Author Topic: படித்ததில் பிடித்தது - ”நிம்மதி சூழ்க!”  (Read 642 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
படித்ததில் பிடித்தது - ”நிம்மதி சூழ்க!”


நெருங்கிய உறவுகளையும், நேசிக்கின்ற மனிதர்களையும் காலனிடம் பறி கொடுத்து நிற்கின்ற தருணங்கள் மிகவும் துக்ககரமானவை. அதிலும் அந்த மனிதர்களின் முகத்தை கடைசியாய் பார்த்து விட்டுத் திரும்புகையில் ‘இனி நாம் காணப் போவதில்லையே’ என்ற யதார்த்தம் உறைக்கையில் இதயம் இயல்பாகவே இமயமென கனப்பதுண்டு. சமீபத்தில் அது போன்ற ஒரு அனுபவத்தை உடுமலை எரிவாயு மயானத்தில் சந்திக்க நேரிட்டது. அப்போது அங்குள்ள சுவரில் பதித்திருந்த ‘நிம்மதி சூழ்க!’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதி இருந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. பிணத்தை மயானத் தீயில் தள்ளி விட்டு பின் வாங்குகையில் அந்த கவிதையை அங்கு ஒலிபரப்பவும் செய்தார்கள். சென்றிருந்த அனைவரும் அங்கு அமர்ந்து ஐந்தாறு நிமிடங்கள் ஒலித்த அந்தக் கவிதையைக் கேட்டு விழிகள் ஈரமானோம். அந்த நேரத்திற்குப் பொருத்தமான மிக அற்புதமான கவிதை அது. நம் உணர்வுகளைப் பிரதிபலித்து, இதயத்தைத் தடவிக் கொடுத்து லேசாக்கிய அந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தக் கவிதையை நீங்களும் படித்து ரசியுங்களேன்.




நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!