FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Anu on March 09, 2012, 01:06:44 PM

Title: நாரதர்
Post by: Anu on March 09, 2012, 01:06:44 PM
நாரதர் பகுதி-1

கந்தர்வ லோகம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது. இவர்களில் உபன் மிக மிக சந்தோஷத்தில் இருந்தான். ஆம்... அன்று அவனுக்கு மகன் பிறந்திருந்தான். அவன் மனைவி குழந்தையை அருகில் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தை அழுதது. என்ன ஆச்சரியம்... அந்த அழுகுரல் புல்லாங்குழலின் இனிமையை ஒத்திருந்தது. எல்லாரும் குழந்தையைப் பார்த்தால், கண்ணே சிரிடா என கொஞ்சுவார்கள். ஆனால், இந்தக் குழந்தையைப் பார்த்தால், தம்பி! அழுடா என்றார்கள். அந்தளவுக்கு குழந்தையின் குரலில் இனிமை இழையோடி இருந்தது. குழலினிது என்பார்களே...அது இந்த குழந்தைக்கு முற்றிலும் சரியாகப் பொருந்தும்.சரி.... கந்தர்வர்கள் என்றால் யார்? பூலோகத்தில் வாழும் நமக்கு நரன் அல்லது மனிதன் என்று பெயர். இந்திரலோகத்தில் வாழ்பவர்களுக்கு தேவர்கள் என்று பெயர். இதுபோல, இந்த பிரபஞ்சத்தில் 14 லோகங்கள் உள்ளதாம். இதில் தேவலோகத்துக்கு கீழ்ப்பட்ட பூலோகம். பாதாளலோகம் உள்ளிட்ட உலகிலுள்ளவர்கள் சகல நோன்புகள் நோற்பதின் மூலமோ, யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விப்பதன் மூலமோ, கடும் ஆன்மிகப்பயிற்சிகளை திடசித்தத்துடன் செய்வதன் மூலமோ அல்லது இம்மியளவு கூட பிற உயிர்களுக்கு துன்பம் செய்வது பற்றிய நினைவு கூட எழாமல் இருப்பார்களோ, பாடுவதன் மூலமோ அல்லது இசைக்கருவிகளை மீட்டுவதன் மூலமோ இறைவனைத் துதித்தவர்கள் ஆகியோர் கந்தவர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள். இவர்களுக்கு சுகபோக சுகவாழ்வு கிடைக்கும். செல்வம், குடும்ப சுகம் எதற்கும் குறைவிருக்காது. இப்படிப்பட்ட ஒரு குலத்தில் பிறந்த குழந்தை என்றால் கொண்டாட்டத்துக்கு என்ன குறைவாகவா இருக்கும்? உபனின் வீட்டிற்கு கந்தவர்களும், கந்தர்வ மாதர்களுமாக வந்து குழந்தையை நீடுழி வாழ வாழ்த்திப் போய்க் கொண்டிருந்தனர்.இந்நேரத்தில் வந்த ஒரு கந்தர்வ தம்பதியிடம் குழந்தை குறும்பு செய்தது. தன்னை அவர்கள் கொஞ்சிக் கொண்டிருந்த போது, கந்தர்வனின் அங்கவஸ்திரத்தையும், அவனது மனைவியின் புடவைத் தலைப்பையும் முடிச்சுப் போட்டு விட்டது. அவர்கள் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க எழுந்த போது, முடிச்சுப் போட்டிருந்ததால், ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டனர். அந்தப் பெண் தன் கணவனை கடிந்து கொண்டாள்.

ஒரு வீட்டுக்கு வந்தால் இப்படியா நடந்து கொள்வீர்கள். ஏன் என்னை இடிக்கிறீர்கள்? என்றாள் மெல்லிய குரலில்.அவன் அவளிடம், அடி போடி! நீதான் ஏதோ சில்மிஷ வேலை செய்திருக்கிறாய். இங்கே பார். உன் புடவைத்தலைப்பை நான் அறியாமல் என் வஸ்திரத்தில் முடிச்சு போட்டுள்ளாய், என்றான். அவர்கள் முடிச்சை அவிழ்த்து விட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். குழந்தை கலகலவென சிரித்தது. இப்படியாக குழந்தை பிறந்த அன்றே தன் கலகத்தை துவக்கிவிட்டான். இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே..பிறந்திருப்பது யாரென்று.16 நாட்கள் கடந்தன. குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. கந்தர்வர்கள் இல்ல விசேஷங்களுக்கு தவத்தில் உயர்ந்த பெரியவர்கள் எல்லாம் வருவார்கள். இங்கேயும் கூட்டத்துக்கு குறைவில்லை. முனிவர்களின் நல்லாசி குழந்தைக்கு கிடைத்தது. அவர்களின் ஞான திருஷ்டியில், இக்குழந்தை 14 லோகங்களுக்கும் சென்று வருவான். ஏன்...அசுரர்கள் கூட இவனிடத்தில் சிக்கி திண்டாடப் போகிறார்கள். இறைவன் காரணமில்லாமல் இக்குழந்தையைப் படைக்கவில்லை என புரிந்தது. குழந்தைக்கு உபவருக்கன் என பெயர் சூட்டப்பட்டது. உபவருக்கன் வளர்ந்தான். தந்தை உபன் மிகப்பெரிய இசைஞானி என்பதால், குழந்தைக்கும் அதையே கற்றுக் கொடுத்தான். ஆனால், இசையில் தந்தையையும் மிஞ்சினான் உபவருக்கன். தந்தை உபன் அகம் மகிழ்ந்து அவனுக்கு மகதி என்னும் இசைக்கருவியை வழங்கினான். அது வீணையை விட இனிமையாக இருந்தது. இந்த இசைக்கருவியை கொண்டு அவன் மீட்டிய ராகமும், இசைத்த பாடலும் கந்தர்வலோகத்தை மட்டுமின்றி, தேவலோகத்தையும் ஈர்த்தது. தேவலோகத்தினர் கூட கந்தர்வலோகம் வந்து குழந்தை உபவருக்கனை தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று பாடச்சொல்லி கேட்டபார்கள். எங்காவது யாகம் நடந்தால், அங்கே உபவருக்கனின் இசைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகி இருக்கும். இப்படி உபவருக்கனின் இசைஞானம் எங்கும் புகழ் பெற்றது.

சிறுவனாயிருந்த உபவருக்கன் இளமைப் பருவத்தையும் அடைந்தான். இளமை வரும் போது, எங்கிருந்து தான் வருமோ அந்தக் காதல். அது உபவருக்கனையும் விட்டு வைக்கவில்லை. மன்மத பாணங்களுக்கு இரையாக வேண்டிய நிலைமை அவனுக்கு ஏற்பட்டது. பிரமசிரேஷ்டர் என்ற அந்தணர் ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தார். யாகத்திற்கு உபவருக்கனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. யாகத்தைக் காண பல இளம் யுவதிகளும் வந்திருந்தனர். உபவருக்கன் சாமவேதத்தை தன் வீணையில் மீட்ட ஆரம்பித்தான். வந்திருந்த கூட்டம் அவனது இசையில் லயித்தது. குறிப்பாக யுவதிகள் அதில் கட்டுண்டனர். ருக்மாங்கனா என்ற யுவதி உபவருக்கனின் அருகிலேயே வந்து அமர்ந்து, அவன் இசை மீட்டுவதை ரசித்தாள். அத்துடன் அவனது கட்டுடலையும் ரசித்தாள். யாகநிகழ்ச்சிகள் முடிவடைந்தன. ருக்மாங்கதா, உபவருக்கனின் அருகில் சென்றாள். இவனோ கந்தர்வன். அவளோ அந்தணப் பெண். உபவருக்கா! கொஞ்சம் நில்லுங்கள், நான் தங்களோடு சற்று பேச வேண்டும், என்றாள். உபவருக்கன் திரும்பிப் பார்த்தான். கட்டுடல் கொண்ட அந்த கட்டழகியைப் பார்த்தவுடனேயே பற்றிக் கொண்டது காதல் தீ. ஆனால், அந்தக்காதலே அவனது கந்தர்வலோக வாழ்வுக்கு உலை வைக்கப் போகிறது என்பதை அவன் அப்போது உணரவில்லை.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:44:46 AM
நாரதர் பகுதி-2
உபவருக்கன் அவளைப் பார்த்தபடியே வீணை மீட்டி பாடியதில் எங்கோ இடறி விட்டது. இதை பிரமசிரேஷ்டர் கவனித்து விட்டார்.அடப்பாவி! என் யாகத்தைக் கெடுப்பதற்கென்றே வந்தவனே! நீ பக்திப்பரவசம் பொங்க பாடுவாய் என நினைத்தேன். நீயோ பாவையின் மயக்கத்தில், யாகத்தின் புனிதத்தை கெடுத்து விட்டாய். கந்தர்வகுலம் ஒழுக்கத்திற்கு பெயர் போனது. நீயோ, அக்குலத்தின் மானத்தை காற்றில் பறக்க விட்டாய். இங்கே பல முனிவர்களும், தவசிரேஷ்டர்களும் இருக்கிறார்கள். ஒழுக்கமற்ற ஒருவன் தவப்பெரியோர்களின் மத்தியில் இருந்தால், அவர்களின் தவவலிமையில் பாதி அழிந்து போகும். அந்த பாவத்தை நீ செய்து விட்டாய். இனி, நீ கந்தர்வனாக இருக்க லாயக்கற்றவன். எனவே, இப்போதே நீ மானிடப்பிறவி எடுப்பாய். இங்கிருந்து போ, என்று சாபமிட்டார். அந்தக்கணமே உபவருக்கன் அங்கிருந்து மறைந்து விட்டான். அவனுக்கு காதல் வலை வீசிய பெண் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருத்தத்துடன் சென்று விட்டாள். விதிவசம் சிக்கிய உபவருக்கன் பூலோகத்தில் ஒரு ஏழையின் வீட்டில் பிறந்தான். அங்கும் அவனது அழுகுரல் இனிமையாக இருக்கவே, இசைசித்தன் என அவனுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அவனது தந்தை அவன் பிறந்தவுடனேயே காலமாகி விட்டார். இதனால் தந்தையை விழுங்கியவன் என்ற அவச்சொல்லுக்கு ஆளானார். ஆனாலும், பெற்ற தாய் கைவிடுவாளா தன் குலக்கொடியை! அவள் ஒரு அந்தணரின் வீட்டில் வேலை செய்து, குழந்தையைக் காப்பாற்றினாள். தாய் மீது இசைசித்தன் மிகுந்த பாசம் கொண்டிருந்தான்.ஆனால், முன்வினைப்பயன் இப்போதும் இசைசித்தனைச் சுட்டது. ஆம்...அவனது தாய் தோட்டத்தில் இலை பறிக்கச் சென்றாள். அங்கிருந்த ஒரு பாம்பு அவளைத் தீண்டிவிட, அங்கேயே இறந்தாள். சிறுவன் அழுது புலம்பினான்.

அவ்வீட்டு அந்தணர் இரக்ககுணம் கொண்டவர். அவர் இசைச்சித்தனை தன் வீட்டிலேயே பணிசெய்ய வைத்துக் கொண்டார். முன்வினை காதல் விளையாட்டு இசைசித்தனை வாட்டி வதைத்தது. கடும் வேலை செய்து அவன் பிழைத்தான். அவ்வீட்டிற்கு திருமாலின் அடியவர்கள் அடிக்கடி வருவார்கள். அவர்கள் பாடும் பாடலை இசைசித்தன் ரசித்தபடியே இருப்பான். இசைசித்தன் அந்த பாடல்களை திரும்பப்பாடுவான். காலப்போக்கில் நாராயணன் மீது அவன் தனியாகவே பாடல் இயற்றி பாட ஆரம்பித்தான். அவனது குரல் அங்கு வந்த அடியவர்களை ஈர்த்தது. அந்தணரும் அவனது குரலினிமையில் மயங்கி, அவனுக்கு வீட்டு வேலைகள் கொடுப்பதை நிறுத்தி விட்டார். எந்நேரமும் பாடல்...பாடல்...பாடல். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே அவன் நாராயணா...நாராயணா என இனிமையாகச் சொல்ல ஆரம்பித்தான். அவனது இந்தக்குரல் வைகுண்டத்தில் இருந்த மாதவனையும் ஈர்த்தது. லட்சுமி தாயார் அவன் நாராயணா என இனிய குரலில் அழைப்பதையும், வீணை இசையுடன் அவன் நாராயணனைப் பாடி துதிப்பதையும் கேட்டு பரவசம் கொண்டாள். திருமாலே! ஐயனே! தங்கள் பெயரை உச்சரித்தபடியே ஒரு சிறுவன் பூலோகத்தில் இருக்கிறானே. அவனை நம்மோடு வைத்துக் கொண்டால் என்ன! தங்கள் திருநாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவர்கள் வைகுண்டத்தில் அல்லவா இருக்க வேண்டும்! பெருமாளே! அவன் விஷயத்தில் தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், என்றாள். லட்சுமி! அவனைப் பற்றி என் மனதில் ஒரு உயர்ந்த திட்டம் இருக்கிறது. அவன் கந்தர்வ குலத்தில் பிறந்தாலும், ஒழுக்கம் தவறியமையால் பூலோகத்தில் தன் பாவத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தக்கட்டம் முடிந்ததும், அவன் என்னிடம் தான் வருவான். அவனை திரிலோக சஞ்சாரியாக்கி, மூவுலகத்திலும் தேவர்கள், அசுரர்கள் செய்யும் தவறுகளைத் தடுக்கப் போகிறேன். அவன் இங்கே வந்ததும் பார்...தேவலோகமே கலகலக்கப் போகிறது, என்றார்.

லட்சுமிதேவியார் மகிழ்ந்தார். நாராயணனிடம் இசைசித்தனுக்காக சிபாரிசு செய்தாள். நாராயணமூர்த்தியே! தாங்கள் அவன் விஷயத்தில் தாமதம் செய்ய வேண்டாம். அவனை உடனடியாக இங்கு வரவழையுங்கள். நாராயண நாமத்தை பக்தியுடன் உச்சரிக்கும் எல்லாருமே என் குழந்தைகள் தான். அதிலும் இந்த குறும்புக்குழந்தையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவன் பேசினால் இசை...நடந்தால் இசை...பாடினால் இசை...தும்மினாலும் இசை...அவன் நம்மோடு இருக்கட்டும், அவனது கானம் கேட்டு தினமும் நான் மகிழ்வேன், என்றாள். நாம் பெருமாள் கோயிலுக்கு போனால், முதலில் தாயாரைத் தான் வணங்க வேண்டும். தாயாரிடம் நமது கோரிக்கையைச் சொல்லிவிட்டால், அவள் பெருமாளிடம் சொல்லி அதை நிறைவேற்றி வைத்து விடுவாள் என்பது ஒரு நம்பிக்கை. நம் வீட்டிலேயே அப்படித்தானே! பள்ளிச்சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், குழந்தை முதலில் அம்மாவிடம் தான் சொல்வான். அம்மா! நீ எப்படியாவது அப்பாவிடம் அனுமதி வாங்கித்தாயேன், என்று. அம்மாவும் சமயம் பார்த்து, அப்பாவிடம் அனுமதியும், செலவுக்கு பணமும் வாங்கிக் கொடுத்து விடுவாள். குழந்தை மகிழ்வான். அதுபோல், தெய்வத்தாயாரான லட்சுமியும் நம் கோரிக்கைகளை கவனித்துக் கொள்வாள். இங்கே இசைசித்தனின் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. ஒருநாள் இசைசித்தனின் மனதில் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் கானகம் நோக்கி நடந்தான். காட்டிற்குள் சிங்கங்களும், புலிகளும், கரடிகளும் இன்னும் கொடிய மிருகங்களும் நடமாடின. அவன் உயரமான ஒரு பாறையில் அமர்ந்தான். வைகுண்டத்தில் இருந்து இதைப் பார்த்த லட்சுமி பதைபதைத்து போனாள். நாராயணா! இது என்ன சோதனை! நான் சொன்னதென்ன! நீங்கள் செய்வதென்ன! குழந்தை இசைசித்தன் காட்டுக்குள் இருக்கிறான். அவனைச் சுற்றி கொடிய விலங்குகள் சுற்றுகின்றன. இதுதான் நீங்கள் அருள்பாலிக்கும் முறையா? என்றாள் கோபமும், அச்சமும் கொப்பளிக்க! லட்சுமி! என்னைக் குறை சொல்வதே உனக்கும், என் பக்தர்களுக்கும் வேலையாகப் போய் விட்டது. நீ தானே இசைசித்தனை இங்கே வரவழைக்கச் சொன்னாய். அதற்கான ஏற்பாட்டைத் தானே நான் செய்திருக்கிறேன், என்றார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:45:51 AM
நாரதர் பகுதி-3

கணவனை வசப்படுத்த மனைவிக்கு நன்றாகவே தெரியும். கெஞ்சினால் மிஞ்சுவார்கள்; மிஞ்சினால் கெஞ்சுவார்கள். மிஞ்சிப்பார்த்த லட்சுமியை நாராயணன் கேலியான தொனியில் பேசியதால், லட்சுமி இப்போது கெஞ்சலாகவும், கொஞ்சலாகவும் பேசி, அந்தச் சிறுவனை காட்டில் இருந்து காப்பாற்ற வேண்டினாள். நாராயணன் சிரித்தார். லட்சுமி, கவலை கொள்ளாதே. அவன் தன் மனதைப் பக்குவப்படுத்தும் விதத்திலேயே காட்டிற்கு அனுப்பியுள்ளேன். அங்குள்ள விலங்குகளும் அவன் மீது பாசம் செலுத்தவே செய்யும். அது மட்டுமல்ல, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த உலகம் அழியப்போகிறது. பிறக்கப்போகும் புது உலகத்தில் அவன் நம்மோடு இருக்க வகை செய்கிறேன், என்றார். பார்த்தீர்களா! தாயாரின் கருணையை. தாயாரை வணங்கினால், இப்பிறவியில் பாதுகாப்பு கிடைக்கிறது. மறுபிறவிக்கு அவளுடனேயே இருக்கும் பாக்கியம் கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதிக்கு போனால், பெருமாளை வணங்கும் முன்பு அலமேலு மங்கைத்தாயார் கோயிலுக்கு போய் தாயாரை வணங்க வேண்டும். அங்கே பகலில் நடக்கும் லட்சுமி பூஜையை கண் குளிர பார்க்க வேண்டும். பின்னர் தான் மலைக்கு ஏற வேண்டும். நாம் பெருமாளை அடையும் முன்பு, நம் கோரிக்கைகள் அடங்கிய பெட்டிஷனில் பெருமாள் கையெழுத்து போட்டு தயாராக வைத்திருப்பார். புரிகிறதா! திருமால் சொன்னது போலவே சில ஆண்டுகளில் உலகம் அழிந்தது. கடல் பூமியில் புகுந்து எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்டது. உயிரற்ற உடல்கள் அடையாளம் தெரியாமல் சுக்கு நுறாக நொறுங்கி, மண்ணோடு மண்ணாகி விட்டது. சூரியன் உள்ளிட்ட கிரகங்களும் அழிந்து போயின. எல்லா ஆத்மாக்களும் இறைவன் முன் வந்து நின்றன. அவ்வாறு நின்றதில் உபவருக்கனின் ஆத்மாவும் ஒன்று. அந்த ஆத்மாவுக்கு பிரம்மா வடிவம் ஒன்றைக் கொடுத்தார். இதனால், அவன் பிரம்மபுத்திரன் எனப்பட்டான்.

நாராயணனும், லட்சுமி தாயாரும் அந்த குழந்தையை உச்சிமோந்தனர். அவன் பிரம்மபுத்திரன் என்பதால், தாயாரான சரஸ்வதிதேவி குழந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருந்தாள். ஒருநாள் சரஸ்வதியிடம் , பிரம்மபுத்திரன், அம்மா! நீங்கள் வைத்திருக்கும் இந்த வீணையைக் கொண்டு, இனிமையாக இசை வடிக்கிறீர்கள். அதுகேட்டு உலகமே மயங்கி விடுகிறது. இது எப்படியம்மா? உங்கள் கைவிரல்களில் அப்படி என்னதான் சக்தி இருக்கிறது? என்றான். மகனே! இது சாதாரண வீணையல்ல. இதை வாசிப்பது இசைக்காக மட்டுமல்ல. மனிதர்களோ, தேவர்களோ, கந்தர்வர்களோ, இதர லோகத்தில் வாழ்பவர்களோ தறிகெட்டு அலையும் போது, இந்த வீணையை நான் வாசிக்கிறேன். அப்போது மகுடிக்கு எப்படி பாம்பு கட்டுப்படுகிறதோ, அதுபோல இதன் இசையால் இந்த உலகத்தை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன், என்றாள் சரஸ்வதி. அப்படியா தாயே! இந்த வீணையைக் கொடுத்தது யார் தாயே! தங்கள் தந்தையா! அல்லது எனது தந்தை பிரம்மனா, அல்லது தேவாதி தேவர்களா? என்றதும், இல்லை மகனே, அது ஒரு பெரிய கதை, என ஆரம்பித்தாள் சரஸ்வதி. பிரம்மபுத்திரன் தாயின் சரிதத்தைக் கேட்க தயாரானான். முற்காலத்தில் உன் தந்தைக்கு ஐந்து தலைகள் இருந்தன. அவருக்கு உலகைப் படைக்கும் ஆற்றல் தரப்பட்டிருந்தது. நாராயணன், அதைப் பாதுகாப்பராகவும், சிவபெருமான் ருத்ரனாகி அதை அழிக்கும் வல்லமையுள்ளவர்களாகவும் விளங்கினர். படைப்பதை விட அழிப்பது சுலபம். ஒரு மண்சட்டியை குயவன் செய்வதற்கு படாதபாடு படுவான், ஆனால், அதை கவனக்குறைவாக கையில் வைத்திருந்தால் கீழே விழுந்து நொறுங்கிப் போகும். அவ்வகையில் அழிவுக்கே அதிக சக்தி என்ற வகையில், அழிவுக்கடவுளான சிவன் மிகுந்த சக்தியுள்ளவராக இருந்தார். ஒருமுறை பிரம்மா ஒரு பெண்ணைப் படைத்தார். அவள் அழகு திலகமாய் ஜொலித்தாள். அவளைப் பார்த்ததும், அவருக்கு கடும் மோகம் ஏற்பட்டு விட்டது. அவளை அடைய விரும்பினார். அப்பெண் பயந்து ஓடினாள்.

படைப்பு தெய்வமே! தாங்களே இப்படி நடக்கலாமா? படைப்பவன் தந்தைக்கு சமானமானவன். அவ்வகையில் நீங்கள் எனக்கு தந்தையாகிறீர்கள். நீங்கள் என்னை அடைய நினைப்பது தவறு, என அப்பெண் கதறினாள். ஆனால், ஆற்றல் மிக்க பிரம்மாவிடம் அவளது வார்த்தைகள் எடுபடவில்லை. அவர் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டுவிட்டார். அப்பெண் அழுதபடியே சிவனின் பத்தினியான பார்வதியிடம் சென்று முறையிட்டாள். ருத்ரதாண்டவ மூர்த்தியான சிவனுக்கு இத்தகவல் சென்றது. அவர் பிரம்மனை அழைத்தார். பிரம்மனே! உலகில் எனக்கு மட்டுமே ஐந்து தலைகள். இதன்மூலம் பஞ்சபூதங்களையும் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். உலகோர் பார்வையில் ஒரு தலை மட்டுமே தெரியும். படைப்பது, காப்பது, அழிப்பது எல்லாவற்றையும் என் ஒருவனால் செய்ய முடியும் என்றாலும், என்னிடமிருந்து இரண்டு சக்திகளைப் பிரித்து உன்னிடமும், திருமாலிடமும் ஒப்படைத்துள்ளேன். என் சார்பில் உனக்கு ஐந்து தலையும் கொடுத்திருந்தேன். ஆனால், பெற்ற மகளுக்கு சமானமான பெண்ணை உன் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டாய். இனி என்னைப் போலிருக்க நீ தகுதியற்றவன், எனக்கூறி ஒரு தலையைக் கிள்ளி எடுத்துவிட்டார்.  இதன் பின் பிரம்மா நான்முகன் ஆனார். பின்னர் அப்பெண்ணை அழைத்த சிவன், இவனுக்கே மனைவியாய் இருந்து சகல லோகங்களையும் கவனித்து வா. உனக்கு இவ்வுலகத்திலுள்ள வித்தைகளுக்கு அதிபதியாய் இருக்கும் பாக்கியத்தை தருகிறேன். இனி நீ கலைவாணி எனப்படுவாய். இதோ! தேவலோகத்திலுள்ள இந்த வீணை உனக்குரியது. இதைக் கொண்டு உலக உயிர்களை மயக்கிவா என்றார். அவள் வேறு யாருமல்ல. உன் தாயான நான்தான், என்றாள். கதையைக் கருத்துடன் கேட்ட பிரம்மபுத்திரன், அம்மா! அந்த வீணையை எனக்குத் தாயேன். நான் மீட்ட வேண்டும், என்று கேட்டு அடம்பிடித்தான்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:47:02 AM
நாரதர் பகுதி-4

தலைவாணி மனமிரங்கினாள். குழந்தை கேட்டால் தாய் தரமாட்டாளா என்ன! தன்னிடமுள்ளது போலவே ஒரு சிறிய வீணையை உருவாக்கி பிரம்மபுத்திரனிடம் கொடுத்தாள். அதை மீட்டும் வல்லமையுடன், பாடும் திறனுக்கும் அருள் செய்தாள். அன்று முதல் பிரம்மபுத்திரன் வீணை மீட்டி தேவகானங்களை இசைத்து வந்தான். இந்த தேவகானம் எல்லா லோகங்களையும் ஈர்த்தது. சிவபெருமானும் இதை ரசித்தார். ஒருமுறை தாயிடம் பிரம்மபுத்திரன், அம்மா! சிலர் சர்வலோகங்களுக்கும் சென்று வரும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர். நானும் பாதாள லோகம், மேல் லோகம், பூலோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் நினைத்த நேரத்தில் வலம் வரும் சக்தி பெற வேண்டும். திரிலோக சஞ்சாரி என பெயர் வாங்க வேண்டும், என்றார். சரஸ்வதி அவனிடம், மகனே! நீ கேட்கும் விஷயம் அவ்வளவு எளிமையானதல்ல. அதற்கு சிவபெருமானின் கருணைப் பார்வை வேண்டும். நீ சிவனின் மனதை மகிழ்விப்பதன் மூலம் அதனைப் பெறலாம், என்றாள். இதை மனதில் வாங்கிக் கொண்ட பிரம்மபுத்திரன், தினமும் வீணாகானம் இசைத்தபடியே தேவலோக உயிர்களைக் கட்டிப் போட்டார். எதற்கும் கட்டுப்படாத சிவபெருமான் கூட இந்த இசைகேட்டு தலையசைத்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவி அவரிடம், தங்களையும், இந்த உலகத்தையும் மயக்கும் இந்த கானம் எங்கிருந்து வருகிறது? என்றாள். பார்வதி, பிரம்மபுத்திரன் என்ற சிறுவன் இதை வாசிக்கிறான். அவன் பிரம்மனால் உருவாக்கப்பட்டு, சரஸ்வதியை தன் தாயாக ஏற்றுக் கொண்டவன். தாயைப் போலவே வீணை மீட்டுவதில் வல்லவன். அவன் பேசினால் கூட அது கீதமாகத்தான் இருக்கும். அவனுக்கு நான் ஒரு வரம் தரலாம் என இருக்கிறேன். உன் அனுமதி கிட்டுமா? என்றார் கடைக்கண்ணை சிமிட்டியபடி. குழந்தைகள் என்ன விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதே தாய், தந்தையான நமது கடமை. அதிலும் திறமை மிக்க குழந்தைகள் கேட்கும் போது ஒன்றுக்கு பத்தாகக் கொடுக்க வேண்டுவதும் நமது பணியே. இவனுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்? ஒன்றா...பத்தா? என்றாள் பார்வதி.

