Author Topic: விநாயகர் புராணம்  (Read 4350 times)

Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #15 on: March 20, 2012, 01:57:42 PM »
விநாயகர் புராணம் பகுதி-16

அக்னிக்கும் வாயுதேவனுக்கு இருந்த அதே மனநிலையே இருந்தது. இருப்பினும், அவனும் தனது கடமையைச் செவ்வனே செய்தான். எங்கும் நெருப்பு பற்றி வெப்பம் தாளாமல் அலறினர். உலகங்கள் அனைத்தும் உருகிப்போயின. ஆனால், மகோற்கடன் அக்னியை நோக்கிப் புன்னகை செய்ய அது குளிர்ந்து போனது. கோபத்தை அக்னிக்கு ஒப்பிடுவார்கள். கோபப்படுபவர்களிடம் பதிலுக்கு கோபிக்காமல், பணிவுடன் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டால், அவர்களால் மீண்டும் கோபிக்க இயலாமல் அடங்கி விடுவார்கள். அப்படித்தான் அக்னி அயர்ந்து விட்டான். இப்போது, மகோற்கடனாகிய விநாயகர் இந்திரன் அருகே நெருங்கினார். விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவருக்கு பத்தாயிரம் தலைகளும், லட்சக்கணக்கான உடலுறுப்புகளும் உருவாயின. அந்த பேருடலுக்குள் உலகமே அடங்கி நின்றதையும், தனது தேவலோகமும் அதில் ஒன்றாக இருப்பதையும் கண்ட இந்திரன் நடுங்கினான். மயக்கநிலைக்குச் சென்று விட்டான். அவன் விஸ்வரூப விநாயகரின் பாதங்களில் விழுந்தான். எம்பெருமானே! மன்னிக்க வேண்டும். நான் சின்னஞ்சிறுவன். உமக்குள் உலக உயிர்கள் அடைக்கலம் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன். ஆணவத்தால் அறிவிழந்து பேசிய என் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும், என்று சரணடைந்ததும், விநாயகரும் மனம் குளிர்ந்தார். அவருக்கு வஜ்ராயுதம், அங்குசம், கற்பகத்தரு உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக அளித்த இந்திரன், அவரது விஸ்வரூபத்தை சுருக்கி, சாந்தியடையும்படி வேண்டினான். விஸ்வரூப விநாயகரும் மீண்டும் சிறுவனாக மாறினார். இதன்பிறகு, தேவாந்தக, நராந்தகரால் தேவர் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னல் பற்றி மகோற்கடனிடம் இந்திரன் எடுத்துரைத்தான். மகோற்கடன் அவனை ஆசிர்வதித்து, சிவபெருமான் கருணை மிக்கவர். வரம் கேட்பவர் யாரென்று பார்ப்பதில்லை. தன்னை வணங்குவோர் அனைவருக்கும் அவர் நன்மையே செய்கிறார். அதிலும் தேவாந்தக, நராந்தகர் சூரியனை கண் மூடாமல் பார்த்து தவம் செய்து வரம் பெற்றவர்கள். அவர்களுக்கு தன் சக்தியைத் தவிர பிறரால், அழியாவரத்தை அவர் அருளியிருக்கிறார். அவ்வரத்தைப் பயன்படுத்தி பெற்ற தீர்க்காயுளை அவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தியிருந்தால், அவர்கள் மேலும் ஆயுள் பெற்றிருப்பார்கள். ஆண்டவனிடமே பெற்ற அதிகாரமாயினும், அதைத் தவறாகப் பயன்படுத்துபவன் அழிந்து போவான். இந்திரா! நீ கவலைப்படாதே.

நான் விரைவில் காசி செல்லப் போகிறேன். அப்போது, தேவாந்தக, நராந்தகர் அழிவு நிகழும், என்றார். அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே, சொல்லி வைத்தாற்போல் காசிமன்னன் அங்கு வந்து சேர்ந்தான். அவர் காஷ்யபரை வணங்கி ஆசிபெற்று, மாமுனிவரே! எனது மகனுக்கு திருமணம் நடத்த நிச்சயித்துள்ளேன். தாங்களே தலைமைப் புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டான். காசிராஜா! நான் இப்போது அங்கு வரும் நிலையில் இல்லை. சாதுர்மாஸ்ய விரதம் துவங்கி விட்டது. இந்த நேரத்தில் முனிவர்கள் தீர்த்த யாத்திரை செல்வர். நானும் கிளம்பிவிட்டேன். என் மகன் மகோற்கடன் வேதமனைத்தும் உணர்ந்த ஞானி. அவனை உன்னோடு அனுப்புகிறேன். அவன் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பான், என்றார். வயதில் சிறியவன் என்றாலும், காஷ்யபரின் பிள்ளையல்லவா! தந்தையைப் போலவே மகனும் அறிவில் சிறந்தவனாக இருப்பான் என்பதை நம்பிய காசிராஜன், அவரைத் தனது தேரில் ஏற்றிக்கொண்டு, காசி நோக்கி விரைந்தான். செல்லும் வழியில், ஓரிடத்தில் அசுரன் ஒருவன், சூரியனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். உலகத்திலேயே சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றைப் பெற வேண்டும் என்பதே அவனது நோக்கம். அவன் தேவாந்தக, நராந்தகருக்கு சித்தப்பா முறை வேண்டும். பெயர் தூமாட்சன். தேரில் சென்ற மகோற்கடன், அவனைப் பார்த்தார். ஆயுதத்தைப் பெற்று, உலகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்க எண்ணிய அவனது கெட்ட நோக்கத்தைப் புரிந்துகொண்டார் மகோற்கடன். அந்நேரத்தில் அவனது தவம் நிறைவேறி, சூரிய பகவான் வானில் இருந்து அவன் கேட்ட ஆயுதத்தை கீழே போட்டார். அது அவனது கைகளில் அடைக்கலமாக பாய்ந்து வந்தது. அப்போது, தேரில் இருந்து பாய்ந்து வானில் பறந்தார் மகோற்கடன். ஆயுதத்தை வழியிலேயே பிடித்து மடக்கி, அது அந்த அசுரனின் கைகளுக்கு பதிலாக மார்பில் பாயும் வகையில் அவனை நோக்கி எறிந்தார். அவனை அந்த அம்பு தாக்கி அழித்தது. காசிராஜன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் தேவாந்தக, நராந்தகருக்கு தெரிந்தால் தன் தலை போய்விடும் என பயந்தான். ஏனெனில், அவன் அவர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன், காசிராஜன் நடுங்கிய வேளையில் மகோற்கடன் அவனிடம் ஆறுதலாக, காசிராஜா கலங்காதே. காசியை நோக்கி தேரைச் செலுத்து, நான் பார்த்துக் கொள்கிறேன், என மகோற்கடன் சொல்லிவிட்டார்.

மகோற்கடன் சிறுவனாயிற்றே! அவன் விபரமறியாமல் பேசுகிறான் என்று எண்ணிய காசிராஜன், மகோற்கடரே! நீர் உடனே ஊருக்குப் போய்விடும். நான் தேவாந்தக, நராந்தகரிடம் மன்னிப்பு பெற்று உயிர் தப்பிக்கொள்கிறேன், என்றான்.  மகோற்கடன் ஆவேசமானார். காசிராஜா! என்ன இது! உன்னை நம்பியே என்னை என் தந்தை அனுப்பினார். இப்போது என்னை தனிமையில் திரும்பச் சொல்கிறாய். ஒரு வேளை அந்த தேவாந்தக, நராந்தகர் என்னை செல்லும் வழியில் தாக்கினால் என்ன செய்வாய்? என் தந்தையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மறவாதே, என்று சத்தமாகச் சொன்னார். காசிராஜனுக்கு தர்மசங்கடமாகி விட்டது. ஒருபுறம் தேவாந்தக, நராந்தகர்... மறுபுறம் காஷ்யபர் ! என்ன செய்வது என்று திண்டாடிய காசிராஜனைத் தேற்றிய மகோற்கடன், காசி நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார். தேர் மீண்டும் கிளம்பியது. இதற்குள் தேவாந்தக, நராந்தகருக்கு தங்கள் சித்தப்பா, ஒரு சிறுவனால் கொல்லப்பட்டார் என்பதை அறிந்து ஆச்சரியமும், கோபமும் அடைந்து அவனை பிடிக்கவும், காசிராஜன் தங்களுக்கு துரோகம் செய்து விட்டதால் அவனைக் கொன்று விடவும் வீரர்களுக்கு உத்தரவிட்டனர். முதலில் வந்த சில அசுரர்களை மகோற்கடன் வாயால் ஊதியே சுவர்களில் மோதச்செய்து கொன்று விட்டார். இதனால் மேலும் பலரை சிங்கம், யானை போன்ற பல உருவங்களாக எடுக்கச் செய்து அனுப்பி வைத்தனர். எல்லா அசுரர்களும் கொல்லப்பட்டனர்.இதற்குள் தேர் காசியை அடைந்து விட்டது. மகோற்கடனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மகோற்கடன் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்தார். அப்போது, மகோற்கடனால் கொல்லப்பட்ட அசுரன் தூமாட்சனின் மனைவி சிரம்பை என்பவள், மகோற்கடனின் அறை நோக்கி மாறுவேடத்தில் சென்றாள்
.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #16 on: March 20, 2012, 02:03:26 PM »
விநாயகர் புராணம் பகுதி-17

சிரம்பை காசிக்கு வருவதற்கு முன்பே, மகோற்கடன் அங்கு சென்று சேர்ந்து விட்டார். அவர் காசிராஜனுடன் அரண்மனைக்குள் நுழைய முயன்ற போது, தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட கூடன் என்ற அசுரன், ஒரு பெரும்பாறையாக மாறி அரண்மனை முன் வந்து வாசலை அடைத்து விட்டான். காசிராஜனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. மகோற்கடன் இதற்கெல்லாம் அஞ்சுபவரா என்ன? காசிராஜா! இது பாறையல்ல. தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட அசுரன். பாறையாக மாறி இங்கே நம்மை வழிமறிக்கிறான். நம் பின்னால் ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்களைக் கொண்டு ஆயிரம் தேங்காய்களை இந்தப் பாறை மீது வீசச்செய், என்றார். உடனடியாக தேங்காய்களைக் கொண்டு வரச்செய்தான் காசிராஜன். எல்லா வீரரும் ஆளுக்கொன்றாக தேங்காய்களை பாறையில் வீசியெறிந்தனர். பாறை தவிடு பொடியாகி விட்டது. இதில் இருந்து தான் விநாயகருக்கு விடலை எனப்படும் சிதறுகாய் போடும் வழக்கம் உருவானது. சிதறுகாயின் நோக்கம், நாம் எடுத்துக்கொண்ட செயலைத் தங்கு தடையின்றி முடிக்கத்தான். குறிப்பாக, மாணவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் தேர்வெழுதவே, சிதறுகாய் அடிக்கிறார்கள்.பின்னர் அவர்கள் அரண்மனைக்குள் சென்றனர். அரண்மனையில் இருந்த புரோகிதரான தருமதத்தர் என்பவர் மகோற்கடனை வரவேற்றார். மகோற்கடன் எப்படி கணபதியின் அவதாரமோ, அதுபோல் தருமதத்தர் பிரம்மாவின் அவதாரமாவார். அவர், பூமியில் பிறந்திருக்கும் விநாயகரான மகோற்கடரை வணங்கும் நோக்கத்திலும், மற்றொரு முக்கிய நோக்கத்துடனும் முதல் ஆளாக வரவேற்பு கொடுத்தார். மகோற்கடன் சிறுவன் அல்லவா? அரண்மனை தோட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளின் குழந்தைகள், காசிராஜன் மகன் திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்கார குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். காசிராஜனிடம் சொல்லிவிட்டு, அவர்களோடு விளையாடும் ஆசையில் அங்கே ஓடிவிட்டார்.

