உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 10- 24 / பாடல்கள் (597 -1240 )
சீறாப்புராணம்
முதலாவது காண்டம் - விலாதத்துக் காண்டம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்
1.10 பாதை போந்த படலம்
597 குரைகட லனைய செல்வக் குறைஷியின் குலத்து நாப்ப
ணரசிளங் குமர ரான வப்துல்லா வரத்தில் வந்த
முருகவி ழலங்கற் றிண்டோண் முகம்மது தமக்குச் சார்ந்த
திருவய திருபத் தைந்து நிறைந்தன சிறக்க வன்றே. 1.10.1
598 பேரறி வெவையுஞ் செம்மை பெருத்தொளிர் வனப்பும் வெற்றி
வீரமுந் திறலு முண்மை விளங்கும்வா சகமுங் கல்விச்
சாரமும் பொறையு மிக்க தருமநற் குணமு மியார்க்கும்
வாரமு முகம்ம தின்பால் வந்தடைந் திருந்த தன்றே. 1.10.2
599 பாரினி லடங்கா விண்ணோர் பன்முறை பெரிதிற் கூண்டு
சீருறை பாத காப்புற் றிருப்பது தெரியக் காணா
ரூரவர் போலுந் தங்கைக் குறுபொரு ளின்மை யெண்ணங்
காருறு கவிகை வள்ளற் கருத்திலங் குருத்த தன்றே. 1.10.3
600 அகலிடத் தடங்கா வெற்றி யப்துல்முத் தலிபு பெற்ற
புகழபித் தாலி பென்னும் புரவலர் தம்மை நோக்கித்
துகளணு வணுகா மேனி சொரிகதி ரெறிப்பத் திண்மை
முகம்மதி னழகு பூத்த வாய்திறந் துரைக்க லுற்றார். 1.10. 4
601 குடித்தனப் பெருமை சேர்ந்த குலத்தினுக் குயர்ந்த மேன்மை
படித்தலம் புகழுஞ் செங்கோற் பார்த்திவ ராத றேய்ந்து
மிடித்தவர் பெரிய ராதன் மிகுபுகழ் கிடைத்தல் கையிற்
பிடித்திடும் பொருள தன்றிப் பிறிதலை யுலகத் தன்றே. 1.10.5
602 ஒருதனி பிறந்து கையி னுறுபொரு ளின்றி யிந்தப்
பெருநிலத் திருந்து வாழ்தல் பேதமை யதனால் வண்மைத்
திருநகர் ஷாமிற் சென்று செய்தொழின் முடித்து வல்லே
வருகுவன் சிறியே னுந்த மனத்தரு ளறியே னென்றார். 1.10.6
603 மகனுரைத் தவையுந் தங்கண் மனைவறு மையையு மெண்ணி
யகநினை யறிவு நீங்கி யாகுலக் கடலின் மூழ்கி
வகையுறத் தேறிச் செவ்வி முகம்மதின் வதன நோக்கி
நகுகதிர் முறுவற் செவ்வாய் திறந்த்பின் னவில லுற்றார். 1.10.7
604 என்னுயிர்த் துணைவ னீன்ற விளங்கதிர்ப் பருதி யேயிந்
நன்னிலத் தரிய பேறே நங்குடி குலத்துக் கெல்லாம்
பொன்னுநன் மணியு மென்னப் பொருந்துநா யகமே தேறா
வொன்னலர்க் கரியே கேளென் னுளத்தினி லுற்ற தன்றே. 1.10.8
605 மன்றலந் துடவை சூழ்ந்த மக்கமா நகரில் வாழ்வோன்
றென்றிசை வடக்கு மேற்குக் கிழக்கெனுந் திக்கு நான்கும்
வென்றிகொள் விறலோன் செம்பொன் விழைதொழி லவருக் கெல்லாங்
குன்றினி லிட்ட தீபங் குவைலிது வென்னும் வேந்தன். 1.10.9
606 இருகரஞ் சேப்பச் செம்பொ னிரவலர்க் கீந்த தாலு
மரியமெய் வருந்த நாளு மருந்தவம் புரிந்த தாலுங்
கருதிய வரத்தி னாலுங் கதிருமிழ்ந் தொழுகும் பைம்பொன்
வரையினின் மணிக்கொம் பென்ன வருமொரு மகவை யீன்றான். 1.10.10