மூன்றுஎன முடித்த சிவனிடம், அதென்ன மூன்று, என்றாள் பார்வதி. பார்வதி! பூலோகத்திலுள்ள நமது பக்தர்கள் நாம் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்கு வந்தால், எத்தனை முறை சுற்றுகிறார்கள்? எனக் கேட்டார்.பொதுவாக மூன்று முறை.ஏன் அந்த மூன்றிற்கு முக்கியத்துவம் தெரியுமா? பார்வதி அதற்கான விடையையும் அவரிடமே எதிர்பார்த்தாள். அன்பானவளே! மூன்று என்ற சொல்லில் கடமை என்ற வார்த்தை பொதிந்து கிடக்கிறது. உலகில் குழந்தைகளுக்கு பெற்றவர்கள் பல பொருட்களை வாங்கிக்கொடுத்தாலும், அவர்கள் ஆர்வமின்றி மூலையில் போட்டு விடுகிறார்கள். பிரம்மபுத்திரன் அப்படியல்ல. தாய் அன்போடு கொடுத்த வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கிறான். அந்த இசை சர்வலோகங்களையும் கவருகிறது. அப்படிப்பட்ட பிரம்மபுத்திரனுக்கு மூன்று லோகங்களையும் பெற ஆசை. கடமையில் கருத்தாயிருக்கும் எவனும் மூன்று லோகங்களுக்கும் அதிபதியே. அவ்வகையில் பிரம்மபுத்திரனும் த்ரிலோகாதிபதியாகிறான். அவன் விருப்பம் போல அவனை திரிலோக சஞ்சாரியாக்கப் போகிறேன், என்றார் சிவன். இந்த நேரத்தில் நாரதர் சிவலோகத்துக்கு வந்தார். நந்தியெம்பெருமானை வணங்கி, தன்னை அறிமுகம் செய்து, சிவனைப் பார்க்க அனுமதி பெற்றார். நந்திதேவரும் அனுமதித்தார். நாரதர் பக்திப்பிழம்பாய் ஜொலித்த சிவபெருமானை வணங்கினார். இறைவா! உமையொரு பாலா! தங்கள் தரிசனம் கிடைக்க ஆவலாக இருந்தேன். என் தாயின் அறிவுரைப்படி அதற்குரிய சமயம் இப்போது தான் அமைந்தது. பரம்பொருளே! நான் நன்றாகப் பாடுவேன். இசையமைப்பாளனும் நானே. எனக்கு மூன்று லோகங்களிலும் தங்களின் திருப்புகழையும், ஸ்ரீமன் நாராயணனின் திருப்புகழையும் பாடுவேன். அதற்கேற்றாற் போல் திரிலோக சஞ்சாரியாகத் திகழும் பாக்கியம் வேண்டும், என்றார்.

சிவபெருமான் சிரித்துக் கொண்டே, நான் இப்போது ஆடப்போகிறேன். எனது நடனத்திற்கேற்ப உன் வீணையை மீட்டு. ஆட்டமும், பாட்டும் இணைந்து வந்தால் நீ கேட்டது கிடைக்கும், என்றார். அம்பலத்திலே ஆட ஆரம்பித்தார் சிவன். நாரதர் வீணை இசைக்க மற்றவர்கள் பல்வேறு தாளம் போட, ஆடி மகிழ்ந்த சிவபெருமான், நாரதர் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டார். வானவர்கள் அவருக்கு ஆசி கூறி, நாரத...நாரத... என அழைத்தனர். நாரதர் என்றால் இறையருள் பெற்ற இசை வல்லுநர் எனப் பொருள். நாரதர் பெரும் மகிழ்ச்சியுடன் நடந்ததை தாய் தந்தையிடம் விவரித்தார். பின்னர் அங்கிருந்து வைகுண்டம் புறப்பட்டார். திருமால் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் காட்சியை முதன் முதலாகப் பார்த்த அவர், நாராயண...நாராயண... என பரந்தாமனின் திருநாமங்களைத் துதித்தார். அன்றுமுதல் அவரது அன்றாடச்சொல்லில் நாராயண என்பது இடம் பெற்றது. திரிலோக சஞ்சாரியான நாரதரை உலக நலன் கருதி, கலகப்பிரியராக மாற்ற விரும்பினார். தங்களுக்கும் நண்பர், எதிரிகளுக்கும் நண்பர் என்ற நிலையை எடுக்கும் வகையில் சில லீலைகளைச் செய்தார். அதாவது, தேவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு எதிரான அரக்கர்களிடம் நட்பு கொள்வது போல் நடிப்பது, தேவர்களைப் பற்றிய ரகசியத்தை அரக்கர்களிடமும், அரக்கர்களைப் பற்றிய ரகசியத்தை தேவர்களிடம் சொல்வது...இப்படி செய்வதன் மூலம் அசுர சாம்ராஜ்யத்தைத் சரிப்பதென்ற நிலையை எடுத்தார். அது மட்டுமல்ல, அகம்பாவம் கொண்டவர்களை அவர் மூலம் அடக்கவும் ஏற்பாடு செய்தார்.
 
 
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:48:23 AM
நாரதர் பகுதி-5

பகவான் கிருஷ்ணன் ஒருமுறை நாரதரை அழைத்தார். பிரம்மபுத்திரனான உனக்கு லோக நன்மை கருதி, ஒரு பணி தரப்போகிறேன். அதை செய்து முடிக்க சரியான ஆள் நீ தான். இதை தயவுதாட்சண்யமின்றி செய்ய வேண்டும். நானாக இருந்தாலும் சரிதான்...நடுநிலை மாறக்கூடாது. உலகத்தில் அசுரர்களின் அட்டகாசம் அதிகமாகி விட்டது. தேவர்களிடையே கூட அவ்வப்போது ஆணவ உணர்வு தலையெடுக்கிறது. தேவர்களில் ஆணவம் மிக்கவர்களை அடக்க நீ அரக்கர்களைத் தூண்டி விட வேண்டும். அரக்கர்களின் அட்டூழியத்தைச் சரிக்க, தேவர்களைத் தூண்டி விட வேண்டும். அப்படியானால் தான் உலகம் சமநிலை பெறும். கலகமூட்டுபவனை நாரதன் என்பர்.இன்றுமுதல் பிரம்மபுத்திரனான நீ நாரதன் எனப்படுவாய். உன் பணியை இன்றே துவக்கு, என்றார் பரமாத்மா. நாராயணா! தாங்கள் கொடுத்துள்ள பணி மிகவும் சிரமமானது. இருப்பினும் தங்கள் துணை எனக்கு இருக்கும் போது, எனக்கு ஆபத்தில்லை என்பது உறுதி. இதைத் தாங்கள் வாக்குறுதியாகவும் தர வேண்டும், என்றார் நாரதர். நாராயணன் அவருக்கு நல்லாசி வழங்கினார். நாரதா! இந்த உலகம் உள்ளவரையில் உனக்கு அழிவில்லை. கொஞ்சம் கூட சுயநலமின்றி, நல்லது நடப்பதற்காகச் செய்யப்படும் கலகங்களுக்கு என் சன்னிதானத்தில் முழு நன்மை உண்டு. போய் வா! என்றார். நாரதர் புறப்படவில்லை. சற்றே தயங்கினார்.என்ன நாரதா கிளம்பவில்லையா, என்றார் பரமாத்மா. அவர் கிளம்பாமல் இருந்ததும் கூட அந்த பரந்தாமனின் சித்தம் தான். நாரதர் கண்ணனிடம், பெருமாளே! மன்னிக்க வேண்டும். கலகத்தை நம் வீட்டிலேயே துவங்கலாம் என இருக்கிறேன். ஏனென்றால், உலகத்தின் ஆணவத்தை போக்க முயல்பவன் முதலில் தன் வீட்டிலுள்ள அழுக்கைத் துடைக்க வேண்டும். லோகாதிபதிகளான மும்மூர்த்திகளும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் தேவியருக்குள்ளோ அவ்வளவு ஒற்றுமை இருப்பதாக எனக்குப்படவில்லை. அவரவருக்கு என ஒரு ராஜ்யம் அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த ராஜ்யங்களால் நன்மையே நடக்கிறது என்றாலும். மூன்றையும் ஒன்றாக இணைத்தால் உலகத்திற்கு மேலும் நன்மை நடக்கும். நான் சொல்வது சரிதானே, என்றார் நாரதர்.

நாரதா! நான் சரியான ஒரு ஆளைத் தான், கலகம் செய்ய நியமித்துள்ளேன். நீ சுற்றி வளைத்து என் வீட்டிலேயே கலகத்தை ஆரம்பிக்க நினைப்பது புரிகிறது. வேலையைக் கொடுத்தவனே கொடுத்த வேலையை செய்யாதே என தடுப்பது அஸ்திவாரத்தையே அசைத்து விடும். உம்...உம்...உனக்குத்தான் சகல அதிகாரமும் கொடுத்து விட்டேனே! உன் வேலையை நீ பார். என்னால் உனக்கு எந்த சிரமமும் வராது, என்றார். நாரதர் பகவானின் காலில் விழுந்து ஆசி பெற்று புறப்பட்டார். அன்னை லட்சுமி அந்தப்புரத்தில் இருந்தாள். நாரதர் அங்கிருந்த வாயில்காக்கும் பெண்கள் மூலமாக அனுமதி பெற்று அன்னையின் இருப்பிடத்திற்குள் நுழைந்தார். நாரதரை எழுந்து வந்து வரவேற்ற லட்சுமி, மகனே! எப்படியடா இருக்கிறாய்? உன்னைப் பார்க்க எவ்வளவு ஆவலாய் இருந்தேன் தெரியுமா? என்று சொல்லி அவரை உச்சி மோந்தாள். மகனே! உன் கானம், உன் வீணை இசை சர்வலோகங்களையும் மயக்குகிறது. அதைக் கேட்டு மகிழ மனம் துடிக்கிறது. ஆனால், நீ அமைதியாய் இருக்கிறாயே! முகம் வேறு உம்மென்று இருக்கிறது? நாராயணன் உன்னைத் திட்டினாரா? நீ பூலோகத்தில் இருந்த போது, உனக்காக அந்த பரந்தாமனிடம் நான் எந்தளவுக்கு வாதிட்டேன் தெரியுமா? அவர் உன்னை ஏதாவது சொல்லியிருந்தால், நான் அவரிடம் உனக்காக வாதிடுகிறேன். நீ தவறே செய்திருந்தாலும் பரவாயில்லை. குழந்தை தவறு செய்தால் தாய் பொறுக்க மாட்டாளா என்ன! என அவரது தலையை வருடியபடியே, ஆறுதலாய்ச் சொன்னாள் செல்வத்தரசி. நாரதர் அன்னையை ஏறிட்டுப் பார்த்தார். மீண்டும் தலை குனிந்தபடி அப்பாவி போல் உட்கார்ந்திருந்தார். லட்சுமி அவரை மேலும் உலுக்கினாள். நாரதா! நான் இவ்வளவு கேட்டும் நீ பதில் பேசாமலே இருந்தால் எப்படி? என்றாள் இரக்கத்தையும், கண்டிப்பையும் குழைத்து. நாரதர் திருவாய் மலர்ந்தருளினார்.

அம்மா! என்ன சொன்னீர்கள்? சரியாய் போச்சு! நான் சொன்னதையே நீ கேட்கவில்லையா? கேட்டேன் தாயே! ஆனால், பதிலளிக்கும் நிலையில் நான் இல்லை, என்ற நாரதரிடம், நாரதா! நீ ஏதோ குழப்பத்தில் இருக்கிறாய். உனக்கு என்ன ஆயிற்று என்பதை பதட்டப்படாமல் சொல், என்றாள். தாயே! செல்வத்துக்கு அதிபதியே! மகாலட்சுமியே! ஐஸ்வர்ய ராணியே! உங்களை விட உயர்ந்த ஒரு பொருள் இவ்வுலகில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஸ்ரீமன் நாராயணன், பூமியிலே சீனிவாசனாய் அவதரித்த போது, பத்மாவதியாய் பிறந்த தங்களை மணம்முடிக்க அவரே கடனாளி ஆகியிருக்கிறார். நீங்கள் அப்படியில்லை. செல்வாதிபதி. எல்லாரும் கர்ப்பப்பையில் ரத்தம் சொட்ட சொட்ட பிறப்பார்கள். நீங்கள் பாற்கடலில் பிறந்தவர். அப்படிப்பட்ட செல்வச் சீமாட்டியான உங்கள் முன் இந்த வீணையை இசைக்க எனக்கு தயக்கமாக இருக்கிறது, என்றார் நாரதர். ஏன்... அதிலென்ன பிரச்னை? தாயே! காதைக் கொடுங்கள். உங்களிடம் மட்டும் ரகசியமாகக் கூறுகிறேன். இந்த வீணையை என் தாய் கலைவாணி தான் எனக்கு பரிசளித்தார். இதை மீட்டும் ஞானமும் தந்தார். இசைஞானம் அறிந்தவர்கள் முன்னால் இதை மீட்டு என்றார். நான் நாராயணனின் முன்பு இதை மீட்டினேன். தங்களையும் அழைக்கச் சொன்னேன். அதற்கு அவர், அவளுக்கு இதெல்லாம் புரியாது. உன் அன்னை கலைவாணிக்கு மட்டுமே இந்த இசைக்கலை முழுமையாகத் தெரியும். தங்களுக்கு காசை எண்ணி பூட்டி வைக்கத்தான் தெரியும் என்றார். அதனால் தான் நான் அமைதியாக இருக்கிறேன், என்று பதில் சொன்னார் நாரதர். லட்சுமி கொதித்தாள். உன் அன்னைக்கு மட்டும் தான் கலைகளின் ரகசியம் தெரியும் என்றால் நான் ஞானசூன்யமா? என்று சீறினாள். அவளது முகம் அவள் அமர்ந்திருந்த செந்தாமரையை விட அதிகமாகச் சிவந்தது.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:49:45 AM
நாரதர் பகுதி-6

லட்சுமிதேவி நேராக நாராயணனிடம் சென்றாள். அன்பரே! தங்கள் மீது நான் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறேன் என்பதைத் தாங்களே அறிவீர்கள்! உங்கள் மார்பிலேயே குடியிருப்பவள். நீங்கள் சயனிக்கும் போது, சற்றும் கண் அயராமல், தங்கள் திருவழகை ரசித்தபடி, பாதங்களை பிடித்து விடுபவள். சகல ஐஸ்வர்யங்களுக்கும் சொந்தக்காரி, என்றவளை இடைமறித்த பரந்தாமன், லட்சுமி! எதற்காக இதைச் சொல்கிறாய்? இதெல்லாம் எனக்கு தெரிந்தது தானே! என் மனைவியை விட உலகில் உயர்ந்தவர் உண்டோ?  கணவனைக் கவனிப்பதில் உனக்கு நிகர் நீ தான், என்றார். நடைமுறையில் அப்படியில்லையே! எனக்கு இசை ஞானம் இல்லை என்றீர்களாமே! எனக்கு இசைக்கருவிகளை மீட்டத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்த இசையைப் படிக்கவும், இசைக்கருவிகளை வாங்கவும் நான் நினைத்தால் தான் முடியும். செல்வமின்றி, இவற்றை யாரால் கற்க இயலும்? என்ற லட்சுமியிடம், லட்சுமி! உனக்கு என்னாயிற்று? உனக்கு இப்போது என்ன வேண்டும்? என்பதைத் தெளிவாகச் சொல், என்றார் நாராயணன். நாரதன் தன்னிடம் கூறியதை ஒன்று விடாமல் விவரித்தாள் லட்சுமி. ஓ! இது நாரதன் கூத்தா? வார்த்தைக்கு வார்த்தை நாராயணா...நாராயணா... என்று என்னை அழைக்கிறான். ஆனால், என் வீட்டிலேயே குழப்பம் உண்டாக்கி விட்டு போய்விட்டான். வரட்டும், அவனைக் கவனித்துக் கொள்கிறேன், என்ற நாராயணனிடம், தன் கேள்விக்கு பதில் கிடைக்காததால், சற்றே கோபித்துக் கொண்டு தன் இருப்பிடம் போய்விட்டாள் லட்சுமி. நாரதரை மனதிற்குள் வாழ்த்திய நாராயணன், அவர் இப்போது எங்கிருப்பான் என பார்த்த போது, சிவலோகத்துக்குள் புகுவதைப் பார்த்து கலகலவென சிரித்தார். நந்தியம்பதியிடம் அனுமதி பெற்று பார்வதி சமேத சிவபெருமானைச் சந்தித்தார் நாரதர். நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, எனச்சொல்லி அவரது திருவடியைப் பணிந்தார்.

வா நாரதா! இன்றைய உன்  மூவுலக பயணம் எப்படி இருக்கிறது? என்று ஏதும் தெரியாதவர் போல் கேட்டார் சிவன்.அதற்கு நாரதர், மகாபிரபு! இன்று வைகுண்டம் மட்டும் தான் போனேன். அங்கேயே சிறு குழப்பம். இதன்பிறகு எங்கு போவதென தெரியவில்லை. தங்களிடம் பிரச்னையை சொல்லலாம் என்றாலும், இது பெண்கள் தொடர்புடைய விஷயம் என்பதால், பார்வதிதேவியாரிடம் சொல்வது தான் முறையாக இருக்கும் என்று நினைத்து இங்கு வந்து விட்டேன். லோகத்திற்கே தாயான அவர், என் சந்தேகத்தை எளிதில் தீர்த்து வைத்து விடுவார் என்று உறுதியாக நம்புகிறேன், என்றார்.குழந்தாய் நாரதா! முதலில் நடந்ததைச் சொல். அதன்பிறகு தீர்வைக் காண்போமே, என்றாள் பார்வதி நாரதரின் நடுக்குடுமியை வருடியபடி. நடந்ததை தேவியிடம் தெளிவாகச் சொன்னார் நாரதர். கலகலவென நகைத்தாள் பார்வதி. சிவபெருமான் அவளிடம், தேவி! நாரதன் நியாயத்தைத் தானே சொன்னான். கலை, கலைவாணிக்கு சொந்தம். செல்வம், லட்சுமிக்கு சொந்தம். தத்தமக்கு உரியதை அவர்கள் தெளிவாகத்தான் சொல்லியுள்ளனர். நீ ஏன் பைத்தியக்காரி போல சிரிக்கிறாய். நாரதனிடம், அந்த இரண்டும் சமநிலையுடையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது தானே, என்ற சிவனிடம், பெருமானே! தாங்களே சொல்லிவிட்ட பிறகு அன்னையார் மறுக்கவா போகிறார்கள். கல்வியும், செல்வமும் சமநிலையுடையது. இதுதான் என் கேள்விக்கு பதில் என்றால், போதும்...இத்துடன் பிரச்னை தீர்ந்ததாக நினைத்துக் கொள்கிறேன், என்றார் நாரதர். ஏ...நாரதா... கோபம் கொப்புளிக்க பார்வதிதேவி நாரதரை அழைக்க, தாயே, பராசக்தி...ஏன் திடீரென இந்த காளிகோலம். நான் ஏதாவது தவறாக பேசிவிட்டேனா, என்றார் பதைபதைப்புடன் நடித்த நாரதர். நீ பிறந்ததே தவறு தான். பிரச்னைக்கு தீர்வு சொல்ல இந்த மனிதர் யார்? நீ இவரிடமா கேள்வி கேட்டாய். கேள்வி யாரிடம் கேட்கப்படுகிறதோ, அவர்கள் பதிலளித்தால் தான் முறையானது, மரியாதையும் கூட. மேலும் இவரது மைத்துனன் மனைவி லட்சுமி. அவ்வகையில் அவள் இவருக்கு தங்கை முறை.

தங்கையை எந்த சகோதரனாவது விட்டுக் கொடுப்பானா? அவ்வகையில், இவர் தன் தங்கையின் கருத்தை ஆதரிக்கிறார். இனிமேல், கேள்வியை என்னிடம் கேட்டால், பதிலையும் என்னிடமே கேட்டுப் பெறு. இல்லாவிட்டால், என் கண்ணிலேயே படாதே, ஓடிவிடு,என்றாள் முகம் சிவக்க. தாயே! அவரை எப்போதுமே நான் உயர்த்தி தான் பேசுவேன். நீங்கள் இப்போது என்னைக் கோபித்தீர்கள். எனக்கு ஏதாவது ஆனதா? ஆனால், அவர் கருத்தை மறுத்தால், உடனே நெற்றியிலுள்ள கண்ணை படக்கென திறந்து விடுவார். இப்படித்தானே இவர் உலகத்துக்கே நல்லது செய்யப் போன மன்மதனையே எரித்தார். இப்போது கூட பாருங்கள்! கட்டிய மனைவியின் கருத்தை ஆதரிக்காமல், சகோதரியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இவரைப் போன்றவர்களிடம் ஒதுங்கிப் போவது தான் எங்களைப் போன்றவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால், சாபம் கொடுத்து பூலோகத்தில் மானிடப் பிறவி கொடுத்து, துன்பத்தில் மூழ்கடித்து விடுவார். உங்களையே தக்கனின் மகளாகப் பிறக்கச் செய்தவர் அல்லவா? என்று பற்ற வைத்தார் நாரதர்.நியாயத்தைச் சொன்னாய் நாரதா. அது கிடக்கட்டும். சரஸ்வதிக்கு சொந்தமானது இசைக்கலை. அது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் தான். அந்த இசையை ஒரு குருநாதரிடம் கற்கவும், இசைக்கருவிகளை வாங்கவும் செல்வம் வேண்டும் என்ற என் மைத்துனி லட்சுமியின் கருத்திலும் எந்த பாதகமும் இல்லை. ஆனால், வீணை இருந்தும் பயனில்லை. அதை மீட்டும் முறையும் தெரிந்தும் பலனில்லை. இதை மீட்ட கைகளுக்கு அசையும் சக்தி வேண்டுமே. அந்த சக்தி நானல்லவா? என்றாள். தாயே! பார்த்தீர்களா! இந்த விபரம் தெரியாமல் அல்லவா, லட்சுமி தேவியார் சொன்னதை நான் நம்பி விட்டேன். உங்கள் கருத்து தான் சரி, என்று சொல்லி, பார்வதிதேவியின் பாராட்டைப் பெற்று, நடந்த விபரத்தை தன் தாய் சரஸ்வதியிடம் சொல்வதற்காக கிளம்பினார் நாரதர்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:51:52 AM
நாரதர் பகுதி-7

சத்தியலோகம் களை கட்டியிருந்தது. அன்னை கலைவாணி இசைத்த வீணாகானம் அந்த லோகத்தை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. தேவருலகம் அந்த கானத்தில் மயங்கிக் கிடந்தது. இந்திரலோகத்தில் எதிரொலித்த அந்த இசை கேட்டு, ரம்பா, ஊர்வசி, திலோத்துமா ஆகியோர் தங்களை மறந்து நடனமாடினர். இந்த இனிமையான சூழலில், நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அந்த இசை ஞானியும், தன் அன்னையின் இசையில் மயங்கினார். சொந்த வீடல்லவா! அதனால் சற்றே உரிமையுடன் அன்னையின் அருகில் அமர்ந்து, கானத்தை ரசித்தார். இசைவெள்ளத்திற்கு சற்றே ஓய்வு கொடுத்து, கலைவாணி கண் திறந்தாள். அருகில் நாரதர் அமர்ந்திருந்தார். மகனே! எங்கே போயிருந்தாய்? சிவபெருமான், உன்னை திரிலோக சஞ்சாரியாக திரிய வரம் தந்ததில் இருந்து நீ வீட்டிலேயே இருப்பதில்லை. வீட்டில் இருந்து தந்தைக்கு உதவியாக, தாய்க்கு அனுசரணையாக ஏதாவது உதவி செய்யலாம் என்ற எண்ணமாவது உன்னிடம் இருக்கிறதா? தாய் கடிந்து கேட்டாலும், மகன் மீதான பாசமும், அக்கறையும் வெளிப்பட்டன. அம்மா! என்னைத் திட்டாதீர்கள். நான் ஒன்றும் பொறுப்பில்லாதவன் அல்ல. ஆனால், பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியவர்கள் தான் பொறுப்பற்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தங்களைப் பற்றி... என் தாய்க்கு ஏதாவது இழுக்கு என்றால், அதைப் போக்குவது மகனான எனது கடமையல்லவா? அதை எப்படி செய்வதென தெரியாமல் தான் விழித்துக் கொண்டிருக்கிறேன். அலைந்து கொண்டிருக்கிறேன்,. சரஸ்வதிக்கு ஏதும் புரியவில்லை. இந்நேரத்தில், பிரம்மா வந்தார். சரஸ்வதியும், நாரதரும் அவரது பாதக்கமலங்களை நமஸ்கரித்தனர். மகனே! எங்கே சென்றிருந்தாய்! நீண்ட நாளாக உன்னைக் காணவில்லையே, என்றதும், அதைத்தான் நானும் விசாரித்தேன். அவன் என்னென்னவோ சொல்கிறான். எனக்கு இழுக்கு என்கிறான், என்றாள் சரஸ்வதி.

