FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: எஸ்கே on November 04, 2021, 09:34:18 PM
-
🍃குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா?
🌼விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே
-
🍃* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?
🌼நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றே புரியவில்லை.
கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.
-
🍃* எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோயிலில் நடலாமா?
🌼இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.ஆனால் வீட்டீல் நிறைய காலி இடம் இருக்க வேண்டு இல்லை என்றால் வளர்க்க கூடாது.
-
🍃** வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை.
🌼வீட்டில் சாமி சிலைகளை ஐந்து அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம்.
-
🍃* பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம)சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா?
🌼பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது.
-
🍃* கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா?
🌼உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும்.
-
🍃கோயில்களில் கொடுத்த பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போடுவது சரிதானா?
.
🍃ஒருமுறை சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு எடுக்கப்படும் மாலைக்கு “நிர்மால்யம்’ என்று பெயர். நிர்மால்ய மாலைகளை வேறு தெய்வத்திற்குச் சாத்துதல் கூடாது.
-
🌼* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா?
🍃சுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு.
-
* அபிஷேகம் செய்யும் பொருட்களுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உள்ளதாகக் கேள்விப்பட்டேன் விளக்கம் தரவும்.
பொதுவாக இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தரவல்லது. இப்பிறவியில் பாவமே செய்யவில்லையே என்று கேட்கலாம். போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலன் தான் இப்பிறவியாகும். அப்போது செய்த பாவங்களின் பயனாய் இப்பிறவி வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுகின்றன. இவை நீங்கி இன்பமாய் வாழ சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிக உத்தமமாகும்.
தண்ணீர் அபிஷேகம் பாவம் நீக்கும். எண்ணெய் தரித்திரம் நீக்கும், பால் ஆயுள் விருத்திக்கு உதவும். தயிர் நோய் நொடிகளைப் போக்கும், பஞ்சாமிர்தம் வம்சவிருத்தியை உண்டாக்கும். விபூதி நல்லறிவைத் தரும். பழவகைள், இளநீர் பித்ரு சாபத்தை நீக்கும். சந்தனம், பன்னீர் லட்சுமி கடாட்சம் உண்டாக்கும்.
-
* துளசி இலைகளை சில குறிப்பிட்ட நாட்களில் பறிக்கக் கூடாது என்பதன் காரணம் என்ன?
வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகா விஷ்ணுவும் வசிக்கிறார்கள். திங்கட்கிழமை அதாவது சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே, அன்றைய தினம் வில்வம் பறிப்பதில்லை. அதுபோல சனிக்கிழமை ஏகாதசி திருவோணம் போன்ற நாட்கள் மஹாவிஷ்ணுவிற்கு உகந்தவை. எனவே இந்நாட்களில் துளசி பறிப்பதில்லை.
-
* குங்குமத்தை எந்த விரலால் இட வேண்டும்?
வலது கை மோதிர விரலால் இட்டுக் கொள்ள வேண்டும். கட்டை விரலால் இட்டுக் கொண்டால் பணவிரயமும், ஆள்காட்டி விரல் சந்ததிக் குறைவையும், பெருவிரல் பயிர் தான்யக் குறைவையும், சுண்டு விரல் புகழ் குறைவையும் ஏற்படுத்தும். மோதிர விரல் சகல சம்பத்துக்களையும் அளிக்கும்.
-
* ருத்ராட்சத்தை எல்லோரும் அணிவது முறை தானா?
ஒழுக்கமாகவும், தூய்மையாகவும் இருப்பவர்கள் மட்டுமே இதை அணியலாம்.
-
ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன?
பதில் : ஸ்ருதி – நிலையானது. ஸ்மிருதி – காலத்துக்கேற்ப மாறுவது. ஸ்ருதி – அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும், ஸ்மிருதி – அந்த தத்துவங்களையொட்டி காலத்துக்கேற்ப ஏற்படுத்தப்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக்காலத்துக்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. ஸ்ருதியாக வேதங்கள், உபநிஷத்துகள் இருக்கின்றன.
-
ஹிந்துத்துவம் என்பது என்ன?
பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.
-
கடவுள் மேல் பற்றில்லாதவன் ஹிந்துவாக இருக்கமுடியாதா?
பதில் : இருக்கலாம். இந்து மதம் தரும் எல்லையில்லா சுதந்திரத்திற்கு இன்னுமொரு அடையாளம் இது. மற்ற மதங்களில் கடவுள் மற்றும் கடவுளின் தூதராக, மகனாக தங்களை சொல்லி மதத்தை உருவாக்கியவர்களை நம்பாதவர்கள், பற்றாதவர்கள் அந்த மதத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் அப்படி எந்த தடையும் இல்லை. இயல்பாக இருக்கும் எவரும் இந்துவே.
-
கிருஷ்ண துவைபாயண வியாசன் என்பவர் யார்?
பதில் :
“கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்ற முறையில் அது வியாசன் என்ற கிருஷ்ணன் துவைபாயனனால் இயற்றப்பட்டது என்று கொள்ளுவது அறிவுலக வழக்கம். கிருஷ்ண துவைபாயனன் மகாபாரதத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். அவர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பிதாமகன். கிருஷ்ணனுக்கு மிகவும் வயதில் மூத்தவர். அவர் பாரதபோர் முடிந்த பிறகு மகாபாரதத்தை எழுதினார் என்பது ஒரு காவிய உருவகம். ஆனால் மகாபாரதம் அதன்பிறகும் பல தலைமுறைக்காலம் நீண்டு ஜனமேஜயன் காலகட்டம் வரை வருகிறது. அப்படியானால் கிருஷ்ண துவைபாயன வியாசன் எத்தனைகாலம் வாழ்ந்தார் – நம் புராணமரபின்படி அவர் மரணமற்றவர் சிரஞ்சீவி. அதை அப்படியே ஏற்பது ஒரு வழி. தர்க்கபூர்வமாக பார்த்தால் வேறுசில ஊகங்களுக்கு வரமுடியும்.”
-
ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?
பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.
-
புண்ணியம் – பாவம் என்பது என்ன?
பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.
மகாபாரதம் கூறுகிறது –
ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |
ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||
“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”
-
சுவர்க்கம், நரகம் என்பது என்ன?
பதில் : நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளே சுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில் துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறு நமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவே சுவர்க்கம், நரகம்.
ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களை மிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம் சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டது செய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி – மத பாகுபாடெல்லாம் கிடையாது.
மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது. அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை, நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம் என்பதே இந்துமதம் சொல்வது.
எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம் அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் – நரகம் எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலான இந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.
-
பதஞ்சலி யோகத்திற்கும் இந்து மதத்திற்கும் ஆன்மிகத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்கிறார்களே. பதஞ்சலி யோகம் என்பதுதான் என்ன? உண்மையில் அதற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லையா?
பதில் : இந்து மதத்தின் சுதந்திரத்தை புரிந்து கொள்ளாதவர்களின் கூற்று இது. பதஞ்சலி யோகம், இந்து மதம் அளிக்கும் ஆன்மீக சுதந்திரத்தின் விளைவாக உள்ளாழ்ந்து ஆன்மீக வழிமுறைகளை, பயிற்சிகளை கண்டு அதை தொடந்து வாழையடிவாழையாக மேம்படுத்திய ஒரு பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடு. பதஞ்சலியின் யோகமுறைகள், தந்திர சாஸ்திரம், அந்த யோக முறைகளின் அடிப்படையில் எழுந்த ஆலய வழிபாடு என்று ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட முறைகள் இந்து மதத்தின் பல்வேறு அங்கங்களாக இருக்கின்றன.
இவற்றிலிருந்து யோகத்தை மட்டும் பிரித்தெடுத்து அதற்கு தனியே வர்ணம் பூசி, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முற்படுவது அப்பட்டமான அபகரிப்பு. நமது மஞ்சளை, மூலிகைகளை, பல தலைமுறைகளாக பயிற்சி செய்து கண்டுபிடித்த வைத்திய முறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்து, மார்கடிங் செய்து லாபம் ஈட்டி அந்த பொருளாதார வலுவால் பூர்வகுடிகளை அழிப்பதுபோல, சில அந்நிய மதங்கள் உலகெங்கும் பூர்வகுடி மதங்களின் கடவுள்களை, வழிபாட்டு முறைகளை அபகரித்து அந்த அபகரித்த ஆன்மீக முறைகளை தமதாக்கி அவற்றின் மூலமே பூர்வகுடி வழிபாட்டு முறைகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கின்றன. இந்த அபகரிப்பு முறையின் ஒரு பகுதியே இந்து மதத்திலிருந்து யோகத்தை பிரிக்க முயலும் முயற்சிகள்.
-
ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?
பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.
-
தர்மம் என்பது எது?
பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்
-
ஏழைகள் பசியில் வாட, ஹிந்துக்கள் கோவிலில் மட்டும் நகையாகவும், பணமாகவும் குவிக்கலாமா? கோவில்களுக்கு ஏன் காணிக்கை செலுத்த வேண்டும்? அதனால் பயன் என்ன? அதற்கு பதிலாக கோவில் பணத்தை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு உதவினால் என்ன?
பதில் : கோவில்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்கு கொடுப்பது சாலச்சிறந்தது. ஆனால், எவருக்குமே கொடுக்காமல் இருப்பதைவிட கோவில்களுக்கு கொடுப்பது மேல். குறைந்த பட்சம், ஒரு சக்தி மேலே இருக்கிறது என்பதையாவது இந்த சுயநலமிகள் ஏற்கின்றனர் இல்லையா.
-
கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா?
கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் தொடர வேண்டும். கோயிலில் தெய்வத்தைத் தரிசித்த பிறகு அங்கு அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால், தெய்வம் நமக்குக் கூறுவது என்ன என்று விளங்கும்.
நாம் தெய்வத்தை வழிபட்டால் மட்டும் போதாது. தெய்வத்தின் பதிலுக்கும் நாம் அமைதியாகச் செவிசாய்க்க வேண்டும் என்பது இந்த வழக்கத்தின் நோக்கமாகும்.
