நாகரீகம், அநாகரீகம்
இன்றைய சமுதாயத்தில் பல வன்முறை சம்பவங்களும் பெண்களை இழிவுபடுத்தி (ஈவ் டீசிங்) கேலி செய்வதும் பல தீயவை நிறைந்து காணப்படுவதன் காரணம் பெற்றோர்கள்தான், குழந்தைகள் எங்கே பிறந்தாலும் அவை குழந்தைகளாகத்தான் பிறக்கின்றது, அதன் முதல் பழக்கவழக்கம் பெற்ற தாயிடமிருந்து ஆரம்பித்து தகப்பன், சுற்றுபுறம் என்று அதன் வட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது, பெற்ற தாய்க்கு குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதற்கு போதிய வருவாய் தேவைப்படும் போது அதனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு குழந்தையின் தகப்பனைச் சார்ந்திருக்கிறது, என்னதான் தாய் வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து வருபவராக இருந்தாலும் 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்பது நமது சமுதாயத்தில் தொண்டு தொற்று வருகின்ற வழக்கமாக இருக்கின்ற சூழல்தான் மிகுந்து காணப்படுகிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மிகுந்திருக்கும் நமது நாட்டில் பெண்களும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை வழி நடத்தி செல்லமுடியும் என்கின்ற நிலை இருப்பதால் குழந்தை பெற்ற சில மாதங்களிலேயே பெண்கள் வேலைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் குழந்தை வளர்ப்பில் போதிய கவனம் செலுத்தும் வாய்புகள் குறைந்து விடுகிறது. எந்த மட்டத்தைச் சேர்ந்த குழந்தையாக இருந்தாலும் அதனை சகலவித ஒழுக்கத்தையும் குழந்தை முதலே கற்று கொடுத்து வளர்க்கத் தவறினால் சமுதாயத்தில் மிக மோசமான, சுமுதாய விரோதிகளை உருவாக்கும் நிலைதானாகவே ஏற்ப்பட்டுவிடுகிறது.
பல வீடுகளில் குழந்தைகள் வளர்ப்பு என்பதை கையாளும் விதங்களே முறைதவறி காணப்படுவதும் சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாகிறது, இதற்க்கு ஒரு சில உதாரணங்களை சொல்லலாம், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் பெற்றோர் அல்லது கணவரின் பெற்றோரிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வதும் உண்டு, அப்படிப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியில் நிச்சயம் பிடிவாதம் தான்தோன்றித் தனம் மிகுதியாக வளருவதற்கான இடம் அதிகமாகிவிடுவதற்க்கு காரணம் பாட்டி தாத்தா என்பவர்கள் தங்கள் பேரக்குழந்தைகள் தவறு செய்யும்போது எடுத்துச் சொல்லி அல்லது கண்டிப்புடன் வளர்ப்பதில்லை. அதே தாத்தா பாட்டி தங்களது பிள்ளைகளை கண்டிப்புடனும் தவறு செய்த போது திருத்தியும் வளர்த்திருக்ககூடும் ஆனால் தங்களது பேரக்குழந்தைகளை நன்றாக கவனிப்பதாக நினைத்து அதிக செல்லம் கொடுத்து கெடுத்துவிடுவது வாடிக்கை.
இன்னும் சில வீடுகளில் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் குழந்தைகளிடம் அளவிற்கு அதிகமாகவே செல்லம் கொடுப்பதும் அதனால் அடுத்தவர் கண்டிக்கும்போது இடையே புகுந்து குழந்தையை திருத்த விடாமல் பாழடிப்பதும் சர்வசாதாரணமாக நடந்து வருகின்ற நிலை, இதனால் குழந்தைக்கு தவறு செய்யும்போது அது தவறென்று அறிந்தாலும் பெற்றோருக்குத் தெரிந்தாலும் தனக்கு ஒன்றும் பிரச்சினை ஏற்ப்படாது ஏனென்றால் இருவரில் ஒருவர் தனது தவற்றை ஆதரிக்க வீட்டில் இருக்கிறார் என்ற மனத்துணிவு ஏற்பட்டு தவறுகள் செய்வதை அதிகரித்துக் கொண்டே செல்வதும் ஓரளவு வயது முதிர்ச்சி ஏற்ப்ப்படும்போது திருட்டுத்தனமாக தவறுகளை செய்வதற்கு மனத்துணிவு ஏற்ப்பட காரணமாகி விடுகிறது.
