FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on September 09, 2011, 04:36:25 PM

Title: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 09, 2011, 04:36:25 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1  


ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/oracle-delphi.jpg)

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.




அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

இந்த கி.மு, கி.பி நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 09, 2011, 04:40:28 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-2  



"அறிவியலில் எல்லா வினாக்களுக்கும்(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/WitchWithCrystalBall.png) விடையில்லை" என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.


ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. "தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்" என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.

இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.

1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.

1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."

இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.

1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.

1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு. உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.

இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.

ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

அவற்றையும் பார்ப்போமா?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 09, 2011, 04:50:02 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-3



 "என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்" என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.                   

அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
                                                          (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Cayce_1910.jpg)

எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.

எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.

அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.

கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். "கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை."

ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். "அந்த மனிதர் இறந்து விட்டார்". உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.

பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். 'மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?'

இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.

எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. "சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது". அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.

1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். "மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்" என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.

எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?

மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....



Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 10, 2011, 06:54:32 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-4  


அனுபவம் மிக்க மருத்துவரே தடுமாறும் சில மருத்துவப் புதிர்களில் அனாயாசமாக எப்படி எட்கார் கேஸால் பதில் கண்டு பிடிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு எட்கார் கேஸ் எளிமையாகப் பதில் சொன்னார்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாக எட்கார் கேஸ் சொன்னார். அவற்றை அவர் Akashic Records (ஆகாய ஆவணங்கள்) என்றழைத்தார். அதைப் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அறிவையும், தகவலையும் சுலபமாகப் பெற முடியும் என்றார். எட்கார் கேஸ் உபயோகித்த அந்த ஆகாசம் என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். அவர் சொன்ன கருத்தும் நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.
                                                                     (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/sri-yukteswar-giri-photo.jpg)

கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி·பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். "நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?"

யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார்.

யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி·ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் "இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார்" என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.

யுக்தேஸ்வர் சொன்னார். "இப்போது அவன் திரும்புவான் பார்".

அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி·ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.


யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். "அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி·ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி·ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்....."(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/yogananda.jpg)

யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி·ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.

யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது "விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும்" என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.

சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.

இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.

"நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்"

அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார். அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.

எட்கார் கேஸ் சொல்வதையும் யோகானந்தர் சொல்வதையும் பார்த்தால் தொலைக் காட்சியில் விருப்பப்பட்ட சேனல் பார்க்க முடிவதும் வானொலியில் விருப்பப்பட்ட ஸ்டேஷன்களைக் கேட்க முடிவதும் எவ்வளவு இயல்போ இதுவும் அவ்வளவு இயல்பே. நம் மனதை ஒரு ஏண்டனாவாக அமைத்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில் அலைகளாக இருக்கின்ற, நமக்குத் தேவைப்படுகின்ற தகவல்களை ஈர்த்துப் படிக்கும் வித்தையையும் கற்றுக் கொள்ள முடியும் என்கிறது பலரது அனுபவங்கள்

இது பெரிய அற்புதமாகத் தோன்றினாலும் அதீத சக்தி படைத்த அனைவருமே இதை ஆழமாக நம்பியதாகவும், இதை உபயோகித்து இருப்பதாகவும் தெரிகிறது. இன்று ரேடியோவும் தொலைக்காட்சியும் நம்மை எப்படி அதிசயிக்கச் செய்வதில்லையோ அது போல் இதுவும் ஆழ்மனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதில்லை. இப்படி விண்வெளியிலிருந்து தகவல்களைப் பெறும் வித்தைகளை அறிந்திருந்த வேறு சிலரின் சுவாரசியமான அனுபவங்களையும் பார்ப்போமா?
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 10, 2011, 06:59:52 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-5  


எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.
(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/BlavatskyandCol_Olcott.jpg)

"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vivekananda.jpg)

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.

நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?

இனியும் ஆழமாய் பயணிப்போம்.
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 12, 2011, 02:22:20 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-6  


விவேகானந்தா சந்தித்த சாது அவருடைய எண்ணத்திலும், அவருடைய நண்பர்கள் எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியது போல் ரஷியாவில் ஒருவர் சர்வாதிகாரி ஸ்டாலினையே ஆச்சரியப்படுத்தினார். ரஷிய மருத்துவரும் ஆழ்மன ஆரார்ய்ச்சியாளருமான லியோனிட் லியோனிடோவிச் வாசிலிவ் (1891-1966) என்பவர் சர்வாதிகாரி ஸ்டாலினை ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி கேட்டு அணுகினார். கம்யூனிஸ்டான ஸ்டாலினிற்கு இந்த ஆழ்மன சக்திகளில் சுத்தமாக நம்பிக்கை இருக்கவில்லை.

                                                     (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/200px-JStalin_Secretary_general_CCCP_1942.jpg)


தன்னிடம் உள்ள சக்தியை நிரூபிக்க ஸ்டாலினை அவருடைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவருடைய தனியறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பதாக வாசிலிவ் சொன்ன போது ஸ்டாலினுக்கு சிரிப்பு தான் வந்தது. அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் விருப்பப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார். உடனடியாக தன் பாதுகாவலர்களை அழைத்து வாசிலிவ் பற்றிச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அவரை தன்னை வந்து சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிய ஸ்டாலின் பின் அந்த விஷயத்தையே மறந்தார்.

வாசிலிவ் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இரவு நேரத்தில் அவரது தனியறையில் வந்து நின்ற போது ஸ்டாலினிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. உடனடியாக வெளியே நின்றிருந்த தன் பாதுகாவலர்களை அழைத்த ஸ்டாலின் வாசிலிவைக் காட்டி தன் கட்டளையை மீறி அவரை உள்ளே விட்டது ஏன் என்று கேட்டார். மிரண்டு போன பாதுகாவலர்கள் அவரைத் தாங்கள் பார்க்கவேயில்லை என்று சாதித்தனர். கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின் அவர்களுக்கு அந்த இடத்திலேயே மரண தண்டனை விதித்து ஆணையிட வாசிலிவ் இடைமறித்து தவறு அவர்களிடத்தில் இல்லையென்று சொன்னார். ஸ்டாலினிற்கு மிக நெருக்கமான ஆலோசகர் ஒருவருடைய உருவத்தை பாதுகாவலர்கள் மனதில் ஏற்படுத்தி தான் அவர்களைக் கடந்து வந்ததாக வாசிலிவ் சொன்னார். விசாரித்த போது பாதுகாவலர்கள் அனைவரும் அந்த ஆலோசகரைப் பார்த்ததாக ஒருமித்து சொன்னார்கள். வியப்புற்ற ஸ்டாலின் மரணதண்டனையை விலக்கிக் கொண்டார்.

ஆனாலும் இந்த மனோசக்தி ஸ்டாலினைக் குழம்ப வைத்தது. ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தந்த ஸ்டாலின் வாசிலிவை இன்னொரு அதிசயத்தைச் செய்து காட்டச் சொன்னார். ஒத்துக் கொண்ட வாசிலிவ் ஸ்டாலினுக்கு நம்பகமான இருவரைத் தன்னுடன் ஒரு வங்கிக்கு அனுப்பச் சொன்னார். உடனடியாகத் தன் ஒற்றர் படையில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அவருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

வங்கிக்குச் சென்ற வாசிலிவ் ஒரு வெள்ளைக் காகிதத்தை வங்கி கேஷியரிடம் தந்து அதற்கு ஆயிரம் ரூபிள்கள் தரச் சொன்னார். அதை வாங்கிய கேஷியர் மனதில் வாசிலிவ் அது ஆயிரம் ரூபிளுக்கான வங்கிக் காசோலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர். அந்தக் கேஷியர் அதை வாங்கிப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஆயிரம் ரூபிள்களை எண்ணி அவரிடம் தந்ததை ஸ்டாலினின் ஒற்றர்கள் விழிகள் பிதுங்கப் பார்த்தனர். பின் அந்தக் கேஷியரிடம் மீண்டும் அந்தப் பணத்தைத் தந்த வாசிலிவ் அந்தக் காகிதத்தை இன்னொரு முறை பார்க்கச் சொல்ல, வெள்ளைக் காகிதத்தைப் பார்த்த வங்கி கேஷியர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபிள்கள் என்பது மிகப் பெரிய தொகை.

இறுதியில் ஸ்டாலின் உறுதியளித்தபடி ஆழ்மன ஆராய்ச்சிக்கூடத்தை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் நிறுவ அனுமதியளித்தார். நாட்டு விஷயங்களிலும், தனிப்பட்ட அரசியல் விஷயங்களிலும் கூட ஸ்டாலின் வாசிலிவின் சக்தியினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எல்லா சர்வாதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய சந்தேகமும், பயமும் ஸ்டாலினிற்கும் இருந்ததால் அவர் அவ்வபோது அந்த ஆராய்ச்சிகளுக்குக் காட்டிய உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டார். அரசியல் கலக்காத மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகள் பற்றிய விவரம் கூட வெளிவருவதை ஏனோ அவர் விரும்பவில்லை. அதனால் 1920, 1930களில் வாசிலிவ் மனோசக்தி குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து வெற்றி கண்ட விவரங்கள் 1960 கழிந்து ஸ்டாலின் மறைவிற்குப் பின் தான் வெளி வந்தன.


ஆரம்பத்தில் ஆழ்ந்த ஹிப்னாடிச மயக்கத்தில் சோதனையாளர்களை ஆழ்த்தி தான் சொன்னபடி அவர்களை செயல்படுத்த வைத்த வாசிலிவ் பின் வாய் விட்டு சொல்லாமலேயே நினைத்தவுடன் அது போல் நடந்து கொள்ள வைப்பதில் வெற்றி கண்டார். "வலது கையை அசை. இடது காலைத் தூக்கு. இப்போதே உறங்க ஆரம்பி. விழித்துக் கொள்" என்பது போன்ற கட்டளைகள் அவர் மனதில் எழுந்தவுடன் ஹிப்னாடிச நிலையில் இருந்த சோதனையாளர்கள் தங்களை அறியாமல் அதை செய்தார்கள். அந்த ஹிப்னாடிச உறக்கத்தில் பல நோயாளிகளை அவர் குணப்படுத்தியும் காட்டினார்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/vasiliv.jpg)

அடுத்த கட்டமாக சோதனையாளர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் மிகச் சுலபமாக இதை நடத்திக் காட்ட முடியும் என்று நம்பிய வாசிலிவ் அதை நிரூபித்தும் காட்டினார். செவஸ்டோபோல் என்ற நகரம் லெனின்கிராடிலிருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்தது. அங்குள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளரான டொமாஷெவ்ஸ்கீ என்பவரை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தினை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நேரத்தில் இந்த மனோசக்தி பரிசோதனைகளை நடத்தி எண்ணங்களின் சக்தியை அனுப்பவோ, பெறவோ, தூரம் ஒரு தடை அல்ல என்று கண்டுபிடித்தார். ஒரு நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த ஒரு பதிவும் பதியாததைப் பார்த்த வாசிலிவ் பிறகு செவஸ்டோபோல் ஆராய்ச்சிக் கூடத்தை தொடர்பு கொண்ட போது டொமாஷெவ்ஸ்கீயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் எந்த சோதனையும் அன்று செய்யவில்லை என்பது தெரிந்தது.

எண்ண அலைகளின் சக்தி எப்படியெல்லாம் வெற்றி பெறுகிறது என்பதைக் கண்ட வாசிலிவ் அந்த எண்ண அலைகளில் காந்தத் தன்மை இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு இரும்புச் சுவர்கள் கொண்ட அறையில் சோதனையாளர்களை அமர வைத்து பரிசோதனைகள் செய்து பார்த்தார். அந்த ஆராய்ச்சிக் கூட பரிசோதனைக் கருவிகள் எந்தக் காந்த சக்தியும் அந்த இரும்புச் சுவரை ஊடுருவுவதையும் கண்டுபிடிக்கவில்லை. எந்த பரிசோதனைக் கருவியிலும் பரிசோதிக்க முடியாத, ஆனால் எல்லையில்லாத சக்திகள் கொண்ட ஆழ்மன எண்ணங்கள் செய்ய முடிகின்ற அற்புதங்கள் தான் எத்தனை என்று தோன்றுகிறதல்லவா?

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....


Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 18, 2011, 02:54:46 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 7  


எண்ணங்களின் சக்தியை ரஷியாவில் வாசிலிவ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த காலத்திற்கும் சற்று முன்பே, 1910ஆம் ஆண்டு, ஜப்பானில் டாக்டர் டொமொகிச்சி ·புகுரை என்ற டோக்கியோவின் இம்பீரியல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எண்ணங்களையும் புகைப்படம் எடுக்க முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் மையக் கருத்தாக இருந்தது. தன் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்ட போது ஜப்பானிய அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக எதிர்க்க அவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஆனால் தன் கருத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட ·புகுரை கோயா சிகரத்தில் உள்ள ஒரு புத்தமத ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதை 1931ல் Spirit and Mysterious World என்ற புத்தகத்தில் விவரமாக வெளியிட்டார் என்றாலும் அபோதும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதை அங்கீகரிக்கவில்லை.

அவருடைய ஆராய்ச்சிக் கருத்துகள் வலிமை பெற ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டிற்குப் பின் தான். அதுவும் அறிவியலுக்கு சம்பந்தமே இல்லாத டெட் சிரியோஸ் (1918-2006) என்ற சிகாகோவில் வசித்து வந்த ஒரு குடிகார நபர் மூலம் தற்செயலாக வெளிப்பட்டது. தான் போதையில் இருக்கும் போது தனக்கு வித்தியாசமான காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் கடலிலும் மண்ணிலும் புதைந்து கிடக்கும் புதையல்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் தெரிவித்தார். அவரது நண்பர் (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/tedserios.jpg)விளையாட்டாக "உனக்குத் தெளிவாக மனதில் தெரியும் காட்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது நீ வெற்று சுவரைப் பார்த்தபடி காமிராவை வைத்துப் படம் பிடித்தால் வந்தாலும் வரலாம்" என்று சொல்ல அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அப்படியே சிரியோஸ் செய்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அதில் புதையுண்ட புதையல்கள் படம் வரவில்லை. அதற்குப் பதிலாக வேறெதோ படங்கள் வந்தன. அந்தப் புகைப்படங்கள் அந்த அறையில் இருந்த பொருள்களின் படங்களாகவும் அவை இருக்கவில்லை. அப்படியானால் வெள்ளைச் சுவரை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வந்த பிம்பங்கள் அவருடைய மனதில் இருந்த புதையலைப் பற்றிய எண்ணங்களில் இருந்து வந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆச்சரியப்பட்ட சிரியோஸ் மீண்டும் மீண்டும் அது போல் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் காட்ட ஆரம்பித்தார்.


இந்தச் செய்தி இல்லினாய்ஸ் நகரின் ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கூடத்தை எட்டவே அவர்கள் டென்வர் நகரைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜூல் இய்சன்பட் (1908-1999) என்பவரை செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இய்சன்பட்டிற்கு டெட் சிரியோஸை வைத்து நடத்திய ஆய்வுகள் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/JuleEisenbud.jpg)குடிகார டெட் சிரியோஸ் தனக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியாத போது போதையில் கத்துவது, உளறுவது, தலையை சுவரிலோ, தரையிலோ இடித்துக் கொள்வது போன்ற செய்கைகளில் ஈடுபட்டது இய்சன்பட்டிற்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒருசில நேரங்களில் கிடைத்த புகைப்படங்களின் தத்ரூபம் டெட் சிரியோஸை ஒரேயடியாக ஒதுக்கவும் விடவில்லை. இய்சன்பட் டென்வரில் உள்ள தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு டெட் சிரியோஸை வரவழைத்து இரண்டாண்டு காலம் ஆராய்ச்சி செய்தார்.

பலர் முன்னிலையில் டெட் சிரியோஸ் செய்து காட்டிய விந்தைகள் சில அற்புதமானவை. ஒரு முறை பார்வையாளர்கள் அவரை பழங்கால ரோதன்பர்க் என்ற நகரப் படத்தை மனதில் எண்ணிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஓரளவு சரியாகவே செய்து காட்டினார் சிரியோஸ். பின் கொலராடோவில் மத்திய நகரத்தில் உள்ள பழைய ஆப்ரா ஹவுஸ் என்ற இடத்தின் படத்தை புகைப்படமாக்கச் சொன்னார்கள். அதையும் செய்து காட்டிய சிரியோஸ் "இந்த இரண்டு புகைப்படங்களையும் கலக்கி ஒரு புகைப்படம் உருவாக்கட்டுமா?" என்று சொல்ல பார்வையாளர்கள் உற்சாகமாக செய்து காட்டச் சொன்னார்கள். டெட் சிரியோஸ் உருவாக்கிக் காட்டிய புகைப்படம் அவர் சொன்னது போலவே பழைய ஆப்ரா ஹவுஸில் குறுக்கே உள்ள குதிரை லாயத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் செங்கல் கட்டிடத்திற்குப் பதிலாக ரோதன்பர்க் நகரப் படத்தில் உள்ளது போல கல்லால் ஆன கட்டிடத் தோற்றம் இருந்தது. ஆப்ரா ஹவுஸ் குதிரைலாயப் புகைப்படத்தையும், இரு காலக்கட்டத்தை இணைத்து அவர் எடுத்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.


1967ல் இய்சன்பட் "டெட் சிரியோஸின் உலகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் தன் ஆராய்ச்சிகளை விரிவாக ஆதார புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/serios1.jpg)          (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/serios2.jpg)ஒருசில இடங்களை சிரியோஸ் எண்ணப் புகைப்படங்களாக எடுத்து தந்தது மேலிருந்தும், மரக் கிளைகளின் நடுவிலிருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இய்சன்பட் வியப்புடன் கூறியிருக்கிறார். அது போன்ற கோணங்களில் இருந்து எடுப்பது போல் புகைப்படம் எடுக்க முடிவது எப்படி என்பது கேள்விக்குறியாக இருந்தது. பலரும் டெட் சிரியோஸின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே செய்தார்கள் என்றாலும் இது போன்ற ஆற்றல் வெளிப்படுத்துவதில் பல ஏமாற்று வேலைகள், தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்பதால் மிகக் கவனமாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்ததாக இய்சன்பட் கூறினார்.

பிற்காலத்தில் இது போன்ற ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடக்கத் துவங்கின. ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் டெட் சிரியோஸை ஆராய்ச்சிக்காக அணுகிய போது அவருடைய அபூர்வ சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் உதவ முடியவில்லை. ஆனாலும் எண்ணப் புகைப்படங்கள் என்றாலே மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு டெட் சிரியோஸின் நினைவு தான் முதலில் வரும் நிலை இன்றும் இருந்து வருகிறது.

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....


Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 21, 2011, 01:14:16 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 8

 
நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்குப் பல அற்புத சக்திகள் இருந்த போதிலும் அவற்றை அவர் அடையாளம் கண்டு கொள்ள சாதகமான சூழ்நிலைகள் அவருடைய இளமையில் ரஷியாவில் இருக்கவில்லை. நாசிகள் லெனின்கிராடு நகரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆக்கிரமிக்க முற்பட்ட போது லெனின்கிராடு நகரவாசியான நினா குலாகினா தன் பதினான்காம் வயதிலேயே இராணுவத்தில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் போரில் வீரசாகசம் புரிந்து, காயமடைந்து, பின் குணமாகி, திருமணமாகி இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு தான் தன்னிடமிருந்த சக்திகளை அவரால் அடையாளம் காண முடிந்தது.

ஒரு நாள் ஏதோ கோபத்துடன் அவர் வீட்டினுள் நுழைந்த போது அலமாரியில் வைத்திருந்த ஒரு ஜக் தானாக நகர்ந்து விளிம்புக்கு வந்து கீழே விழுந்து நொறுங்கியது. அவரால் அப்போது உடனடியாக அதற்குக் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்த நாட்களில் விளக்குகள் அணைவது, பொருள்கள் அவர் இருப்பால் அசைதல் போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. பின்னர் தன்னிடம் ஏதோ சக்தி உள்ளது என்று தோன்ற ஆரம்பித்தது. அவராகவே சில முயற்சிகள் எடுத்துப் பார்த்த போது தன்னால் பொருள்களைத் தொடாமலேயே அசைத்து, கட்டுப்படுத்த முடிகிறது என்பது அவருக்கு விளங்க ஆரம்பித்தது.

1964ல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணமடைய ஆரம்பித்த போது அந்த மருத்துவமனையில் பொழுது போக்கிற்காக நிறைய தைக்க ஆரம்பித்தார். டாக்டர்கள் அவர் பையில் பல நூல்கண்டுகள் இருக்கும் பையிலிருந்து பார்க்காமல் வேண்டிய நிற நூல்கண்டை எடுக்கும் விதத்தைப் பார்த்து அசந்து போனார்கள். இந்த விஷயம் உள்ளூரில் வேகமாகப் பரவியது. உள்ளூர் அறிஞர்கள் மறு வருடம் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது நினா குலாகினா உடனே தயக்கமில்லாமல் ஒத்துக் கொண்டார். அப்போது செய்த ஆராய்ச்சிகளில் நினா குலாகினா தன் விரல் நுனியின் தொடு உணர்ச்சி மூலமாக நூல்கண்டின் நிறத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் என்பது நிரூபணமாகியது.
                                                                                          (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Nina_kulagina.jpg)

அதோடு அவருக்கு காயங்களைக் குணப்படுத்தும் அபார சக்தியும் இருந்தது. காயங்களுக்கு சற்று மேலே சிறிது நேரம் கையை வைத்திருந்தே குணப்படுத்திக் காட்டினார். அவர் ஒரு மேசையின் முன் அமர்ந்து மேசை மேல் இருக்கும் தீப்பெட்டி அல்லது தம்ளர், பேனா போன்ற பொருள்களை வெறித்துப் பார்த்தே, தொடாமலேயே நகர்த்திக் காட்டும் சக்தியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்தி எல்லா சமயங்களிலும் உடனடியாக அவருக்குக் கிடைப்பதில்லை. மனதில் மற்ற எண்ணங்களை விலக்கி, ஒருமுகப்படுத்திய பின்னரே அந்த சக்தி அவருக்கு சாத்தியமாயிற்று. அந்த சமயத்தில் தண்டுவடத்தில் அதிக வலியும் பார்வையில் மங்கலும் தனக்கு ஏற்படுவதாக அவர் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரை ஆராய்வதில் முதலில் அதிக ஆர்வம் காட்டியவர் எட்வர்டு நவ்மோவ். அவர் செய்த ஆரம்ப பரிசோதனை ஒன்றில் ந்¢னா குலாகினாமேசை மேல் பரப்பி வைத்திருந்த தீப்பெட்டி குச்சிகளைத் தொடாமல் சற்று தூரத்தில் தன் கைகளை வைத்து அவற்றையெல்லாம் மேசை நுனிக்கு வரவைத்து ஒன்றன் பின் ஒன்றாக விழ வைத்துக் காட்டினார்.

ஸ்டாலினிடம் தன் சக்திகளை நிரூபித்து லெனின்கிராடில் ஆராய்ச்சிக்கூடம் ஏற்படுத்திய வாசிலிவும் நினா குலாகினாவை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். அறுபதிற்கும் மேல் பரிசோதனைகளை நிழற்படமாகவே எடுத்து வைத்திருந்தார் வாசிலிவ். ஆனால் ஸ்டாலினின் ரகசியக் கட்டுப்பாடு காரணமாக வெளிவராமல் இருந்த அந்த படங்களைப் பின்னர் திரையிட்டுப் பார்த்த போது பல திரைப்படங்களில் தரம் தெளிவாக இருக்கவில்லை.

நினா குலாகினாவின் அபூர்வ சக்திகள் பற்றிய செய்திகளும், படங்களும் மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்தது. 1968ல் ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் முதல் மாஸ்கோ கருத்தரங்கில் நினா குலாகினாவின் பரிசோதனை பற்றிய தெளிவான சில நிழற்படங்கள் காட்டப்பட்டதை மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகளும் கண்டார்கள்.

அவர்களுடைய ஆவல் தூண்டப்படவே அவர்கள் குறுகிய காலத்திற்கு ரஷியா வந்து நினா குலாகினாவை பரிசோதனை செய்ய 1968 முதல் 1970 வரை அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களும் இந்த ஆராய்ச்சிகளில் காந்தம், கண்ணுக்குத் தெரியாத நூல் போன்றவற்றை நினா குலாகினா மறைத்து வைத்து உபயோகப்படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய பல ஆரம்ப முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தான் ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார்கள். வில்லியம் மெக்கேரி என்ற ஆராய்ச்சியாளர் முன் மேசை மேல் இருந்த பல சிறிய பொருள்களை இடம்பெயரச் செய்த அவர் ஒரு மோதிரத்தை அந்தரத்தில் சுழற்றிக் காட்டினார். இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெய்தர் ப்ராட் எடையிலும், அளவிலும், தன்மையிலும் வித்தியாசப்பட்ட பல விதமான பொருள்களை தன் விருப்பப்படி நினா குலாகினா அசைத்துக் காட்டியதைக் கண்டு வியந்தார். விஞ்ஞானம் அன்று வரை அறிந்த எந்த சக்தியாலும் அது நடக்கவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டெனெக் ரெஜ்டாக் தன் சோதனைகளில் அடிக்கடி நினா குலாகினாவை இடம் மாறி உட்காரச் சொன்னார். இடம் மாறினாலும் அவர் செய்து காட்டிய அற்புதங்கள் குறையவில்லை. தன் சிகரெட் ஒன்றையும் மேசை மேல் வைக்க குலாகினா தன் பார்வையாலேயே உடனடியாக அதை நகர்த்திக் காட்டினார். அந்த ஆராய்ச்சி முடிந்த பிறகு சிகரெட்டை ஆராய்ந்த போது உள்ளே துகள்கள் எதுவும் இருக்கவில்லை என்றார் ரெஜ்டாக். ஆராய்ச்சிகளின் இடையே அவ்வப்போது மருத்துவர்களைக் கொண்டு நினா குலாகினாவின் உடலையும் ரெஜ்டாக் பரிசோதிக்கச் செய்தார்.

1970 மார்ச் 10 ஆம் தேதி லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு வித்தியாசமான இன்னொரு அற்புதத்தை நினா குலாகினா நிகழ்த்திக் காட்டினார். ஒரு தவளையின் இதயத்துடிப்பைத் தன் மனோசக்தியால் அதிகரித்துக் காட்டினார். பின் அதை குறைத்துக் காட்டினார். பின் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். பின் மறுபடி இயக்கிக் காட்டினார். இதைக் குறித்து வேறொரு சமயம் கிண்டல் செய்த ஒரு மனோதத்துவ நிபுணரின் இதயத்துடிப்பையும் அதிகரித்துக் காட்டி பயமுறுத்திய நினா குலாகினா அது போன்ற அபாயமான செயல்களை பின்னர் தொடரவில்லை.

நினா குலாகினா ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவரைப் பரிசோதித்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்துக் கூறுகிறார்கள். ஆராய்ச்சி செய்யும் இடங்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. சில ஆராய்ச்சிகள் திறந்த வெளிகளில் கூட நடந்தன. அவர் சக்திகளை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணோடு பார்த்த மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் எத்தனையோ சோதனைகளில் அவரை ஈடுபடுத்தினார்கள். சில ஆராய்ச்சிகளில் அவரைச் சுற்றி பல டெலிவிஷன்களை வைத்து வெளியில் வேறு பலராலும் கூட கண்காணிக்கப் பட்டார். பின்னரே அவருடைய சக்திகளை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.