தருமதத்தர் அறிவு வாய்ந்த புரோகிதர். வயதில் பெரியவர். வேதஅறிவில், அவரை மிஞ்ச யாருமில்லை என்று சொல்லுமளவு அற்புதமானவர். அப்படிப்பட்ட அறிவுஜீவி, சிறுவனான மகோற்கடரை ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்றார் என காசிராஜன் ஆச்சரியப்பட்டான். விஷயம் இதுதான். தருமதத்தருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஒருத்தி சித்தி, மற்றொருத்தி புத்தி. இந்தப் பெண்களை மகோற்கடனுக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்பது அவரது விருப்பம். இந்த விருப்பத்தை தருமத்தர் காசிராஜனிடம் தெரிவித்தார். அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். காசிராஜனின் மகன் திருமணத்துக்கு முன்னதாகவே, இவர்களது திருமணத்தை நடத்தி விட முடிவெடுத்தனர். உடனே தருமதத்தர், விளையாடிக் கொண்டிருந்த மகோற்கடனை நோக்கிச் சென்றார். மகோற்கடரே! தங்கள் தந்தை காஷ்யபரும், நானும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு சித்தி, புத்தி என்ற புத்திரிகள் உள்ளனர். தாங்கள், மிக உயர்ந்தவர் என்பதை நான் அறிவேன். தங்களுக்கே என் மகள்களை மணம் முடித்து வைக்க ஆசைப்படுகிறேன். தாங்கள் எனது ஆஸ்ரமத்திற்கு எழுந்தருள வேண்டும், என்றார். மகோற்கடரும் இதற்கு சம்மதித்து புறப்பட்டார். இந்த நேரத்தில் தான் சிரம்பை வந்து சேர்ந்தாள். அவளுக்கு தெரியும்! மகோற்கடனை அவ்வளவு எளிதில் தன்னால் ஜெயிக்க முடியாது என்று! எனவே, மணமகனுக்கு அலங்காரம் செய்யும் பணிப்பெண் போல வேஷம் தரித்து, மகோற்கடரே! தங்களுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி நீராட்ட வந்திருக்கிறேன். தாங்கள், நீராட்ட அறைக்கு வர வேண்டும், என்றாள். மகோற்கடன் அவளிடம், அம்மா! நான் சிறுவன் தான்! இதோ, இந்த இடத்திலேயே குளிக்கிறேனே, என்று ஒரு பொதுஇடத்தைக் குறிப்பிட்டார். எப்படியோ வந்த காரியம் நடந்தால் சரிதான் என எண்ணிய சிரம்பையும் அதற்கென்ன! அப்படியே ஆகட்டும், என சம்மதித்து விட்டாள்.

மகோற்கட மாப்பிள்ளை நீராடும் காட்சி காண அனைவரும் கூடியிருந்தனர். சிரம்பை மிகவும் புத்திசாலி போல, அந்த திரவியங்களுடன் விஷத்தை சிறிதளவு சேர்த்திருந்தாள். அதை முகத்தில் பூசும்போது, சிறிதளவு உதட்டில் பட்டுவிட்டால் கூட போதும்! உயிர் பிரிந்து விடும்.... அந்தளவுக்கு கொடிய விஷம் அது. மகோற்கடர் சம்மதித்தார். ஒரு தாயே தன் பிள்ளைக்கு வாசனாதி திரவியங்கள் பூசி நீராட்டுவது வழக்கம். எதிரியாயினும், தாய் ஸ்தானத்தில் இருந்து தனக்கு திரவியம் பூசவந்தவளை தடுக்காத மகோற்கடர், அவள் தன் உதட்டருகே கையைக்கொண்டு வந்ததும், அம்மா! தாங்கள் யாரோ எவரோ? இந்த அரிய வாசனாதி திரவியங்களை என் மீது பூசியுள்ளீர்கள். இதற்குரிய பலனை தாங்கள் அனுபவிப்பீர்கள், என்றார் சமயோசிதமாக. அவ்வளவு தான்! விஷம் கடகடவென சிரம்பையின் உடலில் ஏறியது. அவள் விநாயகராகிய மகோற்கடரின் உடலில் கை வைக்கும் பாக்கியம் பெற்றுவிட்டதால், நேரே சொர்க்கம் போய் விட்டாள். அவள் சொர்க்கம் போனதற்கான காரணமறிந்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், மகோற்கடர் மஞ்சள் நீரில், நீராடி, அங்கவஸ்திரங்கள் அணிந்தார். சிறுமிகளான சித்தி, புத்தியர் அழகு பொங்க அவரருகே அமர்ந்தனர். இருவருக்கும் மங்கலநாண் பூட்டி துணைவியராக ஏற்றார் மகோற்கடர். இதன்பிறகு காசிராஜனின் மகன் திருமண ஏற்பாடுகள் துவங்கின. அப்போது ஒரு அமைச்சர், மன்னரே! தங்கள் மகனின் திருமணத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுபற்றி தாங்கள் சிந்தித்தீர்களா? என்றார். காசிராஜன் கலவரத்துடன் அவரது முகத்தைப் பார்த்தான்.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #17 on: March 20, 2012, 02:04:36 PM »
விநாயகர் புராணம் பகுதி-18

மாமன்னரே! நம் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கும் மகோற்கடர் வேதாந்தக, நராந்தகரின் உறவுக்காரர்களை அழித்து விட்டார். இதனால். இப்போது அவர்கள் நம் மீது கோபமாக இருப்பது <உறுதி. இளவரசருக்கு திருமணம் நடக்கும் வேளையில், அவர்கள் இங்கு வந்து இடையூறு செய்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பது உறுதி. திருமணத்துக்கு வருவோர் ஒருவரைக் கூட அவர்கள் உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள். இந்த விபரீதத்தை மகோற்கடர் தடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அந்த சூரர்களின் வதம் முடிந்த பிறகு, இளவரசருக்கு திருமணம் நடத்துவதே நல்லதென நினைக்கிறேன். இதற்காக, ஏற்கனவே குறிக்கப்பட்ட முகூர்த்த நாளை சற்று தள்ளி வைத்தால், கூட தவறில்லை என்பது எனது அபிப்ராயம். தாங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். தங்கள் கட்டளைப் படியே நடக்கிறோம், என்றார் அந்த புத்திசாலி மந்திரி. காசிராஜனுக்கும் மந்திரி சொல்வது சரியென்றே பட்டது. இருப்பினும், குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற, அந்த மகோற்கடரையே சரணடைவதென முடிவெடுத்து, மகோற்கடர் தங்கியிருந்த அறைக்குச் சென்றான். அப்போது, சித்தி, புத்தியருடன் மகோற்கடர் கூடி களித்திருந்தார். சித்தி, புத்தி தேவியர் தங்கள் கணவரிடம் எங்கள் இதய தெய்வமே! தாங்கள் யானை முகத்துடனேயே எப்போதும் இருக்கிறீர்கள். இது பூலோகம். இங்கே, மனித ஜென்மமே உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எங்கள் கணவர் மனித முகத்துடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். தேவையான காலங்களில் மட்டும் தாங்கள் முகத்தை மாற்றிக் கொள்வது நல்லது. யானைத் திருமுகம் உங்களுக்கு அழகூட்டுகிறது என்றாலும், மனித முகத்திலும் தங்களைக் காண வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கத்தானே செய்யும். தாங்கள் இவ்வுலகில் யாருக்கும் இல்லாத பேரழுகுடன், மனித முகத்துடன் எங்களுக்கு காட்சியருள வேண்டும், என்றனர். மனைவியரின் நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. தங்கள் கணவர் அழகாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக பெண்களின் நியாயமான விருப்பம் தானே! மகோற்கடர் மனித முகத்துக்கு மாறிவிட்டார். ஒளி வெள்ளம் பொங்கிய பேரழகுடன் அவர் மனைவியருடன் உறவாடிக் கொண்டிருந்த போது, காசிராஜன் அவரது அனுமதி பெற்று அறைக்குள் வந்தான். அவனுக்கு அதிர்ச்சி. இங்கிருந்த யானை முகச் சிறுவனை எங்கே! சித்தி, புத்தியர் ஒரு இளைஞனுடன் இருக்கின்றனரே! என்ற அவனது எண்ண ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மகோற்கடர்.

காசிராஜனுக்கு யானை முகத்துடன் காட்சி தந்தார். காசிராஜா! புதுப்பெண்களான இவர்கள் என்னை மனித முகத்துடன் காண ஆசைப்பட்டனர். அதன் படியே நான் இம்முகத்துடன் விளங்குகிறேன். அது போகட்டும்! என்ன காரணமாக என்னைக் காண வந்தாய்? என்றார்.காசிராஜன் எல்லா விபரத்தையும் எடுத்துச் சொன்னான். காசி மாமன்னனே! இதற்கெல்லாம் கலங்காதே. மகோற்கடனை நம்பியவர்கள் சிரமங்கள் தங்களுக்கு இல்லை என உறுதியாக நம்பலாம். திருமணம் குறித்த நேரத்தில் நல்லபடியாக நடக்கும். நடக்கப்போவதை அமைதியாக இருந்து வேடிக்கை பார், என்றார் மகோற்கடர். காசிராஜன் மிகுந்த மகிழ்ச்சியுடன், மகோற்கடரே! இனி எனக்கு கவலையில்லை. தாங்கள் புதுமணமகன். புது மணமக்களை விருந்துக்கு அழைப்பது எங்கள் பண்பாடு. தாங்கள், தங்கள் துணைவியருடன் இதே மனித முகத்துடன் எங்கள் இல்லத்துக்கு எழுந்தருள வேண்டும், என்றான். மகோற்கடனும் ஒப்புக்கொண்டார். மகோற்கடர் தம்பதியரை அரண்மனையின் அந்தப்புரத்துக்கே அழைத்துச் சென்றனர் காசிராஜன் தம்பதியர். அங்கே தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. தலை வாழை இலை விரித்து மணமக்களுக்கு உணவு பரிமாறினாள் பட்டத்தரசி. அப்போது, அவள் வைத்த உணவு வகைகளுக்கு நடுவே, ஒரு உருண்டை வந்து அமர்ந்தது. சிறிது நேரத்தில் கொண்டைக்கடலை, பொரி என எளியவகை உணவுகள் வந்து அமர்ந்தன. காசிராஜனும், அவன் தேவியும், சுவாமி! இதென்ன அதிசயம்! இந்த உணவுகளை நாங்கள் தயாரிக்கவே இல்லையே! இவை உங்கள் இலைக்கு வந்தது எப்படி? என்றனர். எல்லாம் அந்த புருசண்டியின் வேலை தான், என்றார் மகோற்கடர் கண்களை சிமிட்டியவராய்! சித்தி, புத்தியர் கூட இந்த அதிசயம் கண்டு, இது பற்றி அறிய ஆவல் கொண்டனர். புருசண்டியா! அப்படியென்றால்... என இழுத்த சித்தி, புத்தியரிடம்... தேவியரே! புருசண்டி என்றால் ஏதோ பொருள் அல்ல. அவர் ஒரு முனிவர். தண்டகாரண்யக் காட்டில் வசிப்பவர்.