ராமகிருஷ்ணர் தீர்த்த யாத்திரையைப் பற்றித் தெரிவித்த ஒரு கருத்து, உங்கள் கேள்விக்கும் ஓரளவு பொருந்துவதாக இருக்கிறது.
ராமகிருஷ்ணரின் அந்த உபதேசம் வருமாறு.
"வயிறு நிறையப் புல்லைத் தின்ற பசு, ஓர் இடத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டு அசைபோடுகிறது. அதுபோலவே, தீர்த்த யாத்திரைக்கு நீ சென்று வந்தால் அந்த அந்தத் தெய்வீகத் தலத்தில் உன் மனதில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனி இடத்தில் உட்கார்ந்து அவற்றிலேயே ஆழ்ந்து போகவேண்டும். அவ்விதமின்றி அங்கிருந்து வந்ததும் அந்த எண்ணங்கள் உன் மனதை விட்டு அகன்றுபோகும்படி நீ உலகியல் விவகாரங்களில் தலையிடுவது கூடாது."
-
இறைவனைப் பூஜிப்பதற்கு எந்த எந்தப் பூக்களைப் பயன்படுத்தக்கூடாது? எந்த எந்த நேரங்களில் கோயிலுக்குப் போகக்கூடாது?
வாசனை இல்லாத பூக்களையும் மகரந்தமில்லாத பூக்களையும் பூஜைக்கு உபயோகிக்கும் வழக்கமில்லை. கோயிலில் சந்நிதி திறந்திருக்கும் நேரங்கள் அனைத்தும் கோயிலுக்குப் போவதற்கு உரிய நேரங்கள்தான்.
-
முக்கியமாகக் கோயில்களில், பல விதமான தீபங்களை சுவாமிக்கு ஆராதனையின்போது காட்டுகிறார்கள். அதன் கருத்து என்ன?
தீபாராதனையில் வரிசையாக அலங்கார தீபம், ஐந்து தீபம், மூன்று தீபம், ஒரு தீபம், முடிவில் கற்பூர தீபம் என்று தீபங்களைக் காட்டும் வழக்கம் இருந்துவருகிறது. பலவாகக் காணும் உலகம், ஐம்பூதங்களில் ஒடுங்கி, அது முக்குணங்களில் ஒதுங்கி, அதுவும் ஒன்றுபட்டு, முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து, கற்பூரம் போல் நிர்க்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பது கருத்து.
-
திருவிளக்கிலுள்ள சுடரை நாம் குளிரச் செய்யலாமா அல்லது தானாக குளிரவேண்டுமா?
திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. வேங்கடாசலபதி பூஜையின்போது நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. அப்போது பூஜை முடிந்ததும் நெய் தீர்ந்து தானாகவே சுடரைக் குளிரச் செய்வதுண்டு. இவ்விதம் தானாகச் சுடரைக் குளிரச் செய்வதை, `சுவாமி மலை ஏறுகிறார்' என்கிறார்கள்.
பூஜைக்குப் பயன்படுத்திய பூவினாலும் (நிர்மால்யம்) சுடரைக் குளிரச் செய்யலாம். குளிரச் செய்யப்பெற்ற தீபங்கள் தங்களுக்குள், `எனக்குப் பூ கொடுத்தார்கள், உனக்கு என்ன கொடுத்தார்கள்?' என்று, ஒன்றை ஒன்று விசாரித்துக்கொள்கின்றன என்று ஒரு கதை சொல்வார்கள்.
இவையெல்லாம் திருவிளக்குச் சுடரை வாயினால் ஊதி அணைக்கக்கூடாது அல்லது வெறுங்கையினால் அணைப்பது கூடாது என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எழுந்த கதை என்று நாம் கொள்ளலாம்.
-
கோயிலுக்குச் சென்றால், மூன்று தடவை பிரதட்சணம் வரவேண்டும்' என்று சிலர் சொல்கிறார்கள். அவ்விதம் சொல்வதற்கு என்ன காரணம்?
கோயிலுக்குச் செல்லும் நாம் சொல், செயல், சிந்தனை மூன்றினாலும் இறைவனிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும். இந்தக் கருத்தில் அமைந்த ஒரு வழக்கத்தையொட்டி, நாம் ஆலய வழிபாட்டில் மூன்று தடவைகள் பிரதட்சணம் செய்கிறோம்.
-
தமிழ்நாட்டுக் கோயில்களில் போலன்றி வடநாட்டில் மூலவரைப் புகைப்படம் எடுக்கிறார்கள். அதை அட்டைப் படமாகப் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வெளியிடுகிறார்கள். வடநாட்டுக் கோயில்களுக்கும் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் இந்த வேறுபாடு இருப்பது ஏன்?
தமிழ்நாட்டுக் கோயில்களில் மூலவர் விக்கிரகத்தைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. உற்சவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். தமிழ்நாட்டின் சில கோயில்களில், ஓவியர்கள் வரைந்த மூலவர் படங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மற்றபடி கோயிலில் இருக்கும் அதே மூலவர் படங்களை அச்சிட்டு விற்பனை செய்வதில்லை.
மூலவர் உலகம் என்ற மரத்தின் வேர் போன்றவர். உற்சவர் அந்த மரத்தின் மலர், காய், கனி போன்றவர். வேரை இருக்கும் இடத்தை விட்டு அசைத்தால் மரம் உலர்ந்து போகும். மலர், காய், கனிகளை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோகலாம்.
மூலவரை அவர் இருக்கும் இடத்தில்தான் தரிசிக்க வேண்டும். அவரைக் கோயிலுக்குச் சென்று தரிசிக்காதவர்களுக்கும்கூட அருள் புரிவதற்காக, அவர் உற்சவமூர்த்தி வடிவத்தில் வீதியில் வருகிறார். மூலவர் வடிவம் ரகசியம். உற்சவ வடிவம்தான் பிரகடனம் என்பது தமிழ்ப்பண்பு.
தென்னிந்தியாவில் பழமையான கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு விக்கிரக ஆராதனையும் ஆகமத்தில் கூறியபடி நடந்துவருகிறது. வட இந்தியாவில் இஸ்லாமியர்களின் படையெடுப்புக்களால் பழைய கோயில்கள் சிதைந்து போய், ஆராதனை முறைகளும் பல இடங்களில் சாஸ்திரப்படி இல்லை. அதுதான் வேறுபாட்டிற்குக் காரணம்.
-
மனித வாழ்க்கையின் இலட்சியம் என்ன?
மறைமுகமாகச் சொன்னாலும், வெளி ப்படையாகச் சொன்னாலும், சுருக்கமாகச் சொன்னாலும், விளக்கமாகச் சொன்னாலும், நேரடியாகச் சொன்னாலும், சுற்றி வளைத்து சொன்னாலும் மனித வாழ்க்கையின் இலட் சியம் ஆத்மஞானம் பெறுவதும், உலகிற்கு நன்மை செய்வதுமே ஆகும்.
நூலோர் கூறியவற்றில் தலைசிறந்து விள ங்குவது `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' - இது பொருளுக்கு மட்டுமின்றி அருளுக்கும் பொருந்தும்.
-
பூஜையின்போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.
உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம்.
-
இறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வதான் விளக்கம் என்ன?
பகவத்கீதையில் (9.27) பகவான், "நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், எதைக் கொடுத்துதாலும், எந்தத் தவத்தைச் செய்தாலும் அதையெல்லாம் எனக்கு அர்ப்பணமாகச் செய்" என்று கூறியுள்ளார்.
நாம் உண்ணும் உணவை இறைவனுக்குப் படைப்பதும், நாம் உடுக்கும் துணியை இறைவனுக்கு உடுத்திய பிறகு நாம் உடுத்துவதும், நாட் கட்டும் வீட்டை அவன் கோயிலாகக் கருதுவதும் சிறந்த தெய்வ ஆராதனையாகும்.
நாம் நீராடி மகிழ்வதால் இறைவனுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறோம்.
"உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்கிறார். நம்மாழ்வார். இவை அனைத்தும் உன்னத மனதின் இயல்பான வெளிப்பாடுகள். இந்த ஆராதனை முறை நெடுநாளாக நமது மூதாதையர் கண்ட வழிபாட்டுச் சம்பிரதாயம்.
உலக வழக்கில் நமது மரியாதைக்கு உரியவர்கள், அன்பிற்கு உரியவர்கள், உறவினர்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நாம் ஏதேனும் வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம்', வாங்கியும் கொடுக்கிறோம். அது போன்று எல்லா உறவுகளின் ஒட்டுமொத்தமான உறவினனான (சரியாகச் சொல்லப்போனால், உண்மையில் உள்ள ஒரே உறவினனான) நம் இறைவனோடு, நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் அனைத்தின் மூலமாகவும் நாம் தொடர்புகொள்கிறோம்.
-
தலவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?
விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன என்பதை நினைவில் கொள்க.
-
வாஸ்து படி வீடுகட்டினால் சுபிட்சம் என்கின்றார்களே?
முதலில் வாஸ்து என்பது என்னவென அறிய வேண்டும். எல்லா இடங்களிலும் நில அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மலை பிரதேசங்களில் ஒரு அமைப்பு, பாலைவனங்களில் ஒரு அமைப்பு, கலர் நிலங்களில் ஒரு அமைப்பு என காணப்படுகின்றன. இதனை கணக்கில் கொண்டும் வீட்டில் சூரிய வெளிச்சம் பரவ ஏற்றவாரும் எப்படி வீட்டை அமைப்பது என சொல்வது வாஸ்து. இப்போது வியாபாரமாகிவிட்டதால் பலரும் தவறு செய்கின்றார்கள்.
-
நட்சத்திரம், ராசி , ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா?