607 தேன்கட லமிர்துந் திக்கிற் றிகழ்வரை யமிர்துஞ் சூழ்ந்த
மீன்கட னடுவிற் றோன்றும் வெண்மதி யமிர்துந் துய்ய
கூன்கட வளையார் வெண்பாற் குரைகட லமிர்துஞ் சோதி
வான்கட லமிர்து மொன்றாய் வடிவெடுத் தனைய பாவை. 1.10.11
608 பைங்கட லுடுத்த பாரிற் பன்மணி வரையிற் றீவிற்
செங்கதிர்க் கனக நாட்டிற் செழுமணி மனைக்கு நாளுந்
தங்கிய சுடரு மொவ்வாத் தனித்தனி யழகு வாய்ந்த
மங்கையர் தனையொப் பென்ன வகுக்கநா வகுத்தி டாதே. 1.10.12
609 குலமெனும் விருக்கந் தோன்றிக் குழூஉக்கிளைப் பணர்விட் டோங்கி
நலனுறு செல்வ மென்னு நறுந்தழை யீன்று வண்ணச்
சிலைநுதற் பவளச் செவ்வா யனையெனுஞ் செம்பொற் பூவிற்
கலனனி நறவஞ் சிந்துங் கனியினுங் கனிந்த பாவை. 1.10.13
610 இனமெனுஞ் சோலை சூழ்ந்த விகுளைய ரெனும்வா விக்குட்
புனையிழை யனைக ரான பொன்னிதழ்க் கமல் நாப்பண்
வனைதரு பதும ராக மணிமடி யிருந்ஹ செவ்வி
யனமென விளங்கித் தோன்று மணியணிப் பாவை யன்னார். 1.10.14
611 குரிசிலென் றுயர்ந்த வெற்றிக் குவைலிதன் பரிதிற் பெற்ற
வரிவைதன் னழகு வெள்ளத் தமுதினை யிருகண் ணாரப்
பருகுதற் கிமையா நாட்டம் படைத்திலோ மெனநா டோறுந்
தெரிவைய ருள்ளத் தெண்ணந் தேற்றினுந் தேறா தன்றே. 1.10.15
612 வானகத் தமர ராலு மானில மக்க ளாலுந்
தானவ யவத்தின் செவ்வி தனையெடுத் தின்ன தின்ன
தானநன் குவமை யென்ன வளவறுத் துரைக்க வொண்ணாத்
தேன்மொழி கதிஜா வென்னுந் திருப்பெயர் தரித்த பாவை. 1.10.16
613 வருகலி வெயிலால் வாடு மானுடப் பயிர்கட் கெல்லாம்
பொருளெனு மாரி சிந்திப் பூவிடத் தினிது நோக்கி
யருமறை மலருட் காய்த்த வறிவெனுங் கனியை யுண்ட
திருநமர் குலச்சஞ் சீவிச் செழுங்கொழுந் தனைய பூவை. 1.10.17
614 வணக்கமு மறிவுஞ் சேர்ந்த மனத்துறும் பொறையு நல்லோ
ரிணக்கமும் வறியோர்க் கீயு மிரக்கமு நிறைந்த கற்புங்
குணக்கலை வல்லோ ராலுங் குறித்தெடுத் தவட்கொப் பாகப்
பணக்கடுப் பாந்தட் பாரிற் பகருதற் கரிய வன்றே. 1.10.18
615 மின்னென வொளிம றாத விளங்கிழை கதிஜா வென்ன
மன்னிய பொருளின் செல்வி மனையகத் தினினா டோறு
மின்னணி நகர மாக்க ளியாவரு மினிது கூறப்
பொன்னனி வாங்கித் தேச வாணிபம் பொருந்தச் செய்வார். 1.10.19
616 கலைத்தடக் கடலே யெந்தங் கண்ணிரு மணியே யாமு
மலைத்தடக் கடற்கட் பாவை யணிமனை யடுத்துச் செம்போ
னிலைத்திட நினைத்து வாங்கி நெறிநெடுந் தூர மெல்லாந்
தொலைத்திவண் புகுவம் வல்ல தொழின்முடித் திடுவ மென்றே. 1.10.20
617 தீனகக் குளந்த டாகந் திசைதொறு நிறைந்து தேக்க
வானதிப் பெருக்கை யொப்ப வருமுகம் மதுவை நோக்கித்
தூநகை முறுவல் வாய்விண் டுரைத்தனர் சொன்ன மாரி
யானென வுதவுஞ் செங்கை யருளெனுங் கடலி னாரே. 1.10.21
618 தரைத்தலம் புகழும் வெற்றித் தடப்புயத் தபித்தா லீபு
