சவரக் கத்தியையும் கண்ணாடியையும் எடுத்து வைத்துக் கொண்டு தயாரானான். கண்ணாடியில் தன்னை இப்படியும் அப்படியும் பார்த்துக்கொண்டவன், அடுத்த விநாடி கொஞ்சம்கூட யோசிக்காமல், சரக்கென தன் காதை முழுமையாக அறுத்து எடுத்தான். ரத்தம் பீய்ச்சியடிக்க, ஒரு
துண்டு எடுத்து, காதைச் சுற்றித் தலையில் அழுத்தமாகக் கட்டிக்கொண்டான். அறுந்து கிடந்த காதை எடுத்து, நீரில் கழுவினான். பின்பு, அதை ஒரு தாளில் அழகாக மடித்து எடுத்துக்கொண்டான். அவசர அவசரமாக, ரக்கேல் என்னும் அழகான இளம்பெண் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினான். வெளியே வந்தவளிடம், ‘‘இந்தா, உனக்காக என் காதல் பரிசு!’’ என நீட்டினான். வாங்கிப் பிரித்தவள், ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்த காதைப் பார்த்ததும் அதிர்ச்சியைடந்து மயக்கமானாள்.
‘உன் காதுகள் அழகாக இருக்கிறது’ என்று அடிக்கடி அவள் சொன்னதற்காகவே,தன் காதை அறுத்துக் கொண்ட அந்தக் காதலனின் பெயர் வின்சென்ட் வான்கா.
சுரங்கத் தொழிலாளிகளுக்கு மதப்பிரசாரம் செய்து நம்பிக்கை ஊட்டுவது பெரும்தொண்டு என்று வந்தான் வான்கா. விஷப்புகையில், வெளிச்சம் இல்லாத சுரங்கத்துள் நிமிரக்கூட முடியாமல் வேலை செய்யும் தொழிலாளர்கள் ரொட்டியும், புளித்துப் போன வெண்ணையும் உண்டு நோயாளிகளாகத் திரியும் கொடுமையைக் கண்டு கொதித்தான். தன்னுடைய பிரசங்கத்தால் அவர்களுக்கு எவ்வித விடிவும் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்தும், மதப்பணியைத்
தூக்கி எறிந்தான்.
வேலையும் இல்லாமல், கையில் காசும் இல்லாமல் அங்கிருந்த கரிக்கட்டைகளால் கண்டைதயும் கிறுக்கத் தொடங்கியபோதுதான், தனக்குள் ஓர் ஓவியன் இருப்பதை உணர்ந்தான் வான்கா. தன் சந்தோஷம், எதிர்காலம் எல்லாம் இனி ஓவியத்தில்தான் இருக்கிறது என்று இரவும் பகலும் வரையத் தொடங்கினான்.
ஆனால் பணம்? வழக்கம்போல் தம்பிக்கு கடிதம் எழுதினான்...
‘‘எனக்கு ஓவியங்கள் வரையப் பிடித்திருக்கிறது, தியோ! முடிந்தால், பாரீஸில் இருக்கும் நல்ல ஓவியர்களின் படங்களுடன் பணமும் அனுப்பு. சிரமமாக இருந்தால் சொல்... நான் மீண்டும் மதப்பிரசாரம் செய்யவோ, ஓவியக் கடை விற்பனையாளரகவோ மாறிவிடுகிறேன்!’’
உடேன பணத்துடன், சில ஓவியங்களையும் வரைபொருட்களையும் வாங்கி அனுப்பினான் தம்பி தியோ. கூடேவ, ‘‘வான்கா, நான் நிறையச் சம்பாதிக்கிறேன். ஆனால், உன்னைப் போல் என்னால் எதிலும் தீவிரமாக இருக்க முடிந்ததில்லை. இந்தச் சமூகமும் குடும்பமும் அப்படி இருக்கவும் விடாது. ஆனால், உனக்குப் பிடித்ததை செய். எதிலும் தீவிரமாக இரு!’’ என்று ஒரு கடிதமும்
எழுதியிருந்தான்.
அந்தக் கடிதம்தான் வான்கவை ஒரு முழுநேர ஓவியனாக மாற்றியது. நரம்புகள்
பலவீனமாகும்வரை வெறியுடன் வரையவைத்தது. ஆனால், அவனது ஓவியங்கள் யாராலும் கொஞ்சம்கூட மதிக்கப்படவில்லை. என்றாலும், வான்கா சற்றும் சலைக்காமல் மேலும் மேலும் தீவிரமாக வரைந்ததற்குக் காரணம், தம்பி தியோவின் கடிதத்தில் இருந்த வைர வரிகள்தான்!
27 வயதில் வரையத் தொடங்கிய வான்கா, 37-வது வயது முடியும் முன்பே, மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனையில் இருந்தபோது, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான்
தன் வாழ்நாளில் ஒரு ஓவியம்கூட விற்க முடியாத வான்காவின் ஓவியங்கள், இன்று கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றன. வான்காவின் ஓவிய வெற்றிக்குப் பின்னால் மட்டுமல்ல, சாதனையாளர் ஒவ்வொருவரது வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருப்பதும், ‘எதிலும் தீவிரமாக இரு’ எனும் மந்திரச் சொல்தான்!