உண்மைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானது உழைப்பு மட்டும் தான். கல்லை நம்புவதோ, ஜாதகத்தினை நம்புவதோ உயர்விற்கு பலன் தராது. ஜாதகம் என்பது ஒரு கணக்கீடு, வெகு சிலர் மட்டுமே அந்த கணக்கீட்டில் வல்லுனர்களாக இருந்திருக்கின்றார்கள்.(உலக புகழ் பெற்ற நாஷ்டோடாமஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிரீர்களா) புதிய கோள்கள் கண்டறியப்பட்டும் கூட பழைய முறையை இன்னும் ஜாதகம் பார்ப்பவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் முறையான கணக்கீட்டை அவர்களால் கணித்து கூறுவது கடினம். பெயரை மாற்றுவது, வீட்டை மாற்றுவது, வாகண எண்ணை மாற்றுவது என செய்யாமல் உங்களுடைய கவனத்தினை தொழில் பக்கம் மாற்றினாலே வெற்றி கிடைத்துவிடும்.
-
"சந்தியா வந்தனம்' என்றால் என்ன?
"சந்தி' என்றால் "சந்திப்பு' என்று பொருள். "ஜங்ஷன்' என்கிறோமே அதுபோல. இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் "சந்தி' அல்லது "சந்தியா' என்று பெயர். இம்மூன்று சந்தியா காலங்களில் அனுஷ்டானம் செய்து கடவுள் வந்தனம் செய்வதற்கு "சந்தியாவந்தனம்' என்று பெயர். இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.
-
பிறப்பின் ரகசியம் என்ன... விளக்கம் வேண்டும்.
நமக்குப் பல பிறவிகள் உண்டு என்று நம்பினால் தான், நான் கூறும் ரகசியம் உங்களுக்குப் புரியும். கடந்த பிறவியில் நாம் செய்திருக்கும் செயல்களுக்கான பலனை அனுபவிப்பதற்காக மீண்டும் இப்போது பிறந்திருக்கிறோம். நல்லது நிறைய செய்திருந்தால் இப்பிறவியில் நன்றாக வாழ்வோம். தீயன செய்திருந்தால் துன்பத்துடன் வாழ்வோம். இப்பிறவியில் நிறைய நல்லது செய்வோம். தர்மங்கள் செய்வோம். இப்பிறவியில் கிடைக்காத இன்பங்களை அடுத்த பிறவியிலாவது அடைவோம்.
-
ருத்ராட்சம் அணிய வேண்டிய விதிமுறைகள் யாவை?
விபூதியும், ருத்ராட்சமும் சைவ சமயத்தின் உயர்ந்த சின்னங்கள். சிவனடியார்கள் இவ்விரண்டையும் தம் இரு கண்களாகப் போற்ற வேண்டும். இரண்டுமே சிவபெருமானுடைய அம்சங்கள். எனவே, இறைவன் சன்னதியில் எப்படி பயபக்தியுடன் இருக்கிறோமோ, அதுபோல ருத்ராட்சம் அணிபவர்கள் பய பக்தியுடனும், ஆசாரத்துடனும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்பவர்கள் மட்டும் இதை அணிவது என்று இருந்தது. தற்காலத்தில் ஒரு அணிகலன் போல் எல்லோரும் விரும்பி அணிகிறார்கள். அணிபவர்கள் எல்லோரும் நல்ல பழக்கங்களுக்கு மாறிவிட்டால் நாட்டுக்கு நன்மை தானே!.
-
கோயிலில் பிரசாதமாகப் பெறும் பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு அணிவிக்கலாமா?
சுவாமிக்குச் சாத்திய பிறகு எடுக்கப்படும் பூமாலை நிர்மால்யம் எனப்படும். இறைவனின் திருவருட் பிரசாதமாக நமக்குக் கிடைத்ததை மீண்டும் சுவாமி படங்களுக்கு சாத்தக்கூடாது. ஆனால், முன்னோர்களின் படங்களுக்குச் சாத்தலாம். இதில் தவறில்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம்.
-
நமக்குத் துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறோம். அந்த விதியை எப்படித்தான் தடுப்பது?
துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறீர்கள். இன்பம் ஏற்படும் பொழுது இறையருளால் கிடைத்த இன்பம் என்று யாராவது எண்ணியதுண்டா? இதற்காகத்தான் எப்பொழுதும் "எல்லாம் இறைவன் செயல்' என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால் துன் பத்தைக் கூட மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். வாரியார் சுவாமிகள், ""விதி என்பது மழையைப் போன்றது. அதில் நாம் நனையாமல் காத்துக் கொள்ள தெய்வ வழிபாடு எனும் குடையை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்று எளிமையாகக் கூறியுள்ளார்.
-
புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றால் என்ன?
நமக்குப் பல பிறவிகள் உண்டு. உயிர் என்றும் அழியாதது. நாம் ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வருவது போல நாமும் இப்பூமியில் பிறந்து, பிறந்து இறக்கிறோம். இதைத் தான் "புனரபி' என்கிறார் சங்கரர். புனரபி என்பதற்கு "மீண்டும் 'என்பது பொருளாகும். பூமியில் இருந்து எடுக்கப்படும் தங்கம் தீயில் இடப்பட்டு மாற்று அடிக்கப்பட்ட பிறகே பொன்னிறம் பெற்று ஜொலிக்கும். அதுபோல, உயிர்களையும் கடவுள் பலமுறை பூமியில் பிறப்பெடுக்கச் செய்து இன்பதுன்பம் என்னும் தீயிலிட்டு பக்குவப்படுத்துகிறார். இறுதியில் மோட்சத்தைத் தந்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்.
-
சிவாலயங்களில் கால பைரவர் வழிபாடு பற்றி விளக்கம் கூறவும்?
சிவபெருமான் மூன்று வடிவங்களில் நமக்கு அருள்பாலிக்கிறார். யோக வடிவம், வேக வடிவம், போக வடிவம். பைரவர் வேகவடிவத்தில் அமைந்தவர். எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவர் வழிபாடு அவசியமாகும். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாளாகும்.
-
பிரார்த்தனை, தொண்டு இவற்றில் உயர்ந்தது எது?
பிரார்த்தனை, என்பது தமக்கு நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். எல்லோருக்கும் நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். தொண்டு என்பது பிறருக்கு உதவுவது மாத்திரம் அல்ல. கோயில் வழிபாடும் ஒரு தொண்டு தான். நாயன்மார்களைக் கூட திருத்தொண்டர்கள் என்று தானே சொல்கிறோம். எனவே, மக்களுக்காக இறைத் தொண்டு (பிரார்த்தனை) செய்வதே உயர்ந்தது. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பதில் பிரார்த்தனையும் தொண்டும் இணைந்திருப்பதைப் பாருங்கள்.
-
நரசிம்ம அவதாரத்தை "அவசரத்திருக்கோலம்' என கூறுவது ஏன்?
"அவசரம்' என்ற சொல் "சீக்கிரம்' என்ற பொருளில் மாத்திரம் இல்லை. ஒன்றைப் போல்இருக்கும் மற்றொன்றைக் குறிக்கும் சொல்லாகும். அதாவது ஒரு சுமங்கலிப் பெண் சிவப்பு ஆடை உடுத்தி நிறைய பூ வைத்து பொட்டு வைத்து மங்களகரமாக காட்சி அளித்தால் "அம்பாள் அவசரமாக இருக்கிறீர்கள்' என்று பாராட் டுவது மரபு. "நர' என்றால் மனித வடிவம். "சிம்மம்' என்றால் சிங்கம். முகம் சிங்கமாகவும், உடல் மனித வடிவிலும் இருக்கும் கோலம் நரசிம்மம் என்று பெயர். ஸ்ரீ மஹா விஷ்ணுவை "நரசிம்ம அவதாரம்' என்று சொல்லுவதை "நரசிம்ம அவசரம்' என்றும் சொல்லலாம்.
-
குல தெய்வ வழிபாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
"குலம்' என்றால் "குடும்ப பாரம்பரியம்' என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். குழந்தைகளுக்கு முடி எடுப்பது, காது குத்துவது, திருமணப் பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வ பூஜை செய்வது எல்லாமே நம் குலம் தழைக்கச் செய்யப்படுவதாகும்.
-
""சமாராதனை'' எனும் சொல்லிற்கு விளக்கம் அளிக்கவும்?
அற நெறியில் நிற்பவர்கள் வேதம், பயின்றவர்கள், நமக்கு நல்லறம் போதித்தவர்கள். இவர்களையெல்லாம் தெய்வமாக எண்ணி பூஜிக்க வேண்டும். ஆராதனை என்றால் பூஜை. ஸம்+ ஆராதனை= ஸமாராதனை. ""ஸம்'' என்றால் "சிறந்த முறையில்' என்று பொருள். முன்கூறிய பெரியவர்கள் நம் வீட்டிற்கு வரும் போதோ அல்லது நாம் அவர்களை அழைத்தோ சமாராதனை செய்ய வேண்டும். அவர்களின் பாதங்களைக் கழுவி சந்தனம், குங்குமம் இட்டு மலர்களினால் திருவடிகளில் அர்ச்சனை செய்து சிறந்த முறையில் உணவு அளிப்பதே சமாராதனையாகும். இதனை அடியவர்களுக்கு அன்னம் பாலித்தல், மாகேஸ்வர பூஜை என்றெல்லாம் கூட அழைப்பார்கள். திருநீலநக்கர், சிறுத்தொண்டர் போன்ற நாயன்மார்கள் அடியவர்களுக்கு அன்னம் பாலிப்பதையே தமது ஆயுட்பணியாகக் கொண்டிருந்தார்கள்.
-
ஒரே வயதுடைய ஆணும், பெண்ணும் திருமணம் செய்வது சரியா? தவறா? சாஸ்திர ரீதியாக விளக்கம் கூறவும்?
