Author Topic: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு  (Read 6866 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

அறப்போர்


எட்டுத் திசைகளும் பட்டுத் தெறித்தன
ஈனர் குண்டுகளே! - குண்டு
பட்டுத் தமதுடல் கெட்டுச் சிதறிடப்
பாய்ந்தார் தொண்டர்களே!

மானம் பெரிதென ஊன உடல்விழ
மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி
தானம் எனத்தந்த மானத் தமிழன் தோள்
தங்கம்! தங்கமடா!

பெண்களை மென்மைப் பிறவிகளென்று
பேச மனம் வருமோ? - அங்கே
மண்ணி லுயிர்சிந்தும் இளைஞர்க்கு வாய்த்த
மகளிர் குலமல்லவோ?

பள்ளிச் சிறார்களும் நல்லறப் போரிலே
பாய்ந்து களிக்கின்றார்! - செந்நீர்
வெள்ளத்திலாடி மரணத்தின் முத்தம்
விரும்பித் துடிக்கின்றார்!

ஓவென்றிரைந்து நடக்குதடா எங்கும்
உரிமைப் போராட்டம்! - வாழ்வு
தாவென்று கேட்டு மடியுதடா எங்கள்
தமிழர் படைக்கூட்டம்!

தன்னை வருத்தியும் தன்னுயிர் தந்தும்
தமிழன் மடிகின்றான்! - தங்கள்
பொன்னுயிர் சிந்தும் புறாக்களைக் கண்டு
புலவன் மலர்கின்றான்!

எங்கும் பிணத்திரள்! எங்கும் பிணநெடி!
இனிய அறமங்கை - கண்ணில்
பொங்கி வழியும் புனலின் நெருப்பிலே
பூமி அழியாதே?

ஈழம் தமிழ்மண் இரண்டிலுஞ் செந்நீர்
எழுந்து பெருக்கெடுத்து - நின்ற
ஆழியுஞ் செங்கடலானது கண்டார்!
அதிர்ந்தார் புவிமாந்தர்!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

சாவும் ஒரு வாழ்வே!

ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!

குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! உமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?

"முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!" என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
"சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காகச்
செத்தே மடிகின்றேன்!" எனச்
செல்வாய் தமிழ் ஏறே!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

வெற்றி விழா


முரசுகள் அதிர்ந்தன கேண்மினோ! கேண்மின்!
முழங்கின ஊதுகுழல்!
புரவிகள் ஆடின காண்மினோ! காண்மின்!
பொழிந்தன தமிழ்ப்பாடல்!
நிரை நிரை காவடி நிறைந்தன கண்டீர்!
நிகழ்ந்தன நடனங்கள்!
அரசொடு தமிழகம் மலர்ந்தது கண்டார்!
அனைவரும் மகிழ்கின்றார்!

தூயவெண் சங்குகள் கூவின! கூவின!
தோன்றின கவிதைகள்!
ஆயிரம் வகை வகை வீணைகள் ஆர்த்தன!
அதிர்ந்தன வேட்டுக்கள்!
தாயகம் தனியரசானது! தேனிசை
தவழ்ந்தது காற்றெல்லாம்!
சேயிழை தமிழ்மகள் வாய்மலர் இதழ்களும்
சிரித்தன சிரித்தனவே!

நீள்நெடு மாளிகை வீடுகள் நிறைந்தன!
குடிசைகள் நீங்கினவே!
நாள்தொறும் வாடிய ஏழையர் பூமுகம்
நகைத்தன! நகைத்தனவே!
ஆள்பவர் அடிமையர் உள்ளவர் அற்றவர்
ஆகிய பேதங்கள்
தூள்பட விடுதலை வந்தது! விண்மிசை
பறவைகள் துள்ளுதடா!

