நன்கொடை
நன்கொடை என்றதும் இன்றைய சூழலில் பலருக்கு சிம்ம சொப்பனமாக தெரிவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு வழங்கப்படும் பல லட்சங்கள். இதற்க்கு காரணமும் நம்மைப் போன்ற பெற்றோர்கள் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம், குறிப்பிட்ட பள்ளி அல்லது கல்லூரியில் தான் தனது பெண்ணோ ஆணோ சேர்ந்து படிக்கவேண்டும் என்று நாம் நினைத்து செயல்படுவதால் ஏற்படுகின்ற பண நெருக்கத்திற்கு நாம்தான் பொறுப்பு,
படிப்பு என்பதை நாம் ஒரு இன்வெஸ்ட்மென்ட் என்று கருதி, இப்போது இதற்க்கு இத்தனை லட்சங்கள் முதலீடாக போட்டால் பின்னால் இருமடங்கு வரவு இருக்கும் என்ற நமது கணக்கு தானே இதற்க்கு முக்கிய காரணம், இதே வகையான பார்முலாவை பயன்படுத்தி கல்லூரி அல்லது பள்ளியை கட்டும் போதே அதற்க்கு முதலீடு செய்பவர்களும், அங்கு வந்து சேரும் மாணவர்களிடம் நன்கொடை என்ற பெயரிலோ அல்லது வேறு வகைகளிலோ வசூலித்துவிட முடிவு செய்துவிடுகின்றனர்.
அரசு பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பிள்ளைகள் படித்தால் ஆங்கிலம் சரளமாகப் பேச தெரியாமல் போய்விடும், படித்து முடித்த பின்னர் வேலைக்குச் செல்லும் போது ஆங்கிலம் சரளமாக பேச இயலாத காரணத்தால் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதற்காக தனியார் பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பது என்று பலர் முடிவு செய்கின்றனர், இதனால் தனியார் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் கேட்கப்படும் நன்கொடைத் தொகை எத்தனை லட்ச்சமென்றாலும் கடன் வாங்கி கூட அதே பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டபடுவதும் வழக்கமாக உள்ளது.
இன்னொரு வகை நன்கொடைவசூல்:>
இப்போது எங்கு பார்த்தாலும் ஏழை குழந்தைகள், மாணவ மாணவியருக்கும், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் தொண்டு செய்வதாக பல தனியார் சேவை நிறுவனங்கள் என்றப் பெயரில் நன்கொடைகள் கேட்டு பலவிதமான விளம்பரம் காண முடிகிறது, இவற்றில் எத்தனை பேர் உண்மையாக பயனடைகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகவே இருந்து வருகிறது, இனி பிச்சை எடுக்க அனுப்புவதில் சிக்கல், வேலைக்கு அனுப்பினாலும் இளம் தொழிலார்கள் வேலைக்கு அனுப்பக் கூடாது என்பதில் சிக்கல் என்று மக்கள் உண்மை நிலையை அறிந்துள்ளதால், ஏழைகளுக்கு சேவை செய்கிறேன் என்று புதிய வசூல்காரர்கள் ஒரு தொழிலாக்கி வருவது வருந்தத்தக்க சமுதாய பின்னடைவாகவே நான் கருதுகிறேன்.
நன்கொடை வசூலிக்கும் அத்தனை தனியார் தொண்டு நிறுவனங்களும் ஏமாற்றுகாரர்கள் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், இதில் நிறைய ஏமாற்றுகாரர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம். நன்கொடை வழங்குவதற்கு முன்னாலும் பின்னாலும் நன்கொடை வழங்குபவர்கள் இதைப் பற்றி நன்கு அறிந்த பின்பு செயல்படுதல் நலம். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் மொத்தமாக விடிவு காலம் இன்னும் பிறவாதிருப்பது துரதிஷ்டவசமானதே, அவர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.