எனது பக்தர். அவர் ஒவ்வொரு சதுர்த்தி திதியிலும், இதோ இருக்கிறதே! மோதகம் என்னும் உருண்டை... இதையும், கரும்பு, பொரி, கடலை ஆகியவற்றையும் படைத்து என்னை நினைத்து வணங்குவார். அவை என்னை வந்து சேர்ந்து விடும். காசிராஜன் பரிமாறிய ஆடம்பர உணவும் எனக்கு பிடிக்கும்! அதேநேரம், ஏழை ஒருவன் பரிமாறும் பக்தியுடன் பரிமாறும் எளிய உணவும் பிடிக்கும், என்றார். சித்தி, புத்தியரின் ஞானதிருஷ்டியில், தாங்கள் தெய்வப்பெண்கள் என்பதும், இங்கிருக்கும் மகோற்கடர் சாட்சாத் விநாயகப் பெருமான் என்பதும் விளங்கியது. அவர்கள் அவரது இலையில் இருந்த மோதகப் பிரசாதத்தை தாங்களும் பகிர்ந்து கொண்டு, காசிராஜன் தம்பதியருக்கும் கொடுத்தனர். ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று மட்டுமல்ல! எல்லா சதுர்த்தி திதிகளிலும் (அமாவாசை மற்றும் பவுர்ணமி கழிந்த நான்காம் நாள்) விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால், நமக்கு செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். விருந்துக்குப் பின் தம்பதியர் விடை பெற்றனர். அன்றிரவில் காசிநகரே அல்லோகோலப்பட்டது. காவலர்கள் ஓடோடி வந்து மன்னரிடம், மகாராஜா! மகாராஜா! யாரோ பயங்கர உருவம் கொண்ட அசுரர்கள் மூவர் நம் நகரையே சின்னா பின்னப்படுத்துகிறார்கள். ஒருவன் வாயைத் திறந்தால் நெருப்பைக் கக்குகிறான். இன்னொருவன் புயலாக மாறி கட்டடங்களைத் தகர்க்கிறான். ஒருவன் வானத்தில் ஒரு உதடும், பூமியில் ஒரு உதடுமாக வைத்து போவோர் வருவோரையெல்லாம் பிடித்து விழுங்குகிறான். அவர்களைக் கண்டாலே குலை நடுங்குகிறது. எங்களால் அவர்களுடன் போராட முடியவில்லை. தாங்களே மக்களைக் காக்க வேண்டும் என்றனர்.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #18 on: March 20, 2012, 02:05:47 PM »
விநாயகர் புராணம் பகுதி-19

காசிராஜனுக்கு நிலைமை புரிந்து விட்டது. இந்நிலையில், தங்களைக் காக்க மகோற்கடரை விட்டால் ஆளில்லை என்பதால், அவர் தங்கியிருந்த அறைக்கு ஓடினான். மகோற்கடரை சித்தி, புத்தியர் மூலம் எழுப்பினான். நடந்து கொண்டிருக்கும் அபாயத்தை விளக்கினான். அப்படியா? என்று சாதாரணமாகச் சொன்ன மகோற்கடர், தன் கமண்டலத்தை எடுத்தார். தீர்த்த நீரை கையில் எடுத்து வீசினார். அந்த நீர்த்துளிகள் பறந்து சென்றது. அங்கே தீயாக மாறி எரிந்து கொண்டிருந்த ஜ்வாலாமுகன் என்ற அசுரன், அந்த நீர்பட்ட மாத்திரத்தில் அணைந்து விழுந்து உயிரை விட்டான். புயலாக மாறி வீசிய விதாரணன் என்பவனும் அந்த புனிதநீரின் வேகத்தைத் தாங்க முடியாமல் ஒடுங்கி சாய்ந்தான். பின்னர் மக்களை விழுங்கிக் கொண்டிருந்த வியாக்ரமுகன்  என்ற அசுரனைக் கொல்ல நேரில் புறப்பட்டார். தன் சக்தியால் கணநேரத்தில் அவன் முன் சென்று, திறந்த வாயை அப்படியே கிழித்து, இரு கூறாக்கி அவனைக் கொன்றார். காசிராஜன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதே நேரம், தன் மக்களில் பலர் உயிர் இழந்ததையும், ஊரின் பெரும்பகுதி தீயாலும், புயலாலும் சேதமடைந்ததையும் கண்டு வருத்தப்பட்டான். அவனது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட மகோற்கடர், உயிரிழந்த மக்களை எழச்செய்தார். நகரை தன் பார்வையாலேயே முன்பை விட அழகு பெறும்படி செய்து விட்டார்.இப்படி அற்புதம் புரிந்த மகோற்கடரைக் கொல்ல வேதாந்தக, நராந்தக அசுரர்கள் மேகன் என்ற அசுரனை அனுப்பினர். அவன் ஒரு ஜோதிடர் போல மாற்று உருவம் கொண்டு, காசி வந்து சேர்ந்தான். காசிராஜனை சந்தித்த அவன், அரசே! நான் ஒரு கந்தர்வன். கந்தவர்களே என்னிடம் தான் ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றால், சாதாரண மானிடர்களான உங்கள் எதிர்காலத்தை ஏடே பார்க்காமல், முகத்தைப் பார்த்தே சொல்லி விடுவேன்.

உனக்கும், உன் காசி ராஜ்யத்துக்கும் கேடு காலம் வருகிறது. உங்களோடு இருக்கிறானே... ஒரு யானை முகன். அவன் உங்களை அழித்து, நாட்டைக் கைப்பற்றவே உங்களுடன் தங்கி, நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறான். அவனை உடனே ஊரை விட்டு விரட்டி விடுங்கள். அவனைக் காட்டிற்கு அனுப்புவது மிக மிக நல்லது, என்றான். காசிராஜனுக்கு அவன் ஏதோ அசம்பாவிதம் செய்யும் நோக்கத்தில் வந்துள்ளான் என்பது புரிந்து விட்டது. இருப்பினும், அவனுக்கு சாதகமானவன் போல நடித்து, மிகவும் சமயோசிதமாக, ஜோதிடரே! அப்படியானால், ஒன்று செய்யுங்கள்! நீங்களே, அந்த யானை முகத்தானை இழுத்துக் கொண்டு போய், காட்டில் விட்டு விடுங்களேன், என்றான். மேகனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவனைக் காவலர்கள் மகோற்கடர் நிற்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் அருகே வந்த மகோற்கடர், என்ன ஜோதிடரே! நலம் தானா? என்று கேட்டதும், மேகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. தான் ஜோதிட வேடமிட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது? என்று குழம்பிய அவனை மேலும் குழப்பினார் மகோற்கடர். ஜோதிடரே! காசி நகரத்துக்கு அழிவும், அபாயமும் இருப்பதாக, காசிராஜனை நீர் எச்சரிக்கை செய்தீராமே! அத்துடன் என்னாலும், இவ்வூருக்கு அபாயம் இருப்பதாகச் சொன்னீராமே! என்றதும், அவன் இன்னும் அதிர்ச்சியும் அடைந்தான். அரண்மனையில் காசிராஜனிடம் தனித்துச் சொன்ன விஷயங்கள் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவன் நிச்சயமாக ஒரு மாயாவி தான் என்று நினைத்தவன், நல்லவன் போல் நடித்து, மகோற்கடரே! தாங்களும் இவ்வூரில் இருப்பது ஆபத்து தான்! உமக்கு யானைகள், தண்ணீர் இவற்றால் உயிர்க் கண்டம் இருக்கிறது. இதில் தப்பினால், உம்மை விஷம் கொடுத்துக் கொன்று விடுவார்கள். இன்னும் நான்கே நாட்களில் இது நடக்கும். எனவே, நீர் காட்டிற்கு வந்து விடும், நான் அங்கு தான் போகிறேன். நீரும் என்னுடன் வந்தால், இந்த இக்கட்டில் இருந்து தப்பி விடலாம், என்றார். மகோற்கடர் நடுங்குவது போல நடித்து, ஜோதிடரே! எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், என் உயிரைக் காப்பாற்ற ஆவன செய்தீர்.

உம்முடன் நான் காட்டுக்கு வருகிறேன். என் மீது அக்கறை கொண்டு ஜோதிடம் சொன்னதற்குரிய கூலியை உமக்கு நான் கொடுக்க வேண்டாமா? என்றவர், தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, அவன் கழுத்தில் போட்டார். அந்தக்கணமே, அந்த மாலையில் இருந்து நெருப்பு பற்றி மேகனை அழித்தது. இப்படி பலமுறை வந்த அசுரர்களும், மகோற்கடரின் தாயான அதிதியைப் போலவே மாறுவேடம் அணிந்து வந்த பிரமரை என்ற அரக்கியையும் மகோற்கடர் கொன்றார். இந்நிலையில், காசி நகர மக்கள் அனைவரும் அரண்மனைக்கு வந்து மன்னரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். உப்பரிகையில் வந்து நின்ற மன்னனை வணங்கிய மக்கள், மாமன்னரே! நம் ஊருக்கு வந்திருக்கும் மகோற்கடர், பல அற்புதங்கள் செய்துள்ளார். மாண்டு போன எங்களைக் கூட உயிருடன் எழுப்பினார். எனவே, அவரை எங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, விருந்து படைக்க விரும்புகிறோம். தாங்கள் அனுமதியளிக்க வேண்டும், என்றனர். காசிராஜன் தயங்கினான். யாராவது ஒருவர் மகோற்கடரின் உயிருக்கு ஆபத்து விளைவித்து விட்டால், காஷ்யபருக்கு பதில் சொல்வது யார் என்ற பயத்தில், மக்களே! இதெல்லாம் சாத்தியமில்லை. ஏனெனில், மகோற்கடர் நம் ஊரிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கு தினமும் ஒரு வீடு வீதம் வந்தால் கூட பல ஆண்டுகள் பிடிக்கும். இதெல்லாம், நடக்கிற காரியமா? என்றான். அப்போது மகோற்கடர் அங்கு வந்தார். காசிராஜா! நீ மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்து விடு. எல்லோர் வீட்டுக்கும் போக வேண்டியது என் பொறுப்பு, என்றார். காசிராஜனும் இதற்கு சம்மதிக்கவே, மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வீடுகளுக்கு திரும்பினர். தங்கள் வீட்டுக்கு வரும் மகோற்கடரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், வித்ருமை என்ற பெண் மட்டும் கவலையுடன் இருந்தாள்.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #19 on: March 20, 2012, 02:07:01 PM »
விநாயகர் புராணம் பகுதி-20