ஆனால் இது போன்ற சக்தி வெளிப்பாடுகளை நினா குலாகினா தொடர்ந்து செய்து காட்டியது அவர் உடல்நிலையைப் பெரிதாகப் பாதித்தது. தன் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு டாக்டர் ரெஜ்டாக் செய்த பரிசோதனையில் நினா குலாகினா நான்கு பவுண்டுகள் எடை குறைந்ததாகத் தெரிவித்தார். முகம் வெளுத்துப் போய் தன்னால் சிறிது கூட நடக்க முடியாத அளவு அவர் சக்தி இல்லாமல் போயிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளுக்குப் பின் கடும் உடல்வலியும், மயக்க நிலையும் கூட ஏற்படுவதாக நினா குலாகினா தெரிவித்தார். ஒரு கட்டத்தில் டாக்டர்கள் அவரை இந்த அற்புத சக்திகளை செய்து காட்டுவதை நிறுத்திக் கொள்ளும் படி எச்சரித்தார்கள். அது அவர் உயிருக்கே அபாயம் தரலாம் என்று தெரிவித்தார்கள். நினா குலாகினா நிறுத்திக் கொள்ளா விட்டாலும் மிகவும் குறைத்துக் கொண்டார். 1990ல் அவர் இறந்த போது ரஷியா அவரை லெனின்கிராடு வீராங்கனை என்று போர்கால வீரதீரச் செயல்களுக்காகப் பாராட்டியது.

எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட நினா குலாகினாவின் இந்த அபூர்வ சக்திகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்ல முடியவில்லை. பதில் ஆழ்மனதின் அற்புதத்தன்மையிலேயே இருக்கிறது என்பதற்கு வேறென்ன தெளிவு வேண்டும்?

மேலும் பயணிப்போம்...
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 21, 2011, 07:27:29 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9  


நினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார்.
                                                                     (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/urigeller.jpg)

1973 நவம்பர் மாதத்தில் BBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர் தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார். யூரி கெல்லர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.

அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள், அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.

சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது. பரபரப்படைந்த ஜிம்மி "ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது.... என்னால் நம்ப முடியவில்லை" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.

அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக போன்கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல போன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக அங்கு பணிபுரிபவர் சொன்னார். பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் போன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.

நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.

அதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.

யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான் ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள். எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜேக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).

ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிக்கை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது. யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.
(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/200px-MichaelCrichton.jpg)

பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் "ட்ராவல்ஸ்" என்ற நூலில் "ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார். "என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத் தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ·போர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்".

"எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்".

"இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்திற்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மன ஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்".

"இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது"

எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. ஆனால் அவர் தான் மட்டுமல்லாமல் சிறுவர்களும் செய்ய முடிந்ததாகச் சொன்ன அந்த அற்புதச் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on September 24, 2011, 07:40:21 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-10  


ஸ்பூன், இரும்புக்கம்பி, சாவி போன்ற பொருள்களை சிலர் தங்கள் மனோசக்தியால் வளைத்துக் காண்பித்தார்கள் என்றால் ஸ்வாமி ராமா என்ற இந்திய யோகி தன் உடலிலேயே பல அற்புதங்களை செய்து காட்டக் கூடியவராக இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர் ·பௌண்டேஷன் 1969 இறுதியில் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரை டாக்டர் டேனியல் ·பெர்குசன், எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.


முதல் நாள் அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள். (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/200px-SwamiRama.jpg)அவர்கள் சோதனைக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். ஸ்வாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.

ஸ்வாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன. பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார். ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது. அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார். இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது.

அடுத்ததாக ஸ்வாமி ராமா தன் இதயத்துடிப்பையும் ஏற்றி இறக்கிக் காட்டினார். இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை. ஆனால் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்ட போது ஸ்வாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து வியப்பூட்டினார்.

பின்னர் உணவருந்துகையில் பேசுகையில் இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் ஆனால் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஆயத்தமாக வேண்டும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். ஆனால் அவருடைய குருகா ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார். (அவருடைய குருவைப் பற்றிக் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்). உபவாசம் இருந்து செய்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பைத் தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் என்று சொன்னார்கள். மறுநாள் ஸ்வாமி ராமா 16.2 வினாடிகள் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானவுடன் ஸ்வாமி ராமா அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார். (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/needles-rama.jpg)எனவே மீண்டும் 1970ஆம் ஆண்டு இறுதியில் உரையாற்றவும், பரிசோதனைகளுக்காகவும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். ஒரு பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறித்த ஒரு வட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி (அதுவும் இங்கு காட்டப்பட்டுள்ளது) அவருக்குத் தரப்பட்டு இருந்தது. அதை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா அசைத்துக் காட்டினார்.

சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/mask-rama.jpg)உள்ள 'சக்ரா'க்களைப் பற்றியும் அந்த சக்ராக்களுக்கு சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதைக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். "கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் பொலொராய்டு காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன். முடியுமா?"

அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/heartlight-rama.jpg)

இந்த ஆராய்ச்சிகளில் முதல் மூன்றும் பரிசோதனைக் கூடத்தில் பல பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டவை. கடைசி அற்புத நிகழ்ச்சி பொதுக் கூட்டம் ஒன்றில் எல்லோர் முன்னிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆழ் மனதின் சக்திகள் செய்து காட்ட முடிந்த அற்புதங்கள் தான் எத்தனை!

மேலும் பயணிப்போம்...
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on October 02, 2011, 08:38:42 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-11  

ஸ்வாமி ராமாவைப் போலவே ஜேக் ஷ்வார்ஸ் என்ற ஹாலந்துக்காரரும் தன் உடலில் பல விந்தைகள் செய்து காட்டக் கூடியவராக இருந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆணிகளின் படுக்கையில் படுப்பது, கூரிய வாள்களின் மேல் நடனமாடுவது,(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/jackformal-200.jpg) ஆணிகளையும், ஊசிகளையும் உடலில் துளைத்துக் கொண்டு பின் காயங்களை ஆற வைத்துக் காட்டுவது போன்ற செயல்களைக் காட்டி வந்த அவர் இரு முறை இரண்டாம் உலகப் போரில் நாசிகளிடம் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார். இரண்டாம் முறை சிக்கிய பின் மற்ற இரண்டு கைதிகளுடன் சுவரின் கீழ் சுரங்கத்தைத் தோண்டி ஒரு மாத காலத்திற்குள் தப்பி விட்டார். பின் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.

ஜேக் ஷ்வார்ஸ் 1958ல் மனித உடலின் மீது மனதிற்குள்ள சக்தியை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அலெத்தியா உடல்-உள்ளம் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஸ்வாமி ராமாவை ஆராய்ச்சி செய்த மென்னிங்கர் நிறுவனம் அவரையும் ஆராய்ச்சி செய்தது. பெரிய ஊசி ஒன்றை எடுத்து அவர் தனது கையில் குத்திக் கொண்ட பின்னரும் இரத்தம் அவர் உடலிலிருந்து கசியாததைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்தனர். ஒரு ஆராய்ச்சியாளர் "இரத்தத்தைக் கசிய வையுங்கள் பார்க்கலாம்" என்று சொல்ல அடுத்த கணம் ஷ்வார்ஸ் அந்த ஊசியைக் குத்திய இடத்திலிருந்து இரத்தத்தை கசிய விட்டார். ஆராய்ச்சியாளர்கள் பெருகி வரும் இரத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அவர் அடுத்த கணமே அந்த இரத்தக் கசிவை நிறுத்திக் காட்டினார்.



சாதாரண ஊசிகள் அல்லாமல் துருப்பிடித்த ஊசிகள் மற்றும் ஆணிகளாலும் தன் உடலை ஷ்வார்ஸ் துளைத்துக் காண்பித்தார். ஆனால் அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/jack.jpg)எரியும் சிகரெட்டுகளை உடலில் அழுத்திக் காண்பித்தார். சிவந்த, கருகிய காயங்கள் தெரிந்தனவே ஒழிய அவற்றாலும் அவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஊசிகள், சிகரெட்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உடனடியாக ஆறின. எப்படிப்பட்ட வடுக்களானாலும் 24 மணி நேரம் முதல் 48 மணிகளுக்குள் உடலிலிருந்து மறைந்தன. வருடக்கணக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஷ்வார்ஸின் தோல் எந்த வடுவுமில்லாமல் குழந்தையின் தோலைப் போல் மொழு மொழுவென்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை அற்புதங்கள் புரிந்த ஷ்வார்ஸ் அதைத் தன்னால் மட்டுமே முடிந்த பெருஞ்சாதனையாகக் கருதவில்லை. மூளை அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் என்ன கட்டளையிட்டாலும் உடல் அதை ஏற்றுக் கொள்ளும் என்றார். சரியான பயிற்சியால் இதை யாராலும் செய்ய முடியும் என்றார். சில மூச்சுப் பயிற்சிகளாலும், தியானத்தாலும் மூளையில் அந்த அலைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். 2000 ஆம் ஆண்டு இறந்த ஜேக் ஷ்வார்ஸின் அலெத்தியா உடல்-உள்ளம் நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

இதே போல் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு உடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நரசிங்கஸ்வாமி என்ற யோகியைப் பற்றி பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி தன் "ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்" என்ற நூலில் குறிப்படுகிறார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் கல்கத்தாவில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் மூலம் கேள்விப்பட்டதாக அவர் சொன்னார். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை
கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."

(இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார்.)

மனித மனம் தன் உடலில் இவ்வளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள முடியும் என்றால், இத்தனை சாதனகளை உடலில் புரிய முடியும் என்றால் புற்றீசல் போல் பலப்பல நோய்கள் கிளம்பி வரும் இக்காலத்தில் நாம் பெரும்பாலான நோய்களின் தீர்வாக மனதை ஏன் முறையாகப் பயன்படுத்தக் கூடாது?

சிந்தியுங்கள். மேலும் பயணிப்போம்...
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on October 06, 2011, 03:38:39 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 12  


ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க விமானம் ஒன்று ஆப்பிரிக்கா பகுதிக்கு சென்று பின் காணாமல் போயிற்று. ஆப்பிரிக்கக் காடுகளில் எங்கோ விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் அமெரிக்க உளவு விண்வெளிக்கலங்கள் ஆன மட்டும் முயன்றும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அமெரிக்க உளவுத்துறை (CIA)யின் தலைவராக இருந்த
ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னர் தொலைநோக்கு சக்தி படைத்த ஒரு அபூர்வப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன் அபூர்வசக்தி மூலம் விமானம் இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொன்னார். விண்வெளிக்கலத்தின் காமிராக்களை அந்த இடத்தில் மையப்படுத்தி கூர்ந்து பார்த்த போது அந்த விபத்துக்குள்ளாகி இருந்த விமானத்தைக் கண்டு பிடித்தனர்.

இந்தத் தகவலை ஜிம்மி கார்ட்டர் அட்லாண்டாவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது வெளியிட்டார். ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னரும் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது அதை ஒத்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் வெளிப்படையாகச் சொல்லும் வரை இது போன்ற அதீத மனசக்திகளைப் பற்றி மேல் மட்டத் தலைவர்களோ, அதிகாரிகளோ இது பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியது.

உண்மையில் 1981 முதல் 1995 வரை அமெரிக்க அரசாங்கம் மனோசக்திகளைப் பரிசீலிக்க ஐந்து விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்களை நியமித்தது. அந்த ஐந்து அறிக்கைகளுமே முழுமையாக இல்லா விட்டாலும் பல கேஸ்களில் அசாதாரண நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டன. மனித மனம் மற்ற மனித மனங்களுடனும், ஜடப்பொருள்களுடனும் கூட ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அந்த விளைவுகளால் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

அதிகமாய் விளம்பரம் செய்யாத, அடக்கி வாசித்த ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கழகத்தை (SRI) அமெரிக்க உளவுத் துறையான CIA மனோசக்தி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் எட் தாம்ஸன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் SRIயின் சில ஆராய்ச்சிகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஞான திருஷ்டி எனப்படும் தொலை நோக்குப் பரிசோதனைகள் செய்யத் தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.

SRI யின் ஆரம்பகால (ஜூன் 1972) ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட அபூர்வசக்தி (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/ingoswann.jpg)மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் இங்கோ ஸ்வான் என்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வரவழைத்தனர். அவர் வருவதற்கு முன் ஒரு புதிய வகை மேக்னட்டோமீட்டர் ஒன்றை ஆராய்ச்சிக்கூடத்தின் தரைக்கும் கீழே உள்ள ரகசிய இடத்தில் அனுமினியப் பெட்டியில் செம்பு மற்றும் வேறொரு உலோகத்தால் கவசமாக நன்றாக மறைத்து வைத்தனர். அந்த மேக்னட்டோமீட்டரின் செயல்பாடுகளை ஸ்வானுக்குத் தெரியாமல் கண்காணிக்க மறைவாக வேறு ஒரு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.

ஆனால் இங்கோ ஸ்வான் வந்தவுடனேயே அந்த மேக்னட்டோமீட்டர் தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தது. ஸ்வான் தரையின் அடியில் ஏதோ ஒரு கருவியை உணர்வதாகக் கூறினார். அந்தப் புதிய கருவியின் வடிவம் இன்னும் வெளியுலகிற்குப் பிரசுரமாகாதது என்றாலும் ஸ்வான் ஏறத்தாழ சரியாகவே அந்தக்கருவியினை வர்ணித்தார்.

அதைக் கேள்விப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர் இருவர் SRI க்கு வந்து சில சிறிய பரிசோதனைகளை ஸ்வானிடம் செய்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிறு பொருள்களைக் கண்டு பிடிக்கச் சொன்னார். ஸ்வான் பெரும்பாலானவற்றைச் சரியாகச் சொன்னார். ஒரு பெட்டியைக் காண்பித்தவுடன் "வெளிர் காவி நிறத்தில் இலை வடிவமுள்ள பொருள் உள்ளது. அது அசைவது போலத் தெரிகிறது". அந்தப் பெட்டியில் இருந்தது அவர் கூறிய எல்லா அமசங்களும் நிறைந்த ஒரு அந்துப் பூச்சி.

SRI ஸ்வானைப் போலவே வேறு சிலரையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியது. சிலருக்கு உண்மையான பெயர்களைத் தவிர்த்து எழுத்துடன் எண்ணை இணைத்து அடையாளப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்டவர்கள் V1 என்பவர் வெகு தொலைவில் இருந்த குறியிலக்குகளை கிட்டத்தட்ட மிகச்சரியாகவே வரைந்தார். அந்தப் படங்களும், குறியிலக்குகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன.
 

சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் டிஸ்கவரி சேனலிலும் மனதின் சக்திகள் பற்றிய ஆதாரபூர்வ நிகழ்ச்சிகள் பற்றி சில நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/remote2.png)   (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/remote1.png)அப்போது அமெரிக்க உளவுத் துறை ஒரு அதீத சக்தி படைத்த நபரைக் கொண்டு ரஷ்ய அணு ஆயுத உற்பத்திக் கிடங்கு ஒன்றின் படத்தை வரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இப்போது போல விண்வெளிக் கலங்கள் வசதி இல்லாத காலக் கட்டத்தில், ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் அந்த நபர் வரைந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாகவே பொருந்தி வந்ததாக அந்த நிகழ்ச்சியாளர் கூறினார். பனிப்போர் முடிவடைந்து பின் நேரடியாக அந்த கிடங்கைப் படம் எடுத்து ஒப்பு நோக்கிய போது அதிகாரிகள் அசந்து போனதாக நிகழ்ச்சியாளர் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அபூர்வ சக்தி மனிதர் பெயரை வெளியிட மறுத்த நிகழ்ச்சியாளர்கள் அவர் பெயரை எக்ஸ் என்றே அழைத்தார்கள். சில நாட்களுக்கு தினமும் அவரை ஒரு குறிப்பிட்ட ராணுவ ரகசிய அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து அதை வரைந்ததாகச் சொன்னார்கள்.

இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் சிகரத்தையே எட்டியிருந்த வல்லரசு நாடான அமெரிக்கா கூட, முக்கியமாய் CIA போன்ற உளவுத்துறை கூட ஆராய்ந்து ஆழ்மனதின் அற்புத சக்திகளைப் பயன்படுத்தியுள்ளது என்னும் போது அதன் பெருமையையும், உண்மையையும் உணர முடிகிறதல்லவா?

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on October 11, 2011, 02:56:04 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-13  


டேனியல் டங்க்ளஸ் ஹோம் (1833-1886) ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/home.jpg) ஸ்காட்லாண்டில் பிறந்த அவர் தாயாரின் சகோதரி மேரி குக் என்பவரால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே பெரியம்மாவுடன் அமெரிக்கா சென்ற ஹோமிற்கு இளமையிலேயே நெருங்கியவர்களின் இறப்பு ஆவி ரூபத்தில் அடிக்கடி தெரிய வந்தது. இந்தக் காலத்தைப் போல 19 ஆம் நூற்றாண்டில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் சில இறப்புகள் அவரால் உடனடியாக அறியப்பட்டு சில நாட்கள் கழித்து கடிதம் வந்த பின்பே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

அவருடைய 17ஆம் வயதில் தாய் "டேன், 12 மணி" என்று சொன்னதாய் காட்சி கண்டார். பெரும்பாலும் அவருக்கு ஏற்படும் காட்சிகள் இறந்தவர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருப்பதால் தாய் மரணமடைந்து விட்டார் என்று உணர்ந்தார் ஹோம். பின்பு தாயார் அந்தக் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்கு காலமானார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. தாயாரின் மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் சத்தமாகத் தட்டுவது, தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் அங்குமிங்குமாக இடம் பெயர்வதெல்லாம் நிகழத் துவங்க அவரது பெரியம்மா பயந்தார். சிலர் சைத்தான் ஹோமை ஆக்கிரமித்துள்ளது என்று கருதினார்கள். ஒரு முறை ஒரு டேபிள் தானாக நகர ஆரம்பிக்க ஹோமின் பெரியம்மா பையிளை அதன் மீது வைத்தார். அப்போதும் அது நிற்காமல் போகவே தன் முழு எடையையும் அதன் மேல் போட்டு தடுத்துப் பார்த்தார். ஆனாலும் டேபிள் நகர்வது நிற்கவில்லை. தன் வீட்டுக்குள் சைத்தானின் சேட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதாகக் கூறி அந்த அம்மையார் ஹோமை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

ஆனாலும் அவரையும் அவரது சக்திகளையும் நம்பிய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய இளம் வயதிலேயே நியூயார்க் மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் எட்மண்ட்ஸ், பெனிசில்வேனியா பலகலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் ஹாரே போன்றவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

தனக்கு கிடைத்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்த அபூர்வ சக்திகள் இறைவனால் அளிக்கப்பட்டது என்று நம்பிய ஹோம் தன் சேவைகளுக்கு யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. ஆனால் அவர் பெரிய செல்வந்தர்கள் தாங்களாகத் தந்த பரிசுகளையும், பண உதவிகளையும் மறுக்கவில்லை. அரசர்களும், பெரும் செல்வந்தர்களும், பிரபலங்களும் அவரை ஆதரித்தனர்.

1868ல் அட்லாண்டிக் கேபிள் கம்பெனி என்ற பிரபல நிறுவனத்தின் தலைமை பொறியியல் வல்லுனர் க்ராம்வெல் வார்லெ என்பவருடனும், பின்னர் லண்டன் வாதக்கலை சமூக நிறுவனத்துடனும் சேர்ந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் சுமார் ஐம்பதை ஹோம் நடத்தினார். லண்டன் சமூக நிறுவனத்தினருடனான நிகழ்ச்சிகளில் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 1871ல் சமர்ப்பித்த அறிக்கையில் சத்தங்கள், அதிர்வுகள், யாரும் தொடாமலேயே பொருள்களின் அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகளில் இருந்து இசை, பரிச்சயமில்லாத சில முகங்கள், சில கைகள் ஆகியவற்றை கண்டதாகவும்/ கேட்டதாகவும் கூறினார்கள்.

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/cage1.jpg)ஹோமைப் பற்றிப் படித்து ஆர்வம் கொண்ட விஞ்ஞானி சர் வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் தானும் ஹோமை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். அவருடன் லண்டனின் ராயல் சொசைட்டியின் இன்னொரு விஞ்ஞானி சர் வில்லியம் ஹக்கின்ஸ் உட்பட எட்டு கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒரு ஆராய்ச்சியில் ஒரு மரப்பலகையின் எடையை ஹோம் தொடாமலேயே கூட்டிக் குறைத்துக் காண்பித்தார்.

இன்னொரு ஆராய்ச்சியில் ஒரு பிரத்தியேக கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு இசைக்கருவியைத் தலைகீழாக வைத்து இசைக்கருவியின் பின்புறத்தை மட்டும் ஹோமால் ஒரு கையால் தொட முடிகிறாற் போல் அந்தக் கூண்டை ஹோம் அமர்ந்திருந்த மேசையினடியில் தள்ளி வைத்தார்கள். ஹோமின் மறு கையை மேசையின் மேல் வைக்கச் சொன்னார்கள். (விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது).
ஹோம் தொட முடியாத அந்த இசைக்கருவியின் ஆணிப்பட்டையில் இருந்து வித விதமாக இசை கிளம்பியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஹோம் அந்த இசைக்கருவியை எடுத்து அருகில் இருந்தவர் கையில் தந்த பின்னரும் கூட, யார் கைகளும் இசைக்கருவி மீது இல்லாத போதும் கூட இசை நிற்கவில்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளில் பலரும் வித்தியாசமான விளக்கொளிகளைக் கண்டனர். தட்டப்படும் ஓசையைக் கேட்டனர். மணிக்கட்டு வரையே தெரியக் கூடிய கைகளை மட்டும் கண்டனர். கூடியிருந்தவர்களுடன் அந்தக் கைகள் கை குலுக்கியும், மேசை நாற்காலிகளை நகர்த்தியும், இறந்தவர்களிடம் இருந்து செய்திகளை அங்கு வைக்கப்பட்டிருந்த எழுத்தட்டைகளை சேர்த்து வைத்துக் காட்டியும் அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்தன. ஹோம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தன் கைகளையும் கால்களையும் அங்குள்ளவர்களைப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். தான் ரகசியமாக எதையும் இயக்குவதில்லை என்பதைப் புரிய வைக்க அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/cage2.jpg)

1852 முதல் ஹோம் செய்து காட்டிய இன்னொரு அற்புதம் அந்தரத்தில் நிற்பது. க்ரூக்ஸ் உட்பட பலர் அதைக் கண்டுள்ளார்கள். ஹோம் தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலங்கள் அந்தரத்தில் உயர ஆரம்பித்து பத்து வினாடிகள் அந்தரத்திலேயே நின்று மறுபடி தரைக்கு வந்ததைக் கண்ட ·ப்ராங்க் பொட்மோர் என்பவர் சாட்சிகளுடன் பதிவு செய்துள்ளார். பல சமயங்களில் பல அடிகள் மேலே அந்தரத்தில் நின்று காண்பிக்க இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்று சந்தேகப்பட்ட ஒரு பத்திரிகை இது போன்ற ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதில் சமர்த்தரான எ·ப். எல். பர் என்ற நிருபரை அனுப்பியது.

அமெரிக்காவில் கனெக்டிகட்டில் வார்ட் சேனே என்ற செல்வந்தரின் வீட்டில் ஹோம் நிகழ்ச்சி ஒன்றில் பர் கலந்து கொண்டார். குறை காணப் போனவர் உண்மையாகவே அசந்து போனார். அந்தப் பத்திரிகையாளர் எழுதினார். "ஹோமின் கையை நான் பிடித்திருந்தேன். திடீரென்று ஹோம் தரையிலிருந்து ஒரு அடி தூரம் மேலே அந்தரத்தில் நின்றார். நான் அவருடைய காலையும் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கீழே வந்த அவர் அடுத்த முறை இன்னும் மேலே அந்தரத்தில் நின்றார். மூன்றாவது முறையோ அந்த அறையின் விட்டத்தைத் தொட்டுக் கொண்டு அந்தரத்தில் நின்றார். என்னைப் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிசயித்து நின்றோம்...."

1868 டிசம்பரில் லார்ட் அடாரே, லார்ட் லிண்ட்சே, கேப்டன் வின்னே என்ற மூன்று பிரபலங்கள் முன்னிலையில் லார்ட் அடாரேயின் மாளிகையில் மூன்றாவது மாடியில் ஒரு அரை ஜன்னல் வழியாக அந்தரத்தில் வெளியே சென்று மறு அறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தார். அந்த செய்தி பல பேரை பிரமிக்க வைத்தது என்றால் பலரை கடுமையாக விமரிசிக்க வைத்தது. அந்த மூன்று நபர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்கள், ஹோமிற்கு கள்ள சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களை ஹிப்னாடிசம் செய்து ஹோம் இதை நம்ப வைத்திருக்கலாம் என்று சிலர் விமரிசித்தார்கள்.

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/home2.jpg)அதை கேப்டன் வின்னே உறுதியாக மறுத்தார். 'என்னை அறிந்தவர்கள் யாரும் என்னை அப்படி வேறொருவர் ஹிப்னாடிசம் செய்து நம்பவைக்க முடியும் என்று கூற மாட்டார்கள். அப்படியெல்லாம் ஏமாறக் கூடியவன் அல்ல நான்" என்றார். மேலும் ஹோம் நல்ல ஆரோக்கியமானவராக இருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிக பலவீனமாக இருந்தார். மூன்றாவது மாடியில், அதுவும் டிசம்பர் குளிரில் சர்க்கஸ் செய்து காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு செய்து காட்டக் கூடிய சக்தியெல்லாம் அவரிடம் இருக்கவில்லை என்பதும் உண்மை.

இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணமாக ஹோம் என்ன சொல்கிறார்? ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி கொண்ட அவர் இந்த நிகழ்வுகளுக்கு தான் காரணமல்ல என்கிறார். "இதெல்லாம் நட்பான ஆவிகள் மூலமே சாத்தியமாகிறது. ஆனால் அவை எல்லாம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை..."

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on October 12, 2011, 06:49:41 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-14  

                                                                         (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/leonorapiper.jpg)
டி.டி.ஹோமைப் போலவே லியொனாரா பைப்பர் (1859-1950) என்பவருக்கும் எட்டு வயதில் ஆழ்மன சக்தியின் முதல் அனுபவம் ஒரு மரணச்செய்தி மூலமாகவே ஏற்பட்டது. 'அத்தை சாரா இறக்கவில்லை. இன்னும் உங்களுடன் தான் இருக்கிறாள்' என்ற செய்தி செவிப்பறையை அறைந்து தெரிவிப்பது போலிருக்க லியொனாரா பைப்பர் ஓடிச்சென்று தாயிடம் அதைத் தெரிவித்தார். மகளின் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கருதிய அந்தத் தாய் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் அந்த அத்தை சாரா இறந்து போன செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. இறந்த நேரம் லியொனாரா பைப்பர் காதில் அறைந்த செய்தியின் அதே நேரம் தான். அதன் பிறகு பதினான்கு வருடங்கள் அது போன்ற அனுபவங்கள் லியொனாரா பைப்பருக்கு ஏற்படவில்லை. மீண்டும் ஏற்பட்ட ஒரு அனுபவம் அவர் வாழ்வையே மாற்றி அமைத்தது.

கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற லியொனாரா பைப்பர் அதைக் குணப்படுத்த டாக்டர் ஜே ஆர் காக் என்பவரிடம் சென்றார். அந்த டாக்டர் குருடர். தன் கையை நோயாளியின் தலையில் வைத்து நோயைக் குணமாக்கக் கூடியவர். அவரிடம் இரண்டாவது முறை சென்ற போது அவர் லியொனாராவின் தலையில் கையை வைத்தவுடன் திடீரென்று தன் முன் ஒரு ஒளிவெள்ளத்தையும் அந்த ஒளிவெள்ளத்தில் பல்வேறு முகங்களையும் லியொனாரா கண்டார். அதன் பின் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையை அடைந்த அவர் சுயநினைவில்லாமல் எழுந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு கடிதத்தை எழுதி அதை அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவரிடம் சென்று தந்து மறுபடி தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்தமர்ந்தார்.

அவர் அந்தக் கடிதத்தைத் தந்தது கேம்ப்ரிட்ஜைச் சேர்ந்த நீதிபதி ·ப்ராஸ்ட் என்பவரிடம். அந்தக் கடிதம் அவரது இறந்து போன மகன் எழுதுவது போல எழுதப்பட்டது. லியொனாராவுக்கு அந்த நீதிபதியைப் பற்றியோ, அவரது இறந்து போன மகனைப் பற்றியோ தகவல்கள் ஏதும் தெரியாததாலும், கடிதத்தின் தன்மையாலும் அந்தக் கடிதம் தன் மகனுடைய ஆவியாலேயே எழுதப்பட்டது என்று அந்த நீதிபதி நம்பினார். மயக்க நிலையிலிருந்து மீண்ட லியொனாராவுக்கு தான் செய்தது எதுவும் நினைவிருக்கவில்லை.

இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. பலரும் தங்களுக்கு நெருங்கிய அன்பான இறந்து போனவர்களிடம் இருந்து செய்திகளைப் பெற லியொனாரா பைப்பரை மொய்க்க ஆரம்பித்தார்கள். அப்படி லியொனாராவைத் தேடி வந்தவர்களில் ஒருவர் அமெரிக்க மனோதத்துவ மேதை வில்லியம் ஜேம்ஸின் மாமியார். அவருக்கு லியொனோராவின் மூலமாகக் கிடைத்த தகவல்கள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கவே அவர் தன் மருமகன் வில்லியம் ஜேம்ஸிற்குக் கடிதம் எழுதினார். மாமியாரிடம் பணம் பறிக்க யாரோ ஒரு பெண் ஏமாற்றுவதாக எண்ணிய வில்லியம் ஜேம்ஸ் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி தானும் நேரில் வந்தார். மிகக் கவனமாகக் கண்காணித்தும் ஏமாற்று வேலைகள் எதையும் வில்லியம் ஜேம்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.

லியொனாரா பைப்பர் ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு ஆவியின் ஆதிக்கத்தில் இருந்ததாகக் கூறினார். அந்த ஆவி சம்பந்தப்பட்ட மற்ற ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் சொல்வதாகச் சொன்னார். அவர் சொல்வதற்கேற்றாற் போல் அந்தந்தக் கட்டங்களில் அவர் ஆவியின் ஆதிக்கத்தில் இருக்கையில் பேசும் பேச்சுகளின் குரல்கள் வித்தியாசப்பட்டன.

வில்லியம் ஜேம்ஸ் இதைப் பற்றி ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தெரியப்படுத்தினார். அந்த ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் ரிச்சர்டு ஹோட்சன் என்ற ஆராய்ச்சியாளர் பல போலிகளை போலிகள் என்று நிரூபித்த பெருமையுடையவர். எதையும் உடனடியாக நம்ப மறுத்த அவர் லியொனாரா பைப்பரை ஆராய்ச்சி செய்ய வந்தார்.

ரிச்சர்டு ஹோட்சன் துப்பறியும் நிபுணர்களை எல்லா சமயங்களிலும் லியொனாரா பைப்பரைப் பின் தொடரச் செய்தார். யாரிடமாவது பேசித் தகவல்கள் தெரிந்து கொள்கிறாரா என்று கண்காணித்தார். அவராகவே லியொனாராவிற்கு அறிமுகமே இல்லாத நபர்களை வரவழைத்து லியொனாரா பைப்பர் முன் அமர வைத்து அவர்களுக்கு வேண்டிய இறந்த மனிதர்கள் சம்பந்தமாகக் கேட்க வைத்தார். எல்லா விவரங்களும் திருப்தி தருபவையாக இருந்தன. 1888 இறுதியில் ஹோட்சனுடன் டாக்டர் ஜேம்ஸ் ஹிஸ்லாப் என்பவரும் சேர்ந்து கொண்டார். அவர் லியொனாரா பைப்பர் 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டரா'ல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தாலும் லியொனாராவிற்கு முன்பின் தெரியாத இறந்தவர்களின் தகவல்கள் எல்லாம் எப்படித் தெரிகின்றன என்பதை அவரால் அறிவியல் பூர்வமாகச் சொல்ல முடியவில்லை.

ரிச்சர்டு ஹோட்சனும், ஹிஸ்லாப்பும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய லியொனாராவை இங்கிலாந்துக்கு அழைத்தார்கள். லியொனாரா சம்மதித்தார். இங்கிலாந்தில் அவர் ஆழ்மன ஆராய்ச்சிக் கழகத் தலைவர் எ·ப்.டபுல்யூ.எச்.மயர்ஸ் வீட்டில் தங்கினார். மயர்ஸ் லியொனாரா வருவதற்கு முன் வீட்டில் அனைத்து வேலைக்காரர்கலையும் நீக்கி புதிய வேலைக்காரர்களை நியமித்தார். எனவே லியொனாரா வேலைக்காரர்கள் மூலம் எதையும் தெரிந்து கொள்ளுதல் சாத்தியமிருக்கவில்லை. மயர்ஸ் லியொனாராவுக்கு உதவ ஏற்பாடு செய்த வேலைக்காரி ஒரு கிராமத்திலிருந்து தருவிக்கப்பட்டார். அவர் வீட்டை விட்டு செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆராய்ச்சிக் கழகத்தின் நபர் ஒருவரும் கண்காணிக்க கூடவே சென்றார்.

மயர்ஸ் மற்றும் சர் ஆலிவர் லாட்ஜ் கண்காணிப்பில் நவம்பர் 1889 முதல் பிப்ரவரி 1890 வரை லியொனாரா 88 முறை முன்பின் தெரியாத நபர்களின் குடும்பத்தில் இறந்தவர்களிடம் இருந்து தகவல்கள் பெற்றுத் தந்தார். லியொனாராவிற்கு வந்தவர்களை சில சமயங்களில் தவறான பெயரில் அறிமுகப்படுத்தியதும் உண்டு. சில சமயங்களில் லியொனாரா அரை மயக்க நிலைக்குச் சென்ற பிறகு சிலரை திடீரென்று அழைத்து வந்ததும் உண்டு. ஆனால் லியொனாரா பைப்பர் தருவித்துத் தந்த தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான தகவல்களாகவே இருந்தன. மயர்ஸ¤ம், ஆலிவர் ஸ்காட்டும் 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எந்த விதத்திலும் லியொனாரா பைப்பர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்க சாத்தியமே இல்லை என்றும் அவர் நாணயமும், நம்பகத் தன்மையும் சந்தேகத்திற்கப்பால் பட்டது என்பதையும் தெரிவித்தார்.

மீண்டும் அமெரிக்கா திரும்பிய லியொனாரா பைப்பர் 1909ல் மீண்டும் ஆராய்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார். 1915ல் சர் ஆலிவர் ஸ்காட் இறந்து விடப்போவதாகத் தனக்கு ஆவியுலகில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக லியொனாரா தெரிவித்தார். அதன் படியே ஸ்காட் இறந்து போனார். பின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்த லியொனாரா இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

பல ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் எந்த வித தயக்கமும் இன்றி இது போன்ற பல அதிசயங்களை செய்து காட்டிய லியொனாரா பைப்பர் இன்றும் ஒரு அற்புதப் பெண்மணியாகவே ஆழ்மன ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார். ஆவியுலகைப் பற்றி நம்பிக்கை இல்லாத ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அவர் சொன்ன தகவல்களின் உண்மை தன்மையை உணர்ந்த போது பிரமித்துப் போனார்கள்.

மேலும் பயணிப்போம்......
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on October 21, 2011, 04:48:27 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-15  
 
                                                                                          (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/nila2.jpg)

ஆவியுலகைத் தொடர்பு கொள்ள முடிந்த மனிதர்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் உலகெங்கும் கணிசமாக இருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. சமீபத்தில் ஆழ்மன சக்திகளைப் பற்றி நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான நிலா (நிர்மலா) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரே ஆவிகளைத் தொடர்பு கொள்ள முடிந்த ஒரு 'மீடியம்' என்று சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவரிடம் அவரது அனுபவங்களைக் கேட்டேன்.

ஒரு முறை இங்கிலாந்தில் ஒரு 'மீடியம்' மூலமாக தன் இறந்து போன மாமியாரைத் தொடர்பு கொள்ள முடிந்தது அவருடைய ஆவியுலக முதல் அனுபவம் என்று சொன்னார். அதில் அவருக்கு கிடைத்த தகவல்கள் நம்பிக்கை ஏற்படுத்துவனவாக இருக்கவே அவருக்கு அது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரித்தது. அந்த ஆர்வமும், ஈடுபாடும் விரைவிலேயே அவரையும் ஒரு 'மீடியமா'க்கியது. எதிர்பாராத விதங்களில் ஆவிகள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்குத் தகவல்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல் உதவவும் செய்கின்றன, சில அற்புதங்களையும் நிகழ்த்துகின்றன என்பதற்கு சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை அவர் உதாரணமாகக் கூறினார். அதில் ஒன்று -

"ஒரு சமயம் எனது தோழியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது இறந்து போன அவளது மாமியார் அவளது வயிற்றைத் தொட்டு வலி போன்ற உணர்ச்சியைக் காட்டினார். அவளிடம் வயிற்றில் வலி இருக்கிறதா என நான் கேட்டபோது அவள் ஆச்சர்யத்துடன் ஒப்புக் கொண்டாள். பின் அவளை நிறைமாத கர்ப்பிணியாக என்னால் காணமுடிந்தது. அவளிடம் அதைக் கூறியபோது, கருப்பையில் கட்டிகள் இருப்பதால் கருவுறுவது சாத்தியமல்ல என மருத்துவர்கள் கூறியதை வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அவளது மாமியார் அவள் வயிற்றிலிருந்து எதையோ அப்புறப்படுத்தி மீண்டும் அவள் நிறைமாத கர்ப்பிணியாகத் தோன்றும் காட்சியை எனக்குக் காட்டினார். சில வாரங்களில் அவள் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது அவளது கருப்பையில் கட்டிகள் இல்லாதது கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கருவுறுவதற்கான சாத்தியக் கூறுகளில்லை என்றே கூறி இருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அவள் கருவுற்றாள். அந்தக் குழந்தைக்கு இப்போது மூன்று வயதாகிறது. அவள் தன் தாயின் கருப்பையில் உருவாவதற்கு முன்பே எனக்குப் பரிச்சயமானதால் எங்களுக்குள் ஒரு விசேஷப் பிணைப்புண்டு.”(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Flint.jpg)
கருப்பையில் இருந்த கட்டிகள் மறைந்ததற்கும், கருவுறுதலே சாத்தியம் இல்லை என்ற பெண் கருவுற்றதற்கும் மருத்துவர்களிடம் விஞ்ஞான ரீதியான பதில்கள் இல்லை என்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

ஆவியுலகில் இருந்து தகவல்கள் பெற முடிந்தது அதிசயம் என்றால் அவற்றை அவர்களுடைய குரலிலேயே கேட்க முடிவது பேரதிசயம் அல்லவா? அதையும் கேட்க வைத்தார் லெஸ்லி ·ப்ளிண்ட் (1911-1994) என்ற ஆங்கிலேயர். வின்ஸ்டன் சர்ச்சில், பெர்னார்ட் ஷா, மகாத்மா காந்தி போன்ற பிரபலங்கள் உட்பட பலருடைய ஆவிகள் அவரவர் குரலில் பேசக் கேட்ட போது பலரும் அதிசயித்தனர்.

அவரை ஆழ்மன ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகளும், சண்டே எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளும் தனிமனித ஆராய்ச்சியாளர்களும் பல வழிகளில் ஆராய்ந்தார்கள். லெஸ்லி ·ப்ளிண்ட் இருட்டான அறைகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் குரலின் மூலம் ஆவிகள் பேசுவதில்லை. அவர் தலைக்கு மேல் இருட்டில் இருந்து பேசுகின்றன என்று அவர் தெரிவித்தார். மற்றவர்கள் போல் அவர் அரை மயக்க நிலைக்கும் செல்லவில்லை.                          (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/leslie-gagged.jpg)

இதில் ஏதாவது தில்லுமுல்லு உள்ளதா என்றறிய ஆராய்ச்சியாளர்கள் அவர் வாயை துணி வைத்து உறுதியாகக் கட்டிப்போட்டார்கள். அதோடு சிலர் அவரை நாற்காலியோடு கட்டி அவர் நகரவோ, குனியவோ முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். ஒரு ஆராய்ச்சியாளர் அவ தொண்டையில் ஒரு கருவியை வைத்து அதில் சின்ன அதிர்வு வந்தாலும் தெரியும்படி பார்த்துக் கொண்டார். இன்னொருவர் இன்னும் ஒருபடி மேலே போய் இளஞ்சிவப்பு திரவத்தை அவர் வாயில் ஊற்றி பின் வாயில் ப்ளாஸ்திரி போட்டு கட்டிப் பார்த்தார். எல்லாம் முடிந்த பிறகு அதே அளவு இளஞ்சிவப்பு நீரை உமிழ்ந்து அந்த ஆராய்ச்சியாளரை லெஸ்லி ·ப்ளிண்ட் திருப்திப்படுத்தினார். இத்தனைக்குப் பின்னும் ஆவிகள் வித விதமான குரல்களில் தங்கள் தகவல்களையும், கருத்துகளையும் சொன்னதை பார்வையாளர்கள் கேட்டனர். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1955 முதல் 1970 வரை 500 நிகழ்வுகளை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.

அந்த குரல்களில் ஒருசில குரல்கள் உயிரோடிருக்கும் போது கேட்ட குரல்களோடு ஒத்துப் போகவில்லை என்று ஒருசில விமரிசனங்கள் இருந்தாலும் பெரும்பாலான குரல்களும், சொன்ன செய்திகளும் இறந்து போன மனிதர்களின் குரல்களுக்கும், தன்மைகளுக்கும் ஒத்துப் போனதாக ஆராய்ச்சியாளர்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கருதுகின்றனர். உதாரணத்திற்கு ·ப்ளிண்ட் மூலமாக ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பேசக் கேட்ட அவருடைய நண்பர், கேட்ட குரலும் சொன்ன விதமும் பெர்னார்ட் ஷாவினுடையதாகவே இருந்தது என்று ஒத்துக் கொண்டார்.


லெஸ்லி ·ப்லிண்டின் மறைவுக்குப் பின் ஒரு பிரபல பத்திரிக்கையாளரான அலெக்சாண்டர் வாக்கர் சொன்னார். "நான் ஒரு முறை அவருடைய நிகழ்ச்சி ஒன்றிற்கு சந்தேகத்தோடு சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரின் தந்தையின் ஆவி ·ப்ளிண்ட் மூலமாக என்னிடம் பேசியது. நான் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய பல கேள்விகள் கேட்டேன். சொன்ன குரலும், சொன்ன விஷயங்களும் சரியாகவே இருந்தன என்பதை நான் ஒத்துக் கொண்டு தானாக வேண்டும்"

கற்பனைக்கும் எட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா இவை!

மேலும் பயணிப்போம்.....



Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 02, 2011, 04:34:14 AM
ஆழ்மன அற்புத சக்திகள்-16  


1990ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியில் 'நாற்பது நிமிடங்கள்' என்ற நிகழ்ச்சியில் காட்டிய ஆக்ராவைச் சேர்ந்த டிட்டு சிங் என்ற சிறுவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். தன்னை முன் பிறவியில் கொன்றவர்களைப் பெயருடன் அடையாளம் சொன்னான். பிபிசி செய்திக்குழு அவன் சொன்னதைத் தங்கள் பங்குக்கு ஆராய்ச்சி செய்து விவரங்களைக் கண்டறிந்தது....

வட இந்தியாவைச் சேர்ந்த டிட்டு சிங் இரண்டரை வயதுள்ள போதே தன் முற்பிறவி நினைவுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவனுடைய பெயர் சுரேஷ் வர்மா என்றும், மனைவி பெயர் உமா என்றும், இரண்டு பிள்ளைகள் அவனுக்கு இருப்பதாகவும் சொன்ன அவன் அவர்களுடைய பெயரையும் சொன்னான். ஆக்ராவில் அவன் வசித்ததாகவும் அவன் ரேடியோ, டிவி விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்திருந்ததாகவும் சொன்ன அவன் அதன் விலாசத்தையும் கூட சொன்னான். ஆரம்பித்தில் அவனை அவ்வளவாகப் பொருட்படுத்தாத பெற்றோர் நாளாவட்டத்தில் தங்கள் மூத்த மகனை எதற்கும் ஆக்ராவிற்குப் போய் விசாரிக்கும்படி சொன்னார்கள்.

டிட்டு சிங்கின் மூத்த சகோதரன் தன் தம்பி சொன்ன விலாசத்தைத் தேடிக் கண்டு பிடித்தான். நிஜமாகவே அங்கு அப்படி ஒரு டிவி, ரேடியோ கடை இருந்தது. உள்ளே சென்ற போது கல்லாவில் ஒரு விதவைப் பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் பெயர் உமா என்றறிந்த போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களா, அவருடைய கணவர் பெயர் சுரேஷ் வர்மாவா என்று கேட்க அந்தப் பெண்மணி ஆம் என்று சொன்னார். கடைசியில் தன் தம்பி சொன்னதையெல்லாம் சொல்ல அந்தப் பெண்மணியும் அதிர்ச்சி அடைந்தார். டிட்டு சிங் சொன்னது போல தன் கணவர் துப்பாக்கியால் தான் சுடப்பட்டு இறந்தார் என்பதையும் தெரிவித்தார்.

மறுநாளே உமா டிட்டுசிங்கைப் பார்க்க தானே பயணம் செய்தார். டிட்டு சிங் உமாவை சரியாக அடையாளம் கண்டு பிடித்ததோடு வேறு சில தகவல்களும் சொன்னான். அவையும் சரியாக இருந்தன. இரண்டு நாட்கள் கழித்து டிட்டுசிங் ஆக்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டான். பல பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த முற்பிறவியின் குழந்தைகளை அடையாளம் சொன்னான். கடைக்குச் சென்று தன் மரணத்திற்குப் பின் செய்த மாறுதல்களை சரியாகச் சொன்னான். தன்னைக் கொன்றவர்கள் பெயர் எப்படி சுட்டார்கள் எங்கு சுட்டார்கள் என்பதையெல்லாம் சொன்னான்.

பிபிசி குழு ஆக்ரா காவல் நிலையத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பார்த்த போது அதெல்லாம் டிட்டுசிங் சொன்னதற்கிணங்கவே இருந்தன. பிபிசி குழுவின் காமிரா அந்த ரிபோர்ட்டுகளைப் படம்பிடித்துக் காட்டியதோடு டிட்டு சிங்கின் மழித்த தலையையும் காட்டியது. சுரேஷ் வர்மாவின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அதே இடத்தில் டிட்டு சிங்கின் தலையில் ஒரு மச்சம் இருந்ததைக் காட்டினார்கள்.

ஆச்சரியமாக உள்ளதள்ளவா? பூர்வ ஜென்மம் பற்றிய நம்பிக்கை இந்து மதம், புத்த மதம் போன்ற மதங்களில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவ மதத்திலும் பண்டைய காலத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதை ஆதார பூர்வமாக டாக்டர் ப்ரையன் வெய்ஸ் என்ற அமெரிக்க மனோதத்துவ நிபுணர் சுட்டிக் காட்டுகிறார். ரோமானியப் பேரரசர் கான்ஸ்டண்டைனும் அவர் தாய் ஹெலெனாவும் தங்கள் காலத்தில் மறுபிறவிகள் குறித்து பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் அழிக்கச் செய்தார்கள் என்று கூறுகிறார். பல பிறவிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை மோட்சம் பெற பல காலம் இருக்கிறது என்ற அசட்டையை மக்களிடையே ஏற்படுத்தும், அது சர்ச்சை பலவீனப்படுத்தும் என்ற எண்ணமே அதற்குக் காரனம் என்கிறார் அவர்.


டாக்டர் ப்ரையன் வெய்ஸ் ஆழ்மன சக்திகளை நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். அவருடைய ஆராய்ச்சிகளில் மனிதர்களின் முந்தைய பிறவிகள் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் இது போன்ற விஷயங்களில் சிறிதும் நம்பிக்கையில்லாத ஒரு மனோதத்துவ மருத்துவராக இருந்தார். ஆன்மீகம், அபூர்வ சக்திகள் ஆகியவற்றிலோ, மறுபிறப்பிலோ நம்பிக்கை இல்லாத அவரை (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/weiss.jpg)அடியோடு மாற்றியது அவரிடம் 1980ஆம் ஆண்டு சிகிச்சை பெற வந்த காதரின் என்ற பெண்மணி தான்.

அவரிடம் 18 மாதங்கள் வந்து சிகிச்சை பெற்றும் காதரீன் குணமடையாமல் போனது ப்ரையன் வெய்ஸை குழப்பியது. வழக்கமான எல்லா உளவியல் மருத்துவ முறைகளையும் பயன்படுத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போகவே ஒரு நாள் காதரினை ஹிப்னாடிசம் செய்து "உனக்கு இந்த உளவியல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் ஆரம்பமான அந்தக் காலத்திற்கு செல்" என்று கட்டளையிட்டார்.

காதரின் தன் குழந்தைப்பருவத்திற்குச் சென்று அந்த நிகழ்ச்சிகளை வர்ணிப்பாள் என்று நம்பிய வெய்ஸ் ஏமாந்து போனார். பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னால் சென்று தன் முந்தைய பிறவிகளைப் பற்றி அவள் சொல்ல ஆரம்பித்த போது அவர் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார். அவள் நடிகை அல்ல, பலவித ஆளுமைகளை உடைய பெண்மணியுமல்ல என்று ஆராய்ந்தறிந்த வெய்ஸ் அவளுடைய முந்தைய பிறவித் தகவல்களை ஆராய முனைந்தார். சரிபார்க்க முடிந்த ஒரு சில விவரங்கள் உண்மையென்று தெரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தகவல்களை வைத்துக் கொண்டு காதரினை அவரால் குணப்படுத்தவும் முடிந்தது.

அந்தப் பெண்மணி காதரினை மையமாக வைத்து 1988ல் "பல வாழ்க்கைகள், பல ஆசான்கள்" (Many Lives, Many Masters) புத்தகத்தை ப்ரையன் வெய்ஸ் எழுதி அது மிகவும் பிரபலமடைந்தது. அவர் அதே போல் வேறு பல புத்தகங்களும் எழுதியுள்ளார். அவர் 1980ல் இருந்து சிகிச்சை செய்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் உளவியல் பிரச்னைகளுக்கான காரணங்கள் முற்பிறவிகளில் இருந்ததாகக் கூறுகிறார்.

குழந்தைப் பருவத்திலேயே சில துறைகளில் அபார ஞானம் படைத்த சில அதிசயக் குழந்தைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படிப்பட்ட ஞானமெல்லம் அவர்கள் முற்பிறவியில் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பதே ப்ரையன் வெய்ஸ் போன்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இது வரை அபூர்வமான சக்திகள் படைத்த தனி மனிதர்களைப் பற்றி கண்டோம். இது போல் இன்னும் ஏராளமான உதாரணங்களை ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த மனிதர்களின் வெளிப்படுத்தும் சக்தி வகைகள் நாம் இது வரை கண்ட சக்திகளின் தனி அல்லது கூட்டு வகைகளாகவே இருக்கக் கூடியவை என்பதால் அந்த செய்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி மனோசக்தி பற்றிய பொதுவான சுவாரசியமான ஆராய்ச்சிகளைப் பற்றியும், அந்த சக்திகளை நமக்குள் அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் காண்போமா?

மேலும் பயணிப்போம்...
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 06, 2011, 10:45:38 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-17  



ஆழ்மனதின் அற்புத சக்திகளை வெளிப்படுத்திய அற்புத மனிதர்களைக் கண்டோம். அத்தகைய மனிதர்களை மட்டுமல்லாமல் அந்த மனோசக்திகளையும் ஆராயும் முயற்சியில் பலகாலமாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த சக்திகளின் செயல்பாட்டை அறிய முடிந்தாலும் அந்த சக்திகளை விஞ்ஞான முறைப்படி விளக்கவோ, அளக்கவோ வழிகளைத் தேடினார்கள்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Oscan.jpg)
அவர்களின் ஆராய்ச்சிகள் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எத்தனையோ பொய்யும் புரட்டும் இந்த ஆழ்மன சக்திகள் போர்வையில் மலிந்து கிடந்தன. மேஜிக் நிபுணர்கள் சுலபமாகச் செய்து காட்டியவையை எல்லாம் தங்கள் சக்தியால் செய்வதாக சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் எல்லா கால கட்டங்களிலும் இருந்து வந்தது. இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ஆழ்மன சக்திகளாகக் கருத முடியாத வேறு சில சக்தி வெளிப்பாடுகளும் இருந்து வந்தன. அவை அதிசயிக்க வைக்கும் சக்திகளாக இருந்த போதிலும் ஆராய்ச்சியாளர்களின் ஆழமன சக்தி அடைமொழிக்குப் பொருத்தமானதாக அவை இருக்கவில்லை.

சில சக்திகள் ஐம்புலன்களின் அசாதாரண அறிவாக இருந்தன. அவை விலங்குகளிடம் கூட இருந்தன. சாதாரண மனித அறிவுக்கு அவை அசாதாரணமானதாகத் தோன்றினாலும் அவை அந்தந்த விலங்கினங்களுக்கு சர்வசகஜமாக இருந்தன. உதாரணமாகச் சிலவற்றை சொல்லலாம். நாய்களின் மோப்ப சக்தி அசாதாரணமானது. ஒவ்வொரு மின்கம்பத்தின் அருகேயும், ஒவ்வொரு புதரின் அருகேயும் சென்று அங்கு நடந்த எத்தனையோ விஷயங்களையும் தன் மோப்ப சக்தியால் அதனால் அறிந்து கொள்ள முடியும். மனித கண்ணிற்குத் தெரியாத சிலவகை எக்ஸ் ரே கதிர்களை எலிகளால் பார்க்க முடியும். நிலநடுக்கம் வருவதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகள் சிலவகை கடற்பறவைகளுக்கும், குதிரைகளுக்கும் தெரியும் என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு அசாதாரணமாகத் தோன்றும் இவை எல்லாம் விலங்கினங்களின் தனித் தன்மைக்கு பெரிய விஷயமல்ல. ஒருசில அபூர்வ மனிதர்களும் இந்த அபூர்வத் தன்மையைப் பெற்று விடுவதுண்டு. அதை மற்ற ஆராய்ச்சிகளுக்கு ஏற்றுக் கொள்ளலாம், ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு அவை பொருந்தாது என்றே ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.

ஒரு சுவையான சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 1956ல் கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு ரோசன் என்ற மனோதத்துவ மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நபரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்து எதையோ எழுத ஆரம்பித்தார். அவர் ஒரு பாரா எழுதி விட்டு ஓய்ந்து பின் சுயநினைவுக்கு வந்தார். அதைப் படிக்க முயன்ற டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன மொழி என்றே தெரியவில்லை. அதை எழுதிய நோயாளிக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே அந்த டாக்டர் அது எதாவது மொழியா இல்லை அர்த்தமில்லாத வரை எழுத்துகளா என்று கண்டு பிடிக்க மொழி ஆராய்ச்சியாளர்களிடம் அந்தத் தாளை அனுப்பினார்.

அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அந்த டாக்டரை இன்னும் அதிகமாகக் குழப்பியது. அந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் அது மேற்கு இத்தாலியில் கிமு ஒன்றாம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட ஆஸ்கன் என்ற மொழி என்றும் அதன் எழுத்து வடிவிற்கான ஒரு ஆதாரம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பிணத்துடன் சேர்ந்து புதைக்கப்பட்ட ஈயத் தகடில் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்கள். அது ஏதோ மந்திரிக்கப்பட்ட சாபம் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் அந்த சாபத்தைத் தான் ஆஸ்கன் மொழியிலேயே அந்த நோயாளி எழுதி இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

முதலில் டாக்டருக்கும் இந்த செய்தி தெரிந்து (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Oscan1.jpg)பரபரப்படைந்தவர்களுக்கும் தோன்றியது பூர்வஜென்மத்தில் அந்த நோயாளி அந்த ஆஸ்கன் மொழி பேசும் இனத்தவராக இத்தாலியில் கிமு காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தான். இல்லா விட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு மொழியைத் திடீரென்று ஹிப்னாடிச மயக்கத்தில் அந்த நோயாளி எப்படி எழுதியிருக்க முடியும் என்று சிந்தித்தனர். அது வரை அவர்கள் அறிந்திருந்த பூர்வஜென்ம நினைவுகள் எல்லாம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கி.மு காலத்தைய நினைவு என்றால் அது மிகப்பெரிய மைல்கல் என்று ஆரம்பத்தில் தோன்றியது.

