திருமணத்திற்குச் செல்கிறோம். அன்பளிப்பாக பரிசு தருவதா? ஆசிர்வதிப்பதா? எது சிறந்தது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஆசிர்வாதத்தின் வெளிப்பாடு பொருளாகவும் வெளிப்படலாம் அல்லது வார்த்தைகளாகவும் வெளிப்படலாம். ஆத்மார்த்தமான வேண்டுதல்கள், நீ நன்றாக வாழவேண்டும் என்று சாமி கும்பிட்டுவிட்டு, உனக்காக விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வந்திருக்கிறேன் என்று கூறியோ, நினைத்தோ ஆசிர்வதிப்பது. இதெல்லாம் ஆசிர்வாதத்தின் வெளிப்பாடு.
வயிறு எரிந்துகொண்டே 2 கிராம் நகை கொடுப்பதைவிட, சாதாரணமாக எதைக் கொடுக்கிறோமோ அதை ஆசிர்வதிக்கும் மன நிலையில் நின்று செய்ய வேண்டும், அது நல்லது.
"ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசி, உப்பில்லாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்." அதாவது என்ன தருகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த மாதிரியான ஆசிர்வாதத்தை கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
ஆசிர்வாதம் பூரண அன்புடனும், முழு மனதுடனும் ஆசிர்வதிக்க வேண்டும். அது பொருள் கொடுத்தும் ஆசிர்வதிக்கலாம். மலர் கொடுத்தும் ஆசிர்வதிக்கலாம். வாழ்த்துப் பா எழுதியும், வாசித்தும் ஆசிர்வதிக்கலாம். இதில் நம்முடைய மன நிலைதான் முக்கியம். அவர்கள் சிறந்து வாழ வேண்டும் என்று ஆசிர்வதிக்க வேண்டும் அவ்வளவுதான்.