Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல் (Read 2157 times)
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்
«
on:
November 02, 2011, 04:57:10 AM »
(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1)
உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?
"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?"
பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானி ஒரு இந்தியரிடம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இப்படிக் கேட்டார். இங்கிலாந்தில் தற்செயலாகச் சந்தித்த அந்த இந்தியரிடம் ஏதோ ஒரு வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்ட பால் ப்ரண்டன் அவரிடம் பேச்சுக் கொடுக்க பேச்சு இந்தியா பக்கமும், இந்தியாவின் யோகிகளைப் பற்றியும் திரும்பியது. இந்திய யோகிகளிடம் இருந்த மகா சக்திகளைக் கேட்டு பிரமித்த பால் ப்ரண்டன் அப்போது தான் இந்தக் கேள்வியை ஆவலுடன் கேட்டார்.
"இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஏனென்றால் யோகிகளாகத் தெரிபவர்களில் பலர் போலிகளாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. மலிந்திருக்கும் போலிகளின் கூட்டத்தின் மத்தியில் உண்மையான யோகிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. உண்மையான யோகிகள் எத்தனை சக்திகள் பெற்றிருந்தாலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவற்றை உபயோகிப்பதில்லை. பணமும், புகழும் அவர்களுக்கு பொருட்டல்லாததால் அவர்கள் மற்றவர்களைக் கவர எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அவர்களுக்கு ஆத்ம ஞானமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் யோக சக்தியை முறைப்படியான பயிற்சியில் அடைந்த யோகிகளல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பல அபூர்வ சக்திகள் இருந்தாலும் உண்மையான யோகிகள் என்று கூறிவிட முடியாது....." என்றார் அந்த இந்தியர்.
அந்த இந்தியர், இந்தியாவின் யோகிகளைப் பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு ஆவல் அதிகமான பால் ப்ரண்டன் அப்படிப்பட்ட உண்மையான ஒரு யோகியையாவது சந்தித்து விட வேண்டும் என்று பேராவலுடன் உடனே இந்தியாவுக்கு வந்தார்.இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில்.அந்த இந்தியர் சொன்னது போல் பல அபூர்வமான சக்தி படைத்தவர்களை பால் ப்ரண்டன் இந்தியாவில் சந்தித்தார். அவர் தனது இந்திய ஆன்மீகப் பயண அனுபவங்களை இரகசிய இந்தியாவில் ஒரு தேடல் (A search in secret India) என்ற நூலில் 1934 ஆம் ஆண்டில் சுவைபட எழுதியுள்ளார். அவரது இந்திய அனுபவங்களில் சுவாரசியமான சிலவற்றை இங்கே பார்ப்போமா?
உண்மையான யோகியைத் தேடி பம்பாயில் வந்திறங்கிய பால் ப்ரண்டன் முதலில் கண்ட அபூர்வ சக்தி மனிதர் இந்தியரல்ல. எகிப்தைச் சேர்ந்த ஒரு மேஜிக் நிபுணர். பால் ப்ரண்டன் தங்கியிருந்த ஓட்டலிலேயே தங்கி இருந்தார் அவர். அவர் சக்திகளைப் பற்றி ஓட்டலில் பலரும் உயர்வாகச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அவரைச் சந்தித்தார். அந்த எகிப்தியர் பால் ப்ரண்டனிடம் சொன்னார். "ஒரு வெள்ளைத் தாளில் உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை பென்சிலால் எழுதிக் கொள்ளுங்கள்"
பால் ப்ரண்டன் அப்படியே ஒரு கேள்வியை ஒரு வெள்ளைத்தாளில் எழுதினார்.
"அந்தத் தாளை நான்காக மடியுங்கள்....". பால் ப்ரண்டன் மடித்தார். மேலும் நான்கு நான்காய் முடிகிற வரை மடித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே முடிகிற வரை மடித்தார். கடைசியில் அந்தத் தாளையும், பென்சிலையும் சேர்ந்தாற்போல கெட்டியாக வலது கையில் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். அப்படியே செய்தார் பால் ப்ரண்டன்.
பின் சிறிது நேரம் அந்த எகிப்திய மேஜிக் நிபுணர் கண்களை மூடிக்கொண்டு ஒருவித தியான நிலைக்குச் சென்றார். சில நிமிடங்கள் கழிந்து கண்களைத் திறந்த அவர் "நீங்கள் அந்தத் தாளில் எழுதிய கேள்வி இது தானே?" என்று கேட்டு அவர் எழுதிய கேள்வியை அப்படியே சொன்னார். பால் ப்ரண்டன் திகைத்துப் போனார்.
