக் கொல்ல வேண்டும். ஆனால், எனக்கு பிள்ளை வரம் இதுவரை இல்லையே. என்ன செய்வேன்? என புலம்பினான். அத்துடன் அர்ஜூனனின் வில்லாற்றல் பற்றிய நினைவும் எழுந்தது. மிகச்சிறந்த அந்த இளைஞன் என்னை கலக்கி எடுத்து விட்டானே! வீரர்கள் போற்றுதற்குரியவர்கள். இப்படிப்பட்ட வீரன் எனக்கு மருமகனாக இருந்தால், எப்படியிருக்கும்? ஆனால், எனக்கு பெண் குழந்தையும் இல்லையே! இப்படி பல சிந்தனைகளுடன் நடந்தவனின் கால்கள் திசைமாறின.

நாட்டுக்கு போக வேண்டிய அவன் கங்கை கரைக்குச் சென்றான். அங்கே ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்த ரிஷ்யசிருங்கர், உபயாஜர், யாஜர் ஆகிய முனிவர்களைச் சந்தித்தான். இவர்களில் யாஜரிடமும், உபயாஜரிடமும் தனக்கு குழந்தையில்லாத நிலையை எடுத்துச் சொன்னான். அவன் மீது அவர்கள் இரக்கம் கொண்டனர். மன்னா! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். யாகத்தை நாங்களே வெற்றிகரமாக நடத்தித் தருகிறோம். யாகத்தின் ஹவிஸை உன் மனைவியிடம் காடுப்போம். அதை அவள் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டு விட்டால், உனக்கு பிள்ளை பாக்கியம் உறுதி, என்றனர். துருபதன் அவர்களிடம் ஆசிபெற்று நாடு திரும்பினான். அந்த தர்மனை நான் விரட்டி விடுகிறேன், என சவால் விட்டான். திருதராஷ்டிரன் கடகடவென சிரித்தான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:30:16 PM
மகாபாரதம் பகுதி-25

தந்தையே! நீங்கள் சிரிப்பது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இது உங்களுக்கு சொந்தமான பூமி. இந்த பூமியை பாண்டவர்களின் வசம் ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. தர்மன் முன்பு போல இப்போது இல்லை. அவனது தம்பிமார்கள் அகங்காரம் பிடித்து அலைகின்றனர். அவர்களால் எனக்கு இப்போது அரசாங்கத்தில் செல்வாக்கு இல்லை. பெருமை மிகவும் குறைந்து விட்டது. எனவே, இந்த ராஜ்யத்திற்கு என்னை யுவராஜா ஆக்குவதே முறையானது, என்றான் துரியோதனன். துரியோதனன் தன் நிலையை தானே குறைத்து சொன்னது திருதராஷ்டிரனுக்கு அவமானமாக இருந்தது. தம்பி புத்திரர்கள் பெருமையில் மேலோங்கி இருப்பதை தானே ஒப்புக்கொண்ட தன் மகனைப் பற்றி அவன் வருத்தப்பட்டான். இருப்பினும், அவன் மனுநீதி தவற விரும்பவில்லை. துரியோதனா! நீ நினைப்பது தவறு. இந்த ராஜ்யம் எனக்கு சொந்தமானது அல்ல. இது இறந்து போன என் தம்பி பாண்டுவுக்கு உரியது. எனவே, அவனது பிள்ளைகள்தான் இந்த ராஜ்யத்தை ஆளுவதற்கு உரிமை பெற்றவர்கள். அவர்கள் சிறியவர்களாக இருப்பதால் தம்பியின் ராஜ்யத்தை நான் பொறுப்பேற்று ஆண்டு வருகிறேன். சில காலம் நான் ஆண்டேன் என்பதற்காக ராஜ்யம் எனக்கு சொந்தம் என்று சொன்னால் பெரியோர்கள் பழிப்பார்கள். நீ ஆத்திரப்படுவதில் அர்த்தம் ஏதும் இல்லை. எனவே, பாண்டவர்களை அனுசரித்து செல். தர்மன் ஆண்டால் என்ன? நீ ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான். பாண்டவர்களுக்கு சொந்தமான இந்த பூமியை அவர்களோடு இணைந்து நீங்களும் ஆளுவதற்கு உரிமையுடைவர்கள் தான். ஆனால், தலைமை பொறுப்பு அவர்களிடம் தான் இருக்க வேண்டும். இதுதான் ராஜநீதி, என்றான் திருதராஷ்டிரன்.

துரியோதனனுக்கு கோபம் இன்னும் அதிகமானது. தந்தையின் கருத்தை ஏற்றுக்கொள்ள அவன் மறுத்து விட்டான்.  அப்பா! எனக்கு என் தம்பிமார்கள் இருக்கிறார்கள். மாமா சகுனி சிறந்த ஆலோசகராக இருக்கிறார். என் தாயின் சகோதரனான அவர் எப்போதும் என் நலத்தையே விரும்புகிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் மேல் என் நண்பன் கர்ணன் என் மீது உயிரையே வைத்திருக்கிறான். இவர்களின் கருத்துப்படி இந்த நாடு எனக்குத்தான் சொந்தம். அவர்களின் உதவியோடு இந்த நாட்டை நான் கைப்பற்றி விடுவேன். பாண்டவர்கள் என் ஜென்ம விரோதிகள். அந்த சிறுவர்களோடு நான் ஒருபோதும் சேரமாட்டேன். நீங்களாக எனக்கு பட்டம் சூட்டுகிறீர்களா அல்லது நானாக எடுத்துக் கொள்ளட்டுமா? 99 பேரை தம்பிகளாக கொண்ட நான் யாருக்கு பயப்பட வேண்டும்? அத்துடன் மிகப்பெரிய தம்பியாக என் நண்பன் கர்ணன் இருக்கிறான். அனைவருமே மாபெரும் வீரர்கள். எனக்காக உயிரையும் கொடுப்பவர்கள். பாண்டவர்களுடன் யுத்தம் செய்து நாட்டை எனக்கு வாங்கி கொடுப்பார்கள். இப்படியெல்லாம் ஒரு நிலைமை உருவாவதை விட நீங்களே பாண்டு புத்திரர்களிடம் நயமாக பேசி நாட்டை என்னிடம் வாங்கி கொடுங்கள், என சற்றும் நியாயம் இல்லாமல் பேசினான். திருதராஷ்டிரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவனது மனம் அலைபாய்ந்தது. பீஷ்மரையும், தன் தம்பி விதுரனையும் வரச்சொல்லி ஆள் அனுப்பினான். அவர்கள் அவசரமாக வந்து சேர்ந்தனர். ஆட்சி சூத்திரத்தில் சிறந்தவர்களே! நான் இப்போது சிக்கலான நிலையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். நீதி பெரிதா? பாசம் பெரிதா? என்ற கேள்விகள் என்னை வட்ட மிடுகின்றன. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. ஏற்கனவே என் பிள்ளைகளுக்கும், என் தம்பி பாண்டுவின் பிள்ளைகளுக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிலும், பலசாலியான பீமனைக் கண்டால் என் மகன் துரியோதனனுக்கு அறவே பிடிப்பதில்லை. அர்ஜுனனின் வில் வீரம் கண்டு மற்ற பிள்ளைகள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

என் தம்பி குமாரர்கள் எல்லா வகையிலும், உயர்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். என் பிள்ளைகள் என்பதற்காக துரியோதனாதிகளை நான் உயர்த்திப் பேச விரும்பவில்லை. அதேநேரம், இந்த இருவரின் பகைமையையும் தீர்த்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதற்கு உங்களின் ஆலோசனை வேண்டும். இப்போதைக்கு அவர்கள் சேர்ந்திருப்பது நல்லதல்ல. இருதரப்பாரையும் பிரித்து வைக்க வேண்டும். நான் இப்படி செய்வதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபம் இருக்கிறதா? என கேட்டான்.  பீஷ்மரும், விதுரரும் ஆலோசித்தார்கள். அவர்களுக்கும் திருதராஷ்டிரனின் நிலைமை நன்றாக புரிந்தது. இருவரும் திருதராஷ்டிரரிடம், கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இளமைக் காலத்தில் இருந்தே போராட்டம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக கவுரவர்கள் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள். எனவே, அவர்கள் மனம் போன படி நடக்கட்டும். இது விஷயத்தில் எங்கள் முடிவை எதிர்பார்க்க வேண்டாம். நீங்களே உங்கள் விருப்பம் போல் செய்து விடுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்து விட்டனர். சிறந்த அரசியல் ஆலோசகர்களான பீஷ்மரும், விதுரருமே இப்பிரச்னையை கை கழுவியதும் திருதராஷ்டிரனுக்கு குழப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது. குழப்பதின் முடிவில் பிள்ளைப்பாசமே ஜெயித்தது. வஞ்சகம் செய்து தன் குழந்தைகளுக்கே நாடு சேர வேண்டும் என முடிவு செய்து விட்டான். துரியோதனனையும் தனது மந்திரி புரோசனனையும் அழைத்தான். சதி ஆலோசனை துவங்கியது. துரியோதனன் மிக மெதுவாக தன் தந்தையிடம், தந்தையே! பாண்டவர்களை எங்கோ ஒரு இடத்திற்கு அனுப்பி வைப்பதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் அவர்கள் மீண்டும் திரும்பி வந்து ராஜ்யத்தில் பங்கு கேட்பார்கள். எனவே, நான் சொல்வதை கேளுங்கள். வாரணாவத நகரத்துக்கு அவர்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே சென்றதும் அவர்களை நான் தீர்த்துக்கட்டி விடுகிறேன். பாண்டவர்கள் சாகவேண்டும். அப்போதுதான் எங்களால் நிம்மதியாக நாட்டை ஆள முடியும் என்றான். திருதராஷ்டிரனனும் வேறு வழியின்றி இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டான். மந்திரி புரோசனன் வாரணாவத நகரத்திற்கு புறப்பட்டான். பாண்டவர்களை நம்ப வைப்பதற்கு அந்நகரில் மாடமாளிகைகளை எழுப்பினான். இந்திரலோக தலைநகரான அமராவதி கூட இந்த அளவுக்கு அழகாக இருக்குமா? என்று பிறர் சொல்லும் அளவிற்கு பல இடங்களில் கோபுரங்களை கட்டினான். எங்கு பார்த்தாலும் சிற்பங்கள். மாளிகைகளைச் சுற்றி சோலைகளை அமைத்தான். அந்த நகரம் புதுப்பிக்கப்பட்ட பிறகு தர்மரை அழைத்தான் திருதராஷ்டிரன்
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:31:58 PM
மகாபாரதம் பகுதி-26

தர்மரை வரவேற்பது போல் நடித்தான் திருதராஷ்டிரன். மகனே! தர்மா! நீயும் உன் தம்பியரும் தங்கியிருக்க வாராணவத நகரத்தை புதுப்பித்து வைத்திருக்கிறேன். சிறிது காலம் நீ அங்கே சென்று உன் சகோதரர்களுடன் இரு. உங்களுக்கு உதவியாக என் மந்திரி புரோசனன் உங்களுடன் வருவான். அவன் இனி உனக்கு அமைச்சர். அரசியல் விஷயங்களில் கைதேர்ந்தவன். ஆட்சி விவகாரங்களில் கண்டிப்பாக இருப்பவன், என்று சொல்லி விட்டு அருகில் நின்ற புரோசனனிடம், புரோசனா! நீ இவர்களுடன் சென்று தங்கியிரு. இவர்களது பகைவர்களை அழித்து விடு. இந்த மண்ணைதர்மன் அரசாள வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய், என்று உத்தரவிட்டான். புரோசனன் தலைதாழ்த்தி உத்தரவை ஏற்றான். புரோசனனை திருதராஷ்டிரன் பாண்டவர்களுடன் அனுப்பி வைக்க காரணமுண்டு. அவர்களுடன் சேர்ந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று ஐவரையும் கொலை செய்து விட வேண்டும்.

இது ஏற்கனவே திருதராஷ்டிரனால் புரோசனனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்பாவி போல நடித்த புரோசனன் குந்திதேவியின் அறைக்குச் சென்றான். தாயே! நாம் வாரணாவத நகரம் புறப்படுகிறோம். தர்மரை யுவராஜாவாக்க மன்னர் கட்டளை பிறப்பித்துள்ளார். வாரணாவதத்தில் தனித்திருந்து ஆட்சி சூட்சுமங்களை தர்மர் அறிந்து கொள்ளவே இந்த ஏற்பாடு. தாங்களும் எங்களுடன் புறப்பட வேண்டும். தாய் அருகில் இருந்தால், சேய்கள் இன்னும் மகிழ்வார்கள் அல்லவா? என்றான். புரோசனனின் வன்மம் குந்திக்கு தெரியாதே! தன் மகன்களுடன் தானும் பலிகடாவாக்க அழைக்கப்படுகிறோம் என்பதை அறியாத குந்தி, அவர்களுடன் புறப்பட்டாள். ஐந்து ரதங்களில் பாண்டவர்கள், ஒரு ரதத்தில் குந்தி, புரோசனன் ஒரு ரதத்தில் இவர்களை வழிநடத்திச் சென்றான். புரோசனனின் தேருக்குள் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அவனுடன் பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான படையினர் வந்தனர். அவர்கள் அனைவரது தேரிலும் ஆயுதக்குவியல். எல்லாருமே புரோசனனின் நம்பிக்கைக்குரியவர்கள். அவன் இட்ட கட்டளையைச் செய்யக்கூடியவர்கள். இந்த பெரும்படையைக் கொண்டு ஐந்து தனிநபர்களை அழிப்பதென்பது மிகச்சாதாரணமாக பட்டது புரோசனனுக்கு. தேர்கள் வாரணாவதத்தை அடைந்தன.

அவர்கள் முதலில் நகரில் இருந்த சிவன் கோயிலுக்குச் சென்றனர். சிவபெருமானை பாண்டவர்கள் பக்தியுடன் வணங்கினர். பின்னர் புதிய மாளிகைக்குள் சென்றனர். பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அந்த மாளிகையின் அழகு சொல்லவொண்ணாததாக இருந்தது. ஆனால், அந்த அழகுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்தை பாண்டவர்கள் உணரவில்லை. அந்த மாளிகையை முழுக்க முழுக்க அரக்கால் கட்டியிருந்தான் புரோசனன். அரக்கில் தீப்பிடித்தால் அப்படியே உருகி பாண்டவர்களைக் கொன்று விடும். தப்ப முயல்வதற்குள் உருகி அவர்களை மூடிவிடும். இதுதான் புரோசனனின் திட்டம். ஆனால், பார்ப்பதற்கு அரக்கு போல் தெரியவில்லை. வெண்ணிறக் கற்களால் கட்டப்பட்டது போன்ற மாயையை கலைஞர்கள் தங்கள் திறமையால் உருவாக்கியிருந்தனர். பாண்டவர்கள் வாரணாவத நகரத்தை திறம்பட ஆட்சி செய்தனர். புரோசனனும் அவர்களிடம் நல்லவன் போல் நடித்து வந்தான். அந்த நடிப்பு நீண்டகாலம் எடுபடவில்லை. முகக்குறிப்பைக் கொண்டே துல்லியுமாக பிறர் குணநலம் அறியும் சகாதேவனுக்கு புரோசனனின் முகமே காட்டிக் கொடுத்து விட்டது. சகாதேவன் மிகப்பெரிய ஜோதிடன் என்பதை பாரதம் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், பாண்டவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நடிப்புக்கு மாற்று மருந்தும் நடிப்பு தானே! புரோசனனின் திட்டத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கினர். தர்மர் எந்தளவுக்கு பொறுமைசாலியோ அந்தளவுக்கு திறமையானவரும் கூட. பொதுவாகவே பொறுமை இருக்கும் இடத்தில் திறமைக்கு பஞ்சமிருக்காது. தர்மர் விரைவிலேயே தாங்கள் தங்கியிருப்பது அரக்கு மாளிகை என்பதைத் தெரிந்து கொண்டார். தம்பிகளை அழைத்தார். சகோதரர்களே! கவனமாய் கேளுங்கள். நம்மோடு வந்திருக்கிறானே புரோசனன்! அவன் நமக்காக கட்டியிருக்கும் இந்த அரண்மனையைப் பரிசோதித்தேன். இது கல் மாளிகை அல்ல. அரக்கு மாளிகை, என்றார். ஆ என வாய் பிளந்தனர் பாண்டவர்கள். தர்மர் தொடர்ந்தார். ஏதோ ஒரு காரணத்துடன் தான், அவன் நம்மை அரக்கு மாளிகையில் தங்க வைத்திருக்கிறான். நம்மைக் கொலை செய்வது அவன் திட்டமாக இருக்கக்கூடும். இனிமேல் அவன் தரும் பானங்கள். உணவு, சந்தனம். மாலைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் பரிசோதனைக்கு பிறகே அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றார். பாண்டவர்கள் தலையசைத்தனர். இந்த பூமி வஞ்சகம் நிறைந்தது தான். ஆனால், கடவுள் ஒரே ஒரு நல்லவனை அந்த வஞ்சக கூட்டத்தில் வைத்து விடுகிறார். அவன் ஒருவன் மூலமாக நடக்கும் ஒரே ஒரு நன்மை பலரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

