2013 புத்தாண்டு இராசி பலன் : மேஷம்!
FILE
இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். இந்த புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம்,விலையுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீடு களைக்கட்டும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். பழைய சொந்தம் பந்தஙகள் தேடி வருவார்கள்.
வருடம் ஆரம்பிக்கும் போது செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும்.
12.10.2013 முதல் டிசம்பர் முடிய கேதுபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் அசுவனி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் விபத்துகள், ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.
3.2.2013 முதல் 11.10.2013 வரை பரணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பரணி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் மனஉளைச்சல், ஆரோக்ய குறைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
1.1.2013 முதல் 2.2.2013 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
10.4.2013 முதல் 26.5.2013 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கையால் பலவீனமடைவதால் வீடு, மனை வாங்குவது, மற்றும் பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.
மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவு உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள்.
மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். சாமர்த்தியமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் தராதரத்தை புரிந்து கொள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறி முடிக்க வேண்டி வரும். மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.
வருடம் முடியும் வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் வரும் ஆனால் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் உங்களை புகழ்வதைப் போல் பேசி உங்களின் திறமையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்கள் சில ஆலோசனைகள் கூறினாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சிக்கனமாக இருக்கப்பாருங்கள்.
குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்துபோகும். மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப் போங்கள். எல்லாவற்றிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை சிதைவு வரக்கூடும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வருவீர்கள். ஆனால் ராசிக்குள் கேது நிற்பதால் எதிலும் ஒரு சலிப்பு, டென்ஷன், தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
வருடம் முழுக்க ராசிக்கு 7-ம் வீட்டில் சனி நிற்பதால் இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உங்கள் சில காரியங்கள் இழுபறியாகி முடியும். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் உஷாராக பழகுங்கள். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை தரம் பிரித்துப் பார்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். முன்பு போல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்காதீர்கள்.
வருங்காலத்தை மனதில்கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். உப்பு சப்பில்லாத விஷயத்திற்கு கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக் கொடுத்து போவது நல்லது. மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். மனைவி வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தோலில் நமைச்சல், அலர்ஜி, செரிமானக் கோளாறு, வாயுக்கோளாறால் நெஞ்சு வலியும் வந்து நீங்கும். நேரங்கடந்து சாப்பிடுவதை முதலில் தவிர்க்கவும்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். புதிய வேலை கிடைக்கும். மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அநாவசியமாக மேலிடத்தைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரிகளே! அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ்,ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். என்றாலும் லாபம் உண்டு. உணவு, இரும்பு,கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். என்ன தான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விரும்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைஞர்களே! புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். உங்கள் வெற்றி தொடரும். அரசு பாராட்டும்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதுடன், முன்கோபத்தையும், வீண் சந்தேகத்தையும், இரவு நேரப் பயணங்களையும் தவிர்க்க வேண்டிய வருடமிது.
பரிகாரம்:
ஏதேனும் ஒரு ஏகாதசி திதி நாளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குங்கள்.