முரைத்தவை யனைத்துந் தேர்ந்து முகம்மது முளத்தி னூடு
வருத்தமுஞ் சிறிது நேர மகிழ்ச்சியுந் தொடர்ந்து தோன்றக்
கருத்தினி லிருத்திக் தாதை கழறல்சம் மதித்தி ருந்தார். 1.10. 22
619 குங்குமத் தடந்தோள் வள்ளல் குறித்திடுங் கருத்தி னூடு
செங்கயல் வரிக்கட் செவ்வாய்த் திருந்திழை கதிஜா வென்னு
மங்கைதம் பெயருஞ் சித்ர வடிவுநின் றுலவ மாறாப்
பொங்கறி வதனான் மூடிப் புந்தியின் மறைப்ப தானார். 1.10.23
620 மம்மரை மனத்துள் ளாக்கி முகம்மது கதிஜா வென்னும்
பெய்ம்மலர்க் கொம்பே யன்ன பெண்மனைக் கடையிற் சாரு
மம்மறு கிடத்திற் போக்கும் வரத்தும தாகி வாசச்
செம்மலர்ச் சுவடு தோன்றாத் திருவடி நடத்தல் செய்தார். 1.10.24
621 இப்படி நிகழ்கா லத்தோ ரிளவன்மா மறைக்கு வல்லான்
மைப்படி கவிகை வள்ளல் வனப்பிலக் கணமு நீண்ட
கைப்படு குறியுஞ் சேர்ந்த கதிர்மதி முகமு நோக்கிச்
செப்பிடற் கரிய வோகைத் திருக்கட லாடி னானே. 1.10.25
622 பெரியவன் றூத ராகப் பிறந்தொரு நபிபிற் காலம்
வருகுவர் சரத மென்ன மறையுண ரறிவர் கூடித்
தெரிதர வுரைத்த தெல்லா மிவரெனத் தேறும் வாளா
லிருளறுத் துண்மை யாயுள் ளிருத்தினன் பெருத்த நீரான். 1.10.26
623 கண்டவ னுளத்தி னூடு கண்கொளா வுவகை பொங்கிக்
கொண்டுகொண் டெழுந்து சென்று குவைலிது மனையு ளாகி
வண்டுகண் படுக்குங் கூந்தன் மடமயில் கதிஜா வென்னு
மொண்டொடி திருமுன் முந்தி யொதுக்கிவாய் புதைத்துச் சொல்வான்.
624 குவைலிது தவத்தின் பேறே குரைகடன் மணியே நீண்ட
புவியிடை யமுதே பொன்னே பூவையர்க் கரசே யென்றன்
செவியினிற் பெரியோர் கூறுஞ் செய்தியாற் றேர்ந்து தேர்ந்த
கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான். 1.10.28
625 வன்மன நஸ்றா வென்ன வருபெருங் குலத்திற் றோன்றிப்
பன்முறை மறைக டேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி
நின்மனந் தேறக் கண்ட புதுமையை நினவ றாமற்
சொன்மென மயிலே யன்னார் சொற்றபி னவனுஞ் சொல்வான். 1.10.29
626 முல்லைவெண் ணகையாய் தொன்னாண் முறைமுறை மறைக ளெல்லாம்
வல்லவர் தௌிந்த மாற்ற மக்கமா நகரிற் பின்னா
ளெல்லையில் புதுமை யாயோ ரிளவல்வந் துதித்துப் பாரிற்
பல்லருந் தீனி லாகப் பலன்பெற நடக்கு மென்றும். 1.10.30
627 ஈறிலா னபியாய்த் தோன்று மெழின்முகம் மதுதம் மெய்யின்
மாறிலாக் கதிருண் டாகி மான்மதங் கமழு மென்றுஞ்
சேறிலாங் ககில மீதிற் றிருவடி தோயா தென்றுங்
கூறிலாப் பிடரின் கீழ்பாற் குறித்தலாஞ் சனையுண் டென்றும். 1.10.31
628 வியனுறு புறுக்கா னென்னும் வேதமொன் றிறங்கு மென்றுங்
குயின்மொழிப் பவளச் செவ்வாய்க் கொடியிடைக் கருங்கட் பேடை
மயிலினை யிந்த வூரின் மணமுடித் திடுவ ரென்றும்
நயனுறக் கேட்டே னின்றென் னயனங்கள் குளிரக் கண்டேன். 1.10.32
