தற்போதைய சூழலிலும் அன்னை தெரசா போல் நிறைய பெண்கள் பல குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை. அன்னை தெரசாவின் சேவை மனப்பான்மை அனைவரும் அறிந்ததே. ஆனால் நான் குறிப்பிடும் பெண்களின் சேவைகள் வெளிஉலகிற்கு தெரியாமல் போய்விடுகின்றன.
உதாரணமாக அதிக சொந்தங்கள் (அக்கா/தம்பி/தங்கை) உள்ள குடும்பத்தில் மூத்த மருமகளாக வாழ்க்கைப்படும் பெண்கள் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை அந்த சொந்தங்களின் நலனுக்காகவே கழிக்கிறார்கள். அவரது கணவர் குடும்பத்தில் முதல் வாரிசாக இருந்தால் அவருக்கு பின்னர் உள்ள தம்பி, தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கும்.
தன்னுடைய குழந்தைகளுக்காக சொத்துக்களை ஒதுக்கி வைக்காமல், தம்பி, தங்கைகளின் வாழ்க்கை நலனுக்காக, திருமணத்திற்காக அந்தக் கணவர் பலவற்றை இழக்க வேண்டி இருக்கும். அதற்கு அவரது மனைவியும் சேவை மனப்பான்மையுடன் ஒப்புக்கொள்வார்.
மேலும் ஒரு சில வீடுகளில் மாமனார் (கணவரின் தந்தை) இல்லாத காரணத்தால் கணவரும், மனைவியும் தாய்-தந்தை ஸ்தானத்தில் இருந்து, அவரது தங்கை, தம்பிகளுக்கு அனைத்தையும் (திருமணம், தலைப்பிரசவம் உள்ளிட்டவை) செய்து முடிப்பார்கள்.
ஒரு சில வீடுகளில் மாமனார், மாமியார் படுத்த படுக்கையாக இருப்பார்கள். படுக்கையிலேயே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். அவர்களுக்கு பல ஆண்டுகள் செவிலியராகச் போல் சேவகம் செய்யும் பெண்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இவர்களைத்தான் நவீனகால அன்னை தெரசா என்று துவக்கத்தில் குறிப்பிட்டேன்.
இதுபோன்ற மனநிலை, மனப்பக்குவம் ஒரு ஜாதகருக்கு கிடைக்க வேண்டுமென்றால் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியும் (5ஆம் இடம்) ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் பரந்த மனப்பான்மை, மனப் பக்குவம் இருக்கும்.
இதேபோல் லக்னாதிபதியும், 5ஆம் இடத்திற்கு உரிய கிரகமும் ஒன்றுக்கு ஒன்று கேந்திரந்தங்களில் அமர்ந்தாலும், திரிகோணங்களில் அமர்ந்தாலும், ஒன்றுக்கு ஒன்று பார்த்துக் கொண்டாலும் இதுபோன்ற மனப்பக்குவம் அமையும்.