Author Topic: பலம் தரும் பழங்கள்  (Read 1102 times)

Arul

  • Guest
பலம் தரும் பழங்கள்
« on: October 04, 2013, 11:48:52 AM »
காய்கறி, பழங்களின் நிறங்கள்..... பலன்கள்!

காய்கறி, பழங்களைத் தினமும் உணவில் பயன்படுத்துவது பலரும் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான பழக்கம். இதில் முக்கியமானது... என்ன நிறத்திலான காய்கறி- பழங்களை உட்கொள்கிறோம் என்பதுதான். ஒவ்வொரு நிறத்திலான காய்கறிகளும் பழங்களும் தங்களுக்கு எனத் தனிப்பட்ட ஊட்டச்சத்துக்களையும், பலன்களையும் கொண்டிருக்கின்றன. தினமும் பல வண்ணக் கலவையான காய்கறி- பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச்சத்தைப் பெற முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கே.ராதிகா. அவர் சொல்லும் பல வண்ணப் பழங்களின் பலன்கள் இங்கே....



சிவப்பு நிறம்

சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட்.

சிவப்பு நிறக் காய்கறி- பழங்களில் லைக்கோபின் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் இது. ஏராளமான நன்மைகளைக் கொடுக்கவல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். இவை தவிர சூரியக் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது. ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் பாதிப்பு நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நீலம் மற்றும் ஊதா நிறம்

திராட்சை, நாவல் பழம், பிளம் பழம், கத்தரிக்காய்.

லுடீன், வைட்டமின் சி, நார்ச்சத்து, ஃபிளேவனாய்ட் உள்ளிட்டவை இவற்றில் நிறைந்து உள்ளன. இந்த ஊட்டச் சத்துக்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்தல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், செரிமானத்திற்கு உதவுதல், கால்சியம் உள்ளிட்ட சில தாதுஉப்புக்களை உடல் கிரகிக்க உதவுதல், வீக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்கின்றன. ஃபிளேவனாய்டுகள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மைகொண்டவை. மேலும், இவை மறதி நோயில் இருந்தும் பாதுகாக்கக்கூடியன.

பச்சை நிறம்

பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ்.

குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன. மேலும், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயனம் இதில் உள்ளன. இவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றன. காய்கறி- பழங்கள் பச்சை நிறத்தை குளோரோஃபில்-இல் இருந்து பெறுகின்றன. இந்த குளோரோஃபில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, நம் உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் வரை விரைவாக்குகிறதாம். எலும்பு, தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்தக் காய்கறியும் பழங்களும் உதவுகின்றன.

மஞ்சள் ஆரஞ்சு நிறம்

மாம்பழம், அன்னாசிப்பழம், கமலா ஆரஞ்சுப்பழம், கிருணிப்பழம், பூசணி, எலுமிச்சை போன்ற பழங்களும், மஞ்சள் தானியமான மக்காச்சோளமும் அதிக அளவில் பீட்டா கரோட்டின், ஃபிளேவனாய்ட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வயதாகும்போது ஏற்படும் திசுக் குறைபாடுகளைத் தவிர்க்கிறது. புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தைப் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. திசுக்களுக்கு இடையேயான தொடர்பையும் வலுப்படுத்துகிறது.