629 முன்னுணர்ந் தவரைக் கேட்டு முதலவன் மறைக டேர்ந்தும்
நின்னையொப் பவரு மில்லை யாகையா னினது பாலம்
மன்னைவிண் ணப்பஞ் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும்
பொன்னனீ ரென்னப் போற்றிப் புகழ்ந்தன னெகிழ்ந்த நெஞ்சான். 1.10.33
630 கலைவலா னுரைத்த மாற்றங் கேட்டபின் கதிஜா வென்னுஞ்
சிலைநுத றௌியத் தேர்ந்தோர் செவ்வியோன் றன்னைக் கூவி
யலகில்வண் புகழ்சேர் வள்ள லகுமதை யினிதிற் கூட்டித்
தலைவநீ வருக வென்னத் தாழ்ச்சிசெய் தெழுந்து போந்தான். 1.10.34
631 ஏவலென் றுரைத்த மாற்ற மிடையறா தொழுகிச் செய்யுங்
காவல னபித்தா லீபு கடைத்தலை கடந்து சென்று
பாவலம் பிய செந் நாவார் பன்முறை வழுத்தப் போதா
மேவலர்க் கரியே றென்னு முகம்மதை விரைவிற் கண்டான். 1.10.35
632 கண்டுகண் களித்துள் ளஞ்சிக் கரகம லங்கள் கூப்பி
யொண்டொடி கதிஜா வென்னு மோவிய முரைத்த மாற்றம்
விண்டுவிண் ணப்பஞ் செய்தான் விரைகம ழலங்கற் றிண்டோட்
கொண்டறன் செவியு நெஞ்சுங் குறைவறக் குளிர வன்றே. 1.10. 36
633 கூறிய கூற்றைக் கேட்டுக் குறித்துள கரும மின்று
மாறிலா தடைந்த தென்ன முகம்மது மனத்தி லுன்னித்
தேறியங் கெழுந்து போந்தார் தேனினு மதுர மாறா
தூறிய தொண்டைச் செவ்வா யொண்ணுதன் மனையி லன்றே. 1.10.37
634 சித்திர வனப்பு வாய்ந்த செம்மறன் வரவு நோக்கிப்
பத்திரக் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பதும ராக
முத்தணி நிரைத்த பீட முன்றிலிற் காந்தட் கையால்
வைத்திவ ணிருமென் றோத முகம்மது மகிழ்ந்தி ருந்தார். 1.10.38
635 எரிமணித் தவிசின் மேல்வந் திருந்தலக் கணமும் பொற்புந்
திருவுறை முகமு மன்பு திகழ்தரு மகமுங் கண்ணும்
விரிகதிர் பரந்த மெய்யும் விறல்குடி யிருந்த கையு
மருமலர் வேய்ந்த தோளு மணிதிரண் டனைய தாளும். 1.10.39
636 பேரொளி பரப்பிப் பொங்கிப் பெருகிய வழகு வெள்ளச்
சார்பினிற் கதிஜா வென்னுந் தையறன் கரிய வாட்கட்
கூருடைக் கயல்க ளோடிக் குதித்தன குளித்துத் தேக்கி
வாரிச வதனஞ் சேர்ந்து மறுக்கமுற் றிருந்த வன்றே. 1.10.40
637 பார்த்தகண் பறித்து வாங்கப் படாமையா னறவஞ் சிந்தப்
பூத்தகொம் பனைய மெய்யி னாணெனும் போர்வை போர்த்துக்
கூர்த்தவா வௌிப்ப டாமற் கற்பெனும் வேலி கோலிச்
சேர்த்ததம் முளங்கா ணாது திருந்திழை வருந்தி நின்றார். 1.10.41
638 மெய்மொழி மறைக டேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து
மொய்மலர்க் கதிஜா செவ்வி முழுமதி வதன நோக்கிச்
செய்தவப் பலனே யன்ன வள்ளலைத் திரும னைக்கே
எய்துதற் கருள்செய் வீரென் றெடுத்துரை விடுத்துச் சொன்னான். 1.10.42
639 விரும்பிய காம நோயை வௌிவிடா தகத்துள் ளாக்கி
யரும்பிள முறுவற் செவ்வா யணிமல ரிதழை விண்டோ
யிரும்புகழ் தரித்த வெற்றி முகம்மதை யினிதி னோக்கி