நாரதா! உன் சேஷ்டையை யாரிடமாவது காட்டினாயா? உன் தாயை யாரோ பழித்திருக்கிறார்கள் என்றால், எந்தச் சூழ்நிலையில் அப்படி பழித்தார்கள்? நீ ஏதாவது அவர்களிடம் வம்பிழுத்தாயா? அந்த கோபத்தில் சரஸ்வதியைப் பற்றி ஏதாவது சொன்னார்களா? என சற்று காட்டமாகவே கேட்டார் பிரம்மா. தந்தையே! இந்த உலகத்தில் என்னை நம்புவார் யாருமில்லை என ஆகிவிட்டது. எல்லாம் நீங்கள் என் தலையில் எழுதிய விதிதான். நான் நல்லது செய்தாலும் எல்லாருக்கும் கெட்டதாகத்தான் தெரிகிறது, என அப்பாவித்தனமாக விழிகளை உருட்டிக் கொண்டு சொன்ன நாரதர் நடந்ததைச் சொன்னார். தாயே! வைகுண்டம் சென்றேன் ஸ்ரீமன் நாராயணனை தரிசிக்க. அவரருகே அமர்ந்திருந்த லட்சுமி தேவியார்,  உன் அம்மா வைத்திருக்கிறாளே வீணை. அது அவளுக்குச் சொந்தமானதல்ல. நான் செல்வத்துக்கு அதிபதி. அந்த செல்வத்தைக் கொண்டு வாங்கப்பட்டது தான் இந்த வீணை, என்றார்கள், என நாரதர் சொல்ல, பிரம்மா இடைமறித்தார். ஏ நாரதா! கலகம் செய்யாதே! யாராவது ஒருவர், நாம் ஏதாவது சொல்லாமல், தானாக இப்படி பேசுவார்களா? நீ தான் ஏதாவது சொல்லியிருப்பாய், அவள் அதற்கு அப்படி பதில் சொல்லியிருப்பாள், என்றார் கோபமாக.அப்பா! நீங்கள் எப்போதுமே இப்படித்தான். என் மீது சந்தேகப்படுவதே வாடிக்கையாகி விட்டது. நாராயணனும், லட்சுமியும் தற்செயலாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாதம் வந்து விட்டது. அதில் என்னையும் அவர்களாகத்தான் இழுத்தனர். அப்போது, லட்சுமி உதிர்த்த வார்த்தைகள் தான் இவை, என்றார் நாரதர் முகத்தை தாழ்த்திக் கொண்டு. வெள்ளைத் தாமரைப் பூவில் வீணாகானம் செய்யும் சரஸ்வதிக்கு கோபம் வந்து விட்டது. என் அன்புக்கணவரே! என் மகனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்திருக்கிறாள் இந்த லட்சுமி. என் வீணை இசையின் மகிமையை தாங்க முடியாத அவள், இப்படி என்னை அவமானப்படுத்தி இருக்கிறாள்.

நீங்கள் அவளைக் கண்டித்து  வாருங்கள். நீங்கள் போகாவிட்டால் நானே போகிறேன், என்று சரஸ்வதி பொங்கியதும், அம்மா! அங்கே மட்டும் போனால் போனாது. சிவலோகத்தில், பார்வதிதேவியையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும், என்றார் நாரதர்.பிரம்மா அதிர்ந்து விட்டார். அடேய்! சிவலோகத்துக்கு வேறு போனாயா? அங்கு என்ன வம்பு செய்தாயோ? அந்த சிவனுக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். ஐந்து தலையுடைய என்னை ஏற்கனவே நாலு தலையாக்கி விட்டார். இனி நெற்றிக்கண்ணையும் திறப்பார், என்று நடுங்கினார். சரஸ்வதி கோபக்கனல் வீச, அவள் என்ன சொன்னாள்? சொல், என்று விரட்டினாள்.அம்மா! நீங்கள் பலமில்லாத வராம். நீங்கள் வீணை இசைப்பதற்குரிய சக்தியை அந்த தேவி தான் கொடுக்கிறாராம். தன் அருள் இல்லாவிட்டால், உன் அன்னை இசைவாணியாக முடியுமா? என்கிறார். மனம் வேதனைப்பட்டு, வந்துள்ளேன். என் சொந்தத்தாயான நீங்கள் தான் உயர்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதைச் செய்தால் தான் எனக்கு உணவு, தூக்கம் எல்லாம்... என்று சொல்லிவிட்டு அகன்றார்.பிரம்மாவுக்கு புரிந்து விட்டது. மூன்று லோகங்களுக்கும் இடையே பயங்கரவாதப்போர் நடக்கப்போகிறது என்று. நடுக்கத்துடன், அவர் நாராயணனைச் சந்திக்கச் சென்றார்.பரந்தாமா! என் மகன் நாரதன் தங்கள் பக்தன். நாராயணா என்ற வார்த்தையைத் தவிர வேறெதையும் உச்சரித்து அறியான். லட்சுமிதேவியார் ஏதோ தற்செயலாகச் சொல்ல, அதை அவன் அன்னையிடம் சொல்லி விட்டான். சரஸ்வதி கோபத்தில் இருக்கிறாள். அவள் இங்கு வந்தால், கோபித்துக் கொள்ளாதீர்கள், என்று பணிவாக சொன்ன பிரம்மனிடம், பிரம்மா! அவளைக் கோபிக்க எனக்கு வழி இல்லையே! ஏனெனில், நாரதன் உன்னிடம் சொன்னது அனைத்தும் உண்மை. என் மனைவி அவ்வாறு பேசியது நிஜம் தானே, என்றார் கண்ணைச் சிமிட்டியபடி நாராயணன்
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:53:13 AM
நாரதர் பகுதி-8

பிரம்மனுக்கு இன்னும் தர்மசங்கடமாகி விட்டது. இருப்பினும், நாரதன் மீது எந்த பழுதும் இல்லை என்பதால் மகிழ்ச்சி கொண்ட அவர், நாராயணா! தாங்களும், சிவனும் ஏதோ லீலை நடத்த எண்ணி விட்டீர்கள் என்பது புரிகிறது. சரி...நடப்பது நடக்கட்டும். தங்கள் இருவரின் விளையாடல்களை தடுக்க யாரால் முடியும்?என சொல்லிவிட்டு விடைபெற்றார். அவர் வைகுண்டத்தில் இருந்து வெளியேறும் சமயத்தில், சரஸ்வதி உள்ளே வந்து கொண்டிருந்தாள். பிரம்மா ஒளிந்து நின்று கொண்டார். சரஸ்வதி ஆவேசமாக வைகுண்டத்துக்குள் சென்று விட்டாள். அதன்பிறகு பிரம்மா, அங்கிருந்து அகன்று விட்டார். ஏ லட்சுமி, எங்கே இருக்கிறாய்? என்று ஏக வசனத்துடன் நுழைந்த சரஸ்வதியைப் பார்த்து, பரந்தாமனின் அருகில் இருந்த லட்சுமி இறங்கி ஓடோடி வந்தாள். சகோதரி! நலமாக இருக்கிறாயா? ஏன் இந்த பதட்டம் உனக்கு? இப்போது தான் உன் கணவர் வந்தார். நாராயணனுடன் தனித்துப் பேசினார். ஆண்கள் உரையாடும் போது, பெண்களுக்கென்ன வேலை என நான் ஒதுங்கி போய் விட்டேன். இப்போது நீ வந்திருக்கிறாய். ஒருவேளை, கணவன், மனைவிக்குள் ஏதேனும் உரசலோ? என்றாள் லட்சுமி நிஜமான அக்கறையுடன்.உம்! அப்படி வேறு நடக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாயா? என் மகன் நாரதனிடம், நீ என்ன சொன்னாய்? முதலில், அதற்கு பதில் சொல், என்றாள் சரஸ்வதி காட்டமாக. சரஸ்வதி! அவன் உனக்கு மட்டுமல்ல! நாராயணனின் பக்தர்கள் அனைவரும் எனது குழந்தைகள். அவ்வகையில், நாராயணனின் முதன்மை பக்தனான அவன், எனக்கு தலைமகன் ஆகிறான். அவனிடம் நான் ஏதும் சொல்லவில்லையே, என்றாள் லட்சுமி. லட்சுமி! செல்வத்துக்கு அதிபதி என்ற செருக்கில் பொய் பேசாதே.

பொய் பேசுபவரிடம் செல்வம் நிலைப்பதில்லை. எனக்கு இசைக்க மட்டும் தான் தெரியுமென்றும், நான் வைத்திருக்கும் வீணையை உனக்கு கட்டுப்பட்ட செல்வத்தில் இருந்து வாங்கியதாகவும் பெருமை அடித்தாயாமே. அப்படி பார்த்தால், உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை கணக்குப் பார்க்க, என்னிடமுள்ள கல்வி வேண்டும் என்பதை மறந்து விடாதே. செல்வமிருந்தால் வீணையை வாங்க மட்டும் தான் செய்யலாம். ஆனால், அதை ஒரு அறையில் போட்டு பூட்டி வைக்கத்தான் முடியும். அதை இசைத்தால் தானே இனிய கான மழையில் நனையமுடியும், என்றாள் சரஸ்வதி.லட்சுமி கோபிக்கவில்லை.சரஸ்வதி! உன் ஆதங்கத்தை உணர்கிறேன். நான் இதை மிகச்சாதாரணமாக தான் சொன்னேன். குழந்தை நாரதன் மனம் புண்பட்டு விட்டான் போலும்! அதனால், உன்னிடம் ஏதோ சொல்ல, நீயும் கோபத்துடன் வந்து விட்டாய். லோகத்திற்கு கல்வியே முழு முதல் பொருள் என்பதை நான் அறியாதவளா என்ன? கல்வியுள்ளவனுக்கே உலகத்தில் மதிப்பு அதிகம். அவனே சிறந்த வேலைகளைப் பார்க்க தகுதியுள்ளவன் ஆகிறான். கல்வி பெருக பெருக, என்னிடமுள்ள செல்வம் அவனைப் போய் சேர்கிறது. இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. நாரதன் நம்மிடையே கலகமூட்ட விரும்பியது நாராயணனின் செயல். ஆனால், உன் பெருமையை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்தார். உன்னை அடுத்து தான் நான். உலகத்தில் கல்வியே சிறந்தது, என்று சொல்லி முடிக்கவும், ஓடி வந்த பார்வதி சரஸ்வதியை அணைத்துக் கொண்டாள். சரஸ்வதி! நீயே உலகத்தின் அதிபதி. நீயின்றி உலகமில்லை. உலகிலுள்ளோர் எதிர்காலத்தில் கல்விக்காகவே அதிக நிதியை செலுத்துவர். என்னிடமுள்ள ஆற்றலைப் பயன்படுத்தி, அதைப் பாதுகாக்க ஏற்பாடு செய்வர். ஒரு தனிமனிதனின் பாவ, புண்ணியங்களைப் பொறுத்து, அந்த நிதியை பாதுகாக்கும் ஆற்றலை ஒருவனுக்கு தருவேன். உன் பெருமையை வெளிப்படுத்த எங்கள் நாயகர்கள் செய்த திருவிளையாடலே இது.

நவராத்திரியில் நம்மை உலகத்தோர் நினைத்தாலும், உனக்கே முக்கியத்துவம் தரப்படும். உனக்கென தனி பூஜை செய்யப்படும், என அருள்பாலித்தனர். இப்போது சிவ நாராயணர்கள் பிரம்மனுடன் அங்கு வந்தனர். தத்தம் தேவியரை அணைத்துக் கொண்டனர். நாரதன் இந்த பூமிக்கு நல்லது செய்ய பிறந்தவன். அவன் இந்த கலகத்தை உண்டாக்காவிட்டால், கல்வியின் பெருமை வெளியே தெரிந்திருக்காது. மேலும், பெற்ற தாயை உயர்ந்தவளாக காட்ட ஒவ்வொரு மகனும் பாடுபட வேண்டும். தன் சொந்தத்தாயைப் பாதுகாப்பவனுக்கு உலகத்தில் தனியிடம் உண்டு, என்றனர். நாரதர் அங்கே வந்தார்.தாய்மார்களே! முப்பெரும் தெய்வங்களின் வேண்டுகோளை ஏற்றே நான் இப்படி ஒரு சிறிய நாடகத்தை நடத்த வேண்டியதாயிற்று. நான் தவறேதும் செய்திருந்தால், என்னைப் பெற்ற தாய்மார்களான நீங்கள் மூவரும் என்னை மன்னிக்க வேண்டும், என அவர்களின் காலடியில் விழுந்தார்.தேவியர் அவரை எழுப்பி, உச்சிமோந்தனர். எங்கள் அன்பு மகனே! உன்னால் இந்த உலகம் பெருமை அடையட்டும், என வாழ்த்தினர்.அப்போது, நாராயணன் நாரதனை அருகில் அழைத்து, நாரதா! நான் பூலோகத்தில் அவதாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன். அதில் உன் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். வைகுண்டத்தை பாதுகாத்த ஜெய, விஜயர் என்பவர்கள், என்னை சந்திக்க வந்த முனிவர்களை அவமதித்த காரணத்தால், என் சாபப்படி, பூலோகத்தில் அசுரர்களாக பிறந்துள்ளனர். அவர்களில் ஒருவனான இரண்யன், என்னை பூலோகத்தில் இருந்தபடி அவமதித்து வருகிறான். நாராயணனே தெய்வம் என கூறுபவர்களின் தலையைக் கொய்து விடுகிறான். அவன் மனைவி லீலாவதி கர்ப்பமாக இருக்கிறாள். அவள் இப்போது தனிமையில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருக்கிறாள். நீ அவளைச் சந்திக்க வேண்டும். அவள் எனது பக்தை, என்றார். நாராயணனின் அனுமதி பெற்று நாரதர் பூலோகம் கிளம்பினார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:54:32 AM
நாரதர் பகுதி-9

நாராயணனின் சாபத்தால் பூமியில் பிறந்த ஜெய, விஜயர்கள் காஷ்யபருக்கும், அதிதிக்கும் மக்களாகப் பிறந்தனர். மூத்தவன் இரண்யாட்சன் என்றும், இளையவன் இரண்யன் என்றும் அழைக்கப்பட்டனர். இரண்யாட்சனை பகவான் நாராயணன் வராக அவதாரமெடுத்து சம்ஹாரம் செய்துவிட்டார். தன் சகோதரனைக் கொன்ற நாராயணனை பழிவாங்குவதாக, தன் பெற்றோரிடம் சபதம் செய்தான். தன் பணியாளர்களை அழைத்து, என் சகோதரனைக் கொல்ல காரணமாக இருந்தவர்கள் தேவர்கள். அவர்களையும், அவர்களுக்கு பூஜை, புனஸ்காரம் செய்யும் வேத வல்லுநர்களையும் கொல்ல உத்தரவிட்டான். பின்னர், நாராயணனைக் கொல்வதற்குரிய வலிமையைப் பெறுவதற்காக தவம் செய்ய போய்விட்டான். இரண்யனின் மனைவி கயாதுதேவி அப்போது கர்ப்பமாக இருந்தாள். எப்படியும் நாராயணன் இரண்யனை சம்ஹரித்து விடுவார் என்பது தேவர் தலைவனான இந்திரனுக்குத் தெரியும். ஆனால், அவனது வாரிசு பூமிக்கு வந்தால், தங்களுக்கு மேலும் அழிவு ஏற்படும். உலகில் அசுரர் வம்சம் மேலும் பெருகும் என கணக்கு போட்டான். எனவே, கயாதுவின் வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொல்ல நினைத்து, பூலோகம் வந்தான். இரண்யன் இல்லாத தைரியத்தில் அரண்மனையில் புகுந்தான். அவனது சக்தியின் முன்னால், அரண்மனைக் காவலர்கள் நிற்க முடியவில்லை. அவர்களை அடித்து உதைத்து விட்டு, கயாதுவின் அறைக்குள் சென்றான். கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், இரக்கமற்ற முறையில், அவளை தரதரவென இழுத்துச் சென்றான். கயாது அலறினாள்.

உன் வம்சத்தை வேரறுப்பதே எனது குறிக்கோள். உன்னை நான் ஏதும் செய்யமாட்டேன். ஆனால், உன் வயிற்றில் வளரும் பிள்ளையை நீயாக அழிக்கிறாயா? அல்லது நானே உன் வயிற்றில் ஓங்கி மிதித்து அழிக்கட்டுமா? என கர்ஜித்தான்.அபலையான கயாது, கண்ணீர் வடித்தாள். என் குழந்தையை அழிக்க உன்னால் முடியாது. என் உயிருள்ளவரை உன்னுடன் போராடுவேன். என் கணவர் இல்லாத நேரத்தில், இப்படி ஒரு பெண்ணை துன்புறுத்துகிறாயே? இதுதான் நியாயஸ்தர்களுக்கான தேவர்களுக்கு அழகோ? அசுரத்தனமாக நடக்கும் நீ, எங்கள் வம்சத்தவரை அசுரர் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது? என் கணவர் நாராயணனின் எதிரி என்றாலும், அவர் வந்ததும் நான் திருத்தி விடுவேன். மேலும், நான் பகவானின் பக்தை. என்னை உன்னால் ஏதும் செய்ய இயலாது, என தைரியமாகச் சொன்னாள் அந்த அசுர ராணி. இந்திரனுக்கு கோபம் அதிகமாகி விட்டது. திமிர் பிடித்தவளே! எங்கள் தேவகுலத்துக்கு எதிரான உன் கணவன் காலமெல்லாம் அழ வேண்டும். அதற்கு ஒரே வழி உன் குழந்தை சாவது தான், என்று காலை ஓங்கவும், தேவேந்திரா! நிறுத்து! இது என்ன அநியாயம்? என்று தடுத்து விட்டார், அப்போது அங்கு வந்த நாரதர். நாரதரே! வீணையை மீட்டிக் கொண்டு, தெய்வங்களைப் புகழ்ந்து பாட வேண்டிய நீர், எனது அரசாங்க விஷயங்களில் தலையிடாதீரும். இந்தக் குழந்தை பிறந்தால் உமக்கும் சேர்த்தும் தான் ஆபத்து, என்றான் இந்திரன். தேவேந்திரா! நீ நினைப்பது போல், கயாதுவின் வயிற்றில் பிறக்கப் போவது தேவர்களின் எதிரியல்ல, நண்பன். எந்த இரண்யனை அழிக்க வேண்டுமென்று நீ நினைக்கிறாயோ, அவனுக்கும் இவனே எதிரியாவான். நாராயணனின் பக்தனாக இவன் வளருவான். இவனால், அசுர- தேவ ஒற்றுமைக்கு பாதை இருக்கிறது. வீணாக, இரண்யனின் பகையைக் கட்டிக் கொள்ளாதே. இவளை என்னிடம் ஒப்படைத்து விடு. குழந்தை பிறக்கும் வரை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார். இதன்பிறகு இந்திரன் ஏதும் பேசாமல் அவளை விடுவித்துவிட்டு போய்விட்டான்.

நாரதர் கயாதுவிடம், சகோதரி! நீ இனி இங்கிருக்க வேண்டாம். அரண்மனையில் இருந்தால், உனக்கு தேவர்களால் இப்படி பல துன்பங்கள் ஏற்படத்தான் செய்யும். குழந்தை பிறக்கும் வரை நான் உனக்கு பாதுகாவலாக இருக்கிறேன். எனது ஆஸ்ரமத்திற்கு வா. அங்கே தங்கியிரு, என்றார். தன்னைக் காப்பாற்றிய நாரதரின் பேச்சை மறுபேச்சு பேசாமல் ஏற்றுக் கொண்டாள் கயாதுதேவி. அவள் நாரதரின் குடிலில் தங்கியிருந்த போது, தன் வினைப்பயனை நினைத்து அழுவாள். கர்ப்பமான நேரத்தில் கணவன் அருகில் இல்லையே என்ற துன்பம் அவளை வாட்டும். அப்போது அவளுக்கு நாரதர் ஆறுதல் சொல்வார். சகோதரி! உனக்கு பகவானின் அருள் என்றும் உண்டு. பகவான் வல்லவர். பரமாத்மாவின் பாதங்களில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்களுக்கு துன்பம் ஏதுமில்லை, என்பார். பகவான் விஷ்ணுவின் திவ்ய குணங்களை எடுத்துச் சொல்லும் போதெல்லாம், கயாதுவின் வயிற்றில் இருந்த சிசு உம் கொட்டி கதை கேட்க ஆரம்பித்தது. கயாதுவை மயக்கநிலைக்கு ஆளாக்கி, குழந்தைக்கு நல்லுபதேசம் மற்றும் மந்திரங்களை போதித்தார் நாரதர். கர்ப்பஸ்தீரிகள் ஆன்மிகம், வீரதீர செயல்கள் குறித்த நூல்களைப் படித்தால், குழந்தைகள் கல்வியறிவிலும், புத்திசாலித்தனத்திலும், தைரியத்திலும் சிறந்து விளங்குவர் என்பது அறிவியல் ரீதியான உண்மையை ஆன்மிகம் என்றோ கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், நம்மவர்கள் டிவி தொடர்களை பார்ப்பதால், குழந்தைகளும் அதையே பார்த்து கெட்டுப் போகின்றன என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சில மாதங்களில் கயாதுவுக்கு அழகான குழந்தை பிறந்தது. இந்நேரத்தில் இரண்யனின் தவமும் முடிந்து, பிரம்மனிடம் அழியாவரம் பெற்று திரும்பினான்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:55:48 AM
நாரதர் பகுதி-10

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் கண்டிப்பாக இறந்தாக வேண்டும். ஆனால், தவம் செய்வோர் அழியாவரம் பெறுவர். ஆனால், எந்தெந்த சக்திகளால் அழிவு வரக்கூடாது என்று கேட்டுப் பெற வேண்டும். இரண்யன் இந்த உலகில் தெய்வங்கள், மனிதர், அசுரர், மிருகங்கள், பறவைகள், சாதராண பூச்சி வரை தன்னை அழித்துவிடக் கூடாது என வரம் பெற்றுக் கொண்டான். அவன் பிரம்மனிடம் எதையும் விட்டு வைக்கவில்லை. பிறகென்ன! அவன் கர்வம் தலைக்கேற இல்லம் வந்து சேர்ந்தான். இந்திரனால் தன் மனைவி பட்ட அல்லல்களை அறிந்தான். ஒட்டுமொத்த தேவலோகத்தையும் தன் கைக்குள் கொண்டு வந்து விட்டான். போதாக்குறைக்கு நாடாள ஆண் வாரிசு வந்து விட்டது என்ற மமதை வேறு. அவன் செய்யாத அராஜகங்களே இல்லை. ஒரு கட்டத்தில் அவனது அட்டகாசம் எல்லை மீறி, நானே தெய்வம். இனி யாரும் அந்த நாராயணனை வணங்கக்கூடாது, என்று சொல்லிவிட்டான். பிரகலாதன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நாராயணனின் பெருமையை கேட்டவனாயிற்றே! அவன் தந்தைக்கு எதிராக திரும்ப, தந்தையாலேயே கொடுமைப்படுத்தப்பட்டான். பின்னர், நாராயணனே அவனை அழித்தார். இவன் மனிதனாலும், மிருகத்தாலும் அழிவு வரக்கூடாது என வரம் பெற்றிருந்தான். நாராயணனோ சிங்கத்தலையும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான நரசிம்ம வடிவமாக வந்து அவனை அழித்தார். நரன் என்றால் மனிதன், சிம்மம் என்றால் சிங்கம். இப்படியாக நாரதரின் புத்திசாலித்தனத்தால், அந்த அரக்கனின் வாழ்வு முடிந்தது. அதே நேரம் கெட்டவனுக்கே பிறந்தாலும், ஒருவன் தன் குணநலன்களை மாற்றிக் கொள்ள முடியும் என்ற தத்துவமும் இதன்மூலம் விளக்கப்பட்டது. நாரதர் இதன் மூலம் ஆற்றிய சேவையை தேவகுலமே பாராட்டியது. இந்த நற்செயலைச் செய்த மகிழ்வுடன், நாரதர் சிவலோகம் சென்றார். சர்வலோகாதிபரான சிவபெருமான், உமாதேவியாருடன் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

அன்னையே வணக்கம், ஐயனே வணக்கம், என்றார் நாரதர். என்ன நாரதா! அன்னைக்கு முதல் வணக்கமும், தந்தைக்கு இரண்டாம் வணக்கமும் சொல்கிறாயே! என்றார் சிவன், சிறு புன்னகையுடன். பார்வதி நாரதனை அருகில் அழைத்தாள். அவரது தலையை வருடியபடியே, குழந்தாய்! நீ வருந்தாதே. இவர் எப்போதும் இப்படித்தான். பிறரை சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார், என்று ஆறுதலாய்ச் சொன்னாள். தாயே! தாங்கள் சொல்வதும் உண்மை தான். மதுரையிலே தாங்கள் மீனாட்சியாய் அவதாரம் எடுத்திருந்த போது, இவர் சொக்கநாதராய் வந்து தங்களைக் கரம்பிடித்தார். வந்தவர் சும்மா இருக்கமாட்டாரா? செண்பகப்பாண்டியனின் அவைப்புலவர் நக்கீரனார், இவரது பாட்டைக் குறை சொன்னதற்காக, நெற்றிக்கண்ணால் சுட்டு வீழ்த்தியதை தாங்களும் அறிவீர்கள். பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியிருந்த நக்கீரன் மீண்டும் உயிர்பெற்றாலும், இப்போதும் வெப்பு நோயால் அவதிப்படுகிறார். இவர் கண் என்ன சாதாரணமான கண்ணா!  என்று நாரதர் சொல்லவும், பார்வதி பரிதாபப்பட்டாள். ஐயோ! நக்கீரன் என் குழந்தையாயிற்றே! அவன் துன்பப்படுவதை நான் பொறுக்க மாட்டேன். நாரதா! நீ உடனே பூலோகம் செல். என் இளைய குமாரன் முருகன் திருப்பரங்குன்றத்தில் இருக்கிறான். அவன், நக்கீரன் மீது கருணை கொண்டவன். நக்கீரனின் பாடல்களை ரசிப்பவன். தான் குடிகொண்டிருக்கும் தலங்களை வரிசைப்படுத்தி, அவற்றின் பெருமையைப் பாடுவதற்கு நக்கீரன் தான் சரியானவன் என  எண்ணிக் கொண்டிருக்கிறான். நீ முருகனை நாடி, நக்கீரனின் வெப்பு நோயைப் போக்குவதற்குரிய ஏற்பாட்டைச் செய், என்றாள். நக்கீரர் சிவபெருமானைக் கடைக்கண்ணால் பார்த்தார். சிவனும் கண்ணாலேயே இதற்கு இசைவு தெரிவித்தார். முருகப்பெருமானின் அருள் உள்ளம் இந்த உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக, சிவபெருமான் தன் மனதில் எழுப்பிய எண்ணங்களே, இனி நடக்கப்போகும் நிகழ்வுகளுக்கு காரணம் என்பதை, தன் ஞானதிருஷ்டியால் நாரதரும் அறிந்திருந்தார்.