அந்த மேஜிக் நிபுணர் அந்தத் தாளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அதைப் பிரித்துப் பார்த்தார். அந்தக் கேள்வியின் கீழ் அதற்கான பதில் பென்சிலில் எழுதியிருந்தது. பால் ப்ரண்டனிற்கு பிரமிப்பாக இருந்தது. இது என்ன கண்கட்டு வித்தையோ என்று நினைத்த அவரை மேலும் சில கேள்விகள் எழுதிக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். பால் ப்ரண்டன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், பெயர்கள், தேதிகள் குறித்து மிகவும் கடினமான கேள்விகளாகத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டார். அந்தத் தாளையும் மடித்து முன்பை விட இறுக்கமாக பென்சிலோடு பிடித்துக் கொண்டார். ஆனால் அவை எல்லாவற்றையும் அந்த எகிப்தியர் சொன்னதோடு அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்த போது அந்தக் கேள்விகளின் கீழே பென்சிலால் சரியான பதில்கள் எழுதப்பட்டிருந்தன.
பிரிக்க முடியாதபடி தன் கையிலேயே மிக இறுக்கமாக மடித்துப் பிடித்து வைத்துக் கொண்ட தாளில் உள்ள கேள்விகள் அந்த எகிப்தியரால் எப்படி அறியப்பட்டன என்பதும் எந்த விதத்திலும் தன் வாழ்க்கையில் நெருங்கியவர்கள் கூட அறிந்திராத அந்தப் பதில்கள் எப்படி அறியப்பட்டன என்பதும் பென்சிலை மடித்து வைத்திருந்த தாளுடன் இறுக்கிப் பிடித்திருந்த போதும் அந்த பென்சிலால் அந்தப் பதில்கள் அந்தத் தாளில் எப்படி எழுதப்பட முடியும் என்பதும் பால் ப்ரண்டனுக்குப் புரியாத புதிராக இருந்தது.
வியப்பின் எல்லைக்கே போன பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்ட போது அந்த எகிப்தியர் அந்த இரகசியத்தைச் சொல்ல மறுத்து விட்டார். பால் ப்ரண்டன் வற்புறுத்திய போது "இந்த இரகசிய வித்தையை வெறும் ஆர்வமுடையவர்களுக்கு சொல்லித் தர முடியாது. நீங்கள் என் உதவியாளராக மாறி என்னுடனேயே வருவதாக இருந்தால் மட்டுமே நான் உங்களுக்கு இந்த இரகசிய வித்தையைக் கற்றுத் தர முடியும்." என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.
பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்திலிருந்து தான் இந்தியா வந்த உண்மையான காரணத்தை அந்த எகிப்தியரிடம் சொல்லிப் பின் வாங்கினார்.
தன் தேடலில் அவர் கண்ட இன்னொரு சுவாரசியமான நபர் சென்னைக்கு அருகே இருந்த ஒரு ஹத யோகி. அவரது அபூர்வ சக்திகள் பற்றி அடுத்த பதிவில் காண்போமா?
(தொடரும்)
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்
«
Reply #1 on:
November 06, 2011, 10:52:01 PM »
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-2
ஏழு நிமிடங்கள் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!
ஒருவனுக்கு எதில் ஆழ்ந்த ஆர்வம் உண்டோ, எதில் அதிகத் தேடல் உண்டோ அதற்குத் தகுந்த மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையில் அவன் காண்கிறான். பால் ப்ரண்டன் அமானுஷ்ய சக்தி படைத்தவர்களையும், அவர்களில் உண்மையான ஒரு யோகியையும் கண்டுவிட வேண்டும் என்றும் கடல் கடந்து இந்தியாவுக்கு வந்தது வீண் போகவில்லை. பல அற்புத மனிதர்களைக் கண்டார்.
அவர்களில் ஒருவர் ப்ரம்மா என்ற இளைஞர். சென்னைக்கு அருகே அவரைச் சந்தித்தவுடன் ஏதோ ஒரு விசேஷ சக்தி அவரிடம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பால் ப்ரண்டன் அவரிடம் வலிய சென்று பேசினார். ஆரம்பத்தில் ப்ரம்மா அவர் வந்து பேசியதை அவ்வளவாக விரும்பவில்லை. ஹத யோகியான ப்ரம்மா அவரை ஒரு இடைஞ்சலாகவே நினைத்தார். ஆனால் பால் ப்ரண்டனுடைய உண்மையான ஆர்வத்தையும், அவர் இந்தியா வந்த காரணத்தையும் அறிந்த பின் ப்ரம்மா அவரிடம் யோகாவைப் பற்றிப் பேசினார்.
பால் ப்ரண்டன் அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்பினார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதில் என்ன நஷ்டம்?"
ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...."
