Author Topic: சைவத் திருமணச் சடங்கு  (Read 4770 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சைவத் திருமணச் சடங்கு
« on: December 12, 2012, 02:23:43 AM »
சைவத் திருமணச் சடங்கு



'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #1 on: December 12, 2012, 02:26:49 AM »
பொன்னுருக்கல்



பொன்னுருக்கலில் நடுவில் தங்க நாணயமும் உமியின் மேல் சிரட்டைக் கரி இருக்கின்றது


திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.

மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.

திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.
பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #2 on: December 12, 2012, 02:27:40 AM »
கன்னிக்கால் ஊன்றல்

இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்றவேண்டும். அதற்கு இப்போது கலியாண முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றலாம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்யவேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #3 on: December 12, 2012, 02:28:53 AM »
முளைப்பாலிகை போடல்




பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்கவேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.

முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.
நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #4 on: December 12, 2012, 02:31:16 AM »
பந்தல் அமைத்தல்


பந்தல்

முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப்பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறைவழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.
திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.
வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்டவேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப்படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.

1 விநாயகர்
2 ஓமகுண்டம்
3 அரசாணி
8 சந்திர கும்பம்
9 அம்மி
10 7 ஈசானமூலை – சுவாமி அம்பாள்
11 மஞ்சள் பாத்திரம் – மோதிரம் போட்டெடுத்தல்


அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும் (4, 5, 6, 7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #5 on: December 12, 2012, 02:31:42 AM »
மணமகன் அழைப்பு

திருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறைவைக்கவேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.

கடுக்கண் பூணல்


முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.


தலைப்பாகை வைத்தல்


மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பார்.
« Last Edit: December 12, 2012, 02:33:22 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #6 on: December 12, 2012, 02:37:20 AM »
மணமகன் புறப்படுதல்

வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடைமுறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்தவேண்டும்). தோழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்கவேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும்போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் செல்வர்.


பலகாரத் தட்டம்

அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை.

தேங்காய்த் தட்டம்

3 முடியுள்ள தேங்காய்களுக்குச் சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும்.

கூறைத்தட்டம்

ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, ப்வுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்கவேண்டும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #7 on: December 12, 2012, 02:39:02 AM »
பெண் புறப்படுதல்

பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். மணப்பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.
அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #8 on: December 12, 2012, 02:40:18 AM »
மாப்பிள்ளை அழைப்பு

மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண்வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார்

(கும்பத்திற்கு வலது பக்கம்).

மணமகன் மணவறைக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு புரோகிதரின் தலைமையில் நடைபெறும்.

கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.

பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணியப்படுகின்றது. பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளிந்து அதனைப் பருகும்படி மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்யப்படுகின்றன. இதனை புண்ணியாகவாசனம் என்பர்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #9 on: December 12, 2012, 02:41:20 AM »
அரசாணிக்கல்

முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்ப
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #10 on: December 12, 2012, 02:42:13 AM »
அங்குரார்ப்பணம்

வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமையவேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #11 on: December 12, 2012, 02:45:53 AM »
இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)


தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.
இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #12 on: December 12, 2012, 02:47:30 AM »
மணமகளை அழைத்தல்

மணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின்னர் இருவரின் பெற்றோர்களை அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #13 on: December 12, 2012, 02:49:12 AM »
கன்னிகாதானம்

மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சைவத் திருமணச் சடங்கு
« Reply #14 on: December 12, 2012, 02:52:33 AM »
தாலி கட்டுதல்


கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.

தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து (9, 11, ....) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாணயமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.