வித்ருமையின் கணவர், சுக்கிலர் உஞ்சவிருத்திக்காக வெளியே சென்றிருந்தார். அக்காலத்தில் வேதியர்கள், உஞ்சவிருத்தி எனப்படும் பிøக்ஷ எடுத்து வரும் அரிசியை சமைத்து ஆண்டவனுக்கு நைவேத்யம் செய்வார்கள். அதையே சாப்பிடுவார்கள். மீதியிருந்தால் தானம் செய்து விடுவார்கள். சில சமயங்களில் ஏதும் கிடைக்காமல் போனால் பட்டினி தான். இந்நிலையில், மகோற்கடருக்கு விருந்து வைக்க வேண்டும் என்றால் நடக்கிற செயலா? ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனி போல, வித்ருமையின் வீட்டிலும் தவிடும், வெல்லமும் இருந்தது. அந்த தவிட்டில் மோதகம், அதிரசம் முதலானவை செய்தாள் வித்ருமை. அன்புத்துணைவரே! மகோற்கடர் கருணை மிக்கவர். நம் காசி தேசத்துக்கு ஒளிகாட்ட வந்துள்ள அவர், நம்மைப் போன்ற ஏழைகளைப் புறக்கணிக்க மாட்டார். மேலும், நான் செய்துள்ள இந்த மோதகத்தில் ஒரு சிறு துளி அவர் வாயில் பட்டால் போதும், நான் மகிழ்வேன், என்றாள். சுக்கிலரும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்டினார். அன்றைய தினம் வழக்கத்தை விட முன்னதாகவே, மகோற்கடர் சுக்கிலரின் வீட்டுக்கு எழுந்தருளினார்.  உலகைக் காக்க வந்துள்ள உத்தமரே, வரவேண்டும், வரவேண்டும், என முகமன் கூறி வரவேற்றனர் தம்பதியர். அவரது திருவடியை தாம்பாளத்தில் தாங்கி நீராட்டி, மஞ்சள், குங்குமம் முதலானவை பூசி, பாத தீர்த்தத்தை தலையில் தெளித்து, லோக நாயகரே! நாங்கள் ஏழைகள். ஏதோ எங்களால் இயன்ற பலகாரங்களைத் தவிடு கொண்டு செய்திருக்கிறோம். தாங்கள் அமுது செய்ய வேண்டும், என்று பணிவுடன் வேண்டினர். ஆஹா.... தவிட்டில் கூட பலகாரமா? காசி மக்களின் அன்பை நான் என்னவென்று புகழ்வேன்! நான் இதுவரை போன இடங்களில் எல்லாம் கற்கண்டு சாதம், பால் சாதம், தயிர்சாதம், புளியோதரை, இன்னும் கோதுமை வகைகளில் செய்த பண்டங்கள் என சாப்பிட்டு அலுத்துப் போனேன். உங்கள் வீட்டில் எனக்குப் பிடித்த உயர்ந்த வகை பலகாரத்தை தந்திருக்கிறீர்கள். வித்ருமை தாயே! எனக்கு இது போதாது. இன்னும் இருப்பதையெல்லாம் எடுத்து வாருங்கள், என்றார். வித்ருமைக்கு மகிழ்வதா அல்லது வருந்துவதா என்பதே புரியவில்லை.

ஒரு நபருக்கு தேவையான அளவுக்கே தவிடு இருந்தது. வெல்லமும் காலி. அதைக் கொண்டு பலகாரம் செய்தாயிற்று. மகோற்கடர் இன்னமும் கேட்கிறாரா? அவள் கையைப் பிசைந்தது கண்டும், சுக்கிலரின் முகத்தில் பதட்டம் தெளிவது கண்டும் மகோற்கடர் சிரித்தார்.என் அன்பு பக்தர்களே! உங்களை நான் அறிவேன்! எனக்கு ஆடம்பரமும் அளவும் பெரிதல்ல! பக்தியுடன் ஒரு சிறு உருண்டையைத் தந்திருந்தாலும் ஏற்பேன், ஒரு கைப்பிடி பொரி தந்தாலும் எனக்குப் போதும்! என்னை உங்களுக்கு தெரியவில்லையா? என்றவர் கர்ஜனையுடன் சிரித்தபடியே, விஸ்வரூபம் எடுத்தார். சிங்க வாகனத்தில்,சித்தி புத்தி இருவரும் அமர, பதினாறு கரங்களுடன் ஆயுதம் தாங்கி விநாயகப்பெருமானாக காட்சியளித்தார். காசியில் யாருக்கும் கிடைக்காத அந்த திவ்ய காட்சி, வித்ருமையின் பக்திக்கு கிடைத்தது. விஷயம் காசிராஜனுக்கு தெரிய, அவனும், நகர மக்களும் ஓடோடி வந்து அந்த திவ்ய தரிசனத்தைக் கண்டனர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை போல, வித்ருமையின் களங்கமற்ற எளிய பக்தி, காசி நகருக்கே விநாயகரின் தரிசனத்தைக் கொடுத்தது. பின்னர் காசிராஜன், விநாயகப் பெருமானே! தாங்களே எங்கள் அருகில் இருக்கும் போது, நாங்கள் யாரைக் கண்டு கலங்க வேண்டும்? தங்களின் திருப்பாதத்தில் என்னையும் என் தேசமக்களையும் சேர்த்து முக்தியருள வேண்டும், என்றான். விநாயகர் அவர்களிடம், இந்த தேசத்தில் பிறப்பவர்களுக்கும், இங்கே வருவர்களுக்கும், தங்குபவர்களுக்கும் முக்தியருள்வேன், என அருள்பாலித்து, அனைவரும் பூலோகத்தில் இன்னும் நீண்டகாலம் செல்வச்செழிப்புடன் வாழ அருள் செய்தார். வித்ருமை - சுக்கிலர் தம்பதிக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்து, தக்கவர்களுக்கு தானம் செய்து இறுதியில் தன் திருவடிகளை அடைய வரம் கொடுத்தார்.

இந்நேரத்தில், தன்னால் அனுப்பப்பட்ட அனைத்து அசுரர்களும் அழிந்ததால் ஆத்திரமடைந்த நராந்தகன், மகோற்கடரை நேரில் சென்று அழிக்கப் புறப்பட்டான். இதையறிந்த காசிராஜன், விநாயகரே தங்களுடன் இருக்கும் தைரியத்தில், அவரைச் சென்று வணங்கி, போரில் வெற்றி பெற ஆசி வேண்டினான்.மகோற்கடர் அவனிடம், காசிராஜா! நராந்தகனுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. உன்னுடன் நானும் ஒரு போர்வீரனாக வருகிறேன், என்று சொல்லி, கவசமணிந்து வாளேந்தி புறப்பட்டார். நராந்தகனின் அசுரப்படைக்கும், காசிராஜனின் படைக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இருதரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் இறந்தனர். மகோற்கடரை நராந்தகன் கடுமையாக எச்சரித்தான். ஏ யானை முகத்தோனே! சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. சிறுவன் என்பதற்காக உன்னை விடுகிறேன். இல்லாவிட்டால், இதற்குள் உன் தலை என் கையில் இருந்திருக்கும், என்று வீரவசனம் பேசினான். மகோற்கடர் சிரித்தார். தலை தானே கையில் வேண்டும். இந்தா பிடி, என்றவர், ஒருபாணத்தை எடுத்து நராந்தகனின் தலைக்கு குறி வைத்தார். அது அவனது சிரத்தை அறுத்து தள்ளியது. காசிராஜனின் வீரர்கள், நராந்தகன் அழிந்தான் என கோஷமிட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்... மற்றொரு தலை முளைத்தது. முளைத்த தலையை மீண்டும் மகோற்கடர் கொய்ய, புதிது புதிதாக தலை முளைத்தது. அப்போது சிவனிடம் பெற்ற அஸ்திரம் ஒன்றை அவன் தலையில் எய்ய, நராந்தகனின் ஆவி பறந்தது. அவனது தலை தேவலோகத்தில் ஆட்சியில் இருந்த தேவாந்தகனின் காலில் போய் விழுந்தது. ஆ சகோதரா! போய் விட்டாயா? உன்னைக் கொன்றவர்கள் யார்? தேவாந்தகன் வாளை உருவினான்
.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #20 on: March 20, 2012, 02:08:19 PM »
விநாயகர் புராணம் பகுதி-21

தம்பி! நீ போய்விட்ட பிறகு நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனால், உன்னைக் கொன்றவர்களை பழிவாங்காமல், நான் மடிந்தால், உன் ஆத்மா சாந்தி பெறாது. இப்போதே புறப்படுகிறேன்! உன் சிரமறுத்தவனின் சிரத்தை பதிலுக்கு அறுத்து, உனக்கு படையலிட்ட பிறகே உன்னை வந்தடைவேன், என முழங்கினான். தம்பியைக் கொன்ற மகோற்கடரை பழிக்கு பழி வாங்க பெரும்படையுடன் புறப்பட்டான். இதையெல்லாம் மகோற்கடர் அறிந்தே இருந்தார். நராந்தகனை விட பத்தாயிரம் மடங்கு பலம் வாய்ந்த தேவாந்தகனை எப்படி அழிக்கப் போகிறோம் என காசிராஜன் கவலையில் மூழ்கியிருந்தான். அவனைத் தேற்றிய அவனது மனைவி, மகோற்கடர் வந்த பிறகு, நமக்கு தோல்வி என்பதே ஏற்படவில்லை. நீங்கள் அவரையே சரணடையுங்கள், என்றாள். அதன்படி, காசிராஜனும் மகோற்கடரை வணங்கி நிற்க, சித்தி, புத்தியர் அவனை ஆசிர்வதித்து, இம்முறை எங்கள் கணவருடன் நாங்களும் போருக்குச் செல்கிறோம். பெண்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை, என்றனர். மகோற்கடர் தனக்கு வாய்த்த வீர மனைவியர் கண்டு ஆனந்தம் கொண்டார். இருப்பினும், போர்க்களத்திற்கு வரத்தேவையில்லையே என்றார். சித்தி, புத்தியரோ அவரது பாதத்தில் விழுந்து, கணவருக்கு ஒரு துன்பம் வந்தால், மனைவி அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல! இவ்வளவு நாளும் தாங்கள் போரிட்டவர்கள் எல்லாம் வலிமையற்ற கோழைகள். இப்போது வரும் தேவாந்தகனும் அப்படிப்பட்டவனே! இருப்பினும், அவனது தந்தை ரவுத்திரகேது மாயாஜாலம் தெரிந்தவன். மாயத்தை மாயத்தாலேயே வெல்ல முடியும், என்றனர். மகோற்கடரும் அவர்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். சித்திதேவி தனக்கு அடங்கிய அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அஷ்டமாசித்தியரை வரவழைத்தாள். தேவியரே! தாங்கள் எட்டுவித சக்திகளாக இருந்து மாயங்கள் புரிந்து தேவாந்தகனை வெற்றி கொள்ள வேண்டும், என்றாள். அந்த சக்திகள் ஆயுதம் தாங்கி போர்க்களத்தில் அணிவகுத்ததுடன், தங்களுக்கு கீழ் ஏராளமான வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கினர். சித்த, புத்தி புடைசூழ சிங்க வாகனத்தில் மகோற்கடரும் போர்க்களத்தில் புகுந்தார்.