இருப்பினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சிவனிடம் சண்டை போடுவது போலவும், பார்வதியிடம் நல்ல பெயர் வாங்குவது போலவும் நடித்துக்காட்டி விட்டு பூலோகம் வந்தார். திருப்பரங்குன்றம் களை கட்டியிருந்தது. பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, சேவல்காவடி, மச்சக்காவடி, புஷ்பக்காவடி, சர்ப்பக்காவடிகளுடன் மலையைத் திருவலம் வந்து கொண்டிருந்தனர். நாரதர் திருப்பரங்குன்றத்தின் அழகை விண்ணில் இருந்தபடியே ரசித்தார். சிவபெருமான், கைலாசநாதன் என்ற பெயரில் குடியிருக்கும் திருத்தலம் அது. (திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் ஒன்றாயினும் கூட, இங்கே மூலவர் சிவன் தான். முருகன் சிவனின் அருகில் இருக்கிறார்). அந்த தலத்தைக் கண்ணால் கண்டாலே செய்த பாவங்கள் தீர்ந்து விடும். நாரதர் பக்தி பரவசத்துடன் அந்த தலத்தை தரிசித்தார். முருகப்பெருமான் தெய்வானை பிராட்டியுடன் மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளையில், தான் வந்த சேதியை அறிவிக்கும்படி காவலனிடம் சொல்லி அனுப்பினார். முருகனின் படைத்தளபதி வீரபாகு, அவசரமாக வெளியே வந்து நாரதரை வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். மயில் வாகனனே வணக்கம். அம்மா! தெய்வானை நீ நலமாக இருக்கிறாயா? புதிதாக மணம் முடித்த உனக்கு உன் தந்தை தேவேந்திரன், சீதனமெல்லாம் சரியாகத் தந்தானா? என்றார் நாரதர். நாரதரே! தாங்கள் முதலில் கேட்ட கேள்வி நியாயமானது. அடுத்த கேள்வியில் ஏதோ பொருள் புதைந்து கிடக்கிறதே! என் தந்தை தன் உயிருக்கும் மேலான ஐராவதம் யானையையே எனக்கு சீதனமாக தந்துவிட்டதை தாங்கள் அறிவீர்கள். இதை விட வேறென்ன அவர் தர வேண்டும்? என்றாள் கண்கள் மிரள மிரள. நாரதரே! தங்களுக்கு தேவலோகத்தில் ஆள் கிடைக்காமல், இன்று இந்த புதுப்பெண்ணிடம் உம் விளையாட்டை ஆரம்பிக்க வந்துள்ளீரோ? என்றார் முருகப்பெருமான் கலகலவென சிரித்தபடியே!
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:57:16 AM
நாரதர் பகுதி-11

முருகப்பெருமானே! மன்னிக்க வேண்டும். என் கிரகம் அப்படி! நான் எங்கு போனாலும், கலகத்தை மூட்டுபவன் என்றே என்னை எண்ணுகிறார்கள். நான் தற்செயலாகத்தான் சீதனம் பற்றி கேட்டேன். தாங்கள் உலகாளும் சிவமைந்தர். தங்கள் வீட்டுக்கு வந்துள்ள மாதரசியை யாரேனும் குற்றம் குறை சொல்லி விடக்கூடாதே என்பதற்காகத்தான் சீதனம் பற்றி கேட்டேன். நான் வந்த விஷயம் வேறு, என்றார். மிரள விழித்த தெய்வானையை கடைக்கண்ணால் பார்த்த முருகப்பெருமான், தெய்வானை, கலங்காதே. இந்த நாரதன், என் விஷயத்தில் இளமையிலேயே விளையாடி முடித்து விட்டார். சொல்லப்போனால், அவரால் தான் இது போன்ற குளிர்ந்த மலைகளில், உயர்ந்த இடத்தில் நான் இருக்கிறேன். அந்த வரலாறு உனக்குத் தெரியுமா? என்றார். தெய்வானை உதடுகளை சுளித்து, தெரியாதென அபிநயம் செய்தாள். முருகன் நாரதரிடம், நாரதரே! நான் ஞானப்பழமான கதையைத் தெய்வானையிடம் சொல்லும், என்றார். நாரதர் தெய்வானையிடம், அம்மையே! ஒரு காலத்தில் ஆசையை வேரறுக்கும் பழம் ஒன்று எனக்கு கிடைத்தது. அதை ஞானப்பழம் என்பர். அதை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து பின்னர் பிரசாதமாக உண்ணுவதற்காகக் கொண்டு சென்றேன். சிவபெருமானுக்கு அதை அர்ப்பணித்தேன். அப்போது குழந்தையாக இருந்த உன் கணவனும், உனது அத்தான் விநாயகனும் ஓடோடி வந்து தந்தை முன்பிருந்த பழத்தை எடுத்தனர். இருவரும் பழத்தை பிடுங்க சண்டைபோட்டனர்.

உன் மாமியார் உமாதேவியார் அவர்களைத் தடுத்து, ஆளுக்கு பாதியாக பிரித்து தருகிறேன், என எடுத்துக்கொண்டார். சிவபெருமானோ, உமாதேவியாரை தடுத்து விட்டார். உமா! இது தோற்றத்தில் தான் மாங்கனி போல் இருக்கிறது. இதை ஒருவர் தான் சாப்பிட முடியும். இதை வெட்டுவது, பங்கு போடுவது எல்லாம் கூடாது, என்றார். பழத்தை மூத்தவருக்கு கொடுப்பதா! அல்லது இளையவனுக்கு கொடுப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டது. எல்லாரும் ஆவலுடன் நோக்கிக் கொண்டு இருந்தோம். இந்த நேரத்தில் உன் மாமனார் ஒரு போட்டியை அறிவித்து விட்டார். உன் கணவனும், விநாயகனும் போட்டியிட வேண்டும். யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறீர்களோ, அவருக்கே பழம், என்றார். உன் கணவன் தேவமயிலில் ஏறி வேகமாகச் சென்று விட்டான். உன் அத்தான் விநாயகனுக்கோ பெருச்சாளி வாகனம். அதில் பயணம் செய்தால் தாமதமாகுமே! ஆனால், புத்திசாலிகள் எந்தச் சூழலிலும் வெற்றி பெறுகிறார்கள். தாயே! தந்தையே! நீங்கள் தான் என் உலகம் என்று பெற்றவர்களைச் சுற்றி வந்து பழத்தைப்பெற்றான்.இதன்மூலம் உன் கணவன் மாபெரும் அந்தஸ்து பெற்றான். அவனையே ஞானப்பழம் என்று விநாயகன் உலகத்துக்கு அறிவித்தான். ஏனெனில், மூத்தவன் பொருளைப் பெற்றுக் கொண்டான். இளையவனோ, மூத்தவனுக்காக பொருளை இழந்தான். பிறருக்காக தனக்கு உரிமைப்பட்ட பொருளை தியாகம் செய்பவனே ஞானி. இவ்வகையில், ஞானப்பழமான உன் கணவனை உயர்ந்த இடத்தில் வைத்து தேவர்கள் பார்த்தனர். அதன் விளைவாகவே, அவன் உயர்ந்த மலைகளிலே காட்சியளிக்கிறான். குன்றுகள் எல்லாம் இந்த குகனின் இருப்பிடமாயிற்று. இவனது பெருமைகளை வரிசைப்படுத்தி பாட நக்கீரன் ஒருவரால் தான் முடியும். அவர் பொற்றாமரைக் குளத்தில் சிவபெருமானின் கருணை ஒளி தாங்காமல் மூழ்கிக் கிடக்கிறார். அவரை திருப்பரங்குன்றத்திற்கு வரவழைத்து, முருகனின் புகழை வரிசைப்படுத்தும் ஆற்றுப்படை என்னும் நூலை இயற்ற செய்ய உள்ளேன். அதற்காகவே இங்கு வந்தேன், என்றார்.

தெய்வானை மகிழ்ந்தாள். இதன் பிறகு நக்கீரர் செண்பகப்பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க பொற்றாமரை குளத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் திருப்பரங்குன்றம் வந்தார். தன் வெப்பம் நீங்க சரவணப்பொய்கை என்ற குளத்தில் நீராடினார். உடலும் மனமும் குளிர்ந்திருந்த வேளையில், அந்த குளத்தின் கரையில் இருந்த ஒரு மரத்தில் இருந்து இலைகள் உதிர்ந்து தண்ணீரில் விழுந்ததைக் கண்டார். அவற்றில் தண்ணீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்த இலைகள் தண்ணீருக்குள் இருந்த பகுதி மீனாகவும், தரையில் இருந்த பகுதி பறவையாகவும் மாறி அங்குமிங்குமாக இழுத்து துடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இந்த அதிசய உயிரினம் ஆச்சரியப்படுத்தினாலும், பரிதாப உணர்வையும் ஏற்படுத்தியது. அவர் அந்த உயிரினத்தை எடுத்து, மீனையும், பறவையையும் தனித்தனியாகப் பிரித்து உயிர் பிழைக்க வைக்கலாம் என நினைத்து கிள்ளியெடுத்தார். ஆனால், அவை பரிதாபமாக இறந்தன. இதையடுத்து நாரதரின் அறிவுரைப்படி, முருகனின் படைவீரர்கள் சரவணப் பொய்கையின் காவலர்கள் போல் வேடம் தரித்து வந்து, ஓய்! நீர் பல உயிர்களைக் கொன்று விட்டீர். உம்மைக் கைது செய்கிறோம், என்றனர்.பொற்றாமைரையில் இருந்து தப்பித்தோம். இதென்ன கொடுமை. இப்போது நன்மை செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டோமே! என்றவரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகையில் சிறைவைத்தனர்.முருகா என்னைக் காப்பாற்று! என்ற நக்கீரர் மன முருகி பாட ஆரம்பித்தார். அந்த பாடல்களை ரசித்த முருகன். அவருக்கு காட்சியளித்து விடுதலை செய்தார். அவர் பாடிய பாடல்களே திருமுருகாற்றுப்படை எனப்பட்டது. முருகன் நாரதரிடம், அன்பரே! ஆற்றுப்படை என்ற நூலை இயற்றியதன் மூலம் என் பெருமை என்றும் நிலைத்திருக்கும் வகையில் செய்தீர். சூரர் களைப் பற்றிய தகவலை அவ்வப்போது கொடுத்து, அவர்களை வெற்றி கொள்ள வகை செய்தீர். எனவே, இத்தலத்தில் என்னருகில் இருக்கும் பாக்கியத்தை தந்தேன், என்றார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 07:58:44 AM
நாரதர் பகுதி-12

திருப்பரங்குன்றத்தில் நிலையாக இருக்கும் தகுதி பெற்றாலும், நாரதர் தன் சர்வலோக பயணத்தை தொடர்ந்து நடத்தினார். ஒருமுறை அவர் வைகுண்டம் சென்றார். அப்போது திருமாலும், லட்சுமியும் அந்தரங்கமாக ஒரு தனியிடத்தில் பேசிக் கொண்டிருந்தனர். நாரதரைக் கண்டதும் லட்சுமி வெட்கப்பட்டு, உள்ளே சென்றாள்.நாரதருக்கு கோபம் வந்து விட்டது. எம்பெருமானே! பாற்கடல் நாயகனே! நான் லட்சுமி தேவியாரை தாயாக நினைக்கிறேன். அவரை தாயார் என்றே உலகத்தினர் போற்றுகின்றனர். நானும் அப்படி எண்ணியே தங்கள் தனித்திருக்கும் அறைக்கு வந்தேன். மேலும் நான் கோபத்தை அடக்கியவன். மாயையை வென்றவன் (முற்றும் துறந்தவன்). ஒரு துறவியான என்னால், லட்சுமி தாயாரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க இயலுமா? அவர்கள் இப்படி நடந்து கொண்டதால் என் இதயம் வலிக்கிறது, என்றார். நாராயணன் சிரித்தார். நாரதா! நீ ஆசையைத் துறந்தவன் என்கிறாய். துறவிகளாலும் ஆசையைத் துறக்க முடியாது. கடவுளர்களாலேயே ஆசையைத் துறக்க முடியவில்லை எனும் போது, நீ எப்படி ஆசையைத் துறந்தவன் என்று சொல்கிறாய். உன் எண்ணம் தவறு. வா என்னோடு! நான் உன்னை ஓரிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நீ ஆசையைத் துறந்தவனா என்பதை நீயே உணர்ந்து கொள், என்று சொல்லி அழைத்துச் சென்றார். அவர்கள் பூலோகம் வந்தனர். ஒரு குளத்தின் கரைக்கு சென்றனர். நாராயணன் நாரதரிடம், நாரதா! இந்த குளத்து நீர் பால் போல் தெளிவாக இருக்கிறதல்லவா? என்றார். ஆம்...பிரபு! இதைப் பார்த்தவுடனேயே நீராட வேண்டுமென தோன்றுகிறது, என்றார் நாரதர். அதற்கென்ன! நான் காத்திருக்கிறேன். நீ நீராடி விட்டு வா, என்றார் நாராயணன்.

நாரதர் தன் வீணையை கரையில் வைத்து விட்டு, குளிக்க தண்ணீரில் இறங்கினார். மூழ்கி எழுந்தார். இப்போது அவரது உருவம் மாறிவிட்டது. ஆம்...பெண்ணாக மாறி விட்டார். நாரதராக இருந்து நாரதியாக மாறிவிட்ட அவர், கரைக்கு வந்தார். தன்னைப் பார்க்க வெட்கமாக இருந்தது. கரையில் இருந்த துணியால் உடலை மறைத்துக் கொண்டு நின்றார். சுற்றுமுற்றும் பார்த்தார். நாராயணனைக் காணவில்லை. அவரது வீணையும் கரையில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர் நாரதர் என்பதே தெரியாமல் போயிற்று. பழைய நினைவுகள் மறக்கவே, அழகே வடிவாக வெட்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் நாரதி. அப்போது அந்நாட்டின் மன்னன் தாலத்துவஜன் அங்கே வந்தான். தனியே ஒரு பெண் சொக்கும் அழகுடன் நிற்பதைப் பார்த்த அவன், அழகுத்திலகமே! நீ யார்? இப்படி ஒரு அழகியை நான் இதுவரை பார்த்ததில்லையே! திருமண எண்ணமே இல்லாத எனக்கு, உன்னைப் பார்த்ததும் அந்த ஆசை வந்து விட்டது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் சொல். உடனே உன் பெற்றோரிடம் பெண் கேட்க ஆள் அனுப்புகிறேன், என்றான். மன்னா! நான் யார் என்பதே எனக்குத் தெரியவில்லை. எனக்கு தாய், தந்தை, உறவினர்கள் யாருமே இல்லை. எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்தும் புரியவில்லை. இருப்பினும், எனக்கொரு துணை தேவை என்பதால், உம்முடன் வருகிறேன். உம்மை மணந்து கொள்ள சம்மதிக்கிறேன், என்றாள். தடபுடலாக கல்யாணம் நடந்தது. தம்பதிகள் நீண்டகாலமாக குடும்பம் நடத்தி 60 குழந்தைகளைப் பெற்றனர். அறுபது பேருக்கும் திருமணம் செய்து வைத்து பேரன், பேத்திகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். இதனிடையே தாலத்துவஜன் மீது எதிரிகள் படையெடுத்தனர். தாலத்துவஜன் தன் மகன்கள், பேரன்களுடன் போருக்குச் சென்றான். கடும் சண்டை நடந்தது. சண்டையில் தாலத்துவஜனின் மகன்கள், பேரன்கள் ஒருவர் கூட மிஞ்சவில்லை. எல்லாரையும் எதிரிநாட்டவர் அழித்து விட்டனர்.

தாலத்துவஜன் மட்டும் திரும்பி வந்தான். நாடும் போய் விட்டது. உறவுகளும் இறந்து விட்டனர். நாரதி கதறியழுதாள். தான் பெற்ற மக்களையும், தன் மக்கள் பெற்ற மக்களையும் இழந்த அவள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. அப்போது திருமால் அவள் இருந்த இடத்துக்கு முதியவர் வேடமிட்டு வந்தார். நாரதி! ஏன் அழுகிறாய்? நீ அழுவது யாருக்காக? உன்னோடு இருந்த அந்த சொந்தங்கள் நீ அழுவதால் வந்து விடுமா? அந்த சொந்தங்கள் ஒருநாள் போய்விடும் என்ற விஷயம் உனக்கு தெரிந்தது தான். நீ ஏன் அவர்கள் மீது பற்று வைத்தாய். ஆசை தானே! நீயும், அவர்களும் கடைசிவரை இருப்பீர்கள் என்ற மாயை தானே உன் கண்ணை மறைத்தது! நீ இந்த பூமிக்கு யாரையும் கொண்டு வரவும் இல்லை. அவர்கள் உன்னை விட்டு போகவும் இல்லை. எங்கிருந்தோ வந்தார்கள், எங்கேயோ போய்விட்டார்கள், என்றார். நாரதிக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது. மறுநாள் அவள் தான் முதலில் குளித்த குளத்துக்கு வந்தாள், அதில் மூழ்கி எழுந்தாள். நாரதராக மாறிவிட்டாள். தாலத்துவஜன் ஓடி வந்தான். தன் மனைவி ஆணாக...அதிலும் தேவலோக இசைஞானி நாரதராக மாறியது கண்டு திகைத்தான். தன் மனைவியைக் காணவில்லையே என அழுதான். அப்போது நாராயணன் அங்கே வந்தார். அன்பனே! நீ அழுவதில் அர்த்தமில்லை. அவள் எப்படி வந்தாள் என்பது கூட உனக்குத் தெரியாது. எங்கிருந்தோ வந்த தாய், தந்தை பெயர் தெரியாதவளை மணந்தாய், குழந்தைகளைப் பெற்றாய். இப்போது அவள் மறைந்து விட்டதும் அழுகிறாய். அவள் வந்த இடத்திற்கே திரும்பப் போய்விட்டாள் என்று நினைக்க உன் மனம் ஏன் கூசுகிறது? என்றார். அந்த மன்னன் மனம் தெளிந்து ஊர் திரும்பினான். நாரதர் பிரம்மலோகம் சென்றார். பிரம்மன் அவரிடம், குழந்தாய் நாரதா! உன்னை நீண்ட நாளாகக் காணவில்லையே! எங்கே இருந்தாய் இத்தனை நாளும்! என்றார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:00:02 AM
நாரதர் பகுதி-13

அதை ஏன் கேட்கிறீர்கள் தந்தையே! திருமாலைச் சேவிக்க வைகுண்டம் சென்றேன். என்னைக் கண்டதும், லட்சுமி தாயார் எழுந்து ஓடினார்கள். மகன் போன்ற என்னைக் கண்டுமா தாயார் ஓட வேண்டும். நான் தான் துறவியாயிற்றே என்றேன். அவரோ, நீ முற்றும் துறந்தவன் அல்ல! சாதாரண மனிதர்போல் மாயைக்கு ஆட்பட்டவன் என்றார். அதை நிரூபிக்க வைக்க பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வைத்தார். எனக்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் போரில் மாண்டனர். நான் பாசத்துக்கு கட்டுப்பட்டு அழுதேன். இதில் இருந்து நானும் லோக வாழ்க்கை என்ற மாயைக்கு அடிமையானவன் என்று அவர் நிரூபித்தும் விட்டார், என்றார்.பிரம்மனும் ஒப்புக்கொண்டார்.மகனே! நீ மட்டுமல்ல! எவருமே மாயையின் வலையில் இருந்து அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது. உன் தாய் சரஸ்வதியைப் படைத்த நானே. அவள் மீது ஆசைப்பட்டு தானே சிவனிடம் தண்டனை பெற்றேன். மாயையின் வலையில் இருந்து மீள முடியாது என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கு கடுமையான மனப்பயிற்சி வேண்டும். நீ மீண்டும் பூலோகம் செல். ஞானமும், வைராக்கியமும் இருந்தால் தான் மாயை எனப்படும் உலக ஆசையில் இருந்து மீள முடியும். அதைப் பெற்று வா, என்றார். ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெறுவதற்குரிய வழிமுறையையும் பிரம்மனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பூலோகத்தில் விசாலை என்ற நகரத்திற்கு வந்தார் நாரதர். அங்கே நான்கு ரிஷிகுமாரர்கள் இருந்தனர். அவர்களும் ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெற்று, அதன் மூலம் உலக ஆசையை முழுமையாகத் துறக்க வழிதேடிக் கொண்டிருந்தனர். ஒருமுறை அந்த ரிஷிகுமாரர்கள் நாரதரைச் சந்தித்தனர். மகரிஷி நாரதருக்கு தெரியாத விஷயமா? எல்லா லோகங்களிலும் சஞ்சரிப்பவர் ஆயிற்றே அவர்! அவரிடம் நம் கோரிக்கையைச் சொல்வோம் என்றவர்களாய் ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெறும் ஆலோசனையைக் கேட்டனர். நாரதர் முகம் வாடிப் போனார்.

மகரிஷி! திடீரென நீங்கள் வாட்டம் கொள்ளக் காரணம் என்ன? என்றனர் குமாரர்கள். குழந்தைகளே! இப்போது கலி பிறந்து விட்டது. நீங்கள் தேடும் அதே ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெறவே நானும் பூலோகம் வந்தேன். ஆனால், அவை இனி நமக்கு கிடைக்கும் என்பது சாத்தியமல்ல. ஏனெனில், அதற்குரிய உரிய தேவதைகள் நோய்வாய்ப்பட்டு மெலிந்து கிடக்கின்றன. வாருங்கள், என்னோடு, நான் அந்த இடத்தைக் காட்டுகிறேன், என்றார். அங்கே ஒரு இளம்பெண் படுத்திருந்தாள். அவளால் எழவே முடியவில்லை. படுத்தபடியே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அவள் நாரதரையும், மற்ற ரிஷிகுமாரர்களையும் கண்டு எழ முயன்றாள். முடியாமல் மீண்டும் படுத்து விட்டாள். கைகூப்பி வணங்கவே சிரமப்பட்டாள். அவள் அருகிலங் இரண்டு முதியவர்கள் படுத்திருந்தனர்.நாரதர் அவள் அருகில் அமர்ந்தார். மகளே! நீ யார் என்பதை நான் அறிவேன். இருப்பினும் இந்த குமாரர்களுக்கு உன் கதையைச் சொல், என்றார். அப்பெண் ஈனஸ்வரத்தில் மிக மெதுவாக பேசினாள். குழந்தைகளே! நான் இதோ படுத்திருக்கும் இரண்டு முதியவர்களின் தாய், என்றாள். ரிஷிகுமாரர்கள் அதிர்ந்தனர். அம்மா! இதை எங்களால் நம்ப முடியவில்லை. நீயோ கன்னிப்பருவத்தினள் போன்று இளமையாய் இருக்கிறாய். உனக்கு இரண்டு முதிய குழந்தைகளா? இது எப்படியம்மா நிகழ்ந்தது? உன் வரலாறைக் கேட்கும் எங்கள் ஆவல் மேலிடுகிறது. சொல்லம்மா! என்றனர். மக்களே! இவன் என் மூத்த மகன். பெயர் ஞானம். அவன் என் இளைய மகன் வைராக்கியம். இவர்களே இந்த உலகிற்கு ஞானத்தையும், வைராக்கியத்தையும் தருபவர்கள். நடந்து முடிந்த மூன்று யுகங்களிலும் தவத்தில் அக்கறை கொண்டவர்களும், ஆசையைத் துறந்தவர்களும் இவர்களை சந்தித்து ஞான, வைராக்கிய வரங்களைப் பெற்றனர். இப்போதோ கலியுகம் பிறந்து விட்டது. இந்தக் கலியில் ஞானமாவது, வைராக்கியமாவது...இதைப் பற்றி பேசினால் கூட யாருக்கும் புரியவில்லை. அந்த கவலையில் இவர்கள் படுத்தார்கள். கவலைப்படுபவனுக்கு தோல் சுருங்கும்.

