நண்பர்களே, நமக்கு விக்கல் ஏற்படக் காரணம் என்னவென்று தெரியுமா? விக்கல்களுக்கான காரணங்கள் உடலமைப்பினைப் பொறுத்து மாறுபடும். முந்திய காலங்களில் அதிகப்படியான கோபம் கொள்பவர்களுக்கு விக்கல் வரும் எனக் கிரேக்கர்களால் நம்பப்பட்டது. ஆனால், தற்போதைய மருத்துவத்தின்படி மார்பு மற்றும் அடிவயிற்றுக்கு இடைப்பட்ட சதைப்பகுதியில் செயல்படும் காற்றால் விக்கல் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. குரல்வளையில் திடீரென ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் விக்கலாக வெளிவருகிறது. அதனால் தான் நம் மூச்சுப்பாதைகளில் ஒன்றான வாயின் வழியே வரும் காற்றினை இடையூறு செய்து “ஹிக், ஹிக்” என்ற வித்தியாசமான சத்தத்துடன் வருகிறது.
சரி, இனி விக்கலை எது குணப்படுத்தும் என்று பார்ப்போமா? விக்கல் குறைவது கூட ஒவ்வொருவரின் உடலமைப்பினைப் பொறுத்து மாறுபடுகிறது. விக்கலை வெற்றிகொள்ளும் அளவுக்கான மற்றொரு அதிர்ச்சியூட்டும் செயல்கள் ஒரு வழி ஆகும். இவ்வாறு அதிர்ச்சியூட்டும் பொழுது வேகஸ் நரம்பு என அழைக்கப்படும் ஒரு நரம்பு ஊக்குவிக்கப் படுகிறது. இதன் மூலம் வயிற்றுக்கும் மார்புக்கும் இடையேயுள்ள நரம்புகளின் கவனத்தினைத் திசைதிருப்பி விக்கலை நிறுத்தலாம்.
மற்றொரு முறை விக்கலின் போது சுவாசிப்பதை நிறுத்துவது ஆகும். இதனால் இரத்தத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும். தொடர்ந்து இதைச் சரிசெய்ய நமது உடல் திசை திருப்பப்படுவதால் விக்கல் நின்றுவிடும். சில வேளைகளில் விக்கலைக் கட்டுப்படுத்தத் தண்ணீரும் பயன்படுத்தப்படும். இதைத் தவிர்த்து இன்னுமொரு வழி, ஒரு தேக்கரண்டி சீனி அல்லது சர்க்கரை சாப்பிடுவது ஆகும். இவ்வாறு சாப்பிடும் போது, மேற்குறித்த வேகஸ் நரம்பு தூண்டப்பட்டு நமது உடல் விக்கலை மறந்துவிடுகிறது.
எனக்கு விக்கல் வரும் போது பொதுவாக நான் எப்போதும் எனது சுவாசத்தை நிறுத்திவிட்டு விக்கலை குணப்படுத்திவிடுவேன்.