தேவாந்தகனும் தனது அசுரப்படையுடன் வந்து சேர்ந்தான். பெரும் சண்டை நடந்தது. எட்டுவகை சக்திகளின் மத்தியிலும் புகுந்து போரிட்டது அசுரப்படை. தேவாந்தகனின் உக்கிரம் வாய்ந்த அம்புகளின் வலிமை தாங்காமல், மகோற்கடரின் படை சற்று பின்வாங்கத்தான் செய்தது, இந்நேரத்தில் புத்திதேவி தன் புத்தியைப் பயன்படுத்தினாள். தனது உடலில் இருந்து பவுத்தேவி என்ற பூதப்பெண்ணை உருவாக்கி, தேவாந்தகனின் படையினரை விழுங்கி விடுமாறு உத்தரவிட்டாள். பவுத்தேவி ஆக்ரோஷமாகச் சென்று, அசுரப்படையினரைப் பிடித்து குவியல் குவியலாக வாயில் போட்டு விழுங்கினாள். அவளது கையில் தேவாந்தகனும் சிக்கினான். அவனையும் பிடித்து வாயில் போட்டு விழுங்கிவிட்டாள் பவுத்தேவி. அவ்வளவு தான்! எஞ்சியிருந்தவர்கள் தப்பியோடினர். என்ன ஆச்சரியம்! தன் மாயாஜால வல்லமையால், தேவாந்தகன் அவளது காது வழியாக வெளியில் பாய்ந்து தப்பி ஓடினான். நேராக, தன் தந்தை ரவுத்திரகேதுவை சரணடைந்தான். பதறி ஓடி வந்த தந்தையிடம், தம்பி இறந்து போனதையும், அவனைக் கொன்ற மகோற்கடரை அழிக்கச் சென்று தோற்று திரும்பியதையும் சொல்லி புலம்பினான். ரவுத்திரகேது இளையமகனின் மறைவுக்காக வருந்தினார். தேவாந்தகனிடம், சரி..சரி.. நடந்ததை நினைத்து வருந்துவதில் பலனில்லை. நீ வெற்றி பெற தகுந்த உபாயத்தை நான் சொல்கிறேன். இன்றிரவு அறுகோண வடிவ குண்டம் அமைத்து யாகம் செய்.  நான் சொல்லும் மந்திரங்களைச் சொல். யாக குண்டத்தில் இருந்து ஒரு கருப்பு குதிரை வெளியே வரும். அதில், அமர்ந்து போரிட்டால் உன்னை வெல்ல யாராலும் முடியாது, என்றார். தந்தையின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக யாகம் செய்தான் தேவாந்தகன். அதிகாலை வேளையில் அந்த குதிரை வெளிப்பட்டது. அதில் ஏறியமர்ந்த தேவாந்தகன், மிகுந்த தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் போர்க்களத்தில் புகுந்தான்.

சித்தி, புத்தியரும் தங்கள் சக்தி படையையும், பவுத்தேவி தலைமையில் மற்றொரு படையையும் நிறுத்தியிருந்தனர். அந்தப் படையை அழிக்க, தேவாந்தகன் ஒரு உபாயம் செய்தான். தன் மானசீக சக்தியால், யாரும் அறியாமல் போர்க்களத்தின் ஒரு ஓரத்தில் யாக குண்டம் ஒன்றை வரவழைத்தான். மனதுக்குள் சில மந்திரங்களை ஓதினான். யாக குண்டத்தில் தானாகவே தீப்பற்றியது. அந்த வேள்வித்தீயில் இருந்து ஒரு பெண் பூதம் புறப்பட்டு வந்து, தேவாந்தகன் முன்னால் நின்றது.எஜமானரே! ஏன் அழைத்தீர்! எனக்கு பசி வாட்டுகிறது. உடனே உணவிடும், என்றது.  தேவாந்தகன் சிரித்தபடியே, பூதமே! இதோ என் எதிரே நிற்கும் மகோற்கடரின் படையிலுள்ள சக்திகளையும், அவர்களோடு நிற்கும் பெண் பூதப் படையிலுள்ள ஒருவர் விடாமல் சாப்பிட்டு உன் பசியைப் போக்கிக் கொள், என்றான். அந்த பூதம் மிகுந்த மகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கியது. ஆனால், புத்திதேவி உருவாக்கிய பவுத்தேவி, அந்த பெண் பூதத்தை மடக்கி விட்டாள். அதனுடன் உக்கிரமாக சண்டையிட்டு, அந்த பூதத்தை கொன்று வீசினாள். பெரும் ஆத்திரமடைந்த தேவாந்தகன், மகோற்கடரின் படையைக் கட்டிப் போடும் மோகனாஸ்திரத்தை எய்தான். அது அவனுக்கு பலன் தந்தது. மகோற்கடரின் படைகள் அந்த அஸ்திரத்துக்கு மயங்கி சாய்ந்தன. காசிராஜன் கலங்கி விட்டான். மகோற்கடரே! படைகள் எல்லாம் மயங்கி விட்டன. காசிநகரம் என்னாகுமோ? எனக் கதறினான்.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #21 on: March 20, 2012, 02:09:32 PM »
விநாயகர் புராணம் பகுதி-22

கடவுளே அருகில் இருந்தாலும் கூட பயம் என்ற தொற்று வியாதி மட்டும் ஏனோ மனிதனை விட்டு மறைய மறுக்கிறது. மனித இனத்தின் ஸ்பாவம் அப்படி? என்ன நடந்தாலும் நடக்கட்டுமே! இறைவன் நம் அருகில் இருக்கிறான் என்ற எண்ணம் ஏனோ மனிதனின் மனதுக்குள் நிரந்தரமாகத் தங்கிக் கொள்ள மறுக்கிறது. காசிராஜனின் அருகில் சாட்சாத் விநாயகப்பெருமானே பூலோக அவதாரம் எடுத்து அருகில் இருந்தபோதும் கூட, அவன் கலங்கி நின்றான். மகோற்கடர் அவனைத் தேற்றினார். காசிராஜா! பைத்தியக்காரன் போல உயிர் பயத்தில் பிதற்றுகிறாயே! உன் தேச மக்கள் அழிந்து போகாத வரம் பெற்று வந்தவர்களா என்ன! ஆனால், நம் எதிரில் நிற்கும் தேவாந்தகன், ஐம்புலன்களையும் அடக்கி, சிவனை எண்ணி தவமிருந்து, அவரிடம் அழியா வரம் பெற்றிருக்கிறான். அது எப்படிப்பட்ட வரம் என்பது உனக்குத் தெரியுமா? இரவிலும், பகலிலும் நான் அழியக்கூடாது. ஆயுதங்களாலோ, விலங்குகளாலோ, பிற உயிரினங்களாலோ அழிவு வரக்கூடாது. இன்னும் பல நிபந்தனைகளின் பேரில் வரம் வாங்கியிருக்கிறான். என் தந்தை தன்னை மனதார நினைத்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்து விடுவார். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அவனை அழிக்கவும் தயங்கமாட்டார். ஒன்றைச் சொல்கிறேன் கேள்! மனிதர்கள் தங்களைப் புத்திசாலிகள் எனக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேவாந்தகனும் அப்படியே! தான் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் தனக்கு அழிவே வராது என எண்ணிக்கொண்டிருக்கிறான். ஆனால், எப்பேர்ப்பட்ட அறிவாளியும், எங்காவது இடறி விடுவான். இவன் பகலிலும், இரவிலும் சாகக் கூடாது என வரம் வாங்கினானே ஒழிய, பகலும் அல்லாத இரவும் அல்லாத இரண்டும் கலந்திருக்கும் வைகறையாகிய அதிகாலைப் பொழுதில் சாகக் கூடாது என்ற வரம் பெறவில்லையே! அந்த நேரத்திற்காக காத்திருக்கிறேன். அப்படியே அந்தப் பொழுது வந்தாலும், இவனை ஆயுதங்களால் அழிக்க முடியாதே! எனவே, ஆயுதமல்லாத ஒரு பொருளால் தான் இவனை அழிக்க முடியும், பொறுத்திரு! வேடிக்கை பார்! எனச் சொல்லி விட்டார்.

மகோற்கடர் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தாலும், காசிராஜன் மனம் பதைக்க காத்திருந்தான். அன்று விடியவிடிய போர் நடந்தது. தனது படைகளைக் காப்பாற்ற மகோற்கடர் பினாகம் என்னும் வில்லை எடுத்தார். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான அம்புகளை பல திசைகளிலும் சிதறடிக்கச் செய்யும் வகையிலான வில் இது. இதைக் கொண்டு, அசுரப் படைகளில் பெரும் பகுதியைக் கொன்று குவித்து விட்டார். மயங்கிக் கிடந்த படைகளை எழுப்ப, அதில் ஞானாஸ்திரம் ஒன்றை இணைத்து அனுப்பினார் மகோற்கடர். அந்தப் பாணம் வெளிப்பட்டதுமே படைகள் எழுந்தன. எஞ்சியிருந்த படைகளை அவர்கள் அழிக்க ஆரம்பித்து விட்டனர். மனிதர்கள் அசுர குணங்களால் சூழப்பட்டு, கடவுளை மறந்து, தங்கள் இஷ்டம் போல் உலக இன்பங்களில் மயங்கிக் கிடப்பதை தேவாந்தகன் எய்த மோகானாஸ்திரம் குறிக்கிறது. ஆசைகளில் கட்டுண்டு கிடப்பதில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்ற பேரறிவாகிய ஞானத்தைக் கொடுப்பதையே, மகோற்கடர் எய்த ஞானாஸ்திரம் குறிக்கிறது. இப்படி விடிய விடிய நடந்த சண்டைக்குப் பின் விடியல் பொழுதை நெருங்கி விட, காசிராஜன் மனம் பதைத்து நின்றிருந்தான். எதற்கும் கலங்காமல் போரிட்டுக் கொண்டிருந்த தேவாந்தகனின் அருகில், மகோற்கடர் சென்றார். விநாயகப்பெருமானாக விஸ்வரூபமெடுத்தார். தன் கொம்பை ஒடித்தார். யானை தந்தத்தை ஆயுதம் எனக்கூற முடியாதே! அதை அப்படியே தேவாந்தகனின் தலையில் பாய்ச்சினார். அவனது ஆவி பிரிந்து, விநாயகரை வலம் வந்தது. ஒரு காலத்தில் சிவபெருமானை எண்ணி தவம் செய்த பெருமையுடையவன் என்பதால், அந்த பாக்கியம் தேவாந்தகனுக்கு கிடைத்தது. பின்னர் அவரது திருவடியில் சரணடைந்து அவருடனேயே ஐக்கியமாகி விட்டது. படை வீரர்கள் ஆர்ப்பரித்தனர்.

