வான் மதியே வான் மதியே
மின்னும் வெண்திலகமாய் நீ தோன்றிய
சேதி சொல்லவா உலகத்திற்கு..?
வட்ட முகமாய் நீ ஜொலிக்கும்
காரணம் சொல்லவா அண்டத்திற்கு..?
காடு மலைகளில் தேடியலைந்தேன்
ஒருகாலம் என் மனதை...
கடைசியில் தொலைந்த இடம் அறிந்தேன் !
எப்படி தொலைத்தேன் என பிழிந்தேன்
நித்தமும் என் நினைவை...
வார்த்தைகளின்றிய அவள் ஒற்றை புன்னகையால்
என சித்தமும் தெளிந்தேன் !
அவளும் நானும் முடிவற்ற பயணமாய்
காதல் ரயிலில் பயணித்தோம்
சிவப்பு அபாயமாய் எது வந்ததோ...?
தஞ்சாவூர் தவிலாய்
காதல் தாளம் உரக்க வாசித்தோம்
தாளமும் மௌனம் காத்ததேனோ..?
சிவகாசி வெடியாய்
காதல் பூரிப்பில் படபடத்தோம்
வேட்டுச்சத்தம் ஓலமாகியதேனோ..?
திண்டுக்கல் காதல் பூட்டினால்
அடைப்பட்டு கிடந்தோம்
பூட்டை உடைக்கும் சாவி யார் கையில் கிடைத்ததோ...?
தாவணி போட்ட என் கண்மணி,
அன்று காதலனை பிரிந்த பெண்மணி !
பூ முடிந்த என் எழில் கோதை,
நாளும் கொண்டாள் வேதனையெனும் போதை !
என் இதயம் பறித்த அவளை
துளியும் மறக்க இடமில்லை...
நம்மை பிரித்த ஞாலத்தில்
வாழ்க்கை நடத்த மனமில்லை...
கால்கள் விரைந்தன
என் முடிவைத்தேடி...
மனதை பதம் பார்த்தது
பிரிவெனும் விஷச்செடி...
கண்டு கொண்டேன் ஓர் பாதாளம்
உயிரை மாய்க்க அது தாராளம்...
மரணத்தின் பிடியின் இறுதி நொடி
கண் முன்னே நின்றாள் என் காதல் கொடி...
ஆனந்தத்திற்கோ எல்லையில்லை!
அவள் விழிகள் தவிர வேறு சொர்க்கமில்லை!
பிரித்தவரே நம் உண்மைக்காதல் கண்டு
அவளை என்னிடம் அனுப்ப,
நாம் கொண்ட பிறவிக் காதலின் பூரணத்துவம்
உணர்ந்த கணம் அது......!!!
அதுவரை தேய்ந்து முழுமை காணா
நம் இருவர் காதல் பிறைகளும்
பிரிவின் பின் முழுமை காண வளர்ந்து சேர
பால்நிற ஒற்றை முழுமதியானதே...
இடையிலே தடை நிற்பினும்
அவள் கண்கள் எனை மேய
என் கண்கள் அலைமோத
மொத்தமும் அவள் வசமானதே...
விண்ணைத்தாண்டி போக
ஏணி ஒன்று வேண்டும்...
நம் காதலை பிரதிபலிக்கும்
வெண்ணிலவான உனை
முத்தமிட வேண்டும்!
எம்மிருவர் காதல் மனங்களை
உலகிற்கு காட்ட உருவெடுத்த முழுச்சந்திரனே...
இனி காதலர் இதயங்களை
அழகாய் வசப்படுத்தப் போகும் நீ,
என்றும் இளசுகளின் செல்ல தந்திரனே...