வரும்பெருந் தவமே நுந்த மனையிடத் தெழுக லென்றார். 1.10.43
640 காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணா
னோக்கியு நோக்கா தும்போ னொடியினி லெழுந்தம் மாதின்
மாக்கட லனைய கண்ணு மனமும்பின் றொடர்ந்து செல்லக்
கோக்குல வீதி நீந்திக் கொழுமனை யிடத்திற் சார்ந்தார். 1.10.44
641 மடங்கலே றனைய செம்மன் மனையில்வந் திருந்த போழ்தே
படங்கொள்பூ தலத்தி ராசப் பதவியும் பெரிய வாழ்வு
மிடங்கொள்வா னகத்தின் பேறு மௌிதினி னும்பாற் செல்வ
மடங்கலு மடைந்த தின்றென் றறைந்துபண் டிதன கன்றான். 1.10.45
642 தெரிந்துணர்ந் தறிந்தோர் மாற்றஞ் சிறிதெனும் பழுது வாரா
விரிந்தநூ லுரையும் பொய்யா விளங்கொளிர் வடிவ தாக
விருந்தவர் நபியே யாமு மிவர்மனை வியரே யென்னக்
கருந்தடங் கண்ணா ருள்ளக் கருத்தினி லிருத்தல் செய்தார். 1.10.46
643 படியினிற் சசியுஞ் செங்கேழ்ப் பரிதியு நிகரொவ் வாத
வடிவெடுத் தனைய வள்ளன் முகம்மதி னெஞ்ச மென்னுங்
கடிகமழ் வாவி யூடு கருத்தெனும் கமல நாப்பண்
பிடிநடைக் கதிஜா வென்னும் பெடையென முறைந்த தன்றே. 1.10.47
644 தம்மனத் துறைந்த காத றனைவௌிப் படுத்தி டாமற்
செம்மலு மிருந்தார் மற்றைச் சிலபகல் கழிந்த பின்னர்
மும்மதம் பொழியு நால்வாய் முரட்கரி யபித்தா லீபு
விம்மிதப் புயம்பூ ரிப்ப மைந்தனை விளித்துச் சொல்வார். 1.10. 48
645 தெரிதரத் தௌிந்த சிந்தைத் தேமொழி கதிஜா பாலில்
விரைவினிற் சென்று செம்பொன் விளைவுறச் சிறிது கேட்போ
மருளொடு மீந்தா ரென்னி லதற்குறு தொழிலைக் காண்போம்
வரையற விலையென் றோதில் வருகுவம் வருக வென்றார். 1.10.49
646 உரைத்திடுந் தந்தை மாற்றஞ் செவியுற வுவகை பொங்கி
விரைத்தகாக் குழற்க தீஜா மெல்லிழை நினைவு நெஞ்சும்
பொருந்திய வகத்தி னூடு புக்கிடத் திருவாய் விண்டு
கரைத்தனர் நாளைக் காண்போங் கருதிய கரும மென்றே. 1.10.50
647 வேறு
மருக்கொள் பூதரப் புயநபி முகம்மது
மனையிடை மகிழ்கூர
விருக்கு மெல்லையி லெல்லவன் புகுந்திர
விருள்பரந் திடுகாலைக்
கருக்கு மைவிழி துயிறரு பொழுதொரு
கனவுகண் டனர்நூலிற்
சுருக்கு நுண்ணிடைப் பொலன்றொடி திருந்திழை
சுடர்மணி கதிஜாவே. 1.10.51
648 நிறையும் வானக மலர்தரு முடுவின
நிரைவிடுத் தௌிதாகக்
கறையி லாக்கலை முழுமதி மடிமிசை
கவினொடு விளையாட
மறைவி லாதுகண் டணிதுகில் கொடுதனி
மகிழ்வொடு பொதிவாகக்
குறைவி லாதுரத் துடனணைக் கவுமகங்
குளிரவு மிகத்தானே. 1.10.52
649 கண்ட காரண மாதுல னெனவரு
கலைவல னொடுகூற
விண்டு கூர்த்திடப் பார்த்தனன் றௌிந்திவர்
விரைமலர் முகநோக்கி
வண்டு லாம்புய நபியுனை யிதமுற
மணமுடித் திடநாடிக்
கொண்ட தாமிதென் றோதிட வுடலங்
குளிர்ந்திருந் திடுநேரம். 1.10.53
650 மதும மார்த்தெழு புயவபித் தாலிபு
முகம்மது நயினாரும்
விதுவுஞ் சேட்டிளம் பருதியுங் கலந்துடன்