சில செயல்களைச் செய்தால் ஆயுள் குறையும் என "நீதி சாஸ்திரம் கூறுகிறது' காலை வெயிலில் குளிர்காய்வது, பிணம் எரிக்கும் புகையை சுவாசிப்பது, ஒரு ஆண் தன்னைவிட மூத்தவளை மணப்பது, சுத்தமில்லாத நீரைப்பருகுவது, இரவில் தயிர்சாதம் சாப்பிடுவது என்ற இவ்வைந்தும் ஆயுளைக் குறைக்கும். தங்கள் கேள்விப்படி ஒரே வயது என்றால், நாள் கணக்கிலாவது பெண் வயது குறைவாக இருக்க வேண்டும். ஜாதகப் பொருத்தம் கூறும் நூல்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்த பட்சம் 18 மாதங்களாவது ஆணை விட பெண் வயது குறைவாக இருக்க வேண்டும் எனக்கூறுகின்ரறன.
-
விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது?
"விரதம்' என்ற சொல்லுக்கு "கஷ்டப்பட்டு இருத்தல்' என்று பொருள். நாள் முழுக்க தெய்வசிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது "விரதம்'. "பசி' என்ற நினைப்பு வரும்போதெல்லாம் "தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம்' என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு "உபவாசம்' (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால், பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம்.
-
சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். விளக்கமாக சொல்லுங்கள்.
சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம். விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும்.
-
கடவுளை பயபக்தியுடன் நாம் வழிபாடு செய்கிறோம். ஆனால், எந்த இடத்திலாவது பக்தனைக் கண்டு பகவான் பயந்ததாக வரலாறு உண்டா?
தியாகராஜ சுவாமிகள் ஒருமுறை ராமபிரானிடம் சென்று, தனக்கு மோட்சம் தரும்படி
வேண்டினார். ஞான,கர்ம யோகம் இல்லாத உமக்கு மோட்சம் தரமுடியாது என்று மறுத்துவிட்டார் ராமச்சந்திர மூர்த்தி. எங்கு அப்ளிகேஷன் போட்டால் அவர் பணிவார் என்பதை தியாகராஜ சுவாமிகள் அறிந்திருந்தார். ஒருநாள் சீதாதேவி ராமனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ராமனின் வாய் சிவக்கவில்லை. "என் (மனைவி) மீது பிரியம் இருந்தால் தானே வாய் சிவக்கும்' என்று சொல்லி சிணுங்கினாள் சீதை. இதனால் அவர்களுக்குள் ஊடல் உண்டானது. ஊடலைத் தீர்க்க ராமனே முந்திக்கொண்டார். இதுதான் சமயமென அவரிடம் சீதை,"" என் மீது நிஜமான அன்பிருந்தால் என் குழந்தை தியாகராஜனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்,'' என்றாள் பிராட்டி. பார்த்தீங்களா! மோட்சத்தை தர மறுத்த ராமனிடம், பிராட்டியார் மூலம் சாதித்துக் கொண்டார் தியாகராஜ சுவாமிகள். பக்தனுக்கு பகவான் கட்டுப்பட்டதைப் பார்த்தீர்களா! சீதையை வழிபடுவதன் மூலம் நமது நியாயமான எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும்.
-
உயிர்களைப் படைத்தும் காத்தும் அழித்தும் வருபவர் இறைவன் என்றால், உயிர்களின் பணிதான் என்ன?
""மானிடப்பிறவி தானும் வகுத்தது மணவாக்காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன் பணிக்காகவன்றோ'
என்கிறது சைவ சிந்தாந்தம். உயிர்கள் பரிசுத்தமான பிறகு மீண்டும் இப்பூமியில் பிறந்து துன்பப்படாமல் இறைவனோடு கலந்து பேரின்ப நிலையை அடையலாம். உயிர்கள் பக்குவமடைவதற்கே இறைவன் படைத்தல் முதலாகிய முத்தொழில்களைச் செய்கிறார். உயிர்களின் பணி இறைவனுக்குப் பணி செய்வது தான் என்கிறது அப்பாடல்.
-
ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் பலர் சந்தோஷமாக இருக்கும் போது, திருமணத்திற்கு ஜாதகம் அவசியம் தானா?
முன்பின் அறியாத ஒரு ஆணும், பெண்ணும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். மனம் ஒத்து வாழ்க்கை நடத்துவது, பிள்ளைப்பேறு, அவர்களின் எதிர்காலம் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள வசதியாக இருப்பது ஜாதகம். இருவரின் ஜாதகமும் ஒரே மாதிரியாக இருந்து பொருந்தியிருந்தால் பெற்றோர்களும் கவலையில்லாமல் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். புதுமணத் தம்பதிகளும் மகிழ்ச்சியாக வாழ்வர். இதுவல்லாமல் தாங்களே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பவர்களும், பெற்றோர்கள் அனுமதியுடன் மனப்பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து கெ õள்பவர்களும் உண்டு. இவை ஒரு காரணத்தினால் நிகழ்ந்து விடுகிற காரியம். ""தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு செய்கிறோம்'' என்று பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனேயே சொல்லிக் கொண்டிருப்பர். நிம்மதியாக திருமணம் நிகழ பெரியவர்கள் கூறுகிறபடி ஜாதகம் பார்த்து செய்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சுவாமியுடன் பூ உத்தரவு கேட்டு செய்யலாம். தாங்கள் கேட்பது மூன்றாவது நிலை, தெய்வம் காப்பாற்றட்டும். இவ்வளவு சிரத்தையாகக் கேட்டிருப்பதைப் பார்த்தால் வேறு ஏதோ ஏற்பாடு நடப்பது போல தெரிகிறது. பெற்றோர்களிடம் கூறிவிடுங்களேன்.
-
சுமங்கலிப் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிகிறார்களே! சரியா?
""மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. "தந்து' என்றால் "மஞ்சள் கயிறு' என்று பொருள். "திருமாங்கல்ய சரடு' என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை "விதந்து'என்று குறிப்பிடுவார்கள். அதாவது "மாங்கல்ய கயிறு இல்லாதவள்' என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.
-
மூன்று தலை முறையாக பெருமாள் கோயிலை வழிபடாமல் விட்டுவிட்டோம். இப்போது குழந்தைகளுக்கு முதல் முடி ஏழுமலையானுக்கே எடுத்து வருகிறோம். இனிமேல் பரம்பரை பெருமாள் கோயிலிலேயே வழிபாடு செய்யலாமா?
முதல் முடி எடுப்பது என்பது வேறு. வழிபாடு என்பது வேறு. மூன்று தலைமுறையாக பரம்பரை பெருமாள் கோயிலை வழிபடாமல் இருந்தது தவறு தான். நாள் நட்சத்திரம் பார்க்காமல் உடனே சென்று வழிபாட்டைத் துவக்குங்கள். ராமநாம ஜபத்தை நூறு தடவை எல்லோருமாகச் சொல்லி பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். ஆனால், முதல் முடி எடுப்பது பற்றிய விஷயத்தில் உங்கள் முன்னோர் என்ன செய்து வந்தார்களோ அதையே நீங்களும் தொடரவும்.
-
கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா?
ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.
-
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு வழிபாடு செய்கிறார்களே, சரியா?
திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தனியார் நிர்வாகம் என எல்லாமே ஆங்கில மாதக் கணக்குப்படிதானே செயல்படுகிறது! எனவே ஆங்கில வருடம் என்பது இன்றைய காலத்தில் உலகளாவிய மக்கள் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. அவரவர் மதசமய சம்பிரதாயப்படி ஆண்டுகள் பலவாக பிரிந்திருந்தாலும், புத்தாண்டு தினத்தை வெவ்வேறாகக் கொண்டாடினாலும் பொது நிர்வாகம் என்பது ஆங்கில வருடம் தானே! அதன் துவக்க தினத்தில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தினால் எல்லோருக்கும் நன்மை தான். உற்சவ காலங்களிலும், வழிபாட்டு தினங்களிலும் இரவு அர்த்தயாம பூஜை தாமதமாகச் செய்யப்படுவது சாஸ்திர சம்மதம் தான்.
-
சனிபிரதோஷத்தின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்?
பிரதோஷம் என்பது ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) நித்ய பிரதோஷம், (2) பட்சப் பிரதோஷம், (3) மாச பிரதோஷம், (4) மஹா பிரதோஷம், (5) ப்ரளய பிரதோஷம். "பிரதோஷம்' என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலமாகும். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத்தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதகக் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறை திரயோதசி திதி மாலைப் பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர்.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல ÷க்ஷமங்களும் உண்டாகும். ஐந்தாவதாகிய பிரளய பிரதோஷம் என்பது இந்தக் கலியுகம் முடிந்து அனைத்து உலகங்களையும் சிவபெருமான் தம்மகத்தே ஒடுக்கிக் கொள்வதாகும்.
-
கார்த்திகை மாதத்தில் மாலை நேரத்தில் வாசலில் விளக்கு வைப்பதன் காரணம் என்ன? பிரதோஷ தினத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாமா?
கார்த்திகை மாதம் விளக்கேற்றுவது மிகப்புண்ணியமான செயலாகும். ஆண்டாண்டு காலமாக தமிழர்களின் கலாச்சாரமாகவும் இந்நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஐப்பசி, கார்த்திகை மழைக்கால மாதங்களில் எல்லா ஜீவராசிகளும் சில கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன. இவற்றைப் போக்கும் சக்தி எண்ணெய் தீபத்திற்கு இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனையே திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் தேவாரத்தில் "கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ' என்று பாடியுள்ளார். பிரதோஷ தினத்தில் மற்றைய ஜோதிட விஷயங்கள் ஒத்து வந்தால் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.
-
சர்ப்பத்துடன் இருக்கும் லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்துப் பூஜிக்கலாமா? அதன் விதிமுறைகள் யாவை?