காசிராஜன் ஆனந்தக்கண்ணீர் வடித்தான். விநாயகப்பெருமானே! தாங்களே வந்து காசியைக் காத்தமைக்கு நன்றி. தாங்கள் இந்த தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும், என்று வேண்டினான். விநாயகரும் அதை ஏற்றார். பின்னர் தன்னை மகோற்கடராக சுருக்கிக் கொண்டு, அரண்மனைக்கு புறப்பட்டார். தனது மகனின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என காசிராஜன் கேட்டுக்கொள்ளவே, தந்தை காஷ்யபர் இட்ட உத்தரவுப்படி, புரோகிதராக இருந்து சிறப்புற நடத்தி வைத்தார். பின்னர், தன் இல்லத்துக்கு சித்தி, புத்தியருடன் திரும்பினார். காசிராஜனும், அவனது படைகளும் அவருடன் சென்றனர். காசிராஜன், காஷ்யபரிடமும், அதிதியிடமும் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பிரஸ்தாபம் செய்தான். அதைக்கேட்டு அவர்கள் மகிழ்ந்தனர். மகோற்கடரும் தனது மானிடப்பிறவி முடிந்து விட்டதாக காஷ்யபர், அதிதியிடம் விடைபெற்று விண்ணுலகம் புறப்பட்டார். மகனை ஆரத்தழுவிய பெற்றோர் தங்களையும் விநாயகரின் ஆனந்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல விரும்பினர். பூமியில் இன்னும் பல நற்செயல்கள் செய்து தன்னை வந்தடையும்படி விநாயகர் அருள்பாலித்து புறப்பட்டார். காசிராஜன் கண்ணீர் வடித்தார். கணங்களின் தலைவரே! தங்கள் பெற்றோருக்கு அருள் செய்த தாங்கள், என்னைப் போன்ற லோகாதயங்களை விரும்பும் ஈன ஜென்மங்களையும் உமது லோகத்துக்கு அழைத்துச் செல்லமாட்டீரா? அதற்காக, எந்த விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றதும் விநாயகர் கலகலவெனச் சிரித்தார். சித்தி புத்தியரும் சிரித்தனர். காசி மன்னா! எனது உலகத்தை அடைய விரும்பும் பக்தர்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன தெரியுமா? என்றதும், அவர் கேட்கும் விலையைத் தங்களால் கொடுக்க முடியுமா என காசிராஜனும், அவனுடன் வந்தவர்களும் ஆவலுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தனர்.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #22 on: March 20, 2012, 02:10:56 PM »
விநாயகர் புராணம் பகுதி-23

பக்தர்களே! நான் சொல்லும் இந்தக் கதையைக் கேளுங்கள். இதைக் கேட்ட பின், என் லோகத்தை அடைய, இங்கே கூடியிருக்கும் அனைவரும் கொடுக்க வேண்டிய விலையைத் தெரிந்து கொள்வீர்கள், என்று சொல்லி தன்னால் சம்ஹரிக்கப்பட்ட அனலாசுரன் பற்றி சொன்னார். ஒருமுறை, எமதர்மராஜா தேவலோகப் பெண்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த மோக மயக்கத்தில், அவரிடம் இருந்து அனலாசுரன் என்ற அசுரன் வெளிப்பட்டான். அவன் நின்ற இடம் தகித்தது. எமதர்மராஜா தன்னைப் பெற்றவர் என்பதால், அவரை விட்டுவிட்டு, மற்ற தேவர்களை விரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் நெருங்கினாலே கடும் வெப்பம் ஏற்பட்டதால் அவர்கள் தீயில் நிற்பதைப் போல உணர்ந்தனர். தங்களுக்கு புகலிடம் தேடி அவர்கள் திருமாலிடம் சென்றனர். திருமால் அவர்களைச் சமாதானம் செய்து, இந்த அசுரனை அழிக்கும் சக்தி என் மருமகன் கணபதிக்கு மட்டுமே உண்டு. எல்லோரும் கணபதியைத் தியானியுங்கள், எனசொல்லிவிட்டார். அனைத்து தேவர்களும் மானசீகமாக தங்கள் மனதில் விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபட்டனர். அப்போது விநாயகர், மனித முகத்துடன் ஒரு பிரம்மச்சாரி இளைஞனாக அவர்கள் முன் வந்து நின்றார். தேவர்களே! நீங்கள் ஏன் கலங்க வேண்டும்? அந்த அசுரனை என்னால் கொல்ல முடியும்? என்றதும், நீயோ சிறுவன், அவனோ அசுரன். உன்னால் எப்படி அவ்வளவு பெரிய அசுரனைக் கொல்ல முடியும்? என்று ஆதங்கத்துடன் கேட்டனர். அந்த இளைஞன் சிரித்தான். அந்நேரத்தில், தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி நின்று, ஒரு பிரம்மச்சாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அனலாசுரனுக்கு கிடைக்கவே, அவன் வேகமாக அங்கே வந்தான். தேவர்கள் வெம்மை தாங்காமல் அங்குமிங்கும் சிதறி ஓடினர். அந்த இளைஞனோ எதையும் கண்டு கொள்ளாமல் நின்றான். தேவர்கள் ஆச்சரியப்பட்டனர். அனலாசுரன் இளைஞனின் அருகில் வந்து, வெப்பத்தால் உலகத்தையே அழிக்கும் சக்தி என்னிடம் உண்டு. நீயோ அப்படியே நிற்கிறாய். யார் நீ? என் உடலில் இன்னும் சூடேற்றினால் நீ உருகிப்போவாய், என எச்சரித்து கடைவாய் கோரைப் பற்கள் வெளிப்படும்படியாக சிரித்தான்.

அப்போது அவனது வாயில் இருந்து தீ வெளிப்பட்டது. விநாயகர் அதை ஊதி அணைத்தார். அவன் வெம்மையைக் கடுமையாக்கி பூலோகத்தில் பாய்ந்தான். அங்கிருந்த உயிர்களை அழிக்க முயன்ற போது, இளைஞனான கணபதி பூமியை விழுங்கி வயிற்றுக்குள் தள்ளிவிட்டார். இவ்வாறாக ஏழு லோகங்களையும் அவன் தீ வைக்க முயன்ற போது, எல்லா உலகங்களையும் தன்னுள் அடக்கினார் கணபதி. அவரது வயிறு பானை போல் ஆனது. பின்னர் அந்த இளைஞனிடம், சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. மாயவேலைகளை எல்லாம் என்னிடம் காட்டாதே. ஏழு லோகங்களையும் விழுங்கி வேடிக்கை காட்டும் உன்னை அந்த லோகங்களுடன் விழுங்கி விடுவேன், என எச்சரித்தான். உடனே இளைஞனாக வந்த கணபதி சுயவடிவம் கொண்டு, தன் தும்பிக்கையால் அவனை வளைத்து இறுக்கி அந்தரத்தில் தூக்கினார். அவன் தும்பிக்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே குதித்தான். கணபதி அவனிடம், அனலாசுரா! உனக்கு கொடிய பசி போலும். என் வயிற்றுக்குள் போ. அங்கே ஏழு உலகங்கள் இருக்கின்றன. அத்தனையையும் எடுத்துக் கொள், என்றார். அவனும், நல்லது, நல்லது என்றபடியே வயிற்றுக்குள் சென்றான். அவன் உள்ளே சென்றானோ இல்லையோ, மூடிய வாயைக் கணபதி திறக்கவில்லை. தப்ப வழியின்றி அவன் தவித்தான். விநாயகரோ அவனை உள்ளடக்கிக் கொண்டு வெப்பம் தாளாமல் தவித்தார். தேவர்கள் அவருக்கு கொடுத்த இளநீர், பால் எதுவும் சூட்டைத் தணிக்கவில்லை. சித்தி, புத்தியர் தங்கள் அங்கங்களால் அவரது வெப்பத்தைத் தணிக்க முயன்று தோற்றனர். என்ன தான் செய்வது! அவர்கள் விநாயகரையே சரணடைந்தனர். விநாயகர் அவர்களிடம், நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் என்னை திருப்திப்படுத்தாது.

எனக்குத் தேவை அருகம்புல். அதை உங்களால் முடிந்த அளவு கொண்டு வந்து குவியுங்கள். வெப்பம் தணிந்து விடும், என்றார். தேவர்கள் அருகம்புல்லைக் கொண்டு வந்து குவித்தனர். அவரது உடலையே அருகம்புல்லால் மூடுமளவு கொட்டினர். விநாயகரின் வெப்பம் தணிந்தது. அனலாசுரனும் உள்ளுக்குள்ளேயே ஜீரணமாகி விட்டான். இந்த வரலாற்றை பக்தர்களிடம் சொன்ன கணபதி, இப்போது சொல்லுங்கள், என் லோகத்தை அடைய நீங்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை! என சொல்லவே, ஆஹா... கருணைக் கடலே! பல்வகை நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க மாலைகளும், ஏராளமான பிரசாத வகைகளும் தங்களுக்கு தரப்பட வேண்டுமோ என நாங்கள் அறியாமையால் ஆளுக்கொரு வகையில் கற்பனை செய்தோம். எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் சாதாரண அருகம்புல்லால் உங்களை அடைந்து விடலாம் என்றால் நாங்கள் செய்த பாக்கியம் தான் என்னே! என்றனர். அன்றுமுதல், விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அருகம்புல் தவிர தங்களுக்கு பிடித்தமான பூக்களையும் நாங்கள் அணிந்து மகிழ ஆசைப்படுகிறோம். அதையும் சொல்லுங்கள், என்றனர் பக்தர்கள். ரோஜா, மல்லிகை, முல்லை, சம்பங்கி இன்னும் பல்வேறு வாசனையுள்ள மலர்களை இங்கே கூடியிருக்கும் பெண்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆடவர்கள் தங்கள் மார்புகளில் மாலையாகத் தரித்துக் கொள்ளுங்கள். எனக்கு அவை தேவையில்லை. உங்களுக்கு எது தேவையில்லை எனக் கருதுகிறீர்களோ, அதை எனக்கு மாலையாக அணிவித்தால் போதும், என விநாயகர் கருணை உள்ளத்துடன் சொன்னார். அது என்ன வகை பூ? என்று மக்கள் கேட்டதும், இதோ! இந்த பூவை யாராவது சூடுவீர்களா? என்று அங்கு நின்ற செடி ஒன்றைச் சுட்டிக்காட்டினார் விநாயகர். மக்கள் அதிசயித்துப் போயினர்.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #23 on: March 20, 2012, 02:12:05 PM »
விநாயகர் புராணம் பகுதி-24

