மடந்தையே!
தன்னை அழகாக.. சீவி சிங்காரித்து..
தன்.. கள்ளமில்லா வெள்ளை சிரிப்பில்..
தரணியில் அழகாக உலாவரும்.. அகவையில்...
ஏன்! இந்த இறுகிய முகம் உனக்கு..
ஏன்! இந்த வெறித்த பார்வை உனக்கு..
ஏன்! இந்த உயிர் குடிக்கும் வாள் உனக்கு..
ஏன்! இந்த இரும்பு உடை உனக்கு.. மங்கையே..
மடந்தையே! பெதும்பை பருவத்தில்..
உன்னுடன் பழகிய உலகுக்கும்.. இன்று
உனை நெருங்கி வரும் சுற்றத்துக்கும்..
உன் உள்ளுணரவு ஏதேனும் சொல்கிறதோ..?
உன் கைவாளின் கூர்மையை விட .
உன் விழிகளின் கூரிய பார்வை..
உயிர்களை காவு வாங்கிடுமோ? என (அச்சத்தில்)
உறைய வைக்கிறது.. உன் அசைவுகள்..
இரும்பு தேவதையே! ஒரு கணம்..
இவள் உரைப்பதை.. நின்று நிதானமாக கேட்பாயா?
மடந்தையே! இந்த பருவத்தில் இந்த உலகமே..நமக்கு
சற்று புதிதாய்.. அதிசயமாக அச்சமாக தோன்றும்..
அது! மனிதர்களின் பார்வை மாற்றத்தில் அல்ல...
அவை! மனிதர்களில் பருவ மாற்றத்தில் தான்...
கல்விசாலையில் ஆண்டுகள் கடக்க
பல பல பருவங்கள் மாறுவது போல..
உயிர் தோற்றத்திலும், வருடங்கள் உருண்டோட.
பல பல பருவ மாற்றங்கள் வந்து மறையும்..
அந்த மாற்றங்களை.. உன் மனதில்.. உள்வாங்கி..
மங்கையே! உன் கூரிய மதி துணை கொண்டு....
தூய நல்வழி வகுத்து.. அதை கடந்து செல்.
பயம், சந்தேகம் அற்று.. அழகு பார்வை வீசு..
அழகான உலகம்.. உனக்காக காத்திருக்கிறது...
அவநம்பிக்கை விட்டு.. அழகு நடை போடு..
அன்பான உள்ளங்கள் உனக்காக காத்திருக்கிறது..
மாற்றங்களை ஏற்றுக்கொள்.. மதியோட கடந்து செல்.
என் செல்ல அழகு.. சுந்தர.... இரும்பு தேவதையே...