பனிமலர் புகைப்பொருள் சந்தனம் மணந்தன!
பாவையர் எழில் காட்டும்
கனிவகை பாலொடு சர்க்கரை கரும்புகள்
இனித்தன வாயெல்லாம்!
தனியெழில் கொண்டது தமிழகம்! பந்தல்கள்
தாங்கின வீதிகளை
மனிதரின் திரள்நிறைக் கின்றதால் ஊர்மிசை
வீதிகள் மறைந்தன காண்!

கோயில்க ளெங்கணும் மணியொலி கொஞ்சின!
தமிழ்மனம் குளிர்ந்ததடா!
போயின ஊர்வலம்! வீடெலாம் பொன்விழா!
பூத்தன நிறைகுடங்கள்!
ஆயிரம் எழில்வகை! விடுதலை நாளெனில்
அழகொரு காட்சியன்றோ?
வாயிதழ் எங்கணும் வாழ்த்தொலி நின்றது!
வாழிய தமிழ் நாடே!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

விழா

முத்து நிலாப்பொழியும் முற்றம் நெடுந்தொலைவில்
கத்துங் குயிலின் கனிப்பாடல்
குத்து
விளக்கெரியும் வண்ண விழாமேடை! ஆங்கே
உளக்கனியில் தேன்கொண்ட ஊர்!

வெள்ளி ஒளித் தூண்கள்! மேலே மணிக்கூரை!
கொள்ளை அழகு நிறைகோவில்!
உள்ளே
இருக்கை பசும்பொன்! எழில்சேர் இரவின்
திருக்கோலம் வேறு சிறப்பு!

தங்க நகையாள் தமிழ்க்கன்னி தேன்பாவை
பொங்க இருந்தாங்கே பூக்கின்றாள்!
திங்கள்
ஒளிநலமும் தென்றல் உணர்த்தும் நலமும்
களிக்கின்றாள்... ஓவியங் காண்!

நீல நெடுவானம் எங்கும் கொடிநிரைகள்!
கோலமொழி மகளின் கொண்டாட்டம்!
காலமுனி!
ஆங்கு விழாக் காணும் ஐயன் இதழ்முறுவல்
தாங்கும் அழகோ தனி!

மரகதம்சேர் வண்ண முடிசுமந்து மக்கள்
திரளிடையே வாழ்கின்றாள் தேவி!
கரமிசை
செங்கோல் சுமந்து சிரிக்கின்றாள்... ஞாலத்தே
பொங்கும் மகிழ்ச்சிப் புனல்!

பவள இதழ்கள் பளபளக்கும்....! ஆசை
தவழ ஒரு முறுவல் தாவும்!
இவளேன்
விழியாலே என்னை வெறிக்கப் பார்க் கின்றாள்?
அழியாத காதல் அழகு!

கோமே தகத்தின் குளிர்ந்த ஒளிகொண்டாள்!
நாமீதி லாடும்எழில் நங்கை!
பூமூடும்
தேனாகி நிற்கின்ற தேவி அருந்தமிழே
நானாகி நிற்கின்றேன் நான்!

வைர நெடும்போர் ஆடி உடல்வளைந்து
மையின் தலைநரைத்த மானிடன்
செய்ய தமிழ்ப்
பாவலன் பெற்ற பசுங்காதல் ஓவியமே!
தேமொழியே வாழ்க திகழ்ந்து!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

சீறி எழுந்திடடா!

முத்தமிழ் மன்னர்கள் ஆண்ட தமிழ்நிலம்
மூக்கறு பட்டதடா! - சுய
புத்தி இழந்தவர் ஆட்சியிலே தமிழ்
பொத்தென்று வீழ்ந்ததடா! - அட!
எத்தர்கள் சட்டம் எழுதி அனுப்பிய
இந்தி நுழைந்ததடா! - இனிச்
செத்து மடிவதும் வாழ்வதும் ஒன்றுதான்!
சீறி எழுந்திடடா!