கிழட்டுப்பாவம் ஏற்படும். இவர்களும் இப்படி கிழத்தோற்றம் பெற்றார்கள். இவர்கள் ஒரேயடியாக அழிந்து விடுவார்களோ என்ற கவலையில், இவர்களைப் பெற்ற தாயான நானும் கவலையில் படுத்து விட்டேன், என்றாள்.நாரதர் அப்பெண்ணிடம், உன் பெயர் என்ன? என்றார்.விஷ்ணு பக்தி என்றாள் அவள்.மகளே! பெயரிலேயே விஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருக்கும் நீ இதுவரை இவர்களை எழுப்பும் வழி தெரியாமல் இருந்து விட்டாயே! எல்லாருக்கும் கஷ்டங்கள் சகஜம். கஷ்டப்படும் காலத்தில் கஷ்டப்பட்டே தீர வேண்டும். நான் பிரம்மபுத்திரன் என்பதை நீ அறிவாய். இவர்களை எழுப்பும் மருந்து என்னிடம் இருக்கிறது? என்றார்.அந்தப் பெண் சிரமப்பட்டு எழுந்தாள்.மகரிஷி! என் குழந்தைகள் பிழைத்து விடுவார்களா! அவர்கள் மீண்டும் இளமையை அடைவார்களா? அதற்கு உங்களிடம் மருந்திருக்கிறதா? சொல்லுங்கள், என பரபரத்தாள். நாரதர் தன் தந்தை பிரம்மன் தன்னிடம் சொல்லி அனுப்பியபடி, தன்னோடு வந்த ரிஷி குமாரர்களிடம், நாம் எல்லாரும் சேர்ந்து வேத மந்திரங்களைச் சொன்னால், இவர்கள் பிழைத்து விடுவார்கள். இவர்களிடம் நாம் ஞானத்தையும், வைராக்கியத்தையும் பெற்றுச் செல்லலாம், என்றார். ரிஷி குமாரர்கள் மகிழ்ந்தனர். மந்திரஒலி அந்த இடத்தை நிறைத்தது. வேதங்கள் ஓதி முடிக்கப்பட்டன. ஊஹூம்... ஞானமும், வைராக்கியமும் அசையவே இல்லை. ஆவலோடு தன் குழந்தைகள் மீது கண் வைத்திருந்த விஷ்ணுபக்தி கவலையில் மீண்டும் படுத்து விட்டாள். நாரதரோ பிரம்மரகசியம் எடுபடாதது கண்டு கலங்கினார். ரிஷிகுமாரர்களோ திகைத்தனர். ஞானம் மற்றும் வைராக்கியத்தின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:01:30 AM
நாரதர் பகுதி-14

நாரதர் பதைபதைத்தார். அந்த தாயிடம், அம்மா கவலைப்படாதே! நான் இந்த ரிஷிகுமாரர்களுடன் சனகாதி முனிவர்களைத் தேடிச் செல்கிறேன். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற பெயர் கொண்ட அந்த முனிவர்கள் சிவனிடம் வேதம் கற்றவர்கள். சிவபெருமான் குரு வடிவான தெட்சிணாமூர்த்தியாய் இருந்து, ஆலமரத்தடியில் அமர்ந்து அவர்களுக்கு இதைப் போதித்தார். இறைவனே ஆசிரியராக இருந்து பாடம் எடுத்தால், எந்த ரகசியம் தான் தெரியாமல் இருக்கும்? இந்த உலகில் ஞானமும், வைராக்கியமும் அழிந்துவிட்டால் என்னாகும்? ஞானம் என்பது இறைவனை அடையும் பாதையைக் குறிப்பது. வைராக்கியம் என்பது இறைவனை அடையும் வழிமுறைகளைச் சொல்வது. இந்த இரண்டையும் காப்பாற்றும் சக்தி அவர்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். நான் திரும்பும் வரை உங்களை இந்த ரிஷிகுமாரர்கள் கவனித்துக் கொள்வார்கள், என்று சொல்லி விட்டு முனிவர்களைத் தேடிப் போனார். அவரது பேரதிர்ஷ்டத்தின் விளைவாக சனகாதி முனிவர்களைச் சந்தித்தும் விட்டார். முனிவர்களே! ஞானமும், வைராக்கியமும் இவ்வுலகை விட்டு மறையப் போகிறது. அஞ்ஞானம் பெருகி விட்டால் இவ்வுலகம் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போகும். தாங்கள் அவற்றைக் காப்பாற்றும் வழியைச் சொல்லுங்கள், என்றார். அவர்கள் நாரதரிடம், மகரிஷி! இதொன்றும் பிரமாதமில்லை. எங்கே அஞ்ஞானம் தலைதூக்குகிறதோ,  அங்கே இறைவனைப் பற்றி பேச வேண்டும். பகவான் கிருஷ்ணன் பல அவதாரங்களை இதுவரை எடுத்திருக்கிறார். அவரது வரலாறை சொன்னாலே போதும். ஞானமும், வைராக்கியமும் பிழைத்து விடும், என்றனர். நாரதர் அவர்களிடம் விடைபெற்று கொண்டு, அவர்கள் படுத்திருந்த இடத்துக்கு வந்தார். ரிஷிகுமாரர்களிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் பகவானின் திவ்யசரித்திரத்தை ஏழுநாட்கள் விடாமல் சொன்னார்கள். இதைக் கேட்க யமுனை நதிக்கரையில் தேவலோகத்து முனிவர்கள் கூட கூடிவிட்டனர்.

பாகவதத்தைக் கேட்ட மாத்திரத்தில், ஞானமும், வைராக்கியமும் எழுந்து அமர்ந்தனர். அவர்களின் இளமைத் தோற்றம் திரும்பியது.ஞானமும், வைராக்கியமும் ரிஷிகுமாரர்களுக்கு வேண்டிய வரம் அருளினர். இறைவனை அடையும் பாதையைக் கூறினர். மகிழ்ச்சியுடன் விடைபெற்ற ரிஷிகுமாரர்களையும், ஞானம், வைராக்கியம் மற்றும் அவர்களின் தாய் விஷ்ணுபக்தியையும் அவரவர் இடத்துக்கு வழியனுப்பி விட்டு வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நாரதர் கண்ணில் ஒரு புஷ்பக விமானம் பட்டது. அதில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். நாரதர் விமானத்தை நிறுத்தினார். மாமுனிவரே! வணக்கம். தாங்கள் யார்? எங்கு பயணப்படுகிறீர்கள்? என் ஆஸ்ரமத்திற்கு வந்து இளைப்பாறிச் செல்ல வேண்டும், என்றார்.முனிவர் நாரதரை வணங்கி, நாரத மகரிஷியைச் சந்தித்தது என் பெரும் பாக்கியம். என் பெயர் சாநந்தர். பூலோகவாசியான நான் சிவனை மட்டுமே தியானிப்பவன். தவமிருந்து தவமிருந்து பூலோகத்திற்கு சிவனை வரவழைத்தவன். எனக்கு ஒரு கோரிக்கை நீண்ட நாளாக உண்டு. உலகத்தின் நன்மையைக் கருதும் நான், நல்லவர் என்றும், தீயவர் என்றும் மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் நல்லவரே என்று நினைக்கிறேன். என் கருத்து சரிதானா சுவாமி? என்று நிறுத்தினார்.உண்மை...உண்மை, என்ற நாரதர், இப்படி உயர்ந்த எண்ணம் மிக்க தங்களைச் சந்தித்தது என் பிறவிப்பயனால் விளைந்தது, என புகழாரம் சூட்டினார். சாநந்தர் தொடர்ந்தார்.மகரிஷி! கேளுங்கள். நல்லவர் சொர்க்கத்துக்கு போய் விடுகிறார்கள். பாதகமில்லை. ஆனால், தீயவர்கள் எமலோகத்துக்குச் செல்கிறார்கள்.  நரகத்தில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பூலோகத்தில் தீமையைச் செய்யும் ஒருவனுக்கு தண்டனை கொடுப்பதில் எனக்கு உடன் பாடில்லை. எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எமனிடம் கோரிக்கை வைக்கப் போகிறேன். இதற்காக சிவபெருமானை நினைத்து தவமிருந்தேன். அவரும் என் முன் எழுந்தருளினார்.

அவரிடம் எமலோகம் செல்ல இந்த ஊர்தியைப் பெற்றுக் கொண்டேன். இப்போது எமலோகம் சென்று கொண்டிருக் கிறேன். தீயவர்களை விடுவிக்கும்படி கேட்கப் போகிறேன், என்றார்.நாரதர் அவரை வாயாரப் புகழ்ந்தார். மாமுனிவரே! தீயவர்க்கும் நன்மை செய்ய நினைக்கும் உங்கள் எண்ணம் உயர்ந்தது. பாராட்டுக்குரியது. நல்லவை உடனடியாக நடைபெற வேண்டும். தங்கள் பயணத்தை தடுக்க நான் விரும்பவில்லை. தாமதமின்றி புறப்படுங்கள். எமனிடம் பேசி வாருங்கள், என்று சொல்லி அவரை வழியனுப்பினாரோ இல்லையோ, சர்வலோக சஞ்சாரியான அவர், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எமன் முன்னால் நின்றார். நாரதர் எமலோகத்துக்கு வந்திருக்கிறார் என்றால்  ஏதாவது விசேஷம் இருந்தாக வேண்டுமே! எமன் அவரை வரவேற்று, காலில் விழுந்து பணிந்து, தங்க சிம்மாசனத்தில் அமர்த்தி பாதபூஜை செய்தான்.மகரிஷி நாரதரே! தாங்கள் எழுந்தருளிய காரணத்தை அறிந்து கொள்ளலாமா? சொல்லுங்கள். என்னால் முடிந்தது என்றால், தங்களுக்காக எதையும் செய்யத் தயார், என்றான் மீசையை முறுக்கியபடி.எமதர்மா! எல்லாவற்றையும் துறந்து பற்றற்று திரியும் நான் உன்னிடம் என்ன கேட்க போகிறேன். எனக்கு எதுவுமே வேண்டாமப்பா! உலகில் இருப்போர் எல்லாம் நீ எப்போது வருவாயோ என்று அஞ்சி நடுங்கி, கவலையோடு இருப்பது சகஜம். ஆனால், நானோ உன்னை எண்ணி கவலைப்படுகிறேன். உன் அரசாங்கத்துக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறதப்பா! ஆபத்து, என்றார்.மகரிஷி! என்ன சொல்கிறீர்? உயிர்கள் அனைத்தும் என் கையில். எனக்கு ஆபத்தா! அதெப்படி சாத்தியம்.... என்றவன், ஆ..ஹா.. ஹா என எக்காளமாகச் சிரித்தான்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:02:53 AM
நாரதர் பகுதி-15

நாரத முனிவரே! தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. உலகில் பாவம் செய்து இறந்த ஒருவனை நரகத்திற்கு எடுத்து செல்கிறீர். புண்ணியம் செய்தவர்கள் இங்கே வருவதே இல்லை. அவர்களை நான் பார்ப்பதும் இல்லை. அவர்கள் நேராக சிவலோகம் அடைகிறார்கள். தீயவர்களை நரகத்தில் அடைத்துவைத்து அவர்களை வேதனைப்படுத்தும் செயலை செய்யும்படி இறைவனே என்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவர்களை விடுதலை செய்யுங்கள் என சொன்னால் அது எப்படி நியாயமாகும்? அகத்தியர், கவுதமர், வசிஷ்டர் போன்ற உயர்ந்த ரிஷிகள்கூட இதுபோன்று ஒரு கோரிக்கை வைத்ததில்லை. ஆனால் சாநந்த முனிவர் இப்படி ஒரு முயற்சி எடுக்கிறார் என்றால் ஆச்சரியப்படாமல் என்ன செய்ய முடியும்? என்றான் எமதர்மன். நாரதரும் அவன் சொல்வதை ஆமோதித்தார். எமன் தொடர்ந்தான். சாநந்த முனிவர் தாராளமாக இங்கு வரட்டும். என்னிடம் பேசட்டும். நான் நடுநிலை தவறாதவன். எந்த முனிவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இறைவனின் கட்டளைப்படியே இங்கு அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் விடுவிக்கப்பட்டால் பூலோகத்தின் நிலை என்னாகும்? இதை நான் அவருக்கு உணர்த்துவேன், என அகந்தையுடன் சொன்னான். நாரத மகரிஷிக்கு எமனின் தற்பெருமை நன்றாகவே புரிந்தது. சாநந்தர் போன்ற ரிஷிகளிடம் இவனை மாட்டி வைத்தால்தான் தன் ஆணவத்தை விடுவான் என்பதை புரிந்துகொண்ட அவர், எமதர்மனே! உன்னிடம் சொல்வதை சொல்லிவிட்டேன். சாநந்தர் வந்தால் அவரை விடாதே. கேள்வி மேல் கேள்வி கேள். உன்னை வெல்ல இந்த உலகில் யாருமே இல்லை. யாரைப்பற்றியும் கவலைப்படாதே. இறைவனின் பணியாளனான நீ யாருக்கு அஞ்ச வேண்டும்? என்று நன்றாக தூண்டிவிட்டு சென்றுவிட்டார். நாரதர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது புரியாமல், புகழ்வதாக நினைத்துக்கொண்ட எமதர்மன் சாநந்தரின் வருகைக்காக காத்திருந்தான்.

சாநந்தரும் வந்துசேர்ந்தார். அவரை எமன் வரவேற்றான். சாநந்தர் எமனுடன் நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தார். அவனை வாழ்த்தினார். பணிகளை பாராட்டினார். அன்பு மிக்கவனே! நான் வந்த விஷயம் பற்றி நீ கேட்கவே இல்லையே! என்றார். எமனும் மிகப் பணிவுள்ளவன் போல் நடித்து, மகரிஷியே! தாங்கள் என்ன காரணமாக இங்கு வந்தீர்கள் என்பதை என்னிடம் விபரமாகச் சொல்லுங்கள், என்றார். சாநந்தர் அவனிடம், எமதர்மா! நான் உன் ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன் என்றார். எமதர்மனே அவரை அழைத்துச் சென்றான். சாநந்தர் எமலோகத்தை முற்றிலுமாக சுற்றிப்பார்த்தார். எல்லா இடங்களையும் காட்டிய எமதர்மன் நரகத்தை மட்டும் காட்டவில்லை. அங்கே போகவேண்டும் என சாநந்தர் சொன்னார். எமன் அவரிடம், முனிவரே! தாங்கள் அங்கு செல்ல வேண்டாம். தவத்தில் உயர்ந்த உங்களின் பாதம் அந்த கொடியவர்கள் இருக்கும் இடத்தில் படக்கூடாது. இத்துடன் திரும்பிவிடுவோம். அங்கே இருப்பவர்கள் அறச்சிந்தனையே இல்லாதவர்கள். கொலைகாரர்கள், மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்கள் அருகேயே நீங்கள் செல்லவேண்டாம். அவர்கள் கடவுளை மனதால்கூட நினைக்காதவர்கள். பூலோகத்தில் தாங்கள் செய்த கொடுமைக்கேற்ற தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க வேண்டுமென நீங்கள் மனதில்கூட நினைக்காதீர்கள் என பணிவோடு சொன்னான். எமதர்மனே! நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் இறைவன் என்பவன் நல்லவனுக்கும் தீயவனுக்கும் பொதுவானவன்தான். ஒரு தரப்பினர் இன்பத்தையும், மற்றொரு தரப்பினர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டுமென அவன் நினைக்கவே மாட்டான். இந்த உலகில் கெட்டவர்களுக்காகவும் பிரார்த்திக்க ஒருவன் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு சிவபக்தன். நான் அந்த கெட்டவர்களுக்காக நரகத்தில் இருந்தபடியே சிவபெருமானை பிரார்த்திக்கப் போகிறேன். என்னை நீ அனுமதித்துதான் ஆகவேண்டும் என அடம்பிடித்தார். எமதர்மனோ, அவரை அங்கு அனுப்ப மறுத்துவிட்டான்.

சாநந்தர் நரகத்தின் வாசலில் அப்படியே அமர்ந்துவிட்டார். தியானத்தில் மூழ்கினார். சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கோடி முறை தியானம் செய்தார். இப்படியும் இந்த உலகில் ஒரு நல்லவரா என அகம் மகிழ்ந்த சிவபெருமான், எமலோகத்திற்கே வந்துவிட்டார். சாநந்தரை எழுப்பி ஆசீர்வதித்தார். எமதர்மன் அவரது காலில் விழுந்து வணங்கினான். சாநந்தரின் கோரிக்கையை நிறைவேற்றும்படியும், கெட்டவர்களும் திருந்தி நடக்க தன் லோகத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி, நரகவாசிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இப்படியாக நாரதரின் கலகத்தால் பாவம் செய்து நரகம் அடைந்தவர்கள் கூட சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். எமலோகத்தில் இருந்து புறப்பட்ட நாரதர், சித்ரகேது என அழைக்கப்படும் மன்னனின் அரண்மனை நோக்கி வந்துகொண்டிருந்தார். மன்னன் சித்ரகேதுவுக்கு நீண்ட நாளாக குழந்தை இல்லாமல் இருந்தது. அப்போது ஆங்கிரஸ் என்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரது ஆசியுடன் புத்திரகாமேஷ்டி யாகத்தை சித்ரகேது செய்தான். இதன் விளைவாக அவனது மூத்த மனைவி ஹிருதத்துதி என்பவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை இல்லாமல் இருந்த காரணத்தால், பல பெண்களை  சித்ரகேது திருமணம் செய்திருந்தான். அவர்களுக்கு ஹிருதத்துதி மீது பொறாமை ஏற்பட்டது. தங்களுக்கு குழந்தை இல்லாமல் ஹிருதத்துதிக்கு மட்டும் குழந்தை இருக்கிறதே என்பதே பொறாமைக்கு காரணம். ஒரு நாள் ஹிருதத்துதியின் சக்களத்திகளில் ஒருத்தி யாரும் அறியாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் சென்றாள்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:04:20 AM
நாரதர் பகுதி-16

அவள் அந்தக் குழந்தையை காட்டில் வீசியெறியும் முன், ஒருவேளை குழந்தை பிழைத்து விட்டால் என்னாவது என்ற எண்ணத்தில், கையோடு கொண்டு சென்றிருந்த விஷப்பாலைக் கொடுத்து மிருகங்கள் நிறைந்த இடத்தில் போட்டு விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. சித்ரகேதுவும், கிருததுத்தியும் மறுநாள் எழுந்தனர். தொட்டிலில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். அரண்மனையெங்கும் தேடினர். குழந்தையைக் கொன்றவள் உட்பட எல்லோருமே அதனைத் தேடுவது போல நடித்தனர். காவலர்கள் பல இடங்களில் தேடினர். காட்டுக்குள் சென்ற ஒரு பிரிவினர் குழந்தை அங்கே இறந்து கிடந்ததைக் கண்டு அரண்மனைக்கு எடுத்து வந்தனர். அலறித்துடித்தான் சித்ரகேது. தனக்கு பிறந்த ஒரே வாரிசும் அழிந்து விட்டதால் நாட்டையும், வீட்டையும் இழந்து விட்டதாகவே கருதினான். பெற்றவள் மனம் என்ன பாடுபடும் என்ன சொல்லவே வேண்டாம். இந்த நேரத்தில் தான் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். நாரதர் தன்னுடன் அங்கிரா என்ற முனிவரையும் அழைத்து வந்திருந்தார். சுவாமி! என கதறியபடியே அவரது பாதங்களில் விழுந்து அழுதான் சித்ரகேது. நிலைமையைப் புரிந்து கொண்ட அவர்கள் சித்ரகேதுவுக்கு ஆறுதல் கூறினர். அங்கிரா முனிவர் சித்ரகேதுவிடம், மன்னா! இறந்தவர்கள் வீட்டில் அழுகை சத்தத்துக்கு இடமே இருக்கக்கூடாது. காரணம், நீயும் ஒருநாள் இறக்கத்தான் போகிறாய். இதை உன் பிள்ளை என்கிறாயே! அப்படி உனக்கு பிள்ளையாக பிறக்கும் முன் இது எங்கிருந்ததுசொல்? என்றார். மன்னன் ஏதும் சொல்லத் தோன்றாமல் நின்றான். பார்த்தாயா, சித்ரகேது! இந்த கேள்விக்கு இங்கிருக்கும் எவராலும் பதில் சொல்ல முடியாது.

நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். எங்கிருந்து வந்தோமோ, அங்கேயே செல்கிறோம். மகன், மகள், மனைவி, கணவன் என்ற உறவெல்லாம் வெறும் மாயை தான். இவர்கள் யாருடனாவது நீ சேர்ந்து வந்தாயா? அல்லது இவர்களையும் அழைத்துக் கொண்டு போகப் போகிறாயா? தனியாகவே வந்தோம்; தனியாகவே செல்வோம். மரணம் எந்த வயதில் நிகழ்ந்தாலும், அது கண்டு கலங்கக்கூடாது. மனதைத் தேற்றிக் கொண்டு, உன் பணிகளில் ஈடுபடு, என்றார். மன்னனின் மனம் சமாதானம் ஆகவேயில்லை. புலம்பித்தவித்தான். நாரதர் மன்னனை அழைத்தார். மன்னா! அங்கிரா முனிவர் உலக நடப்பை எடுத்துச் சொன்னார். அது கேட்பதற்கு கசப்பாயிருந்தாலும், நிஜம் அது தான். இருந்தாலும், இவ்வளவு தூரம் சொல்லியும் நீ கேளாததால், உன் குழந்தைக்கு நானே உயிர் கொடுக்கிறேன். மீண்டும் நீ வளர்த்து வா, என்றார். மன்னனும், கிருதத்துதியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிருதத்துதியின் மற்ற சகோதரிகளுக்கு வியர்த்து விட்டது. எல்லாரும் வியப்புடன் நின்றனர். அங்கு குவிந்திருந்த நாட்டு மக்கள் தங்கள் இளவரசன் மரணத்தை வென்றவனாகப் போகிறான் என்ற மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் பெருக நின்றனர். அந்த பதைபதைப்பான நேரத்தில், நாரதர் குழந்தையின் அருகில் சென்றார். கண்மூடி சில மந்திரங்களைச் சொன்னார். என்ன அதிசயம்! குழந்தை கலகலனெ சிரித்தபடி  விழித்தது. மன்னன் குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டான். அப்போது மன்னா... மன்னா... மன்னா... என்றும், தாயே! தாயே! தாயே... என்றும், நாட்டு மக்களே... நாட்டு மக்களே...நாட்டு மக்களே! என்றும் இனிய குரல் மும்முறை வெளிப்பட்டது. எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தனர்.

கேட்ட குரல் குழந்தையின் குரலாக இருக்கவே, மன்னன் குழந்தையைப் பார்த்தான். குழந்தை தான் பேசியது. நாரதர் அந்தக் குழந்தையிடம், அன்புக் குழந்தையே! நீ ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் உயிர்விட்டாய் என உன்னைப் பெற்றவர்கள் வருந்துகின்றனர். நாட்டு மக்கள் வருந்துகின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இன்னும் கொஞ்சகாலம் இங்கே வாழ்ந்தால் என்ன? என்றார். குழந்தை கலகலவென சிரித்தது. மகரிஷி! இந்தப் பிறவியால் எனக்கு என்ன லாபம்? இதோ! இந்த தாய் என்னைப் பெற்றாள். மற்ற தாய்மார்களெல்லாம் என்னைக் கொன்றனர். ஏன் இது ஏற்பட்டது? பொறாமையால் தானே! இன்னும் நான் அரசனாக வேண்டும்.  அப்போது, பகைவர்கள் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள். இதோ நிற்கும் என் தந்தை பல போர்க்களங்களுக்குச் சென்றார்.  பலரின் தலையைக் கொய்து சிரித்தார். அப்போது அந்த எதிரிகளின் மனைவிமார் அழுதனர். பலர் தீக்குளித்தனர்.  அந்த மரணங்களைக் கண்டு சந்தோஷப்பட்ட இவர், இப்போது என் மரணத்துக்காக ஏன் அழுகிறார்? மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்போர், குறைந்த நாட்களில் தாங்களும் துக்கத்தை அடைவர். இந்த நியதி இவருக்கு ஏன் புரியவில்லை? அவரவர் வினைப்பயன்படியே அனைத்தும் நடக்கிறது. மேலும் பிறந்து பிறந்து மறையும் வாழ்க்கை எத்தனை நாளுக்கு தான்? நான் இன்னும் சிலகாலம் இவர்களோடு இன்புற்று இருந்தாலும், என்றாவது ஒருநாள் மறையத்தானே போகிறேன்? அது இன்றே நிகழ்ந்ததில் என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது? கடற்கரை மணலை விட அதிக எண்ணிக்கையில் பிறவிகள் வருகின்றன. அவற்றையெல்லாம் வேகமாக முடித்து விட்டு திருமாலின் பாதங்களில் நிரந்தரமாக தங்கிவிடுவதே மேலானது, என்றது.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:05:27 AM
நாரதர் பகுதி-17

குழந்தையின் சொல்கேட்டு சித்ர கேது மனம் திருந்தினான். வாழ்க்கை என்றால் இன்னதென்று இப்போது அவனுக்கு வெகுவாகவே விளங்கி விட்டது. அவன் நாட்டை விட்டு தவமிருக்க போய்விட்டான். வெகுகாலம் தவமிருந்து அவனும் பிறவாநிலை பெற்றான். அவனுக்கு மோட்சம் பெற்றுக் கொடுத்த திருப்தியுடன், தன் தந்தை நான்முகனின் இல்லத்திற்குச் சென்றார் நாரதர். பிரம்மா அங்கே கவலையுடன் இருந்தார். அருகே, மனைவி கலைவாணி கோபத்தில் இருந்தாள். அம்மா! தந்தை கவலையுடன் இருக்கிறார். அவரது கவலைக்கு காரணம் உங்கள் கோபம் என்பதும் புரிகிறது. தாய் கோபமாக இருக்கும் போது, தந்தை கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது உலக நியதியாயினும், இது நம் வீட்டு பிரச்னை. என்னிடம் சொன்னால், தீர்த்து வைப்பேன் இல்லையா? என்றார் அப்பாவி பிள்ளை போல! சரஸ்வதிக்கு கோபம் இன்னும் அதிகமானது. அடேய்! நீ என் பிள்ளையாயிருந்தாலும், ஊரில் உள்ளவர்கள் யார் வீட்டிலாவது நல்ல பிள்ளை என பெயர் வாங்கியிருக்கிறாயா? எங்கு போனாலும் கலகம், சிண்டுமுடிப்பது... அது சரி...தகப்பன் ஒழுங்காக இருந்தால் தானே பிள்ளையான நீ ஒழுங்காக இருப்பாய். எனக்கு கட்டியவரும் சரியில்லை, பிள்ளையும் சரியில்லை. அந்த சிவனிடம் சொல்லித்தான் எனக்கு நல்ல விமோசனம் வாங்க வேண்டும், என்றாள் சரஸ்வதி.நல்ல பிள்ளை போல் தலை குனிந்து, அம்மா திட்டுவதைக் கேட்டு கொண்டிருந்த நாரதர், அம்மா! நானே எப்போதாவது ஒருநாள் தான் இந்தப்பக்கமே தலைகாட்டுகிறேன். அப்படி வரும் நாளிலும், உங்களிடம் திட்டு தான் வாங்க வேண்டுமா? தந்தையின் மீது தவறு என்றால், அவரைத்தானே நீங்கள் திட்ட வேண்டும். நான் ஒன்றுமறியா சிறுவன்.  உங்கள் கையால் ஒருவேளை உணவு சாப்பிட வந்தேன். நீங்களோ என்னையும் திட்டுகிறீர்கள்? என்று கோபிப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். மகனைத் தேற்றினாள் சரஸ்வதி.