ஆனால் நன்றாக விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. ஒரு நாள் அந்த நோயாளி நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விரித்து வைத்திருந்ததைக் கவனித்திருக்கிறார். அந்தப் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஆஸ்கன் மொழியில் ஈயத்தகட்டில் பதித்திருந்த சாபத்தின் படத்தை ஒரு கணம் பார்த்திருக்கிறார். ஒன்றும் புரியாத அதை அவர் அப்போதே மறந்தும் போயிருந்தாலும் ஒரு கணம் பார்த்த அந்தப் படத்தை அவர் அறியாமலேயே முழுவதுமாக அவர் மூளை படமாக உள்ளே பதித்துக் கொண்டிருக்கிறது. அது சில காலம் கழித்து அவருடைய ஹிப்னாடிச மயக்கத்தில் வெளி வந்திருக்கிறது. ஒரு கணமே தற்செயலாகப் பார்த்த ஒரு அறியாத மொழியில் எழுதப்பட்டதை சில காலம் கழித்து அப்படியே எழுத முடிவது ஆச்சரியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைக் கூட ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியாக நினைக்கவில்லை. ஏனென்றால் இதற்கு ஒரு விளக்கத்தை அறிந்திருந்த அறிவியல் ரீதியாக அவர்களால் அறிய முடிந்தது தான்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி எல்லாம் தற்போதைய அறிவியலுக்கு அகப்படாத மனோசக்தியின் தன்மையை அறிய முற்படும் ஆவலாக இருந்தது. அந்த சுவையான ஆராய்ச்சிகளைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....



Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 16, 2011, 05:06:34 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-18  


[(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/150px-Franz_Anton_Mesmer.jpg)ஆழ்மன சக்தியின் தன்மை குறித்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளுக்குப் போகும் முன், ஆழ்மன சக்திகள் இருப்பதை அவர்கள் அறிவியல் முறைப்படி உணர ஆரம்பித்தது எப்படி என்றறிந்து கொள்வது அந்த சக்திகள் பற்றி மேலும் தெளிவாய் அறிய உதவும் என்று நம்புகிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அறிந்திருந்தும், உபயோகித்தும் வந்தனர் என்றாலும் அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் தான். ஆழ்மன சக்தியால் உடல் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற உண்மையை அறிஞர்கள் உணர ஆரம்பித்தது அந்த சமயத்தில் தான்.

அந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னோடி ·ப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (1734-1815) என்ற ஜெர்மானிய மருத்துவர். ஆரம்பத்தில் சாதாரண மருத்துவ முறையையே பாரிஸ் நகரத்தில் பின்பற்றி வந்த அவர் தன் ஆராய்ச்சிகளின் முடிவில் நோயாளியைக் குணப்படுத்த வேறு ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார். 1774ல் ஒரு பெண் நோயாளிக்கு இரும்புச் சத்து கலந்த திரவத்தைக் குடிக்கக் கொடுத்து அவள் உடம்பில் பல இடங்களில் காந்தங்களை வைக்க அந்தப் பெண்மணி தன் உடலெல்லாம் ஒரு விசித்திர திரவம் பயணிப்பதாக உணர்ந்தார். சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணின் உடல் உபாதை நீங்கி குணமடைந்தாள்.

மனித உடலில் ஒரு காந்த வகை திரவம் ஓடுகிறது என்றும் அது தடைப்படும் போது நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த திரவம் தங்கு தடையில்லாமல் செல்லும் போது நோய்கள் குணமடைகின்றன என்றும் அவர் நம்பினார். பின் உடலின் வெளிப்புறத்தில் காந்தங்கள் உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டார். தன்னிடம் உள்ள காந்த சக்தியாலேயே நோயாளியின் உடலில் உள்ள காந்த திரவ ஓட்டத்தில் தடைகளை நீக்குவதாக எண்ணி அதை செயல்படுத்தினார். நோயாளிகள் குணமடைந்தனர்.


பிரான்ஸ் அரசியின் உதவிப் பெண்களில் ஒருவர் பக்கவாதம் வந்து அவர் மெஸ்மரின் சிகிச்சையால் குணமாகி விட அந்தப் பெண்மணி அரண்மனையில் மெஸ்மரின்(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/mesmer1.gif) சிகிச்சைக்கு நடமாடும் உதாரணமாக மாறினார். இது போல் பல மேல்மட்ட பிரபுக்களும் சிகிச்சையால் பலனடைந்தார்கள். மெஸ்மரின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரிடம் வரும் நோயாளிகளின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கவே அவருடைய வீட்டில் சிகிச்சைக்கு இடம் போதவில்லை. ஒரு பெரிய ஓட்டலை ஆஸ்பத்திரியாக மாற்றி அங்கு சிகிச்சை செய்து வந்தார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்தார்.

அங்கும் தினமும் வர ஆரம்பித்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே தனித்தனியாக நோயாளிகளைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக கும்பல் கும்பலாக குணப்படுத்த ஆரம்பித்தார். அவர்களைப் பல வழிகளில் ஹிப்னாடிச உறக்க நிலைக்குக் கொண்டு வந்து குணப்படுத்திய முறையில் இசையையும் பயன்படுத்தினார். தொலைதூரத்தில் இருந்தும் பலர் அவரைத் தேடி வர ஆரம்பிக்க அது பல மருத்துவர்களின் பொறாமையை வளர்த்தது. அவர்கள் மெஸ்மர் பயன்படுத்தும் முறைகள் மருத்துவத் துறைக்குப் பொருந்தாதவை என்று குற்றம் சாட்டினார்கள். மதவாதிகள் அவர் சாத்தானை பயன்படுத்தி நோயாளிகளைக் குணப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.

பிரான்ஸ் அரசரான பதினாறாம் லூயி 1784ல் மெஸ்மரின் சிகிச்சை முறை குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்தார். அதில் அமெரிக்க விஞ்ஞானியான பெஞ்சமின் ·ப்ராங்க்ளினும் இடம் பெற்றிருந்தார். அந்தக் குழு மெஸ்மர் நோய்களைக் குணப்படுத்தினாரா இல்லையா என்பதை விட அவர் சொன்னபடி மனித உடலில் அது வரை அறிந்திராத ஒரு வகை காந்த திரவம் ஓடுகிறதா என்பதில் கவனம் செலுத்தியது. கடைசியில் மெஸ்மர் சொன்னபடி மனித உடலில் அப்படியொரு காந்த திரவம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று கூறி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. எந்த காந்த திரவ ஓட்டத்தை சமன்படுத்தி அவர் நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொன்னாரோ அந்த காந்த திரவமே இல்லை என்று ஆனதால் அவரது சிகிச்சை முறை கேள்விக்குறியாகியது. ஏராளமானோர் சிகிச்சையில் குணமாகியிருந்த போதும் அது விசாரணையாளர்களின் விஞ்ஞான அணுகுமுறைக்கு பதிலாகவில்லை. 1785ல் மெஸ்மர் நாட்டையே விட்டு வெளியேறினார். பின் அவர் வாழ்ந்த முப்பதாண்டுகள் பற்றி பெரிய செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

(முன்பே குறிப்பிட்டது போல இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் ஆழ்மனதைக் குறித்து ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த யோகிகள் மெஸ்மர் வாழ்ந்த காலத்திலேயே இருந்த போதிலும், மேலைநாடுகளில் மனம் ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் டெஸ்கார்ட்டிஸ் என்ற ஞானியின் வரவிற்குப் பின்பு தான் அங்கு மனம், சிந்தனை ஆகியவை ஒரு அந்தஸ்தைப் பெற ஆரம்பித்திருந்தது. எனவே மெஸ்மர் தன் சிகிச்சையில் ஆழ்மனதை உபயோகித்தும் கூட அதன் பங்கை உணராமலிருந்தார். ஆரம்ப காலத்தில் செய்த சிகிச்சைகளால் மனித உடலில் காந்த திரவம் என்ற பெயரை அவர் நம்ப, பெயரை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் விளைவை துரதிர்ஷ்டவசமாகப் புறக்கணித்தனர்.)

மெஸ்மர் தன் சிகிச்சை முறைகளில் ஓய்வு பெற்றும் கூட மெஸ்மரின் சீடர்களில் ஒருவரான மார்கி டி புய்செகுர் என்ற நிலப்பிரபு அவருடைய முறைகளைப் பின்பற்றி சிகிச்சை செய்தும், ஆராய்ச்சி செய்தும் வந்தார். அவர் ஒரு முறை விக்டர் ரேஸ் என்ற தன்னிடம் வேலை பார்க்கும் குடியானவனை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்திய போது சாதாரணமாக எஜமானிடம் பேசத் தயங்கும் விஷயத்தை எல்லாம் அவன் பேசினான். ஆனால் விழித்த போது தான் முன்பு பேசியது எதுவும் விக்டர் ரேசுக்கு நினைவிருக்கவில்லை. ஒரு முறை அவன் ஆழ்மன உறக்கத்தில் தன் சகோதரியிடம் இட்ட சண்டையைப் பற்றி சொல்ல மார்கி டி புய்செகுர் சகோதரியிடம் சமாதானமாகப் போகும் படி கட்டளையிட விழித்து எழுந்த விக்டர் ரேஸ் அவர் சொன்னது நினைவில்லாத போதும் அவர் சொன்னபடியே செய்து விட்டு வந்தது ஆழ்மன சக்தியை புய்செகுருக்கு அறிமுகப்படுத்தியது.

அவர் மெஸ்மரின் சிகிச்சை முறையிலிருந்து ஒருபடி முன்னேறி காந்த சிகிச்சை செய்பவர் சக்தியை விட சிகிச்சை பெறுபவரின் நம்பிக்கையான மனநிலை தான் சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அந்த ஆழ்மன உறக்கத்தில் அந்த நம்பிக்கையை சிகிச்சை பெறுபவருக்கு சிகிச்சை தருபவர் ஏற்படுத்த முடிந்தால் அது பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்றும் கூறினார்.


இப்படி சிறிது சிறிதாக மெஸ்மரின் சிகிச்சை முறை காந்த சிகிச்சையுடன், (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/200px-James_Braid_portrait.jpg)ஆழ்மன சிகிச்சையுமாக சேர்ந்து உலகமெங்கும் பரவ ஆரம்பித்து 1834ல் ஜேம்ஸ் பெய்ர்டு என்ற மருத்துவரின் காலத்தில் ஹிப்னாடிசமாக உருவெடுத்தது. அவர் தன் ஆராய்ச்சிகளில் இந்த சிகிச்சையால் ஆழ்மன உறக்கத்தில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு வித்தியாசமான மாறுபாடே உடலில் நோய்கள் குணமாகக் காரணமாக இருக்கிறது என்று கண்டு பிடித்தார். அவர் ஆராய்ச்சியில் காந்த சிகிச்சை பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆழ்மன உறக்க நிலை முக்கிய இடத்தை பிடித்தது. அது வரை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்தும் முறைக்கு 'மெஸ்மெரிசம்' என்ற இருந்த பெயர் போய் வித்தியாசப்படுத்திக் காட்ட ஜேம்ஸ் பெய்ர்டு 'ஹிப்னாடிசம்' என்ற பெயரை சூட்டினார்.

தவறான கருத்து ஒன்றால் அங்கீகாரம் மறுக்கப்பட்ட மெஸ்மர் ஆழ்மன ஆராய்ச்சிக்குப் போட்ட பிள்ளையார் சுழி பின் பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி செய்ய இப்படி வழி வகுத்தது. ஹிப்னாடிசம் மூலம் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி உடல் நோய்களில் பலவற்றை குணப்படுத்தலாம் என்ற கண்டுபிடிப்புக்கு இப்படி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எட்டினார்கள். இது ஒரு பெரிய மைல் கல்லாய் அமைந்தது.

(நாம் முந்தைய அத்தியாயங்களில் கண்ட அபூர்வ மனிதர்கள் எட்கார் கேஸ் முதலானோர் ஆழ்மன உறக்கத்தின் போதே தங்களின் அபூர்வ சக்தியை வெளிப்படுத்தினார்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்)

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 17, 2011, 05:16:46 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-19  


மெஸ்மர் காலத்தில் அவர் பரிகசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாதவராக இருந்தாலும் அவர் காலத்திற்குப் பின் வந்தவர்களை ஒரு உண்மை நிறையவே சிந்திக்க வைத்தது. அவருக்கு எதிராக ஆயிரம் வாதங்கள் அக்கால அறிவியலறிஞர்கள் முன் வைத்த போதும் பல நோயாளிகளை கும்பல் கும்பலாக அவர் குணமாக்கியதைப் பெரிய அற்புதமாகவே பலரும் நினைத்தனர். (விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் பெருமளவு நவீனமாக்கப்பட்ட இன்றைய நாட்களில் கூட இது சாத்தியமில்லாததாகவே இருக்கிறதல்லவா?)

பல மேலை நாடுகளிலும் ஆழ்மன சக்திகள் முறையாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது. 1882ல் லண்டனில் மனோசக்தி ஆராய்ச்சிக் கழகம் (Society for Psychical Research (SPR)) ஆரம்பிக்கப்பட்டது தான் விஞ்ஞான முறைப்படி ஆராய முற்பட்ட முதல் அமைப்பு. பின் பல நாடுகளிலும் அதைப் பின்பற்றி பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

1888ல் ப்ரெஞ்சு மனோதத்துவ நிபுணர் சார்லஸ் ரிச்சட் என்பவர் விளையாட்டு சீட்டுகளை வைத்து பல ஆராய்ச்சி செய்தார். முதல் முறையாக புள்ளி விவரப்படி ஆராய்ச்சி செய்த அவர் நம் ஆறறிவுக்கு அப்பாற்பட்ட அதீத மனோசக்தி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது என்று தன் கட்டுரையில் வெளியிட்டார்.
1908ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன் என்பவர் மனிதர்களுக்கிடையில் மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார்.

சிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களும், மனித வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களும் மொழிகள் தோன்றாததற்கு முந்தைய காலத்தில் மனிதன் சைகளையும், சத்தங்களையும் உபயோகிப்பதற்கும் முன்னால் மனோசக்தி மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்க வேண்டும் என்று கூறினர். பின்னால் இது மனிதன் மறந்த கலையாகி விட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தோடு ஜே.ஜே.தாம்சன் தெரிவித்த மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று தெரிவித்த கருத்தையும் சேர்த்துப் பார்த்த போது தாம்சன் சொன்னபடியே இருக்கலாமோ என்று சந்தேகித்த அறிவியலறிஞர்கள் அதை ஆராய்ந்தறிய முற்பட்டனர
(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/table_faraday_cage.jpg)(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Faraday_cage.png)


அவர்களுக்கு அந்த ஆராய்ச்சிக்கு உதவியது மைக்கேல் ஃபாரடே என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு கூண்டு. 1836ல் அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கூண்டு அவர் பெயராலேயே “ஃபாரடே கேஜ் (Faraday Cage) என்று அழைக்கப்பட்டது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு மின்காந்தக் கவசம். அந்தக் கூண்டில் உள்ளிருந்து வெளியேயோ, வெளியேயிருந்து உள்ளேயோ மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் போன்றவை போக முடியாதபடி அவர் வடிவமைத்திருந்தார். அதை பிறகாலத்தில் வந்த விஞ்ஞானிகள் மேலும் நுட்பமாக மேம்படுத்தி இருந்தார்கள். சிறிய கூண்டு முதல் பெரிய அறை வரை ஃபாரடே கூண்டுகள் பல அளவுகளில் ஆராய்ச்சிக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டன.

தொலை தூரத்திற்கு எண்ண அலைகள் மூலம் செய்திகள் அனுப்ப முடிந்த, தூரத்தில் இருந்த பொருள்களையும், தகவல்களையும் அறிய முடிந்த சில அபூர்வ மனிதர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபாரடே கூண்டில் அமர வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அந்தக் கூண்டின் உள்ளே அமர்ந்திருந்த நபர் வெளியே உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்த தகவலை அனுப்புவது, தூரத்தில் ஒருவர் மனதில் நினைத்திருந்த அல்லது வைத்திருந்த ஒரு பொருள் என்னவென்று அறிவது போன்ற ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

பெரும்பாலான ஆராய்ச்சிகள் மிகச்சரியான முடிவுகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அனுப்பிய தகவல்களும், பெற்ற தகவல்களும் பெரும்பாலான சமயங்களில் பொருந்தி வந்தன. மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் ஃபாரடே கூண்டில் இருந்து நடைபெற சாத்தியமில்லை. ஆனால் மனோசக்தி மூலம் தகவல்கள் வெற்றிகரமாகப் பரிமாற்றம் நடந்துள்ளன. பின் அந்த மன அலைகளின் தன்மை தான் என்ன என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே சாதாரண இடங்களில் இருந்து மனோசக்தியைப் பயன்படுத்தி அனுப்பிய, பெற்ற தகவல்களின் வெற்றித் தன்மையை விட ஃப்ராடே கூண்டில் இருந்து அனுப்பிய, பெற்ற வெற்றித் தன்மைகள் எண்ணிக்கை அளவிலும், தன்மை அளவிலும் மேம்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் குழப்பியது.

மேலும் பயணிப்போம்...
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 18, 2011, 07:23:20 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-20  


துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/200px-Alexis_Carrel_02.jpg)பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது. உதாரணத்திற்கு 1912ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். “கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது”.


அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர். ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.

1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப் போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.

(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்)

லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப் பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.

1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man. என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Rhine.jpg)

முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.

அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது” என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.

எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு “உண்மையில் இப்படி இருக்க முடியுமா?” என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?


மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 26, 2011, 04:28:17 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-21  


ஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/rosen.jpg)
                                                           (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/espcards.jpg)”அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவிற்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது.”

இளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல். பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.

சந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.

சந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போலோ 14ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்திற்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

இந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸிற்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.

நாசா(NASA)வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எது எப்படியோ அந்த விண்வெளிப்பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தமில்லாமலிருப்பதை அவரால் உணர முடிந்தது. அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.

அவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்து வான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.

ஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார்.

எதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது. நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வது தானே அறிவு?

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 27, 2011, 04:36:31 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-22  


ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது. (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Ganzfeld.jpg)

இந்த ஆராய்ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர். அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.

அவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில்
ஒரு காகிதத்தில் '49\'b020'S, 70\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது.....” என்று சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.

SRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.


அமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார். National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/patprice.gif)உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார். ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது. இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்றார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).

SRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது. அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது. Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன. அந்த அலைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததை நாமும் காண்போமா?

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on November 28, 2011, 04:17:20 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-23  

வியாதிகளைக் குணப்படுத்தும் ஓல்கா வோரால்


1979 ஆம் ஆண்டு உயிர் இயற்பியல் (Biophysics) துறையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற பெவர்லி ரூபிக் (Beverly Rubik) என்ற ஆராய்ச்சியாளர் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு மாறியது ஒரு சுவாரசியமான கதை. விளையாட்டுகளிலும், நடனத்திலும் கூட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு சமயம் மூட்டு வலியால் மிகவும் அவதிப்பட்டார். அப்போது டாக்டர் ஓல்கா வோரால் (Dr. Olga Worrall) என்ற சிகிச்சையாளர் தன் கைகளால் தொட்டே நோய்களையும், வலிகளையும் போக்க முடிந்தவர் என்று கேள்விப்பட்டு உடனே அவரை அணுகினார். (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/bio_rubik.jpg)

நவீன கல்வியிலும், சிந்தனைகளிலும் வளர்ந்திருந்த ரூபிக்கிற்கு இது போன்ற சிகிச்சை முறைகளில் பெரியதொரு நம்பிக்கை இருந்திருக்க வய்ப்பில்லை என்றாலும் பலர் சொல்லக் கேட்டிருப்பதை சரிபார்க்க இதுவே வாய்ப்பு என்று அவர் கருதினார். டாக்டர் ஓல்கா வோரால் அவருடைய முழங்கால் மூட்டில் கை வைத்த சில நிமிடங்களில் மூட்டு வலி மிகவும் குறைந்து போனது. இது விஞ்ஞானியான ரூபிக் அவர்களுக்கு மிக ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவர் அறிந்திருந்த மருத்துவ முறைகளில் இது போன்ற அதிசயத்தை அவர் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்ததால் இது குறித்து விரிவாக ஆராய முற்பட்டார். தன் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியுமா அன்று அவர் டாக்டர் ஓல்கா வோராலைக் கேட்க அவரும் ஒத்துக் கொண்டார்.

முன்பே பாக்டீரியாக்களை வைத்துப் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்திருந்த பெவர்லி ரூபிக் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளைத் தனக்கு நன்கு தெரிந்திருந்த பாக்டீரியாக்களை வைத்தே செய்து பார்க்கத் தீர்மானித்தார். பல நவீன உபகரணங்களை வைத்து நீரில் நீந்தும் பாக்டீரியாக்களைப் பல புகைப்படங்கள் ரூபிக் எடுத்து வைத்திருந்தார். அவற்றைத் தொடர்ச்சியாக கவனிக்கையில் அவை நீந்துவது கரடுமுரடில்லாத அமைதியான வளைவுகளாய் தெரிந்தன. சில வேதிப்பொருள்களை அவற்றுடன் சேர்த்தபோது அவை செயலிழந்து ஸ்தம்பித்துப் போவதை அவர் கவனித்தார்.

அப்படி அந்த பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்கிற வேதிப் பொருள்களைப் பெருமளவு அந்த நீரில் சேர்த்து அந்தக் கலவை உள்ள மைக்ராஸ்கோப் ஸ்லைடின் மீது டாக்டர் ஓல்கா வோராலின் கைகளைக் குவித்து வைக்கச் சொன்னார். பன்னிரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அந்த மைக்ராஸ்கோப் ஸ்லைடை சோதித்துப் பார்த்த போது அந்த பாக்டீரியாக்களில் ஐந்திலிருந்து பத்து சதவீதம் பாக்டீரியாக்கள் தங்கள் செயல்திறனை மீண்டும் பெற்றிருந்தன.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்த பாக்டீரியாக்களை வைத்து ஆராய்ச்சி செய்திருந்த ரூபிக்கிற்கு இது போல் முன்பு பாக்டீரியாக்கள் மீண்டும் செயல்திறனை அப்படி மீட்க முடிந்த சம்பவங்களைக் காண முடிந்ததில்லை. ஒருவேளை மனிதக் கைகளின் இளஞ்சூட்டில் அந்த பாக்டீரியாக்கள் அந்த வேதிப்பொருள்களின் செயல்பாட்டையும் மீறி செயல் திறன் திரும்பப் பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழத் தன் கைகளையும், வேறுசிலர் கைகளையும் மைக்ராஸ்கோப் ஸ்லைடில் குவித்து ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார். ஆனால் டாக்டர் ஓல்கா வோராலின் கைகள் குவித்ததால் ஏற்பட்ட விளைவுகள் மற்றவர்கள் கைகளைக் குவித்த போது ஏற்படவில்லை.

அந்தப் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல, அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல (antibiotic) நுண்பொருள்களை அந்த பாக்டீரியாக்களுடன் சேர்த்து மீண்டும் அந்த ஆராய்ச்சிகளை ரூபிக் தொடர்ந்தார். மிக அதிகமான அளவு அந்த நுண்பொருள்களைச் சேர்த்த போது டாக்டர் வோராலின் தொடுதலால் எந்த வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் குறைந்த அளவு நுண்பொருள்களைச் சேர்த்த போது, அந்த பரிசோதனைக் குழாய்களை வோரால் சிறிது நேரம் தொட்ட போது அந்த பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர் பெறவும் வளர்ச்சியடையவும் தொடங்கின. டாக்டர் வோராலின் கைகளுக்கும் அந்த சோதனைக் குழாயிலிருந்த பாக்டீரியாக்களுக்கும் இடையே ஏதோ நிகழ்கிறது என்பது மட்டும் ரூபிக் அவர்களுக்குத் தெரிந்தது. ஃபாரடே கூண்டு போன்ற நவீன கருவிகள் கூட கண்டு பிடிக்க முடியாத உயிர்மின்காந்த நுண்ணலைகள் (bioelectromagnetic subtle waves) உருவாகி இந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றன என்ற கணிப்புக்கு வந்தார்.

(சிலர் நட்டால் செடிகளும், மரங்களும் நன்றாக செழித்து வளரும் என்று ஒருசிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அப்படி ஓரிருவர் நடும் தாவரங்கள் எல்லாம் மிகச் செழிப்பாக வளர்வதைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி பெரிதாக அப்போது நினைக்கத் தோன்றியதுமில்லை. ஆனால் ரூபிக் அவர்களின் பரிசோதனைகள் பற்றிப் படிக்கையில் அவையெல்லாம் கூட சிந்திக்க வேண்டியவையாகவே தோன்றுகிறது. அந்த நபர்கள் ஆழ்மன சக்தியாளர்களாக இல்லாதிருந்தாலும் அந்தத் தாவரங்கள் வளர உதவுகின்ற ஏதாவது சக்தியை அந்த விதைகளுக்கோ, நாற்றுகளுக்கோ தர வல்லவர்களாக இருந்திருக்கலாம்)


பெவர்லி ரூபிக் அறிவியல் ரீதியாக ஆழ்மன சக்திகளுக்கு விடை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் டாக்டர் ஓல்கா வோராலோ தன் சக்தியைப் பிரபஞ்ச சக்தியாகக் கூறினார். (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/olga.jpg)1972ஆம் ஆண்டு இறந்த அவர் கணவர் அலெக்சாண்டர் அம்புரோஸ் வோராலும் அவர் போலவே சக்தி படைத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்கா வோராலும் 1985ஆம் ஆண்டு இறக்கும் வரை மனிதர்களை மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட விலங்குகளையும், தாவரங்களையும் கூடத் தன் சக்தியால் குணப்படுத்தி வந்தார்.

1982ல் Science of Mind என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குணப்படுத்தும் ஆழ்மன சக்தியை விவரிக்கும்படி பேட்டியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னார். “ஒரு பொறியியல் வல்லுனரான என் கணவர் அதை நுண்ணிய மின்னலை என்றார். இந்தியர்கள் ப்ராணன் என்று சொல்கிறார்கள். உயிர்சக்தி என்று சிலரும், ஆழ்மன சக்தி என்று சிலரும் கூறுகிறார்கள். பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம். அந்த சக்தியில் மின்னலைகள் இருப்பதாக என் கணவர் கடைசி வரை கூறி வந்தார். நாங்கள் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வதாகப் பல நோயாளிகள் சொன்னதைப் பார்க்கையில் அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது.”

“இறைவன் இந்த உலகத்தை குறைபாடில்லாமல் படைத்திருக்கிறார். மனிதன் சரியான விதத்தில் வாழாமல் பிறழும் போது நோய் உட்பட பல தீமைகளை வரவழைத்துக் கொள்கிறான். மனிதன் மீண்டும் தன் உயர்நிலையைத் திரும்பப் பெற இந்த இயல்பான சக்தியை உபயோகித்து மீளலாம். இதை நான் இறைசக்தி என்றே நினைக்கிறேன். ஒருவரைக் குணப்படுத்த நான் முயலும் போது இறைவனின் இந்த சக்தி என் மூலமாகச் சென்று பலனளிக்கிறது என்று கூறத் தோன்றுகிறது”
மேலும் பயணிப்போம்......
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on December 17, 2011, 09:08:03 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-24  

                                                       (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/180px-SpottedSalamander.jpg)


பெவர்லி ரூபிக்கின் ஆராய்ச்சிகள்


டாக்டர் ஓல்கா வோரால் ”பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம்.” என்று கூறிய முடிவுக்கே பெவர்லி ரூபிக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் வந்தார். உயிர்வாழும் அனைத்திலும் மின்காந்த அலைகளை ஒத்த சக்தி சூழ்ந்து இருப்பதை அவரால் அறிய முடிந்தது.