ரயில் பாலத்தில் குண்டு வைக்கிறது 15 பேர் கொண்ட ஒரு கூட்டம். அதை ஒரு நல்லவன் பார்த்து விடுகிறான். கூட்டத்தினர் சென்றவுடன் அவ்வழியே வந்த ரயிலை அவன் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தி விடுகிறான். தீமை அங்கே முறியடிக்கப்பட்டு விடுகிறது. இதேபோல் தான், இதுபோல், புரோசனன் கட்டிய அரண்மனையில் பணி செய்த ஒரு சிற்பிமட்டும் நல்லவனாக இருந்தான். ஒருநாள் அவன் பீமனைச்சந்தித்தான். பாண்டவச் செம்மலே! பலம் கொண்ட சிங்கமே! ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல வேண்டும், என்றான். சிற்பியே, விஷயத்தைச் சொல்லும், என்றான் பீமன். ஐயனே! இந்த மாளிகையைக் கட்டிய சிற்பிகளில் நானும் ஒருவன். புரோசனன் எங்களிடம் இதை அரக்கால் கட்டச் சொன்னான். நாங்கள் காரணம் கேட்டபோது, மன்னர் திருதராஷ்டிரன் உத்தரவு என்றான், என்றதும், மனதிடம் மிக்க, யாருக்கும் அஞ்சாத பீமனே அதிர்ந்துவிட்டான். பெரியப்பா ஏன் இப்படி செய்தார்? என்ற சிந்தனை ஒரு புறம் புரள சிற்பி இன்னும் சொன்னதைக் கேட்டு அவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:34:10 PM
மகாபாரதம் பகுதி-27

உங்களைக் கொல்ல சதி செய்யப்படுகிறது என்பதை பீமன் புரிந்து கொண்டான். அதை உறுதிப்படுத்தும் வகையில் சிற்பி மேலும் சொன்னான். பீமராஜா! தங்கள் முகக்குறிப்பு உணர்த்துவது சரிதான். பாண்டவ வம்சத்தை பூண்டோடு அழிப்பது துரியோதனனின் திட்டம். அதற்கு திருதராஷ்டிரரும் சூழ்நிலைக் கைதியாகி தலையசைத்து விட்டார். அரக்கு எளிதில் தீப்பிடிக்கும் என்பதால், அதைத் தேர்ந்தெடுத்தான் புரோசனன். இதை விதுரர் தெரிந்து கொண்டார். அவர் என்னிடம் ரகசியமாக, பாண்டவர்கள் தப்பிச் செல்லும் வகையில், ஒரு சுரங்கப்பாதை அமைத்து விடு என்றார். அதை நானும் செய்தேன். அந்தப்பாதை வெகுதூரம் செல்லும். அந்தப்பாதை ஒரு காட்டில் போய் முடியும். அதை இடும்பிவனம் என்பர். குகையின் வாசல் தெரியாமல் இருப்பதற்காக அந்த இடத்தை மறைத்து ஒரு தூண் அமைத்துள்ளேன். பராக்கிரமசாலியான நீங்கள் அதை உடைத்து நொறுக்கி விடுவீர்கள் என எனக்குத் தெரியும். அந்த தூணை அகற்றிவிட்டால் நீங்கள் சுரங்கத்துக்குள் நுழைந்து விடலாம், என்றான்.

பாண்டவர்களிடம் இந்த சதிதிட்டம் பற்றி சொன்னான். அவர்கள் சுதாரித்துக் கொண்டனர். புரோசனனிடம் இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் போல் காட்டிக் கொண்டனர். அவனது ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தினர். அவனை வெளியே அனுப்பாமல் தங்களுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். ஒருநாள் இரவில், ராஜாங்க விவகாரங்களை அவனுடன் பேசுவது போல நடித்துவிட்டு, புரோசனரே! தாங்கள் எங்கும் போகக்கூடாது. எங்களுடன் தான் இன்று படுத்துக் கொள்ள வேண்டும், என்றான் பீமன். புரோசனனும் வேறு வழியின்றி அவர்களின் அறையிலேயே தங்கி அயர்ந்து உறங்கி விட்டான். உடனே பீமன் சுரங்கப்பாதை வாசலுக்கு சென்று அங்கிருந்த தூணை பெயர்த்தான். வாசலை திறந்து வைத்து விட்டு, தாய் குந்தியையும் சகோதரர்களையும் எழுப்பி, அவர்களுடன் அதன் வழியாக தப்பிவிட்டான். குகையைத் தாண்டியதும் அவர்களை விட்டு விட்டு மீண்டும் அரண்மனைக்குள் வந்தான். அரண்மனைக்கு தீ வைத்தான். அரக்கு மாளிகை என்பதால் வேகமாகத் தீப்பற்றியது. அவன் குகைக்குள் நுழைந்து வெளியேறி விட்டான். சகோதரர்களுடன் இடும்பிவனம் நோக்கிச் சென்றான்.

மறுநாள் காலையில் வாரணாவத நகரத்து அரண்மனை சாம்பாலாகிக் கிடப்பதை மக்கள் கண்டார்கள். பாண்டவர்கள் மற்றும் குந்திதேவியின் மறைவுக்காக கண்ணீர் விட்டார்கள். ஏழுபேர் அங்கு கருகிக்கிடந்ததையும் அவர்கள் பார்த்தனர். புரோசனன் மட்டும் தானே உள்ளே இருந்தான்! எப்படி ஏழு பேர் என நீங்கள் கேட்பீர்கள். அரண்மனை பணிகள் முடிந்ததும் ஒரு சில பணியாட்களைத் தவிர மற்றவர்களை புரோசனன் அஸ்தினாபுரத்துக்கு அனுப்பி விட்டான். அந்த பணியாட்களும் அரண்மனைக்கு வெளியே தான் இரவு நேரத்தில் காவல் செய்வார்கள். மற்ற பணியாளர்கள் பகலில் தான் வருவார்கள். புரோசனனின் ஏற்பாட்டின்படி ஐந்து வேடர்களும், அவர்களின் தாயும் பாண்டவர்களுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்காக அரண்மனைக்கு வந்திருந்தனர். அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தான் தீயில் கருகி விட்டார்கள். தன் வினை தன்னைச்சுடும் என்பது போல புரோசனனும் இறந்து விட்டான். இதைப் பார்த்த வாரணாவத நகர மக்கள் வேடர்களை பாண்டவர்கள் என்றும், அவர்களது தாயை குந்தி என்றும் நினைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பரிதாப முடிவு ஏற்பட்டதாகக் கருதி கண்ணீர் வடித்தனர்.

இந்தத் தகவல் பல நாடுகளுக்கும் பரவியது. எல்லா தேசத்து மன்னர்களும், வீரம் மிக்க குருகுலம் அழிந்ததே என வருத்தப்பட்டார்கள். இங்கே இப்படியிருக்க அஸ்தினாபுரம் அரண்மனையில், மகிழ்ச்சி வெள்ளம் தாண்டவமாடியது. துரியோதனனும் அவன் தம்பிகளும் துள்ளிக்குதித்தனர். ஆனால், மக்கள் முன்பும், பெரியோர்கள் முன்பும் வரும்போது கண்ணீர் வடித்து, ஐயோ! எங்கள் சகோதரர்களை இழந்தோமே! என அழுவது போல் நடித்தனர். முக்கியமாக, பீமன் இறந்துபோனான் என நினைத்து துரியோதனனுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சிறுவயது முதல் பலவிதத்திலும் தப்பித்து வந்த அவன் இப்போது மடிந்தது குறித்து இறுமாப்பும் ஏற்பட்டது. அந்த தடியன் பீமன் சத்துருகாதினி என்ற கதாயுதத்தை வைத்துக் கொண்டு என்னமாய் நம்மை மிரட்டினான், இப்போது அரக்கோடு அரக்காக ஒட்டி உருகிப் போய்விட்டான், எனச் சொல்லி அட்டகாசமாக சிரித்தான். பாண்டவர்கள் சரித்திரம் முடிந்தது என எல்லா நாட்டு அரசர்களுமே அவர்களை மறக்கத் தொடங்கியிருந்த வேளையில், தப்பிச் சென்ற பாண்டவர்கள், பீமன் முன்னால் செல்ல பின் தொடர்ந்தனர். ஒரு இடத்தில், அதிபயங்கரமாக சிரித்தபடி ஒரு அரக்கி பீமனின் முன்னால் வந்தாள். அழகுத்திலகமே! உன்னைப் போன்ற பலசாலியையும், கட்டழகனையும் நான் கண்டதில்லை.

நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எப்படி இந்த காட்டுக்குள் நுழைந்தாய்? உன் பின்னால் வரும் இவர்கள் யார்? என்றாள். பீமன் அவளையும் விடஅதிரும் குரலில் சிரித்தான். ராட்சஷப் பெண்ணே! நாங்கள் எங்கள் வழியில் போய்க் கொண்டிருக்கிறோம். முதலில் நீ யார் என்பதை என்னிடம் சொல். அதன் பிறகு நான் இங்கு வந்த கதையைச் சொல்கிறேன்,என்றாள். பீமனை பார்த்தவுடனேயே அவனை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ராட்சஷி, அவன் கேட்டதற்கு பதில் சொன்னாள். மன்மதனின் எழிலை உன்னில் கொண்டவனே! எனது அண்ணன் இடும்பனுக்குரியது இந்த வனம். என் பெயர் இடும்பி. நீங்கள் வருவதை என் சகோதரன் பார்த்து விட்டான். உடனே, என்னை அனுப்பி உனக்கு நல்ல தீனி வருகிறது. அவர்கள் எல்லாரையும் விழுங்கிக் கொள் எனச் சொல்லி அனுப்பினான். ஆனால், உன்னைப் பார்த்ததும் நான் உன் மீது காதல் கொண்டு விட்டேன். என்னை நீ திருமணம் செய்து கொள். நீங்கள் இங்கிருந்து தப்பிக்க வழி செய்கிறேன். என் அண்ணன் கோபக்காரன். அவன் சொன்னதைச் செய்யாவிட்டால், உங்களை மட்டுமல்ல! என்னையும் கொன்று விடுவான். என்ன சொல்கிறீர்கள்? என்றாள்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:37:54 PM
மகாபாரதம் பகுதி-28

பீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் ? இந்த திருமணத்தை இரண்டு குலங்களுமே ஏற்றுக் கொள்ளாது, என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, இவர்களின் குரல் கேட்டு இடும்பன் வந்து விட்டான். அவன் தன் தங்கையைக் கரித்துக் கொட்டினான். நான் இவர்களைப் பிடித்து தின் என அனுப்பி வைத்தால், நீ இங்கு வந்து காதல் வசனமா பேசிக்கொண்டிருக்கிறாய். அரக்க குலத்தைக் கெடுக்க வந்தவளே ! ஒழிந்து போ ! என அவளை கொல்ல முற்பட்டான். பீமன் அவனுக்க நல்ல வார்த்தைகளைச் சொன்னான். இடும்பன் கேட்கவில்லை. அடேய் மானிடப்பதரே ! அவள் மீது உனக்கும் காதல் என்றால், என்னோடு போருக்கு வா ! என்னைக் கொன்றுவிட்டு அவள் கரம்பிடி, என வம்புச்சண்டைக்கு இழுத்தான். பாண்டவர்களைத் தாக்கினான். பீமன் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டான். இந்தப் போர் வெகுநேரம் நீடித்தது. மரங்களை வேரோடு பிடுங்கி இருவரும் சண்டை போட்டனர்.

பீமனின் தாக்குதலை இடும்பனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் அடிபட்டு சாய்ந்தான். சற்றுநேரத்தில் உயிர் போய்விட்டது. அண்ணன் மறைந்த துக்கத்தை இடும்பியால் தாங்கமுடியவில்லை என்றாலும், பீமனின் வீரம் கண்டு மகிழ்ந்தாள். தனக்கு துணையாக வாய்க்கப்போகிற வன் அரக்கர்களையே அழிக்கும் வல்லமையுள்ளவன் என்பது கண்டு நெஞ்சு பூரித்தது. இப்போத முன்பை விட அதிகமாக பீமனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவளது நிலை தர்மருக்கு நன்றாகப் புரிந்தது. இடும்பி ! கவலைப்படாதே ! என் தம்பி உனக்கு மணாளன் ஆவான், என ஆறுதல் சொன்னார். குந்திதேவியும் இடும்பிக்கு ஆறுதல் கூறினாள். இவர்கள் இருவரது வற்புறுத்தலால் இடும்பியை அந்த வனத்திலேய திருமணம் செய்து கொண்டான் பீமன். இப்படியே சில காலம் கழிந்தது. இடும்பி ஒரு தங்கமகனைப் பெற்றாள். வீரத்தில் பீமனையும் தாண்டியவன் அவன். அவனுக்கு கடோத்கஜன் என பெயர் சூட்டினர். ஒருநாள் கடோத்கஜன் தந்தையிடம் வந்தான். என் அன்புத் தந்தையே ! இனியும் நாங்கள் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நான் என் தாய் இடும்பியுடன் மீண்டும் இடும்ப வனத்துக்கே போய்விடுகிறேன்.

நீங்கள் எப்போது என்னை நினைத்தாலும், அங்கே வந்து நான் நிற்பேன். என் தந்தைக்குரிய பணிவிடைகளைச் செய்வேன் என்றான். பீமனும் பாண்டவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இடும்பி கண்ணீர் மல்க கணவனிடமிருந்து விடைபெற்றாள். இதன்பிறகு, வியாசமுனிவர் அங்கு வந்தார். அவர் பாண்டவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனை சொன்னார். அதன்படி அவர்கள் வேத்திரகீயம் என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே பிராமணர்கள் நிறைந்திருந்தனர். அதற்கேற்றாற்போல், பாண்டவர்களும் பிராமணர்களைப் போலவே வேடமிட்டு அவ்வூருக்குள் சென்றனர். அவ்வூர் பிராமணர்கள் கருணை மிக்கவர்கள். ஊருக்கு புதிதாக வந்த விருந்தினர்களை வரவேற்று தினமும் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். இனிய உணவைப் பரிமாறினர். ஒருநாள், ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அவ்வீட்டுப் பெண் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள், குந்திதேவி அதைக் கவனித்து, தாயே ! எல்லா மகிழ்ச்சியும், வசதியும் நிறைந்த ஊர் இது. இங்கேயும் கண்ணீரா ? நீ ஏன் அழுகிறாய் ? என்றாள். அப்பெண் குந்தியிடம், தாயே ! இவ்வூரைப் பிடித்த சாபத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

இவ்வூர் காட்டில் பகாசுரன் என்பவன் வசிக்கிறான். கோரைப் பற்களும், அவலட்சணமான முகமும் கொண்ட அவனுக்கு நரமாமிசம் என்றால் உயிர். எங்கள் ஊர் பிராமணர்களை இஷ்டம் போல் பிடித்து தின்பான். ஒருநாள், என் தந்தை, அவனை நேரில் சந்தித்து, பகாசுரா ! நீ கண்டபடி மனிதர்களை உண்ணாதே. நாங்கள் தினமும் உனக்கு ஒரு வண்டி நிறைய அறுசுவை உணவும், நீ கடித்து சாப்பிட ஒரே ஒரு மனிதனையும் அனுப்பி வைக்கிறோம். எல்லாரையும் ஒரே சமயத்தில் கொல்லாதே என பேசினார். பகாசுரனும் ஒப்புக்கொண்டான். இன்று என் வீட்டு முறை. எனக்கு ஒரே மகன். அவனை அனுப்பினால், எனக்கு கொள்ளி வைக்க பிள்ளையில்லாமல் போகும். என் மருமகளை அனுப்புவது கூடாத செயல். ஏனெனில், அவள் நல்வாழ்வு வாழ்வதற்காக பிறர் வீட்டில் இருந்து வந்தவள். அவளை கடைசி வரை காப்பாற்றுவது புகுந்த வீட்டின் கடமை. என் கணவரைத் தான் அனுப்ப வேண்டும். ஆனால், அவர் இன்றி நான் இருக்க மாட்டேன். நானாகப் போய் விடலாம் என்றால் என் கணவரை கவனிக்க என்னை விட்டால் ஆளில்லை, என்றாள். குந்திக்கு நிலைமை புரிந்தது. அந்த பிராமண பெண்ணுக்கு ஆறுதல் சொன்னாள். மகளே ! இதற்காகவா கவலைப்படுகிறாய். நீங்கள் யாருமே பகாசுரனுக்கு இரையாக வேண்டாம். நான் ஐந்து பிள்ளைகளைப் பெற்றவள்.