பால் ப்ரண்டனுக்கு ப்ரம்மா சொன்னது வித்தியாசமாக தெரிந்தாலும் உண்மை என்றே தோன்றியது. (இன்று தகுதியில்லாதவர்கள் பெற்ற விஞ்ஞான ஞானம் எத்தனை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதைப் பார்க்கும் போது நம் முன்னோர்களின் சிந்தனை சரியென்றே நமக்கும் தோன்றுகின்றன அல்லவா). தன்னுடைய ஆர்வம் வெறும் பொழுது போகாதவனின் தற்காலிக ஆர்வம் அல்ல என்று மீண்டும் வலியுறுத்தினார் பால் ப்ரண்டன். ப்ரம்மா அவருடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்குப் பல யோக நுணுக்கங்களை விவரித்தார். முக்கியமாக ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி இந்தியர்களின் யோகா முறையில் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அது ஏன் என்பதையும் விளக்கினார். ".... இயற்கை மனிதனுக்கு ஒரு நாளுக்கு 21600 மூச்சுகளை அளந்து தந்திருக்கிறது. அதை அவசரமாகவும், தவறான முறையுடனும் பயன்படுத்துகிறவன் அந்த அளவையும் கடந்து மூச்சுக்களை உபயோகித்து தன் ஆரோக்கியத்தையும், வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான். ஆனால் நிதானமாக, ஆழமாக, தாளலயத்துடன் மூச்சு விடும் மனிதன் அந்த மூச்சால் ஆரோக்கியத்தை வளப்படுத்திக் கொள்வதோடு வாழ்நாளையும் அதிகப்படுத்திக் கொள்கிறான்"
பின் ஒரு நாள் ப்ரம்மா பால் ப்ரண்டனுக்குத் தான் கற்றிருந்த வித்தைகளைக் காண்பிக்க ஒப்புக் கொண்டார். ப்ரம்மா பால் ப்ரண்டனிடம் தன் நெஞ்சில் கை வைத்து இதயத் துடிப்பைக் கண்காணிக்கச் சொன்னார்.
பால் ப்ரண்டன் அப்படியே செய்தார். ப்ரம்மாவின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் ஏழு நிமிடங்கள் ப்ரம்மாவின் இதயத்துடிப்பே நின்று போனது. பால் ப்ரண்டன் பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார். அவர் அறிவின்படி இது மரணமே. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ப்ரம்மா சிறிது நேரம் மூச்சு விடுவதையே நிறுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் வியப்பு அதிகமாகிக் கொண்டே போனாலும் பால் ப்ரண்டனுக்கு இது நிஜம் தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. அங்கிருந்த கண்ணாடி ஒன்றைக் கொண்டு வந்து ப்ரம்மாவின் மூக்கருகே வைத்துப் பார்த்தார். ஒருவேளை லேசாகவாவது மூச்சு விட்டால் கண்ணாடியில் ஆவி படியும் அல்லவா? ஆனால் என்ன ஆச்சரியம். கண்ணாடியிலும் மூச்சுக் காற்று படியும் தடயம் இல்லை. சிறிது நேரம் கழித்து ப்ரம்மாவின் இதயம் மறுபடி துடிக்க ஆரம்பித்தது. ப்ரம்மா இயல்பாக மூச்சு விட ஆரம்பித்தார்.
பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியம் என்று ப்ரம்மாவிடம் கேட்டார். இது இயற்கைக்கு எதிர்மாறாக இருக்கிறதே என்ற சந்தேகம் அந்த ஆங்கிலேயர் மனதில் பிரதானமாக இருந்தது.
ப்ரம்மா சொன்னார். "இமயமலையில் சில வௌவால்கள் இருக்கின்றன. அவை பனிக்காலத்தில் இமயமலையில் உள்ள குகைகளில் தொடர்ந்து சில காலம் அடைந்து கிடக்க நேரிடும். அப்போது பனித்தூக்கம் என்றழைக்கப்படும் உறக்கத்தில் ஆழ்ந்து விடும் அந்த வௌவால்கள் அந்த உறக்க காலத்தில் மூச்சு விடுவதை நிறுத்தி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. மீண்டும் அவை விழிப்பது வெளியே போகக் கூடிய அளவு சீதோஷ்ணம் மாறுகையில் தான். அவை மூச்சு விட ஆரம்பிப்பதும் அப்போது தான்.
அதே போல் இமயமலையின் பனிக்கரடிகள் அதிக பனிக்காலத்தில் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று விடுகின்றன. அப்போது அந்தப் பனிக்கரடிகள் உயிரற்ற சடலங்களாகவே காட்சியளிப்பனவாக இருக்கும். அதே போல் சில வகைப் பனிநாய்கள் உறைபனிக்காலங்களில் உணவு கிடைக்காத நிலை ஏற்படும் போது பதுங்குகுழிகளில் மாதக்கணக்கில் உறங்குவனவாக இருக்கின்றன. அப்போது அவை மூச்சு விடுவதில்லை அல்லது நீண்ட இடைவேளைக்கு ஒரு முறை மூச்சு என்று விடுகின்றன். அப்படி அந்த விலங்குகள் கூட மூச்சு விடுவதைச் சில காலம் நிறுத்தி வைக்க முடியும் போது மனிதனால் ஏன் முடியக் கூடாது?"
