கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப்போகிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறி வந்தனர்.
இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம்.
உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகர் கோட்டை கட்டி ஆள்வார். புதனுக்கு வெகு அருகில் இருக்கக் கூடியது சூரியன். எனவே, சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டை கட்டி ஆள்வார்.
எனது அனுபவத்தில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏராளமானோரை பார்த்திருக்கிறேன். அரசாணை பிறப்பித்தல், நலத்திட்டங்கள் அறிவித்தல் என அரசை ஆளும் நபர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
பொதுவாக கேட்டை நட்சத்திரக்காரர்கள் இளகிய மனதும், நன்றாகப் பழகும் குணமும் உடையவர்களாக இருப்பதால் அடுத்தவர்களின் மனக்கோட்டையையும் இவர்கள் ஆள்வார்கள்.
எதையும் ஆட்சி செய்யும் தன்மையைப் பெற்றிருந்தாலும், கொடுங்கோல் ஆட்சி செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள். உபசரிக்கும் குணம், சரித்துப் பேசும் குணம் இவர்களுக்கு இருப்பதால் எப்போதும் அவர்களைச் சுற்று ஒரு நட்பு வட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
எனவே, கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த ஜாதகருக்கு புதன் நீச்சம் பெறாமல், பகை வீட்டில் அமராமல், பகைக் கோளுடன் சேராமல், 6/8க்கு உரியவனுடன் சேராமல், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டையைப் பிடிப்பார்/ஆள்வார்.