விரைவொடு தெருவூடே
புதுமை யாய்நடந் தணிநில வெறித்திடப்
புனையிழை கதிஜாதஞ்
சுதைகொண் மண்டப மணிக்கடைப் புகுந்தனர்
துணைவழி களிகூர. 1.10.54
651 இருவ ரும்வரக் கண்டன ரெழுந்திருந்
திணைமல ரடிபோற்றிச்
சொரியு மென்கதி ராதனத் திருத்திநந்
தூய்மலர்ப் பதநோவ
வரிதில் வந்ததென் புன்மொழிச் சிறியவ
ரறிவிலர் மனைதேடித்
தெரியக் கூறுமென் றஞ்சிநின் றுரைத்தனர்
தேமொழி கதிஜாவே. 1.10.55
652 இந்த மாநிலத் தொருநிதி யேயென
திருவிழி மணியேகேள்
சுந்த ரப்புய னப்துல்லா வெனதுறு
துணையுயிர்க் குயிரான
மைந்த ரிங்கிவர் மனத்திருள் கெடவொரு
மணமுடித் திடநாடிச்
சிந்தை நேர்ந்திவ ணடைந்தன ருமதுரைத்
திருவுள மறியேனே. 1.10.56
653 சிறிது பொன்னென திடத்தினி லளித்திடிற்
றேசிக ருடன்கூடி
யுறுதி ஷாமினுக் கேகியிங் கடைகுவ
னுமதரு ளுளதாகில்
வறிய வர்க்கொரு மணநிறை வேறிடு
மடமயி லனையாரீ
தறுதி யில்லெனி லதுதுவுநன் றெனவபித்
தாலிபு முரைத்தாரே. 1.10.57
654 நிரைத்த செவ்வரி பரந்தகட் கடைமயி
னிசமென வபித்தாலி
புரைத்த வார்த்தையுந் தம்ம்னக் கருத்தையு
முடன்படுத் திடநோக்கித்
திரைத்த டத்தலர் மரையென முகமலர்
செறிதரத் துயர்கூரும்
வருத்த மின்னினை வின்படி முடிந்தென
மனத்திடைக் களித்தாரே. 1.10.58
655 பூத ரம்பொரு புயத்தபித் தாலிபு
புளகெழு முகநோக்கி
மாத வத்தினென் பொருளுள தெவையுநின்
மனைப்பொரு ளௌியேனு
மாத ரத்துறு மொழிவழி நடப்பதற்
கையுறே லெனப்போற்றிக்
காத லித்துரைத் தார்விரைத் தார்குழற்
கனிமொழி கதிஜாவே. 1.10.59
656 இனிய வாசக மிருதுளைச் செவிபுக
விதயமென் மலர்போத்த
துனிப றந்தன வுவகையும் பிறந்தன
துணைவரைப் புயமீறத்
தனிய னம்வயி னினஞ்சில பெறுபொரு
டருகுவ னெப்போற்றி
வனச மென்மலர் முகமலர்ந் திருந்தனர்
மருவல ரறியேறே. 1.10.60
657 கொடுவ ரிப்பதத் துகிர்முனை யரிந்தன
கோதில்வெண் ணறுவாசத்
தடிசி லும்மறு சுவைப்பொரிக் கறிகளு
மமுதொடு செழுந்தேனும்
வடிந றாவுடைந் தொழுகுமுக் கனியுடன்
மதுரமென் மொழிகூறி
யிடுவி ருந்தளித் தாரிரு வருக்குமோ
ரிளங்கொடி மடமானே. 1.10.61
658 அனம ருந்திய வரசர்க டமைமணி
யாசனத் தினிதேற்றி
நனைத ருந்துவர்க் காயிலை பாளித
நறும்புகை மலர்சாந்தம்
புனையு மென்றுகிற் கஞ்சுகி சிரத்தணி
போல்வன பலவீந்து
சினவு வேல்விழி பொருள்கொடு வருகென
வுரைத்தனர் திருவாயால். 1.10. 62
659 ஆட கங்கொணர் கென்றலும் வான்றொடு
மறையினிற் சிலரோடி
மூடு பெட்டகந் திறந்தனர் கொணர்ந்தனர்
குவித்தனர் முறையாக
நீடி லக்கநூ றயிரத் தொன்பதி
னாயிர நிறைதேர்ந்த
மாடை தானெடுத் தீந்திடக் கொண்டனர்
முகம்மது நயினாரே. 1.10.3
660 கொடுத்த தங்கம லாற்பெரும் ஷாமெனக்
குறித்திடுந் திசைக்கேற்க
வெடுத்த நற்சரக் கொட்டையின் பொதியிரு
நூறொடு திரளாக
