ஊசலாடிக் கொண்டேயிருக்கும்
மனமொன்றினை பற்றியிழுத்து
வைத்துக் கொள்ளும் ஈர்ப்பை
எல்லாம் ஒரு கணமே சுதாரித்து
கைவிட்டு விடும் பொறுப்பில்லா
மனநிலையைத் தந்துவிட்டது யார்..??
வித்தியாசப் பாதையை அடையப்
போவதாகத் தம்பட்டம் அடித்துத்
திரிந்து வழி தெரியாமல் விழித்து
நிற்க, வழி காட்டும் ஒவ்வொரு
மனதையும் உடைத்தெறிந்திடும்
மனநிலையைத் தந்துவிட்டது யார்..??
பொன்மொழிகள், புகழ் கவிதை
பல செய்த நாவொன்றைத் திரள்
அளவு தவறாகப் பேசச் செய்து
அதைச் சுட்டிக் காட்டிய மனதை
எல்லாம் திட்டித் துரத்தியனுப்பும்
மனநிலையை தந்துவிட்டது யார்..??
இதுவரைப் பார்த்திராத முன்பின்
தெரியாதவரையும் புன்னகைக்கும்
முகமொன்றை, பழகிவிட்டப் பலர்
முன்னேயும் முகம் காட்டாமல்
நகர்ந்து, முகம் சுழிக்கச் செய்திடும்
மனநிலையைத் தந்துவிட்டது யார்..??
எல்லா நேர்மறையையும் ஒற்றை
விளிம்பில் வைத்து ரசித்திருந்த
காலமொன்றை, ஒட்டு மொத்த
எதிர்மறைச் சிந்தனைகளைக்
கொட்டிக் குவித்து வைத்திருக்கும்
மனநிலையைத் தந்துவிட்டது யார்..??
நான் எவ்வளவுதான் கேட்டாலும்
என்னையன்றி யாருக்குமேத்
தெரிந்திராத சில பக்கங்களின்
மொத்தப் புத்தகம் தானே உன்
நியாபகங்கள், அன்பின் பிரதி நீ.
இப்போதே யூகிக்க முற்படாதே.
இதையெல்லாம் உனையன்றி
யாராலும் என்னுள் நிகழ்த்திக்
காட்டி விட முடியாதென்று அறி..!!