தண்ணீர் அகதிகள்
வறட்சி பாளங்களாய்
புரண்டு படுக்கும்
பூமிதாயின் முதுகில் ஊன்றி நிற்கிறது
தண்ணீர் உறிஞ்சும்
முதாலாளித்துவம்
மணலை விற்று
மக்களை விற்று
மழையையும் விற்கும் நாள் எதுவோ?
நீரை உறிஞ்சி பானமாக்கி
கழிவை வெளியேற்றி
நீர்நிலையை அசுத்தபடுத்தி
தண்ணீருக்கு கெஞ்சி
கடல் நீரை குடி நீராக்கி
குவாரி நீரை தூய்மைப்படுத்தி
கழிவு நீரை சுத்தப்படுத்தும் நாள் தான் வருமோ?
மலை தாண்டி, காடு தாண்டி
நீர் தேடி
ஊர் புகும் காட்டு விலங்கு
நீர்நிலை தாண்டி, நிலம் தாண்டி
நீர் தேடி
தெருவில் ஓடுகிறது மனித விலங்கு
மணல் அரித்த ஆற்றுபடுகைகள் மடியில்
நீறற்று கிடக்கிறது ஆற்றின் தடம்
கழிவுநீர் வாய்க்கால்களாய் ஓடுகிறது
ஏரிகளும் கால்வாய்களும்
வறண்டு கிடக்கும் நிலத்தின் கீழ்
அதலபாதாளம் தொடும் நிலத்தடிநீர்
சல்லடையாய் துளைக்கும்
ஆழ்துளை
மின்மோட்டர்களின் வழி
தளும்பி வெளியேறுகிறது பூமித்தாயின் உதிரம்
காவிரி தென்பெண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வைகை பொருநைநதி
என திருமேனி செழித்ததொரு நாடு
இன்று நீரின்றி படும்பாடு.
மழைநீரை சேமிக்க மறந்தோம்
மடுக்களில் நாமே புதைந்து போனோம்
பேராசை எனும் தூண்டிலில்
சிக்கி தவித்தோம்
ஏரிகளையும் குளங்களையும் ஆக்ரமித்தோம்.
தண்ணீரற்று இருக்கும் தேசம்
கண்ணீரில் மிதக்கிறது
இத்
தண்ணீர் விற்கும் தேசமோ
பண மெத்தைகளில் புரள்கிறது.
காசை நீராய் செலவழித்த பழமொழி
வழக்கொழிந்து
நீருக்காய் காசை செலவழிக்கின்றோம்.
நினைவில் கொள்ளுங்கள்
காற்றும் வானும்
இம்மண்ணும்
நீரும்
நமக்கு மட்டும் சொந்தமில்லை!
வருங்கால சந்ததியினருக்கு
துரோகம் இழைக்காமல்
நீராதாரங்களை காத்திடுவோம்
மழைநீர்
கடலோடு கலந்திடாமல்
அதன் தாய்நிலத்தினோடு
சேர்த்திடுவோம்.
ஆற்றுப்படுகைகளை அரிக்கும் மணற்கொள்ளையை எதிர்த்து
ஆற்று நீரை நம்பியிருக்கும்
கால்வாய்களும்
ஏரிகளும், குளங்களும்
நிறைப்போம்.
நீரை சூரையாடும் தொழிற்சாலைகள்
ஒழித்து
பல்லுயிர் வளம் ஓம்புவோம்.
நீரெனும் ஆதாரத்தை ஆதாயமாக்காமல்
நீரின்றி அல்லாடும் இவ்வுலகை
நாளைய உலகிற்காக
மீட்டெடுப்போம்