உயிர்களை சூழ்ந்துள்ள மின்காந்த வெளிச்சக்தியில் சிறிது கூடினாலும் அது மிகப் பெரிய பலன்களைத் தருவதாக உள்ளது என்றும் ”Salamander என்ற ஒரு உடும்பு வகைப் பல்லி தன் முழுக் காலை இழந்தாலும் குறுகிய காலத்தில் அதைத் திரும்ப வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அதையே ஒரு தவளையால் இழந்த காலை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. அதற்குக் காரணம் அந்த இரண்டு விலங்கு வகைகளின் உடல்களைச் சூழ்ந்துள்ள மின்காந்த வெளியில் உள்ள சில மில்லிவால்ட் சக்தி வித்தியாசம் தான்” என்பதையும் பெவர்லி ரூபிக் 2000 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் ஆராய்ச்சி முடிவுகளில் கூறினார். மனிதர்களின் மின்காந்தவெளி குறித்து பல ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மனிதனைச் சுற்றியும் மின்காந்தவெளி உள்ளதென்றும் SQUID என்ற கருவிகள் மூலம் அவற்றை அளக்க முடிகிறதென்றும் முன்பே ஜான் சிம்மர்மன் (John Zimmerman) போன்ற அறிஞர்களின் ஆராய்ச்சியில் வெளியாகி இருந்தது. மனித உடலிலேயே மிக அதிக மின்காந்த அலைகளை வெளிப்படுத்தும் உறுப்பாக இதயத்தைக் கண்டு பிடித்திருந்தார்கள். அடுத்ததாக அதிகாலையில் விழித்தவுடன் கண்களும் மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகிறதாம். அதிசயமாக மனித மூளை தான் மிகக் குறைந்த மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகின்றன என்கின்றன ஆராய்ச்சிகள். அதை விட தசைகள் கூட தங்கள் செயல்பாடுகளின் போது அதிக மின்காந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள்.
ஜான் சிம்மர்மன் SQUID கருவியை உபயோகித்து மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்தும் சக்திபடைத்தவர்களின் கைகளில் இருந்து அச்சமயத்தில் 7 முதல் 8 ஹெர்ட்ஸ் மின்காந்த சக்தி வெளிப்படுவதாகக் குறித்துள்ளார்.

எல்மர் க்ரீன் என்ற ஆராய்ச்சியாளர் சக்திகள் படைத்த குணப்படுத்தும் நபர்களை செம்பாலான தகடுகள் பதிந்த ஆராய்ச்சி அறைகளில் இருத்தி செய்த ஆராய்ச்சிகளில் சில சமயங்களில் நூறு வால்ட்ஸ் வரை சக்திகள் வெளிப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அது போல டான் விண்டர் (Dan Winter) என்ற ஆராய்ச்சியாளர் மரங்களின் கீழ் அமர்ந்து செய்யும் தியானங்களின் போது வெளிப்படும் சக்திகள் குறித்து பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

இது போன்ற பலருடைய ஆராய்ச்சிகளையும் பற்றிக் கூறும் அவர் ஃபாரடே கூண்டுகள் extra low frequency (ELF) என்று கூறப்படும் ஒரு நொடிக்கு 300க்கும் குறைவான அலைகளை வெளிப்படுத்துவனவாக உள்ள சக்திகளைத் தடை செய்வதில்லை என்றும் ஆழ்மனசக்திகளின் ஃபாரடே கூண்டு ஆராய்ச்சிகளின் போது அப்படிப்பட்ட அலைகள் தான் வெளிப்பட்டு அதிசயங்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்றும் கருதுவதாகக் கூறினார். அந்த அளவு குறைந்த அலைவரிசை சக்திகள் உண்மையிலேயே சக்திவாய்ந்தனவாக இருப்பதாக அவர் கருதினார்.

இரண்டு புத்தகங்களையும், சுமார் அறுபது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ள பெவர்லி ரூபிக் பல அறிவியல் கருத்தரங்கங்களிலும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் ஆராய்ச்சிகள் குறித்து பேசியிருக்கிறார். அமெரிக்காவின் பிரபல டெலிவிஷன் நிகழ்ச்சியான “Good Morning America” (ABC-TV)யில் டிசம்பர் 2000ல் அவர் ஆழ்மன ஆராய்ச்சிகள் பற்றிப் பேசிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

ஆழ்மன சக்திகளின் பிரம்மாண்டம் தன்னை பெரும் வியப்பில் ஆழ்த்துவதாகக் கூறும் பெவர்லி ரூபிக் இந்த ஆராய்ச்சிகளில் இருக்கும் சிக்கல்களையும் ஒத்துக் கொள்கிறார். இந்த ஆராய்ச்சிகள் வியப்பில் ஆழ்த்துகிற முடிவுகளைத் தெரிவித்தாலும் இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஒன்று போலவே இருப்பதில்லை என்கிறார் அவர். விஞ்ஞானம் எத்த்னை முறை ஒரு ஆராய்ச்சி செய்தாலும் அது ஒரே மாதிரியான முடிவைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கையில் இந்த ஆராய்ச்சிகள் அது போன்ற ஒரே முடிவைத் தருவதில்லை என்பதுவே யதார்த்தமான உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார். ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் சக்தி வாய்ந்த மனிதர்களின் மனநிலை, தயார்நிலை போன்றவை அடிக்கடி மாறுவதால் இந்த ஆராய்ச்சிகளில் ஒரே விளைவைத் தரத் தவறுகிறது என்று கருத இடமிருக்கிறது என்கிறார் அவர்.

இன்றும் எத்தனையோ ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆராய்ச்சிகள் குறித்து ஓரளவு விளக்கமாகவே பார்த்து விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி ஆழ்மன சக்தியின் வகைகளையும், அந்த சக்திகளால் அற்புதங்கள் எப்படி சாத்தியமாகின்றன என்பதையும், அந்த ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதையும் விளக்கமாகக் காண்போமா?

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Global Angel on December 21, 2011, 06:29:17 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-25  

வியக்க வைக்கும் ஒன்பது வகை வெளிப்பாடுகள்

நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.


அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது. (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/wchurchill.jpg)உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை –


1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.
2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.
3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.
4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.
5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.
6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி. உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.
7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது.(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/astralproject.jpg) இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.
9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.
ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.
சரி. இந்த ஆழ்மன சக்திகள் எப்படி, எப்போது சாத்தியமாகின்றன என்பதைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....
Title: ஆழ்மனதின் அற்புத சக்திகள்-26
Post by: Anu on July 19, 2012, 11:14:41 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 26

ஆழ்மனசக்தியைப் பெறமுடியுமா?

ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும் உண்டு.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மனசக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து படித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.

ஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப் போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது. நினா குலாகினாவிற்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.

இரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மனசக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்திற்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸிற்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை. டேனியல் டங்க்ளஸ் ஹோமிற்கு ஆவிகள் தொடர்பு சம்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.

அப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா? எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இவற்றிற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே “விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும், யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்திற்குப் பஞ்சம் இருக்கவில்லை. பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய “இரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India)” , பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi)” போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் “ராஜ யோகம்” என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்தமதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டது. பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன. இது குறித்து பல யோகிகள் சொல்லியிருந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் “யோக சூத்திரங்கள்” என்ற நூலை எழுதினார்.
ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.

இந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம் (shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள் அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றிற்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம் முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.

எனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து ஆழ்மன சக்திகளைப் பெறக் கூடிய வழிகளையும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளையும் தொகுத்ததை கூடுமான வரை எளிமையாக இனி பார்ப்போமா?
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:16:12 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 27

தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்

ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை -

அவநம்பிக்கை
அவசரம்
அமைதியின்மை

அவநம்பிக்கை

அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது. இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப் பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. மேலும் இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பர்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.


இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரம்மாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்பிற்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).


அவசரம்

அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை


மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனதை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மனசக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.

இனி அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் காண்போமா?

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:18:52 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-28

நான்கு வகை மின்னலைகள்


ஆழ்மன சக்திகள் சாத்தியம் என்பதையும், அவை கைகூடத் தடையாக இருக்கும் எந்த மனநிலைகளை நீக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம். இனி அவை எப்படி சாத்தியப்படும் என்பதையும் பார்ப்போம்.[/size]


நம் மனநிலைகள் மூளையில் சிலவித மின் அலைகளை ஏற்படுத்துகின்றன. அந்த அலைகள் எலெக்ட்ரோசெபாலோக்ராஃப் (electrocephalograph - EEG) என்ற கருவியால் அளக்க முடிந்தவை. அவை ஒரு வினாடிக்கு எந்த அளவு ஏற்படுகின்றன என்பதை சிபிஎஸ் (Cycles per second –CPS) என்பதை வைத்து அளக்கின்றனர். அவை நான்கு வகைப்படும்.

பீடா அலைகள் (Beta Waves) – பதினான்கிற்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் பீட்டா அலைகள். நாம் பெரும்பாலும் இருப்பது இந்த அலைவரிசையிலேயே.

(http://1.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S6FthnkrU-I/AAAAAAAAAPY/JhMM4bjoMS8/s1600/brain_waves.jpeg)

ஆல்ஃபா அலைகள் (Alpha Waves) - எட்டிலிருந்து பதிமூன்று சிபிஎஸ் வரை உள்ள அலைகள் ஆல்ஃபா அலைகள். இது தூக்கம் தழுவுவதற்கு முன்னும், அரைத்தூக்கத்திலும் ஏற்படும் அலைகள். தியானத்தின் ஆரம்பத்திலும் இந்த அலைகள் ஏற்படும்.

தீட்டா அலைகள் (Theta Waves) – நான்கிலிருந்து ஏழு சிபிஎஸ் வரை உள்ள அலைகள் தீட்டா அலைகள். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் ஆழ்ந்த தியானத்தின் போதும் வெளிப்படுகின்றன.

டெல்டா அலைகள் (Delta Waves) – நான்கிற்கும் குறைவான சிபிஎஸ் உள்ள அலைகள் டெல்டா அலைகள். பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளிடம் காணப்படுகின்றன. யோகிகள், சித்தர்களிடமும் இந்த டெல்டா அலைகள் காணப்படுகின்றன.

இந்த நான்கு அலைகளில் பீட்டா அலைகளில் நாம் எந்த அதீத சக்தியும் பெற முடிவதில்லை. ஆனால் மற்ற அலை வரிசைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் போது எல்லா அதீதமான சக்திகளும் நமக்கு சாத்தியமாகின்றன.

அது எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது.

அணுவைப் பிளந்து பார்த்த பின் விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம் பிரம்மாண்டமானது. உள்ளே இடைவிடாத கதிர் இயக்கத்தைக் கண்ட விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். அது வரை திடப்பொருள், திரவப் பொருள், வாயுப் பொருள் என்பது பார்வைக்கு மட்டுமல்ல உண்மையிலேயே அப்படித்தான் என்று நம்பி வந்த விஞ்ஞானிகள் கடைசியில் எல்லாம் சக்தி மயம் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. காணும் பொருள்கள் எல்லாம் சக்தியின் துடிப்புகளாக, சக்தியின் விதவிதமான மாறுதல்களாக இருக்கக் கண்டனர். விஞ்ஞானத்தில் க்வாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.

பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும், மற்ற உயிருள்ளவையும், உயிரற்றவையும் மிக மிக நுண்ணிய மைக்ராஸ்கோப்பினால் பார்க்கப்படும் போது சக்தியின் வெளிப்பாடுகளாக, கதிரியக்கங்களாகத் தெரிவதாக இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. எனவே நாம் எல்லோரும், எல்லாமும் ஆழத்தில், அடிமட்டத்தில் ஒரு மகாசக்தியின் மிக நுண்ணிய பகுதியாக இருக்கிறோம்.
அந்த சக்தி மட்டத்தில் ஒன்றுபடுகிறோம். அந்த மட்டத்திற்கு நம் உணர்வு நிலையைக் கொண்டு போனோமானால் நாம் அறிய முடியாததில்லை. நம்மால் சாதிக்க முடியாததில்லை.

இதை வைத்தே “தத்துவமஸி” (நீயே அது), அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ப்ரம்மம்), என்ற வேத வாக்கியங்கள் எழுந்திருக்க வேண்டும். Know Thyself (உன்னையே நீ அறிவாய்) என்று பல மதங்களில் பிரதான அறிவுரையாகக் கூறுவதும் உன்னை நீ முழுவதுமாக அறிய முடியும் போது எல்லாவற்றையும் முழுமையாக அறிய முடியும் என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.

எத்தனையோ விஷயங்கள் ஆழ்மன அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது மனிதர்கள் விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்கள் விஷயத்திலும் உண்மையாக இருப்பது தான் பேராச்சரியம்.

உதாரணத்திற்கு எறும்புகள் குறித்து நடந்த ஒரு ஆராய்ச்சியைச் சொல்லலாம். ராணி எறும்பை எறும்புக் கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி எத்தனை தொலைதூரத்தில் வைத்தாலும் எறும்புகளின் கட்டுமானப்பணிகள் தடைபடாமல் கச்சிதமாக நடப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். ஆனால் தொலைதூரத்தில் இருக்கும் அந்த ராணி எறும்பைக் கொன்று விட்டாலோ அந்த எறும்புகள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போய் விடுகின்றன என்பதையும் அங்குமிங்கும் அலைபாய்கின்றன என்பதையும் ஆராய்ச்சியில் அறிய முடிந்தது. எவ்வளவு தொலைவானாலும் சரி ராணி எறும்பு உயிருடன் இருக்கும் வரை அதனிடமிருந்து எப்படியோ தேவையான கட்டளைகள் மற்ற எறும்புகளுக்குப் போய் சேர்கின்றன என்பது மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா? அப்படி செய்திகள் பரிமாற்றம் ஆவது ஆழ்மன அளவிலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது.

நாம் முன்பு பார்த்த பல ஆழ்மன சாதனையாளர்களும் ஒருவித அரைமயக்க நிலைக்குச் செல்ல முடிந்த போது தான் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதைக் கண்டோம். மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன பிராந்தியத்திற்குள் நுழையும் போது தான், ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் சஞ்சரிக்கும் போது தான், எல்லோரையும் பிணைக்கும் மாபெரும் பிரபஞ்ச சக்தியைத் தொடர்பு கொள்ள முடிகிறது.

உதாரணத்திற்கு, எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாகவும் அதை ஆகாய ஆவணங்கள் என்றும் எட்கார் கேஸ் சொன்னதை எண்ணிப்பாருங்கள். அதைப் படிக்கும் கலையை அறிந்து கொண்டால் எந்தத் தகவலையும் மிக எளிதாகப் பெற்று விடலாம் என்று அவர் சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் சஞ்சரித்து ஆழ்மன சக்திகளை அடைய முதலடி எடுத்து வைப்போமா?

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:23:02 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-29



ஆல்ஃபா அலைகளும் எளிய பயிற்சியும்


எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S6FubI-XoBI/AAAAAAAAAPg/qdStjF5Rzdc/s320/alpha-brain-ad.jpg)
முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார். முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ்
ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.


அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:26:05 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 30



தியானத்தால் மேம்பாடு

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S7s4_CBtSWI/AAAAAAAAAQo/6JohPc_6q7E/s1600/psychic-powers-meditation.jpg)ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல ஒரு எளிய பயிற்சியைப் பார்த்தோம். படிக்கும் போது மிக எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்து பார்த்த பலருக்கு அது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது. மனம் அரைமணி நேரத்திற்காவது அமைதியாக இருப்பது பெரும்பாடாக இருந்திருக்கலாம்.
எண்ணங்களுக்கும் மூச்சிற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவ பூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும். அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும் என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள்.

தியானப்பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப்பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation ™ . அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது. ஆழ்மன சக்திகளுக்கு ஏற்ற அலைவரிசைகளில் நம்மை இருத்தச் செய்வதுடன் மற்றபல மன நலம் மற்றும் உடல் நலமும் தியானத்தால் மேம்படுவதால் முக்கியமான சில தியானங்கள் பற்றி அறிந்து கொள்வோமா?

அடுத்த வாரம் வரை சென்ற அத்தியாயத்தில் சொன்ன பயிற்சியை இது வரை செய்யாதவர்களும் தொடர்ந்து செய்யவும். அது தியானம் சுலபமாகக் கைகூட உதவியாய் இருக்கும்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:28:15 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-31


தியானம் சில முக்கியக் குறிப்புகள்

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S7s6LGRJ4YI/AAAAAAAAAQw/cW-jWoYDvbs/s1600/psychic.jpg)தியானங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் யோகாவிலிருந்து உருவானவை. கௌதம புத்தர் தன் ஞானத் தேடலின் ஆரம்பத்தில் பல யோகிகளிடம் தியான முறைகளைக் கற்றிருந்தார். ஞானமடைந்த பின்னர் அவர் போதித்த தியான முறைகள் யோகாவையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவரது காலத்திற்குப் பின் அவருடைய சீடர்கள் அந்த தியான முறைகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, பல அனுபவங்கள் பெற்று மேலும் பல தியான முறைகளை உருவாக்கினார்கள். புத்த மதம் பரவிய பல நாடுகளில் தியான முறைகள் பல்வேறு வடிவம் எடுத்தன. ஜென் தியானம், திபெத்திய தியானம், தந்திரா தியானம், விபாசனா தியானம், போன்ற பல்வேறு தியானமுறைகளை புத்த மதம் உருவாக்கி வளர்த்தது.

ஜான் மெயின் (John Main), அந்தோனி டி மெல்லோ (Anthony de Mello) போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் இந்த தியானமுறைகளை கிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்து பிரபலப்படுத்தினார்கள். வியட்நாம் நாட்டுப் புத்தபிக்கு திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) வியட்நாமியப் போரால் பாதிக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்த சில தியான முறைகள் அமைதியிழந்த மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருவதில் வல்லமை உடையவையாக இருந்தன. ஓஷோ, மகரிஷி மகேஷ் யோகி, தீபக் சோப்ரா போன்றோர் பல தியான முறைகளை எளிமைப்படுத்தியும், பிரபலப்படுத்தியும் உலகெங்கும் பலதரப்பு மக்களைச் சென்றடையும் படி செய்துள்ளனர். இப்படி காலத்திற்கேற்ப, நம்பிக்கைகளுக்கேற்ப, தன்மைகளுக்கு ஏற்ப பல தியான முறைகள் பிரபலமாக உள்ளன.

ஆனால் எல்லா தியான முறைகளும் எல்லாருடைய தன்மைகளுக்கும் ஏற்ப இருப்பதில்லை. சிலருக்கு மிக நன்றாக தேர்ச்சி பெற முடிந்த தியான முறைகள் சிலருக்கு சிறிதும் ஒத்து வராததாக இருக்கும். ஒவ்வொரு தியான முறையையும் பிரசாரம் செய்பவர்கள் தங்களுடைய தியான முறை தான் மிகச் சிறந்தது என்று கூறுவார்கள். ஆனால் தியான முறைகளில் ஒன்று சிறந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது அறிவுபூர்வமான கருத்தல்ல.

எல்லா தியான முறைகளும் நம்மை அமைதிப்படுத்துவதாகவும், நம்மை அறிவதற்காகவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு தியான முறையே சகலருக்கும் மிகச் சிறந்ததாக இருக்குமானால் இன்னொன்றிற்கு அவசியமே இல்லை அல்லவா? அப்படிப் பல தியான முறைகள் இருப்பதே பல வகை மனிதர்களுக்கு ஏற்ப உதவுவதற்குத் தான். உங்கள் தன்மைக்கு ஏற்ப இருக்கும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டு விடுங்கள். இந்த முறை தான் சரி, மற்ற முறைகள் சரியல்ல என்று கணிக்காதீர்கள். போக வேண்டிய இடத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்த்தால் எல்லா பாதைகளும் சிறந்தவையே.

பொதுவாக தியானங்கள் மதசார்பற்றவை. சில தியானங்களில் மந்திரங்கள், பிரார்த்தனைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அந்த மந்திரங்களும், பிரார்த்தனைகளும் மத நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை மதங்கள் சம்பந்தப்பட்டவையாகின்றன. இல்லா விட்டால் அடிப்படையில் தியானங்கள் மத சார்பற்றவையே.

தியானங்களின் வகைகள் பலவாக இருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் எல்லா தியானங்களுக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

முதலாவதாக இடம். ஆரம்பத்தில் தியானம் ஒரே இடத்தில் செய்வது நல்லது. அந்த இடத்தை நீங்கள் தூங்குவதற்கோ, அரட்டை அடிப்பதற்கோ, மற்ற வேலைகளைச் செய்வதற்கோ உபயோகப்படுத்தக் கூடாது. அந்த இடத்தை மிகத் தூய்மையாகவும், புனிதமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம். அந்த இடத்தில் வேறு வேலைகளைச் செய்தோமானால் தியான அலைகளுக்கு முரண்பாடான அலைகள் உருவாகி தியான அலைகளைப் போக்கடித்து விட வாய்ப்பு உள்ளது.

அந்தக் காலத்தில் பூஜையறை என்று ஒரு தனியறையை உருவாக்கி இருந்த காரணமும் அதற்குத் தான். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறானே பின் ஏன் தனியறை என்று சிலர் நினைக்கக் கூடும். காரணம் அந்த அறை இறைவனுக்காக இல்லை, நமக்காகத் தான். இறை எண்ணங்கள் அல்லாத, அதற்கு நேர்மாறான எண்ணங்களும் நமக்குள்ளே நிறையவே இருப்பதால் இறை எண்ணங்களையே பிரதானப்படுத்தும் ஓரிடமாவது நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர் எண்ணினார்கள். கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை உருவாக்கப்பட்ட காரணமும் அது தான். ஆனால் இன்று அவற்றை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியே!

யோகிகள், மகான்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்றவர்கள் ஒரு பேரமைதியை உணரக்கூடும். காரணம் அந்த இடங்களில் அவர்களது எண்ண அலைகள் நிறைந்திருப்பது தான். உதாரணத்திற்கு திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் ரமண மகரிஷி தினமும் தியானம் செய்தபடி மக்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்த இடத்தைச் சொல்லலாம். இன்றும் அந்த அறையில் சென்று தியானம் செய்பவர்கள் அங்குள்ள சக்தி வாய்ந்த தியான அலைகளை உணரலாம்.

தனியறை என்று எங்கள் வீட்டில் கிடையாது என்று சொல்பவர்கள் ஒரு அறையின் மூலையைக் கூடத் தாங்கள் தியானம் செய்யும் இடமாகப் பயன்படுத்தலாம். அந்த இடத்தை புனிதமாக வைத்துக் கொண்டால் போதுமானது. பூஜையறை ஆனாலும் சரி, வேறு ஒரு அறையானாலும் சரி, அறையின் மூலையானாலும் சரி கோபம், வெறுப்பு, தீய எண்ண அலைகள் எதையும் அங்கு ஏற்படுத்தி அந்த இடத்தின் புனிதத்தன்மை, தியானத்தன்மை குறைந்து விடாமல் கவனமாக இருத்தல் முக்கியம்.

இரண்டாவதாக காலம். தியானத்திற்கு ஏற்ற காலங்களாக சந்தியா காலங்களை அக்காலத்தில் குறித்திருந்தார்கள். இரவும், பகலும் சந்திக்கும் அதிகாலை நேரமும், பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரமும் தியானத்திற்கு உகந்தது என்று நினைத்தார்கள். ஆனால் இன்று நாளை ஆரம்பிக்கிற அதிகாலை நேரமும், நாளை முடிக்கிற இரவு நேரமும் சிறந்தது என்ற கருத்து பலப்பட்டு வருகிறது. ஒரு நாளை தியானத்தில் ஆரம்பித்து, தியானத்தில் முடிப்பது நல்லது என்பது அப்படி கருதுபவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால் இதில் திட்டவட்டமான விதிகள் இல்லை. குறைந்த பட்சம் 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாவது தியானம் நீடித்தல் அவசியம். தினமும் இந்த 20 முதல் 30 நிமிடங்களை காலையும், மாலை அல்லது இரவும் செய்வது நல்லது. அதை ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் செய்வது சிறந்தது. மனிதன் பழக்கங்களால் ஆளப்படுபவன் என்பதால் அதை குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் தொடர்ந்து செய்வது பழக்கமாகவே மாறி விடும். ஒரே ஒரு பொழுது தான் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் அந்த ஒரு பொழுதிலாவது குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்ய வேண்டும்.


மூன்றாவதாக குறுக்கீடுகள். தியான நேரங்களில் குறுக்கீடுகளை குறையுங்கள். அந்த நேரங்களில் செல்போனை ஆஃப் செய்து வையுங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் அந்த நேரத்தில் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் இருக்கச் சொல்லுங்கள். முடிந்த வரை மற்ற கவன ஈர்ப்பு சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். மனமே வேண்டிய அளவு குறுக்கீடுகள் செய்யும் என்பதால் அதற்கு கூட்டணிக்கு மற்றவற்றையும் அழைத்துக் கொள்ளாதீர்கள்.

இனி தியானமுறைகளுக்குச் செல்வோமா?

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:29:52 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 32


யோகாவின் எட்டு நிலைகள்
(http://4.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S9MH1OuyZ5I/AAAAAAAAARs/Rm04Aydcb00/s320/Patanjali02.jpg)தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்த கலையாக இருந்தது. யோகிகளும், சித்தர்களும் தியானத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்தியும், மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும் மலைக்க வைக்கும் சக்திகளை எல்லாம் பெற்றிருந்தார்கள். இந்திய வரலாற்றை ஆராய்ந்த பல வெளிநாட்டு வரலாற்றாசிரியர்களும் யோகிகளின் இந்த யோக சக்திகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்திய யோகா பற்றி பல முனிவர்களும், யோகிகளும் பல வழிகளில் விவரித்திருந்தனர் என்றாலும் பதஞ்சலி மகரிஷி அவற்றை எல்லாம் சேர்த்து, தொகுத்து, சுருக்கி “யோக சூத்திரங்கள்” எழுதினார். அந்த யோக சூத்திரங்களைப் படித்துப் பார்த்தவர்களுக்கு ஒரு பிரமிப்பு வராமல் இருக்காது. அது என்னவென்றால் ஒரு தேவையில்லாத அலங்காரச் சொல்லைக் கூட அதில் யாரும் காண முடியாது.

முதல் சூத்திரமே ‘இப்போது யோகம் விளக்கப்படுகிறது’ என்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார். “மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்”
ஒரு குளத்தில் அலைகள் இல்லாத போது, அது நிச்சலனமாக இருக்கும் போது அதன் அடியில் உள்ளவை எல்லாம் மிகத் துல்லியமாகத் தெரியும். அதே போல மனமும் பல எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்படாமல், அது பல வித எண்ணங்களால் ஆட்கொள்ளப்படாமல் அமைதியாக இருக்கும் போது நம் ஆழ்மனதை நம்மால் முழுவதுமாக அறிய முடிகிறது. ஆழ்மனதை அறிகிற போது அதன் அற்புத சக்திகள் மிக எளிதில் நமக்குக் கை கூடுகின்றன. இதையே பதஞ்சலி மகரிஷி யோகமாகச் சொல்கிறார்.

இப்படி யோக சூத்திரங்களை மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகளால் சுருக்கமாக விளக்கிக் கொண்டே போகிறார் பதஞ்சலி. முழுவதுமாக யோக சூத்திரங்களைப் படிக்க விரும்புபவர்கள் விவேகானந்தரின் ராஜ யோகம் நூலைப் படிக்கலாம். அதில் அவர் பதஞ்சலியின் சூத்திரங்களையும், அதற்கான விளக்கங்களையும் மிக அழகாகக் கொடுத்துள்ளார்.

பதஞ்சலி யோகத்தின் எட்டு அங்கங்களைக் குறிப்பிடுகிறார். அதில் ஏழாவது அங்கம் தான் தியானம். பெரும்பாலான தியான வகைகள் யோகாவின் சில அம்சங்களையாவது பின்பற்றி வலியுறுத்துகின்றன என்பதால் பதஞ்சலியின் யோகாவின் எட்டு நிலைகளை மிகச்சுருக்கமாக ஒரு சாமானியனுடைய பார்வையில் தெரிந்து கொள்வோம்.