நாரதா! உன் தந்தை தகாத காரியம் ஒன்றை இரண்டாவது முறையாகச் செய்துள்ளார். ஒருசமயம் என்னைப் படைத்த அவர், என்னையே விரும்பி கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். அதற்காக சிவபெருமானிடம் தண்டனையும் பெற்றார். இன்னும் அவர் திருந்தவில்லை.... என்ற சரஸ்வதியை இடைமறித்த நாரதர், இப்போதும் இன்னொருத்தி மீது கைவைத்து விட்டாரோ? என்றார். சரியாகச் சொன்னாய் நாரதா, சே...சொல்லவே நா கூசுகிறது. ஒரு பெண்ணான நான், அதிலும் கலைவாணியாக இருந்து உலகத்தோர் வாயில் நல்லதையே பேச வைக்க வேண்டும் என்பதைத் தொழிலாகக் கொண்ட நான், இவர் செய்த அநியாயத்தை எப்படி சொல்ல முடியும். அவரிடமே நீ கேட்டுக் கொள், என்று சொல்லி விட்டு கண்ணீர் பொங்க தன் இடத்திற்குப் போய் விட்டாள். நாரதர் தந்தையிடம் சென்றார். மகனைப் பார்த்ததும் தலை குனிந்த தந்தை, மகனே! உலகத்துக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நான், அவ்வப்போது மதிமயங்கி விடுகிறேன். நான் சொல்வதைக் கேள். என் பக்கம் நியாயமிருந்தால், எனக்காக உன் தாயிடம் பேசி அவளது கோபத்தைப் போக்கு, என்றார். நாரதரும் தந்தை சொல்வதைக் கேட்பதற்காக ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தார். நாரதா! தேவலோகத்தில் ரம்பை என்ற ஒருத்தி இருக்கிறாளே தெரியுமா? ஓ... அவள் தான் இதற்கு காரணமா? அவள் இந்திரனுக்காக படைக்கப்பட்டவள். இந்திரசபையின் நாட்டிய ராணி. நான் கூட இந்திரலோகம் செல்லும் சமயங்களில் அவளது நாட்டியத்தைப் பார்த்திருக்கிறேன்.  முற்றும் துறந்தவன் என்பதால் அவளது ஆடலை ரசித்திருக்கிறேன், அவளை ரசித்து சிவ துவேஷத்துக்கும், இந்திரனின் கோபத்துக்கும் ஆளானதில்லை, என்று குத்தலாகப் பதிலளித்தார் நாரதர். பிரம்மா இதைப் புரிந்து கொண்டாலும், தவறு செய்த தனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று நினைத்தபடியே நடந்ததைத் தொடர்ந்தார்.

அந்த ரம்பை தன்னை விட  அழகில் சிறந்தவள் யாருமில்லை என நினைத்துக் கொண்டிருந்தாள். இதுகண்ட இந்திரன், அவளது கர்வத்தை அடக்க எண்ணினான். ஒரு முனிவரிடம் சென்றான். அவரது பெயர் நரநாராயணர். அவரிடம், சுவாமி! என் அவையிலுள்ள பெண்களில் அழகியான ரம்பை தன் அழகின் காரணமாக அகங்காரம் கொண்டிருக்கிறாள். அவளைத் திருத்த வழி சொல்லுங்கள் என்றான்.அந்த முனிவர் தன் தொடை எலும்பில் இருந்து ஒரு அழகியை உருவாக்கினார். அவளுக்கு ஊர்வசி எனப் பெயரிட்டு, இசையும், நடனமும் இயற்கையிலேயே அமையும் வகையிலான திறமையையும் கொடுத்து அவளை இந்திரனிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு ஊர்வசியுடனேயே அதிக நேரத்தைக் கழித்தான் இந்திரன். தன்னை விட அழகுள்ள ஒருத்தி வந்து விட்டதால், ரம்பைக்கு ஊர்வசி மீது கடும் பொறாமை! மேலும் இந்திரன் தன்னைத் தேடி வருவதே இல்லை என்றதும், அதன் அளவு மேலும் அதிகரித்தது. இதற்கு தீர்வு கேட்க அவள் என்னை நாடி  வந்தாள். பிரம்ம பகவானே! நானும் என் தோழியருமே அழகிலும் நாட்டியத்திலும் உயர்ந்தவர்களாய் இருந்தோம். இப்போது தங்கள் தொழிலை கையில் எடுத்து கொண்ட ஒரு முனிவன், ஒரு பெண்ணைப் படைத்து இந்திரனிடம் ஒப்படைத்து விட்டான். அப்படியானால், உங்கள் படைப்பிற்கு மதிப்பில்லாமல் போய் விடும். எனவே ஊர்வசியை விட சிறந்த மற்றொரு அழகியை படையுங்கள். இந்த ஊர்வசியின் ஆட்டம் ஓய்ந்து விடும் என்றாள்.நானும் அந்த ரம்பை சொன்னதைக் கேட்டு இரக்கப்பட்டேன். மேலும், என் தொழிலைக் கையில் எடுத்துக் கொண்ட முனிவனுக்கு பாடம் புகட்ட நினைத்தேன். ஒரு பெண்ணை உருவாக்கினேன்! அவளுக்கு திலோத்துமா என பெயர் வைத்தேன். இங்கு தான் ஆரம்பித்தது வினையே! என்றவர் கதையைத் தொடர்ந்தார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:06:41 AM
நாரதர் பகுதி-18

திலோத்துமை மிக அழகாக இருந்தாள். இப்படியொரு ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் எனக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது, என்ற பிரம்மா, மகனிடம் மேலும் பேசாமல் கூசி நின்றார். சொல்லுங்கள் தந்தையே!  முழுதும் நனைந்தவனுக்கு வெண் கொற்றக்குடை எதற்கு? அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. அவளை என்ன செய்தீர்கள்? என்றார் நாரதர். மகனின் கேள்விகள் ஒவ்வொன்றும் இடியாய் விழுந்தது பிரம்மனின் நெஞ்சில்.நம் புராணக்கதைகள் பல நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றன. கட்டியவளைத் தவிர மற்ற பெண்களை தாயாகவோ, சகோதரியாகவோ பார்க்க வேண்டுமென. ஆண்வர்க்கம் அதை செய்வதில்லை. அதிலும் இப்போது பெண்கள்  ஆண்களிடம் சிக்கி படும் பாடு பற்றிய செய்திகள் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கின்றன. பெண்களில் சிலரும் உறவுமுறை பாராமல் ஆண்களுடன் தொடர்பு கொண்டுள்ளதைச் சித்தரிக்கும் செய்திகளும் வருகின்றன. இப்படியெல்லாம் வரும் என்று தெரிந்து தானோ என்னவோ, புராணங்களில் அன்றே இதுபோன்ற கதைகளை எழுதி வைத்துள்ளனர். பெற்ற மகளுக்கு சமமான திலோத்துமை மீது மையல் கொண்ட நான், அவளை ஆசையோடு அணைத்தேன். இதை சற்றும் எதிர்பாராத திலோத்துமா,  இப்போது தான் என்னைப் படைத்தீர். படைத்தவன் தந்தைக்குச் சமம். நீர் என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறீர். என்னை விட்டு விடும் என்று கதறியழுதாள். எனக்கோ வெப்பம் தலைக்கேற, அவளை மீண்டும் அணைத்தேன். இனியும் என்னுடன் பேசி பயனில்லை என்பதை உணர்ந்த திலோத்துமா, என் பிடியில் இருந்து தப்பி ஓடினாள். எங்கு போனாலும் நான் விடவில்லை. பெண் ரூபத்தில் இருந்தால் தானே இவரால் நம் மானத்தைப் பறிக்க முடியும்? உருவத்தை மாற்றிக் கொண்டால் என்ன? என நினைத்தாளோ என்னவோ? சற்று நேரத்தில் அவள் பெண் மானாக மாறி விட்டாள். அவள் மீது தாபம் கொண்ட நான், ஆண்மானாக மாறி அவளை விரட்டிப் பிடித்தேன். முடிவில் என் பசிக்கு இரையானாள் அவள்.

இந்த விஷயம் உன் அன்னைக்குத் தெரிந்து விட்டது. திலோத்துமா அழுது புலம்பி ஊரைக் கூட்டி விட்டாள். இந்திரன் முதலான தேவர்கள் என்னைப் பழித்தனர். தேவலோகத்தினர் முன்னால் தலையை நீட்ட முடியவில்லை, என்றார். நாரதர் அவரை தேற்றி, தந்தையே! தவறு செய்வது இயல்பு தான். எனினும் இதனால் ஏற்படும் விளைவுகளை நீர் ஏற்கத்தான் வேண்டும். படைக்கும் தொழில் உம்மிடமிருந்து பறிக்கப்படும். அதற்கு முன்னதாக சிவபெருமானைச் சரணடைந்தால் நீர் தப்பலாம், என்றார். மகனின் வார்த்தையை ஏற்று, சிவனைக் காணச் சென்றார் பிரம்மா. பெண் பித்து பிடித்தவன் தேவனே ஆனாலும் இறைவன் அவன் முகம் பார்ப்பதில்லை. பல்லாயிரம் ஆண்டு கடுமையான விரதமும் தவமும் இருந்து சிவனைச் சந்தித்தார் பிரம்மா. அவருக்கு மன்னிப்பளித்து விடுவித்த கருணைக்கடலான சிவன், இனியும் இப்படி செய்யாதே. உன் மனைவி கலைவாணி என் மீது கொண்ட பக்தியால் உன்னை விடுவிக்கிறேன். தவறு செய்யும் கணவன்மாருக்காக பெண்கள் விரதமிருந்து என்னிடம் பிரார்த்திப்பதால், நான் கயவர்களையும் விட வேண்டி வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இப்படி செய்ததால், ஐந்து தலையுள்ள உன்னை நான் முகன் ஆக்கினேன். இனியும் தவறு செய்தால்... என ஒரு பார்வை பார்த்தார் சிவன்.பிரம்மா தலைகுனிந்து விடைபெற்றார். அதன்பின் பிரம்ம சரித்திரத்தில் தவறே நடக்கவில்லை. தந்தை சிரமத்தில் சிக்கியுள்ள நேரத்தில் அவரைக் காப்பது மகனின் கடமை. மகனின் ஆலோசனையின் பேரிலேயே சிவனிடம் மன்னிப்பு பெற்றார் பிரம்மா. தந்தைக்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்த நாரதர், வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பூலோகத்தில் இருந்த ஒரு காடு அவரது கண்ணில் தென்பட்டது. அங்கே ஐந்து வாலிபர்கள், ஒரு வயதான பெண்மணி, ஒரு இளவயதுப் பெண் ஆகியோர் கால்போன போக்கில் போய்க் கொண்டிருந்தனர்.

நாரதர் அவர்களை உற்றுப் பார்த்த போது, ஆஹா...இவர்கள்  நாராயணனின் மைத்துனர்களான பாண்டவர்களும், அவரது அத்தை குந்ததேவியும், பாண்டவர்களின் மனைவி திரவுபதியும் அல்லவா? சூதாட்டத்தால் நாடிழந்த இவர்கள், கானக வாழ்க்கை வாழ்வதற்காக இங்கு வந்துள்ளார்கள் போலும்! எதற்கும் தர்மனை பார்த்து வருவோம். பாவம்...நல்லவன் ஒருவன் கஷ்டப்படக்கூடாது.  உலகில் மனிதனாய் பிறந்தவனை விதி விடுவதில்லை. அப்படி விதிப்பயனை அடைந்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரொருவன் ஆறுதல் சொல்கிறானோ, அவனுக்கு வைகுண்ட பதவி காத்திருக்கிறது, என்றவராய் கீழே இறங்கினார். நாரதரின் மனநிலை நம்மில் பலரிடம் இல்லை. இப்போது அண்டை அயலான் கஷ்டப்படுகிறான் என்றால், சிலருக்கு ஒரே குஷி. இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். நம்மை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த இவன், இப்போது தாழ்ந்து விட்டான். சந்தோஷமாக இருக்கிறது, என்று மனதுக்குள்ளேயே துள்ளிக்குதிப்பவர்களும், கஷ்டப்படுபவர்களை எக்காளம் செய்பவர்களும் தான் அதிகமாகி விட்டார்கள். தர்மமகராஜா முன்பு வந்திறங்கினார் நாரதர். பாலைவனத்தில் தாகத்தால் தவித்த பயணிகள் போல், சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களது மனதுக்கு நாரதரின் வருகை ஆறுதலாக இருந்தது. மகரிஷி! தாங்களா! இந்த நட்ட நடுக்காட்டில் தங்கள் தரிசனம் கிடைக்கப் பெற்றதன் மூலம், நாங்கள் பாக்கியம் பெற்றோம்.  எங்கள் துன்பங்கள் நீங்கி விட்டதாகவே கருதுகிறோம், என்றார் தர்மராஜன். நாரதர் தர்மரிடம், தர்மா! துன்பப்படாதவர்கள் உலகில் யார்? தேவர்களும், தெய்வங்களும் கூடத்தான் துன்பப்படுகின்றனர். ஆனால், துன்பத்தை கடவுள் தருவதில்லை. நாமாகவே இழுத்துக் கொள்கிறோம். உதாரணத்துக்கு பகடை விளையாடியது உன் குற்றம் தானே தவிர, தெய்வத்தின் குற்றமல்லவே, என்றார் நாரதர். தர்மர் தலைகுனிந்து நின்றார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:07:59 AM
நாரதர் பகுதி-19
 
தர்மா! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இப்படி சொல்லவில்லை. கஷ்டங்கள் இயல்பானவை. அவற்றை விரட்டும் வழியைத் தான் பார்க்க வேண்டும். தெய்வங்களே கூட கஷ்டப்பட்ட ஒரு கதையைக் கேள், சொல்கிறேன், என்றார். பீமன் ஓடிப்போய் தர்ப்பை புல்லை பறித்து வந்தான். அதை ஆசனம் போல் ஆக்கி நாரதரை அதில் அமர வைத்தனர். குந்தி மற்றும் ஐந்து புதல்வர்களும் நாரதர் எதிரில் பயபக்தியுடன் அமர கதையை ஆரம்பித்தார் நாரதர். மக்களே! தேவர் குலத்தலைவன் இந்திரன் இருக்கிறானே அவனுக்கு அவ்வப்போது புத்தி மழுங்கி விடும். காரணம் என்ன தெரியுமா? ஆணவம். கடவுளுக்கு ஒன்றை அர்ப்பணித்தால், பதிலுக்கு ஏதாவது எதிர்பார்க்கும் குணம் அவனுடையது. சாந்த மூர்த்தியான நாராயணன் அவனைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், ஒரு சமயம் சிவபெருமானிடம் போய் சிக்கிக் கொண்டான் இந்திரன். தனக்குத் தெரிந்த நடனக்கலையை அவன் ஒருமுறை சிவபெருமானிடம் அர்ப்பணித்தான். அவர் அதைப் பெற்றுக்கொண்டு நடராஜராக மாறி நாட்டியமாடினார். அந்த தரிசனம் கிடைத்தற்கரியது. நாட்டியம் பார்த்தோமா! அத்தோடு அமராவதிபட்டணத்தைப் பார்த்து போனோமா என்றில்லாமல், அங்கேயே கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் இந்திரன். சிவபெருமான் சாந்தத்துடன், ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? சொல் என்றார். அவன் சும்மா இருக்க மாட்டானா? வாயைக் கொடுத்தான். பரமசிவனாரே! எனக்கு ஒரு ஆசை. என்னை விட வீரத்தில் உயர்ந்தவர் யாருமில்லை என்பதைத் தாங்களே அறிவீர்கள். என் வஜ்ராயுதத்தை வீசி எறிந்தால் பிழைப்பவர் யாரும் இருக்க முடியாது. இப்படி வலிமை குறைந்தவர்களுடன் சண்டை போட்டு போட்டு எனக்கு சலித்து விட்டது. என்னிலும் வல்லமையுள்ள ஒருவனுடன் சண்டை போட வேண்டும். அதில் நான் ஜெயிப்பதைப் பார்த்து ஊரே மெச்ச வேண்டும். நீங்கள் தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான்.

சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. மனதுக்குள் அவர் என்ன நினைத்தார் தெரியுமா? அடேய் அறிவிலி! உனக்கு தெரிந்த நாட்டியத்தை என்னிடம் அர்ப்பணிப்பது போல் அர்ப்பணித்து விட்டு, என்னிடமே ஆணவமாகப் பேசுகிறாயா? உன் அகம் பாவத்தை ஒடுக்குகிறேன் பார் என்றவராய், நெற்றிக்கண்ணைத் திறந்து விட்டார். வெப்பம் தாளாமல் இந்திரன் எங்கோ போய் பதுங்கி கொண்டான்.  ஏ இந்திரா! உன்னை எதிர்க்க ஒருவன் வருவான் போ என்றார். இந்திரன் பதட்டமும் மகிழ்ச்சியும் மிக்கவனாய் இடத்தைக் காலி செய்தான். சிவபெருமானின் கண்களில் இருந்து புறப்பட்ட நெருப்பு பொறிகள் கடலுக்குச் சென்றன. சிந்துநதி கடலில் கலக்கும் இடம் அது. அந்த தீப்பொறிகள் கடலில் பட்டு ஒரு குழந்தையாக உருமாறியது. தன்னில் பிறந்த குழந்தையை அரவணைத்து எடுத்தான் சமுத்திரராஜன். நேராக என் தந்தை பிரம்மாவிடம் கொண்டு வந்தான். குழந்தையை அவர் மடியில் போட்டான். குழந்தை அவரது தாடியைப் பற்றி இழுக்க ஆரம்பித்தது. என் தந்தை பிரம்மன் சந்தோஷத்தில் தாடியைக் கொடுத்தபடி இருந்தார். நேரம் ஆக ஆக தாடியை வேகமாக இழுத்தது குழந்தை. அவருக்கு வலிக்க ஆரம்பித்தது. குழந்தையின் கையிலிருந்து தாடியை விடுவிக்க முயன்றார். முடியவே இல்லை. குழந்தையோ பிடியை மேலும் இறுக்கியது. அவர் வலி தாளாமல் அலற ஆரம்பித்து விட்டார். அந்த அலறல் சப்தம் வைகுண்டத்திற்கு கேட்கவே பரந்தாமன் ஓடோடி வந்தார். பிரம்மனைப் பார்த்து, ஓய், பிரம்மா! ஒரு குழந்தையின் கையில் சிக்கியுள்ள தாடியை விடுவிக்க முடியாமல் தான் இப்படி கத்தினீரா! சரியான ஆளைய்யா நீர், என்றதும், நாராயணரே! கேலி வேண்டாம். முடிந்தால் நீர் வந்து விடுவியும், என அலறினார் பிரம்மன். நாராயணன் மிக எளிதில் குழந்தையின் கையை எடுத்து விடலாம் என முயற்சித்து பார்க்க, அவரது கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டது குழந்தை. அதன்பிறகு அந்தக்குழந்தை சமுத்திரராஜனின் மகன் என்றறிந்து, அவனை வரவழைத்தார் நாராயணன்.

தந்தை வந்த பிறகு தான் குழந்தை அடங்கியது. ஒரு வழியாக குழந்தைக்கு நல்லபுத்தி சொல்லி இருவரையும் விடுவித்தார்கள்.பாண்டவர்களே! கதையை நன்றாகக் கேட்டுக் கொண்டு வருகிறீர்கள் இல்லையா? ஆணவத்தால் இந்திரன் தேவையில்லாமல் ஒரு வரம் கேட்டான். சிவனின் கோபத்திற்கு ஆளாகி ஒரு அசுரக்குழந்தை உருவாகக் காரணமானான். பிரம்மாவும், நாராயணனும் தேவையில்லாமல் அதனிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்பட்டனர். இனிமேல் தான் உச்சகட்டமே இருக்கிறது. ஆக எல்லாருக்குமே ஆணவம்... ஆணவம்....உனக்கும் ஆணவம். அதனால் தான் உன்னிலும் தாழ்ந்த சகுனியிடம் தோற்றாய். ஆணவத்தையும், கோபத்தையும் எவனொருவன் விடவில்லையோ அவனுக்கு துன்பம் உறுதி, என்று நிறுத்தினார். உண்மை தான் நாரதரே! எங்கள் ஆணவம் இப்போது அழிந்து விட்டது. பட்டால் தானே எதுவும் தெரிகிறது, என்ற தர்மரிடம், கவலைப்படாதே தர்மா! எதற்கும் ஒரு நேரம் உண்டு. உனக்கு நன்மை கிடைக்கும். மீதி கதையையும் கேள், என்ற நாரதர் கதையைத் தொடர்ந்தார். அந்தக்குழந்தைக்கு என் தந்தை பிரம்மன் ஒரு வரம் கொடுத்தார். நீ என்னையே ஆட்டி வைத்தவன். எனவே, மூன்று உலகத்தையும் ஆளும் வல்லமையைக் கொடுக்கிறேன் என்று இவராகவே ஒரு வரத்தைக் கொடுத்தார். தண்ணீரில் இருந்து பிறந்த அவனுக்கு ஜலந்தராசுரன் என்று பெயரும் வைத்தார். இதைக் கேட்டு இந்திரன் அதிர்ந்து போனான் என்று கதையை நிறுத்தி விட்டு, பீமா! இவ்வளவு நேரம் கதை சொல்கிறேனே, கொஞ்சம் தண்ணீர் கொடு, என்றார் நாரதர். குந்திதேவி ஆவல் தாளாமல், நாரதரே! அப்புறம் அந்த குழந்தை என்னவெல்லாம் செய்தது. சொல்லுங்கள், என்றாள்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:09:07 AM
நாரதர் பகுதி-20

இது என்ன புதுப்பூதம்? என்ற திருமால், மனைவியிடம், லட்சுமி! உன் சகோதரன் தேவர்களைப் படுத்தும் பாட்டை நீ அறிவாயா? இப்படிப்பட்ட சகோதரனுக்காக எப்படி பரிந்து பேச முடிகிறது? என்றார் திருமால். அன்பரே! நல்லவனோ கெட்டவனோ! ரத்த சொந்தம் என வந்து விட்டால், அவர்கள் தவறு செய்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. சரி...உங்கள் மைத்துனனுக்கு அறிவுச்சூடு கொடுத்து அவனை திருத்த வேண்டுமானால் அனுமதிக்கிறேன். எக்காரணம் கொண்டும் அவனை நீங்கள் கொல்லக்கூடாது. சத்தியம் செய்யுங்கள் என்றாள். வேறு வழியின்றி சத்தியம் செய்து விட்டு விஷ்ணு புறப்பட்டார். இந்திரனுக்கு இந்த சத்தியம் பற்றிய விபரம் தெரியவந்தது. அவன் இன்னும் கலங்கினான். ஒருவன் தவறே செய்யக்கூடாது. செய்தால், அதன் பலனில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்த வாக்கியத்துக்கு முழுப்பொருத்தமாக இப்போது இந்திரன் இருந்தான். இதனிடையே ஜலந்தராசுரன் தன்னை உருவாக்கிய சிவபெருமானை சந்திக்கச் சென்றான். அவனைப் படைத்தவர் என்ற முறையில் சிவன் அவனுக்கு தந்தை முறை வேண்டும். பார்வதிதேவியார் தாய் முறை வேண்டும். இவன் கைலாயம் செல்லும் வழியில், அழகே உருவாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள். தோழிப்பெண்கள் அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். கழுத்தில் ஏராளமான ஆபரணங்களுடன் திருமாங்கல்யமும் பளிச்சென காட்சியளித்தது. திருமணமானவள் என்று தெரிந்தும், அவளது அழகை அவன் ரசித்தான். அவள் யாரென்று அங்கு நின்ற பூதகணங்களிடம் விசாரித்தான். பரமசிவன் மனைவி பார்வதி என்று அவர்கள் சொன்னார்கள். ஆனாலும், தாய் ஸ்தானத்து பெண்மணியை அவன் காமப்பார்வை பார்த்தான். அவளைத் தன் இடத்திற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டான். ஒரு மறைவிடத்திற்கு சென்று சிவனைப் போல் தன் உருவை மாற்றிக் கொண்டான். இதையறியாத நந்திதேவரும், பார்வதியும் அவனை சிவன் என நினைத்து வழிபட்டனர்.

