காதலர் தினம்
அம்மாதினம், அப்பாதினம், ஏய்ட்ஸ்தினம் இன்னும் எத்தனையோ தினங்களின் அறிமுகம் சில ஆண்டுகளாக நமது நாட்டிலும் பேசப்படுவது பல அயல்நாட்டின் புதியவரவுகளில் ஒன்றாகவே உள்ளது. கல்யாணநாள், பிறந்த தினம் கொண்டாடுவது கேக் வாங்கி அதன் மீது மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து பின்னர் நண்பர்களுடன் அதை ஊதி அணைத்து 'ஹாப்பி பர்த்டே டு யு' என்று ஆங்கிலத்தில் எல்லோரும் பாடி கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவரின் வாயில் ஊட்டி விடுவது அதைவிட அலாதியான விஷயம் சிலரது திருமணத்தில் கூட கேக் வெட்டி அயல்நாட்டைப் போல கொண்டாடுவது சகஜமாகிவிட்டது.
அதே பர்த்டே கொண்டாடுபவர் இன்னும் சற்று மேலே போய் விஸ்கி பிராந்தியோடு 'பார்ட்டி' கொண்டாடுவதும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது . இதில் கலாச்சார சீரழிவு என்று எதை எதிர்க்க வேண்டும்? சிலர் காதலர்தினத்தை எதிர்த்து 'நமது கலாச்சார சீரழிவு' என்று கூட்டம் கூடி கோஷமிடுவதை பார்க்கும் போது, பர்த்டே பார்ட்டியை விஸ்கி, பிராந்தியுடனும், இன்னும் ஏதேதோ விதமாக கொண்டாடுபவரை கலாச்சார சீரழிவு என்று கோஷமிட்டு ஏன் எதிர்க்க முடியவில்லை?
கலாச்சார சீரழிவை பற்றி கவலைபடுவதாக தோன்றவில்லை, அயல்நாட்டிலிருந்து ஏற்றுகொண்ட புதிய பழக்கத்தை எதிர்க்கவில்லை, ஒரு கிறிஸ்த்தவ வாலன்டைன் என்ற பாதிரியார் அதற்கு முக்கிய காரணம் என்பது தான் இவர்கள் எதிர்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கலாச்சார சீரழிவை பற்றியும் சமுதாய சீர்கேடுகளை பற்றி கவலை கொள்ளுபவர்கள், அல்லது கலாச்சாரத்தை கட்டி காக்க பாடுபடுபவர்கள் எதிர்க்க வேண்டிய நிகழ்வுகள் ஏராளமாக உள்ளது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு காதலர்தினத்தை மட்டும் எதிர்ப்பது ஏன்? காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை அவரவர் தெரிவு செய்யவேண்டும்,
நடு வீதியில் தீபாவளி பட்டாசை சரம் சரமாக கொளுத்தி போடுபவர்கள் வீதியில் போவோர் வருவோரை பற்றி கவலைப்படுவதே கிடையாது, அருகில் நிற்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பற்றி அக்கறை கொள்வது இல்லை, அதைவிட மிக மோசமான விஷயம் அருகில் மருத்துவமனையோ முதியோர் இல்லமோ இருப்பதை பற்றி நினைவே இருப்பது கிடையாது, வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நோயாளிகளைப் பற்றிய கவலை கிடையாது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட இவர்கள் சமுதாய சீரழிவைப் பற்றி கவலை கொள்கிறார்கள் என்றால் சற்று சிந்திக்க வேண்டியதாகிறது. சமுதாயத்தை சீரழிக்கும் எத்தனையோ விஷயங்கள் நாட்டில் ஏராளமாக இருக்கும் போது காதலர் தினம் அனுசரிப்பது பற்றி கவலைபடுபவர்களை செய்திகளிலும் ஊடகங்களிலும் காணும் போது நகைச்சுவையை கண்டது போன்ற உணர்வுதான் தோன்றுகிறது. ஆனால் இவர்களை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.