1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகியவற்றை இதில் பதஞ்சலி கூறுகிறார்.
2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றை பதஞ்சலி இதில் குறிப்பிடுகிறார்.
3. ஆசனா - யோகாசனங்கள்
4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.
5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வழியோ போகாமல் கட்டுப்படுத்துதல்
6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்
7. தியானா- தியானம்
8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்.

இந்த ஒவ்வொரு படியைப் பற்றியும் இங்கு கூறியிருப்பது துல்லியமான விளக்கமாகாது. இங்கு பதஞ்சலியின் யோக சூத்திரங்களை விரிவாக அறிந்து தேர்ச்சி அடைவது நம் குறிக்கோள் அல்ல என்பதால் பொதுவான விளக்கம் எளிய சொற்களில் தரப்பட்டிருக்கிறது. (அவற்றை மிகச்சரியாக, விரிவாக அறிய விரும்புபவர்கள் பதஞ்சலியின் யோகசூத்திரங்களை நல்ல நூல்கள் மூலம் படித்துக் கொள்ளலாம்)

இங்கு நம்முடைய ஆழ்மன சக்திகளை அடைய எட்டு படிகளை பதஞ்சலி காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆரம்பப் படிகளாகவே இவற்றை சொல்வது ஏனென்றால் நற்பண்புகள் இல்லாதவன் எதைக் கற்றாலும் அதனால் அவனுக்கும், அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் தீமையே விளையும் என்ற ஞானம் அன்றைய யோகிகளுக்கு இருந்தது. இன்றைய காலக் கட்டத்தில் நற்குணங்கள் இல்லாத அறிவு எத்தனை அழிவுகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அடுத்ததாக மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். உடல்நலம் சரியாக இருக்கும் வரை மட்டுமே மற்ற உயர்ந்த விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்துதல் சாத்தியம் அல்லவா?

நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது என்பதை முன்பே பார்த்தோம்.

ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.

அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது.
குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.

சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசி படியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா.
இப்படி ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து தியான முறைகளும் அமைந்துள்ளன.

இனி அந்த தியான முறைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:31:41 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-33


சில எளிய தியானப் பயிற்சிகள்

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S9MIjoV3G8I/AAAAAAAAAR0/wJWXe8DPvcc/s320/m33.jpg)
தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.

ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.

முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.

 8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.

இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம்.

இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

அடுத்த வாரம் வரை இந்த தியானங்களைச் செய்து பாருங்கள்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:33:27 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-34


மந்திர தியானம்

அடுத்ததாக இன்னொரு எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம். மந்திரம் என்றால் அது இந்து மத தியானம் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றலாம். ஆனால் இது சர்வ மதத்தினரும், மதங்களைச் சாராதவர்களும், நாத்திகர்களும் கூட பின்பற்றக் கூடிய வகையில் அமைந்த தியானம் என்பதே உண்மை.

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S-bEaThhpzI/AAAAAAAAASU/4VQiFKXUzDg/s1600/m+34.jpg)மந்திரம் என்பது சக்தி வாய்ந்த சொல் அல்லது சொற்றொடர். இந்த மந்திரங்களின் சக்தியை இந்தியர்களும் திபெத்தியர்களும் பண்டைய காலத்திலேயே நன்றாக அறிந்திருந்தார்கள். ஓம் என்கிற ஓங்காரத்தில் இருந்தே அனைத்தும் தோன்றின என்கின்றது இந்து மதம். ஓம் மந்திரமும் காயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள்.

“ஆதியில் வசனம் இருந்தது. அந்த வசனமே தெய்வத்துடையதாக இருந்தது. அந்த வசனமே தெய்வமாக இருந்தது” என்று பைபிள் கூறுகிறது. (In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. New Testament, John1:1-2)
அரபுக்கதைகளிலும் சில மந்திரச் சொற்கள் அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறுவதை நாம் படித்திருக்கிறோம். ஆக உலகமெங்கும் மந்திரங்களை சக்தி வாய்ந்தவை என பலரும் பல காலமாக அங்கீகரித்திருப்பதை நாம் உணரலாம்.

இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்திலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு மந்திரம் தியானத்திற்காகத் தரப்படுகிறது. தியானத்தின் போது அந்த மந்திரச்சொல்லில் முழுக்கவனத்தையும் வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மந்திர தியானம் மதங்களைக் கடந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு சுவையான உதாரணத்தைச் சொல்லலாம். ஜான் மெய்ன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க ஐரிஷ் பாதிரியார் இரண்டாம் உலகப் போரின் போது அரசுப்பணியில் மலாயாவிற்கு அனுப்பப்பட்டார். அப்போது கோலாலம்பூரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்த ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியை சந்தித்த போது ஆன்மிக விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி தியானங்கள் பற்றி விவரித்தது ஜான் மெய்னை மிகவும் கவரவே தங்கள் மதத்திற்கேற்ப தியானம் செய்ய முடியுமா என்று அவர் ஸ்வாமியைக் கேட்டார்.

தியானம் மதங்களைக் கடந்தது என்று சொன்ன ஸ்வாமி ஜான் மெய்னுக்கு ஒரு கிறிஸ்துவ புனித வார்த்தையை உபதேசம் செய்து அந்த மந்திரத்தின் மீது தினமும் இருமுறை தியானம் செய்யச் சொன்னார். அந்த மந்திர தியான முறையையும் ஸ்வாமி அவருக்குச் சொல்லித்தந்தார். அவர் சொல்லித் தந்தபடியே தியானத்தை செய்த ஜான் மெயின் வாரா வாரம் ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியின் ஆசிரமத்திகே வந்து அந்தத் தியானத்தை ஸ்வாமியுடன் சேர்ந்து செய்தார். அதனால் சிறப்பான ஆன்மிக அனுபவத்தைப் பெற்றதால் ஜான் மெயினின் ஆன்மிக வாழ்க்கையின் அங்கமாக அந்த தியானம் மாறியது.
இங்கிலாந்து திரும்பிய பின்னர் அந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் அவரது தலைமை பாதிரியாரிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார். இந்த தியான முறை கிறிஸ்துவ சம்பிரதாயத்திற்கு எதிர்மாறானது என்று தலைமை பாதிரியார் தடுத்தார். சிறிது காலம் அந்த தியான முறையை நிறுத்திக் கொண்ட ஜான் மெய்ன் ஏதோ இழந்தது போல் உணர்ந்தார். பின் கிறிஸ்துவ நூல்களை ஆழமாகப் படித்த போது மிகப் பழைய காலத்தில் இது போன்ற தியான முறை கிறிஸ்துவர்களிடமும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார். பலரிடமிருந்து வந்த கடும் விமரிசனங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தான் கடைப்பிடித்து வந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் தனது தியானத்திற்கு ’கிறிஸ்துவ தியானம்’ என்று பெயரிட்டு பரப்பினார். 1982ல் அவர் மறைந்தாலும் கிறிஸ்துவ தியானம் பல நாடுகளில் பிரபலமாகி பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி மந்திர தியானம் உலகில் பல வடிவங்களில், பல மதத்தினரால், பல பெயர்களில் இக்காலத்தில் பின்பற்றப்படுகிறது.

மந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மந்திர தியானத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் மந்திரம் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக அந்த மந்திரம் சுருக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக அது ஓரிரு வார்த்தைகளாக மட்டும் இருப்பது நல்லது. (காயத்ரி மந்திரம் மிக உயர்ந்த மந்திரமானாலும் அது ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் நீண்டு இருப்பதால் இது போன்ற மந்திர தியானங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).

நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மந்திரம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு மிக உயர்ந்ததாகவோ, சக்தி வாய்ந்ததாகத் தோன்றுவதாகவோ இருக்க வேண்டும். அப்போது தான் மந்திர தியானத்தில் நீங்கள் பெறும் பலன் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (அந்த மந்திரத்தின் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்தில் பங்கு பெறும் அமெரிக்க, ஐரோப்பிய நபர்களுக்கு மந்திரமாக தரப்படுபவை பெரும்பாலும் வேதங்களில் இருக்கும் சம்ஸ்கிருத சொற்கள் தான். அது புனித சொல், சக்தி வாய்ந்த மந்திரம் என்பது மட்டும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது)

மந்திர தியானத்திற்குப் பொதுவாக பலரும் பயன்படுத்தும் சில மந்திரங்களையும், மந்திர தியானம் செய்யும் முறையையும் அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:35:37 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 35


மந்திர தியானம் செய்முறை

மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
(http://4.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S_PjbFG6uaI/AAAAAAAAASk/ngHS2eXnksk/s320/m35.jpg)கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் “மாராநாதா” என்கிற மந்திரத்தை உபயோகித்தார். இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப் படுகிறது.

புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

சிலர் தத்துவார்த்தமான ஒரு சொல்லை மந்திரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சிலர் “சோ-ஹம்” என்ற மந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்கு நானே அது என்பது பொருள். ஆனால் சில தமிழர்கள் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தும் போது ”சோ ஹம்” என்பது சோகம் என்ற சொல் போல இருப்பதாக நினைக்கத் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். அப்படித் தோன்றுபவர்கள் இந்த மந்திரத்தை தவிர்க்கலாம்.

மதங்களை சாராதவர்கள், தத்துவ ஞானங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதவர்கள் தங்களைக் கவர்ந்த ஒரு மேன்மையான சொல்லை மந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மந்திர தியானத்தில் எந்த சொல்லை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றாலும் ஒரு முறை தேர்ந்தெடுத்த பின் அதையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தியானம் நல்ல பலனைத் தரும்.

மந்திரச் சொல் தகுந்த குரு மூலம் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று நம் முன்னோர் நினைத்ததற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் குருவிடமிருந்து பெற்ற எதையும் புனிதமாகக் கருதும் வழக்கம் இருந்தது தான். இக்காலத்தில் அப்படிப்பட்ட குருவைக் காண்பது கஷ்டம் என்பதால் முறையாக அந்த மந்திரச் சொல்லை தியானத்திற்கு ஏற்றுக் கொள்ள இன்னொரு வழியைக் கடைபிடிக்கலாம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கோ, பூஜையறைக்கோ சென்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் இருந்து அந்த மந்திரச் சொல்லைப் பெறுவதாக கண்களை மூடிக்கொண்டு மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். இல்லா விட்டால் நீங்கள் தொழும் மகானிடமிருந்து அதைப் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் சமுத்திரம், மலை, நதி போன்ற இயற்கை சூழ்நிலைக்குச் சென்றோ, இல்லை அமைதியான வேறிடத்திற்குச் சென்றோ பிரபஞ்சத்திடம் இருந்தே அந்தச் சொல்லை உபதேசம் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மிகுந்த நன்றியுடன் அந்தச் சொல்லைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணத்திலிருந்து உங்களுக்கு மிகப் புனிதமான சக்தி வாய்ந்த சொல்.

இனி மந்திர தியானம் செய்யும் முறையைப் பார்க்கலாம். சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு தியானத்தை ஆரம்பித்தால் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு சீராகவும், ஆழமாகவும் தானாக மாறும் வரை உங்கள் கவனம் அதன் மீது இருக்கட்டும்.

3) மூச்சு சீரான பிறகு அந்த மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

4) அந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமாக உச்சரியுங்கள். உச்சரிக்கும் விதம் மிக வேகமாகவோ, மிக நிதானமாகவோ இல்லாமல் சாதாரண நிதானத்துடன் இருக்கட்டும்.

5) உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும். சில முறைக்குப் பின் மனம் கண்டிப்பாக அலைய ஆரம்பிக்கும். எத்தனை முறை அலைந்தாலும் பொறுமையாக அந்த அதை திரும்ப மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள். உட்காரும் நிலை சில உணர்வுகளை உடலில் ஏற்படுத்தக் கூடும். அதில் கவனம் செல்லும் போதும் மீண்டும் மனதை மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள்.

6) தியானத்தின் போது மந்திரம் உச்சரிப்பது நின்று போகலாம். நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். அப்போதெல்லாம். மனதில் மந்திரம் அல்லாமல் வேறெதோ எண்ணம் நுழைந்து விட்டது என்று பொருள். அப்படி எல்லாம் ஆகும் போது சலிப்படையக் கூடாது. இந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டாமல் யாரும் தியானங்களில் உயர்நிலைகள் அடைய முடிந்ததில்லை.

7) திரும்பத் திரும்ப ஆரம்பித்த அதே ஆர்வத்துடன் அதே நிதானமான முறையில் மந்திரத்தை மீண்டும் உச்சரிக்க ஆரம்பியுங்கள். ஒரு சில நாட்களில் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றங்கள் கொண்டு வரும். அப்போதும் கூட அந்த மாற்றங்களைப் பற்றி அந்த தியான நேரத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடாதீர்கள். அந்த மந்திரச் சொல்லில் மீண்டும் மீண்டும் லயிக்க விடுங்கள்.

 8) தியானம் நல்ல முறையில் கைகூடிய பின் ஒரு நாளில் ஒரு கட்டத்தில் நீங்கள் மந்திரத்தை மட்டுமே உணர்ந்தவராய் இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே அந்த மந்திரத்தை உச்சரிப்பது போல உணர்வீர்கள். அந்த மந்திரமே உங்கள் பிரபஞ்சமாகி விடும். ஒரு பேரமைதியினை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். காலம் அந்த சமயத்தில் ஸ்தம்பித்துப் போவதாய் உணர்வீர்கள்.

9) ஆனால் அந்த அனுபவங்கள் ஆரம்பங்களில் சில வினாடிகளே நீடிக்கும். பின் அது போன்ற அனுபவங்கள் சீக்கிரம் கிடைக்காமல் போகலாம். அதையே எதிர்பார்த்து தியானம் செய்வது தியானமாகாது. எதிர்பார்ப்பு மனதில் இருக்கிற நேரம் மனம் முழுமையாக தியானத்தில் லயிக்காது.

10) இது போன்ற அனுபவங்கள் வரும். போகும். ஆனால் இதிலெல்லாம் அலைக்கழியாமல் தியானத்தை மீண்டும் தொடருங்கள். மனம் அலைகின்ற நேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் எப்படி அதை மீண்டும் மந்திரத்திற்குக் கொண்டு வருவீர்களோ அப்படியே இந்த எதிர்பார்ப்புகள் வரும் போதும் அதை ஒரு விலகலாக எண்ணி மீண்டும் மனதை மந்திரத்திற்குக் கொண்டு வாருங்க்ள்.

தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.

மேலும் பயணிப்போம்.
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:38:16 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-36

விபாசனா தியானம்.

புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. புத்த மத நூல்களில் ‘பாலி’ மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.
(http://1.bp.blogspot.com/_pO1m7hvHPQk/S_PkjeV-OCI/AAAAAAAAASs/pWdiYGlURYg/s320/m+36.jpg)
எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.

ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் “தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது” என்று சொல்லி விட்டார்.

திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது “இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின். “சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம். ... ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்”

(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.

விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.

1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.

தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.

6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.

மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.


இனி விபாசனா தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:39:39 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 37


விபாசனா தியான முறை

1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.

5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?

 8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.

விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன என்றாலும் நம் தற்போதைய குறிக்கோளுக்குத் தேவையான அளவு அறிந்து விட்டோம் என்பதால் இனி மற்ற தியானங்களுக்குச் செல்வோம்.
மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:45:22 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-38

உடலின் ஏழு சக்ராக்கள்


நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை “சக்ரா” என்றழைத்தார்கள். அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள். ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள். ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.

இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.

1) மூலாதார சக்ரா –

(http://1.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCSfnWi9vlI/AAAAAAAAAUU/mp8EzOpJoMo/s320/Chakra01.gif)இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.


2) ஸ்வாதிஷ்டானா சக்ரா

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCSf4eFX8HI/AAAAAAAAAUc/pgNIlgpDHFg/s320/Chakra02.gif)
இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.


3) மணிபுரா சக்ரா

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCSgTqxWq3I/AAAAAAAAAUs/3oSTRn0dqGY/s320/Chakra03.gif)
இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.


4) அனாஹதா சக்ரா

(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCSggwUwBXI/AAAAAAAAAU0/j1o9TxULDLM/s320/Chakra04.gif)
இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.


5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா

(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCSgxMZnJzI/AAAAAAAAAU8/TR_KrFjbUZc/s320/Chakra05.gif)
இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.


6) ஆஜனா சக்ரா

(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCShARpmKBI/AAAAAAAAAVE/Hs2ocrJT_UI/s320/Chakra06.gif)
இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.


7) சஹஸ்ரரா சக்ரா

(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCShWYK7usI/AAAAAAAAAVM/K33umAp9gIo/s320/Chakra07.gif)
இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.


இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள். சக்ரா தியான முறையை அடுத்து பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:48:49 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-39



சக்ரா தியானம் செய் முறை

(குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)

(http://4.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCSi9Mm5zFI/AAAAAAAAAVc/JonV6T22a5I/s320/M39.gif)சக்ராக்கள் அமைந்துள்ள இடங்கள், அவைகளுக்குத் தரப்பட்டிருந்த சின்னங்கள், மந்திர பீஜ ஒலிகள் ஆகியவற்றை நாம் முன்பு பார்த்தோம். இனி சக்ரா தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம். ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.


1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள். மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.

(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TCSiYDTHfBI/AAAAAAAAAVU/d_pGThXMkSI/s320/M+39.jpg)(குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)

இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.

இனி அடுத்த தியானம் பற்றி பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:50:30 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 40



திபெத்திய தியானம்

இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.
(http://1.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TDhBphw0J9I/AAAAAAAAAWk/pm2dk3Iiy3U/s320/M+40.jpg)புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.

2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.

3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.

4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.

5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.

6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.

7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.

ஒரு ஜென் ஞானி சொல்வார். “நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன்”. மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம். உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?

மேலும் பயணிப்போம்
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:52:13 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-41



ஹாரா தியானம்

ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள். அய்கிடோ (Aikodo) என்ற ஒரு வகை ஜப்பானிய மல்யுத்ததில் இந்த ஹாரா பகுதி மிக முக்கியத்துவம் வகிக்கிறது.
(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TDhCpkZR3DI/AAAAAAAAAWs/kO64SWITaos/s320/M41.jpg)அய்கிடோவை உலகத்திற்கு அளித்த Morihei Ueshiba ஹாராவில் தன்னை ஐக்கியமாக்கி இருக்கும் கலையில் இணையற்ற நிபுணராக விளங்கினார். அப்படி ஒரு முறை அவர் இருக்கையில் சக்தி வாய்ந்த ஐந்தாறு மனிதர்கள் என்ன முயன்றும் அவரைத் தூக்கவோ, அவரை நகர்த்தவோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் முடியாமல் தோற்றுப் போனார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு சேர ஆறு பயிற்சி வீரர்கள் அவரைத் தாக்க வந்த போது எந்த வித அலட்டலும் இல்லாமல் அந்த ஆறு பேரையும் ஒவ்வொருவராக அவர் தூக்கி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகன் போடும் சண்டைக் காட்சி போல தோன்றினாலும் பல பேர் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்ட சம்பவங்கள்.
பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.


2) படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.


3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக்கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.


4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.

5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.

ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.

இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. நாம் முன்பு கண்டபடி Aikodo வில் மட்டுமல்லாமல் உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது. ஹாராவில் மனதைக் குவித்து ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.

மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே!

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:53:53 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-42



ஜென் தியானம்

தியான முறைகளைக் குறித்து ஓஷோ ரஜனீஷ் அளவுக்கு யாராவது பேசியும், எழுதியும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் வட இந்தியாவில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மிக ஆழமாகப் படித்து பல வருடங்கள் அவற்றைக் கற்பித்தும் வந்தவர்.
(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TDhDTgiF0rI/AAAAAAAAAW0/ynl5ao-Pfaw/s320/M+42.jpg)அவருடைய விஞ்ஞான பைரவா தந்த்ரா புத்தகத்தில் 112 வகை தியானங்களை விவரித்திருக்கிறார். பண்டைய காலத்தில் பின்பற்றப்படுத்தப் பட்ட பல தியானங்களை புதிய மனவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி தன்னுடைய தியான மையங்களில் அறிமுகப்படுத்தியவர் அவர். அந்த தியான முறைகளுக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.

”தியான முறைகளை முறைப்படி கற்று அதைச் சில நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் தன்மைக்கு ஏற்ற தியானங்களை மட்டும் முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்களிடம் எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தா விட்டால் அது உங்களுக்கேற்றதல்ல. அதை விட்டு விட்டு அடுத்த தியானத்தை ஆரம்பியுங்கள். மாறாக சில நாட்களில் உங்களுக்குள் நல்ல மாறுதலை நீங்கள் உணர்ந்தீர்களானால், அதை மிகவும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் தொடருங்கள் அது பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும்” என்று சொல்கிறார் ஓஷோ.

ஓஷோ ஏராளமான தியானங்களை விளக்கி இருந்தாலும் ஜென் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தியானம் ஒன்று அவர் உபதேசித்த தியானங்களுள் பிரதானமானது. அந்த தியானத்திற்கு அடிப்படையான சில விஷயங்கள் என சிலவற்றை ஓஷோ சொல்கிறார்.

முதலில் ஜென் தியானம் செய்யும் இடத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அது இயற்கையழகு மிகுந்த ஆரவாரமற்ற அமைதியான இடமாக இருப்பது நல்லது என்கிறார். (பூனே போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஓஷோவின் தியான மையங்கள் இயற்கையான அழகான சூழ்நிலைகளுக்குப் பெயர் போனவை.) அப்படி இல்லா விட்டால் தினமும் வீட்டிலேயே ஒரு அறையில் தொடர்ந்து தியானம் செய்வது நல்லது என்கிறார். தொடர்ந்து தியானம் செய்யும் அந்த இடம் தியான அலைகள் நிறைந்திருக்குமாதலால் நாட்கள் செல்லச் செல்ல தியான நிலை வேகமாகக் கைகூடும் என்கிறார் அவர்.

அடுத்ததாக உட்காரும் விதம் சௌகரியமாக இருப்பதும் மிக முக்கியம். உடல் அசௌகரியப்பட்டால் மனம் அதையே எண்ணியபடி இருக்கும், தியானம் கைகூடாது. உடல் பற்றிய நினைவே வராத அளவு நல்லது என்கிறார்.

ரிலாக்சாக இருப்பது அடுத்த முக்கியமான விஷயம். மனதோடு போராடுவது, மனதை அடக்க முயல்வது போன்றவை எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கைவிடுவது நலம் என்கிறார்.

ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

 8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.


மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும். தேவையான அளவு தியான முறைகளைச் சொல்லி விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

மேலும் பயணிப்போம்......
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:55:07 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-43



தியானம்-சில நடைமுறை சிக்கல்களும் காரணங்களும்

பல வகை தியானங்களை விரிவாகப் பார்த்தோம். தியானத்தைப் பற்றி படித்தோ, ஒரு குருவிடம் பயிற்சி பெற்றோ பயிற்சி முறையைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர தியான அனுபவத்தை உணர அது என்றும் போதுமானதாகாது. பயிற்சி முறைகளை அறிந்து கொள்வது வழிகாட்டிப் பலகையையோ, வரைபடத்தையோ பார்ப்பது போல. அது வழிகாட்டுமே தவிர வழிநெடுகக் கூடத் துணைக்கு வராது. அந்த இலக்கிற்குச் செல்ல வேண்டுமானால் அது காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான விருப்பத்தையும், மன உறுதியையும் மற்றவர் தர முடியாது. இதை மனதில் இருத்திக் கொள்வது மிக முக்கியம்.

எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம் அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்).

உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

முதலாவதாக, ஒரு மகத்தான அனுபவத்திற்கு தயாராகி நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். பலரும் அதைப் பற்றிப் படித்தும் கேட்டும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு. வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று சரித்திரம் தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.

இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தேனிலவு முடிந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்கும் போது சில கசப்புகளையும், சிக்கல்களையும் உணர ஆரம்பிக்கிற தம்பதியர் போல தினசரி வாழ்விற்குத் திரும்பும் போது தியானப் பயிற்சியாளர்களும் தியானத்திற்கு அனுகூலம் இல்லாத சூழ்நிலையை உணர ஆரம்பிக்கிறார்கள். எனவே தான் சிலர் ”நான் அங்கு சென்று பத்து நாட்கள் தியானம் பயின்ற போது புதிய மனிதனாக உணர்ந்தேன், புத்துணர்ச்சியுடன் திரும்பினேன், ஆனால் நாளாக நாளாக பழையபடியே ஆகி விட்டேன்” என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.

மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தியானம் காலக் கணக்கிலேயே முழுவதும் அளவிடப்படுவதும், மதிப்பிடப்படுவதும். நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது. தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.

ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும்.

ஆனால் இதெல்லாம் நிகழ்வது ஒரு நேர்கோடு போன்ற சீரான, தொடர்ச்சியான முன்னேற்றத்தில் அல்ல என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள். அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.

ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.

இனி அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:57:07 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-44




பகிராத எண்ணத்தை உணர முடியுமா?
(http://1.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TFitQkHUbNI/AAAAAAAAAX0/ukGjuqzMZRk/s320/m+44.jpg)தியானத்தைப் பற்றி இது வரை சற்று விரிவாகவே விளக்கியதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல நம்மை நாம் முழுமையாக அறிய தியானம் மிகவும் உதவுகிறது என்பது தான். எத்தனையோ சக்திகள் இருந்தும் வாழ்நாள் முழுவதும் அதை அறியாமல், அறியாத காரணத்தால் அதைப் பயன்படுத்தாமல் மனிதர்கள் பலவீனர்களாய் வாழ்ந்து மடியும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.

நாம் உண்மையை அறிய ஐம்புலன்களையே நம்புகிறோம். ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே அவற்றால் அறிய முடிந்தவற்றைக் காட்டிலும் அதிகமாக, நுட்பமாக, துல்லியமாக சிலவற்றை அறிய முடியும் என்று சொன்னால் நம்புவதில் நாம் பெரும் சிரமத்தை உணர்கிறோம். காரணம் அதை எளிதில் விளக்கவோ, விளங்கிக் கொள்வதற்கோ முடிவதில்லை.

ஆனால் தாவரங்கள், விலங்குகள் கூட அசாத்தியமான, எப்படி முடிகிறது என்று விளக்க முடியாத பல அபூர்வசக்திகளைப் பெற்றுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிலவற்றை முன்பே சிறிது சொல்லி இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1960களில் க்ளீவ் பாக்ஸ்டர் Cleve Baxter என்ற விஞ்ஞானி தாவரங்களை வைத்து சில பரிசோதனைகள் செய்தார். தாவரங்களில் polygraph electrodesஐ
இணைத்து செய்த பரிசோதனைகளில் தாவரங்கள் மனித எண்ணங்களை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் தயாரானபோதே அந்த செடி இலைகளில் அதற்கேற்ற ஒரு மாற்றம் உருவானதைக் கருவிகள் அடையாளம் காண்பித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.

அவர் அதற்கு தீங்கு விளவிப்பது போல மனதில் கற்பனை செய்தால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய, மனதில் அதன் இலைகளைத் தீப்பற்ற வைப்பது போல் மனதில் கற்பனை செய்தால் அதன் இலைகள் அதை உணருமா என்பதை அறிய முயற்சித்தார். ஆனால் அவர் கற்பனைக்கு வடிவம் தரும் முன்னேயே, அவருக்கு எண்ணம் எழுந்தவுடனேயே அந்தத் தாவர இலைகளில் அதற்கேற்றாற்போல் மாற்றம் பதிவானது அவருடைய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சிகளில் தாவரங்கள் தங்களை அழிக்க வருபவர்கள் அருகில் வரும் போதும், தங்களை வளர்ப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அருகில் வரும் போதும் அதற்கேற்றாற்போல் வேறு வேறு விதமாக உணர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். மனித எண்ணங்களை எப்படி தாவரங்கள் அறிகின்றன என்பதற்கு இன்னமும் சரியான விஞ்ஞான விளக்கமில்லை.

அதே போல் விலங்குகளில் நாய் மற்றும் குதிரை தங்கள் எஜமானர்களின் எண்ணங்களை உணர வல்லவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகளுக்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றன என்று சொல்கிறார்கள். நாய்களை மிகவும் நேசித்து வளர்த்துபவர்கள் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடைய நாய்கள் எந்த அளவு புரிந்து கொண்டு நடக்கின்றன என்பதைக் கதை கதையாய் சொல்வார்கள்.