சர்ப்பம் இல்லாத சுவாமி படங்களே இருக்காது. விநாயகர் பாம்பைப் பூணூலாக அணிந்திருக்கிறார். முருகன் மயிலின் கீழ் சர்ப்பத்தை வைத்திருக்கிறார். எனவே, நாகம் என்பது தெய்வங்களின் ஆபரணம் போன்றது. மாரியம்மன் போன்ற தெய்வங்களின் முடி மீது படமெடுத்த நாகம் இருக்கும். சர்ப்பத்துடன் இருக்கும் தெய்வத்தை வழிபடலாமா என்று கேட்டால் எல்லா தெய்வத்திற்கும் இந்த கேள்வி பொருந்தி விடுகிறது. எனவே குழப்பிக் கொள்ளாமல் தாராளமாக வழிபடுங்கள். எல்லா தெய்வத்தையும் போன்றே லட்சுமி நரசிம்மருக்கான ஸ்தோத்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும்
-
சங்கடஹர சதுர்த்தி பூஜையின் மகத்துவம் என்ன?
சதுர்த்தி விநாயகருக்குப் பிரியமான நாள்."சதுர்த்தீ பூஜன ப்ரியாய நம', என்று அவரது சகஸ்ர நாமாவளியில் உள்ளது. வளர்பிறை சதுர்த்தியில் அவரை வழிபட்டால் நல்ல பலன்களை வழங்குவார். தேய்பிறை சதுர்த்தியில் வழிபட்டால் சங்கடங்களைப் போக்கு வார். "ஹர' என்றால் போக்குதல். சங்கடங்களைப் போக்குவதால் சங்கடஹர சதுர்த்தி ஆயிற்று. தேய்பிறை சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி. தேவர்களுக்கு அசுரர்களால் இன்னல் ஏற்பட்ட போது சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து விநாயகரை தேவர்கள் வழிபட்டனர். அவர் மகிழ்ந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். கடன், நோய், வேலையின்மை, திருமணத்தடை, புத்திரப்பேறின்மை போன்ற எல்லா சங்கடங்களையும் போக்க வல்லது சங்கடஹர சதுர்த்தி பூஜை.
-
விடியற்காலை வாசலில் கோலமிடுவதற்கு முன் விளக்கேற்ற வேண்டுமா? அல்லது விளக்கேற்றிய பிறகு கோலமிடுவதா? கோலத்தில் மஞ்சள் குங்குமம் இடலாமா?
வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடாமல் விளக்கேற்றுவது போன்று எதுவுமே செய்யக்கூடாது. காபி கூட சாப்பிடக்கூடாது. அரிசி மாவினால் மட்டுமே கோலம் போட வேண்டும். கோலம் வீட்டிற்கு மங்களத்தைத் தருகிறது. அரிசி மாவை எறும்பு, காகம், குருவிகள் தின்பதால் ஜீவகாருண்யம் என்னும் புண்ணியம் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் அரிசி மாக்கோலமே யாரும் போடுவதில்லை. கலர் பொடிகளை வாங்கிப் போடுகிறார்கள். மஞ்சள் குங்குமம் போன்றவை பூஜைக்குகந்த பொருட்கள். இவற்றைக் காலில் படும்படி கோலத்தில் போடக்கூடாது. அழகுக்காகக் காவிப்பொடி இடுவது தான் தமிழர் மரபு. மார்கழிக் கோலமிடுவோர் அழகுக்காக கலர்ப்பொடி கோலமும், புண்ணியத்திற்காக அரிசிமாவு கோலமும் தனித்தனியாகப் போட வேண்டும்.
-
ராகுகாலம் என்றால் என்ன? வெள்ளியன்று ராகுகாலத்தில் வழிபடுவதால் என்ன பயன்?
கிரகங்கள் ஒன்பதில் ஏழிற்கு ஏழு கிழமைகள் உள்ளன. ராகு, கேதுவுக்கு கிழமைகள் கிடையாது. இதனாலேயே ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என ராகுவிற்காகவும், எமகண்டம் என கேதுவிற்காகவும் அமைந்துள்ளது. ராகுவிற்கு அதிதேவதையாக துர்கையம்மன் இருப்பதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கி திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
-
தனி மனிதப் பிரார்த்தனையை விட கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்கிறார்களே! அதன் மகத்துவத்தைச் சொல்லுங்கள்.
ஒருவரிடம் தனி மனிதனாகச் சென்று உதவி கேட்பதில் எனக்கு கொடு என்றால், கிடைப்பது கடினம், அதையே கூட்டமாகச் சென்று, ""எல்லாரும் கஷ்டப்படுகிறோம். தயவு செய்து கொடுங்கள்,'' என்றால் நமது கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. இதுபோல, இறைவனிடம் தன்னுடைய சுயநலத்திற்காக மட்டும் வேண்டிக் கொள்ளாமல், பிறர் நலம் பேணுகின்ற முறையில் கூட்டுப்பிரார்த்தனையாகச் செய்தால் கண்டிப்பாக அவர் அருள்பாலிப்பார். இதனை "சங்கம வழிபாடு' என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
-
துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றலாமா? விளக்கு ஏற்றும் போது திரியை ஒற்றையாக இடலாமா?
தீபம் ஏற்றுவது என்பது காலம் காலமாக அகல் விளக்குகள் அல்லது வெண்கலம் போன்ற உலோக விளக்குகள் ஏற்றுவதே வழக்கத்தில் இருந்து வரும் ஒன்றாகும். பின்நாளில் சில ஜோதிடர்கள் மற்றும் மாந்த்ரீகர்கள் துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கேற்றும் வழக்கத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். திருமணத் தடையை நீக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாக இன்றும் பல பெண்கள் நம்பிக்கையோடு எலுமிச்சம் பழ விளக்குகளை ஏற்றுகின்றனர். சில விஷயங்கள் நம்பிக்கை அடிப்படையில் நடந்து வருகிறது. திரியை ஒற்றையாக இட்டு விளக்கேற்றலாம்
-
வீட்டில் துளசி செடி வளர்ப்பதற்கு என்று தனி நடைமுறை எதுவும் உள்ளதா?
அதற்கென உயர்ந்த தொட்டியும் விளக்கேற்ற மாடமும் வைக்கவேண்டும். நல்ல மண் போட்டு அதில் துளசிச்செடியை நடவேண்டும். வீட்டு வாசலின் முன்புறம் அல்லது கொல்லைப்புறத்தில் நடைபாதை விட்டு தள்ளி வைக்கவேண்டும். குளிக்காமல் தண்ணீர் விடுவது கூடாது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துளசி ஸ்தோத்தி ரங்களைப் பாராயணம் செய்வது நல்லது. மாலையில் துளசிமாடத்தில் தீபம் ஏற்றி வைப்பது லட்சுமி கடாட்சத்தை இல்லத்தில் உண்டாக்கும். சனிக்கிழமை, அமாவாசை, ஏகாதசி நாட்களில் துளசி இலையைப் பறிக்கக்கூடாது. துளசிமாடம் இருக்கும் இடத்தை விஷ ஜந்துக்களும் அண்டாது
-
நாயன்மார்களில் நந்தனார், சிறுத்தொண்டர், கண்ணப்பர், சண்டிகேஸ்வரர், சாக்கியர் போன்ற பல அடியார்கள் கடுமையான முறையில் சிவன் மீது பக்தி செலுத்தியது ஏன்? இறைவனை அடைய மென்முறை போதாதா?
மேற்கூறிய சிவனடியார்கள் இறைவனை அடையவேண்டும் என்ற குறிக்கோளோடு இப்படிக் கடுமையான வழிகளைக் கையாளவில்லை. இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் இருந்தால் நீங்கள் கூறும் மென்முறையே போதுமானது. இந்நிலை ஒரு குறிக்கோளோடு செய்யப்படுவதாகும். ஆனால், மேற்கூறிய அடியவர்கள் இறைவன் வேறு, தான் வேறு என்று எண்ணவில்லை. நந்தனார் சிதம்பரம் நடராஜப்பெருமானை தரிசிப்பதையே பேரின்பமாகக் கருதினார். சிறுத்தொண்டர் அடியவர்களுக்கு உணவு அளிப்பதையும், கண்ணப்பர் இறைவனின் லிங்கத்திருமேனியைப் பாதுகாப்பதிலும், சண்டிகேஸ்வரர் இறைவனுக்குப் பாலபிஷேகம் செய்வதிலும் பேரின்பம் கொண்டனர். அதாவது, முக்தியின்பம் பெற்றனர். வேறு எந்த குறிக்கோளும் இல்லாத அவர்களின் அன்றாட வாழ்க்கையே பக்தியாகிவிட்டது. அதற்குச் சோதனைக்காலம் வந்தபோது, கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை.
-
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே! உடனே தெய்வம் தண்டிக்காதது ஏன்?
காலம் என்னும் நியதியின் அடிப்படையில் தான் வாழ்க்கை நிகழ்கிறது. நாம் அனுபவிப்பது நல்லதோ, கெட்டதோ அதற்கு மூலமுதற்காரணம் நாம் தான். வித்தில்லாமல் மரம் முளைப்பதில்லை. ஆனால், விதைத்தவுடன் பலன் கிடைப்பதில்லை. அதற்கான காலம் கனிந்தவுடன் மரம் பூக்கிறது. காய்க்கிறது. கனிகளைத் தருகிறது. அதுபோல, நாம் செய்த செயலுக்கான பலனை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இதையே ""தீதும் நன்றும் பிறர் தரவாரா'' என்று நம் முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். காலதேவனின் கணக்கிற்கு எட்டாத விஷயம் எதுவுமில்லை. அவன் கண்ணிலிருந்து யாரும் தப்பமுடியாது. இதையே "எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும்' என்று சொல்வார்கள்.
-
ஒவ்வொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது, தமக்கு வேண்டிய விஷயங்களை மட்டுமே வேண்டுதலாக வைக்கிறார்களே. இது சுயநலமா?
மனிதனுக்குச் சுயநலம் கூடாது என்ற அடிப்படையில் நீங்கள் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். கடவுளுக்குத் துதிப்பவன், துதிக்காதவன் என்ற பேதமில்லை. நீங்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் அவன் இயல்பு அருள்செய்வது தான். சுயநலம் என்பது கூட பொதுநலத்தில் அடங்கிவிடக்கூடியது தான். தனித்தனியாக இருக்கும் குடும்பத்தில் அமைதி இருந்தால் அந்த சமுதாயமே அமைதியாகி விடும் தானே. குழந்தை ஆசைப்பட்ட பொருளை, அம்மாவிடம் கேட்பது போல, மன விருப்பங்களைக் கடவுளிடம் வேண்டிப் பெறுவதில் தவறேதும் இல்லை.