தங்கம் இருக்கையிலே தெருக் கற்களைத்
தாலிக்கு வைப்போமோ? - ஒளித்
திங்களை விட்டிங்கு மின்மினிப் பூச்சியின்
தேகத்தை வாழ்த்துவமோ? - அட
பொங்கும் அழகுத் தமிழை மறந்தொரு
பொய்யை வணங்குவமோ? - உடல்
அங்குலம் அங்குலம் ஆயினும் வெங்களம்
ஆடப் புறப்படடா!

என்ன நினைப்பில் துணிந்துவிட்டார்? இவர்
இப்படிச் செய்து விட்டார்! - நமைச்
சின்னவர் என்று கருதிவிட்டா ரெனில்
செய்கை பிழைத்துவிட்டார்! - அட!
அன்னை மொழிக்கொரு தீங்கெனில் இங்கவர்
ஆட்சி நடைபெறுமோ? - ஒளி
மின்னல் முகில் இடி என்ன வரும்படை
மீண்டும் அமைத்திடடா!

சட்ட வடிவினள் இந்தி சடலத்தின்
சாம்பல் கரைத்திடுவோம்! - சிறைக்
கட்டை உடைத்துக் களம்புகுந் தாடுவோம்!
காற்றில் வலம் வருவோம்! - அட!
கொட்டு முரசொடு வான்புகழ் கொண்டவர்
கூனி மடிவதோடா? - இமை
வெட்டும் ஒரு நொடி வேளையிலாயிரம்
வீரம் விளைத்திடடா!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

உணர்ச்சி


என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி
சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி
என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!
பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே
சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்.. அட மாற்றார்
கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!
நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே
கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!
புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?
தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே?
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

தமிழன் கனவு


பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!

தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்

கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்...

கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும்.... போதாதோ?

ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய

மேவியவன் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்

நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து

மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஒன்றுபடு!

சாதி மதமெனும் பேதங்கள் சாயவே
தமிழா ஒன்றுபடு!
ஆதி மகளெனும் தமிழை அரசியாய்
ஆக்கி வாழவிடு!

கந்தன் பறையனென் றுரைக்கும் கயவனைக்
கண்ணீர் வர வதைப்பாய்!
இந்துவும் இஸ்லா மியனும் பொருதினால்
இருவரையும் உதைப்பாய்!

ஊருக்கூர் சண்டை தெருத்தெரு சண்டை
உருப்படு வோமோடா?
பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே
பத்துப் பிரிவோடா?

தேசம் பலவினும் வாழும் காக்கைக்குலம்
சிதைந்து பிரிவதில்லை!
பேசும் மொழியால் அவை ஒன்றுகூடும்
பெருமை நமக்கில்லை!

ஒன்று படடா தமிழா! உறுதுயர்
ஓடப் படை நடத்து!
வென்று புகழ்கொண்டு வாடா! விடுதலை
வேண்டும் தமிழனுக்கு!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

உணர்ச்சி

என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி

சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி

என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!

பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே

சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்... அட மாற்றார்

கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!

நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே

கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!

புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?

தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே?
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

தமிழீழத்தின் அழகு தனியழகு


தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள்
தாயகத்தின் பெருமை அறியும் உலகு

கடல் சூழ்ந்த யாழ்பாணம்
படகு போல் இருக்கும்!

கரை மணலில் நண்டு
ஏதேதோ கிறுக்கும்!

குடைபோலும் பனைமரம்
பார்ப்போரை மயக்கும்!

கொள்ளை அழகு என்று
உலகமே வியக்கும்!

கோணமா மலைமீதில்
அலை மோதிப் பாயும்!
கூட்டமாய் எழில் மான்கள்
கடலோரம் மேயும்!

தேன் நிலாக் காலத்தில்
கடலில் பொன் பூக்கும்!
தீந்தமிழ்ப் புலவன்கை
எழுதுகோல் தூக்கும்!

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

விழிகளில் வன்னி மண்
அழகள்ளிச் சொரியும்!

வேரில்லாச் செடியைப் போல்
மயிலாடித் திரியும்

எழில் தோய்ந்த மன்னாரில்
முத்துக்கள் கிடைக்கும்!

