151. உயர்வுக்குந் தாழ்வுக்கும் ஒருவன் செயலே காரணம்
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி
(பதவுரை) தனக்குப் பகைவனும் நட்டானும் தானே-தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பினனும் தானேயாவான், பிறரன்று; தனக்கு மறுமையும் இம்மையும் தானே-தனக்கு மறுமையின்பத்தையும் இம்மை யின்பத்தையும் செய்துகொள்பவனும் தானே, தான் செய்த வினைப்பயன் தானே துய்த்தலால்-தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால், தனக்குக் கரி தானே-தான்செய்த வினைகளுக்குச் சான்றா வானும் தானேயாவன்.
(குறிப்பு) ஏகாரங்கள் பிரிநிலைப் பொருளன; அன்றி, தேற்றமுமாம். உம்மைகள் எண்ணுப்பொருளன. (151)
----------------------------------------------------------------------------------------------
152. செய்வினையே ஒருவனுக்குச் சிறந்த துணையாம்
செய்வினை யல்லால் சிறந்தார் பிறரில்லை
பொய்வினை மற்றைப் பொருளெல்லாம்--மெய்வினவில்
தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு.
(பதவுரை) நெஞ்சு-நெஞ்சே!, செய்வினை அல்லால்-நீ செய்த வினை உனக்குத் துணையாவதன்றி, சிறந்தார் பிறரில்லை-சிறந்த துணைவராவர் பிறரிலர், மற்றைப் பொரு ளெல்லாம்-நிலையானவை யென்று நீ கருதுகின்ற மற்றைப் பொருள்களெல்லாம், பொய்வினை-அழியுந் தன்மையனவே, மெய்வினவில்-உண்மையையறிய விரும்பிக் கேட்பாயாயின், தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர் நீ யார்-தாயும் மனைவியும் தந்தையும் மக்களுமாகிய இவர்கள் நின்னோடு எத்தகைய தொடர்பினையுடையார்? நினை-அவர்கள்நிலையான தொடர்புடையவர்களா? என்பதை ஆராய்ந்து அறிவாயாக.
(குறிப்பு) வாழி: முன்னிலையசை: நினை: முன்னிலை யேவலொருமை வினைமுற்று. (152)
----------------------------------------------------------------------------------------------------
153. உடம்பின் உண்மைநிலை
உயிர்திகிரி யாக உடம்புமண் ணாகச்
செயிர்கொள் வினைகுயவ னாகச்--செயிர்தீர
எண்ணருநல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
எண்ணருநோய் துன்பம் அவர்க்கு.
(பதவுரை) செயிர் கொள் வினை-குற்றம் தரும் வினை, குயவன் ஆக-குலாலனாக நின்று, உயிர் திகிரியாக-உயிர்காற்றையே தண்ட சக்கரமாகவு, உடம்பு மண்ணாக-எழுவகைத்தாதுவையே களிமண்ணாகவுங் கொண்டு, செயிர் தீரா-குற்றத்தின் நீங்காத, எண் அரு நல்யாக்கைக் கலம் வனையும்-நினைத்தற்கரிய உடலாகிய பாண்டத்தைச் செய்யும், அதனுள்-அவ்வுடலுள், அவர்க்கு-அதனை யனுபவிக்கும் சீவர்க்கு எண் அரு நோய் துன்பம்-அளவிடற்கரிய கொடிய நோய்கள் பல உளவாம்.
(குறிப்பு) உயிர், உடம்பு, வினை, யாக்கை, நோய் முதலியன திகிரி, மண், குயவன், கலம், துன்பமாக உருவகிக்கப்பட்டுள்ளது. மற்று: அசை நிலை. (153)
--------------------------------------------------------------------------------------------------
154. மக்களாகப் பிறந்தோர் மறுமையைக் கருதல்வேண்டும்
முற்பிறப்பில் தாஞ்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந் தின்புறா* நின்றவர்--இப்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம் கடிந்தறத்தை
முன்னி முயன்றொழுகற் பாற்று.
*இப்புறத் தின்புறா.
(பதவுரை) முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் - முற்பிறப்பில் தாம் செய்த அறங் காரணமாக, நல்லதோர் இல்பிறந்து இன்புறா நின்றவர்-உயர்குடியிற் பிறந்து இன்பத்தை நுகர்கின்றவர்கள், இப் பிறப்பே-இம்மை யின்பத்தையே, இன்னும் கருதுமேல்-இன்னமும் கருதி முயல்வாராயின், ஏதம்-மறுமையில் உறுவது துன்பமேயாகும்; (ஆதலால்) கடிந்து-இம்மையின்பத்தில் செல்லுங் கருத்தை ஒழித்து, அறத்தை முன்னி முயன்று ஒழுகற்பாற்று-மறுமை யின்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைக் கருதி முயன்று செய்தலே தக்கது.
(குறிப்பு) இன்: ஐந்தனுருபு; ஏதுப்பொருளது. ஆநின்று: நிகழ்கால இடைநிலை. ''இற்பிறந் தின்புறா நின்றவ ரிற்பிறப்பே''என்றும் பாடம். (154)
--------------------------------------------------------------------------------------------
155. மறுமையறஞ் செய்யார் மாமூட ராவர்
அம்மைத்தாஞ் செய்த அறத்தினை வருபயனை
இம்மைத்துய்த் தின்புறா நின்றவர்--உம்மைக்(கு)
அறம்செய்யா(து) ஐம்புலனும் ஆற்றல் நல்லாக்
கறந்துண்பஃ தோம்பாமை யாம்.
(பதவுரை) அம்மை-முற்பிறப்பில், தாம் செய்த அறத்தின் வரு பயனை-தாம் செய்த அறங் காரணமாக வரும் இன்பத்தை, இம்மை-இப்பிறப்பில், துய்த்து-நுகர்ந்து, இன்புறா நின்றவர்-மகிழ்கின்றவர்கள், உம்மைக்கு-மறுமையின்பத்தின் பொருட்டு, அறஞ்செய்யாது-அறத்தினைச் செய்யாமல், ஐம்புலனு மாற்றுதல்-ஐம்பொறிகளாலும் நுகரப்படு மின்பங்களை நுகர்ந்துகொண்டு வாளா இருத்தல், நல் ஆ-நல்ல பசுவினை, கறந்து-பாலைக் கறந்து, உண்டு-மகிழ்ச்சியோடு பருகி, அஃது ஓம்பாமை ஆம்-பின் பசுவை உணவிட்டுக் காவாதிருத்தல் போலாம்.
(குறிப்பு) வருபயன்: வினைத்தொகை. ஓம்பாமை: மையீற்றுத் தொழிற்பெயர். (155)