உன் வீட்டின் சார்பில் அவர்களில் ஒருவரை பகாசுரனுக்கு உணவாக அனுப்புகிறேன், என்றாள். அவளது தியாகம் கண்டு பூரித்த பிராமணப்பெண், விருந்தினர்களாக வந்தவர்களை பலி கொடுக்க தங்கள் மனம் ஒப்புக் கொள்ளாது என்றாள். இருந்தாலும் குந்தி அந்தப் பெண்ணிடம், என் மகன்களில் ஒருவன் முரடன். சக்தியில் அனுமானைப் போன்றவன். அவனைக் கண்டால் அரக்கர்களே அஞ்சுவார்கள். இடும்பன் என்ற அரக்கனைக் கொன்று அவனது தங்கையையே மணம் முடித்தவன் அந்த பலவான். அவனை அனுப்பி, பகாசுரனைக் கொன்று, உங்கள் ஊருக்கே விடுதலை அளிக்கிறேன், என்றாள் குந்தி. அந்தப் பெண் மகிழ்ந்தாள். மலைபோல உணவு தயாரானது. அதை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டான் பீமன். பகாசுரன் வசித்த யமுனை நதிக்கரைக்கு சென்றான். அங்கே, பகாசுரன் பசியுடன் காத்திருந்தான். அடேய் மூடா ! ஏனடா தாமதம் ! என் பசியைப் பற்றி உனக்கு என்ன தெரியும் ? என்றவனாய் பீமனை விழுங்கப் பாய்ந்தான். பீமன் அவனைக் கண்டு கொள்ளவில்லை. வண்டியின் மீது ஏறினான். அதிலுள்ள உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:39:38 PM
மகாபாரதம் பகுதி-29

பீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும்? இந்த திருமணத்தை இரண்டு குலங்களுமே ஏற்றுக் கொள்ளாது, என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, இவர்களின் குரல் கேட்டு இடும்பன் வந்து விட்டான். அவன் தன் தங்கையைக் கரித்துக் கொட்டினான். நான் இவர்களைப் பிடித்து தின் என அனுப்பி வைத்தால், நீ இங்கு வந்து காதல் வசனமா பேசிக்கொண்டிருக்கிறாய். அரக்க குலத்தைக் கெடுக்க வந்தவளே! ஒழிந்து போ! என அவளை கொல்ல முற்பட்டான். பீமன் அவனுக்கு நல்ல வார்த்தைகளைச் சொன்னான். இடும்பன் கேட்கவில்லை. அடேய் மானிடப்பதரே! அவள் மீது உனக்கும் காதல் என்றால், என்னோடு போருக்கு வா! என்னைக் கொன்றுவிட்டு அவள் கரம்பிடி, என வம்புச்சண்டைக்கு இழுத்தான். பாண்டவர்களைத் தாக்கினான். பீமன் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டான். இந்தப் போர் வெகுநேரம் நீடித்தது. மரங்களை வேரோடு பிடுங்கி இருவரும் சண்டை போட்டனர். பீமனின் தாக்குதலை இடும்பனால் நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் அடிபட்டு சாய்ந்தான். சற்றுநேரத்தில் உயிர் போய்விட்டது.

அண்ணன் மறைந்த துக்கத்தை இடும்பியால் தாங்கமுடியவில்லை என்றாலும், பீமனின் வீரம் கண்டு மகிழ்ந்தாள். தனக்கு துணையாக வாய்க்கப்போகிறவன் அரக்கர்களையே அழிக்கும் வல்லமையுள்ளவன் என்பது கண்டு நெஞ்சு பூரித்தது. இப்போது முன்பை விட அதிகமாக பீமனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவளது நிலை தர்மருக்கு நன்றாகப் புரிந்தது. இடும்பி! கவலைப்படாதே! என் தம்பி உனக்கு மணாளன் ஆவான், என ஆறுதல் சொன்னார். குந்திதேவியும் இடும்பிக்கு ஆறுதல் கூறினாள். இவர்கள் இருவரது வற்புறுத்தலால் இடும்பியை அந்த வனத்திலேயே திருமணம் செய்து கொண்டான் பீமன். இப்படியே சில காலம் கழிந்தது. இடும்பி ஒரு தங்கமகனைப் பெற்றாள். வீரத்தில் பீமனையும் தாண்டியவன் அவன். அவனுக்கு கடோத்கஜன் என பெயர் சூட்டினர். ஒருநாள் கடோத்கஜன் தந்தையிடம் வந்தான். என் அன்புத் தந்தையே! இனியும் நாங்கள் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நான் என் தாய் இடும்பியுடன் மீண்டும் இடும்ப வனத்துக்கே போய்விடுகிறேன். நீங்கள் எப்போது என்னை நினைத்தாலும், அங்கே வந்து நான் நிற்பேன்.

என் தந்தைக் குரிய பணிவிடைகளைச் செய்வேன், என்றான். பீமனும் பாண்டவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இடும்பி கண்ணீர் மல்க கணவனிடமிருந்து விடைபெற்றாள். இதன்பிறகு, வியாசமுனிவர் அங்கு வந்தார். அவர் பாண்டவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனை சொன்னார். அதன்படி அவர்கள் வேத்திரகீயம் என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே பிராமணர்கள் நிறைந்திருந்தனர். அதற்கேற்றாற்போல், பாண்டவர்களும் பிராமணர்களைப் போலவே வேடமிட்டு அவ்வூருக்குள் சென்றனர். அவ்வூர் பிராமணர்கள் கருணை மிக்கவர்கள். ஊருக்கு புதிதாக வந்த விருந்தினர்களை வரவேற்று தினமும் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். இனிய உணவைப் பரிமாறினர். ஒருநாள், ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அவ்வீட்டுப் பெண் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். குந்திதேவி அதைக் கவனித்து, தாயே! எல்லா மகிழ்ச்சியும், வசதியும் நிறைந்த ஊர் இது. இங்கேயும் கண்ணீரா? நீ ஏன் அழுகிறாய்? என்றாள். அப்பெண் குந்தியிடம், தாயே! இவ்வூரைப் பிடித்த சாபத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். இவ்வூர் காட்டில் பகாசுரன் என்பவன் வசிக்கிறான். கோரைப்பற்களும், அவலட்சணமான முகமும் கொண்ட அவனுக்கு நரமாமிசம் என்றால் உயிர். எங்கள் ஊர் பிராமணர்களை இஷ்டம் போல் பிடித்து தின்பான்.

ஒருநாள், என் தந்தை, அவனை நேரில் சந்தித்து, பகாசுரா! நீ கண்டபடி மனிதர்களை உண்ணாதே. நாங்கள் தினமும் உனக்கு ஒரு வண்டி நிறைய அறுசுவை உணவும், நீ கடித்து சாப்பிட ஒரே ஒரு மனிதனையும் அனுப்பி வைக்கிறோம். எல்லாரையும் ஒரே சமயத்தில் கொல்லாதே, என பேசினார். பகாசுரனும் ஒப்புக்கொண்டான். இன்று என் வீட்டு முறை. எனக்கு ஒரே மகன். அவனை அனுப்பினால், எனக்கு கொள்ளி வைக்க பிள்ளையில்லாமல் போகும். என் மருமகளை அனுப்புவது கூடாத செயல். ஏனெனில், அவள் நல்வாழ்வு வாழ்வதற்காக பிறர் வீட்டில் இருந்து வந்தவள். அவளை கடைசி வரை காப்பாற்றுவது புகுந்த வீட்டின் கடமை. என் கணவரைத் தான் அனுப்ப வேண்டும். ஆனால், அவர் இன்றி நான் இருக்க மாட்டேன். நானாகப் போய்விடலாம் என்றால், என் கணவரை கவனிக்க என்னை விட்டால் ஆளில்லை, என்றாள். குந்திக்கு நிலைமை புரிந்தது. அந்த பிராமண பெண்ணுக்கு ஆறுதல் சொன்னாள். மகளே! இதற்காகவா கவலைப்படுகிறாய். நீங்கள் யாருமே பகாசுரனுக்கு இரையாக வேண்டாம். நான் ஐந்து பிள்ளைகளைப் பெற்றவள். உன் வீட்டின் சார்பில் அவர்களில் ஒருவரை பகாசுரனுக்கு உணவாக அனுப்புகிறேன், என்றாள்.

அவளது தியாகம் கண்டு பூரித்த பிராமணப்பெண், விருந்தினர்களாக வந்தவர்களை பலி கொடுக்க தங்கள் மனம் ஒப்புக்கொள்ளாது என்றாள். இருந்தாலும் குந்தி அந்தப் பெண்ணிடம், என் மகன்களில் ஒருவன் முரடன். சக்தியில் அனுமானைப் போன்றவன். அவனைக் கண்டால் அரக்கர்களே அஞ்சுவார்கள். இடும்பன் என்ற அரக்கனைக் கொன்று அவனது தங்கையையே மணம் முடித்தவன் அந்த பலவான். அவனை அனுப்பி, பகாசுரனைக் கொன்று, உங்கள் ஊருக்கே விடுதலை அளிக்கிறேன், என்றாள் குந்தி. அந்தப் பெண் மகிழ்ந்தாள். மலைபோல உணவு தயாரானது. அதை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டான் பீமன். பகாசுரன் வசித்த யமுனை நதிக்கரைக்கு சென்றான். அங்கே, பகாசுரன் பசியுடன் காத்திருந்தான். அடேய் மூடா! ஏனடா தாமதம்! என் பசியைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்றவனாய் பீமனை விழுங்கப் பாய்ந்தான். பீமன் அவனைக் கண்டுகொள்ளவில்லை. வண்டியின் மீது ஏறினான். அதிலுள்ள உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:41:23 PM
மகாபாரதம் பகுதி-30

உணவு முழுவதையும் தின்று தீர்த்தான் பீமன். பகாசுரனுக்கு ஆத்திரம் அதிகமானது. அடேய் துஷ்டா! இந்த உணவை உட்கொண்ட உன்னை அப்படியே விழுங்கி விடுகிறேன் பார், என்று அருகே நெருங்கினான். இருவருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. அசுரன் என்பதால் சற்றே உக்கிரமாகப் போரிட்டான் பகாசுரன். ஆனால், அவனது தலையைப் பிய்த்து எறிந்தான் பீமன். அவனது உடலை எரித்தபிறகு மீண்டும் வேத்தீரகியத்திற்கு திரும்பினான். அவ்வூர் அந்தணர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பீமனை அவர்கள் திருமாலாகவே பார்த்தனர். ஊரெங்கும் விளக்கேற்றி விழா கொண்டாடினர். இங்கே இவர்கள் இப்படியிருக்க, துரோணரால் அவமானப்படுத்தப்பட்டு தோற்றோடிய துருபதன் ஒரு மகளைப் பெற்றான். அவள் அக்னியில் இருந்து தோன்றியவள். அவளுக்கு திரவுபதி என பெயர் சூட்டினான். அர்ஜூனனின் வில்வித்தையை அவன் ஏற்கனவே அறிந்தவன் அல்லவா? அந்த வீரனுக்கே தன் மகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான். ஆனால், பாண்டவர்கள் தீ விபத்தில் இறந்து விட்டார்கள் என்று அவனும் நம்பியிருந்தான்.

திரவுபதி பிறந்ததும் அசரீரி தோன்றி, இவள் பஞ்சபாண்டவருக்கு உரியவள் என்று சொல்லியிருந்தது. அதையும் நினைத்து பார்த்தான் துருபதன். இறைவனின் அனுக்கிரஹம் இப்படியிருக்கும் போது, பாண்டவர்கள் எப்படி இறந்திருக்க முடியும்? அவர்கள் தப்பியிருக்கவும் செய்யலாம்! என்ற சந்தேகமும் அவனுள் இருந்தது. திரவுபதிக்கும் இதேநிலை. தன்னை பஞ்ச பாண்டவர்களுக்கு உரியவள் என அப்பா இளமை முதலே சொல்லி வளர்த்திருக்கிறார். அவர்களில் அர்ஜூனன் மிகமிக திறமைசாலி. அழகன்... அவனைத் தான் திருமணம் செய்ய வேண்டும், என்று நினைத்திருந்தாள். அவன் மீது அவளுக்கு தீராத காதல். இதுவரை அவள் அர்ஜூனனைப் பார்த்ததே இல்லை. ஆனால், மனதார அவனைக் காதலித்தாள். இந்த நிலையில் பாண்டவர்களைப் பற்றிய தகவல் தெரியாததால், துருபதன் தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேர்ந்தெடுக்க முடிவு செய்தான். சுயம் வரம் நடத்த ஏற்பாடு செய்தான். மகளே தனக்கு பிடித்த மாப்பிள்ளையை தேர்வு செய்யட்டும் என்பது அவனது எண்ணம். திரவுபதியோ பதறினாள். ஜோதிடர்கள் முன்பு சொன்னதை நினைத்துப் பார்த்தாள். எப்படியும் அர்ஜூனன் வந்துவிடுவான் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இந்த விஷயம் ஒரு அந்தணர் மூலமாக பாண்டவர்களுக்கு போய் சேர்ந்தது.

அவர்கள் பாஞ்சால தேசத்திற்கு புறப்பட்டனர். வழியில் வியாசமுனிவர் எதிர்ப்பட்டார். மக்களே! நீங்கள் புறப்பட்ட நேரம் நல்லநேரம். அதனால் தான் நானே உங்கள் எதிரே வந்திருக்கிறேன். நல்ல நிகழ்வுகளை நிச்சயிக்க செல்லும்போது, மகான்கள் எதிர்ப்பட்டால்,. அது நிச்சயம் நடக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. எக்காரணம் கொண்டும் நீங்கள் எங்கும் தங்கக்கூடாது. இரவிலும் கூட நடக்க வேண்டும். அப்படி சென்றால், சுயம்வர நேரத்துக்குள் பாஞ்சாலத்தை அடைந்து விடுவீர்கள். வழியில் உங்களுக்கு தேவையான உதவிகள் தானே தேடிவரும், என ஆசிர்வதித்து மறைந்தார். வியாசரின் ஆசிர்வாதம் பாண்டவர்களுக்கு உத்வேகத்தைத் தந்தது. அவர்கள் வேகமாக நடந்தனர். கங்கைக்கரையை அவர்கள் அடைந்ததும் வருணன் மனம் மகிழ்ந்து குளிர்ந்த காற்றை வீசினான். அவர்கள் வந்த களைப்பே தெரியவில்லை. தன் நண்பனான அக்னியின் மகளைத் திருமணம் செய்ய வந்தவர்கள் என்பதால் மனம் மகிழ்ந்து அவன் தென்றலாய் வீசினானானாம். தொடர்ந்து அவர்கள் நடந்தனர். வழியில் சித்ரரதன் என்ற கந்தர்வன் அவர்களை மறித்தான். அவர்களை வலுச்சண்டைக்கு இழுத்தான். அவனை அர்ஜூனன் தோற்கடித்தான்.