விடுத்த கப்பரி வாரத்தி லுரியவர்
விறல்கெழு வயிரவீந்
தொடுத்த நெஞ்சின ரிருபது பெயரையுந்
தொகுத்தனர் மடமானே. 1.10.64
661 வடிவு றுந்திரட் டாள்களு மிருபுறம்
வகிர்தரு மயிர்வாலு
நெடுகிக் கட்டுரத் திறுகிய கண்டமு
நிமிர்ந்தமெய் யுறுகூனு
நடையி லோர்பகற் கொருபதின் காவத
நடந்திடுந் திடத்தாலுங்
கடிய வொட்டையொன் றெழினபிக் களித்தனர்
கரியமை விழிமானார். 1.10.65
662 மல்ல லம்பிய புயமுகம் மதுநபி
மனத்தினின் மகிழ்கூரச்
செல்ல லைந்திடப் பொழிதரு கரமிசைச்
செழுங்கதிர் வடிவேலு
மெல்ல வன்கதிர் மறைதரு குற்றுடை
வாளொடு மினிதீந்தார்
வில்லின் மேற்பிறை தோற்றிய தெனநுதல்
விளங்கிய மடமானே. 1.10.66
663 இவையெ லாநபிக் களித்த பினேவலி
னியலுறு மைசறாவை
நவைய றத்தம தருகினி லிருத்திவெண்
ணகைமலர் முகநோக்கிப்
புவியி னின்னிலு மெனக்குரி யவரிலைப்
பொருளுநின் பொருளேயா
மவய வந்தனைக் காப்பவர் போனபிக்
கடுத்தினி துறைவாயே. 1.10.67
664 ஏகும் பாதையிற் பண்டித னொருவனுண்
டியன்மறை வழிதேர்ந்த
வாக னெம்மினத் தவரிலு முரியவன்
மகிழ்ந்தவ னிடத்தேகி
நீக ருத்துட னெனதுச லாமையு
நிகழ்த்திநள் ளிருட்போது
மோக முற்றியான் கண்டிடுங் கனவினை
மொழியென மொழிவாயே. 1.10.68
665 பாதை யுற்றிடுஞ் செய்தியு மிவர்க்கிடர்
பணித்திவர் தமக்கான
வாதை யுற்றிடு வருத்தமுங் காரணத்
தொகுதியும் வனஞ்சார்ந்த
போதி னிற்பெரும் புதுமையு மிங்கிவர்
பொறுமையு நகர்சேர்ந்து
சூதர் தம்மொடு மிருப்பது மினமெனச்
சூழ்ந்தவர் வரலாறும். 1.10.69
666 இற்றை நாட்டொடுத் தந்நகர்க் கேகியிங்
கிவண்புக வருநாளை
யற்றை நாளைக்குங் கண்டிடுங் காரண
மனைத்தையுந் தொடராக
ஒற்றர் தம்வயி னெழுதியுங் கனுப்பியென்
னுறுவிழி மணிபோலுங்
குற்ற மில்லதோர் நபியுடன் வருகென
வுரைத்தனர் குலமாதே. 1.10.70
667 இத்தி றத்துரை பகர்ந்தன ரழகொளி
ரிளமயின் முகநோக்கி
மத்த கக்கட கரிமுகம் மதினெழின்
மலரடி யிணைபோற்றி
யுத்த ரப்படிப் பணிகுவ னவரையென்
னுயிரினு மிகக்காத்து
முத்தி ரைப்படி வருகுவன் காணென
மொழிந்தடி பணிந்தானே. 1.10.71
668 முருகு லாங்குழன் மயிலபித் தாலிபு
முழுமதி முகநோக்கி
யரசர் நாயக நின்மனைக் கெழுகென
வுரைத்தலு மவர்போந்தார்
பரிச னங்களும் வணிகருஞ் சூழ்தரப்
பாதமென் மலர்பாரிற்
றெரித ராமுகம் மதுநபி யாத்திரைத்
திரளொடு மெழுந்தாரே. 1.10. 72
669 கூன்றொ றுத்தொறும் பொதியெடுத் தேற்றிய
குழுவிடை நயினாரு
மேன்ற தம்மிரு கரத்தினும் பொதியிரண்
டெடுத்தெடுத் தினிதேற்றிச்
சான்ற பேர்கட மனத்ததி சயமுறத்
தையறன் மனைநீங்கித்
தோன்ற றோன்றின ரணிமணி மறுகிடைச்
சுடர்விடு மதியேபோல். 1.10.73
670 அருந்த வத்தபூ பக்கருஞ் சுபைறுட
னாரிது மப்பாசுந்
திருந்தி லாமனத் தபுஜகி லொடுங்கலை
தெரிதரு மசைறாவும்
பொருந்தக் கூடிய மாக்களி மிடபமும்