இங்கே இப்படியிருக்க, விஷ்ணு ஜலந்தராசுரனின் அரண்மனைக்குச் சென்றார். அவர் மாயன் அல்லவா? தன் உருவத்தை ஜலந்தராசுரன் போலவே மாற்றிக் கொண்டார். ஜலந்தரனின் மனைவியின் கற்புக்கு களங்கம் எப்போது உண்டாகிறதோ, அப்போதே அவனுக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது என்பதை அவர் அறிவார். இதோ! கணவன் செய்த பாவம் மனைவியின் தலையில் விழப்போகிறது. நீங்கள் செய்த பாவம், திரவுபதியின் மீது விழுந்தது போல! என்ற நாரதர், அவர்களை உற்று நோக்கினார். பாண்டவர்களும் குந்திதேவியும் கண்ணீர் வழிய ஜலந்தராசுரனின் மனைவி பிருந்தாவுக்கு மாயக்கண்ணனால் ஏற்படப் போகும் அபத்தம் பற்றி கேட்க ஆவலாயினர். பாண்டவச் செல்வங்களே! தன் கணவனின் ரூபத்தில் வந்த பகவானை பிருந்தை தன் கணவன் என நினைத்து வரவேற்றாள். அவரை ஆசனத்தில் அமர வைத்து பாதத்தை கழுவினாள். கணவனுக்குரிய பாதபூஜையை பகவானுக்குச் செய்தாள். யார் ஒருத்தி, கணவனைத் தவிர பிறன் ஒருவனை கணவனாக மனதில் கடுகளவு எண்ணி விடுகிறாளோ, அப்போதே அவள் கற்பிழந்து போகிறாள். பிருந்தையும் இம்மட்டில் தன்னை அறியாமலே கற்பிழந்தாள். திருமால் அவள் முன் பாம்பணையில் சயனித்த நிலையில் காட்சி தந்தார். பிருந்தா! நீ என் பக்தை. உன் பக்திக்கு வசப்பட்டு இங்கு வந்தேன். ஆனால், உன் கணவனின் வடிவத்தில் வந்த எனக்கு நீ பாதபூஜை செய்ததால் கற்புக்கு பங்கம் ஏற்பட்டது. இதனால், உன் கணவன் அழிவான். காரணம், அவன் எந்த ஈசனால் படைக்கப்பட்டானோ, அவரது மனைவியையே கடத்த நினைத்து அங்கே சிவவேடத்தில் காத்திருக்கிறான். சிவபெருமானுக்கு இது தெரிந்து விட்டது. இப்போது அங்கே சிவனுக்கும், அவனுக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது என்றார். பிருந்தா இதை ஏற்க மறுத்தாள். நாராயணமூர்த்தியே! இது கொஞ்சம் கூட முறையல்ல. என் கணவர் செய்த தவறுக்காக என் கற்புக்கு சோதனை வைத்தது எவ்வகையிலும் முறையாகாது.

தெய்வமான நீயே இப்படி நடக்கலாமா? கற்பிழந்த நான் இனி உயிர் வாழ மாட்டேன். அவர் வருவதற்குள் என்னை அழித்துக் கொண்டு விடுவேன். அவர் இங்கு வந்து என்னைக் காணாமல் திண்டாடுவார். என் பதி என்னைப் பிரிந்து தவிப்பது போல, நீரும் உம் மனைவி லட்சுமியைப் பிரிந்து தவிப்பீர். இது என் சாபம் என்றாள் கோபமும் கண்ணீரும் பொங்க. சொன்னது போலவே அக்னி வளர்த்து அதில் குதித்து இறந்தாள். பரந்தாமனே அந்த கற்புக்கரசியின் நிலைக்காக கண்ணீர் வடித்தார். அப்போது ஜலாந்தராசுரனிடம் இருந்து தப்பித்து வந்த பார்வதி புனிதநீரை பிருந்தாவின் சாம்பலில் தெளித்தாள். அது ஒரு செடியாக மாறியது. அதற்கு துளசி என பெயர் சூட்டினாள். துளசி என்றால் ஈடு இணையற்றது என்று பொருள். திருமால் அவளிடம், பார்வதி, களங்கமற்ற இந்த செடியின் இலைகளைக் கொண்டு யார் என்னை பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பேன் என்றார். இதற்குள் ஜலந்தராசுரனுடன் போரிட்டு நெற்றிக்கண் திறந்து அவனைக் கொன்றார் சிவபெருமான். எங்கிருந்து வந்தானோ அங்கேயே அடைக்கலமானான் ஜலாந்தரன். தர்மா! கேட்டாயா! முப்பெரும் தெய்வங்களும் பட்டபாட்டை. பிருந்தாவின் சாபம் பிற்காலத்தில் நாராயணனை லட்சுமியிடம் இருந்தும் பிரித்தது. அதனால் அவர் சிரமப்பட்டது தனிக்கதை. எனவே துன்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைத்தான் விதிப்படி நீங்களும் அனுபவிக்கிறீர்கள். விரைவில் இந்த துன்பம் தீர்க்க அந்த பரந்தாமன் உங்களுக்கு உதவுவான். உங்களுக்கு என் ஆசிர்வாதம், என்று முடித்தார் நாரதர். இக்கதை கேட்டு ஆறுதலடைந்த பாண்டவர்களிடம் விடை பெற்று, வான்வெளியில் சஞ்சரித்த போது, அஷ்டவசுக்கள் எனப்படும் திசைக்காவலர்கள் எட்டு பேர் கையைப் பிசைந்து கொண்டு நின்றதைக் கவனித்தார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:10:37 AM
நாரதர் பகுதி-21

நாரதர் வானில் இருந்து கீழே இறங்கவும், அவர்கள் ஓடிவந்து காலில் விழுந்தனர். மகாமுனிவரே! உங்கள் கையில் தான் எங்கள் வாழ்வே இருக்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள், என்றனர். அவர்களின் உடலில் இருந்து நாற்றம் வீசியது. ஒருவன் கையில் ஒரு எலும்புத்துண்டை வைத்திருந்தான். அதில் இருந்த சதைப்பற்றை தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தான். நாரதர் அவர்களை இன்னார் என உணர்ந்து கொண்டாலும் கூட, அடையாளம் தெரியாதவர் போல நடித்தார். யாரப்பா நீங்கள்? ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்? நான் தேசாந்திரம் போய்க் கொண்டிருக்கிறேன். பாதையை விடுங்கள், என்றார். மகரிஷி! எங்களை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? அந்தளவுக்கா நாங்கள் உருமாறி விட்டோம். நூறு வருடங்களாக நாங்கள் இந்த பேய்க்காட்டில் கிடந்து அவஸ்தைப்படுகிறோம். எங்களைக் கரைசேருங்கள், என்றனர் கண்களில் நீர் வழிய. நாரதர் அவர்களிடம், நீங்கள் இந்த சுடுகாட்டின் பணியாளர்களா? என்ன தான் சுடுகாட்டில் பணியாற்றினாலும், இறந்தவர்களின் உடலையா உண்பது? சே....என்ன அபத்தம்! இதோ! உங்களில் ஒருவன் ஏன் எலும்பில் இருந்து சதையைப் பிய்க்கிறான். உண்பதற்கு தானே? என்றார் கோபப்படுபவர் போல நடித்து. ஆமாம் சுவாமி! பசி...பசிக்கொடுமை எங்களை வாட்டுகிறது. அதனால், இந்த பிணங்களின் சதையை பிய்த்து தின்கிறோம். ஆனால், நாங்கள் விரும்பி இதைச் செய்யவில்லை. ஒரு பசு எங்களுக்கு அளித்த சாபத்தால் இவ்வாறு செய்கிறோம், என்றனர். அப்படியா? ஒரு பசுவுக்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா? நம்பவே முடியவில்லையே, அப்படியானால் நீங்கள் யார்? என்றார். ஐயனே! நாங்கள் அஷ்டவசுக்கள். திசைகளின் பாதுகாவலர்கள். எங்களை அனலன், அணிலன், ஆபச்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்யூசன், பிரபாவன் என்று அழைப்பர், என்றனர்.

நாரதர் அப்போது தான் அவர்களை அடையாளம் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு, ஐயையோ, நீங்களா? உங்களுக்கா பிணம் தின்னும் இக்கதி கிடைத்தது. ஏன்? உங்கள் செல்வமெல்லாம் என்னானது? உங்கள் மனைவிமார் எங்கே? திசைக்கொரு ராஜ்யத்தை ஆண்டீர்களே! அவை எங்கே போனது? என்றார். அஷ்டவசுக்களில் முதலாமவனான அணிலன் தங்களுக்கு நேர்ந்த கதி பற்றி விபரமாக எடுத்துரைத்தான். மகா முனிவரே! எங்களில் முதல் ஏழுபேரும் எந்தத்தவறும் செய்யவில்லை. ஆனால், தவறுக்கு உடன் போனோம். எங்களில் கடைக்குட்டியான இந்த பிரபாவன், தன் மனைவி மாலினி மீது உயிரையே வைத்திருந்தான். அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது தான் அவனுக்கு வேலையே. அந்தளவுக்கு அவளது அழகில் மயங்கிக் கிடந்தான். ஒருநாள் நாங்கள் மேரு மலைச் சாரலுக்குச் சென்றோம். அங்கே, ஒரு அழகிய பசு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கொம்புகள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேனி அதிவெண்மையாக இருந்தது. ஒரு மாசு மரு கூட இல்லை. கால் குளம்புகள் வெள்ளியால் உருவாக்கப்பட்டிருந்தன. மடுவைப் பார்த்தால் மிகப்பெரிதாக இருந்தது. அதில் இருந்து தானாகவே பால் சொரிந்து கொண்டிருந்தது. அது நின்ற இடமெல்லாம் பால்பெருகி, சிறுசிறு குளங்களை உண்டாக்கியது. பால் வழிந்ததைப் பார்த்தால், நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் பாற் கடல் இந்த பூலோகத்திலும் உருவாகி விடுமோ என்ற அளவுக்கு இருந்தது. இப்படிப்பட்ட அந்த பசுவின் அருகில் சென்று பார்த்தோம். அது எங்களைக் கண்டு மிரண்டது. அப்போது, மாலினி அந்தப் பசுவைப் பிடித்து வாருங்கள் என்று பிரபாசனிடம் கேட்டாள். பிரபாசனும் புறப்பட்டான். நாங்கள் அவனைத் தடுக்கவில்லை. விளையாட்டாக இருந்து விட்டோம். அவன் பசுவைப் பிடிக்கச் சென்ற போது, அந்தப்பசு பேச ஆரம்பித்தது. பிரபாசா! உன்னை யார் என நான் அறிவேன். நான் தான் தேவலோகப் பசுவான காமதேனு. இப்போது நான் முனிவர்களுக்கெல்லாம் தலைவரான வசிஷ்டரின் பாதுகாப்பில் இருக்கிறேன்.

நான் இங்கு சிந்தும் பால் அவருக்குரியது. சிவபூஜைக்கு அவர் அதைப் பயன்படுத்துவார். நீ என்னைப் பிடிக்க முயற்சிக்காதே. ஓடி விடு என்று எச்சரித்தது.மனைவி மீது கொண்ட காதலால், பிரபாசன் அது சொன்னதைக் கேட்கவில்லை. அதைப் பிடிக்க எத்தனித்தான். அதன் வாலைப் பிடித்து இழுத்தான். தலையை இறுக்கமாகப் பிடித்து, கயிறை கட்டி இழுக்க ஆரம்பித்தான். வலி தாளாமல் அலறிய காமதேனு, மூடனே! நான் சொல்லியும் நீ கேட்கவில்லை. பசுவுக்கு துன்பம் செய்பவர்கள் அது அனுபவிப்பது போல, பல மடங்கு துன்பத்தை அனுபவிப்பர். நீயும், இங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் உன்னைச் சேர்ந்தவர்களும் இப்போதே காசி செல்வீர்கள். அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களே உங்களுக்கு ஆகாரம் என்று சாபம் விட்டது. நாங்கள் அதிர்ந்து விட்டோம். காமதேனுவிடம் மன்னிப்பு கேட்டோம். ஆனால், அது மன்னிக்க மறுத்து விட்டது. பிரபாசன் செய்த தவறுக்கு எல்லோரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறாய்? வேண்டுமானால் அவனையும், அவன் மனைவியையும் தண்டித்துக் கொள். மற்றவர்களை விட்டு விடு. தவறு செய்யாத எங்களைத் தண்டிக்க காரணம் என்ன? என்றோம். அந்தப் பசுவோ, பிரபாசன் என்னைத் துன்புறுத்தும் போது, நீங்கள் அவனைத் தட்டிக் கேட்கவில்லை. தவறைத் தட்டிக் கேட்காமல், நீங்களும் வேடிக்கை பார்த்ததால், உங்களையும் சாபம் சேரும், என்றது. மீண்டும் அதனிடம் மன்னிப்பு கேட்கவே, உங்களுக்கு நான் இட்ட சாபத்தை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். தவறு செய்பவர்கள் மன்னிக்கப்பட்டு விட்டால், பின்னர் உலகில் ஒழுங்கில்லாமல் போய்விடும். மேலும், பசுக்களுக்கு துன்பமிழைப்பவனுக்கு விடிவே கிடையாது. இருப்பினும், நீங்கள் கெஞ்சிக் கேட்பதால் ஒரு விமோசனம் தருகிறேன் என்றது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது, என்றான். நாரதர் அவ்விமோசனம் பற்றி கேட்க ஆவலுடன் நின்றார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:11:58 AM
நாரதர் பகுதி-22

அணிலா! அவ்விமோசனம் பற்றி முதலில் சொல். என்னால் முடியுமானால் தீர்த்து வைக்கிறேன், என்றார் நாரதர். முற்றும் அறிந்த முனிவரே! தாங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அறியாதவர் போல் பேசுகிறீர்கள். ஐயனே! நூறாண்டுகள் நாங்கள் அனுபவித்த துன்பம் போதும். இனியும் கலகம் செய்து, எங்களை நிரந்தரமாக பிணம் தின்ன வைத்து விடாதீர்கள், என அவரது பாதத்தில் விழுந்தான் அணிலன். அவனைத் தொடர்ந்து மற்ற வசுக்களும், மாலினியும் காலில் விழுந்தனர். அவர்களை எழுப்பிய நாரதர் சிரித்தபடியே, அன்புக்குரிய குழந்தைகளே! என்னால் தான் உங்களுக்கு சாப விமோசனம் என்பதை நான் அறிவேன். இன்றோடு நூறு ஆண்டுகள் நீங்கள் கொடிய தண்டனையை அனுபவித்து விட்டீர்கள். பசுவதை எவ்வளவு கொடியது என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனின் சங்கல்பத்தால் இப்படி நடந்தது. அதில், நீங்கள் பாத்திரமாக நடித்தீர்கள். இனி உங்கள் சாபம் தீர்ந்தது. காமதேனு ஏற்கனவே இதுபற்றி என்னிடம் தெரிவித்து விட்டது, என்று சொல்லி, தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை அவர்கள் மீது தெளித்தார். அவர்கள் தங்கள் பழைய உருவை அடைந்ததுடன், நடந்ததை எல்லாம் மறந்தே விட்டனர். புதுமனிதர்களாக உருவெடுத்த அவர்கள் நாரதரை புதிதாகப் பார்ப்பவர்கள் போல் வணங்கி, தங்கள் உலகங்களுக்கு திரும்பினர். நாரதர் மிக்க மகிழ்ச்சியுடன் தன் சஞ்சாரத்தை துவக்கினார். இந்திரலோகத்திற்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டதால், அடுத்த கணமே அவர் இந்திரலோகத்தில் இருந்தார். நாரதர் வந்துள்ள தகவல் அறிந்து, இந்திரன் ஓடோடி வந்தான். வரவேண்டும் மகரிஷி, என வரவேற்றான். ஆனால், அவனது முகத்தில் ஏதோ வாட்டம் இருந்தது. இந்திரா! உன் வரவேற்பு என்னவோ பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், உன் முகத்தில் ஏதோ ஒரு களைப்பும், இழப்பும் தெரிகிறதே! ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டாயா? என்று வருத்தமாக கேட்பது போல் நடித்தார் நாரதர்.

அப்படியொன்றுமில்லை மகரிஷி! நான் தேசத்தை ஆள அசுரர்கள் போட்டி போடுகிறார்கள். நல்லவர்கள் கூட யாகம் செய்து, சிவனருளால் என் இடத்திற்கு வர வேண்டும் என துடிக்கிறார்கள். நான் எப்படி என் இடத்தை விட்டுக் கொடுக்க முடியும். இந்திரலோகத்தின் நிரந்தரத் தலைவன் நான் தானே! பார்த்தீர்களா நியாயத்தை! என்ற இந்திரனிடம், இந்திரா! உன்னிடம் இருக்கும் செல்வம் நிலையற்றது. இதை விட்டு விட்டு போக வேண்டியது தானே. எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு சூரியலோக கிசுகிசு தெரியும். காதைக் கொடு. அதைக் கேட்டால் நீயும் திருந்தி விடுவாய், என்றார். சூரியலோகத்தில் நடந்த அந்தக் கதையைக் கேட்க இந்திரன் ஆவலானான். இந்திரா! பிருகுமுனிவரைப் பற்றி நீ அறிவாய். பகவான் நாராயணனே மிகவும் பொறுமையான கடவுள் என நிரூபித்தவர் அவர். ஒருமுறை அவருக்கு ஒரு தீர்க்க முடியாத சந்தேகம் ஏற்பட்டது. அவர் பத்மம் என்ற ஊரில் மனைவி, குழந்தைகளுடன் சவுக்கியமாக வசிக்கிறார். அவர் வீட்டுக்கு விருந்தினர்கள் யாராவது போனால் போதும். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்ற பழமொழி அவருக்கு மட்டும் சொந்தம் கிடையாது. மூன்று நாளென்ன...மூன்று யுகங்கள் அவர் வீட்டில் ஒரு விருந்தினர் தங்கினால் கூட முகம் சுளியாமல் உபசரிப்பார். அந்த விருந்தினர் ஊர் திரும்பும்போது, தேவையான பொருளும் கொடுத்தனுப்புவார். இப்படியெல்லாம் நன்மை செய்தாலும் கூட அவர் மனதில் ஏனோ திருப்தியில்லை. நம் பணிகளில் ஏதேனும் குறை வைக்கிறோமோ? மனைவி, மக்கள் நம்மிடம் குறை ஏதேனும் காண்கிறார்களோ? நம்மால் உபசரிக்கப்படுபவர்கள் மனத்திருப்தியுடன் செல்கிறார்களா? இல்லையா? எல்லாரும் நம்மால் பயனடைகிறார்களா இல்லையா? அதற்கேற்ற பொருட்செல்வம் போதுமா போதாதா? இப்படி பல சந்தேகங்கள்.
இதற்கு விடையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் நான் அவரை சந்தித்தேன்.

 அவர் என்னிடம் மேற்படி கேள்விகளையெல்லாம் கேட்டார். நான் அவரிடம், இந்த கேள்விகளுக்குரிய விடையை என்னை விட நாகலோக தலைவனான பதுமன் அழகாகச் சொல்வான். அவனைப் போய் பாருங்கள் என சொல்லி அனுப்பினேன். பிருகு முனிவர் நாகலோகத்திற்கு உடனே கிளம்பி விட்டார். அங்கே பதுமனின் மனைவி மட்டுமே இருந்தாள். முனிவருக்கு பலமான உபசாரம் செய்தாள். தான் வந்த விஷயத்தைச் சொன்னார் பிருகு. அவர் சூரியலோகம் போயிருக்கிறார். வருவதற்கு எட்டு நாள் ஆகும். நீங்கள் அதுவரை இந்த ஏழையின் குடிசையில் தங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாள் பத்மனின் மனைவி. இல்லை தாயே! நான் வெளியே தங்கிக் கொள்கிறேன், என சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். வெளியே சென்ற பிருகு, பதுமன் வந்து விடை சொல்லும் வரை நோன்பிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி அவர் பட்டினியாகவே இருந்தார். இதைக் கேள்விப்பட்ட பதுமனின் பத்தினி, முனிவரைச் சந்தித்து, சுவாமி! எங்கள் வீட்டுக்கு வந்த நீங்கள் பட்டினியா இருப்பதை நான் தாங்கமாட்டேன். என் கணவர் வந்தால், என்னைக் கடுமையாகக் கடிந்து கொள்வார். நீங்கள் தயவு செய்து உணவுண்ண வேண்டும். இல்லாவிட்டால், நானே இங்கு உணவைக் கொண்டு வருகிறேன் என்றாள். முனிவர் ஒப்புக்கொள்ளவில்லை. அம்மா! இந்த உலகத்திலேயே விருந்தினர்களை உபசரிப்பதில் நான் தான் பெரியவன் என நினைத்துக் கொண்டிருந்தேன்ண. ஆனால், உன் அன்பான உபசரிப்பின் முன்னால் அவை அனைத்தும் தவிடு பொடியாகி விட்டன. இருந்தாலும், உன் கணவன் வரும்வரை உண்ணாநோன்பு இருப்பதென சங்கல்பம் செய்து விட்டேன். முனிவர்கள் ஒரு உறுதி எடுத்தபிறகு அதில் இருந்து பிறழக்கூடாது என்பது விதி. எனவே, என்னை வற்புறுத்தாதே தாயே என்றார். அந்த நாககன்னிகை என்ன செய்வதென தெரியாமல் திகைத்தாள்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:13:10 AM
நாரதர் பகுதி-23

ஒருவழியாக எட்டு நாட்களும் கடந்தன. நாகராஜனான பத்மன் ஊர்வந்து சேர்ந்தான். அவனிடம், நடந்ததைச் சொன்னாள் அவனது மனைவி. சற்று கூட ஓய்வெடுக்காமல், உடனே புறப்பட்டான் பிருகுவைச் சந்திக்க. அவரை வணங்கினான். பிருகு முனிவரே! தாங்கள் ஸ்ரீமன் நாராயணனையே தரிசித்த சீலர். சிவலோகத்திற்கும், பிரம்மனின் சத்தியலோகத்திற்கும் நினைத்தவுடனேயே சென்று திரும்பும் சீலர். இப்படிப்பட்ட தாங்கள், என் நாட்டுக்குள் வந்தும், வீட்டில் தங்காமல் வெளியே தங்கிவிட்டீர்கள். தாங்கள் வந்த நேரத்தில், நான் ஊரில் இல்லாமல் போனது என் துரதிர்ஷ்டமே. தாங்கள் இப்போதாவது என் குடிசைக்கு வாருங்கள். எங்களுடன் உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் அன்னபானமின்றி தாங்கள் உபவாசம் இருக்க வேண்டியதன் அவசியம் என்னவென நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வணக்கத்துடன் கேட்டான். பத்மா! சூரியலோகம் வரை சென்று வருவதென்பது சாதாரண காரியமா? சுட்டெரிக்கும் அந்த சூரியனின் வெப்பத்தை பூமியிலுள்ளவர்கள் தாங்கிக் கொள்வதே அரிதாக இருக்கும்போது, நீ அங்கு சென்று வந்துள்ளாய். அங்குள்ள விபரங்களை முதலில் சொல். பிறகு என் கதையைப் பார்க்கலாம் என்றார் பிருகு. மாமுனிவரே! சூரியலோகம் என்பது இந்திரலோகத்தை விட உயர்ந்ததாக இருக்கிறது. எந்நேரமும் வாத்திய முழக்கம் கேட்டவண்ணம் இருக்கிறது. அழகிய பெண்களின் நடனம் நிற்காமல் நடக்கிறது. சூரியலோகத்தில் பல அறிஞர் பெருமக்கள் உள்ளனர். அவர்கள் பலவித பொருட்களில் சுவையான, பயனுள்ள விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கே செல்வத்திற்கு பஞ்சமில்லை. அங்கிருந்து வரும் ஒளி என்னதென நினைக்கிறீர்கள்? சூரியபகவான் தன் மனைவி உஷை யுடன் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான். அந்த சிம்மாசனத்தில் நவரத்தின மணிகள் தொங்குகின்றன. அதிலிருந்து புறப்படும் ஒளியே நம் கண்ணைப் பறிக்கிறது. அவையே கதிர்களைப் பரப்புகிறது.

சூரியபகவானிடம் ஒரு தேர் இருக்கிறது. அதில் ஏழுவகையான நிறங்களில் குதிரைகள் உள்ளன. அவற்றில் இருந்து புறப்படும் ஒளி வானில் ஒரு வில்போன்ற வளையத்தை உருவாக்குகிறது. அந்தக் குதிரைகள் நடக்கிறதா... ஓடுகிறதா என்றால்... உஹும்... பறக்கின்றன. ஆம்...காற்றை விட வேகமாய் பறக்கின்றன. அவன் ஓரிடத்தில் நிலைத்து நிற்கிறான். அவனை உலகிலுள்ள அத்தனை கிரகங்களும் வலம் வருகின்றன. நாம் வசிக்கும் இந்த பூமி உட்பட. அப்படியானால், அவன் எப்பேர்ப்பட்ட புகழுடையவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கிரகங்கள் அவனை வலம் வருவதால், அவன் உலகத்தை வலம் வருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் அனைவரும் அறிவுஜீவிகள். என் கண்முன்னால் நடந்த சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன், கேளுங்கள். ஒருநாள், ஒரு பெரியவர் சூரியலோகத்திற்கு வந்தார். சூரியனின் பாதம் பணிந்த அந்த நிமிடமே சூரியனுடன் கலந்து விட்டார். நான் பகவானிடம், சூரியநாராயணா! உன்னில் கலக்க அந்தப்பெரியவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னோடு ஐக்கியமாக என்ன தகுதி வேண்டும்? என்றேன். அவன் என்னிடம், நாகலோகத்தின் நாயகனே! இப்போது என்னை வந்து அடைந்த பெரியவர், பூலோகத்தில் இருந்து வந்தார். அவர் கல்வி, கேள்விகளில் சிறந்தவர். ஒழுக்கசீலர். இந்திராதி தேவர்கள் கூட ஒழுக்கம் தவறிய வரலாறை கேட்டிருப்பாய். இவனோ விருப்பங்களை களைந்தவன், வெறுப்பு களைத் துறந்தவன். எந்த நிலையிலும் மனம் தளராதவன். ஆசைகளைத் துறந்தவன். இப்படிப்பட்ட குணநலமுடையவன் யார் ஒருவன் எந்த உலகில் இருந்தாலும், என்னோடு கலந்து விடுவான். அவனுக்கு மீண்டும் பிறவி இல்லை, என்றான். இப்படி பத்மன் சொன்ன கதையை கேட்டுக் கொண்டிருந்த பிருகு, பத்மா! நிறுத்து! நிறுத்து! நான் வந்த வேலை முடிந்து விட்டது. இந்த உலகத்தில் நான் தான் தர்மப்பிரபு, விருந்தினர்களை வரவேற்பதில் உயர்ந்தவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். என் உறவினர்களும், நண்பர்களும் என் விருந்தோம்பலைப் பாராட்ட வேண்டும் என்ற சுயநலம் அதில் கலந்திருந்தது.