ஒரு மனித ஜென்மம், கந்தர்வனான தன்னை ஜெயித்ததைப் பாராட்டி, பாஞ்சால தேசத்துக்கு செல்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டி உதவினான் சித்ரரதன். பாஞ்சாலத்துக்குள் நுழைந்ததும். அந்தணர்கள் போல் வேடமணிந்தனர் பாண்டவர்கள். ஏனெனில், ஊரே தங்களை இறந்து விட்டதாக நினைத்திருக்க, அந்த நினைப்பே எல்லாரிடமும் இருக்கட்டும். அப்படியானால் தான் வந்த காரியம் நல்லபடியாக முடியும் என திட்டமிட்டனர். பாஞ்சால தேசத்து மதிலைக் கடந்து நகரத்துக்குள் அவர்கள் புகுந்தனர். தங்கள் இளவரசிக்கு சுயம்வரம் என்பதால் மக்கள் மங்கல வாத்தியங்களை இசைத்து கொண்டிருந்தனர். பலநாட்டுஅரசர்களையும் வரவேற்கும் வகையில் சங்குகள் முழங்கின. பாண்டவர்களுடன் குந்தியும் வந்திருந்தாள். அவள் தங்களுடன் அரண்மனைக்கு வந்தால் யாராவது அடையாளம் கண்டுகொள்ளக்கூடும் என்பதால் அவளை ஒரு மண்பாண்டத் தொழிலாளியின் வீட்டில் தங்க வைத்தனர். நாடாண்ட அந்த மகாராணி, இன்று ஒரு ஓட்டை குடிசையிலே இருந்தாள். பிள்ளைகளுக்காக நம் நாட்டு தாய்மார்கள் செய்த தியாகங்கள் எத்தனையோ... இன்றும் அவர்கள் அதைச் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். குந்திதேவியை அந்த குடிசையில் விட்டுவிட்டு, அரண்மனைக்குச் சென்றனர் பாண்டவர்கள். அங்கே பல சிம்மாசனங்கள் போடப்பட்டிருந்தன. பாண்டவர்களின் கண்கள் அவற்றை மேய்ந்தன. அப்போது திருஷ்டத்தும்னன் யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.

அரசர்களே! இங்கே நீங்கள் சுயம்வரத்துக்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் அழகிலும் பராக்கிரமத்திலும் விஞ்சியவர்கள். ஆனால், என் தங்கை உங்களில் மிகுந்த பராக்கிரமசாலியோ அவர்களுக்கே மாலையிடுவாள். முதலில் உங்களை என் தங்கைக்கு அறிமுகம் செய்து வைப்போம். அதன்பின் இதோ! உச்சியிலே சுற்றுகிறதே ஒரு சக்கரம். அதன் நடுவிலுள்ள யந்திரத்தை இங்கிருக்கும் வில்லால் அடித்து நொறுக்க வேண்டும். அவரே என் தங்கைக்கு கணவனாக முடியும், என்றான். திரவுபதியின் பேரழகில் மயங்கி, காம எண்ணத்துடன் வந்திருந்த அத்தனை அரசர்களின் சுருதியும் குறைந்து போனது. இந்த சுயம்வரத்துக்கு வந்திருந்த துரியோதனன், துச்சாதனன் மற்ற தம்பிகள் முகத்தில் ஈயாடவில்லை. சகுனியும் இந்த சுயம்வரத்திற்கு வந்திருந்தான். அவன் தலை குனிந்து உட்கார்ந்து விட்டான். தானத்தில் சிறந்த கர்ணன் அதை குறி வைக்கலாமா? குறி தவறாமல் இருக்க என்ன யுக்தியைக் கடைபிடிக்க வேண்டும் என கண்களை மேலே நோட்டமிட்டான்.மற்ற அரசர்கள் கதிகலங்கி விட்டனர். அர்ஜூனன் நிச்சயித்து விட்டான். திரவுபதி தனக்குத்தான் என்று.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:43:24 PM
மகாபாரதம் பகுதி-31

ஆசை யாரையும் விட்டதில்லை. எல்லா அரசர்களுமே திரவுபதியின் கண்ணம் பிற்கு பலியாகி விட்டனர். அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையில் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தனர். திரவுபதி சபைக்கு அழைத்து வரப்பட்டாள். அவள் கையில் மாலை இருந்தது. அம்பெய்து மேலே சுழலும் சக்கரத்தை வீழ்த்துபவருக்கு அந்த மாலை விழ வேண்டும். இதயமெல்லாம் படபடக்க அர்ஜூனன் அவையில் இருக்கிறானா என நோட்டமிட்டாள். பிராமண வேடத்தில் இருந்த அவன் கண்ணில் படவில்லை. கலக்கத்துடன் இருந்த அவளுக்கு பணிப்பெண்கள் அங்கு வந்திருந்த துரியோதனன், துச்சாதனன், இதர கவுரவர்கள், சகுனி, அஸ்வத்தாமன், கர்ணன், கண்ணனின் அண்ணன் பலராமன், கண்ணபிரான், கண்ணபிரானின் தம்பியும், போஜகுலத்தலைவனுமான சாத்தகி, கண்ணனின் எதிரி சிசுபாலன், மாவீரன் ஜராசந்தன், பகதத்தன், சல்லியன், நீலன் ஆகியோரை அறிமுகம் செய்தனர். கண்ணபிரான், பிராமண வடிவில் வந்திருப்பவர்கள் பாண்டவர்களே என புரிந்து கொண்டு தன்னோடு வந்த யதுகுல அரசர்களை போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சொல்லிவிட்டார். அவர்கள் விலகிக் கொண்டனர். ஒரு சிலர் முயற்சித்து பார்த்து தோற்றனர். எந்த அரசரும் வெற்றி கொள்ள இயலாத நிலையில் அர்ஜூனன் எழுந்தான்.

திருஷ்டத்தும்யுனா! நான் பிராமணன். எனினும் வித்தையறிந்தவன். நான் இங்கே சுழலும் மீன் சக்கரத்தை வீழ்த்தினால், எனக்கு உன் தங்கையைத் தருவாயா? என்றான். ஒரு பிராமணன் என் தங்கையை மணப்பது பாக்கியத்திலும் பாக்கியம், என்றான் திருஷ்டத்யும்னன். அர்ஜூனன் போட்டி விதிப்படி அந்த சக்கரத்தை பார்க்காமலேயே, பின்புறமாக திரும்பி நின்று ஒரே அம்பில் வீழ்த்தினான். சிவபெருமான் மேருமலையை வீழ்த்தியது போல் இருந்ததாம் இந்தக்காட்சி. பிராமண வடிவில் வந்து சக்கரத்தை வீழ்த்தியவன் அர்ஜூனனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று புரிந்து கொண்ட திரவுபதி அவன் கழுத்தில் மாலையிட்டாள். இதுகண்டு அரசர்கள் கொதித்தனர். நாமெல்லாம் க்ஷத்திரியர்கள். மாபெரும் வீரர்கள். நம் கண்முன்னால் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் குல பெண்ணை இழுத்துப் போகிறான். இது தகாது. அவனைக் கொன்று திரவுபதியை மீட்போம், என்றபடியே அர்ஜூனன் மீது பாய்ந்தனர். முதலில் கர்ணன் தான் பாய்ந்தான். அடேய் பிராமணா! நான் எமனை எதிரில் வந்தாலும் அவனோடு போரிடுபவன். உன்னை இந்த மண்ணில் வைத்து தேய்த்து விடுகிறேன், என்று கர்ஜித்தான்.

அர்ஜூனன் அவன் தோளில் ஒரு அம்பை விட்டான். வலி தாங்காமல் சாய்ந்தான் கர்ணன். அடுத்து சல்லியன் அவன் மீது பாய்ந்தான். அவனை பீமன் தூக்கி வீசினான். மார்பில் உதைத்தான். அவனது நெஞ்செலும்புகள் நொறுங்கி விட்டன. எனவே மற்ற அரசர்கள் மொத்தமாக அவர்கள் மீது பாய்ந்தனர். அப்போது கண்ணபிரான் குறுக்கிட்டான். மன்னர்களே! வந்திருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல! அவர்களும் க்ஷத்திரியர்களே. பஞ்சபாண்டவர்கள் இறந்து விட்டதாக உலகம் கருதி கொண்டிருக்கிறது. அவர்கள் தான் இவர்கள். அர்ஜூனனனே சக்கரத்தை வீழ்த்தி, திரவுபதியை கை பிடித்தவன், என்றார். அரசர்கள் அமைதியாக அமர்ந்து விட்டனர். பின்னர் துருபதனிடம் விடைபெற்று, திரவுபதியுடன் குந்திதேவி தங்கியிருந்த குயவன் வீட்டுக்குச் சென்றனர் பாண்டவர்கள். தர்மர் வாசலில் நின்றபடியே, அம்மா! நாங்கள் வந்து விட்டோம். ஒரு கனி கொண்டு வந்திருக்கிறோம், என்றார். உள்ளிருந்த குந்தி, அப்படியா! ஐந்து பேரும் பங்கு வைத்துக் கொள்ளுங்கள், என்றாள். தர்மர் இக்கட்டான நிலையில் இருந்தார். ஐயோ! தென்ன விபரீதம், நாம் கொண்டு வந்தது ஒரு பெண்ணை. அவளை கனிக்கு ஒப்பிட்டு சொன்னோம். தாயோ பங்கு வைத்துக் கொள்ள சொல்கிறாள். இவளை ஐந்து பேரும் மணக்காவிட்டால், தாய் சொல்லை மீறியதாகும்.

ஐவரும் மணந்தால், ஊர் உலகம் சிரிக்கும். திரவுபதியால் வெளியே தலைகாட்டவே முடியாது. என்ன செய்வது? என யோசித்துக் கொண்டிருக்கும் போதே குந்தி வெளியில் வந்தாள். தான் செய்த தவறை உணர்ந்தாள். தாய் சொன்னதை வேதவாக்காக ஏற்று, ஐவரும் அவளை மணக்க முடிவாயிற்று. திரவுபதியின் தந்தை துருபதன், குயவன் வீட்டில் இருந்த பாண்டவர்களை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். ஐவரும் அவளை மணம்முடிக்க இருந்ததைக் கேட்டு வருத்தப்பட்டான். அவன் மனம் குழம்பியிருந்த வேளையில் அங்கே வியாசர் வந்தார். மகரிஷி! சரியான சமயத்தில் வந்தீர்கள். என் இக்கட்டான நிலையை சொல்லுகிறேன். விடை சொல்லுங்கள், என்றதும், முக்காலமும் உணர்ந்த வியாசர் துருபதனிடம், மன்னா! நடந்ததையும், நடக்க இருப்பதையும் நானறிவேன். இந்த பந்தம் பூர்வஜென்ம பலனால் ஏற்பட்டது. உன் மகள் முற்பிறவியிலும் இவர்கள் ஐந்து பேருக்கே மனைவியாக இருந்தாள். அதற்கு முன் இவள் நளாயினி என்ற பெயரில் இப்பூவுலகில் வசித்தாள். இவளை அந்தணர்களின் தலைவரான மவுத்கல்ய முனிவர் மணம் செய்திருந்தார். தன் மனைவியின் பொறுமையையும், கற்புத்திறனையும் சோதிக்க இவளுக்கு பல சோதனைகள் வைத்தார்.

ஒரு கட்டத்தில் தனக்கு தொழுநோய் வந்தது போல நடித்தார். அப்போதும் அவரது மார்பையே தழுவினாள் இந்தப் பெண். ஒரு சமயம் தொழுநோயால் அழுகிய தன் விரலை உணவில் போட்டு வைத்து விட்டார். அதையும் அமிர்தமாய் நினைத்து உண்டாள் இந்தப் பெண். இதனால், மவுத்கல்யர் ஆனந்தம் கொண்டார். தன் பழைய சுந்தர வடிவை எடுத்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அப்போதும் இவள், உங்கள் மாறாத அன்பு வேண்டும், என்றுதான் கேட்டாள். அதன்பின் நளாயினி இறந்துவிட்டாள். மறுபிறவியில் இவள் இந்திரசேனை என்ற பெயரில் பிறந்தாள். முற்பிறவியில் மணந்த மவுத்கல்யர் இவள் கன்னிப்பருவம் அடையும் வரை உயிருடன் தான் இருந்தார். அவரைச் சந்தித்து முற்பிறவியில் தான் அவரது மனைவியாக இருந்ததைச் சொல்லி, இப்பிறவியிலும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டினாள். அவரோ, அப்போது குடும்ப வாழ்வை வெறுத்து தவவாழ்வை மேற்கொண்டிருந்தார். எனவே அவளை மணக்க மறுத்து விட்டார். எனவே சிவபெருமானை நினைத்து தவமிருக்க காட்டுக்குச் சென்று விட்டாள், என்ற வியாசர் கதையைத் தொடர்ந்தார்
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:47:29 PM
மகாபாரதம் பகுதி-32

இந்திரசேனையின் முன்னால் சிவபெருமான் தோன்றினார்.மகளே! நீண்ட காலமாக தவமிருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அவள் சிவனிடம், சுவாமி! எனக்கு நல்ல கணவரைத் தரவேண்டும், என ஐந்து முறை கேட்டாள். சிவபெருமானும் அப்படியே அருள்பாலித்தார். நீ ஐந்து முறை என்னிடம் கணவன் வேண்டும் என கேட்டதால் ஐந்து சிறந்த கணவர்கள் உனக்கு கிடைப்பார்கள், என்றார். இந்திரசேனை பதறிவிட்டாள். நான் தங்களிடம் ஐந்து முறை கேட்டதன் காரணம் மிகச்சிறந்த கணவர் அமைய வேண்டும் என்பதால்தான். தாங்கள் சொன்னதுபோல் ஐந்து கணவர்களை கேட்கவில்லை, என்றாள். நான் காரண காரியத்துடன்தான் எதையும் செய்வேன். உன்னை அவ்வாறு சொல்ல வைத்ததும் நான்தான். உலக நலன் கருதி நீ ஐந்து பேருக்கு மனைவியாக வேண்டி உள்ளது. அவர்கள் ஒற்றுமையுடன் இருந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இந்த அரிய தியாகத்தை செய்ய வேண்டி உள்ளது. ஒரு நல்ல செயலுக்காக விதிகளை மீற வேண்டி உள்ளது. எனவே எனது கட்டளைப்படி நீ நடக்க வேண்டும், என்று சொல்லி மறைந்தார்.

இந்திரசேனை மிகுந்த வருத்தமடைந்தாள். கங்கைக்கு சென்று நீராடி தான் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அது நீங்க வேண்டும் என கங்காதேவியை பிரார்த்தித்துக்கொண்டாள். ஆற்றில் குளிக்கும்போதே அவள் கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் கொட்டியது. அந்த கண்ணீர்த்துளிகள் தங்கத் தாமரைகளாக மாறின. அப்போது தேவலோகத்திலிருந்து இந்திரன் அங்கு வந்தான். அவன் இந்த அதிசயக் காட்சியைக் கண்டான். குளித்துவிட்டு கரையேறிய இந்திரசேனையை பின் தொடர்ந்தான். அப்போது சிவபெருமான் எதிரே வந்தார். அவரைக்கூட கவனிக்காமல் அந்த அதிசயப் பெண்ணைப் பற்றி சிந்தித்தபடியே இந்திரன் நடந்து கொண்டிருந்தான். இதனால் கோபமடைந்த சிவபெருமான், இந்திரனை சிறையிலடைத்தார். அங்கே ஏற்கனவே நான்குபேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்திரலோக அரசர்களாக இருந்தவர்கள். சிவபெருமான் இந்திரசேனையிடம், நான் குறிப்பிட்ட ஐந்து கணவர்களும் இவர்கள்தான். அடுத்த பிறவியில் இந்திரர்களாக இருந்த இவர்கள் ஐந்து பேரும் உன்னை மனைவியாக அடைவார்கள், என்றார். இந்திரசேனையின் ஆயுட்காலம் முடிந்தது. அவள் துருபதனான உனது மகளாக பிறந்தாள்.

 நீ பாஞ்சால தேசத்தை ஆள்வதால் மக்கள் அவளை பாஞ்சாலி என அழைத்தனர். நீ திரவுபதி என செல்லப் பெயரிட்டு அவளை அழைத்து வருகிறாய். இப்போது இந்த ஐந்துபேருக்குமே சிவபெருமானின் கட்டளைப்படி உலக நன்மை கருதி நீ அவளை மணம் முடித்து வைக்க வேண்டும், என்றார் வியாசர்.வியாசரின் வார்த்தைகளைக் கேட்ட துருபதன் உலக நலனுக்காக தன் மகளை பஞ்சபாண்டவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க சம்மதம் தெரிவித்தான். அழகிய திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. அங்கே ஐந்து பேருக்கும் அவளை தனித்தனியாக திருமணம் செய்து கொடுத்தனர். தன் மருமகன்களுக்கு ஏராளமான படைபலத்தையும், நாடுகளையும், செல்வத்தை யும் அள்ளிக்கொடுத்தான். இந்தச்செய்தி துரியோதனனை எட்டியது. அவன் மிகுந்த ஆத்திரமடைந்தான். இறந்துபோனதாக கருதப்பட்ட பாண்டவர்கள் மீண்டும் உயிரோடு வந்ததை அவனால் தாங்கமுடியவில்லை. பொறாமையால் அவன் பாஞ்சால தேசத்தின்மீது படையெடுத்தான். துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன், துரியோதனனை எதிர்த்தான். இரண்டு படைகளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. கவுரவப்படை பின்வாங்கியது. ஆனால் போர்க்களத்தில் கர்ணனும், சகுனியும் திருஷ்டத்யும்னனை தொடர்ந்து எதிர்த்தனர். இவர்களில் கர்ணனை நகுலன் எதிர்த்தான். அவனுடைய அம்புமழை கர்ணனை கடுமையாகத் தாக்கியது. காயமடைந்த அவன் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவிட்டான்.