புரவியுந் துகளார்ப்ப
வருந்தி லாப்பெரு வாழ்வுகொண் டுறைதரும்
வளநகர்ப் புறத்தானார். 1.10.74
671 ஊறு நீர்த்தடக் கரைகளுங் குட்டமு
மோடையு மலர்க்காடுந்
தேற றூற்றிய சோலையு மரம்பையின்
றிரளிடைப் பழக்காடுங்
கூறு கூறுகொண் டிடுகிடங் கிடைச்சிறு
கொடியிலைக் கொடிக்காலுஞ்
சாறு கொண்டெழு மாலையுங் கன்னலஞ்
சாலையுங் கடந்தாரே. 1.10.75
672 கடந்து காவத நடந்தொரு பொழிலிடை
காளைக ளனைவோரு
மிடம்பெ றத்திரண் டிறங்கியங் குறைந்தன
ரிட்பொழு தினைப்போக்கி
விடிந்த காலையின் முன்னிலை யெவரென
விளம்பின ரவரோடு
மடைந்த பேர்களின் முகம்மது முதலென
அபூபக்க ரறைந்தாரே. 1.10.76
673 முகம்ம தென்றுரை கேட்டலு மபுஜகில்
மனத்திடை தடுமாறி
மிகமு னிந்தன னிவர்தமை முன்னிலை
விலக்குவ துனக்காகா
திகழெ னப்பலர் கூறவுங் கேட்டில
னிதற்குமுன் னிலையானென்
றகம கிழ்ந்திட நடந்தனன் கெடுமதி
யடைவது மறியானே. 1.10.77
674 ஒட்டை மீதினில் வருன்பொழு தவ்வழி
யோரிடத் திடையூறாய்க்
கட்டை தட்டிட வொட்டையுஞ் சாய்ந்தொரு
கவிழொடு தலைகீழாய்
முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும்
முழுப்பெருக் கெனச்சோரி
கொட்டி னானெழுந் தானபு ஜகிலெனுங்
கொலைமனக் கொடியோனே. 1.10.78
675 உதிரங்கொப் பளித்து முகமழிந் துடைந்தான்
முகம்மதை யுறுதிகே டாக
நிதமுரைத் ததனா லபுஜகி லினமு
நிலைகுலைந் திடுவது நிசமென்
றதிர்தர வுரைத்துப் பல்லருங் கூண்டிவ்
வாற்றிடை முன்னிலை யானோன்
மதுரமென் மொழியா னுத்பா வலது
மறுத்தெவ ருளரெனத் தேர்ந்தார். 1.10.79
676 கூறுமென் மொழியா னுத்பா வென்னுங்
குரிசில்பி னியாவரு நடந்து
தூறடை நெறியுஞ் சிறுபரற் றிடருந்
தொலத்திடுங் காலையி லாங்கோர்
யாறிடை வீழ்ந்தான் முன்னிலை யிளவ
லனைவரும் பயந்திட வன்றே. 1.10.80
677 நிலமிசை கலங்கி யுத்துபா வீழ
நெடுங்கழுத் தலைவரி வேங்கை
யலைபடப் பிடித்தங் கடவியி னடைய
வருக்கனுங் குடபுலத் தடைந்தான்
செலநெறி தெரியுந் தெரிகிலா தென்னத்
திசைதிசை நிறைந்தது திமிரம்
பலபல வருக்கச் சரக்கெலா மிறக்கிப்
படுபரற் பாதையி லுறைந்தார். 1.10.81
678 ஆய்ந்தபே ரறிவர் பசிக்கிடர் தவிர்த்தங்
கவரவர் சார்பினிற் சார்ந்தார்
வாய்த்தபே ரெழிலார் முகம்மதுந் துயின்றார்
மாகமட் டெண்டிசை கவிய
வேய்ந்தவல் லிருளி லடிக்கடி வெருவி
விடுதியி னடுவுறைந் தவணிற்
சாய்ந்திடா திருகண் டூங்கிடா திருந்தான்
றருக்கினால் வெருக்கொளு மனத்தான். 1.10.82
679 அலரிவெண் டிரைமே லெழுந்தனன் கீழ்பா
லனைவரு மெழுகவென் றெழுந்தார்
நிலைதளர்ந் திருந்த வுத்துபா வென்போ
னெறியின்முன் னிலைநடப் பதற்கோர்
தலைவரை வேறு நிறுத்துமென் றுரைத்த
தன்மைகேட் டனைவரும் பொருந்தி
யிலைமலி வேலா னாசெனுங் குரிசின்
முன்னிலை யெனவெடுத் திசைத்தார். 1.10.83