ஒளவையார் அருளிய
கொன்றைவேந்தன்
ந.மு. வேங்கடசமி நாட்டாரவர்களின் உரை
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வ னடியிணை
என்று மேத்தித் தொழுவோ மியாமே.
(பதவுரை) கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய,வேந்தன் - சிவபெருமானுக்கு, செல்வன் - குமாரராகிய விநாயகக்கடவுளுடைய, அடி இணை - பாதங்களிரண்டையும், யாம் - நாம்,என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் -வணங்குவோம்.
(பொழிப்புரை) சிவபெருமானுக்குத் திருக்குமாரராகிய விநாயகக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்குவோம். (ஏ - ஈற்றசை)
-----------------------------------------------------------------------------------------------------
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(பதவுரை) அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன் - முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவார்.
(பொழிப்புரை) தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார்.
----------------------------------------------------------------------------------------------------
2. ஆலயம் தொழுவது சாலவு நன்று
(பதவுரை) ஆலயம் - கோயிலுக்குப்போய், தொழுவது -கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும், நன்று - நல்லது.
(பொழிப்புரை) கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது
---------------------------------------------------------------------------------------------------------
3. இல்லற மல்லது நல்லற மன்று
(பதவுரை) இல்லறம் - (மனையாளோடு கூடிச் செய்யும்) இல்லறமானது, நல் அறம் - நல்ல அறமாகும்; அல்லது - இல்லற மல்லாத துறவறமானது, அன்று - நல்ல அறமன்றாகும்.
(பொழிப்புரை) வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச் செய்யும் இல்லறமே நல்லறமாகும்; துறவறம் நல்லறமன்று. (இல்லறம் எளிதிற் செய்யத் தகுந்தது. துறவறம் எளிதிற் செய்யக் கூடாதது.).
-------------------------------------------------------------------------------------------------------
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
(பதவுரை) ஈயார் - கொடாதவருடைய, தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், கொள்வர் - அபகரிப்பர
(பொழிப்புரை) வறியவர்க்குக் கொடாத உலோபிகள் தேடிய பொருளைத் தீயோர் அபகரித்துச் செல்வர்.
---------------------------------------------------------------------------------------------------------
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
(பதவுரை) உண்டி - உணவு, சுருங்குதல் - குறைதல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.
(பொழிப்புரை) மிதமாக உண்பது மாதர்களுக்குச் சிறப்பாகும்.
---------------------------------------------------------------------------------------------------------
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
(பதவுரை) ஊருடன் - ஊராருடன், பகைக்கின் - (ஒருவன்)விரோதித்தால், வேருடன் - (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான்.
(பொழிப்புரை) ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக்கொண்டால் அடியுடன் அழிந்துவிடுவான்.
--------------------------------------------------------------------------------------------------------
- 7. எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்
(பதவுரை) எண்ணும் - கணிதநூலும், எழுத்தும் - இலக்கணநூலும், கண் எனத் தகும் - (மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும்.
(பொழிப்புரை) கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத்தகும்.
-----------------------------------------------------------------------------------------------------------
8. ஏவா மக்கண் மூவா மருந்து
(பதவுரை) ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுதற்குமுன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள், மூவாமருந்து - (அப்பெற்றவருக்கு) தேவாமிர்தம் போல்வார்.
(பொழிப்புரை) பெற்றோர்கள் கட்டளை யிடுவதற்குமுன் குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவாமிர்தத்தை யொப்பார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
9. ஐயம் புகினுஞ் செய்வன செய்
(பதவுரை) ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும், செய்வன -செய்யத்தக்கவைகளை, செய் - (விடாது) செய்
(பொழிப்புரை) பிச்சையெடுத்துச் சீவித்தாலும் செய்யத்தக்க காரியங்களைச் செய்.
---------------------------------------------------------------------------------------------------------
10. ஒருவனைப் பற்றி யோரகத் திரு
(பதவுரை) ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப்) பற்றிக்கொண்டு, ஓரகத்து - ஓரிடத்தில், இரு - வாசம் பண்ணு.
(பொழிப்புரை) தக்கான் ஒருவனைத் துணையாகப் பற்றிக்கொண்டு ஓரிடத்தில் வாசஞ்செய்