சகாதேவன் சகுனியை விரட்டியடித்தான். பீமன் தனித்து நின்று துரியோதனன் உள்ளிட்ட நூறு கவுரவர்களையும் அடித்து நொறுக்கினான். தோற்றுப்போன துரியோதனப்படை தன் நாட்டை நோக்கி ஓடிவிட்டது. இந்த நேரத்தில் கண்ணபிரான் பாஞ்சால நாடு வந்து சேர்ந்தார். அவர் பாண்டவர்களுடன் இணைந்து அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லி வந்தார். பாண்டவர்கள் தங்களுக்கு கிடைத்த சீதன நாடுகளை நல்ல முறையில் ஆண்டனர். இந்நேரத்தில் அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் தன் தம்பி விதுரனுடன் ஆலோசனை செய்தான். பாண்டவர்களுக்கு உரிய நாட்டை கொடுத்து விடுவதே சிறந்தது என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி ஒரு தூதுவனை அனுப்பி பாண்டவர்களை அஸ்தினாபுரிக்கு வரவழைத்தான். அவர்களுக்குரிய ராஜ்ய பாகத்தை ஒப்படைத்து விட்டான். இதன்பிறகு தர்மருக்கே முடிசூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. தர்மரின் பட்டாபிஷேக நாளும் நெருங்கியது. வியாசரும் இன்னும் பல முனிவர்களும் தர்மரின் பட்டாபிஷேகத்தைக் காண வந்திருந்தார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குப்பிறகு திருதராஷ்டிரன் தர்மரை அழைத்தான். மகனே! நீ உன் தம்பிகளுடன் காண்டவபிரஸ்தம் நகருக்கு செல். அங்கே தங்கியிரு, என்றான்.

தர்மருக்கு அந்நகருக்கு எப்படி செல்வதென யோசனை எழுந்தது. ஏனெனில் அந்த நகரம் காட்டுப்பகுதியில் இருந்தது. ஊரே பாழடைந்து போய்விட்டது. மனிதர்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. இருந்தாலும் தம்பிகளை அழைத்துக் கொண்டு தர்மர் அங்கு புறப்பட்டார். கண்ணபிரானும் உடன் சென்றார். அவர் விஸ்வகர்மாவையும், இந்திரனையும் அழைத்தார். அவர்கள் கண்ணனை வணங்கி நின்றனர். இந்த காட்டை அழித்து இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அழகிய நகரத்தை நிர்மாணித்துக் கொடுங்கள். மூவுலகிலும் இதுபோன்ற நகரம் இருக்கக்கூடாது, என ஆணையிட்டார் கண்ணன். அதன்படி இந்திரனின் மேற்பார்வையில் விஸ்வகர்மா காண்டவபிரஸ்த நகரை அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டார். இரவு நேரத்தில்கூட அந்த நகரம் ஜொலித்தது. எங்கு பார்த்தாலும் தங்கத்தாலான மாட மாளிகைகள், அழகிய அரண்மனைகள், பெரிய மதில்கள், தோரண வீதிகள், பூஞ்சோலைகள், தடாகங்கள் என அருமையாக அமைக்கப்பட்டிருந்தது அந்நகரம். கண்ணபிரான் அந்நகரை சுற்றிப்பார்த்தார். இந்திரனின் மேற்பார்வையில் கட்டப்பட்டதால் அந்த ஊருக்கு இந்திரப்பிரஸ்தம் என பெயர் சூட்டினார்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:48:46 PM
மகாபாரதம் பகுதி-33

பேரழகுடன் விளங்கிய இந்திரபிரஸ்தம் நகரில் இந்திரலோகத்தில் கிடைக்காத பொருட்கள் கூட கிடைத்தன. அந்த பரந்தாமனே எழுப்பிய நகரம் அல்லவா? திலோத்துமை என்ற இந்திரலோகத்து பேரழகியும் அங்கே இருந்தாள். வயல்களில் மிக அதிகமாக கரும்பு விளைந்து, தேவைக்கு அதிகமானதால், வெட்டத் தேவையின்றி சாய்ந்து, அதில் இருந்து புறப்பட்ட சாறு ஆறாய் ஓடி, குளங்களை ஏற்படுத்தி யது. அன்னப்பறவைகள் அந்த கருப்பஞ்சாற்று குளங்களில் நீந்திய காட்சி பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது. இந்திரபிரஸ்தத்தில் ஏராளமான மக்கள் குடியேறினர். இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் பல தொழில் புரிந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். இந்த நேரத்தில் நாரத மகரிஷி இந்திரபிரஸ்தத்திற்கு வந்தார். இந்த கலகக்காரருக்கு இங்கே என்ன வேலை? அவர் வந்தால், ஏதோ ஒரு கலகம் நடந்தாக வேண்டுமே! ஆம்...அதை நடத்தி வைத்ததன் மூலம், பிற்காலத்தில் ஏற்படப்போகும் பாரதப்போரில் பாண்டவர்களுக்கு வெற்றியைத் தரும் சில நன்மையான செயல்களையும் நடத்தவே அவர் வந்து சேர்ந்தார். அவரை பாண்டவர்களும், குந்திதேவியும் வரவேற்று, ரத்தின சிம்மாசனத்தில் அமர வைத்தனர். ராஜோபசாரத்தை ஏற்றுக்கொண்ட நாரதர் திரவுபதியை அழைத்தார். மகளே!...நீ ஐவருக்கு மனைவியாய் இருக்கிறாய்.

ஒரே நேரத்தில் அவர்கள் ஐந்துபேரும் ஏதாவது கட்டளையிட்டால், நீ என்னதான் செய்வாய்? உலகில் ஒருத்திக்கு ஒருவன் என்பதே சமாளிக்க சிரமமான விஷயம். அந்த ஒருவன் சொன்னதை நிறைவேற்றவே, நம் தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள். உனக்கோ ஐந்து பேர். ஆளுக்கொரு வேலையைச் சொல்வார்கள். யார் சொன்னதை செய்ய முடியாமல் போனாலும் உன்னைத் திட்டுவார்கள். இந்த நிலைமை உனக்கு சிரமமாய் இருக்குமோ இல்லையோ? அது மட்டுமல்ல! இன்னும் சில பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வந்துவிடக்கூடாதே, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். திரவுபதி பதிவிரதை. சுவாமி! உங்கள் ஆசி இருக்கிறது, என் சகோதரன் கண்ணன் இங்கிருக்கிறார். அந்த பரந்தாமனின் அருளுடன் நான் எந்த சூழலையும் சமாளிப்பேன், என சொல்லிவிட்டாள். நாரதர் அவளது நம்பிக்கையை மனதுக்குள் மெச்சினார். ஆனாலும், பிரச்னையை அவர் விடவில்லை. பாண்டவர்களை அழைத்தார். அவர்களிடமும் இதே விஷயத்தைச் சொன்னார். சுவாமி! நீங்கள் சொல்வது நியாயம் தான். இதற்குரிய பாதையையும் நீங்களே காட்டிவிடுங்கள், என்றனர். தர்ம சகோதரர்களே! ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். நாராயணனால் வதம் செய்யப்பட்ட இரண்யகசிபுவை பற்றி நீங்கள் அறிவீர்கள்.

அவனது பேரன்கள் சுந்தன், உபசுந்தன். இரண்டு சகோதரர்களும் பிரிக்கமுடியாத அன்புடன் திகழ்ந்தனர். அவர்கள் மூன்று லோகங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்பினர். இதற்காக கடும் தவமிருந்து மும்மூர்த்திகளையும் வரவழைத்து வரமும் பெற்று விட்டனர். அது மட்டுமா! யாராலும் தங்களுக்கு அழிவுவரக்கூடாது என்ற வரமும் பெற்றனர். பிறகென்ன! அட்டகாசம் தான், அமர்க்களம் தான்! இவர்களது தொல்லையைப் பொறுக்கமுடியாமல் தேவர்கள் திலோத்துமை என்ற அழகியைப் படைத்து சுந்த, உபசுந்தர்கள் கண்ணில் படும்படி நடமாட வைத்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. அன்றுவரை ஒற்றுமையாக இருந்த அந்த சகோதரர்கள் மனதில், இவளை யார் முதலில் அடைவது என்ற எண்ணம் உண்டாயிற்று. சுந்தன் அவளது கையைப் பிடித்து இழுத்தான்.  உபசுந்தன் அவனிடமிருந்து அவளைப் பறித்தான். சுந்தன் தன் தம்பியிடம், அடேய்! அவள் உனக்கு அண்ணன் மனைவி. தாய் போன்றவள். தாயின் கையை பிடித்து இழுக்கிறாயே, என்றான். உபசுந்தன் அவனிடம், உஹூம்... அவள் என்னுடையவள். நீ என் அண்ணன். எனக்கு தந்தை போன்றவன். அவ்வகையில், அவள் உனக்கு மருமகள் ஆகிறாள். மருமகளை கையைப் பிடித்து இழுக்கிறாயே! வெட்கமாய் இல்லை, என்றான். வந்தது வினை. இருவரும் அந்தப் பெண்ணுக்காக கடும் போரிட்டனர். ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தனர்.

இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்பது இப்போது புரிந்து விட்டதா? உங்கள் ஐந்து பேருக்குள்ளும், திரவுபதியைக் குறித்து சண்டை வந்துவிடக்கூடாது. அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை அவளுடன் வாழ வேண்டும். அப்படி ஒருவர் அவளுடன் வாழும் போது, இன்னொருவர் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அப்படி பார்க்க நேர்ந்தால், அவர் ஒரு வருடம் மாறுவேடம் பூண்டு தீர்த்த யாத்திரை போய்விட வேண்டும். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்குத் தான் நல்லது, என்றார். தர்ம சகோதரர்களுக்கு அது சரியெனப்பட்டது. திரவுபதிக்கும் முழு மனநிறைவு. அவர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர். நாரதர் அவர்களிடம் விடைபெற்று கிளம்பி விட்டார். பாண்டவர்களும் இந்த விதிமுறையை எவ்வித பிசகுமின்றி கடைபிடித்தனர். ஆனால், விதி யாரை விட்டது? ஒருநாள், ஒரு அந்தணன், அரண்மனை வாசலில் நின்று, ஏ பாண்டவர்களே! நீங்கள் ஆளுவது நாடா இல்லை காடா? என்ன அரசாங்கம் நடத்துகிறீர்கள். பிரஜைகளை பாதுகாப்பவனே மன்னன். ஏ தர்மா! வெளியே வா! நியாயம் சொல், என்று கத்தினார். அந்தணரின் சப்தம் ஆயுதசாலைக்குள் இருந்த தர்மருக்கு கேட்க வில்லை. ஆனால், அரண்மனை உப்பரிகையில் உலவிக்கொண்டிருந்த அர்ஜூனனின் காதில், அந்தணனின் அவலக்குரல் கேட்டது. அவன் வேகமாக அந்தணன் நிற்குமிடத்துக்கு வந்தான்.

அந்தணரே! மன்னிக்க வேண்டும். அண்ணா ஆயுதசாலையை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு நியாயம் சொல்ல அவர் வரவேண்டும் என்பதில்லை. நானே பிரச்னையைத் தீர்த்து விடுகிறேன். தங்களுக்கு ஏதும் அநியாயம் நேர்ந்து விட்டதா? என்றான் கவலை தொனிக்க. வில்லாளி வீரனே! என் கறவைப் பசுக்களை இடையன் ஒருவன் பொறுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்பினேன். சில கள்வர்கள் அவனை அடித்துப் போட்டு விட்டு பசுக்களை ஓட்டி சென்று விட்டனர். செழிப்பு மிக்க ராஜாங்கம் நடத்துவதாக மார்தட்டுகிறீர்கள்! ஆனால், திருடர்கள் நம் நாட்டுக்குள் வந்து விட்டார்களே! என் மாடுகளை மீட்டுத்தா, என்றார். இவ்வளவுதானே! உமது பசுக்களை மீட்டுத்தருவது என் கடமை. நீங்கள் அமைதியாக இல்லத்துக்கு செல்லுங்கள். பசுக்கள் வந்து சேரும், என உறுதியளித்தான். அவசரமாக ஆயுதசாலைக்குள் புகுந்தான். அங்கே தற்செயலாக வந்திருந்த திரவுபதி அண்ணன் தர்மரின் அணைப்பில் இருந்தாள். அவளது முகத்தை கூட அர்ஜூனன் பார்க்கவில்லை. அண்ணனின் கால்களும், திரவுபதியின் சின்னஞ்சிறு அழகிய கால்களும் ஒன்றிணைந்திருப்பதைப் பார்த்து விட்டான். அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:50:18 PM
மகாபாரதம் பகுதி-34

தர்மரும், திரவுபதியும் இணைந்திருந்த காட்சியை அர்ஜூனன் கவனித்தாலும் மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அவன் நினைத்திருந்தால், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் மறைத்திருக்கலாம். பார்த்த ஒன்றையே பார்க்கவில்லை என பொய்சாட்சி சொல்லும் காலம் இது. காரணம், நமக்கு அதனால் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்! உயிர் மீது ஆசை. ஆனால், அர்ஜூனன் தர்மனின் தம்பியல்லவா! அந்த தர்மத்தின் சாயல் இவன் மீதும் படிந்திருந்தது என்பதில் ஆச்சரியமென்ன! அந்த பதட்டமான மனநிலையிலும் கடமையை அவன் மறக்கவில்லை. வில் அம்புடன் பசுக்களைக் கவர்ந்து சென்றவர்களை  தேடிச் சென்றான். சில நிமிடங்களில் அவர்களைப் பிடித்து விட்டான். பசுக்களை மீட்டு அந்தணர்களிடம் ஒப்படைத்தான். மனம் அலைபாய்ந்தது. தர்மரும், திரவுபதியும் வரும் வரை காத்திருந்தான். நடந்த விஷயத்தை தலைகுனிந்து சொன்னான். அர்ஜூனா! இதில் பாதகம் ஏதுமில்லை. ஆயுதசாலைக்குள் சல்லாபத்தில் ஆழ்ந்திருந்தது எனது குற்றமே! மேலும், நீ வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. அறியாமல் நடக்கும் தவறுக்கு மன்னிப்பு உண்டு. இதுபற்றி கவலை கொள்ளாதே, என்றார் தர்மர். அர்ஜூனன் மறுத்துவிட்டான்.

அண்ணா! தெரிந்து நடந்தது, தெரியாமல் நடந்தது என்ற வித்தியாசம் சட்டத்திற்கு கிடையாது. அது இருக்கவும் கூடாது. தெரிந்தே செய்துவிட்டு, தெரியாமல் செய்தேன் என தப்பித்துக் கொள்ள இது வழிவகுக்கும். மேலும், சட்டத்தை வகுத்தவர்களே அதை மீறுவது என்பது நமக்குள்ள மரியாதையைக் குலைத்து விடும். விதிமுறைகளின் படி நான் ஒரு வருட காலம் தீர்த்த யாத்திரை கிளம்புகிறேன். எனக்கு விடை கொடுங்கள், என்றான். தம்பியின் நேர்மையை எண்ணி பெருமிதமடைந்த தர்மர், அர்ஜூனனுக்கு அனுமதி கொடுத்தார். தாயிடமும், மற்ற சகோதரர்களிடமும் விடைபெற்று அவன் கங்கை கரைக்குச் சென்றான். கங்கைக்கரையில் மக்கள் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மத்தியில் ஒரு பேரழகி தன் தோழிகளுடன் நீராட வந்தாள். கலகலவென்ற சிரிப்பொலி கங்கைக் கரையை நிறைக்க, அவர்கள் ஆற்றில் இறங்கி நீராடினர். அர்ஜூனன் அவர்களைப் பார்த்தான். தோழிகள் சுற்றிலும் நின்று, அவள் மீது தண்ணீரை வாரியிறைக்க, வாழைத்தண்டிலும் வள வளப்பான வெண்ணிற கைகளால் அதை தடுத்து விளையாடினாள் அந்த கட்டழகி. அர்ஜூனனின் பார்வை அவள் மீது விழுந்தது. உலகில் இப்படியும் ஒரு பேரழகியா? இறைவா! உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே! இவள் மட்டும் எனக்கு கிடைத்தால்...! அவன் சிந்தித்தபடியே அவர்கள் நீராடுவதை கரையில் இருந்து வேடிக்கை பார்த்தான்.

