Author Topic: பாரதிதாசன் கவிதைகள்  (Read 7178 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #15 on: January 11, 2013, 12:51:45 AM »
காலை


ளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #16 on: January 11, 2013, 12:52:51 AM »
மாவலிபுரச் செலவு

{ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென் னை, பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம், நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத் தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு}

சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச்
சேரிநகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்.

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
தூவிடும் பொன்னொளி கண்டோம்
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
நீரினை நோக்கியே தாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
அத்தனையும்ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
ஆசையினால் ஒரு தோழர்,
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
செய்தது தான்மிக்க மோசம்

மிக்க முரண்கொண்ட மாடு - தன்
மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவெளி யெல்லாம் - இருள்
போர்த்தது! போனது தோணி.

வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்.
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்கைப் - பனை
கலகல வென்றுகொட் டிற்றே.

எட்டிய மட்டும் கிழக்குத் - திசை
ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று
பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக்குளிர்மதி எங்கே என்று
வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாக எம் நெஞ்சில் - மதி
ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
திருப்பிப் பார்த்திட்ட போது,

தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான்பின்புறத்தில்.

இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
தரும்து ணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருப துதரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துண்ச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே - அங்கு
நின்றிருந் தாள்உயர் விண்ணாள்
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
நட்சத்திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
பலிபுரக்கரை சேர்ந்தோம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #17 on: January 11, 2013, 12:53:28 AM »
வானம்பாடி

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?

வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல் எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்

நீநம்பாய் என்று, நிமிர்ந்த என்கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்;

உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே இருப்பாய் பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண்டே இருப்பார் தென்பாங்கை உன்பால்!

அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #18 on: January 11, 2013, 12:54:03 AM »
இயற்கை

ல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய்! அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் "ஆடற்-கலை" தான்
அமையச் செய்தாய் வாழி!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #19 on: January 11, 2013, 12:54:50 AM »
 அதிகாலை

மைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
(அமைதியில் ஒளி... )

இமை திறந்தே தலைவி கேட்டால் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
(அமைதியில் ஒளி... )

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைந்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
(அமைதியில் ஒளி... )

பெற்றவர் கூடத்தில் மணைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைகளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்கலாயினர் அன்பு திருந்தி
(அமைதியில் ஒளி... ) ( 25 )
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #20 on: January 11, 2013, 12:55:35 AM »
இயற்கைச் செல்வம்

விரிந்த வானே, வெளியே, - எங்கும்
விளைந்த பொருளின் முதலே,
திரிந்த காற்றும், புனலும், - மண்ணும்,
செந்தீ யாவும் தந்தோய்,
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய், ஆங்கே - ஒலியாம்
அலையைச் செய்தாய், நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய!¢
பசையாம் பொருள்கள் செய்தாய்!-இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #21 on: January 11, 2013, 12:56:36 AM »
கொட்டு முரசே!

ல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டுமுரசே - வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!

இல்லாமை என்னும்பிணி
இல்லாமல் கல்விநலம்
எல்லார்க்கும் என்றுசொல்லி
கொட்டுமுரசே - வாழ்வில்
பொல்லாங்கு தீர்ந்ததென்று
கொட்டு முரசே!

சான்றாண்மை இவ்வுலகில்
தேன்றத் துளிர்த்¢ததமிழ்
மூன்றும் செழித்ததென்று
கொட்டுமுரசே - வாழ்வில்
ஊன்றிய புகழ்சொல்லிக்
கொட்டு முரசே!

ஈன்று புறந்தருதல்
தாயின்கடன்! உழைத்தல்
எல்லார்க்கும் கடனென்று
கொட்டுமுரசே! - வாழ்வில்
தேன்மழை பெய்ததென்று
கொட்டு முரசே!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #22 on: January 11, 2013, 12:57:39 AM »
வாழ்வு

ச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல்
லன்பில் விளைவது வாழ்வு
மச்சினில் வாழ்பவ ரேனும் - அவர்
மானத்தில் வாழ்வது வாழ்வு!
உச்சி மலைவிளக் காக-உல
கோங்கும் புகழ்கொண்ட தான
பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ்
பாய்ந்திட வாழ்வது வாழ்வு!

மூதறி வுள்ளது வாழ்வு - நறும்
முத்தமிழ் கற்பது வாழ்வு!
காதினில் கேட்டதைக் கண்ணின்-முன்
கண்டதை ஒவியம் ஆக்கும்
பாதித் தொழில்செய லின்றி - உளம்
பாய்ச்சும் கருத்திலும் செய்கை
யாதிலும் தன்னை விளக்கும் - கலை
இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு!

ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல்தமக் குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்

தூயன வாம்என்று நம்பிப் - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீஎனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #23 on: January 11, 2013, 12:58:27 AM »
 கசடறக் கற்க

கவற் கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்;
திருக்குறள் அருளிய திருவள் ளுவரோ
தென்மது ரைக்கோர் அச்செனச் செப்புவர்.
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்!

இதனால் அறிவ தென்ன வென்றால்
இருவேறு நூற்கள், இருவேறு கொள்கைகள்,
இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு
உளஎன உணர்தல் வேண்டு மன்றோ?

கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினான் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்,
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினார் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழி யாளர் வழங்கு கின்றார்;
பரிமே லழகர் திருக்குற ளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம்மேற் கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன்றுணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவிலதாகும்!

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே.
மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்

திருவள் ளுவர்தாம் இரண்டா யிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்
ஆயிரத் தெழுநூ றாண்டுகள் கழிந்தபின்
பரிமே லழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்

பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள் ளத்தின் திரையே ஆனது
நிறவேறு பாட்டை அறமே ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமேலழகர்.

பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறவே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார், தௌ¢ளு தமிழர்
சீர்த்தியைத் திறம்பட எடுத்துக் காட்டினார்.
பரிமேலழகர் செய்த உரையில்
தமிழரைக் காணுமாறில்லை. தமிழரின்
எதிர்ப்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்! செருகலே கண்டோம்

வடநூல் கொண்டே வள்ளுவர், குறளை
இயற்றினார் என்ற எண்ணமேற் படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்!
எடுத்துக் காட்டொன் றியம்பு கின்றேன்;
'ஒழுக்க முடைமை' குடிமை என்பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்,
தத்தம் வருணத் திற்கும் நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடைய ராதல் - உரைதா னாஇது?
'ஒழுக்க முடைமை உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடைய ராதல்' -தகும் இது;
குடிமை என்பது குடிகளின் தன்மையே!
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இல்' எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக
நன்றுயாம் நவில வந்த தென்எனில்
திருவள் ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழர் இனிது வாழ்கவே*!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #24 on: January 11, 2013, 12:59:07 AM »
வாழ்வு

ச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல்
லன்பில் விளைவது வாழ்வு
மச்சினில் வாழ்பவ ரேனும் - அவர்
மானத்தில் வாழ்வது வாழ்வு!
உச்சி மலைவிளக் காக-உல
கோங்கும் புகழ்கொண்ட தான
பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ்
பாய்ந்திட வாழ்வது வாழ்வு!

மூதறி வுள்ளது வாழ்வு - நறும்
முத்தமிழ் கற்பது வாழ்வு!
காதினில் கேட்டதைக் கண்ணின்-முன்
கண்டதை ஒவியம் ஆக்கும்
பாதித் தொழில்செய லின்றி - உளம்
பாய்ச்சும் கருத்திலும் செய்கை
யாதிலும் தன்னை விளக்கும் - கலை
இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு!

ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல்தமக் குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்

தூயன வாம்என்று நம்பிப் - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீஎனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #25 on: January 11, 2013, 12:59:49 AM »
கசடறக் கற்க

கவற் கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்;
திருக்குறள் அருளிய திருவள் ளுவரோ
தென்மது ரைக்கோர் அச்செனச் செப்புவர்.
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்!

இதனால் அறிவ தென்ன வென்றால்
இருவேறு நூற்கள், இருவேறு கொள்கைகள்,
இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு
உளஎன உணர்தல் வேண்டு மன்றோ?

கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினான் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்,
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினார் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழி யாளர் வழங்கு கின்றார்;
பரிமே லழகர் திருக்குற ளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம்மேற் கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன்றுணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவிலதாகும்!

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே.
மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்

திருவள் ளுவர்தாம் இரண்டா யிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்
ஆயிரத் தெழுநூ றாண்டுகள் கழிந்தபின்
பரிமே லழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்

பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள் ளத்தின் திரையே ஆனது
நிறவேறு பாட்டை அறமே ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமேலழகர்.

பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறவே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார், தௌ¢ளு தமிழர்
சீர்த்தியைத் திறம்பட எடுத்துக் காட்டினார்.
பரிமேலழகர் செய்த உரையில்
தமிழரைக் காணுமாறில்லை. தமிழரின்
எதிர்ப்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்! செருகலே கண்டோம்

வடநூல் கொண்டே வள்ளுவர், குறளை
இயற்றினார் என்ற எண்ணமேற் படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்!
எடுத்துக் காட்டொன் றியம்பு கின்றேன்;
'ஒழுக்க முடைமை' குடிமை என்பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்,
தத்தம் வருணத் திற்கும் நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடைய ராதல் - உரைதா னாஇது?
'ஒழுக்க முடைமை உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடைய ராதல்' -தகும் இது;
குடிமை என்பது குடிகளின் தன்மையே!
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இல்' எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக
நன்றுயாம் நவில வந்த தென்எனில்
திருவள் ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழர் இனிது வாழ்கவே*!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #26 on: January 11, 2013, 01:00:29 AM »
 வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்

தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தோறும்உணர் வாகும்வண்ணம்

கொள்ளும் அறம், பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத தில்லை
திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினிலேஅழைத்துச்
செல்லாததில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாதது இல்லை
இணையில்லை முப்பாலுக்கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெறும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #27 on: January 11, 2013, 01:02:09 AM »
படத்தொழிலின் பயன்

கேள்வி

நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு
நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கதுவோபுகல் அண்ணே

விடை

கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது!
ஏறாக் கருத்தைஇங் கில்லாக் கதைகளை
ஏற்றினரோஅவர் தம்பி? - இது
மாறாதிருக்குமோ தம்பி?

கேள்வி

தன்னருந் தொண்டினில் தக்கதோர் நம்பிக்கை,
தாங்கருந் தீங்கினில் நீங்கிடும் நல்லாற்றல்,
என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை
என்றைக்கு வந்திடும் அண்ணே? இங்
கெழுததாளரேஇல்லை அண்ணே.

விடை

சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்ஒரு
செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள்
நன்னெறி காணாத மூதேவி தன்னையும்
நான்முகன் பெண்டென்பர் தம்பி - தொலைந்
தேன்என்னும் பொய்க்கதை தம்பி

கேள்வி

செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்!
தெலுஙகருக்கிங்கு நடிப்பெதற்காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடுமோ கலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே

விடை

அந்தத் தெலுங்கு மலையாளம் கன்னடம்
அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட
வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ
வாழ்த்துகநீ யிதைத் தம்பி - இதைத்
தாழ்த்துதல் தீயது தம்பி

கேள்வி

அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி
அங்கங் கிருப்பவர் பேசும் மொழிப்படி
செங்கைத் திறத்தால் திரைப்படம் ஆக்கிடில்
தீமை ஒழிந்திடும் அண்ணே - நம்
செந்தமிழ் நேருறும் அண்ணே

விடை

கங்குல், பகல், அதி காலையும் மாலையும்
காலத்தின் பேராய் விளங்குதல் போலே
இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன்றில்லையே தம்பி!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #28 on: January 11, 2013, 01:02:51 AM »
மடமை ஓவியம்

பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
படத்தின் நோக்கமெனில்
போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு
புதுக்கலும் தீதாமோ?
காத்தது முன்னைப் பழங்கதை தான்எனில்,
கற்பனை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதை
பார்க்க மறுத்தார்கள்?

பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
படங்களின் நோக்கமெனில்,
நாமம் குழைத்திட வோஅறி வாளர்கள்
புற்கலை கண்டார்கள்?
தூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
தொடங்கையில் செல்வரெலாம்
தாமறிந்துள்ள செல்வரெலாம்
தாமறிந்துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
சந்திப்ப தேனும் உண்டோ?

நேர்மைஇ லாவகை இத்தகை நாளும்
நிகழ்ந்த படங்களெல்லாம்
சீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத்
திறத்திற் பிறந்திருந்தால்,
ஓர்தமிழ் நாட்டில் உருசிய நாட்டையும்
உண்டாக்கித் தீர்த்திடலாம்
ஆர்செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்?
அடிமையும் தீர்த்திடலாம்!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #29 on: January 11, 2013, 01:03:36 AM »
 குடியானவன்

லாது படுக்கும் எண்சாண் உடம்பை
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
'கிடப்பவன்', பகலெல்லாம் கடுக்க 'உழைப்பவன்'
'குடியானவன்' எனக் கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடிஇலாச் செல்வரும்!

அக்குடியானவன், அரசர் செல்வரோடு
இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை!
அழகிய நகரை அவன்அறிந்ததில்லை
அறுசுவை உணவுக்கு -அவன் வாழ்ந்த தில்லை!
அழகிய நகருக்கு - அறுசுவை உணவை
வழங்குதல் அவனது வழக்கம்; அதனை
விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்!