-
ஆண்டிக்கோலத்தில் இருக்கும் பழநி முருகன் படத்தைப் பூஜையறையில் வைக்கக்கூடாது என்கிறார்களே! ஏன்?
பழநிமலை தனித்திருந்து வாழும் தவமணி ஆவார். தியாகத்தின் உச்சநிலை தான் துறவு. வாழ்வில் பொருளை மட்டும் தேடினால் போதாது. அருளையும் தேடவேண்டும் என்பதைக் காட்டுவது தான் தண்டாயுதபாணி ஆண்டிக்கோலம். அரசகோலமானாலும், ஆண்டிக்கோலமானாலும் அவன் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளப்போவதில்லை. ஞானக்கனியான தண்டபாணியை எக்கோலத்தில் வணங்கினாலும் நம் அல்லல் தீர்வது சத்தியம். அருளைத் தருவது நிச்சயம்.
-
லட்சுமி நரசிம்மர் வழிபாட்டில் ஈடுபாடு கொள்கிறது. வீட்டில் வைத்து அவரை வணங்குவது முறைதானா?
ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் ஆகிய மூன்றுமே மகாவிஷ்ணுவின் பூர்ணமான அவதாரங்களே. வீட்டில் தாராளமாக லட்சுமிநரசிம்மரை இஷ்டதெய்வமாக வைத்து பூஜித்து வரலாம். பானகத்தையோ, காய்ச்சிய பசும்பாலையோ வைத்து வழிபட்டு வரவும். கைமேல் பலன் கிடைக்கும்..
-
கோயிலுக்குச் சென்று வந்த உடன்வீட்டில் சிறிதுநேரம் உட்கார்ந்து விட்டு தான் கைகால்களை சுத்தம் செய்யவேண்டும் என்கிறார்களே ஏன்?
கோயில் என்பது ஒரு புனிதமான இடம். அதனை வலம் வந்த கால்களிலும், இறைவனைக் கூப்பி வணங்கியதால் கைகளிலும் தெய்வசக்தியானது பரவியிருக்கும். கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தவுடன் வீட்டில் உட்காரும் போது இல்லத்தில் தெய்வீகசக்தி நிறைகிறது. இதனால் தான் கோயிலுக்குச் சென்றுவந்தவுடன் அமர்ந்து சிறிது தண்ணீராவது பருகவேண்டும் என்று பெரியோர் சொல்வர்.
-
திருநீறை நெற்றியில் இடும்போது விபூதி கீழே சிந்தக் கூடாது என்கிறார்களே! வானத்தைப்பார்த்து தான் பூச வேண்டுமா?
விபூதியை கீழே சிந்தாமல் இட்டுக் கொள்ள வேண்டும். அதற்காக வானத்தையெல்லாம் பார்த்துக் கஷ்டப்பட தேவையில்லை. விபூதியை இடது கையில் வைத்து வலது கை விரல்களில் பூசி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். மீதம் உள்ள விபூதியை இரண்டு கைகளிலும் பூசி உடம்பு முழுவதும் பூசிக் கொள்ளுங்கள். கீழே சிந்தாது.
-
வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், பிரயாணம் கிளம்பும்போதும் சகுனம் பார்த்துத்தான் செல்ல வேண்டுமா?
சகுனம் பார்ப்பது என்பது சாத்திரங்களில் உள்ள விஷயம்தான். ஒரு நல்ல விஷயத்திற்காக நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போது சுமங்கலிப் பெண்கள், மங்கலப் பொருட்கள் போன்றவை எதிரில் வந்தால் காரியம் ஜெயமாகும் என்றும், எண்ணெய், இரும்பு ஆயுதங்கள் போன்ற பொருட்களை எடுத்து எதிரில் யாராவது வந்தால் செல்லும் காரியம் ஜெயமாகாது மற்றும் ரத்தக்காயங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே அனுபவ உண்மையும் கூட. நமது நன்மைக்காகத்தான் இவை கூறப்பட்டுள்ளன. பஞ்சாங்கங்களில் சகுனம் பார்ப்பது சம்பந்தமான விஷயங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
-
ஹோமங்கள் நடக்கும் போது கர்ப்பஸ்திரீகள் அருகில் இருக்கக்கூடாது என்கிறார்களே, ஏன்?
யார் சொன்னது? கர்ப்பஸ்திரீகளுக்கு நல்லமுறையில் குழந்தை பிறக்கவும், தொடர்ந்து அவர்களது வம்சம் விருத்தி அடையவும் பலவிதமான சடங்குகளைச் செய்யச் சொல்லி சாத்திரங்கள் கூறியுள்ளன. இவற்றில் முக்கியமான சடங்குகளாகிய பும்சவனம், சீமந்தம் (வளைகாப்பு) போன்றவற்றை ஹோமத்துடன் தான் செய்ய வேண்டும். எனவே ஹோமம் நடைபெறும் இடங்களில் கர்ப்பஸ்திரீகள் அவசியம் இருக்க வேண்டும். இது அவர்களுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் மிக மிக நல்லது.
-
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி என நிறைவு மந்திரம் சொல்வதன் நோக்கம் என்ன?
சாந்தி என்றால் அமைதி. எங்கும் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் இந்து தர்மத்தின் அடிப்படை. கலைஞர்கள் நிகழ்த்தும் இயல், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் வாழ்த்துப்பாடல் பாடி முடிப்பது வழக்கம். ""வான் முகில் வழாது பெய்க'' ""வாழிய செந்தமிழ்'' போன்ற பாடல்களைப் பாடி நாமும் நமது நாடும் உலகமும் நலம் பெறவேண்டும் என்பதே நோக்கம். அரசு நிகழ்ச்சிகளில் தேசியகீதம் இசைப்பதும் இம்மரபைப் பின்பற்றியே செய்யப்படுகிறது. இந்த தர்மத்தை வழிகாட்டியே வேதமும் "ஓம் சாந்தி' என்று மூன்றுமுறை சொல்கிறது.
-
நிச்சயதார்த்தம் நடந்தபின் துக்க வீட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்களே? காரணம் கூறவும்.
திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வர். வாழ்வில் வரும் சுப நிகழ்வு என்றாலே அது திருமணம் தான். திருமணச் சடங்குகளை சாஸ்திரம் "விவாக தீட்சை' என்றே குறிப்பிடுகிறது. அக்னி முன் செய்யப்படும் மணச்சடங்கின் மூலம் மணமகன், மணமகள் இருவரும் இணைந்து வாழத் தொடங்குகின்றனர். மந்திரப்பூர்வமாக செய்யப்படும் இவ்வைபவம் தம்பதியரின் முன்னோர்களில் இருபது தலைமுறைகளைக் கரையேற்ற வல்லது. இதேபோல, சந்ததிகளுக்கும் நன்மை தரக்கூடியதாகும். இதனை, ""பூர்வே விம்சதி- பரே விம்சதி'' என்கிறது வேதம். கோயிலில் "அர்ச்சனை செய்கிறேன்' என்று சங்கல்பம் செய்து கொண்டால் அர்ச்சிக்கும்வரை சந்நிதியை விட்டு வெளியேறக் கூடாது. அதுபோல், திருமணம் செய்து கொள்கிறோம் என்று சங்கல்பம் செய்து கொள்வது தான் நிச்சயதார்த்தம். அதனால், திருமணம் முடியும் வரை துக்கவீடுகளில் கலந்து கொள்வதில்லை என்ற விரதத்தைக் கடைபிடிப்பது அவசியம்.
-
சுபவிஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே! இது ஆன்மிகமா, அறிவியலா?
ஆன்மிகம்வேறு, அறிவியல்வேறு என்று பிரித்துப் பார்ப்பதை முதலில் விடுங்கள். ஆன்மிகம் காட்டும் வழியில் செல்வது தான் அறிவியல். பூமி உருண்டையாக இருக்கிறது என்று முதலில் கூறியது ஆன்மிகம். அதை உறுதிப்படுத்திக் கொண்டது அறிவியல். இன்றைய அணுசக்திவரை எல்லாவற்றிற்குமே அடிப்படை ஆன்மிகம் தான்.
அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை தொடங்கும். ஒவ்வொரு நாளும் நிலவொளி அதிகரித்துக் கொண்டே போகும். இதனை சுக்லபட்சம்(வெண்மையான இரவு) என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிறை வளர்ந்து வரும் நாளில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது ஆன்மிகம். வளர்பிறையில் இறுக்கம் குறைந்து நம் மனம் தெளிவுடன் செயல்படும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. எச்செயலையும் தெளிவான புத்தியுடன் தொடங்குபவன் வெற்றி பெறுவது உறுதிதானே! ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
-
நவரத்தின மோதிரம் அணி வதைப்பற்றி விளக்கம் அளியுங்கள்?
மோதிரத்திற்கு "அங்குலீயகம்' என்று பெயர். இதற்கு "விரலுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம்' என்று பொருள். எல்லா தெய்வங்களுக்கும் எல்லாக் கற்களும் உகந்தவை தான். சுவாமியை பிரதிஷ்டை செய்யும் முன் பீடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்படுகின்றன. கும்பாபிஷேக கலசம், திருவாபரணங்களிலும் இவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. அவரவர் விரும்பும் கற்களில் விருப்பமான முறையில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். அவை தீங்கு ஏதும் விளைவிக்காது. சுவாமி முன்பு வைத்து வணங்கியபிறகு அணிந்து கொள்ளுங்கள்.
-
விழா நாட்களில் முதல்நாள் இரவே வாசல் தெளித்து கோலம் போட்டு விடுகிறார்களோ? இது சாஸ்திரப்படி சரிதானா?