இந்த காதலுக்கு மட்டும் காலமும் கிடையாது...இடமும் கிடையாது...ஆளும் புரியாது. அந்த பேரழகியும், கரையில் வில் அம்பு சகிதம் நின்றிருந்த அந்த பேரழகனைப் பார்த்து விட்டாள். ராமபிரானும், சீதையும் நோக்கியது போல, அவர்களின் கண்கள் கலந்தன. ஆ...எனது உலகில் கூட இப்படி ஒரு பேரழகனைக் கண்டதில்லையே. இவன் யார்? மணந்தால் இவனைத்தான் மணக்க வேண்டும். ஆனால், இவன் பூலோகவாசியாயிற்றே! நான் நாகலோகத்தவள் அல்லவா? இந்த உறவை யார் ஏற்பார்கள்? அவளது உள்ளம் கலங்கியது. தோழிகள் அவளது பார்வை சென்ற திசையை கவனித்தனர். அவர்கள் கேலி செய்யத் துவங்கி விட்டனர். எங்கள் தலைவியே! அந்த மாவீரனை கண்கொட்டாமல் பார்க்கிறாயே! அவன் மானிடன். அவனை நமது லோகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது, என்றனர் சிரிப்புடன். என் அன்புத்தோழிகளே! அப்படி சொல்லாதீர்கள். கண்டவுடன் அவன் மீது காதல் கொண்டு விட்டேன். தேசங்களை மட்டுமல்ல... இனங்களை மட்டுமல்ல...உலகங்களையும் கடந்தது இந்தக் காதல். நான் அவனை அடைந்தே தீர வேண்டும். அவன் யாரென விசாரியுங்கள், என்றாள். சாதாரணமாகத்தான் பேசுகிறாளோ என நினைத்த தோழிகளுக்கு அவளது காதலின் தீவிரம் புரிந்தது.

என்ன இருந்தாலும், தங்கள் ராணியல்லவா! அவர்கள், அந்த வாலிபனிடம் சென்றனர். அவனைப் பற்றி தெரிந்து கொண்டனர். தலைவிக்கு தகவல் சொன்னார்கள். என்ன... அவன் இந்திரனின் மகன் அர்ஜூனனா? எல்லா உலகமும் விரும்பும் அவனை இப்போது தான் பார்த்திருக்கிறேன். அவன் அர்ஜூனன் என்பது நிஜமானால், இப்போதே சொல்கிறேன். அவன் தான் என் கணவன், என்றாள். கரைக்கு அவசரமாகச் சென்றவள் அவனருகே சென்றாள். எதை எதிர்பார்த்தானோ, அது இவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடவே, அர்ஜூனன் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. அவளை அணைத்துக் கொண்டான். அவள் நாகலோகத்துக்கு அவனை அழைத்தாள். இருவரும் கங்கையில் மூழ்கினர். பிலாத்துவாரம் எனப்படும் நதியின் அடியிலுள்ள துவாரத்தின் வழியே நாகலோகத்துக்கு சென்றனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவள் கர்ப்பமானாள். ஒரு மகனைப் பெற்றாள். அவன் அரவான் என பெயர் பெற்றான். பின் மனைவியிடம் தான் வந்த நோக்கத்தைச் சொல்லி, பிராமண வேஷம் தரித்து, இமயமலைக்கு புறப்பட்டான். பின்னர் யமுனை, திருப்பதி, காஞ்சிபுரம், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், சிதம்பரம் தரிசனம் முடித்து, மதுரை வந்தான். மதுரையை ஆண்ட மன்னன் அவனை வரவேற்றான். அவனைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டான். அரண்மனையில் தங்க பிராமண வடிவத்தில் இருந்த அர்ஜூனனுக்கு அனுமதியளித்தான்.

அன்று மாலையில் அவன் அரண்மனைப் பூங்காவுக்கு சென்றான். அங்கேயும் ஒரு கட்டழகி இருந்தாள். அவளது இடை சிறியது. கண்கள் காந்த சக்தி கொண்டது. தோழிகளிடம் பேசும்போது, அவளது சிவந்த அதரங்கள் சிந்திய புன்னகைக்கு விலையே கிடையாது. அர்ஜூனனுக்கு அவளைப் பார்த்தவுடனேயே மயக்கம் ஏற்பட்டது. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆற்றுமணலைக் கூட எண்ணி விடலாம், அர்ஜூனன் பெண்டாட்டிகளை எண்ண முடியாது என்று. கட்டழகனைத் தேடி கட்டழகிகள் வருவது சகூம் தானே! தோழிகளின் பேச்சில் இருந்து அவள் மன்னன் மகள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆம்...அவள் இளவரசி சித்திராங்கதை.  அர்ஜூனன் தன்னை ஒளிந்திருந்து கவனித்ததை அவள் பார்க்கவில்லை. அவள் மீது கொண்ட மோகத்தால், தனது பிராமண வேடத்தை கலைத்து விட்டு, பேரழகு திலகனாக அவள் முன்னால் போய் நின்றான். சூரியன் தான் வானத்திலிருந்து திடீரென கீழிறங்கி வந்துவிட்டதோ, என அதிர்ந்து போன அவள், அதிர்ச்சியுடன் அவனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:51:48 PM
மகாபாரதம் பகுதி-35

அர்ஜூனனைக் கண்டஅவுடனேயே ராஜகுமாரி சித்திராங்கதை அவன் மீது காதல் கொண்டுவிட்டாள். அர்ஜூனனுக்கும் அவள் மீது கொள்ளை ஆசை பிறந்தது. இருவரும் காந்தர்வ மணம் செய்து கொண்டனர். விஷயம் பாண்டியமகாராஜாவை எட்டியது. வந்திருப்பது அர்ஜூனன் என்பதை அறிந்த பாண்டியராஜா மகிழ்ச்சியடைந்தார். தன் மகள் சரியான கணவனைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்பதை எண்ணி மகிழ்ந்தார். முறைப்படியாக அர்ஜூனனுக்கு தன் மகளை தாரை வார்த்துக் கொடுத்தார். மருமகனிடம், அர்ஜூனரே! எங்கள் குலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மிகச்சிறந்த குழந்தையாக இருக்கும் என்று எங்கள் முன்னோர்களில் ஒருவர் தவப்பயன் காரணமாக வரம் பெற்றார். அவரது காலத்துக்குப் பிறகு வந்த என் முன்னோர்களுக்கு ஆண்குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சிறப்பாக ஆட்சியும் செய்தனர். எனக்கோ பெண் பிறந்தாள். எனவே, அவளது காலத்துக்குப் பின் ஆளும் குழந்தைக்கு நீர் உரிமை கொண்டாடக் கூடாது. அவன் இந்திரபிரஸ்தத்துக்கு வரமாட்டான். எங்கள் பாண்டிய நாட்டையே ஆளுவதற்கு அனுமதிக்க வேண்டும், என்றான்.

அர்ஜூனனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பப்புருவாகனன் என குழந்தைக்கு பெயரிட்டனர். அந்தக்குழந்தையையும், மனைவியையும் மாமனார் பொறுப்பில் விட்டுவிட்டு அர்ஜூனன் தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தான். சேது சமுத்திரத்தில் நீராடிய பிறகு, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளித்து பாவங்களைக் கழுவினான். கன்னியாகுமரியில் புனித நீராடினான். பின்னர் வடதிசை நோக்கி பயணம் செய்து, துவாரகையை அடைந்தான். அங்கே கண்ணன் தன் தாய் தேவகி, அண்ணன் பலராமன், சகோதரி சுபத்ரா ஆகியோருடன் வசித்தார். கண்ணனின் தரிசனம் பெற அவரைச் சந்தித்தான். கண்ணன் அர்ஜூனனுக்கு ஆசிர்வாதம் செய்தார். இவ்வளவு நாளும் பிராமணவேடம் தரித்த அவன், இப்போது சன்னியாசியாக மாறியிருந்தான். கண்ணனுடைய சகோதரி சுபத்ரா, அர்ஜூனனை யார் என அறியாமலேயே அவன் மீது காதல் கொண்டிருந்தாள். அர்ஜூனனின் வில் வித்தை பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள். அந்த வீரனுக்கு மனைவியாக வேண்டும் என்பது அவளது நீண்டநாள் கனவு. இதை கண்ணனும் அறிவார். தங்கையை அர்ஜூனனுக்கு மணம் முடித்து வைப்பதில் அவருக்கு அலாதி பிரியம். ஆனால், கண்ணனின் யதுகுல மக்கள் இதுபோன்ற திருமணங்களை ஆதரிக்கமாட்டார்கள் என்பது தெரியும்.

சகோதரன் பலராமனோ, யதுகுலத்தைச் சேர்ந்தவனுக்கே தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன். அர்ஜூனனிடம் கண்ணன், அர்ஜூனா, நீ என் மைத்துனன் ஆக வேண்டும். அதற்கு என் தங்கையை மணக்க வேண்டும். நீ அவளுடன் அந்தப்புரத்தில் தங்கியிரு இதே சன்னியாசி வேடத்தில். சமயம் வரும் போது, அவளை கடத்திச்சென்று விடு. ஒரு பெண் மன்னர்களை விரும்பும்போது, மன்னர்கள் அவளைக் கடத்திச்செல்வது என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். என் தங்கை உன்னை விரும்புகிறாள். அவளை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றார். அர்ஜூனனுக்கும் சுபத்ரையை பற்றி நன்றாகத் தெரியும். அவள் பேரழகி, அறிவிலும், வீரத்திலும் சிறந்தவள் என்று. தேர்களை செலுத்துவதில் அவளுக்கு நிகர் அவளே. அவளைத் திருமணம் செய்து கொள்வதில், அவனுக்கு கொள்ளை ஆசை. கண்ணனின் திட்டப்படி, சன்னியாச வேடத்திலேயே அந்தப்புரத்தில் தங்கினான் அர்ஜூனன். கண்ணன் தங்கையிடம், சுபத்ரா! வந்திருப்பவர் மகாதபஸ்வி. அவருக்கு நல்லமுறையில் பணிவிடை செய், என்றார்.

வந்திருப்பது அர்ஜூனன் என்பதை அறியாத சுபத்ரா அவனை சன்னியாசியாக கருதி, கால் பிடித்தாள், கை பிடித்தாள். விதவிதமாய் உணவு படைத்தாள். ஒருமுறை அவனது மார்பை பார்த்துவிட்டாள். வயதானவர் போல் இல்லாமல், வீரத்தழும்பு களுடன் காட்சியளித்தது. அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனைப் பற்றி அறிவதற்காக, சுவாமி! தாங்கள் இந்திரபிரஸ்தத்தில் இருந்து வருவதாக அறிந்தேன். அங்கே தர்மமகாராஜா, பீமன், நகுலன், சகாதேவன், குந்திதேவியார் எல்லாரும் நலம்தானே? என்றாள். ஆம் என்ற அர்ஜூனன், பெண்ணே! எல்லாரையும் விசாரித்தாய், அர்ஜூனனை பற்றி ஏன் விசாரிக்கவில்லை, என்றான். அவள் வெட்கத்தால் தலை குனிந்தாள். அர்ஜூனன் அவளை வற்புறுத்தவே, அருகிலிருந்த தோழிப்பெண்கள், துறவியே! எங்கள் தலைவி, அர்ஜூனனை விரும்புகிறாள். அதன் காரணமாக வெட்கத்தால், அவரைப் பற்றி விசாரிக்கவில்லை, என்றாள். நீ விசாரிக்காவிட்டாலும் சொல்கிறேன் பெண்ணே! அந்த அர்ஜூனன், இப்போது இதே ஊரில் தான் இருக்கிறான், என்றவனை சுபத்ரா ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவர் எங்கு தங்கியிருக்கிறார்? என ஆர்வத்துடன் கேட்க, இதோ! உன் முன்னால் சன்னியாசி வேடத்தில் இத்தனை நாளும் இருந்தான். இப்போது வேஷம் கலைத்து உன் முன்னால் வருவான், என்ற அர்ஜூனன்,

வேஷத்தைக் கலைத்தான். அவள் மகிழ்ச்சியும், நாணமும் கலந்து நின்ற போது, கண்ணன் அங்கு வந்தார். பார்த்தீபா! நீ சுபத்ரையை தேரில் ஏற்றிக்கொள். அவள் தேரை ஓட்டட்டும். நீ தேரில் அமர்ந்து, உன்னை தடுக்க வருபவர்களை வெற்றிகொண்டு, ஊர் போய் சேர், என்றார். பின்னர் பலராமனிடமும் யதுகுலத்தவரிடமும் சென்று, அர்ஜூனன் சுபத்ராவை கடத்திச்செல்கிறான் என நல்லபிள்ளை போல் முறையிட்டார். சுபத்ரா தேர் ஓட்ட, அர்ஜூனனைப் பின்தொடர்ந்த பலராமன் மற்றும் யதுவீரர்களை அம்புமழை பெய்து விரட்டியடித்தான் அர்ஜூனன். பின்னர் நாடு போய் சேர்ந்தான். அங்கே சுபத்ரையை மணந்து கொண்டான். விஷயமறிந்த கண்ணன், பலராமனை சமாதானப்படுத்தி, சீதனப்பொருட்க ளுடன் இந்திரபிரஸ்தம் சென்றான். அங்கே சுபத்ராவுக்கும், அர்ஜூனக்கும் திருமணம் செய்து வைக்க வசிஷ்டரை மனதால் நினைத்தான். வசிஷ்டர் வந்தார். அவரது தலைமையில் மந்திரம் ஓதி திருமணமும் முடிந்தது. சுபத்ரா கர்ப்பமானாள். அவளுக்கு குரு÷க்ஷத்ர போரில் சரித்திரம் படைக்கப்போகும் ஒரு வீரமகன் பிறந்தான்
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:53:14 PM
மகாபாரதம் பகுதி-36

அர்ஜூனன் அந்த வீரமகனுக்கு அபிமன்யு என்று பெயர் சூட்டினான். இந்த சமயத்தில், அக்னி பகவான் அர்ஜூனனை சந்திக்க தேவலோகத்தில் இருந்து, அந்தணர் வேடத்தில் வந்தான். அவனுக்கு காண்டவவனத்தின் மீது ஒரு கண். அடர்ந்த அந்த காட்டில் லட்சக்கணக்கில் மரங்கள், செடி, கொடிகள், சிங்கம், கரடி, யானைகள், முக்கியமாக தக்ஷகன் என்ற நாகங்களின் தலைவன், அவனது மனைவி நாகமாது, மகன் அசுவசேனன் ஆகியோர் வசித்து வந்தனர். அவர்கள் எல்லாரையும் தன் நாக்கிற்கு இரையாக்கி விட அவனுக்கு ஆசை. இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால், அவனுக்கு அர்ஜூனனின் உதவி தேவை. அதெப்படி? ஒரு தேவன், மானிடனின் உதவியை நாடுவதாவது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும். காரணமில்லாமல், எதுவும் நிகழ்வதில்லை. அக்னியும், இந்திரனும் உடன் பிறந்தவர்கள் என்றாலும் பகைவர்கள். அக்னி எங்கெல்லாம் செல்கிறானோ, அவனை மழைக்கு அதிபதியான இந்திரன் தடுத்து விடுவான். பெருமழையைப் பெய்து தீயை அணைத்து விடுவான். அக்னியோ கொடும்பசியுடன் திரிவான். போதாக்குறைக்கு காண்டவவனம் இந்திரனுக்கு சொந்தமான இடம்.