'சமைத்தல்' உழைத்தல்' சாற்றும் இவற்றிடை
இமைக்கும் நேரமும் இல்லை ஓய்வு - எனும்
குடியா னவனின் குறுகிய காதில்
நெடிய ஓர் செய்தி நேராய் வந்ததும்
உலகிற் பெரும்போர் உலகைப் பெனும்போர்!
உலகின் உரிமை உறிஞ்சும் கொடும்போர்
மூண்டது மூண்டது மூண்டது - ஆகையால்
ஆண்தகை மக்கள் அனைவரும் எழுக -
அந்த ஏழையும் ஆண்தகை தானாம்!

ஒருவன் ஆண்தகையை உற்றறியத்தகும்
திருநாள் வாழ்க - எனச் செப்பினான் அவனும்!

அருமை மகளுக்கு - ஒருதாய் சேர்த்தல் போல்,
பெருங்கடல் அளக்கும் பெரும்போர்க் கப்பல்,
குண்டுகள், கொடிய வண்டிகள், சாப்புகை,
வண்டெனப் பறக்கும் வான ஊர்திகள்,
அனைய அனைத்தும் அடுக்கடுக் காக
மறைவினில் சேர்த்து வைத்த இட்லர்,
இறைமுதல் குடிகள் யார்க்கும் போர்வெறி
முடுக முடுக்கித் திடீரென எழுந்தான்!

பெல்ஜியம் போலந்துமுதல் நல்ல நாடுகள்
பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான்
முடியரசு நாடு, குடியரசு கொள்ள
முடியும் என்பதை முடித்த பிரான்சை
வஞ்சம், சூழ்ச்சியால் மடக்கி ஏறி
அஞ்சாது செல்வம் அடியொடு பறித்தான்
இத்தாலி சேர்த்தே இன்னல் சூழ்ந்தவன்
கொத்தாய் ஆசியாக் கொள்கையை நாடும்
ஜாப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான்
ஆங்கில நாட்டையும் அமெரிக்காவையும்
எரிக்க நினைத்த இட்லர் என்னுங்
'குருவி' நெருப்புக் குழியில் வீழ்ந்தது!

எத்தனை நாட்டின் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!
எத்தனை நாட்டில் இருந்தகாலாட்கள்!
அத்தனையும் சேர்த்து - அலைஅலையாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்கள் வாழ்வின் மதிப்பு - இன்னதென
ஒக்க வாழும் உறுதி இதுவென,
முதிய பெரிய முழுநிலத் திற்கும்
புதியதாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!

உருசிய நாட்டின் உடைமையைக் கடமையை
மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை
உடலில் வைத்தே உயிரினால் காக்கும்
உருசியத்தை இட்லர் உணர்கிலான்!

ஜப்பான் காரன் தன்கொடி நாட்ட
இப்பெரு நாட்டின் எழில்நக ரங்களில்
குண்டெறி கின்றான்; கொலையைத் தொடங்கினான்
பண்டை நாள்மறத் தொண்டுகற் கண்டென
நாய்க்குட்டி நாடுகள் நன்று காணக்
காட்டிய தமிழகம் கைகட்டி நிற்குமா?
ஊட்டத் தோளை ஓலைத்தோளென்னுமா?

இந்த நாட்டின் இருப்பையும் மூச்சையும்,
வந்துள பகையை வாட்டும் படையாய்
மாற்றி அமைத்து வைத்தனர் அன்றோ!
முகத்தைப் பின்னும் முன்னும் திருப்பாது
விடியுமுன் எருதின்வால் அடிபற்றிப்,பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடி யானவன் அருகில்இச் செய்தி
வலியச் சென்று வாயைத் திறந்தது-!

எழும்அரசர் செல்வர், எதிரிஇம் மூன்றுக்கு-
உழைக்க வேண்டும்அவ் வோலைக் குடிசை,
உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல்போல்,
அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,
அக்குடி யானவன் அழகிய தோளிலும்,
விழியிலும் எழுந்து மின்ன, அவ் வேழை
எழுந்தான்; அவனுக்கு - இதற்குமுன் வைத்த
இழிநிலை; அதன்பயன் என்றும் வறுமை
இவை, அவன் காலை இழுந்தன கடித்து!

மெத்தை வீடு, மென்மை ஆப்பிள்
முத்தரிசி பாலில் முழுங்கிய சோறு,
விலைதந்து தன்புகழ் விதைக்கும் ஆட்கள்
இவற்றினின்றுதான் இன்பமும் அறமும்
துவங்கும் என்று சொல்லல் பொய்ம்மை!

இதைஅவன் கண்டதில்லை; ஆயினும்
அக்குடி யானவன் எழுந்தான்
நிற்க வில்லை; நிறைந்தான் போரிலே!

{ வையப் போரில் ரஷ்யாவை ஜெர்மனி
தாக்கத் துவங்கியபோது எழுதியது }