சூரிய உதயத்திற்கு ஒன்றைமணி நேரம் முன்பு தான் வாசலைத் தூய்மை செய்து சாணம் தெளித்து கோலமிடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முதல்நாள் இரவே கோலமிட்டு விட்டு தூங்கிவிடுவது அவ்வளவு உசிதமானது அல்ல. அதிகாலையில் கோலம் இடும் வீட்டிலே திருமகள் நித்யவாசம் செய்வாள். இப்போது பிரம்மாண்டமான கோலங்களை எல்லாம் முதல்நாள் இரவே வாசலில் இட்டு அசத்துகிறார்கள். ஆனால், கூடியமட்டும் காலை நேரத்திலே வாசல் தெளித்து கோலமிடுங்கள்.
-
சுபவிஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே! இது ஆன்மிகமா, அறிவியலா?
ஆன்மிகம்வேறு, அறிவியல்வேறு என்று பிரித்துப் பார்ப்பதை முதலில் விடுங்கள். ஆன்மிகம் காட்டும் வழியில் செல்வது தான் அறிவியல். பூமி உருண்டையாக இருக்கிறது என்று முதலில் கூறியது ஆன்மிகம். அதை உறுதிப்படுத்திக் கொண்டது அறிவியல். இன்றைய அணுசக்திவரை எல்லாவற்றிற்குமே அடிப்படை ஆன்மிகம் தான்.
அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை தொடங்கும். ஒவ்வொரு நாளும் நிலவொளி அதிகரித்துக் கொண்டே போகும். இதனை சுக்லபட்சம்(வெண்மையான இரவு) என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிறை வளர்ந்து வரும் நாளில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது ஆன்மிகம். வளர்பிறையில் இறுக்கம் குறைந்து நம் மனம் தெளிவுடன் செயல்படும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. எச்செயலையும் தெளிவான புத்தியுடன் தொடங்குபவன் வெற்றி பெறுவது உறுதிதானே! ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
-
அரசமர விநாயகரை இருட்டிய பின்னும், காலை விடிவதற்கு முன்னும் வலம் வரக்கூடாது என்கிறார்களே! உண்மைதானா?
அரசமரத்தை விடியற்காலையில் சுற்றுவது தான் சிறந்தது, அந்த நேரத்தில் அரசமரத்திலிருந்து வெளிவரும் ஒரு வகையான மருத்துவ குணம் வாய்ந்த காற்று மலட்டுத் தன்மையை நீக்கும் வல்லமையுடையது. இது போன்ற நல்ல விஷயங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து அரசமரத்தடி விநாயகராகவும், அரசு, வேம்பு திருணம் நடத்தி வைத்து அஸ்வத்த நாராயணராகவும் வழிபாட்டு முறைகளைமுன்னோர் வகுத்திருக்கிறார்கள்.
-
கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?
பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது. சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.
-
பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் தான் நன்மை உண்டாகுமா?
பெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் தான் நன்மை உண்டாகும் என்றில்லை. ""வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ'' என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்பமும் துன்பமும் இறையருளால் தான் நிகழ்கின்றன. பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதை நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதத்தில் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
-
கர்ம வினைகளை இந்தப்பிறவியுடன் தீர்த்துக் கொள்ள வழி ஏதும் உண்டா?
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும் என்று தான் ஞானசம்பந்தர், பெரியாழ்வார் போன்றோர் கூறியுள்ளனர். எத்தனை பேர் இதனை முழுமையாக கடைபிடிக்கிறோம்? கர்ம வினைகள் என்பது என்னவென்றால் நாம் பல பிறவிகளில் செய்திருக்கும் பாவ புண்ணியங்களின் சேமிக்கப்பட்ட பலன்களாகும். அதாவது நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிப்பது போன்றது. நம் பணம் முழுமையாக செலவாகும் வரை நமது வங்கிக் கணக்கு முடியாது. அதுபோல நமது கர்ம வினைகளின் பலா பலன்களை, அதாவது இன்ப துன்பங்களை நாம் அனுபவித்துத் தீர்க்கும் வரை, வினை சேமிப்பு தீராது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு, தர்ம சிந்தனை, நற்செயல் இவைகளைச் செய்து வினை நீக்கம் பெறுவது தான் இப்பிறவியின் குறிக்கோள். மேலும் மேலும் தவறுகளைச் செய்து வினை சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு அல்ல.
-
வழிபாட்டிற்கு காலை, மாலை இரண்டு வேளையில் எது சிறந்தது?
ஏதாவது ஒரு வேளையைக் கூறிவிட்டால் மற்றைய நேரங்களில் ஜாலியாகப் பொழுது போக்கலாமா? தெய்வ வழிபாட்டிற்கு நேரம் காலமே கிடையாது. ""நற்றவா உன்னை நான் மறக்கிணும் சொல்லும் நா நமசிவாயவே'' என்கிறார் சுந்தரர். மனத்தளவில் மறந்திருந்தாலும், நமது நாக்கு இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். ""நான் நடப்பது உனது ஆலயத்தை வலம் வருதலாகவும், உண்பது உனக்கு யாகம் செய்வதாகவும் ஆகட்டும்'' என்கிறார் ஆதிசங்கரர். வழிபாடு என்பது பூஜை செய்வது மட்டும் கிடையாது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் இருப்பதும் தான். காலை மாலை இருவேளையும் வழிபாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் இறைவனை மனதில் சிந்தித்தும், நாவினால் அவர் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.
-
பவுர்ணமியில் சந்திரனுக்கு பூஜை செய்வது போல் மாதம் மாதம் சூரியனுக்கு வழிபாட்டு நாள் எது?
மேஷம் முதலான 12 ராசிகளில் சூரியன் சஞ்சரிப்பதையே 12 மாதங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ராசியில் சற்றேறக்குறைய 30 நாட்கள் சூரியன் சஞ்சரிக்கிறார். ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் நேரத்தையே மாதப்பிறப்பு என்கிறோம். மாத சங்கராந்தி என்றும் பெயருண்டு. தை மாதப்பிறப்பன்று மகரராசிக்குள் சூரியன் நுழைவதால், மகர சங்கராந்தி என்கிறோம். அதுபோல 12 மாதங்களிலும் மாதப் பிறப்பை சங்கராந்தி என்றே சொல்ல வேண்டும். அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்வது மிக நல்லது.
-
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் என்ன?
ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
-
அபிஷேகம் செய்யும் பொருட்களுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உள்ளதாகக் கேள்விப்பட்டேன் விளக்கம் தரவும்.
பொதுவாக இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தரவல்லது. இப்பிறவியில் பாவமே செய்யவில்லையே என்று கேட்கலாம். போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலன் தான் இப்பிறவியாகும். அப்போது செய்த பாவங்களின் பயனாய் இப்பிறவி வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுகின்றன. இவை நீங்கி இன்பமாய் வாழ சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிக உத்தமமாகும்.
தண்ணீர் அபிஷேகம் பாவம் நீக்கும். எண்ணெய் தரித்திரம் நீக்கும், பால் ஆயுள் விருத்திக்கு உதவும். தயிர் நோய் நொடிகளைப் போக்கும், பஞ்சாமிர்தம் வம்சவிருத்தியை உண்டாக்கும். விபூதி நல்லறிவைத் தரும். பழவகைள், இளநீர் பித்ரு சாபத்தை நீக்கும். சந்தனம், பன்னீர் லட்சுமி கடாட்சம் உண்டாக்கும்
-
.துளசி இலைகளை சில குறிப்பிட்ட நாட்களில் பறிக்கக் கூடாது என்பதன் காரணம் என்ன?
வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகா விஷ்ணுவும் வசிக்கிறார்கள். திங்கட்கிழமை அதாவது சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே, அன்றைய தினம் வில்வம் பறிப்பதில்லை. அதுபோல சனிக்கிழமை ஏகாதசி திருவோணம் போன்ற நாட்கள் மஹாவிஷ்ணுவிற்கு உகந்தவை. எனவே இந்நாட்களில் துளசி பறிப்பதில்லை.
-
திருஷ்டி கழிக்க பூசணிக்காயை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?
திருஷ்டி கழிக்க சூடம் ஏற்றி திருநீறு பூசுவது தான் வழக்கில் இருந் தது. பிறகு, பூசணிக்காய் பழக்கம் எப்படியோ வந்திருக்கிறது. காளி, பைரவர் போன்ற உக்ர தெய்வங்களுக்கு, மாமிசம் படைப்பதற்க பதிலாக, பூசணிக்காய் வெட்டி குங்குமம் தடவி பலி கொடுப்பது சாஸ்திரங்களில் உள்ள விஷயம். கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் இவ்வாறு செய்கின்றனர். மாமிசத்திற் பதிலாக இப்படிச் செய்வார்கள். கண் திருஷ்டியினால் ரத்தக்காயம் போன்றவை ஏற்படாமலிருக்க இதுபோன்ற பழக்கங்கள் வந்திருக்கலாம்.
-
உக்ர தேவதைகள் அகோரமாகவும், நாக்கை நீட்டிக் கொண்டும் பயமுறுத்தும் விதத்தில் இருக்கின்றனரே. இதற்கு இந்து மதத்தில் இடம் கொடுத்தது ஏன்?
காளி, துர்க்கை, பைரவர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்கள் உக்ரமாகக் காட்சி தருவர். இவர்கள் தீய சக்திகளாகிய அரக்கர்களை அழித்து நம்மைக் காப்பாற்றியவர்கள். உக்கிரமான தீய சக்திகளை அழிக்க தெய்வங்களும் உக்கிரமான வடிவம் எடுக்க வேண்டியதாகிறது. மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள். தீயவர்களை திருத்துவதற்கு என சட்டம் இருக்கிறது. அதைச் செயல்படுத்த காவல் துறை உள்ளது. திருடர்களைக் கண்டிக்கும் பொழுது காவல் துறையினர் கூட கோபப்பட வேண்டியுள்ளதே! இதற்காக அவர்களை நாம் ஒதுக்கி விட முடியுமா! இது போல்தான் இந்து மதமும். விடாப்பிடியாக தவறுசெய்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க உக்ரமான தெய்வங்களை வழிபடும் முறையை வகுத்துள்ளது.