அதே போல் வேட்டைக்குச் செல்பவர்களும் விலங்குகளின் சில விசேஷ நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளை வேட்டையாட அவர்கள் மறைந்து பதுங்கி இருக்கும் போது மோப்பத்தினால் கூட அவை அறிய முடியாத தூரத்தில் வரும் போதே ஏதோ ஒரு விதத்தில் அபாயத்தை உணர்கின்றன என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறார்கள். பார்க்க முடியாதபடி மறைந்திருந்தாலும், மோப்பம் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும் அவை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டு, பின் சிலிர்த்துக் கொண்டு அந்த வழியே வராமல் வேறு வழியாகப் பயணிப்பதைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சில விலங்குகள் அபாயத்தை எதிர்கொள்ளும் போது எழுப்பும் ஒலியை அந்த சமயங்களில் எழுப்பி விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற அபாயத்தை உணரும் அபூர்வ சக்திகளை காட்டு விலங்குகள் அதிகம் பெற்றிருப்பதாகவும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் காலப்போக்கில் அந்த சக்திகளை இழக்க ஆரம்பித்து விடுவதாகவும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ஒரு தாவரமோ விலங்கோ கூட மனிதனின் நோக்கத்தையும், எண்ணத்தையும் அறிவிக்காமலேயே அறிந்து கொள்கின்றன என்றால் மனிதன் இன்னொரு மனிதனின் எண்ணங்களையும், நோக்கங்களையும் சொல்லாமலேயே தெரிந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிமனிதன் இன்றைய மனிதனைக் காட்டிலும் இது போன்ற அபூர்வ சக்திகளை அதிகம் பெற்றிருந்தான் பயன்படுத்தினான் என்றே சொல்லலாம்.

சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஏ.பி.எல்கின் Dr. A.P. Elkin என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மனிதர்களான புதர்மனிதர்கள் எனப்படுபவர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அந்த புதர்மனிதர்கள் காணாமல் போன பொருட்களையும், வழிதவறிப் போன ஆடுமாடுகளையும், திருடர்களையும் அனாயாசமாகக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.

அவர் எழுதிய Aboriginal Men of High Degree என்ற புத்தகத்தில் அந்தப் புதர்மனிதர்களை ஆராய்ச்சி செய்ய ட்ரெக்கிங் சென்ற போது அவர் வருகையையும், வரும் நோக்கத்தையும் அவர்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தனர் என்று கூறுகின்றார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர்களது வேண்டப்பட்டவர்களின் மரணத்தையோ, உறவினர்கள் வீட்டில் குழந்தை பிறப்பதையோ உடனடியாக அறிந்தார்கள் என்றும் கூறுகிறார். அவரிடம் அந்த புதர்மனிதர்கள் “எண்ணங்கள் பார்க்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றைக் காற்று வெளியில் அனுப்புவதும் பெறுவதும் எளிது” என்று தெரிவித்தார்களாம்.

அவருடைய புத்தகத்தால் கவரப்பட்டு லிண்டன் ரோஸ் Lyndon Rose என்ற மனவியல் நிபுணர் அந்த புதர்மனிதர்களை வைத்து மேலும் பல பரிசோதனைகள் செய்தார். மூடிய பெட்டிகளில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத விடைகளை அவர்கள் சரியாகச் சொன்னார்கள். சரியாகச் சொல்லாத பொருட்கள் கூட பெரும்பாலும் இதுவரை அந்தப் பழங்குடியினர் கண்டிராத பொருட்களாக இருந்தன.


ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எண்களைக் கையாலேயே கூட்டி கணக்கிடும் பழக்கம் இருந்தது. சில வயதான கணக்குப் பிள்ளைகள் இப்போதும் ஒரு முறை கூட்டும் போதே சிறு பிழை கூட இல்லாமல் கூட்டி கணக்கிடுவதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகப்படுத்தப்படும் இக்காலத்தில் அந்தக் கணக்கிடும் திறனை இழந்து விட்டிருக்கிறோம். மிக எளிய இரண்டு எண்களைக் கூட்டக் கூட நமக்கு கால்குலேட்டரே தேவைப்படுகிறது. அதே போலத் தான் எந்தத் திறமையும், சக்தியும், நாம் உபயோகிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் அந்தத் திறனை முழுமையாக இழந்து விடுகிறோம். அப்படித்தான் எத்தனையோ இயல்பான ஆழ்மன சக்திகளை மனித சமுதாயம் இழந்து விட்டிருக்கிறதோ? சிந்தியுங்கள்.

புலன்கள் வழியே மட்டும் பலவற்றையும் அறியத் துவங்கிய மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு கட்டத்தில் புலன்கள் துணையில்லாமலேயே எல்லாவற்றையும் அறிகிறார்கள். அது எப்போது தெரியுமா?

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 11:58:19 AM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-45


மரணத்திற்குப் பின் என்ன?

ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியை க் குறிப்பிட்டு இருந்தோம். அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன. ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது. இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான். இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?

மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக்குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......

”....அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது......”

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:28:04 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-46


மரண விளிம்பில் 9 அனுபவங்கள்

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்-
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.
(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TGqxlJI5RnI/AAAAAAAAAZE/I4HEAqBW0ws/s320/m+46.JPG)2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் -
கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் –
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் –
பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல் –
சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் –
சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்-
ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8 ) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல் –
அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் –
அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:29:41 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-47


உடலை விட்டு வெளியேறும் ஆத்மா

மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.

நாம் அடுத்த பயிற்சிக்குச் செல்லும் முன் இதை எல்லாம் மனதில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கொள்வது நல்லது. அடுத்த பயிற்சிக்குச் செல்வோமா?

மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:31:52 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 48

உணர்வு நிலை மாற்றத்தின் அவசியம்

 
(http://4.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TIJjsI0v_jI/AAAAAAAAAZ0/Odd-GF712EQ/s320/m+48.jpg)

ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை. எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம். எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..

அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன். அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.

மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவையெல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.

மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.

இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.

எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)


தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.

முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்.

இனி உயர் உணர்வு நிலைக்குச் செல்ல ராஜ யோகிகள் சொல்லும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:33:02 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 49




உயர் உணர்வு நிலைக்கு முதல் பயிற்சி- அடையாளங்கள் நீங்களல்ல

அணுவைப் பிளந்து பார்த்த போது அறிவியல் பிரமித்துப் போனது. அணுவிற்குள் இடை விடாது இயங்கிக் கொண்டு இருந்த சக்திகளின் செயல்பாடுகள் விஞ்ஞானிகளை அசத்தின. அணுவின் சக்திகளுக்கே இப்படி என்றால் பிரபஞ்சத்தின் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஓரளவுக்காவது அறிவது மனிதனின் அதீத கற்பனைகளுக்கும் கூட எட்டாத பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.

ராஜ யோகிகள் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகவே மனிதனைக் கண்டார்கள். அந்த சக்திக்கு எதிர்மாறாக இயங்காமல், அந்த சக்திகளுக்கு ஏற்ப ஒத்த விதத்தில் தன்னை ’ட்யூன்’ செய்து கொண்டால் அவன் பெறக்கூடிய சக்திகளும் எல்லை அற்றவை என்று உணர்ந்தார்கள். அந்த சக்திகளைப் பெற அவன் பிரபஞ்ச சக்தியின் அங்கமாகத் தன்னை உணர்வது மிக முக்கியம் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். அரசனைப் போல அதிகாரங்களை அவன் அமல்படுத்தும் முன் தன்னை அரசன் என்பதை உணர்வது முக்கியம் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. இல்லா விட்டால் அது கற்பனையான கேலிக்கூத்தாகவே இருக்கும் என்று கருதினார்கள்.

தன் உடலையும், தொழிலையும், செல்வத்தையும், மற்றவர்களுடைய அபிப்பிராயங்களையும் வைத்தே தன்னை வரையறுத்துக் கொள்ளப் பழகி இருக்கும் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய, உயர் உணர்வு நிலை பெறுவது அவசியம் என்று ராஜ யோகிகள் கருதினார்கள். அந்த உயர் உணர்வு நிலைக்குச் செல்ல முறையான பயிற்சிகளை ஏற்படுத்தினார்கள். அதில் முதல் பயிற்சியைப் பார்ப்போம்.

1) அமைதியாக ஆரவாரமற்ற ஓரிடத்தில் தனிமையில் அமருங்கள்.

2) இது வரை சொன்ன தியானங்களில் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள். முறையாகச் செய்து முடித்தால் உடலும் இளைப்பாறி இருக்கும், மனமும் அமைதி அடைந்திருக்கும்.

3) முதலில் உங்களை இந்த உடலுக்குள் குடியிருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாக உணருங்கள். இந்த உலகில் நீங்கள் மற்றவர்களால் அறியப்படும் பெயர், தோற்றம், கல்வி, தொழில், சமூக நிலை போன்ற அடையாளங்களால் அல்லாமல் உங்களை நினைத்துப் பாருங்கள். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நாம் நம்மைப் பற்றிய அந்த அடையாளங்களை நீக்கி விட்டால் நினைத்துப் பார்க்க எதுவுமில்லை என்பது போலவே தோன்றும். ஆனால் சிந்தனையை ஆழப்படுத்தினால் இந்த அடையாளங்கள் தற்காலிகமாக வந்தவை, மாறிக் கொண்டே இருப்பவை என்பதை உணர்வது சிரமமல்ல. திடீர் என்று உலகில் ஒரு நாள் தோன்றி, வாழ்க்கையில் இந்த அடையாளங்களைப் பெற்று, ஏதேதோ செய்து, திடீரென்று அழிந்து போகும் ஒரு தற்காலிக உயிரல்ல நீங்கள். தோன்றுவதற்கு முன், மறைந்ததற்குப் பின் என்ற இரண்டு பெரிய கேள்விக்குறிகளுக்கு மத்தியில் உள்ள பொருள் இல்லாத குழப்பம் அல்ல நீங்கள். மாறிக் கொண்டே இருக்கும் இந்த அடையாளங்களுக்கு நடுவே மாறாத ஒரு அற்புதமே நீங்கள். இந்த சிந்தனையை மனதில் மையமாக்குங்கள்.

4) இந்த உடல் என்ற கூட்டில் வசிக்கும் பிரபஞ்ச சக்தி நீங்கள் என்ற சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்தி அதை பலப்படுத்துங்கள். இந்த கூட்டை, வெளியுறையை பிரபஞ்ச சக்தியான நீங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினையுங்கள். இந்த புதிய சிந்தனையும் உங்களுள் ஆழமாகப் பதியட்டும். உடல் என்ற கருவியை ஆரோக்கியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருக்க உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.

5) அடுத்ததாக உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்கள் உடலை நீங்கள் காண முடிவதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலைத் தெளிவாக நீங்கள் வெளியே இருந்து காண்பது போல் காணுங்கள். ஆரம்பத்தில் இது சுலபமாக இருக்காது. அதனால் சிலர் கண்ணாடி முன் அமர்ந்து கண்ணாடியில் தெரியும் தங்கள் பிம்பத்தை உண்மையான உடல் என்றும் தாங்கள் வெளியே இருந்து உடலைக் காண்பதாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சியைப் பயன்படுத்தி அப்படிக் காண்பதில் தவறில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கண்ணாடியின் உபயோகத்தைத் தவிர்த்தே இந்த பயிற்சியைச் செய்து தேற வேண்டும்.

6) இனி உங்கள் கவனத்தை உடலில் இருந்து முழுமையாக எடுத்து விடுங்கள். உடலில் இருந்து வெளியேறிய நீங்கள் உங்கள் உடலைப் பார்த்து பின் உங்கள் கவனத்தினை உண்மையான உங்கள் மீது திருப்பிக் கொள்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த உண்மையான உங்கள் தன்மையினை நீங்கள் அமைதியாக, நிதானமாக, சிறிதும் சந்தேகம் இல்லாமல் கீழ்க்கண்டவாறு உணருங்கள்.

7) ”நான் பிரபஞ்ச சக்தியின் மையம். சூரியனை பூமி சுற்றுவது போல என் உலகம் என்னைச் சுற்றியே இயங்குகிறது. என்னுடைய சக்தி எல்லை இல்லாதது. உடல் எனக்கு கூடு தான். அது எனது தற்காலிக வசிப்பிடம் தான். நான் உடலில் அடங்கிக் கிடக்கும் அடிமையல்ல. அந்த உடல் இல்லாமலும் என்னால் இயங்க முடியும். நான் நிரந்தரமானவன்/ நிரந்தரமானவள். எனக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் எல்லை இல்லாத ஆழமான சக்தியை நான் முழுமையாக உணர்கிறேன். இந்த ஞானத்தால் என்னுள்ளே அமைதியைப் பரிபூரணமாக நான் உணர்கிறேன்”.

 8) இந்த எண்ணத்தை உங்களுக்குள் வேர் விடச் செய்யுங்கள். வார்த்தைகள் முழுமையாக இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிற உண்மை இந்த செய்தியாக இருக்க வேண்டும். இது உயர்வு நவிற்சி போல சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால் ராஜ யோகிகள் நம்மை மட்டுப்படுத்திக் கொண்டு, நம்மைக் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு நாம் எதையும், என்றும் சாதித்து விட முடியாது என்று தெளிவாக அறிந்திருந்தார்கள். இப்படி நினைப்பதால் நமக்கு கர்வம் வந்து விடாதா என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். கர்வம் என்பது அடுத்தவர்களை மட்டமாக நினைத்து நம்மை உயர்வாக நினைக்கும் போது மட்டுமே எழக் கூடியது. நமக்குப் பொருந்தும் இந்த உண்மை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று அறிந்திருக்கும் போது, அடுத்தவரைக் குறைவாக எண்ண முடியாது. எனவே முறையாக உணரும் போது கர்வம் வர வாய்ப்பில்லை.

9) இது ஒருசில நாட்களில் தேர்ச்சி பெறக் கூடிய பயிற்சியல்ல. தாழ்வான உணர்வு நிலையில் இருந்தே வருடக்கணக்கில் பழகி விட்ட நமக்கு மேம்பட்ட உணர்வு நிலைக்குப் பழக்கப்பட பல நாட்கள் பயிற்சி தேவைப்படும். இதில் முன்னேற்றம் கூட சிறிது சிறிதாகத் தான் தெரியும். அதனால் பொறுமையாக இந்தப் பயிற்சியைச் செய்து வரவும்.

இனி அடுத்த பயிற்சிக்குப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:34:30 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-50


உயர் உணர்வு நிலைக்கு இரண்டாம் பயிற்சி-மனமும் நீங்களல்ல

பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

முதல் பயிற்சியில் நான் என்று எண்ணும் போது உடலையே நானாக எண்ணும் வழக்கத்தை விட்டொழிக்கப் பழக ஆரம்பித்திருப்பீர்கள். அடுத்ததாக நான் என்று சொல்லும் போது மனதை நினைக்கும் வழக்கத்தையும் விட்டொழிக்கும் சிந்தனைகள் மற்றும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

நம் கட்டுப்பாட்டில் இருக்கையில் மனம் ஒரு சிறந்த சேவகன். அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்கையில் மனம் ஒரு மோசமான எஜமானன். ஒரு உடலைத் தேர்ந்தெடுத்து நாம் இங்கு வந்தது போலவே மனநிலையையும் நாமே தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்கிறோம். அது நாம் உருவாக்கிக் கொள்வது தான் என்றாலும் அதையே நாம் என்று அடையாளம் காண ஆரம்பிக்கும் போது அதன் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். பின் அது நம்மை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது.

இந்த இரண்டாவது பயிற்சிக்கு முன்பு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருக்கும் மனதில் வர ஆரம்பிக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒரு பார்வையாளனாகக் காண ஆரம்பியுங்கள். கோபம், வெறுப்பு, ஆசை, ஏமாற்றம், பொறாமை என்று நூற்றுக் கணக்கில் எழும் உணர்ச்சிகளோடு கூடிய எண்ணங்களை ஒவ்வொன்றாக ஆராயுங்கள். அது எப்படி எழுந்தது, ஏன் எழுந்தது, என்ன தெரிவிக்கிறது என்றெல்லாம் ஒரு விஞ்ஞானி மைக்ராஸ்கோப்பில் ஆராய்ச்சி செய்வது போல செய்யுங்கள். சரியாக நீங்கள் அலசியிருந்தால் அதன் ஆரம்பத்தையும், காரணத்தையும், வளர்ச்சியையும், முடிவையும் கூட நீங்கள்
வெளியாளாக நின்று காண முடியும்.

ஒரு காலத்தில் உங்களிடம் இல்லாமல் இருந்து, பின் உருவாகி, சில சமயங்களில் உங்கள் மனநிலையில் பிரதான இடம் பிடித்து, ஆட்டுவித்து, பின் தணிந்து மடியும் அந்த உணர்ச்சிகளின் வரலாறை நீங்கள் பார்வையாளனாகப் பார்க்க முடியும். உங்களுடையது என்றால் அது என்றுமே உங்களிடம் இருந்திருக்கும். இடையே வந்து போவது என்றால் அது எப்படி உங்களுடையதாக முடியும். அதை எப்படி நீங்களாகவே உங்களால் அடையாளம் காண முடியும்?

எத்தனையோ எண்ணங்கள் ஒரு காலத்தில் மிக முக்கியமாக இருந்து இக்காலத்தில் நீங்கள் அலட்சியப்படுத்துவனவாக இருந்திருப்பதை நீங்கள் காண முடியும். இன்று முக்கியமாக இருப்பவைக்கும் நாளை அதே கதி நேரலாம். ஒரு காலத்தில் இது தான் நான் என்று நீங்கள் நினைத்ததெல்லாம் இன்று யாராவது சுட்டிக் காட்டினால் உங்களை தர்மசங்கடப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நேற்றைய நான் வேறு, இன்றைய நான் வேறு என்பது எப்படி உண்மையாக முடியும்? இதெல்லாம் தத்துவமாகத் தோன்றலாம். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் மனம் என்பது கூட மாறிக் கொண்டே இருப்பது, அதனால் அதுவும் நீங்கள் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் சுலபமாக வரலாம்.

அறிவுபூர்வமாக இதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. இதைத் தினமும் திரும்பத் திரும்ப சிந்தித்து உணர்ந்து உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிய வைக்க முயன்றால் ஒழிய அறிவுக்கு எட்டிய இந்த செய்தி அனுபவத்தில் வந்து உதவாது. எனவே இந்த உண்மையை உங்கள் மனதில் ஆழமாகச் சிந்தித்து பதிய வைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குத் தயாராகுங்கள்.

1) முதல் பயிற்சியைப் போலவே இதற்கும் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள்.

2) உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு தியானத்தைச் செய்து முடியுங்கள்.

3) நீங்கள் எல்லையில்லாத பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம் என்ற நினைவை முதல் பயிற்சியில் குறிப்பிட்டது போல உங்கள் மனதில் பிரதானப்படுத்துங்கள். அதை உணர்வு பூர்வமாக உணர முயற்சி செய்யுங்கள்.

4) இந்த உடலும், மனமும் உங்களது கருவிகள் என்பதை உறுதியாக உங்களுக்குள் பிரகடனப்படுத்துங்கள். ”நான் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம். நான் உடலல்ல. மனமும் அல்ல. நான் அந்த இரண்டையும் இயக்கும் எஜமான். நான் உடலையும், உள்ளத்தையும் சார்ந்தவன் அல்ல. அவற்றால் தீர்மானிக்கப்படுபவனும் அல்ல, இயக்கப்படுபவனும் அல்ல. அவற்றை தேவைப்படும் போது, தேவைப்படும் விதத்தில் நான் பயன்படுத்த வல்லவன்”. (வார்த்தைகள் இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் மீது நீங்கள் சக்தி செலுத்தவும், இயக்கவும் வல்லவர் என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும்படியாக இருத்தலே அவசியம்)

5) மேலும் சொல்லிக் கொள்ளுங்கள். “உடலையும், உள்ளத்தையும் என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான் என்னுள்ளே என் இயல்பான எல்லையில்லாத சக்தியை உணர்கிறேன். எல்லையில்லாத அமைதியை உணர்கிறேன். இந்த மகாசக்தியும், பேரமைதியும் என் பிறப்புரிமை. உலக நடப்பின் தோற்றங்களில் நான் இவற்றை இழந்து விட மாட்டேன்”

இப்படி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது அது உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அவை நம்பிக்கையுடன் மிக உறுதியாக சொல்லப்பட வேண்டும். அப்போது தான் இந்தப் பயிற்சி முடிக்கையில் உங்களுக்குள் சக்தியையும், அமைதியையும் நன்றாகவே உங்களால் உணர முடியும். மேலோட்டமாக, எந்திரத்தனமாகச் சொல்லப்படுபவை எந்த தாக்கத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தப் போவதில்லை.

இந்தப் பயிற்சியையும் விடாமல் பொறுமையாக தினமும் செய்யுங்கள். நீங்கள் ஆத்மார்த்தமாக தினமும் செய்தால் சில நாட்களில் உங்களிடம் மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள். அத்தோடு திருப்திப்பட்டு பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். மேலும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அந்த மாற்றம் மேலும் மெருகு பெற்று நீடித்து உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.

ஒருவன் உடலுக்கோ, மனதிற்கோ அடிமையாக இருந்து கொண்டு ஆழ்மன சக்திகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீளவே இந்த இரண்டு பயிற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயிற்சிகளையும் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கையோடு உணர்வு பூர்வமாகச் செய்தால் ஒருவன் வெற்றியாளனாகவும், அமைதி கொண்டவனாகவும் மாறுவது உறுதி.

ஆழ்மன சக்திகளை அடைய உதவும் அடுத்த கட்டத்திற்குப் போவோமா?

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:36:10 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-51


மனதை ஒருமுனைப்படுத்துங்கள்

நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந்து அந்த எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பார்த்தோம். அடுத்த கட்டமாக அந்தக் கருவிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்த முடிவது தான் உங்கள் எஜமானத்துவத்திற்கு அத்தாட்சி என்பதை உணருங்கள்.
(http://1.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TIJabln2VbI/AAAAAAAAAZc/HbIOP65nPws/s320/m+51.jpg)உடலை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியம். அது பழுதடைந்து விட்டால் மனதில் உடலைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் பலமாக எழ வாய்ப்பு குறைவு. உதாரணத்திற்கு கடுமையான தலைவலியோ, பல்வலியோ, வேறு பெரிய உபாதைகளோ இருக்கும் போது வேறு எதைப் பற்றியாவது சீரியசாக எண்ணி செயல்பட முடிகிறதா என்று பாருங்கள். அந்த உபாதைகள் சரியாகும் வரை அது முடியாது. எனவே உடல் பாதிக்கப்படும் போது மனமும் நாம் நினைத்தபடி இயங்க மறுக்கிறது என்பதால் இரண்டுமே நமக்கு எண்ணியபடி பயன்படாமல் போகின்றன. எனவே உடலை நமக்கு இடைஞ்சல் தராத அளவுக்காவது நல்லபடி வைத்துக் கொள்வது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு மிக முக்கியம்.

அடுத்ததாக மனம். சூரிய ஒளியை லென்ஸ் மூலமாக காகிதத்தின் ஒரு புள்ளியில் குவிக்கும் போது அந்தக் காகிதம் பற்றி எரிவதை பெரும்போலோர் சிறு வயதில் செய்து பார்த்திருப்போம். மனம் என்னும் கருவி சக்தி வாய்ந்ததாக மாறுவது நாம் விரும்பும் விதத்தில் அதை ஒருமுனைப்படுத்தும் போது. மனம் அதற்குப் பிடித்த செயலில் ஒருமுனைப்படுவது பெரிய விஷயமல்ல. பிடித்த சினிமா பார்க்கும் போது, நாவல் படிக்கும் போது, இசையைக் கேட்கும் போது எல்லாம் மனம் தானாக ஒருமுனைப்படும். பிடித்த அந்தக் காரியம் முடிந்த பிறகு தான் மனம் வேறு விஷயத்திற்கு நகரும். அப்படி பிடித்த விஷயத்தில் தானாக ஒருமைப்பட முடிந்த மனத்தை நம் கட்டளைப்படி நாம் சொன்ன விஷயத்தில் ஒருமைப்படுத்த முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோர் பெற வேண்டிய அடுத்த பயிற்சி.

ஏதாவது ஒரு சாதாரண பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தினம் பார்க்கக்கூடிய பொருளாக இருக்கட்டும். உதாரணத்திற்கு பென்சிலை எடுத்துக் கொள்வோம். இனி அடுத்த சில நிமிடங்களுக்கு பென்சிலைத் தவிர நீங்கள் வேறு எதையும் நினைக்காமல் பென்சிலைப் பற்றியே சிந்தியுங்கள். உங்கள் முழுக்கவனமும் அதிலேயே இருக்கட்டும். சில வினாடிகளுக்கு மேல் அதில் கவனத்தைக் குவிப்பது ஆரம்பத்தில் முடியாத செயல். மனம் பென்சிலில் கவனம் வைக்க என்ன இருக்கிறது என்று சொல்லி சுவாரசியமான மற்றவற்றிற்குச் செல்ல அலைபாயும். ஆனால் மனதை திரும்பவும் பென்சிலிற்கே கொண்டு வாருங்கள். அதன் உருவம், நிறம், அளவு, உபயோகங்கள், என்று மனம் பென்சிலை சார்ந்த, பென்சிலை மையமாகக் கொண்ட விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள். சில வினாடிகளில் மனம் இதைப் பற்றி முழுவதும் நான் சிந்தித்து முடித்து விட்டாயிற்று. இனி சிந்திக்க வேறொன்றும் இல்லை என்று சொல்லும். ஆனாலும் விடாமல் பென்சிலுக்கு மனதைக் கொண்டு வாருங்கள். உங்கள் முழுக் கவனமும் பென்சிலைப் பற்றியதாக, பென்சிலிலிலேயே இருக்கட்டும். ஓரளவு மனம் ஒருமுனைப்பட ஆரம்பித்த பின் பயிற்சி நேரத்தை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டே வாருங்கள். புதிது புதிதாக பென்சிலைப் பற்றிய அதிக விவரங்களை அறிய ஆரம்பிப்பீர்கள்.

கவனிக்கும் திறனின் முக்கியத்துவத்துவம் அறிய ஒரு நிகழ்வைச் சொல்லலாம். தாவரம், விலங்கு முதலான உயிரின ஆராய்ச்சியாளரான லூயி அகாசிஸ் (Louis Agassiz) என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் அந்தத் துறையில் தலைசிறந்து விளங்கியவர். அவரிடம் கற்ற மாணவர்கள் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதிலும், நுண்ணிய அறிவிலும் வல்லவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரிடம் கற்க ஒரு புதிய மாணவன் வந்தான்.

அகாசிஸ் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன். இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான். ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான். மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள், பக்கவாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான். சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து அகாசிஸைத் தேடினான். அவரைக் காணவில்லை.

மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான். அதையும் குறித்துக் கொண்டான். பல மணி நேரம் கழித்து வந்த அகாசிஸிடம் தன் குறிப்புகளைக் காட்டினான். அகாசிஸ் திருப்தியடையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார். மாணவனுக்கு ஒரே ஏமாற்றம். இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான். அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த அகாசிஸிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார். மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித்தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான்.

அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான். ”நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்”.

பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் இரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். “நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன். சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும். ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.” இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள்.


மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒருமுனைப்படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள். இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல. உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும். மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும்.

எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும்.

அடுத்ததாக மிக முக்கியமான வேறொரு பயிற்சியைப் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:38:33 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 52



தீய பழக்கங்களில் இருந்து விடுபட ஆழ்மனப்பயிற்சி

ஆழ்மனதின் அற்புத சக்திகளை ஆரம்பத்தில் இருந்து விளக்கமாகப் பார்த்தோம். அந்த சக்தியை அடைய உதவும் பயிற்சிகளை அறிந்து வரும் இந்த வேளையில் ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் உணர வேண்டும்.
(http://3.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TK8OXV1Y69I/AAAAAAAAAcY/biu6tomE5aw/s320/m+52.jpg)ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
ஆனால் அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும் அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.

மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.

ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.

இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.

தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை
என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.

மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.

ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.

நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.

’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.

நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.

எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.

சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.

முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.

பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள். அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.

அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.

இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள். இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)

எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:41:37 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 53

ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!

(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TOENI10fnxI/AAAAAAAAAfE/mIgE9RL2xBo/s320/m%2B53.jpg)பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.
 
இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்திற்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன’ என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.

அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.

இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.

துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் “என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?” என்று கேட்கிறான். நம் ஆள் “இல்லையே நன்றாகத் தானே இருக்கிறேன்” என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் “என்ன உடம்பு சரியில்லையா?” என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.

நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். ”நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது” என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். “நான் பலவீனமானவன்”, ”என்னால் இது முடியாது”, “எனக்கு ஆரோக்கியம் சரியில்லை” என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.

என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். “எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்”. அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது.
ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.

இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். “ஏன்?” என்று கேட்ட போது ”அது தவறு” என்ற பதில் வந்தது.

நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.

இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.

ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.

பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ”இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். ”என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” அவர்கள் கூறினார்கள். “ஆமாம் பிரபு”
இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். “உங்கள் நம்பிக்கையின் படியே உங்களுக்கு ஆகக் கடவதாக!”. அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)”. (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.

இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:43:10 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-54


ஆழ்மனதின் அபார சேவை

ஆழ்மனதில் ஆழமாகப் பதிபவையே நம்மை உண்மையில் இயக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்மனம் தன் தகவல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி நமக்கு எப்படியெல்லாம் அபார சேவை புரிகிறது என்பதையும், அதனிடம் அந்த வேலை வாங்குவது எப்படி என்றும் பார்ப்போம்.

மேல்மனம் உறக்கத்தின் போது ஓய்வு எடுத்துக் கொள்கிறது. ஆழ்மனம் உறக்கத்தின் போதும் கூட ஓய்வு எடுத்துக் கொள்வதில்லை. இதை பல ஆராய்ச்சிகள் செய்து உதாரணங்களுடன் டாக்டர் ஏ.ஸ்மித் என்ற இங்கிலாந்து மனவியல் அறிஞர் தன்னுடைய நூலில் (Does Brain Think, When I Sleep?) எழுதியுள்ளார். முன்பே கூறியது போல அது தான் சேகரித்து வைத்து இருக்கும் தகவல்களுடன் புதிதாகப் பெற்ற தகவல்களைச் சேர்த்து தக்க விதத்தில் சரி செய்தும், ஒழுங்குபடுத்தி, புதுப்பித்து வைத்துக் கொள்கிறது. மேல்மனம் எப்போதோ நினைத்து மறந்த சின்னத் தகவல் கூட ஆழ்மனதில் முறையாக சேகரிக்கப்பட்டு இருக்கும்.

இந்த தகவல் களஞ்சியத்தில் இருந்து தேவைப்பட்ட தகவல்களை எல்லாம் தேர்ந்தெடுத்து இணைத்து தொகுத்து புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய சித்தாந்தங்களையும், புதிய கோட்பாடுகளையும், பேருண்மைகளையும் முடிவாக நமக்கு உணர்த்த வல்லது ஆழ்மனம். எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும், வாழ்வையே திசை திருப்ப வல்ல பேருண்மையையும் ஆழ்மனதின் உதவி இல்லாமல் யாரும் பெற்று விட முடியாது.

சர் வில்லியம் ஆர். ஹேமில்டன் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை, வானவியல் அறிஞர், மற்றும் இயற்பியல் அறிஞர். அவர் ஒரு முக்கிய கணித ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது என்ன முயன்றும் அவரால் அதற்கு தீர்வு காண முடியவில்லை. 1843 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் அவர் தன் மனைவியுடன் ஒரு பாலத்தின் அருகே நடந்து கொண்டிருந்த போது திடீரென்று பதில் தானாக அவர் மனதில் உதித்தது. அந்தத் தீர்வை மறந்து விடக்கூடும் என்று பயந்து அந்த பாலத்தின் சுவரில் கல்லால் கீறி அந்த சமன்பாட்டை அவர் பதித்தார்.
அவர் கண்டுபிடித்த க்வார்டெர்னியன்ஸ் ( ) என்ற தீர்வு இன்றும் கணிதத் துறையில் மிக முக்கிய விதியாகக் கருதப்படுகிறது. அந்தப் பாலத்தின் சுவரில் இருந்த கீறல் பிற்காலத்தில் மறைந்து விட்டிருந்தாலும் அயர்லாந்து அரசாங்கம் அதே இடத்தில் அந்த தீர்வை ஒரு குறிப்புடன் கல்வெட்டாக இன்றும் வைத்திருக்கிறது.

டாக்டர் தாம்சன் என்ற மனோதத்துவ மேதை “System of Psychology” என்ற நூலை எழுதத் துவங்கியிருந்த போது அதற்காக நிறைய படித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். ஆனால் எழுதுகின்ற சமயத்தில் நிறைய விஷயங்கள் கோர்வையாக இல்லாமல் தனித் தனியாக இருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் போது அது கோர்வையாக வராமல் இப்படி சம்பந்தமில்லாத தனிக் கருத்துகளாக இருந்தால் அது முழுமையாக இருக்காது என்று நினைத்த டாக்டர் தாம்சன் என்ன தான் அதைக் கோர்வைப் படுத்த முயன்றும் முடியாது போகவே அவர் எழுதுவதை சுமார் ஒரு மாதத்திற்கு நிறுத்தியே வைத்திருந்தார். பிறகு ஒரு நாள் எழுதியதை எடுத்துப் படிக்கையில் விடுபட்டதாய் நினைத்த விஷயங்கள் அவர்
மனதில் தானாக பளிச்சிட்டன. உடனடியாக அவற்றை எழுதி அந்த நூலை அவர் முடித்தார். இது போன்ற நிகழ்வுகள் பல முறை தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

Synthetic Chemistry ஐ கண்டுபிடித்த விஞ்ஞானி பெர்த்லாட் அவர்களும் தன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களில் முறையாக சிந்திக்கும் போது வந்தவை அல்ல என்றும் திடீரென்று தானாக வானில் இருந்து வந்தவை போல வந்தவை தான் என்று கூறுகிறார்.

மோசார்ட் என்ற இசை மேதை தன் 35 வருட வாழ்க்கையில் பத்து ஓபரா என்னும் இசை நாடகங்கள், 41 ஸிம்ஃபனி என்னும் விரிவான இசை நாடகங்கள், நூற்றுக் கணக்கான சிறிய இசைச் சித்திரங்கள் உருவாக்கிய மேதை. அவர் தன்னுடைய பெரும்பாலான புதிய இசைப் படைப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக தானாக மனதில் தோன்றியவை என்றும், மனதில் கேட்டவற்றை அப்படியே திரும்ப உருவாக்கியது தான் அவர் செய்த வேலை என்றும் கூறுகிறார். நம் கணித மேதை ராமானுஜம் தன்னுடைய எல்லா கணக்குகளுக்கும் விடையை நாமகிரிப் பேட்டை அம்மன் கொண்டு வந்து தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

இது போல் எத்தனையோ காலத்தை வென்று நின்ற எழுத்துக்களையும், இசையையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றைத் தங்கள் முயற்சியால் வந்ததென அந்த அறிஞர்களால் சொல்ல முடியவில்லை. தானாக வந்ததாகவும், தாங்கள் நம்பும் இறைவன் கொண்டு வந்து தந்ததாகவும் அவர்கள் சொன்ன போதிலும் அவற்றை அவர்கள் மேல்மனதிற்குத் தந்தது அவர்களுடைய ஆழ்மனமாகவே இருக்க வேண்டும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எத்தனையோ முறை ஏதாவது ஒரு பெயர் மறந்து போயோ, ஒரு பொருளை வைத்த இடம் மறந்து போயோ நாம் அனைவருமே மூளையை கசக்கி இருந்திருக்கக் கூடிய தருணங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பிறகு வேறெதோ நாம் செய்து கொண்டிருக்கையில் தானாக அது நம் நினைவில் பளிச்சிடுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். இது நம் ஆழ்மன செயல்பாடே.

நாம் பல விதங்களில் சிந்தித்தும் விடை கிடைக்காத அல்லது நினைவுக்கு வராத விஷயங்களில் இருந்து சிந்தனையை மேல்மனம் கை விட்டு வேறு விஷயங்களுக்கு நகர்த்தும் போது அந்த பழைய தேடலை ஆழ்மனம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது. அது தன்னிடம் உள்ள தகவல் களஞ்சியத்தில் இருந்து நமது அறிவுக்கெட்டாத முறையில் பிரம்மாண்டமான விதத்தில் விடையைக் கண்டுபிடித்து வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும் மேல்மனத்திற்கு அனுப்பி வைக்கிறது. நாம் அதை ‘திடீர்’ என்று வந்ததாக நினைத்து வியக்கிறோம்.

சிறு வயதில் நாம் பூதம் அல்லது தேவதைக் கதைகள் நிறைய படித்திருப்போம். பாவப்பட்ட ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு கொடுமைக்காரர்கள் இரவில் ஏராளமான வேலைகளைத் தந்து மறு நாள் காலையில் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டுப் போய் விடுவார்கள். அந்த பாவப்பட்ட ஜீவன் மீது அன்பும், இரக்கமும் கொண்ட பூதமோ, தேவதையோ அந்த வேலைகளைத் தான் எடுத்துக் கொண்டு அனைத்தையும் அசுர வேகத்தில் நேர்த்தியாக செய்து தந்து விடும் என்பதைப் படித்திருப்போம். உண்மையில் நம் ஆழ்மனம் அது போன்ற ஒரு சக்தி படைத்த தேவதையே.

சிக்கலான ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வோ, அல்லது சிக்கலான ஒரு கேள்விக்கு விடையோ அறிய நாம் எந்த விதத்தில் யோசித்தும் நமக்கு பதில் கிடைக்கவில்லையானால் மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் தாங்கள் அறியாமலேயே ஆழ்மனதைப் பயன்படுத்தி விடை கண்டு பிடித்தது போல நாமும் ஆழ்மனதின் உதவியை நாடலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் பிரச்னைக்கோ, கேள்விக்கோ சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் ஆழ்ந்து யோசித்துக் கொள்ளுங்கள். அதன் தீர்வு அல்லது விடை உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதை மிக முக்கியமானது என்று நீங்கள் மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். எல்லா விதங்களிலும் சம்பந்தப்பட்ட விஷயங்களை யோசித்து விட்டு ஆழ்மனதிடம் ‘இதைக் கவனி’ என்று கட்டளையிடுங்கள். பின் அதை மறந்து விடுங்கள்.

இதைச் செய்யப் பொருத்தமான நேரம் இரவு தூங்குவதற்கு சிறிது நேரம் முன் என்கிறார்கள். மேல்மனம் உறங்க ஆரம்பித்தவுடன் 24 மணி நேரமும் விழித்திருக்கும் ஆழ்மனம் நீங்கள் தந்த அந்த வேலையை, தான் சேகரித்து வைத்திருக்கும் பல்லாயிரம் தகவல்களையும் பல விதங்களைலும் மிக நேர்த்தியாக அலசி மிகச் சிறந்த ஒரு தீர்வையோ, பதிலையோ மறு நாள் உங்களுக்குத் தந்து விடும். ஆரம்பத்தில் நீங்கள் தந்திருக்கும் வேலையின் சிக்கல் தன்மையின் கடுமைக்கேற்ப ஒரிரு நாட்கள் அதிகமாகக் கூட அது எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் இந்த விதத்தில் மிகச் சிறப்பான பதில் கிடைத்தே தீரும் என்பது பலரின் அனுபவம்.

இதில் மூன்று விஷயங்கள் முக்கியம். முதலாவது அது உண்மையாகவே உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அது சம்பந்தமாக நிறைய தேவையான தகவல்களை அலசி இருக்க வேண்டும். (தகவல்கள் என்ற பெயரில் கவலைகள், பயங்களை ஆழ்மனதிற்கு அனுப்பி விடாமல் இருப்பது முக்கியம்). மூன்றாவது ஆழ்மனதிடம் ஒப்படைத்து விட்ட பின் விரைவில் அதனிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கக் கூடாது.

(ஒன்பதாவது அத்தியாயத்தில் மைக்கேல் க்ரிஸ்டன் என்ற பிரபல ஆங்கில சினிமா டைரக்டர் ஸ்பூன்களைப் பார்வையாலேயே மடக்கும் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் நன்றாக கவனத்தைக் குவித்து விட்டு பிறகு கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பின பிறகு தான் இந்த சக்தி வேலை செய்கிறது என்பதை வியப்புடன் சொல்லி இருப்பதைக் குறிப்பிட்டிருந்ததைப் படித்திருப்பீர்கள். அதற்கும் காரணம் இது தான். மேல்மனம் நன்றாக முயன்று விட்டு பின் அதிலிருந்து கவனத்தை திருப்பி விட்ட பின் ஆழ்மனம் அதைத் தன் பணியாக எடுத்துக் கொண்ட பிறகு தான் சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது)

இரவு உறங்கப் போகும் நேரத்திற்கு முன் ஓரிரு மணி நேரம் ஆழ்மனம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அதிகமாக நாம் எண்ணும் எண்ணங்களே பெரும்பாலும் நம் உறக்கத்தில் ஆழ்மனதால் அதிகம் அலசப்படுகின்றன. அதனால் அந்த நேரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், துக்ககரமான அல்லது வன்முறை சீரியல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. அந்த நேரத்தில் நல்ல புத்தகங்கள் படித்தல், மனதிற்கு இதமான இசை கேட்டல், நமக்குப் பயன்படும் விஷயங்களில் ஈடுபாடுடைய செயல்கள் செய்வது எல்லாம் மிக நல்லது.
முக்கியமாக நம்முடைய இலட்சியங்கள், குறிக்கோள்கள் குறித்து அந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளுவதும், அது சம்பந்தமான செயல்களில் அந்த நேரத்தில் ஈடுபடுவதும் நாம் விரைவில் இலக்கை அடைய மிகவும் உதவும்.

இனி ஆழ்மனதின் சக்தியை அதிகரித்து பயன்பெற முக்கியமான அடுத்த பயிற்சியைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:44:18 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-55



மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.

ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.

’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.

மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.

ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.

சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:46:02 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 56




அறிந்ததை சோதித்துப் பாருங்கள்-டெலிபதி
(http://4.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TNlKZ3Hh-ZI/AAAAAAAAAdg/B5whjhPBJW4/s320/m%2B56.jpg)

ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம். கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.

ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.

அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.

ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.

முதலில் ‘டெலிபதி’ எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.

ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.

இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார். ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. ”ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது” என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தைப் போல செல் போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலிற்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால்
அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.

இனி அடுத்த ஆழ்மன சக்திகளைப் பரிசோதிக்கச் செல்லலாமா?

மேலும் பயணிப்போம்...
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 12:48:02 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 57



உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்
(http://2.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TNlNx68_xOI/AAAAAAAAAeg/zg0qa3W52g4/s320/good-thinking.jpg)

தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.

தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். “இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்”.

அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். ”அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்.” சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.

ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.

இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.

இனி பயிற்சிக்குச் செல்வோம்.

எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.

ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மீக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.

நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு
நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.

துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.

இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.

இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.

நம் வாழ்விற்கு மிக மிக உதவும் சில சக்திகள் பெறும் வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 01:00:09 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 58


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மேலும் பயணிப்போம்.....
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 01:02:42 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 59

பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு
(http://4.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TPoevONnQmI/AAAAAAAAAf8/AWjEzVij91s/s320/m%2B59.jpg)

நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.

இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.

1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.

கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.

ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?

இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?

அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.

நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.

நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.

அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.

பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.

ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.

சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா
?
Title: Re: ஆழ்மனதின் அற்புத சக்திகள்
Post by: Anu on July 19, 2012, 01:04:56 PM
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 60


நினைவில் நிறுத்த சில உண்மைகள்

(http://1.bp.blogspot.com/_pO1m7hvHPQk/TPofSmcSgrI/AAAAAAAAAgE/gjySEYYVoC0/s320/m%2B60.jpg)



இது வரையில் ஆழ்மன சக்திகள் அடையத் தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் விளக்கமாகப் பார்த்தோம். ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகைகளில் அடிப்படையான ஒருசில சக்திகளை அடையும் வழிகளையும் பார்த்தோம். உயர் உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண்ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்தி எதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும் பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும்.

ஆவிகளுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களை வசியம் செய்து தங்கள் விருப்பப்படி நடக்க வைத்தல் போன்ற சக்திகளையும் சிலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். பதஞ்சலியோ தன் யோக சூத்திரங்களில் ஆழ்மன சக்திகளைப் பெற்ற மனிதன் கூடு விட்டு கூடு பாயலாம், மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்து போகலாம், தண்ணீரில் மூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார். பதஞ்சலி சொல்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுமையானவை மட்டுமல்ல, அந்தப் பயிற்சிகள் குறித்த முறையான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குறைவு. அபூர்வமான சித்தர்கள், யோகிகள் மட்டுமே அறிந்த, கடைபிடிக்க முடிந்தவையாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன. மொத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூடிய அற்புதங்களின் எல்லை மனிதனின் கற்பனையின் எல்லை என்றே சொல்லலாம்.

இத்தொடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி பெற்றவர்கள் பெரும்பாலும் தற்செயலாக அந்த சக்தியைப் பெற்றவர்களாக இருந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு ‘ட்யூன்’ ஆனவர்கள் அவர்கள். அவர்களில் ஒருசிலர் அப்படி ’ட்யூன்’ ஆன பிறகு அதனை ஒத்த தன்மையுள்ள ஓரிரு சக்திகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிறப்புத் தன்மை அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்று போகிறது. அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் வேறு ஏதாவது ஆழ்மன சக்தியைப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் தோல்வியே அடைகிறார்கள். இப்படி ஒரு வரம்புக்குள்ளேயே இருக்க நேர்வது தற்செயலாக ஒரு சக்தியைப் பெற்றவர்களுடைய குறைபாடாகி விடுகிறது. இன்னொரு குறைபாடு என்னவென்றால் அந்த சக்தி திடீரென்று வந்தது போல திடீரென்று போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.

முறைப்படி பயிற்சிகள் செய்து படிப்படியாக மனதை பக்குவப்படுத்தி, ஆட்கொண்டு, ஆழ்மன சக்திகளை அடைந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட வேண்டிய அவசியமில்லை. அது போல அந்த சக்திகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லாத வரையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெற்றிருக்க வேண்டிய நிலையும் இருக்காது. யோகிகள், சித்தர்கள் போல எல்லா ஆழ்மன சக்திகளைப் பெற முடியா விட்டாலும், அடைந்துள்ள முன்னேற்றத்தையும், ஆற்றலையும் பொறுத்து, தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் பார்க்க பிரமிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கைக்கும், நமது முன்னேற்றத்திற்கும் பயன் தராத சக்திகளைப் பெற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி படைத்த ஒரு சாதுவைச் சொல்லலாம். அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாலேயே மறு கரையில் இருந்து நதி நீர் மீது நடந்தபடியே இக்கரைக்கு வந்தார். அந்த சக்தி பெற நிறைய பயிற்சிகளை நிறைய காலம் செய்து பெற்றதாகச் சொன்னார். ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொன்னார். “காலணா கொடுத்தால் படகுக் காரன் நதியைக் கடந்து இறக்கி விடுகிறான். அப்படிப்பட்ட வேலைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?”. அவர் கேட்டது போல காலணா சமாச்சாரங்களுக்காக நிறைய கஷ்டப்படாதீர்கள். உங்கள் நிஜ வாழ்க்கைக்கு உதவக்கூடிய, உங்களை மேம்படுத்தக்கூடிய ஆழ்மன சக்திகளைப் பெறவே முயற்சியுங்கள். வெறும் புகழுக்காக ஆழ்மன சக்திகளை வெளிப்படுத்த நினைப்பது ஒருவித மூன்றாந்தர வெளிப்பாடாகவே விஷயமறிந்தோர்களால் கருதப்படுகிறது.

இதை தன்னுடைய நூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்புவதாகச் சொன்னார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதிலும், அவர்களுக்கு சொல்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?"

ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...."

மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள் அவை. ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் இதை நினைவில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய பயிற்சிகளையும், அதன் விளைவுகளையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வதே உத்தமம். ஆரம்பத்தில் இதில் கிடைக்கும் சிறு வெற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. அப்போது இயல்பாகவே பலரிடம் சொல்லி ஆனந்தப்படத் தோன்றும். ஆனாலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் வரை நாம் பெறும் வெற்றிகளை எல்லோருக்கும் பிரகடனப்படுத்துவது முழுமையான வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். ஏனென்றால் அப்படிச் செய்கையில் அந்த ஆழ்மன சக்தியைப் பெறுவதை விடவும் அதிகமாக அதை அடுத்தவருக்கு நிரூபிக்கவும், அவர்களிடம் பெயர் வாங்கவுமே நம்மை அறியாமலேயே நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்போம். இது நமது உள்நோக்கிய பயணத்தை வெளி நோக்கிய பயணமாக மாற்றி திசை திருப்பி விடும். சிலர் பாராட்டுவார்கள். சிலர் நம் சக்திகளைக் காட்டி நம்மை சாமியார்களாக ஆக்கியும் விடக் கூடும். இப்படி அற்ப சாதனைகளில் கிடைக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்களை நாம் அடைய முடியாமல் போய் விடும்.

இதில் முழு ஆளுமையை அடைகிற வரையில் ஒரு முறை சாத்தியப்பட்டது அடுத்த முறை சாத்தியப்படாமல் போகலாம். அதற்கு காரணங்கள் நமக்குள்ளோ, நமக்கு அப்பாற்பட்டோ இருக்கலாம். உண்மையான காரணங்களை அறிந்து நம் முயற்சியில் உள்ள குறைபாடுகளாக இருந்தால் அதை சரி செய்து கொண்டு, நமக்கு அப்பாற்பட்ட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் கூட்டம் கூட்டி நாம் முயற்சி செய்யும் போது, வெற்றி கிடைக்காத போது பலர் ஏளனம் செய்ய ஆரம்பிக்கலாம். நமக்கே முன்பு கிடைத்த வெற்றி தற்செயலாகக் கிடைத்தது தான் போல இருக்கிறது, உண்மையில் நமக்கு இந்த சக்திகள் இல்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கலாம். இதெல்லாம் நாம் வெற்றி பெற பெரும் தடையாக மாற ஆரம்பிக்கும். மேலும் ஒரிரு முறை வெற்றி பெற்று பின் வெற்றி பெற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகழைத் தக்க வைக்க பின் ஏமாற்று வேலைகளில் கூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்தியை நிரந்தரமாகவே இழக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் வெற்றி விகிதம் எப்போதுமே நூறு சதவீதமாக இருப்பதில்லை. பத்து முதல் இருபது சதம் வரை தோல்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த உண்மையை மறப்பதும், மறுப்பதும் உண்மையான சாதகனுக்கு உகந்ததல்ல. எத்தனை பெரிய கைராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்சை செய்யும் நோயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. அதற்கென யாரும் அவரைக் குறைத்தோ, அந்த மருத்துவ சாஸ்திரத்தைக் குறைத்தோ மதிப்பிடுவதில்லை அல்லவா? அதே போலத் தான் இதுவும். பெரும்பான்மை வெற்றிகளை வைத்தே மதிப்பிடல் முக்கியம். சில முயற்சிகளில் தோல்வி வருவது இயற்கையே. அதனால் அதை மறைக்கவோ மறுக்கவோ முற்படாதீர்கள். அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தின் அடுத்த கட்டங்களை உங்களால் சென்றடைய முடியும்.

மேலும், ஆழ்மன சக்தி வகை எதுவானாலும் அதை அடைய அதற்கான
பிரத்தியேக, உறுதியான, தொடர்ந்த ஆர்வம் இருத்தல் தேவை. அந்த ஆர்வம் பத்தோடு சேர்ந்த பதினொன்றாக இருந்தால் அதில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. முன்பே பல முறை குறிப்பிட்டது போல அசாத்தியப் பொறுமையும் வேண்டும். கீரை விதைத்தவன் படுகிற அவசரம் தென்னை விதைத்தவன் படக்கூடாது. ஆழ்மனசக்தி வேண்டி முயற்சிக்கிறவர்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். அதே போல சில முறை நமக்கு சில வெற்றிகள் விரைவாகக் கிடைக்கலாம். சில முறை நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது போலவே தோன்றாது. நம் பயணம் அப்படியே தேக்கமடைந்து விட்டதைப் போன்ற பிரமை கூட ஏற்படும். அந்த நேரத்தில் தான் நாம் முயற்சிகளைக் கை விட்டு விடக்கூடாது. வெளிப்பார்வைக்குத் தெரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டு தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் நாம் உணர நேரிடலாம். எனவே பொறுமையாக நாம் தொடர வேண்டியது முக்கியம்.

இதை எல்லாம் சொல்லும் அளவுக்கு செயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. படிக்கும் போதும், மற்றவர் சாதனையைக் கேட்கும் போதும் நமக்குள் எழுகிற எழுச்சியையும், ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது சாத்தியப்பட, இது சம்பந்தமான நூல்களை தொடர்ந்து அதிகம் படியுங்கள். இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் தொடர்பு வையுங்கள். ஓரளவு வெற்றி பெறும் வரை தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த வெற்றிகள் சாத்தியமானவுடன், உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.

ஆழ்மன சக்தியில் ஆளுமையைப் பெறும் வரை அதனை சோதித்து பார்த்துக் கொண்டு இருப்பது இயற்கையே. ஆனால் அதனை முழுமையாகப் பெற்ற பிறகும் தேவையில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே. நம்மால் கையை அசைக்க முடிகிறது என்பதற்காக நாம் வெறுமனே கையையே அசைத்துக் கொண்டிருப்போமா? எப்போது தேவையோ அப்போது மட்டும் தானே நாம் கையை அசைப்போம். அது போல ஆழ்மன சக்தியையும் தேவைப்படும் போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது தான் முறையானது.

ஆழ்மன சக்தியின் கீழ்நிலை சக்திகளாக மாந்திரீகம், செய்வினை, பலவீனமானவர்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தல் போன்றவையெல்லாம் கூட சொல்லப்படுகின்றன. உண்மையாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இது போன்ற முறைகளில் இறங்குவதுமில்லை. இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. கீழ்நிலை சக்திகள் மேல்நிலை சக்திகள் முன்பு என்றும், எப்பொழுதும் பலம் இழந்து போகின்ற தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற கீழ்நிலை சக்திகளைப் பயன்படுத்தி அடுத்தவரைத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த வகை சக்திகளில் ஆர்வம் காட்டக்கூட முற்படாதீர்கள்.

ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது. மேலும்
ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம். அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட.

பலர் தாங்கள் அடையக்கூடிய அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்றறியாமலேயே பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அதை அடையும் வழி பற்றி தெரிந்தும் அந்த வழியில் பயணம் செய்யாமல் இருப்பதும், அந்த வழியில் சிறிது தூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.

உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள். இது பற்றி நிறைய சிந்தியுங்கள். இந்த உண்மைகளை மனதில் ஊறப்போடுங்கள். நிஜ வாழ்க்கையில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் வேகம் எப்போதும் ஒரே போல சீராக இருக்காது. பயணம் அவ்வப்போது வேகமும் மந்தமுமாக இருக்கலாம். ஆனால் பயணத்தைக் கை விடாமல் இருப்பது முக்கியம். இதில் முழு வெற்றி, தகுதிகளை வளர்த்துக் கொண்டு கடைசி வரை பயணிப்பவர்க்கே வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி செய்த அளவு வெற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண நேரமானாலும் தொடர்பு கொள்ளும் வரையாவது பயணம் செய்யுங்கள். முன்பு சொன்னது போல உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.