அது ஒரு எருக்கஞ்செடி. அந்தச் செடியிலுள்ள பூக்களை எனக்கு அணிவித்தால் போதும் என்றார் விநாயகர். இறைவன் நம்மிடம், எதிர்பார்ப்பது பக்தியை மட்டும் தான். அன்புடன் அவனது பாதத்தில் ஒரே ஒரு பூவை வைத்து, அவனது திருநாமத்தை சொன்னால் போதும்! ஓம் கணபதியே நம என தினமும் 108 முறை யார் பக்திப்பூர்வமாக சொல்கிறார்களோ, அவர்களுக்கு விநாயகரின் ஆனந்தலோகம் நிச்சயம் கிடைக்கும். விநாயகப்பெருமானின் எளிய தன்மை பற்றியும், அவர் எதிர்பார்க்கும் எளிய பக்தி பற்றியும் மற்றொரு கதை ஒன்றையும் கேளுங்கள். மிதிலாபுரி மன்னர் ஜனகர் நற்பண்புகளைப் பெற்றவர். ஏராளமான கல்வியறிவுடன் திகழ்ந்தவர். ஆனாலும், தான் என்ற கர்வம் அவரை ஆட்டிப்படைத்தது. மக்களைக் காப்பாற்றும் அவர் தானே தெய்வம் என்று நினைத்துக் கொண்டார். ஒருமுறை நாரத மகரிஷி அவரைக் காண வந்தார். நாரம் என்றால் தண்ணீர். நாரதர் பிதுர் தேவதைகளை அளவுக்கதிகமாக பூஜிப்பவர். அவர்களுக்கு தீர்த்தம் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பார். இதன் காரணமாகவே நாரதர் என்ற பெயர் அவருக்கு அமைந்தது. நாரதர் எந்த இடத்திலாவது கண நேரம் தங்கிவிட்டால்கூட, அவ்விடத்தில் உள்ளோர் மோட்சத்தை அடைந்து விடுவார்கள். அப்படிப்பட்ட மகான் ஜனகரைக் காண வந்தால் அவருக்கு மோட்சம் உறுதிதானே! ஜனகர், நாரதரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்தார். நாரதர் அவரிடம், ஜனகரே! உமது ஆட்சியில் பகவான் கிருபையால் மக்கள் செழிப்புடன் வாழ்கின்றனர். உம்மை வாழ்த்துகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணமான அந்த பகவானுக்கு இங்கு என்ன வேலை? என்றார். நாரதர், ஜனகருக்கு புத்திமதி சொன்னார்.

ஜனகரே! நீர் அறியாமல் பேசுகிறீர். எல்லாவற்றுக்கும் காரணம் பகவான்தான். பகவானை தூஷிக்கும் இடத்தில் நான் அமர மாட்டேன், என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் நேராக கவுண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றார். அந்த முனிவர் கணபதியை உபாசிப்பவர். அவரிடம் நாரதர், முனிவரே! விநாயகப்பெருமானிடம் சொல்லி ஜனகருக்கு நற்புத்தியை தரச் செய்ய வேண்டும். அவர் தானே பரம்பொருள் என்ற சிந்தனையுடன் இருக்கிறார். அந்த சிந்தனையை அகற்றி அவர் சாதாரண மானிட ஜென்மம் என்பதை உணரும் வகையிலான ஏற்பாட்டைச் செய்யுங்கள், என சொல்லிவிட்டு வைகுண்டம் புறப்பட்டார். கவுண்டின்ய முனிவரும் கணபதியிடம் இதைச் சொல்லி பூஜித்தார். கணபதி அவரது கோரிக்கையை ஏற்று குஷ்ட நோயுள்ள ஒரு அந்தணராக வடிவெடுத்து ஜனகரின் அரண்மனைக்குச் சென்றார். வாசலில் நின்றபடி, தனக்கு பிøக்ஷ இடுமாறு கேட்டார். மிக ஆச்சரியமாக பிராமணர் ஒருவர் அரண்மனை வாசலில் பசியுடன் வந்து நிற்கிறார் என்றால் யாருக்குத்தான் வியப்பிருக்காது! அவர்கள் அவசர, அவசரமாக ஜனக மகாராஜாவிடம் சென்று, பிராமணர் ஒருவர் பிøக்ஷ கேட்டு வந்திருப்பதை அறிவித்தார்கள். ஜனகர் அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். வேதியர் அருவருப்பான தோற்றத்துடன் உள்ளே வந்து நின்றார். பிராமணரே! எனது ஆட்சியில் இப்படி ஒரு நிலைமை தங்களுக்கு எப்படி ஏற்பட்டது? இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? எனக்கேட்டார்.

முதியவர் வடிவில் வந்த கணபதி, எனக்கு பசி தாளவில்லை. முதலில் உணவு கொடு! அதன் பிறகு பேசலாம், என்றார். ஜனகர் தன் மகனிடம், வேதியரை உணவறைக்கு அழைத்து செல்லும்படி கூறினார். அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. கணபதி சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அவரது தொந்தி வயிறை அவ்வப்போது தடவிக்கொள்வார். சமையல்காரர்கள் இருந்ததையெல்லாம் அவருக்கு வைத்து விட்டனர். அவரோ இலையை விட்டு எழுந்திருப்பது போல் தெரியவில்லை. பின்னர், நூறு சமையற்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போதே கணபதி பசி தாளாதவர் போல அரற்றினார். இலை முன்பு உட்கார வைத்துவிட்டு, இப்படி என்னை பட்டினி போட்டு துன்புறுத்துகிறீர்களே! என கத்தினார். இளவரசனுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது. அத்துடன் பயமும் வந்துவிட்டது. அவனது உடல் நடுங்கியது. ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் அவனது அறிவுக்கு புலனாகிவிட்டது. பாதி வெந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. இருக்கிற உணவையெல்லாம் அப்படியே எடுத்து வாருங்கள் என கணபதி சத்தம் போட்டார். சமையல்காரர்களும் அவ்வாறே செய்தனர். அதன் பின்பும் அவர் இலையை விட்டு எழவில்லை. உடனே இளவரசன் அவரிடம், வேதியரே! உம் பசி தீர எங்களது தானியக்களஞ்சியத்தை திறந்து விடுகிறோம். உமது இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளும், எனச் சொல்லி களஞ்சியத்தை திறந்து விட்டான். கண நேரத்தில் களஞ்சியத்தைக் காலி செய்து விட்டார் கணபதி.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #24 on: March 20, 2012, 02:13:45 PM »
விநாயகர் புராணம் பகுதி-25

ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டான் ராஜகுமாரன். விஷயம் ஜனகருக்கும் பறந்தது. அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஊரார் வரிசையாக உணவுப்பண்டங்களை அடுக்கினர். அந்தணர் வடிவில் இருந்த கணபதிக்கோ அது ஒரு கைப்பிடி அளவே இருந்தது. அதையும் காலி செய்துவிட்டு, பாவிகளே! பெரும் பசியுடன் வந்த எனக்கு கடுகளவு சாப்பாடு போட்டு, மேலும் என் பசியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே! உம்... போடுங்க சாப்பாட்டை, என்று கத்தினார். ஜனகர் அவர் அருகே வந்து, வேதியரே! உமக்கு கொடுக்க எங்கள் நாட்டிலேயே இப்போது ஏதுமில்லை. என்னை மன்னிக்க வேண்டும். உமது பசியைப் போக்கக்கூடியவர் என நீர் யாரை நினைக்கிறீரோ அங்கேயே போய் நீர் பசியாறிக் கொள்ளலாம், என்றார். மன்னனே! நீ தானே பரப்பிரம்மம். அப்படித் தானே ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாய். கடவுளுக்கு சமமான உனக்கு யாசகம் கேட்டு வந்த அந்தணனின் பசியைத் தீர்க்க முடியவில்லையே. ஒரு சிறு பகுதியை ஆளத்தெரியாத நீ, கடவுளாக இருந்து இந்த பிரபஞ்சத்தையே எப்படி காக்கப் போகிறாய்? என் பசியைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்து விட்டு, அதைக்கூட காப்பாற்றாத நீயெல்லாம் தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறாயே, என்று அவருக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவிட்டு கோபப்படுவது போல் நடித்து வெளியேறி விட்டார். அவர் சென்ற பிறகு ஜனகர், தன்னைப் பரப்பிரம்மமாக நினைத்து கர்வத்துடன் நடந்து கொண்டதையும், யாசகம் கேட்டவருக்கு கூட உணவிட முடியாத தனது இயலாமையையும் எண்ணி வருந்தினார். அரண்மனையில் இருந்து புறப்பட்ட அந்தணராகிய கணபதி, திரிசுரன் என்ற தன் பக்தனின் வீட்டிற்குச் சென்றார்.

திரிசுரனும் ஒரு அந்தணர். அவரது மனைவி விரோசனை. கணவர் யாசகமாகக் கொண்டு வரும் அரிசியை சமைத்து விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடும் பழக்கமுடையவள். கணவருக்கு பூஜை வேளையில் பணிவிடை செய்பவள். அவர்களின் வீட்டுக்குச் சென்றதும், திரிசுரன் வெளியே வந்து அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றார். திரிசுரனே! நான் தீர்த்தயாத்திரை செல்கிறேன். வழியில் பசிக்கிறதே என்பதற்காக இந்த நாட்டு மன்னன் ஜனகரிடம் உணவு கேட்டேன். அவர்களோ குறைந்த அளவு தந்து, என் பசியை மேலும் தூண்டி விட்டார்கள். பசியடங்காத நான், உங்களிடம் உணவு கேட்டு வந்துள்ளேன். ஏதாவது கொடுங்களேன், என்றார். விரோசனைக்கு கண்ணீர் முட்டியது. சுவாமி! மற்ற நாட்களில் கூட நெல்லோ, அரிசியோ பிøக்ஷயாக ஏற்று வருவார் என் பர்த்தா. இன்றோ, அவர் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பி விட்டார். விநாயகருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல் மட்டுமே இங்குள்ளது. வேறு ஏதுமில்லை. நான் என்ன செய்வேன்? பசித்து வந்த தங்களுக்கு ஏதும் தர முடியாமல் தவிக்கிறேனே! என்று தங்கள் நிலைமையை வெளிப்படுத்தினாள். பெண்ணே! இதுபற்றி கவலை வேண்டாம். உன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாயே, அருகம்புல், அதில் ஒன்றிரண்டைக் கொடுத்தாலே போதும். என் பசி தீர்ந்து போகும், என்றார் சுவாமி. விரோசனையும் அவ்வாறே அவருக்கு இரண்டு அருகம்புல்லைக் கொடுத்தாள். கணபதி அதை வாயில் போட்டாரோ இல்லையோ, அந்த வீடு பொன்மயமாக ஜொலித்தது. அவ்வூரிலுள்ள குடிசைகளெல்லாம் மாளிகைகளாகி விட்டன. ஜனகரின் அரண்மனையில் முன்பையும் விட செல்வம் கொழித்துக் கொட்டிக் கிடந்தது. அவருக்கு பேராச்சரியம். அரண்மனைக்கு வந்த வேதியரே இதற்குக் காரணம் என்பதை அவர் புரிந்து கொண்டார். திரிசுரனின் இல்லத்திற்கு அவர் விரைந்தார்.