-
தட்சிணாமூர்த்தியின் காலின் கீழ் இருக்கும் அரக்கன் யார்? மற்றும் உள்ள நால்வர் யார்?
தட்சிணாமூர்த்தி அறிவின் வடிவம். அறியாமையை அழித்து நல்ல நிலை புகட்டுபவர். அறியாமை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. மனிதனை முன்னேறவிடாமல் தடுத்து அழித்துவிடும். எனவே அறியாமை எனும் அரக்கன் அழிக்கப்பட வேண்டியவன் என்பதை உணர்த்தவே காலின் கீழ் "அபஸ்மாரம்' எனும் அறியாமை வடிவ அரக்கனை மிதித்திருக்கிறார். தட்சிணாமூர்த்தியிடம் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனும் நால்வர், முதலில் பாடம் படித்து இவ்வுலகுக்கு உண்மை அறிவு நூல்களை வழங்கியவர்கள். இவர்களையும் சேர்த்து வணங்கும் நிலையில், நால்வரும் தட்சிணாமூர்த்தியிடமே இருப்பார்கள்.
-
இவ்வுலகில் எதுதான் நிலையானது? மனிதர்களின் துன்பங்களுக்கு என்ன காரணம்?
சைவ சித்தாந்தம் இவ்வுலகில் நிலையானவையாக மூன்றைக் கூறுகிறது. ஒன்று இறைவன், இரண்டு உயிர், மூன்றாவது இன்ப துன்பத்தின் காரணமாகிய மயக்கம். இறைவன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் சாந்தமாக இருப்பவர். உயிர்கள் (அதாவது மனிதன் விலங்குகள் உட்பட எல்லாமே) தாம் விரும்பும் இன்பத்தை அடைவதற்காக துன்பப்படுகின்றனர். நாமும் இறைவனைப் போல் நித்யானந்த மயமாக இருக்கலாம். நாம் நினைத்ததை யெல்லாம் அடைய வேண்டும் என்ற மயக்கத்திலிருந்து விடுபடும் பொழுது.
-
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெண்கள் யாசகம் கேட்டு செல்லலாமா?
ஒரு தீவிர பக்தர் இருந்தார். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்குத் திருவமுது படைத்து ஏழைகளுக்கு விநியோகம் செய்து வந்தார். தாம் மிகப் பெரிய தர்மம் செய்வதாக அவருக்கு கர்வம் ஏற்பட்டது. பகவானின் சோதனையும் துவங்கியது. ஒரு சமயத்தில் திருவமுது செய்வதற்கான வசதியே இல்லாத சூழல், கர்வம் இருந்தாலும் பக்தர் அல்லவா? புரட்டாசி சனியன்று, அரிசி மற்றும் பொருட்களை மற்றவர்களிடம் உதவி கேட்டு வாங்கி திருவமுது செய்து பெருமாளுக்குப் படைத்து வழக்கம் போல் விநியோகம் செய்தார். பகவானே நேரில் காட்சி கொடுத்து திருவமுதை வாங்கி உண்டார். மெய் சிலிர்த்து கண்கலங்கிய பக்தர் ""இத்தனை நாள் வாராது, இன்று யாசகம் வாங்கி அமுது செய்திருக்கும் நாளில் காட்சியளித்து அமுது உண்ணும் காரணம் யாது பரந்தாமா?'' என்று கேட்டார். ""இத்தனை நாள் உன்னுடையது எனும் எண்ணத்துடன் அமுது படைத்தாய். அதில் உன் கர்வம் கலந்திருந்தது. இன்று பலரிடம் பெற்று செய்திருக்கிறாய். உனது கர்வம் கலக்காததால் மிக்க சுவையாக உள்ளது. உனக்கும் உனது தர்மத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இன்று மகிழ்ச்சியோடு அருள்பாலிக்கிறேன். தர்மம் பொதுவானது,'' என்றார். பக்தரும் மகிழ்ந்து புரட்டாசி சனிக்கிழமை தோறும் யாசகம் பெற்று திருவமுதும் அன்னதானமும் செய்து மகிழ்வுடன் வாழ்ந்தார். இதன் காரணமாகத்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் யாசகம் பெற்று திருவமுது செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. மேலான தர்ம காரியத்தில் ஆண் பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது.
-
அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?
பகல் 11- 12 மணி வரையுள்ள நேரத்தை அபிஜித் முகூர்த்தம் என்பர். "அபிஜித்' என்றால் "வெற்றியைத் தருவது' என்று பொருள். அபிஜித் நட்சத்திரம் என்று இதனை 28வது நட்சத்திரமாக சேர்த்துக் கொள்பவர்களும் உண்டு. பொதுவாக, எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம், அபிஜித் வேளை, அஸ்தமான காலம் ஆகிய மூன்று வேளைகளும் தோஷமற்றவை. இந்த மூன்று வேளைகளிலும் திதி, நட்சத்திரம், கிழமை தோஷங்கள் கிடையாது. சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாம். உதய காலத்திற்கும், அஸ்தமன காலத்திற்கும் கோதூளி லக்னம் என்று பெயர். கோதூளி என்றால் பசு மாட்டின் கால்நடையிலிருந்து கிளம்பும் புழுதி. அதாவது காலையில் பசு மாட்டை மேய்க்க ஓட்டிச் செல்வார்கள். மாலையில் வீட்டுக்கு திரும்ப ஓட்டி வருவார்கள். இது சமயத்தில் கிளம்பும் புழுதி எங்கும் பரவுவதால் எல்லா தோஷங்களும் நீங்குவதாக சாஸ்திரம் கூறுகிறது.
-
சந்திராஷ்டமத்தில் சுபநிகழ்ச்சி செய்ய வேண்டுமானால் என்ன செய்வது பரிகாரம் எதுவும் உண்டா?
நமது ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. எட்டாமிடம் என்பது ஆயுளுக்கும், நமது சிந்தனைகளுக்குமான இடம். இந்த இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது பெரும்பாலும் கோபமூட்டும் சிந்தனைகளே ஏற்படுகிறது. நாம் சும்மாயிருந்தாலும் வலுவிற்கு ஏதாவது சண்டை வந்து நம் மனநிலை பாதிக்கப்படும். மாதம் ஒருமுறை இரண்டே கால் நாள் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. முதல் நாள் பதட்டம் அதிகமாக இருக்கும். இரண்டாம் நாள் 25 சதவீதமாகக் குறைந்துவிடும். இரண்டாம் நாளில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம். முதல் நாள் செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் விநாயகருக்குத் தயிர் அபிஷேகம் செய்து அருகம்புல் சாத்தி வழிபட்டு செய்யலாம். கோபப்படாமல் இருந்து ஜெயித்து தான் காட்டுவோமே?
-
கோயிலில் மூலவரை தரிசித்த பின் வலம் வரவேண்டுமா? வலம் வந்தபின் தரிசிக்க வேண்டுமா?
கோயிலுக்குள் சென்றவுடன் கொடிமரம் முன்பு நமஸ்காரம் செய்து, பிறகு உள்ளே சென்று ஒரு முறை வலம் வந்து, மூலவரைத் தரிசிக்க வேண்டும். பிறகு அம்பாள் சந்நிதியை தரிசித்து, இரண்டாம் முறை வலம் வரும் பொழுது மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். மூன்றாம் முறை வலம் வந்து, சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் மூலவரின் எதிரே மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். மூன்று முறை ப்ரதக்ஷிணமும் (வலம் வருதல்), ஐந்து முறை நமஸ்காரமும் செய்ய வேண்டும்.
-
தலவிருட்சம் என்ற பெயரில் கோயில்களில் உள்ள மரங்களைப் பற்றி விளக்கவும்.
ஒரு சில கோயில்களை "மஹா ÷க்ஷத்ரம்' என்று கூறுவார்கள். அப்படிப் போற்றப்படும் கோயில்களில், மூலஸ்தான மூர்த்தி சுயம்புவாகவோ (தானாகத் தோன்றியது) தேவர்கள் அல்லது முனிவர்களால் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாகவோ (காலத்தால் பழமை) வாய்ந்ததாகவோ இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இறைவனை ஆதிகாலத்தில் ஏதாவது ஒரு மரத்தின் கீழேயே வைத்து பூஜித்திருப்பார்கள். இந்த மரம் தான் தல விருட்சம் என்று போற்றப்படுகிறது. அக்கோயிலில் உள்ள இறைவனுக்கு உரிய சக்தியும் பெருமையும் இதற்கு உண்டு. இதனை வலம் வந்தாலே மூலஸ்தான மூர்த்தியை வழிபட்ட பலன் கிட்டும். ஒரு மகா÷க்ஷத்ரம் என்பது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புப் பெற்றிருக்கும். இவற்றில் தலம் என்று குறிப்பிடுவது தல விருட்சத்தைத் தான்
-
பாதக ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே சனீஸ்வரரை வழிபடவேண்டும் என்பது உண்மையா?
கிரகங்கள் ஒன்பதும் கடவுளின் அடியவர்களே. அவரவர் பாவபுண்ணிய பலன்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். சனி ராசிக்கு 3,6,11 ஆகிய மூன்று ஸ்தானங்களில் சுப பலன்களை வாரி வழங்குவார். மற்ற ஸ்தானங்களில் நன்மையும் தீமையும் கலந்தே உண்டாகும். எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சனியை அனைவரும் வழிபடலாம். ஒருவரின் வாழ்நாளை நிர்ணயிக்கும் ஆயுள்காரகர், தொழிலை நிர்ணயிக்கும் ஜீவனகாரகர் என்னும் இருபெரும் விஷயங்கள் சனீஸ்வரரின் கட்டுப்பாட்டில் உள்ளன. சனி மட்டுமல்ல! கிரகம் ஒன்பதையும் வணங்கவேண்டியது மிக அவசியம்.
-
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.
எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.