தன் சொந்த இடம் அழிய அவன் சம்மதிப்பானா? எனவே அர்ஜூனனின் உதவியுடன், 60 யோஜனை தூரமுள்ள (ஒரு யோஜனை என்பது 24 கி.மீ.,) காட்டை சாப்பிட வேண்டும் என வந்து விட்டான். மூன்று லோகங்களிலும் வில் வித்தையில் சிறந்தவன் அர்ஜூனன் என்பது தேவர்களே ஒத்து  கொண்ட விஷயம். ஒருவேளை இந்திரன் மழையைப் பொழிந்தாலும், அர்ஜூனன் வானத்தில் சரமழை பொழிந்து அதை நிறுத்திவிடுவான் என்பது அக்னிக்கு தெரியும். மேலும், அர்ஜூனனின் மைத்துனர் கிருஷ்ணன் வேறு பூமியில் இருக்கிறார். ஒருமுறை, ஆயர்பாடி மக்கள் நடத்திய விழாவிற்கு தன்னை அழைக்காததால் ஆத்திரமடைந்த இந்திரன் பெருமழையை  பெய்வித்தான். அப்போது, பகவான் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்து, அதனை குடையாகப் பிடித்து மக்களை  காத்தார். அர்ஜூனன் தனக்கு உதவும் போது, கிருஷ்ணரும் தனக்கு உதவியாக வேண்டும் என்பது அக்னியின் கணக்கு. அவன் நினைத்தது போலவே நடந்தது. அக்னியின் வேண்டுகோளை அர்ஜூனன் ஏற்றான். காண்டவவனம் தனக்கு கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில், அக்னி பகவான் அர்ஜூனனுக்கு எடுக்க எடுக்க அம்புகள் குறையாத இரண்டு அம்பறாத்துணிகள், காண்டீபம் என்ற பெயர் கொண்ட ஒரு வில், அனுமனின் சின்னம் பொறித்த கொடி, தேர், நான்கு வெள்ளைக் குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்ததுடன், ஒரு தேரோட்டியையும் வழங்கினான்.

அர்ஜூனன் பிற்காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட குரு÷க்ஷத்ர களத்தில் பகவான் கிருஷ்ணனுடன் போராடப் போகிறான் என்பதை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட தேவர்கள் இவ்வாறு அவனுக்கு உதவினர். கிருஷ்ணரும், அர்ஜூனனும் காண்டவவனத்துக்குள் அக்னியுடன் புகுந்தனர். காட்டில் அக்னி தன் ஜ்வாலைகளை படர விட்டது தான் தாமதம்! உலகம் தீயால் அழியும் போது, எப்படி எரியுமோ, அதுபோல் காட்டில் பெரும் தீ மூண்டது. மரங்கள் கரிக்கட்டையாயின. செடி கொடிகள் பாழாயின. மிருகங்கள் ஓலமிட்டபடியே அழிந்தன. பாம்புகளின் தலைவனான தக்ஷகன் தன் இனத்தாரைக் காப்பாற்ற எடுத்த முயற்சி தோற்றது. பாம்புகள் கூண்டோடு அழிந்தன. கலவரமடைந்த தக்ஷகனின் மனைவி நாகமாது தன் குழந்தையான அஸ்வசேனனை வாயில் கவ்விக்கொண்டு, தீயில் இருந்து தப்பி ஓடியது. இவ்வளவு தீயிலும் தப்பி ஓடிவரும் அந்தப்பாம்பு அர்ஜூனனின் கண்களில் பட்டுவிட தன் அம்பால் அதன் தலையைத் துண்டித்தான். துண்டித்த தலையில் சிக்கியிருந்த அஸ்வசேன பாம்பு அந்த தலையுடன் வெகு தூரத்தில் போய் விழுந்தது. பின்பு தன் வாயிலிருந்து விடுபட்ட அந்த பாம்பு, வெகுதூரத்தில் போய் விழுந்தது. தாயின் மரணத்திற்காக வேதனைப்பட்ட அசுவசேன பாம்பு, வேகமாக ஊர்ந்து சென்றது. அது செல்லும் வழியிலுள்ள மற்ற பாம்புகளிடம் விசாரித்ததில், அர்ஜூனனின் கொடும் பகைவன் கர்ணன் என்பது தெரிய வந்தது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில், அர்ஜூனனின் எதிரியான கர்ணனின் அவைக்குள் நுழைந்த அந்தப்பாம்பு, அவனைச் சரணடைந்தது. பின்னர் ஒரு அம்பாக மாறி, கர்ணனின் அம்பறாத்துணியில் நாகாஸ்திரமாக அமர்ந்து கொண்டது. இதை எய்தால், எதிரே இருப்பவனை மாய்த்து விட்டு எய்தவனிடமே மீண்டும் திரும்பி விடும். மீண்டும் இதைப் பயன்படுத்தலாம். இப்படி காடு எரிந்து கொண்டிருக்க, காண்டவ வனத்தின் சொந்தக்காரனான இந்திரன், முப்பத்து முக்கோடி தேவர்களுடன் காண்டவ வனத்திற்கு வந்துவிட்டான். பெருமழை பெய்தது. அர்ஜூனன் இதை எதிர்பார்த்திருந்தான். சரமாரியாக அம்புகளை வானத்தில் ஏவி, மழையை காட்டுக்குள் விழாமல் தடுத்தான். எனவே, இந்திரன் தான் பெற்ற சொந்த மகனான அர்ஜூனனனுடன் மோதும் நிலை ஏற்பட்டது. கடும்போர் நடந்தது. இந்திரனாலோ, தேவர்களாலோ அர்ஜூனனை அசைக்க முடியவில்லை. அதே நேரம், அர்ஜூனனுக்கு பாம்புகளின் தலைவனான தக்ஷகன் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதிலும் கவலை.

கண்களை நாலாபுறமும் ஓடவிட்டு, அவன் இந்திரன் விடுத்த பாணங்களுக்கு, பதில் பாணங்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இதற்குள் அக்னி காட்டை முழுவதுமாக எரித்து விழுங்கிவிட்டான். அவனுக்கு பரமதிருப்தி. அவனது வயிறு குளிர்ந்தது. இந்திரனின் வயிறு எரிந்தது. இந்தக் காட்டில் தான் மயன் என்ற தேவசிற்பியும் வசித்தான். அவனும், சார்ங்கம் என்ற பறவை இனத்தின் நான்கு குஞ்சுகளும் மட்டும் தீயில் இருந்து தப்பினர். தக்ஷக பாம்பு என்னாயிற்று என்பது அர்ஜூனனுக்கு தெரியவில்லை. காடு முழுமையாக காவு போனதால் ஆத்திரமடைந்த இந்திரன், தாக்குதலை தீவிரப்படுத்தினான். அப்போது வானில் இருந்து ஒரு குரல் எழுந்தது. நிறுத்துங்கள் போரை! இந்திரனும் தேவன் தான். அர்ஜூனனும், கிருஷ்ணரும் தேவர்கள் தான்! எனவே வெற்றி தோல்வி யாருக்கு என்பதை இப்போர் நிர்ணயிக்காது. இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். தக்ஷகப்பாம்பு இங்கிருந்து தப்பி விட்டது. அது குரு÷க்ஷத்திரத்தை சென்றடைந்து விட்டது, என்றது.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:54:54 PM
மகாபாரதம் பகுதி-37

எப்படியாயினும், இந்திரனுடன் நடந்த இந்தப் போர் தங்களுக்கே வெற்றி தந்ததாக கிருஷ்ணரும், அர்ஜூனனும் எண்ணினர். தர்மரும் மகிழ்ச்சியடைந்தார். இந்த சமயத்தில், இந்திரப்போரில் உயிர் தப்பிய தேவசிற்பி மயன், தர்மரையும், கிருஷ்ணரையும் சந்தித்து நன்றி கூற வந்தான். காட்டில் இருந்த தன்னை தீயில் இருந்து காப்பாற்றியது கிருஷ்ணரே என்பது அவனது நம்பிக்கை. தர்மரிடம் அவன், குரு குல மன்னனே! உங்கள் தம்பி என்னை உயிருடன் விட்டதற்கு பரிகாரமாக, தேவலோக அரண்மனையான சுதர்மையை விட மிக அழகான அரண்மனை ஒன்றை உங்களுக்கு கட்டித்தர உள்ளேன். இதை கட்டுவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால், உங்களுக்காக இதை 14 ஆண்டுகளிலேயே கட்டி முடித்து விடுவேன். இதற்காக ஒரு சிறு மரத்துண்டையோ, கல்லையோ பயன்படுத்த மாட்டேன். அத்தனையும் ரத்தினங்கள். அவை உலகில் எங்கும் கிடைக்காதவை. பிந்து என்ற குளத்தில் இவை ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. விருஷபர்வா என்ற அசுரன் ஒரு காலத்தில் தான் வென்ற மன்னர்களிடமிருந்து பறித்த இந்த ரத்தினங்களை அந்தக்குளத்தில் பதுக்கி வைத்துவிட்டான். அவற்றை எனது 60 லட்சம் ஊழியர்களையும் அனுப்பி எடுத்து வருவேன். அந்த அபூர்வ ரத்தினங்களால் மாளிகை அமைத்து தருகிறேன், என்றார்.

கிருஷ்ணரும், தர்மரும் சம்மதம் தெரிவித்தனர். சொன்னபடியே 14 ஆண்டுகளில் கட்டி முடித்துவிட்டான் மயன். இந்த புதிய இல்லத்தின் கிரகப்பிரவேசம் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. கிருஷ்ணர் தர்மரிடம், தர்மா! கிடைத்தற்கரிய அரண்மனை உனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், ராஜ்யத்தின் எல்லைப்பரப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும். எனவே, நீ ராஜசூகயாகம் நடத்த அறிவிப்பு செய். உனது வெண்புரவியை அனுப்பு. அது எங்கெல்லாம் செல்கிறதோ, அந் நாடுகளை உனக்கு சொந்தமாக்கிக் கொள், என்றார். மைத்துனர் சொல்லுக்கு மறுசொல் உண்டா? தர்மர் சம்மதித்து விட்டார். மற்றவர்களை எளிதில் வென்று விடலாம். ஆனால், ஜராசந்தன் என்ற மகத தேசத்து மன்னனை வெல்வது எளிதான விஷயமல்ல என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். இவன் கிருஷ்ணனையே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய பெருமை படைத்தவன். இவன் யார் தெரியுமா? கிருஷ்ணன், கண்ணனாக கோகுலத்தில் சிறுவயதில் வளர்ந்த போது, தன் தாய்மாமன் கம்சனைக் கொன்றான். கம்சனுக்கு ஹஸ்தி, பிராப்தி என்ற மனைவியர் இருந்தனர். அவர்கள் ஜராசந்தனின் மகள்கள். அதாவது, கம்சனின் மாமனார் தான் ஜராசந்தன்.

தன் மருமகனைக் கொன்ற கண்ணனை. அவன் ஓட ஓட விரட்டியடித்தான். கிருஷ்ணர் தன் மக்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுடன் கடலின் நடுவில் இருந்த ஒரு தீவுக்கு அழைத்துச் சென்று அங்கேயே பதினெட்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். அந்த தீவு தான் இப்போது குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகை ஆகும். இப்படி தன்னை அவமானப்படுத்திய ஜராசந்தனைக் கொல்வதற்கு கிருஷ்ணன் தகுந்த நேரம் பார்த்திருந்தார். அதற்கு இந்த யாகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ஜராசந்தனைக் கொல்ல தகுதி படைத்த ஒரே வீரன் பீமன் மட்டுமே! அவன் கோடி யானை பலமுள்ளவனாக தன் வலிமையைப் பெருக்கியிருந்த நேரம் அது. அவனையும், அர்ஜூனனையும் அழைத்துக்கொண்டு, கிருஷ்ணர் மகத நாட்டுக்கு கிளம்பினார். ஜராசந்தனுக்கு பிறநாட்டு மன்னர்களை பிடிக்காது. மன்னராக வருபவர் யாரும் அவனது எல்கைக்குள்ளேயே கால் வைக்க முடியாது. எனவே, அவர்கள் பிராமணர் போல் வேடம் தரித்து அரண்மனைக்குள் சென்றனர். அந்தணர்களுக்கு மதிப்பளிக்கும் ஜராசந்தன் அவர்களை வரவேற்றான். ஆனால், கணநேரத்திலேயே வீரர்களுக்குரிய தழும்புகள் அவர்களது மார்பில் இருப்பதைக் கவனித்து விட்ட அவன் சுதாரித்து, நீங்கள் யார்? என்று கேட்டு வேஷத்தை கலைத்து விட்டான்.

வந்திருப்பது கிருஷ்ணன் என்றதும் அவனது ஆத்திரம் அதிகமானது. ஏ கிருஷ்ணா! நீ ஏற்கனவே என்னிடம் தோற்றோடி, கடலுக்குள் ஒளிந்து கிடப்பவன். உன்னிடம் போர் செய்வது எனக்குத்தான் அவமானம். இதோ! நீ அழைத்து வந்திருக்கிறாயே! வில்வித்தை விஜயன். இவன் சிறுவன். ஒரு சிறுவனிடம் மோதி என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இதோ நிற்கிறானே! ஒரு தடியன். இவன் பலசாலியாகத் தெரிகிறான். இவனோடு மோதி சொர்க்கத்துக்கு அனுப்புவேன், என்றபடி தொடைகளை தட்டியபடி போருக்கு அறை கூவல் விடுத்தான். கிருஷ்ணர் என்ன நினைத்து வந்தாரோ அது நடந்து விட்டது. நினைப்பதையெல்லாம் நடத்திக் கொள்ளும் பெருமை அந்த கிருஷ்ணனுக்கு உண்டு. அப்படியானால், அவர் ஜராசந்தனிடம் தோற்றோடியது போல் ஏன் நடித்தார்? அவர் மானிடனாகப் பூமியில் பிறந்திருக்கிறாரே! மானிடனாக பிறந்தவன், வாழ்க்கையின் பல கட்டங்களில் சரிந்து விழுந்தாக வேண்டுமே! அதற்கு அந்த கிருஷ்ணன் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன! போர் துவங்கியது. கடும் போர். 15 நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருவரும் போரிட்டனர்.

சம அளவிலான பலசாலிகள் என்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. ஏனெனில், 15ம் நாள் முடிவில், இருவருமே மயங்கி விழுந்துவிட்டனர். இவர்களில் யார் மயக்கம் தெளிந்து எழுந்து முதலில் அடிக்கிறாரோ அவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை. அதிர்ஷ்டவசமாக பீமனுக்கு முதலில் மயக்கம் தெளிந்தது. அவன் தடுமாறியபடியே எழுந்தாலும், சுதாரித்து ஜராசந்தனின் அருகே சென்றான். என்ன ஆச்சரியம்! இவனது கால்கள் தெரிந்ததோ இல்லையோ, ஜராசந்தனும் ஒரு துள்ளலுடன் எழுந்தான். மீண்டும் கடும் போர். ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து போன ஜராசந்தனை, தன் பலம் கொண்ட மட்டும் அழுத்திப்பிடித்த பீமன், அவனை இரண்டாக கிழித்தே விட்டான். அந்த மாமிசத்துண்டுகளை வீசி எறிந்து ஆர்ப்பரித்தான். மகதநாட்டு மக்கள் தலைகுனிந்த வேளையில், ஜராசந்தனின் உடல் ஒட்டிக்கொண்டது. அவன் துள்ளி எழுந்தான். இந்த அதிசயம் கண்டு கிருஷ்ணரைத் தவிர எல்லாரும் அதிர்ந்தனர். ஏனெனில், உடல் ஒட்டும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும்.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:56:19 PM
மகாபாரதம் பகுதி-38

போர் தொடர்ந்தது. ஜராசந்தன் புதுவலிமை பெற்று பீமனுடன் யுத்தம் செய்தான். அர்ஜூனன் ஆச்சரியத்துடன், கண்ணா! இதெப்படி சாத்தியம். அண்ணா பீமன், ஜராசந்தனை இரண்டாக கிழித்தபிறகும், அவனது உடல் ஒட்டிக்கொண்ட ரகசியம் என்ன? என்றான். கிருஷ்ணர் புன்சிரிப்புடன், அது ஒரு பெரியகதை என்று ஆரம்பித்தார். பிருகத்ரதன் என்ற அசுரன் தேவர்களுக்கு பரம எதிரி. இவனுக்கு இரண்டு மனைவிகள். காசிராஜனின் புத்திரிகள். ஆனால், புத்திர பாக்கியம் இல்லை. அவன் கவுசிகமுனிவரை அணுகி இதற்குரிய வழிகேட்டான். அப்போது முனிவர் ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அந்த மரத்தில் இருந்து ஒரு கனி முனிவரின் மடியில் விழுந்தது. அவர், அந்தப் பழத்தை பிருகத்ரதனிடம் கொடுத்து, இந்த அதிசயக்கனியை உன் மனைவியருக்கு கொடு. அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் என்றார். அவர்கள் ஆளுக்கு பாதியாக பழத்தைச் சாப்பிட்டனர். கர்ப்பம் தரித்து மகிழ்ந்திருந்தனர். ஒரே நாளில் பிரசவம் நிகழ்ந்தது. ஒரு மனைவி பாதி பிள்ளையையும், இன்னொருத்தி பாதி பிள்ளையையும் பெற்றனர். இதுகண்டு பயந்து போன பிருகத்ரதன், அந்த பாதிக் குழந்தைகளை கிரிவிரசம் என்ற நகருக்கு கொண்டு போய் வீசி எறிந்து விட்டான்.