அப்போது விரோசனை, சுவாமி! தாங்கள் யார்? எங்கள் வீட்டின் நிலையையே மாற்றி விட்டீர்களே. பசும்புல்லுக்கு பசும்பொன் கொடுத்த புண்ணியரே! தங்களைப் பற்றிச் சொல்லுங்களேன், என்றதும் விநாயகர் தன் சுயரூபத்தை அவளுக்கு காட்டினார். திரிசுரன் அவரிடம், சுவாமி! இந்த ஏழையின் வீட்டுக்கா எழுந்தருளினீர்கள்! நான் அருகம்புல் தவிர தங்களுக்கு ஏதும் தந்ததில்லையே! இனிக்கின்ற மோதகமும், சித்ரான்னங்களும் படைத்து உம்மை வழிபடும் இடங்களுக்கெல்லாம் செல்லாமல், எங்கள் மகாராஜா தங்களுக்கு ஏராளமான உணவிட்டும் அவர் வீட்டில் காட்சி கொடுக்காமல் இங்கு வந்து காட்சி தந்தமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன், என்றார். இதற்குள் ஜனகரும் அங்கே வந்து விட, அவர் பரவசம் மேலிட கணபதியை வணங்கி, விநாயகரே! நானே பரம்பொருள் என இறுமாந்திருந்தேன். என் மாயையை தீர்த்த வல்லவரே! உம்மை மதிக்கத்தவறிய எனக்கு இனியும் இவ்வுடலில் உயிர் வேண்டாம். நான் உமது திருவடியை அடைந்து பாக்கியத்தை அருள்வீரா? நான் செய்த தவறுக்குரிய தண்டனை எதுவாயிருந்தாலும் கொடும்! ஆனால், என்னை மீண்டும் பிறவியெடுக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும், என்றார். கருணைக்கடலான விநாயகர் அவருக்கும் திரிசுரன் தம்பதிக்கும் அருள்செய்து, என்னைத் திருப்திப்படுத்த ஆடம்பரம் ஏதும் தேவையில்லை. ஒரு பூவையையோ,  இலையையோ எனக்கு அர்ப்பணித்தாலே போதும். அதுவும் இல்லாதவர், எனக்கு மந்திரங்கள் கூறியும், என் திருநாமங்களைக் கூறியும் இதயத்தில் இருந்து அருகம்புல்லையும், அதற்கிணையான வன்னி இலைகளையும் தந்தாலே போதும், என்றார். சுவாமி! தங்களுக்கு வன்னி இலை தூவி வழிபடுவதால், நாங்கள் அடையும் நன்மை என்ன என்பதை விளக்க வேண்டும்? என்று கேட்டாள் விரோசனை. விநாயகரும் அதுகுறித்த தனது பிரஸ்தாபத்தை ஆரம்பித்தார்.


Offline Anu

Re: விநாயகர் புராணம்
« Reply #25 on: March 20, 2012, 02:15:10 PM »
விநாயகர் புராணம் பகுதி-26

விரோசனா! வன்னி இலையின் முக்கியத்துவத்தைக் கேள்.அருகம்புல்லை மாலையாகவும், வன்னியை எனக்கு அர்ச்சனை செய்வதற்காகவும் நீ பயன்படுத்தலாம். ஒரு காலத்தில், விதர்ப்ப தேசத்தை புண்ணிய கீர்த்தி என்பவன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை இல்லை. எனவே, அவனது காலத்துக்குப் பின் மந்திரிகள் ஒன்று கூடி, மன்னனின் உறவுக்காரனான சாம்பன் என்பவனை அரசனாக்கினர். ஆனால், அவன் எதிர்பார்த்ததைப் போல் நல்லாட்சி தராமல் கொடுமைகள் பலவற்றை அரங்கேற்றினான். பெண் பித்தனான அவன், பிறர் மனைவியரைக் கூட விட்டு வைக்கவில்லை. இவனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம், தனக்கு பதவியளித்த மந்திரிகளையே நீக்கி விட்டு, துர்மதி என்பவனை மந்திரியாக்கிக் கொண்டான். அவன் அரசனுக்கு எல்லா வகைகளிலும் உதவியதுடன், தானும் அவனைப் போலவே லீலைகளில் ஈடுபட்டான். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க பாவங்களையே சேர்த்துக் கொண்டிருக்க, ஒருமுறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்கள். வரும் வழியில், எனது கோயில் ஒன்றைக் கண்டனர். அங்கு பக்தர்கள் ஒன்றுகூடி பூஜை செய்து கொண்டிருந்தனர். அங்கே வந்த ஒரு பக்தையிடமிருந்த மாங்கனிகளைப் பிடுங்கி, என் முன்னால் வைத்து, பிள்ளையாரே! இவங்க கொடுக்கறதையெல்லாம் நீ ஏத்துக்கிறே இல்லே! இதோ! நாங்க கொடுக்கிற இந்த கனிகளையும் ஏத்துக்கோ! என விளையாட்டாகச் சொன்னார்கள். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகும், அவர்கள் கொடிய பல பாவங்களைச் செய்து இறந்தும் போனார்கள். எமதூதர்கள் அவர்களைக் கொடிய சாட்டைகளால் அடித்து இழுத்துச் சென்றனர். இங்கே, அனுபவித்த இன்பத்திற்கு பல மடங்கு ஈடான துன்பத்தை அவர்கள் அனுபவித்தனர். நரக <உலகத்தில் வாட்டி வதைபட்ட அவர்கள் பூச்சி, புழு, கரப்பான், நண்டு என பல இழிபிறவிகளை எடுத்தனர். மீண்டும் ஒரு பிறவியில் சாம்பன் மானிடனாகவும், துர்மதி அசுரனாகவும் பிறந்தனர்.

மானிடனாகப் பிறந்த சாம்பனுக்கு அப்பிறவியில் வீமன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. வீமன் அப்பிறவியிலும் திருடனாகவே இருந்தான். ஒரு முறை, பல பிராமணர்கள் யாகம் முடித்து விட்டு, அதற்குரிய தட்சணையாக தங்கம், பசுக்கள் முதலானவற்றை பெற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கொள்ளையனான வீமன், அவர்களை வழிமறித்தான். தங்கத்தையும், பசுக்களையும் தன்னிடம் தந்து விடும்படி மிரட்டினான். அந்தணர்கள் அவனுக்கு நற்புத்தி சொல்லவே, ஆத்திரமடைந்த அவன், அவர்களைக் கொலை செய்து அத்தனைப் பொருளையும் அபகரித்துக் கொண்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. செய்த பாவத்திற்கு பலன் கிடைக்க வேண்டாமா? சாம்பனின் மந்திரியாக இருந்த துர்மதி, அந்தப் பிறவியில் ராட்சதனாகப் பிறந்திருந்தான். அவன், பசுக்களையும், பெரும் செல்வத்தையும் திருடிக் கொண்டு வந்த வீமன் முன்னால் வந்து நின்றான். பசுக்களைப் பிடித்துத் தின்றான். வீமனையும் விழுங்க எண்ணம் கொண்டு அவனைப் பிடிக்க கையை நீட்டவும், வீமன் அலறியடித்து ஓடினான். அசுரனும் விடவில்லை. வீமன் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறினான். அப்போது அதில் இருந்த இலைகள் உதிர்ந்தன. அந்த மரத்தின் கீழே யாரோ சிலர் எனது சிலையை பிரதிஷ்டை செய்திருந்தனர். அந்த சிலையின் மீது அந்த இலைகள் உதிர்ந்தன. அசுரன் மரத்தருகே வந்து, வீமனைக் கீழே விழச் செய்வதற்காக மரத்தை உலுக்கினான். அப்போதும், என் சிலை மீது இலைகள் உதிர்ந்தன. ஒரு வழியாக அசுரன் வீமனைப் பிடிக்க, வீமன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தாக்கி சண்டை போட்டான். ஒரு கட்டத்தில் அசுரனை ஒரு பாதாளத்தருகே சமயோசிதமாக வரச்செய்த வீமன், அவனை உள்ளே விழும்படிச் செய்து விட்டான். அவன் உள்ளே விழுந்ததும், மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பிய அவன் நின்ற பாறையில் திடீரென கால் வழுக்கவே, அவனும் அதே பாதாளத்தில் விழுந்து இறந்தான். இவர்கள் இருவரும் மீண்டும் எமலோகம் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் கொடிய தண்டனை கிடைத்தது. இருப்பினும், அந்தப்பிறவியில் இவர்கள் தங்களை அறியாமலே என்னை வன்னி இலை கொண்டு அர்ச்சித்த பலன் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்ததும், புண்ணியத்தை அனுபவிக்கும் பாக்கியகாலம் வரவே, அவர்கள் தங்க விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு எனது லோகத்தை வந்தடைந்தனர். பாவிகளுக்கும் கூட மங்களத்தை அருளும் சக்தி வன்னி இலைக்கு உண்டு, என்றார். விரோசனை இந்த சம்பவம் கேட்டு உளம் மகிழ்ந்து, அங்கு நின்ற விநாயகருக்கு அர்ச்சனை செய்து கணவருடன் ஆனந்தலோகம் அடைந்தாள்.

விநாயகப்பெருமானை சதுர்த்தி நாளில் அவதரித்ததாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இந்நாளில் சந்திர தரிசனம் கூடாது. இது ஏன் தெரியுமா? யாராவது ஒருவர் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டால், அவரை ஏளனம் செய்யக்கூடாது என்பது நியதி. பிரம்மதேவன் இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டார். நாரதர் மூவுலகும் சஞ்சரிப்பவர். தினமும் சிவலோகம் வந்து ஒரு மாங்கனியை காணிக்கையாக வைத்து இசை பாடி சிவசக்தியைப் பரவசப்படுத்துவார். ஒருநாள், காணிக்கையாக கொடுத்த மாங்கனியை யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் கேட்டார். வழக்கமாக அப்பழம், விநாயகருக்கே கிடைக்கும். இப்போது முருகனுக்கு அப்பழத்தைக் கொடுக்கலாமே என பிரம்மா கூற, கணபதிக்கு கோபம் வந்து விட்டது. அவரது கோபத்துக்கு ஆளானால், பெரும் தண்டனைக்கு ஆளோவேமே என நடுங்கிய பிரம்மா அவரருகே சென்றார். கணேசரும் அவரை மன்னிக்க முடிவு செய்த வேளையில், பிரம்மாவின் நடுக்கத்தைப் பார்த்து சந்திரன் சிரித்தான். விநாயகரின் கோபம் சந்திரன் மீது திரும்பி விட்டது. ஒருவன் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவனைக் காப்பாற்ற முயல வேண்டுமே தவிர, அவனது வேதனையை எண்ணி சந்தோஷப்படக்கூடாது, என சந்திரனைக் கடிந்து கொண்டதுடன், இப்படிப்பட்ட உனக்கு உலகுக்கு ஒளி கொடுக்க தகுதியில்லை, என சபித்து விட்டார். சந்திரன் ஒளியிழந்ததால் தேவர்களுக்கு அமுத கிரணம் கிடைக்கவில்லை. அவர்கள் வாடி வதங்கினர். சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்து ஒருநாள் தவிர மற்ற நாட்கள் சந்திரன் வளர்ந்து தேய்ந்து கிரணங்களைப் பொழிவான், என்றார். அதனால் தான் அமாவாசையன்று தேவர்கள் உபவாசம் இருப்பது போல, நாமும் உபவாசம் இருப்பது நல்லது. கணபதியின் பேரருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.