அடியாத மாடு படியாது என்பதற்காக மாட்டை எப்போதும் எதற்கெடுத்தாலும் அடித்துக் கொல்வது எத்தனை முட்டாள்தனமோ அது போல குழந்தையையும் அடித்து திருத்த வேண்டிய சமயத்தில் அடிக்கவில்லை என்றால் அக்குழந்தையே வளர்ந்த பின் தன்னை யாரும் கண்டித்து தவறு செய்த போது திருத்தவில்லை அதனால்தான் வாழ்க்கை சீரழிய காரணம் என்று சொல்வதையும் நாம் ஏராளமாக பார்க்க முடிகிறது. பெற்றோர்கள் பலருக்கு குழந்தைகளை எதற்ககெல்லாம் கண்டிக்க வேண்டும் எப்படி திருத்த வேண்டும் என்பதே தெரியாமல் வளர்ந்து திருமணமும் ஆகி குழந்தைகளை பெற்றுக் கொள்வதும் வாழையடி வாழையாகி விடுவதும் மிகவும் துரதிஷ்டவசமானது.
மேலைநாடுகளில் குழந்தை கருவிலிருக்கும்போதும், மற்றும் குழந்தை பிறந்தவுடன் அதை எப்படி பராமரிப்பது எந்த வயதில் எதை உண்பதற்க்கு, குடிப்பதற்கு, உடுத்துவதற்கு கொடுப்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்வதற்கு புத்தகங்களை வாங்கி கட்டாயம் படித்து அறிந்துகொள்வதுடன் குழந்தை எந்த பருவத்தில் என்ன செய்யும் அப்போது பெற்றோர் அதனை எப்படி சமாளிக்க அல்லது உதவ வேண்டும் என்பது போன்ற விவரங்களை அறிந்துக்கொள்வதற்கும் பல புத்தகங்களை வாங்கி படித்து அதன்படி குழந்தைகளை வளர்க்கின்றனர். தேவைப்படும்போது குழந்தை மருத்துவரின் ஆலோசனையை பெற்று மனநல மருத்துவரிடம் கொண்டுச் சென்று நன்னடத்தைகளை கற்றுக்கொடுக்கவும் செய்வதால் அந்த குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்த பின்னர் தன்சொந்த வேலைகளை தானே செய்துகொள்வதற்கும் குழந்தை முதலே பயிற்சி அளிக்கப்படுவதால் அந்த குழந்தை தனியே வாழ்வதற்கு தயராக்கப்பட்டுவிடுகிறது.
குழந்தை தன் விருப்பப்படி செய்வதற்கு அவர்கள் குழந்தைகளை அனுமதித்தாலும் தவறுகளை திருத்துவதையும் தங்கள் முக்கிய கடமையாக கருதுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வாழ்க்கை என்பது சிரமமாகவோ அல்லது மற்றவரை சார்ந்தோ வாழும் அவசியமற்று விடுவதை நம்மால் காண முடியும். அதன் பிறகு நல்லவனாக வாழ்வதையோ தீயவனாக மாறுவதையோ அவனாகவே முன்வந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடுகிறது. எல்லா நாடுகளிலும் தீயவர்கள் உண்டு, நல்லவர்களும் உண்டு, ஒரு மனிதன் எங்கு பிறந்தாலும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ளும் முன் யோசனை, எதிர்க்கும் திறன் எல்லாம் இயற்கையிலேயே கிடைத்துவிடுகிறது. தான் செய்வது சரியா தவறா என்பதை அறியாத மனிதன் இருக்க முடியாது. பெற்றோர்கள்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என்பதை மறக்க கூடாது, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்,
நல்ல படிப்பு நல்ல உடை நல்ல வீடு நல்ல பண வசதி என்று எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பெற்றோருக்கு தன் பிள்ளைகளை நல்ல குடிமகனாக, நாட்டின் ஒழுக்கமான பிரஜையாக வளர்க்கவும் தெரிந்திருப்பது அவசியம். நாகரீகம் என்பது ஆடையிலும் நாம் உபயோகிக்கும் நவீன பொருட்களிலும் என்று நினைப்பது முட்டாள்தனம், நாகரீகம் என்பது ஒழுக்கத்தை குறிக்கும் அளவுகோல் என்பதை எத்தனை பேர் அறிந்து நடக்கிறோம்?
