நானும் எனது கருத்தை கூறலாமா?
காதல் திருமணமா, நிச்சயிக்கப்பட்ட திருமணமா எது சிறந்தது?
எல்லா விசயங்களிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். மனித வாழ்க்கை என்பதே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல.
காதல் திருமணங்களில் சில விவாகரத்தில் முடிகிறது. அது போலவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் கோர்ட் படி ஏறத்தான் செய்கிறது.
சிலரது காதல் உண்மையானதாக இல்லை. அது போலவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் வெறும் உடம்பால் மட்டும் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.தனக்கென்று பெரிய வீடு இருந்தாலும் ஊருக்கொரு சின்ன வீடு வைத்திருக்கும் பெரிய மனிதர்களும் நிறைய இருக்கிறார்கள்.
இரண்டிலும் குறைபாடுகள் இருக்கின்றன. ஆகவே இவை இரண்டில் எது சிறந்தது என்று மட்டும் பார்ப்போம்.
முதலில் அனு சொன்னது போல எந்த ஒரு திருமணத்திற்கும் புரிந்துணர்வு அவசியம். அதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.
இந்த புரிந்துணர்வு எந்த திருமணத்தில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் அது காதல் திருமணத்தில் தான் அதிகம்.
நிச்சயிக்கப்படும் திருமணங்களில் அந்த திருமணத்தை நிச்சயிப்பதே பெற்றோர்கள் தான். அவர்கள் மணமகன் அல்லது மணமகள் எப்படி என நிச்சயம் தேடிப்பார்ப்பார்கள். அவர்கள் அந்த பையனின் அல்லது பெண்ணின் பெற்றோரை விசாரிப்பார்கள், அவர்கள் சொந்தங்களை விசாரிப்பார்கள். அண்டை அசலாரை விசாரிப்பார்கள். அனேகம் பசங்க வீட்டிலும் அண்டை அசலாரிடமும் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல தான் நடந்து கொள்வார்கள்.
வீட்டில் அயோத்தியில் ராமன் போல இருப்பவர்கள் வெளியில்
கோகுலத்தில் கண்ணன் போல ஆகிவிடுவார்கள்.
பெற்றோர் பார்ப்பது மணப்பொருத்தம். மனப்பொருத்தம் நிச்சயிகப்பட்ட திருமணங்களில் அவர்கள் திருமணத்தின் பின்னேயே ஆரம்பிக்கிறது.ஒருவர் மனதை ஒருவர் அறியும் முன்பே திருமணபந்தம் அவர்களை உடலாலும் இணைத்து விடுகிறது.அதற்கு அப்புறம் ஒருவருக்கொருவர் மனம் பொருந்தா விட்டாலும் தாலி எனும் வேலி அவர்களை அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வரவிடாமல் அதன் உள்ளேயே சகித்து வாழும் ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறது,
காதல் திருமணங்களில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.ஒருவருடைய ரசனைகள், விருப்பு வெறுப்பு, எதிபார்ப்புகள் எல்லாவற்றையும் மற்றவர் புரிந்து கொள்கின்றனர்.
நிச்சயிக்கப்படும் திருமணங்களில் திருமணம் முடிந்த அன்றே முதலிரவு. அது முடிந்து அந்த மயக்கம் தெளிவதற்குள் வயிற்றில் குழந்தை. அது வெளிவரும் வரை அதனோடு போராட்டம். வெளிவந்தவுடன் அதை வளர்ப்பதே அதை விட போராட்டம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வருடங்கள் பல ஆகிவிடும்.அதன் புரிந்து தான் என்ன
பலன்? எந்த தம்பதியினவராவது. நான் முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம். அதன் பிறகு முதலிரவு வைக்கலாம் என்று சொல்வார்களா?
நிச்சயிகப்பட்ட திருமணங்களில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை பொற்றோர்கள் தலையில் தூக்கிப் போட்டு விடுவார்கள்.. நீங்கள் பார்த்த மாப்பிள்ளை தானே என.
காதல் திருமணங்களில் யாரையும் குறை சொல்ல வாய்ப்பில்லை. சொல்வதென்றால் அவர்கள் காதலை தான் குறை சொல்ல வேண்டும்.
காதல் திருமணங்கள் வாழ்க்கையோடு போராட வழி வகுக்கிறது.
வாழ்க்கை என்றால் என்ன எனும் பாடத்தை அவர்களுக்கு பயிற்றுவிக்கிறது. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் எனும் வெறியை அவர்களுக்கு ஊட்டுகிறது.
தன் காலில் நிற்க வேண்டும் தன் குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனும் தன் நம்பிக்கையை அவனுக்கு அளிக்கிறது.
காதல் திருமணமே சிறந்தது. இது எனது கருத்து மட்டுமல்ல நான் வாழ்ந்து கண்டறிந்த உண்மையும் கூட.
தேவை என்றால் மறுபடி வருவேன்.