"நான் சின்ன பையனா இருக்கிறப்போ அஞ்சு ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் பொம்மை வாங்கி தர மாட்டாரு எனது அப்பா.ஆனா நம்ப பையனுக்கு ஆயிரம் ரூபாவுக்கு பொம்மை வாங்கி தந்தேன்" .....
"ஆமா அதுக்கென்ன"?
"படிக்கிறப்போ எங்க அப்பா எனக்கு வாங்கித்தது எல்லாம் பழைய புத்தகம். ஆனால் நா அவன் கிழிக்க கிழிக்க புது புது புத்தகமா வாங்கித் தந்தேன்".
"அதான் ஏற்கனவே சொல்லி இருக்கிறீங்களே".
"நான் ஸ்டூடண்டா இருக்கிறப்போ ஐம்பது ரூபா கூட தர மாட்டாரு என் அப்பா. ஆனா நம்ப பையன் காலேஜ் போறப்போ 1௦௦ ரூபா பாக்கெட் மணியாக தந்தேன்".
"படு கஞ்சத்தனமா இருந்து எங்க வளத்தாரு எங்க அப்பா. ஆனா நான் நம்ப பையன் கேட்கிறதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தேன்".
"ஆமா ஸ்மார்ட் போன் கூட வாங்கி கொடுத்ததை சொன்னிங்க.அதான் பல தடவை சொல்லிடீங்களே".
"வசதியே இல்லாம என்னை வளர்த்தாலும், என்னை பெத்தவங்கள நான் உயர்ந்த இடத்தில வச்சி அழகு பார்த்தேன்".
"நீங்க எல்லா வசதியோடையும் பிள்ளைகளை வளர்த்தும் அவன் நம்மை இந்த முதியோர் இல்லத்துல வச்சி அழகு பார்க்கிறான். ரொம்ப செல்லமா வளர்ந்ததும் தப்பு போல. சரி விடுங்க. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்".