என் வீட்டு பக்கத்தில் இருந்தது
பேர் தெரியா மரம் ஒன்று
யார் விதைத்த விதையில் மலர்ந்ததென்று
யாருக்கும் அறியேன்
வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்
பள்ளி சென்று திரும்புகையில் யாரையோ
தொலைத்து தேடும் குயிலின் ஓசை
எனக்கு ஒரு வரவேற்பு கவிதை தரும்
பேர் தெரியா மரத்தில் ஊஞ்சல் கட்டி
தோழர்களுடன் கொஞ்சி அதில் விளையாடிய
நாட்கள் இன்னும் நிற்காமல் ஆடுகிறது
என் நெஞ்சில்
அதனால் அதற்கு பெயர் வைத்தேன் ஊஞ்சல்மரம்,
இதுவும் காய் காய்க்கும், பழுக்கும் , தரையில் விழுந்து
அழுகும் தீண்டுவார் யாருமிலர்
அதற்காய் அமமரம் கவலைகொண்டதாய் நினைவில்லை
வெயிலுக்கு நிழலும் தரும்,
மழைக்கு குடையாயும் மாறும்
சூறாவளி காற்றில் வீட்டின் கூரைகள்
பட்டம் போல் பறந்த பின்
பலநாள் எங்களுக்கு அடைக்கலம்
கொடுத்தது இம்மரம்
எத்தனை இன்னல்கள் வந்தபின்னும்
அசராது நிலைத்து நிற்கும் வித்தையை
எங்களுக்கு கற்றுத்தந்த போதிமரம்
இதுவரை யாருக்கும் இடையூறாய்
நிற்காத இம்மரம்
சாலை விரிவாக்கத்திற்கு
இடையூறென்று சொல்லி இதோ
அதை வேரறுக்க ஒரு கூட்டம்
அதன் நிழலில் நின்று திட்டம் தீட்டுகிறது
பாலை குடித்து அதை கள்ளென்று
பிதற்றும் ஒரு மூடர்கூட்டங்கள்
எண்ணியதுண்டா?
அடுத்த தலைமுறை
வெயிலுக்கு எங்கு இளைப்பாறும்
குழந்தைகள் எங்கு ஊஞ்சலாடும்
காகங்கள் எங்கு கூடு கட்டும்
இதுபோல் ஒரு மரம் வளர
எத்தனை ஆண்டுகள் ஆகுமோ
இதோ சிறுது நாட்கள் தங்கிய
காகம் இம்மரத்தின் விதையை கவ்வி
பறந்து செல்கிறது மனிதர்கள்
இல்லா இடம் நோக்கி விதைக்க
மனிதா ,இயற்கையை அழிக்கும் நீ
அதை உருவாக்குவது எப்போது ?
****ஜோக்கர் ****