இயங்கு எழுத்துரு
90 இறுதியளவில், பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை பிட்ஸ்ரீம் (bitstream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத் தளங்களைப் பார்வையிட முடிந்தது. இந்த இயங்கு எழுத்துருவைப் பாவித்துப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப் போக்கில் இது நடைமுறையிழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன.
தமிழ்.நெட்
இணையப் பாவனையும் தமிழில் மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லா விடயங்களுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது.
தகுதர நியமம்
உலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுனர்கள், தமிழ் வல்லுனர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியமத் தரத்தைச் (standard) சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரயாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துக்களுக்குக் கணினித் தொழில் நுட்பத்தில் நிரந்தர இடத்தை நிர்ணயப் படுத்தினார்கள். ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுக்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை. இந்தத் தகுதரம் உலக தமிழ் அரச அங்கீகாரத்திற்காகக் காத்திருந்தது.
ஒருங்குறி நியமம்
தமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் உருவாக்கத்திலும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி (unicode) என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தையும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து சீர்தரங்களை (நியமங்களை) அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி சீர்தரம் (நியமம்) செய்யப்பட்டு உருப் பெற்றது. ஆனால் இது முன்னர் தமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் சீர்தரத்தை (நியமத்தை) ஒத்திருக்கவில்லை. எனினும், ஒருங்குறி அமைப்பானது உலகில் உள்ள மிகப்பல மொழிகளுக்கும் இடம் வகுத்து இயங்கியமையாலும் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் பலவும் ஆர்வமுடன் எடுத்தாளுவதாலும் மிகுந்த செல்வாக்கு பெற்று முன்னணியில் இருக்கின்றது.
அரசின் ஏற்பு
ஒருங்குறியும், தகுதரமும் சீர்தரங்களாக உருவெடுத்த வேளையில், தமிழ்நாடு அரசு கணினியில் தமிழின் சீர்தரம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரசு ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு சீர்தர் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. தகுதரம் இங்கே சமர்ப்பிக்கப்பட்டும் ஏற்கப் படவில்லை. தமிழ்நெட்99 இன் முடிவை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் ஏற்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி சீர்தரமே எல்லோராலும் ஏற்கப் பட்டு இயல்பாக பாவனைக்கும் வந்து விட்டது. அத்துடன் தமிழ்நெட்99 இன் தொடர்ச்சியாக தமிழ்நெட் என்னும் தலைப்பில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. உத்தமம் என்ற ஒரு அமைப்பும் இப்பணிகளுக்கு உதவுகின்றது.
கீமான்
முரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, கீமான் (keyman) என்னும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது (விநியோகிக்கப்பட்டது). இந்தக் கீமான் மூலம் தமிழில் தட்டி எழுதுவது இலகுவாகியது. இதைப் பாவித்து ஈ-கலப்பை (e-kalappai)என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், ஒருவர் தட்டி வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் உண்டு.
நிலைபெற்று வரும் ஒருங்குறி
ஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாள்தோறும் வளர்ந்து வருகின்றது. ஒருங்குறிச் சீர்தரமே இன்று (2007 வரை) தமிழுக்கு அனைத்துலக மட்டத்தில் ஏற்புப் பெற்று நிலைத்து வருகின்றது.