வீதியில் நடக்கும் போது, இரண்டு மூன்று சக்கர வாகனங்களில் செல்லும்போது, பேருந்தில் தொடர்வண்டியில் பயணிக்கும் போது எச்சிலை மற்றவர்கள் மீது விழுவது போல் துப்புவது நாகரீகமில்லை, சாலையில் நடக்கும்போது அடுத்தவர் மீது மோதிவிட்டு கண்டும் காணாமல் நடப்பது நாகரீகமில்லை, குடையினால் அடுத்தவரின் கண்களை குருடாக்குவது நாகரீகமில்லை, வீதியில் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர்கழிப்பது, மலம் கழிப்பது நாகரீகமில்லை, வீட்டிலிருக்கும் கழிவுகளை வீதியில் எறிவது நாகரீகமில்லை, அடுத்தவர் கைபேசியில் பேசுவதை கவனிப்பது நாகரீகமில்லை, பேருந்திலோ தொடர்வண்டியிலோ பயணிக்கும்போதும் மற்ற இடங்களிலும் அடுத்தவரின் மீது உராய்வது நாகரீகமில்லை, அடுத்தவர் மீது நம் மூச்சுக்காற்றை அல்லது சிகரெட் புகையை விடுவது நாகரீகமில்லை, அடுத்தவரின் பொருளுக்கு நாம் ஆசை படுவது நாகரீகமில்லை.
நாகரீகம் என்பது உடுத்தும் உடையிலும் உபயோகிக்கும் பொருட்களிலும் என்று நினைத்துக்கொண்டு நம்மை நாமே மெச்சிக்கொள்வதைவிட அடிமுட்டாள்தனம் வேறெதுவும் இல்லை. கல்வி என்பது சம்பாதித்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் மூலதனமாக மட்டுமே தற்காலத்தில் எண்ணப்படுவதால் படித்தவர்கள் எல்லோரும் பண்பும் நல் ஒழுக்கமும் உடையவர்களாக இருப்பதில்லை, பழைய காலத்தில் படித்தவர் என்றால் ஒழுக்கமுடையவர், நற்பண்புகளை பின்பற்றுபவர், பொது அறிவுடையவர் என்றெல்லாம் மக்கள் நினைத்து அவர்களின் மீதும் படிப்பின் மீதும் பெரும் மதிப்புவைத்திருந்த காலம் அடியோடு தலைகீழாய் மாறி இன்றைய நிலையில் படித்தவர் என்பவர் பணம் காய்க்கும் மரங்களாகவும் பல அட்டுழியங்களுக்கு வழிகளை கண்டுபிடிப்பதற்கு தங்களது படிப்பறிவை உபயோகித்து 'படித்தவர்கள்' என்ற நற்ப்பெயரெல்லாம் இல்லாமல் அழிக்கப்பட்டு போனதற்கு காரணம் மனிதர்களுக்கு பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வதிலும் அளவிற்கதிகமாக சொத்துக்களை எந்த வழியிலாவது சேர்த்து விடவேண்டும் என்பது மட்டுமே இலக்காகிவிட்டது, இதனால் கடவுளைக்கூட பொருளாதாரத்தில் உயர்த்திவிட்டனர், கோவில்களில் கடவுள் கூட பொன்னிலும் வைரத்திலும் அலங்கரிக்கப்படுவதும் கோவில் நகை உண்டியல் கொள்ளையடிக்கப்படுவதும் கடவுளின் பெயரைச் சொல்லி பல ஏமாற்றுக்காரர்களின் வரவுகளும் மனிதர்களின் ஒழுக்கம் என்பது அழிந்துபோய், வாழ்க்கை என்றாலே பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே நிர்ணயித்துக் கொள்வது என்ற இழிநிலைக்கு தள்ளப்பட்டு வருவதே ஒழுக்கம் சீரழிவதற்க்கான மிகப்பெரிய சான்று.