சூரியலோகத்தில் நடந்த அந்த சம்பவத்தைக் கேட்டபிறகு, விருப்பு வெறுப்பற்ற முறையில் சேவை செய்வது ஒரு மனிதனின் கடமை என்பதைப் புரிந்து கொண்டேன். நாரதமகரிஷி தான் உன்னிடம் என்னை அனுப்பி வைத்தார். உன்னிடம் சென்றால் என் சந்தேகங்களுக்கு தக்க பதில் கிடைக்கும் என்றார். நீ எனக்காகவே சூரியலோகம் சென்று வந்தது போலுள்ளது என்றவர், பத்மனிடம் விடைபெற்று திரும்பினார். பார்த்தாயா இந்திரா! உன் ஆட்சியைப் பிடிக்க பலரும் போட்டியிடுவதாக நீ சொல்கிறாய். இந்த ஆட்சி, அதிகாரம் என்பவையெல்லாம் தற்காலிக சுகங்களே! இதில் சுகத்தை விட துக்கமும், ஆட்சி போய்விடுமோ என்ற பயமும் தான் அதிகமாக இருக்கிறது. எனவே, நீ உனக்கு வரும் துன்பங்களை ஒரு பொருட்டாகக் கருதாதே. ஆசைகளைத் துறந்துவிட்டால், ஆட்சியைப் பற்றிய கவலை வராது. இந்த ஆட்சி போனால் போகட்டும் என விட்டு விடு. பகவானை மனதில் நினை. உன் சுகத்தில் எந்தக் குறைவும் வராது என ஆசியளித்தார் நாரதர். இந்திரனும் மனம் தெளிந்தான். நாரதர் அவனிடம் விடைபெற்று, மந்தேகம் என்ற தீவின் வழியாக தன் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தார். வானத்தில் சூரியன் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தான். வழக்கத்தை விட இது என்ன கொடிய வெயில். சூரிய பகவானுக்கு கோபம் வந்து விடுமானால், அவன் இப்படித்தான் பூமியில் ஒரு பயிர்பச்சை கூட இல்லாத அளவுக்கு தன் கற்றைகளால் எரித்து விடுவான். நாரதர் அங்கிருந்தபடியே காற்றிலும் கூடிய வேகத்தில் சூரியலோகத்தை அடைந்தார். சூரியன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு, வருக வருக! நாரத மகரிஷியின் வரவால் எரிந்து கொண்டிருந்த என் மனம் குளிர்ந்தது, என்றான்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:14:25 AM
நாரதர் பகுதி-24

வாழ்க! வாழ்க சூரியதேவா! என சூரிய பகவானை வாழ்த்திய நாரத மாமுனிவர், சூரியனே! உன் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதால் சற்று குளிர்ந்திருக்கிறாய். ஆனால், நான் மந்தேகத்தீவைக் கடந்த போது, உலக உயிர்களெல்லாம் வருந்தும் வகையில் அக்னியைப் பொழிந்து கொண்டிருந்தாயே! ஏன்? இப்போது ஒன்றும் அக்னி நட்சத்திர காலமும் இல்லையே! ஏதோ கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னிடம் சொல். பிரச்னை தீர வழியிருக்கிறதா? என பார்க்கிறேன், என்றார். இந்த கலகப்பேர்வழியிடம் ஏதாவது ஒன்றைச்சொல்ல, இவர் நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விட்டால் என்ன செய்வது? என எண்ணிய சூரியன் சற்று தயக்கம் காட்டியதைக் குறிப்பால் உணர்ந்த நாரதர், சூரியா! இந்த கலகக்காரனிடம் நம் பிரச்னையை சொல்லவேண்டுமா என யோசிப்பதை உன் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டேன். சரி! எனக்கெதற்கு வம்பு! நீ எப்படி குமுறினால் என்ன என்று, நான் வந்த வழியே ஒழுங்காகப் போயிருக்க வேண்டும். ஐயோ பாவம்! இந்த சூரியனுக்கு ஏதாவது நன்மை செய்வோம் என வந்தேன் பார்! எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! என சலித்துக் கொண்டு, சரி! சூரியா! நீயே மனநிலை சரியில்லாமல் இருக்கிறாய். நான் கிளம்புகிறேன், நாராயணா! என்றவராய், கிளம்புவது போல் பாவனை காட்டினார். சூரியன் தடாலென அவர் காலில் விழுந்துவிட்டான். மகரிஷி! என்னை மன்னிக்க வேண்டும். தங்களிடம் சொல்லக்கூடாது என்பதல்ல! மன உளைச்சலில் இருந்ததால், ஏதோ நினைவில் இருந்தேன், என சமாளித்து விட்டு தன் நிலையைச் சொன்னான். மகரிஷி! அப்சரஸ் போன்ற மனைவி, வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்திகளான எமதர்மன், சனீஸ்வரன் ஆகிய மகன்கள், ஏழு குதிரை பூட்டிய தேரில் ஏறி உலகையே சுற்றி வருகிறேன்.

இத்தனை இருந்தும் என்ன பயன்? என்னை, மந்தேகத்தீவில் வாழும் அசுரர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பலமுறை அவர்களை அடக்க போரிட்டேன். தோல்வியையே தழுவுகிறேன். அவர்களுக்கு அடிமை ஆகி விடுவேனோ என அஞ்சுகிறேன், என்றான். நாரதர் சிரித்தார். ஆதித்யா! உலகில் நிம்மதியாய் இருப்பவர்கள் ஆசையற்றவர்கள் தான் என்ற உண்மையை உன் மூலமாக பிருகு முனிவர் கற்றிருக்கிறார். இங்கு வந்த நாகராஜன் பத்மனும் அதையே இங்கிருந்து கற்று வந்தான். அப்படிப்பட்ட உனக்கேன் பதவிப்பற்று? இந்த அசுரர்களை அழிக்க ஒரு வழி சொல்கிறேன். இவர்களின் உயிர் போக ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. லகில் உன்னால் தான் மழை பொழிகிறது. அந்த மழையில் எழும் ஓசை தான் இவர்களை அழிக்க முடியும்,என்றார். சூரியன் விழித்தான். மகரிஷி! மழையோடு எழும் ஒலி என்றால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே! அதை உருவாக்கும் ஆற்றல் யாரிடம் உள்ளது? என்றான். அது கடினமான விஷயம். உருவமில்லாத சிவலிங்கத்தால் தான் அதை உருவாக்க முடியும். அந்த லிங்கம் எங்கிருக்கிறது என எனக்குத் தெரியும். ஆனால், நான் சொல்லி நீ அவ்விடத்தை அடைந்து பூஜை செய்வதால் பயன் ஏற்படாது. நீயே அவ்விடத்தை தேடிப் பிடிக்க வேண்டும். நீ தான் ஒளிக்கற்றைகளுடன் உலா வருபவன் ஆயிற்றே! சர்வ ஞானம் பெற்ற உனக்கு அவர் விரைவில் காட்சியளிப்பார். மற்றவர் கண்களுக்கு தெரியாமல், உன் கண்களுக்கு மட்டும் எங்கு லிங்கம் தெரிகிறதோ, அவ்விடத்தில் சிவபூஜை செய். அவர் உனக்கு அருள்பாலிப்பார், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். சூரியன் இன்னும் உக்கிரமானான். ஒளிக்கற்றைகளை எங்கெல்லாமோ பாய்ச்சி சிவலிங்கத்தை தேடியலைந்தான். அசுரர்கள் வசித்த மந்தேகத்தீவில் கடலே வற்றிப்போய் விடும் அளவுக்கு சூரியனின் கதிர்கள் விழுந்தன. அசுரர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் சூரியனை எச்சரிக்க புறப்பட்டனர். சூரியலோகத்தில் அவன் இல்லை. அவனைத் தேடி அவர்களும் புறப்பட்டனர். அப்போதெல்லாம் சூரியன் தன்னை மறைத்துக் கொண்டான்.

அவன் காவிரிக்கரை பக்கமாக தன் பார்வையைச் செலுத்தினான். ஓரிடத்தில் தெய்வீக ஒளி வீசியது. சிவபெருமான் லிங்க வடிவில் மணல் பரப்பில் தெரிந்தார். சூரியன் சந்தோஷப்பட்டான். உடனடியாக தன் ஒளிக்கற்றைகளால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான். இப்போது சிவபெருமான் அவன் முன்னால் வந்தார். சூரியனே! உன் அபிஷேகத்தால் நான் மகிழ்ந்தேன். உன்னைப் பிடித்த துன்பம் இன்றுடன் விலகும். உலகத்திலுள்ள தண்ணீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, பல மடங்காக நீ திருப்பித் தருகிறாய். அவ்வாறு மழை பெய்யும் போது, இனி ஒளியும், அதைத் தொடர்ந்து ஒலியும் எழும். வருணபகவான் இவ்விஷயத்தில் உனக்கு உதவுவான். அந்த ஒலியை உலகத்தார் இடி என்பர். அந்த இடி உலகிலுள்ள கொடியவர்களை அழிக்கும். யார் ஒருவர் இப்பிறவியிலும், முற்பிறவியிலும் கொடிய பாவம் செய்தனரோ, அவர்கள் இடி தாக்கி அழிவார்கள், என்றார்.இதன்பிறகு சூரியன் பெருமழையைப் பெய்வித்தான். அப்போது பயங்கர ஒலி ஏற்பட்டது. மந்தேகத்தீவில் தொடர்ந்து இடி இறங்கியது. மரங்கள் கருகின. அசுரர்களின் மாளிகை கொழுந்து விட்டு எரிந்தது. வெளியே வந்த அசுரர்களின் தலையில் விழுந்த இடி அவர்களை மண்ணோடு மண்ணாக்கியது. சூரியபகவான் அகம் மகிழ்ந்தான். மந்தேகத்தீவில் ஒரு அசுரன் கூட உயிர் பிழைக்கவில்லை. நாரதர் காட்டிய நல்வழிக்காக அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தான் சூரியன். அந்த நன்றிக்குரிய நாரதர் இப்போது மன்னனாய் இருந்து திருமாலிடம் செல்வங்களை இழந்து பிச்சைக்காரன் போல் வாழ்ந்து கொண்டிருந்த மகாபலியின் முன்னால் நின்றார்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:15:49 AM
நாரதர் பகுதி-25

மகாபலி மன்னன் இப்போது செல்வந்தன் அல்ல. அவன் இருப்பதையெல்லாம் இழந்து விட்டவன். திருமாலிடம் அனைத்தையும் தானம் செய்து பெரும்பேறு பெற்று, அவரது திருவடியால் அழுத்தப்பட்டு, பாதாள லோகத்துக்கு போய்விட்டவன். நாரதரைக் கண்டதும் சுயரூபமடைந்து அவரை வரவேற்றான். மகாபலி! உன் வரவேற்பு பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த வரவேற்பு ஏதோ செயற்கையாகத் தோன்றுகிறது. உன் முகத்தில் கவலை ரேகை தெரிகிறது. உன் குல குரு சுக்ராச்சாரியாரின் சொல்லைக் கேட்காமல் திருமாலிடம் எல்லாவற்றையும் இழந்ததை எண்ணி கவலையில் இருக்கிறாயோ? என்றார் நாரதர். சிவசிவ என்ற மகாபலி, மாமுனிவரே! இந்தச் சொல் உமது வாயில் இருந்து வந்ததால், பிழைத்தீர். வேறு யாரேனும் சொல்லியிருந்தால் அவர் தலையை வாங்கியிருப்பேன். மகாபலி என்றும் தர்மத்தின் தலைவன் தான். கொடுத்ததை நினைத்து வருந்துவது, நாடு போனதற்காக வருத்தப்படுபவன் அல்ல. ஆனால், என் வருத்தமெல்லாம், நான் இறைவனிடம் அத்தனையையும் தாரைவார்த்தேன் என்பதை எண்ணிப்பாராமல், என் இன்றயை ஏழ்மையை சிலர் ஏளனம் செய்கிறார்கள். குறிப்பாக தேவர் தலைவர் இந்திரன் சில நாள் முன்பு இங்கு வந்தான். அவன் என் நிலையைப் பார்த்து வருந்துபவன் போல் கேலி செய்தான். அதை நினைத்து தான் வருந்துகிறேன், என்றான். நாரதர் அவனிடம், மகாபலி! இந்திரனைப் போல் உன்னைக் கேலி செய்வது என் நோக்கமல்ல. பரந்தாமனிடம் பொன்னையும் கொடுத்து, உன்னையும் கொடுத்த உத்தமன் நீ. என்னை இந்திரனோடு ஒப்பிடாதே. உன் கோபத்தை கிளறும் வகையில் பேசவேண்டிய அவசியமும் எனக்கில்லை. ஏனெனில், நான் ஒரு முனிவன். ஆசைகளைத் துறந்தவன். சரி...போகட்டும். இந்திரன் அப்படி என்ன தான் சொன்னான்? என்றார். மாமுனிவரே! அந்த இந்திரன் சிலநாள் முன்பு பாதாளலோகத்திற்கு வந்தான்.

நான் அப்போது எலி வடிவில் சுற்றிக்கொண்டிருந்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்ட அவன் மகாபலி! நீ என்னையே வென்றவன். இந்திரலோகத்தையும் ஆண்டவன். உன்னைக் கண்டு பயந்து, நான் வேணுவனத்தில் (மூங்கில்காடு) ஒளிந்திருந்தேன். சிவனின் அருளால் தப்பினேன். அந்தளவுக்கு பராக்கிரமசாலியான நீ, இப்போது இப்படி கூனிக்குறுகி எலியாக மாறியிருப்பதைப் பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. உனக்கா இந்த நிலை வர வேண்டும் என இரக்கப்படுவது போல் ஏளனம் செய்தான். அப்போது என் உடலில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவள் தேவதை போல் ஜொலித்தாள். அவள் என்னிடம், மகாபலி! நான் தான் திருமகள். நீ தானத்தில் சிறந்தவன் என்றாலும், மமதை காரணமாக உன் பொருளை இழந்தாய். இருப்பினும், நீ பரந்தாமனுக்கே தானம் செய்தவன் என்பதால், நீ பாதாளலோகத்துக்கு வந்தபிறகும் கூட உன்னிடம் இதுநாள் வரை இருந்தேன். இப்போது, இந்திரன் இப்படி உன்னை ஏளனமாகப் பேசிவிட்டான் என்பதை எண்ணி மனம் கலங்கிவிட்டாய். மமதையை விட கோழைத்தனம் கேடானது. மமதை கொண்டவனாய் இருந்தாலும், தர்மம் தவறாதவனாயும், வாக்கு தவறாதவனாயும், மக்களுக்கு அரிய சேவை செய்ததாலும் உன்னிடம் நான் இருந்தேன். அரிய செயல்கள் செய்பவன் தன்னைத் தூற்றுபவர்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. உயிர் போனாலும், தன் செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நீயோ சிறு ஏளனச்சொல்லுக்காக மனம் கலங்கி விட்டாய். கோழையாய் மாறி விட்டாய். கோழைகளிடம் நான் தங்குவதில்லை. இதோ...இந்த இந்திரனுக்கு இப்போது நல்ல நேரம். நான் அவனுடன் இனி இருப்பேன் எனச்சொல்லி அவனுள் புகுந்தாள். இந்திரன் சந்தோஷமாகத் திரும்பினான். எனக்கு செல்வம் போனது பற்றி வருத்தமில்லை. இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வம் நாளை இன்னொருவருடையதாகிறது. ஆனால், என்னைக் கோழை என்று வர்ணித்தாளே திருமகள்...அந்தச் சொற்களைத் தான் தாங்கமுடியவில்லை, எனச் சொல்லி கண்ணீர் வடித்தான்.

நாரதர் அவனைத் தேற்றினார். மகாபலி! யாருமே தூஷணைக்குரியவர்கள் அல்ல. உன் கீழ் வாழ்ந்தோமே என்ற தாழ்வு மனப்பான்மையால் இந்திரன் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறான். கொட்டியவர்கள் அதை அள்ளியே தீர வேண்டும். கவலைப்படாதே. லட்சுமி உன்னை மீண்டும் வந்தடைவாள், என்று வாழ்த்தினார். நாரதரை தலை தாழ்த்தி வணங்கினான் மகாபலி.நாரதர் சென்ற பிறகு மீண்டும் இந்திரன் மகாபலியிடம் வந்தான். மகாபலி! அடடா! திருமகள் என்னை வந்தடைந்த பிறகு உன் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது போல் தெரிகிறதே! மூவுலகத்தையும் இழந்தாய். இப்போது அருமை பெருமையெல்லாம் இழந்து எலியாய் அலைகிறாய். பாவம், பரிதாபம், என் உதவி ஏதாவது உனக்கு வேண்டுமா? என்றான். மகாபலிக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது. நிஜமாகவே உபசரிப்பவர்களுக்கும், நிழல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாதவன் நான் அல்ல இந்திரா! அடேய்! செருக்குற்றவனே! தானம் செய்வதில் உயர்ந்தவன் என்று சாதாரணமாக செருக்கடைந்ததற்காகவே நான் பாதாள லோகத்தில் தள்ளப்பட்டேன். நீயோ, லட்சுமி தாயாரின் தற்காலிக பிரவேசத்திற்காக செருக்கடைந்து குதிக்கிறாய்.யாருக்கும் எப்போதும் நல்ல நேரமாக இருக்கும் என நினைக்காதே. கெட்ட நேரம் திடீரென தாக்கும்.அப்போது, என்னையும் விட கேவலமான நிலையை அடைவாய், என எச்சரித்தான். மகாபலியை மனம் நோக வைக்கலாம் என எண்ணி வந்த இந்திரன், நினைத்தது நடக்காமல் போனதுடன், வறுமையான நிலையிலும் மகாபலியின் ஸ்திர புத்தியை எண்ணி வியந்தான். அதே நேரம் வெட்கி தலைகுனிந்து சென்றான்.நாரதர் அவன் முன்னால் தோன்றினார்.என்ன இந்திரா! எங்கிருந்து வருகிறாய்? உன் முகத்தைப் பார்த்தால் மாபெரும் அசுர மன்னனான மகாபலியைத் தோற்கடித்தவன் போல் தெரியவில்லையே! என்ன விசேஷம்? என்றார். தான் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்து தான் நாரதர் கேலி செய்கிறார் என்பதை இந்திரன் புரிந்து கொண்டான்.
Title: Re: நாரதர்
Post by: Anu on March 12, 2012, 08:17:13 AM
நாரதர் பகுதி-26

நாரதமுனிவரே! அசுரமன்னனான மகாபலி, எனக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கினான். நாராயணனின் திருக்காட்சியைப் பெற்றான். அவரால் ஆட்கொள்ளப்பட்டான். ஒரு அசுரனுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனை கேலி செய்யச் சென்றேன். அவனது நல்ல மனதை நான் புரிந்து கொள்ளாமல், அவமானப்பட்டு திரும்புகிறேன். நான் ஏற்கனவே விமர்சனங்களுக்கு ஆளானவன். இன்னும், எனக்கு என்ன கதி வரப்போகிறதோ?என்றான் இந்திரன்.அவனை நாரதர் தேற்றினார். இந்திரா! பிறக்கும் குலம் முக்கியமல்ல. எக்குலத்தில் பிறந்தாலும், ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே முக்கியம். அசுரனான மகாபலி, நன்மையை மட்டும் நினைத்தான். நாராயணனுக்காக தன்னையே கொடுத்தான். குலத்தால் தாழ்ந்திருந்தாலும், நல்லவர்களை அணைப்பதே தேவர்களின் கடமை. இதற்காக வருந்தாதே. ஆனாலும், அவனது வயிற்றெரிச்சல் உன்னை சும்மாவிடாது. என்ன செய்யப் போகிறாயோ? என்று இந்திரனின் வயிற்றைக் கலக்கினார் நாரதர். இந்திரன் நிஜமாகவே கலங்கிப் போனான். நாரதரே! நீங்கள்தான் இந்த சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். நாரதர் அவனிடம், இந்திரனே! இப்போது உன்னிடம் திருமகள் குடிகொண்டிருக்கிறாள். மகாபலியை இகழ்ந்து பேசியதன் மூலம் அவள் உன்னை விட்டு அகன்றுவிடுவாள். பிறரை குறைசொல்பவர்களிடம் திருமகள் தங்குவதில்லை. குறிப்பாக ஏழைகளை யார் ஒருவர் பழிக்கிறாரோ அவரிடம் திருமகள் அறவே தங்கமாட்டாள். இதிலிருந்து நீ விடுதலை பெற வேண்டுமானால் சில காலம் மண்ணுலகில் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அங்கிருந்தபடியே நீ சிவபூஜை செய். கங்கையில் சென்று நீராடு. உன் பாவம் தீரும் என்றார். இந்திரனும் அவ்வாறே செய்து திருமகளை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டான். ஒரு வழியாக மகாபலியின் சாபத்திலிருந்து நாரதரின் உதவியால் தப்பிப் பிழைத்தான்.

இந்திரனைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் நாரதர் பிரம்மலோகம் சென்றார். அவர் மனதில் நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தன் தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினார். தந்தையே! சிவபெருமானுக்கு ரிஷப வாகனம் எப்படி அமைந்தது? அவர் ஏன் உடலெங்கும் சாம்பலைப் பூசுகிறார்? அவருடைய உருவத்தின் தத்துவம்தான் என்ன? என்று கேட்டார். பிரம்மாவுக்கு பதில் தெரியும் என்றாலும்கூட, ஏற்கனவே ஒருமுறை முருகனிடம் சிக்கிக்கொண்டது நினைவு வந்தது. ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாததால் சிறைப்பட்ட தன் பழைய கதையை நினைத்துப் பார்த்தார். மகனே என்றாலும்கூட கலகக்காரன் என்பதால் நாரதருக்கு விடைசொல்ல தயங்கினார். நாரதா! நீ என் பிள்ளையாய் இருந்தாலும் கலகக்காரன் என்பதை ஊரே அறியும். இதுபோன்ற சந்தேகங்களுக்கு நான் ஏதாவது விடை சொல்ல, அதை நீ சிவலோகத்தில் போய் சொல்ல, பிரச்னைகள் ஏற்படும். எனவே நீ திருத்தணிக்கு போ. அங்கே முருகப் பெருமானிடம் உன் சந்தேகத்தைக் கேள். அவர் உனக்கு பதில் சொல்வார், என சொல்லி லாவகமாக தப்பிவிட்டார். தன் தந்தையின் முன்னெச்சரிக்கையைக் கண்டு மனதிற்குள் சிரித்துக்கொண்ட நாரதர், உங்களையா நான் மாட்டிவிடுவேன்? இருப்பினும், தாங்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டதால் நான் முருகனிடமே போய் தெரிந்துகொள்கிறேன், என சொல்லிவிட்டு, முருகப்பெருமான் குடியிருக்கும் ஆனந்த லோகமான திருத்தணிகை மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே வள்ளி தெய்வானை யுடன் முருகப் பெருமான் களித்திருந்தார். நாரதரின் வருகையை அறிந்ததும் அவரை வரவேற்றார். அவர் முருகனை வணங்கி, குமரப் பெருமானே! ஒரு சந்தேகத்தைத் தீர்த்துப் போவதற்காக வந்தேன். இதுகூட தெரியவில்லையே என, என் தந்தையைப் பால் என்னையும் சிறையில் அடைத்துவிடாதீர்கள். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் கேள்வியே கேட்பேன், என சொல்லிவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டார். முருகன் சிரித்தபடியே, நாரதரே! தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இது தெரியாத விஷயமல்ல.

ஒரு பழத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் என்னையே உலகம் சுற்ற வைத்தவர். மாபெரும் அறிவாளி. அன்னையும், பிதாவுமே முதல் தெய்வம் என்பதை எனக்கு உணர்த்தியவர். அப்படிப்பட்ட தங்களுக்கு இது தெரியாத விஷயமல்ல. இருப்பினும், தெரியாத ஒன்றை பிறர் பணிவுடன் கேட்டால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை ஞானதானம் என்பர். தங்கள் தந்தை பிரம்மன் எல்லாம் தெரிந்தவர் போல் என்னிடம் பேசினார். அதன் காரணமாகவே அவரை சிறையில் அடைத்தேன். தாங்களோ மிகுந்த பணிவோடு இக்கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். பதிலைக் கேளுங்கள், என்றவர் தொடர்ந்தார். ரிஷபமாகிய காளை தர்மத்தின் சின்னமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் இந்த ரிஷபம் சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. ரிஷபத்தின் நான்கு கால்களும் மனம், புத்தி, எண்ணம், அகங்காரம் என்ற நான்கு வடிவங்களைக் குறிக்கிறது. மற்ற மூன்றாலும், அகங்காரம் என்ற காலை அடக்கி தவம் செய்தது. மேலும், ரிஷபம் கடுமையான உழைப்பின் சின்னம். எவ்வளவு உழைத்தாலும் அகங்காரம் கொள்ளாதவன் யாரோ, எவ்வளவு சிறப்புடையவனாய் இருந்தாலும் ஆணவம் இல்லாதவன் யாரோ அவர் சிவனுக்கு பிரியமானவர். இதனால், சிவபெருமான் அந்தக்காளையை தனது வாகனமாகவே கொண்டார், என்றார். முருகா! நான் இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. ஆனால், ஞானகுருவான உன்னிடம் ஒன்று கேட்கிறேன். செய்வாயா? என்றார் நாரதர். எல்லாம் வல்ல முருகன் அவர் கேட்கப்போவதை அறிந்தார். நாரதரே! பூலோகத்தில் எதிர்கால தலைமுறையினர் தங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில், திருத்தணியான இங்கு, ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிச் செல்லுங்கள், உங்கள் பெயரால் அந்த லிங்கம் நாரதேஸ்வரர் என அழைக்கப்படும். இத் திருக் கோயிலில் உள்ள தீர்த்தம் தங்கள் பெயரால் நாரதர் தீர்த்தம் என வழங்கப்படும், என்றார். நிறைந்த அருள்பெற்ற மகிழ்ச்சியில் நாரதர் வைகுண்டம் சென்றார். நாராயணப் பெருமாளின் திருப் பாதத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

முற்றும்.