அந்த வழியே ஜரை என்ற அரக்கி வந்தாள். அவள் இந்த அதிசயக்குழந்தைகளைக் கண்டாள். அவற்றை சாப்பிட மனமின்றி, ஒன்றோடு ஒன்றாகப் பொருத்தினாள். அவை இரண்டும் பொருந்தி அழகிய வடிவத்துடன் உயிர் பெற்றன. அந்தக் குழந்தையைப் பற்றி விசாரித்து, அதை பிருகத்ரதனிடமே ஒப்படைத்தாள். இவன் வெட்டிப்பிறந்த குழந்தை என்பதால் அவனுக்கு ஜராசந்தன் என்று பெயர் வைத்தான் பிருகத்ரதன். இவன் இப்படி பிறந்ததால் இவனது சாவும் அதன்படியே தான் ஆகும், என்ற கிருஷ்ணர், கதையைத் தொடர்ந்தார். அர்ஜுனா! ஜராசந்தனுக்கு ஒரு ஆசை, பூலோகம் முழுவதுமே தனக்கு அடிமைப்பட வேண்டுமென்று! இதனால், பல நாட்டு மன்னர்களை ஜெயித்து அவர்களின் நாட்டை தன் பிடிக்குள் கொண்டு வந்தான். அவர்கள் மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக அரசர்களைப் பலியிடும் நரமேதயாகம் செய்ய முடிவெடுத்தான். இதற்காக, அந்த அரசர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறான். அவர்களை விடுவிப்பது நமது கடமை, என்றார். பின்னர் பீமனிடம், அவனை இரண்டாகக் கிழித்து இடம் மாற்றிப்போடும் படி சைகை செய்தார். பீமனும் அவ்வாறே செய்ய ஜரா சந்தனின் கதை முடிந்தது. பின்னர் ஜராசந்தனால் சிறை வைக்கப்பட்ட அரசர்களை விடுதலை செய்தார் கிருஷ்ணர். ஜராசந்தனின் மகன் சகதேவன், கிருஷ்ணரை நமஸ்கரித்து சரணடைந்தான்.

அவனுக்கு பட்டம் சூட்டிய கிருஷ்ணர், மகதநாட்டை அவனிடமே ஒப்படைத்து விட்டார். பதிலுக்கு அவன், தன் செல்வத்தின் பெரும்பகுதியை பீமனுக்கு கொடுத்தான். இதன் பிறகு இந்திரப்பிரஸ்தம் வந்த அவர்கள், ராஜசூகயாகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பல திசைகளுக்கும் சென்று அந்நாட்டு அரசர்களை ஜெயித்தனர். யாகத்திற்கான பெரும்பொருளை சில அரசர்கள் தாங்களாகவே கொடுத்து விட்டனர். பீமனின் மகன் கடோத்கஜனை வரவழைத்த சகாதேவன், நீ இலங்கை சென்று அந்நாட்டு மன்னனிடம் பொருள் பெற்று வா, என அனுப்பினான். அப்போது இலங்கையை ராவணனின் தம்பி விபீஷணன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட காரியம் என்றது மட்டுமல்லாமல், கடோத்கஜன் தன் குலத்தைச் சேர்ந்த இடும்பியின் மகன் என்பதால் பெருமையடைந்து, 14 தங்க பனைமரங்களைக் கொடுத்தான். சித்தப்பாவின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் விடைபெற்றான். ராஜசூய யாகத்திற்கு பீஷ்மர், கவுரவர்கள், கர்ணன் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டனர். எல்லா நாட்டு மன்னர்களும் வந்தனர். அவர்களில் ஒருவன் சிசுபாலன். இவன் ஒரு பிறவியில் வைகுண்டத்தில் காவல்புரிந்தவன்.

விஜயன் என்ற பெயர் கொண்டவன். இவனோடு பணிசெய்த மற்றொருவன் ஜெயன். இவர்கள் ஒரு முறை நாராயணனைக் காணவந்த துர்வாசமுனிவரை தடுத்து நிறுத்தவே, கோபமடைந்த அவர், இவர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் ஏழு பிறவிகள் பகவானின் பக்தர்களாக பூமியில் பிறப்பார்கள் என்று சொல்லவே, ஜெயவிஜயர்கள் அழுதனர். எனவே, மூன்று பிறவிகள் பிறந்து பகவானுக்கு எதிராகச் செயல்படத்தயாரா எனக் கேட்ட போது, பிறவிகள் குறைந்தால் போதும் என ஒப்புக்கொண்டனர். அதன்படி கிருதயுகத்தில் இவர்கள் இரண்யனாகவும், இரண்யாட்சனாகவும் பிறந்து, பெருமாளுக்கு எதிராக நடந்தனர். பெருமாள் நரசிம்மராகவும், வராகமூர்த்தியாகவும் அவதாரம் எடுத்து அழித்தார். திரேதாயுகத்தில் கும்பகர்ணனாகவும், ராவணனாகவும் பிறந்தனர். லட்சுமிதாயின் அம்சமான சீதாதேவிக்கு இன்னல் செய்து, ராமனாய் பிறந்த விஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். வாபராயுகத்தில் கம்சனாகவும், சிசுபாலனாகவும் பிறந்தனர். இப்போது கிருஷ்ணராக அவதாரமெடுத்த பகவான் கம்சனை ஏற்கனவே கொன்றுவிட்டார். சிசுபாலன் தன் அழிவிற்காக காத்திருக்கிறான். சிசுபாலனின் தாய் கிருஷ்ணனின் பக்தை. அவள் பகவானிடம், கிருஷ்ணா! என் பிள்ளையைக் கொன்றுவிடாதே. அவன் மீது நான் வைத்துள்ள பாசம் ஏராளம், என்றாள். பேச்சில் வல்லவரான கிருஷ்ணன், தாயே! உன் மகன் நூறு தவறு செய்யும்வரை பொறுத்திருப்பேன். அதைத் தாண்டினால் கொன்றுவிடுவேன், என சொல்லிவிட்டார்.

சிசுபாலன் ராஜசூகயாகத்தின் போது நூற்று ஒன்றாவது தவறைச் செய்ய வந்திருக்கிறான். யாகத்தின் போது அக்கிர பூஜை என்ற சடங்கை நடத்துவார்கள். உலகில் யார் உயர்ந்த மன்னரோ, அவருக்கு அந்த பூஜை நடத்தப்படுவது வழக்கம். கிருஷ்ணர் துவாரகாபுரியின் மன்னரல்லவா! அவ்வகையில் அவரே இந்த பூஜைக்குரியவர் என்றார் யாகத்திற்கு வந்திருந்த வியாசமுனிவர். இதை சிசுபாலன் எதிர்த்தான். யார் இந்த கருப்பனுக்கா அக்கிர பூஜை செய்யப் போகிறீர்கள்? மாடு மேய்க்கும் இவனுக்கு பூஜை பெற என்ன தகுதியிருக்கிறது? கோகுலத்தில் வெண்ணெய் திருடிய இந்த திருடனுக்காக அக்கிர பூஜை? மேலும், இவன் பெண் பித்தனல்லவா? கோபியர்கள் குளிக்கும்போது, துணிகளை திருடி மரத்தின் மேல் இருந்தபடி அவர்களை நிர்வாணமாக ரசித்தவன் அல்லவா? ஜராசந்தனுக்கு பயந்து ஓடி துவாரகையில் ஒளிந்து கொண்டிருக்கும் இவனுக்கு பூஜை செய்வதை நான் எதிர்க்கிறேன். வீரம்மிக்க பல அரசர்கள் இங்கிருக்கும் போது, இந்த பேடிக்கா பூஜை என்றான் ஏளனம் கலந்த சிரிப்புடன். கிருஷ்ணரின் கண்கள் சிவந்தன.
Title: Re: மகாபாரதம்
Post by: Anu on February 20, 2012, 12:57:48 PM
மகாபாரதம் பகுதி-39

அவர் சிசுபாலனிடம், சிசுபாலா, நாம் இருப்பது வேறொருவரின் நாட்டில்! இல்லாவிட்டால், உன் சிரத்தை இப்போதே அறுத்திருப்பேன். நாம் இருவருமே நகரின் வெளியே செல்வோம். அங்கு போர் செய்வோம். உனக்கு இன்றுதான் இறுதிநாள், என்றார். சிசுபாலன் சற்றும் மனம் கலங்காமல், போருக்கு புறப்பட்டான். கடும் போர் நடந்தது. சற்றும் சளைக்காமல் சண்டையிட்டான் சிசுபாலன். தகுந்த நேரத்தில், தன் சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை அறுத்தார் கிருஷ்ணன். உடனே, சிசுபாலனின் உயிர் பிரகாசம் மிக்க ஒளிப்பந்தாக மாறி, வைகுண்டம் சென்றடைந்தது. இதுகண்டு, போரை வேடிக்கை பார்த்த அரசர்கள் ஆச்சரியப்பட்டனர். கிருஷ்ணர், பூலோகத்தில் இருந்தபடியே வைகுண்டத்தை அனைவர் கண்ணிலும் காட்டியது பெறற்கரிய பேறாக அங்கு வந்தோர்க்கு அமைந்தது. அவர் அவைக்கு திரும்பியதும், எல்லா மன்னர்களும் அவரை நமஸ்கரித்தனர். சிலர் பரந்தாமா, கோவிந்தா என நாக்குளற பாடினார்கள். ஒருவழியாக யாகம் சிறப்பாக முடிந்தது. மன்னர்கள் ஊர் திரும்பி விட்டனர்.

துரியோதனன் ஊருக்கு திரும்பியவுடன் அவையைக் கூட்டினான். பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சகுனி இவர்களுடன் மன்னர் திருதராஷ்டிரன், தாய் காந்தாரி மற்றும் அமைச்சர் பெருமக்கள் வீற்றிருந்தனர். துரியோதனன் அமைதியாக இருந்தான். ஆனால், அவன் முகரேகைகளின் குறிப்பைக் கொண்டே அவனது சிந்தனை என்ன என்பதை அங்கிருந்தோர் யூகித்து விட்டனர். அவர்களில் கர்ணன், என் அன்பு நண்பனே! தர்மன் இந்த உலகில் தானே ராஜாதி ராஜா என்பதை நிரூபித்து விட்டான். அவனது யாகத்திற்கு தேவர்களே திரண்டு வந்து விட்டனர் என்றால், அவனது மகிமையைச் சொல்ல வார்த்தைகள் ஏது? இனி அவனுக்கு நிகர் அவன் தான், என்றான். சகுனி எழுந்தான். கர்ணா! நீ சொல்வது தற்காலிகமானது. என் மருமகன் துரியோதனன் சிங்கம். தர்மன் யானை. இந்த சிங்கம் இன்று குகைக்குள் இருக்கிறது. பசித்திருக்கும் சிங்கம் வெளியே வந்தால் யானையின் கதி என்னாகும் என்பது தெரியும் தானே! என்றான், தனக்கே உண்டான நமட்டுச்சிரிப்புடன். துரியோதனின் தம்பி துச்சாதனன், மாமா! அந்த தர்மன் சந்திரன். என் அண்ணனோ சூரியன்.

சூரியனின் முன்னால் பகல் நேரத்து சந்திரனின் நிலைமையை கேட்கவா வேண்டும்! என ஏதோ உலக மகா தத்துவத்தை உதிர்த்து விட்டது போல் சிரித்தான். புகழ்ச்சியும், பொறாமையும் மனிதனை அழித்து விடும் இரண்டு பெரிய கருவிகள். சொந்த சித்தப்பா மகன் நன்றாக இருப்பதைக் காண துரியோதனனுக்கு பிடிக்கவில்லை. அந்த பொறாமைக்காரனுக்கு தூபம் போடுவது சொந்த தாய்மாமனும், தம்பியும். நண்பர்கள் தக்க நேரத்தில் தக்கதை எடுத்துச் சொல்ல வேண்டும். கர்ணன் அந்த விஷயத்தில் தவறிவிட்டான். இந்த வஞ்சகர்கள் பேசிய கவர்ச்சி வார்த்தைகள் துரியோதனனுக்கு மகிழ்ச்சியளித்தன. அற்பர்கள் அற்பமான வார்த்தையைக் கேட்டு மகிழ்வது இயற்கைதானே! இன்றுவரை அரசியல் உலகில் இதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்! அவன் சபையோரிடம், அன்பர்களே! தர்மனின் பலம் அதிகரித்து வருகிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் அவன் மேலும் மேலும் உயர்ந்து அசைக்க முடியாத இடத்துக்கு போய்விடுவான்.

நான் இந்திரபிரஸ்தத்து அரண்மனையில் நுழைந்து, ராஜமண்டபத்தில் நுழைந்ததும் ஒரு இடத்தில் கிடப்பது பளிங்கு கல் என நினைத்து, தண்ணீர் தடாகத்தில் விழுந்து விட்டேன். இதைப் பார்த்து என் ஜென்ம விரோதி பீமனும், அவனோடு நின்ற திரவுபதியும் கேலி செய்து சிரித்தனர். என்ன செருக்கு அவர்களுக்கு! என் மனதை விட்டு எந்நாளும் அது நீங்காது. அந்த பீமனை நானும் அவமானப்படுத்த வேண்டும். அந்த திரவுபதியை மானக்கேட்டுக்கு ஆளாக்க வேண்டும். தர்மனை பதவியிலிருந்து இறக்க வேண்டும்,என்றான். துச்சாதனன் அவனிடம், அண்ணா! நாம் உடனே போருக்கு புறப்படுவோம். பாண்டவர்களின் வலதுகையான கிருஷ்ணன், இப்போது சல்லியனின் (நகுல சகாதேவரின் தாய்மாமன்) நாட்டுக்கு படையெடுத்துச் சென்றிருக்கிறான். சல்லியன் மகாவல்லவன். அவன் அவ்வளவு எளிதில் கிருஷ்ணனை விடமாட்டான். இந்த சமயத்தில் தர்மனை வெல்வது எளிது,என்றான். கர்ணன் எழுந்தான். நண்பா! என் வில்லுக்கு வேலை கொடு. பாண்டவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக வருவோரையும் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுகிறேன், என கர்ஜித்தான். சகுனி அவனை கையசைத்து அமரச் சொல்லிவிட்டு, துரியோதனா, உன் தம்பியும், கர்ணனும் நீ அழிவதற்கான யோசனையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தர்மனை எதிர்த்து ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அவனது தம்பி பீமன் கீழே சரிந்து விழுந்தால் கூட, அங்கே நடந்து கொண்டிருக்கும் நூறுபேர் நசுங்கி விடுவார்கள். அர்ஜூனனின் வில்பலத்தை திரவுபதியின் சுயம்வரத்தில் நாம் கண்டிருக்கிறோம். அப்படியிருந்தும், போர் என்பது இப்போது உசிதமல்ல. வஞ்சனையால் தான் அவர்களை வெல்ல முடியும். அதற்கு ஒரே வழி சூது. சூதாட்டம் நல்ல குடும்பங்களை அழித்து விடும் என்பது உலக நியதிதானே, என்றவாறு நமட்டு சிரிப்பு சிரித்தான். மாமாவின் யோசனை மருமகனுக்கு பிடித்து விட்டது. மாமா! இங்கே வாருங்கள். இந்த ஆசனத்தில் நீங்களும் அமருங்கள், என்று தன் ஆசனத்திலேயே அமர இடம் கொடுத்தான். சகுனிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மருமகன் அருகே ஒன்றாக அமர்ந்து கொண்டான்.