ஈழத்தின் திசை நான்கும்
ஓவியம் படைக்கும்!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

எழுவாய் நீ நெருப்பாய்!


தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!

தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!

உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!

பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!

இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!

வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!

மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!

தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!
தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஏன் இந்த நடிப்பு?


கைதட்டத்தானா உன் கை? - தமிழா!
கைதட்டத்தானா உன் கை?

வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்
கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை?

ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! - வெறும்
காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!

என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? - உன்
முன்னவன் இமயம்
வென்றானே - கதையா?

கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு? - அட!
அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

செத்த நாள்

ஆடா மயிலாய் அசையா இளங்கொடியாய்
ஓடா நதியாய் ஒரு புதிராய்
நாடெல்லாம்....
வீசாத தென்றலாய் வீசும் தமிழ்ப் பெருமை
பேசாத வாய் பிணத்தின் வாய்!

புறமும் அகப்பாட்டும் காப்பியனால் பூத்த
இறவா இலக்கணத்தின் ஏடும்
குறள் மொழியும்
ஆர்க்கும் சிலம்பின் அழகு தமிழ் நடையும்
பார்க்காத கண் பாவக்கண்!

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்....
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!

வானம் அளவு வளர்ந்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்த தமிழேட்டில்
ஈனம்
படைக்க வந்தாரா? அவர் பல்லை ஓங்கி
உடைக்காத கை உலக்கை!

ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

பாடு குயிலே!

புள்ளிச் சிறகடித்துப் பாடுகுயிலே! - தமிழன்
புதிது பிறந்தானென்று பாடுகுயிலே!
வெள்ளிக் குரலெடுத்துப் பாடுகுயிலே! - எங்கள்
விடுதலை வந்ததென்று பாடுகுயிலே!

நேற்றுவரை உலகில் அஞ்சிநடந்தோம்! - பிறர்
நீட்டும் எலும்புகளை உண்டு கிடந்தோம்!
காற்றுத் திரும்பியது கண்டு மகிழ்ந்தோம் - ஒரு
கவிதை பிறந்ததென்று பாடுகுயிலே!

சாதிப் பிரிவினைக்குச் சாட்டை கொடுத்தோம் - தமிழ்ச்
சாதிக்கு மட்டுமிந்த நாட்டைக் கொடுத்தோம்!
வீதிக்கு வீதி மொழி வேட்கை படைத்தோம்! - விடி
வெள்ளி முளைத்ததென்று பாடுகுயிலே!

ஆளப் பிறந்தவர்கள் நாடு சமைத்தோம்! - எமை
ஆட்டிப் படைத்தவர்க்குப் பாடை சமைத்தோம்!
ஈழத் தமிழ்மனைக்குப் பாலம் அமைத்தோம்! - கவி
எண்ணம் பலித்ததென்று பாடுகுயிலே!

எட்டுத் திசைகளிலும் வெற்றி மகிழ்ந்தோம் - விண்ணின்
எல்லைதனிலே கொடிகட்டி மகிழ்ந்தோம்!
கொட்டும் முரசொடுகை தட்டிமகிழ்தோம் - இது
கொள்ளை மகிழ்ச்சி என்று பாடுகுயிலே!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

நில்லடா தம்பி!

முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்!
நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன!
காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்!
தேய்ந்த வீரம் திரும்பி வந்தது!
நில்லடா தம்பி! நெருப்பில் நீநட!
கொல்லும் சாவினைக் கூப்பிட் டழைப்பாய்!
போனாலும் உயிர் போய்த் தொலையட்டும்...
மானம் காத்து மண்டையைப் போடு!
தமிழன் நாட்டைத் தமிழன் ஆளும்
அமிழ்தப் பொன்னாள் இந்நாள் மலர்க!
வெள்ளமே! விரைந்துவா! விடுதலை
கொள்ளும் நாளைக் கொண்டு வருகவே!