இமயமலையில் வாழும் விலங்குகளுக்கு அந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இயற்கை அளித்த அந்த வரப்பிரசாதம் அந்த மூச்சு விடாமல் இருக்கும் காலம். ஆனால் மனிதன் விஷயம் அப்படியில்லையல்லவா? ஆனால் உண்மையில் முன்பொரு காலத்தில் லாகூரில் பக்கிரி ஒருவர் மகாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் ஒரு சமாதிக்குள் இருந்து பின் உயிர்த்து வந்தது அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது என்றும் ப்ரம்மா தெரிவித்தார்.
பால் ப்ரண்டன் விசாரித்ததில் அந்தச் செய்தி உண்மை என்று தெரிந்தது. 1837 ஆம் ஆண்டு அந்தப் பக்கிரி உயிரோடு சமாதி ஆக ஒப்புக் கொண்டார். லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங், சர் க்ளாட் வேட், டாக்டர் ஹோனிக்பெர்ஜர் போன்ற முக்கியமான சாட்சிகள் மற்றும் பலர் முன்னிலையில் உயிரோடு சமாதி செய்யப்பட்டார். மஹாராஜா ரஞ்சித் சிங் ஏமாற்று வேலை எதுவும் இதில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சீக்கிய சிப்பாய்கள்கள் மாறி மாறி ஒருவராவது அந்த சமாதியில் இரவும் பகலும் காவல் காக்குமாறு பார்த்துக் கொண்டார். நாற்பது நாட்கள் கழிந்து சமாதியைத் தோண்டிய போது அந்தப் பக்கிரி உயிரோடு வெளிவந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது சில ஆதாரபூர்வ களஞ்சியங்களில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. முழு விவரங்கள் கல்கத்தாவில் உள்ள வரலாற்றுக் களஞ்சியத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது.
பால் ப்ரண்டனின் தேடல் காட்டிய மற்ற மனிதர்கள் இன்னும் வித்தியாசமான சக்திகள் பெற்றிருந்தார்கள். அதை அடுத்த பதிவில் பார்ப்போமா?
(தொடரும்)
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்
«
Reply #2 on:
November 16, 2011, 05:20:57 PM »
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-3
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்
பால் ப்ரண்டன் இந்தியாவில் கண்ட அபூர்வசக்திகள் படைத்தவர்கள் அனைவருமே யோகிகள் அல்ல. இங்கிலாந்தில் அவரிடம் அந்த இந்தியர் சொன்னபடி முறைப்படி ஏதாவதொரு விதத்தில் அந்த சக்திகளைப் பெற்றிருந்த, யோகிகள் வரிசையில் சேர்க்க முடியாத மனிதர்களும் இருந்தார்கள். அப்படி ஒரு பக்கிரியை அவர் பர்ஹாம்பூரில் பார்த்தார். பணம் கேட்டு வந்த அந்தப் பக்கிரி தன்னிடம் விசேஷ சக்தி இருப்பதாகச் சொல்ல பால் ப்ரண்டன் அதைக் காண்பிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கிரி பால் ப்ரண்டனின் முன்னிலையில் தன் வலது கண்ணைத் தோண்டி எடுத்தார். அதைக் காண சகிக்காத பால் ப்ரண்டன் திரும்பவும் வைத்துக் கொள்ளச் சொல்ல அந்தப் பக்கிரி அப்படியே அந்தக் கண்ணைத் திரும்பவும் சுலபமாகப் பொருத்திக் கொண்டார். கண்ணுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எந்த உபகரணங்களும் இல்லாமல் சர்வ சகஜமாக அப்படி எடுக்கவும் திரும்ப பொருத்திக் கொள்ளவும் முடிந்த அந்தப் பக்கிரியிடம் "இது எப்படி சாத்தியமாகிறது?" என்று பால் ப்ரண்டன் கேட்க அந்தப் பக்கிரி அதை விளக்க மறுத்து விட்டார். "ஐயா, இது ஒரு குடும்ப ரகசியம். இந்த வித்தை தந்தை மகனுக்கு, மகன் தன் மகனுக்கு என பரம்பரை வழிகளில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது" என்றார்.
இது போன்ற வித்தைகளால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்வி பால் ப்ரண்டன் மனதில் எழுந்தது. அவர் தன்னிடமிருந்த பணம் சிறிது கொடுத்து அவரை அனுப்பி விட்டார். இது போன்ற காசு பணத்திற்காக வித்தை காட்டும் மனிதர்கள் இருக்கும் இந்த தேசத்தில் ராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற மகா சித்தர் இருந்திருக்கிறார் என்பதை அறிந்த பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நேரடி சீடர்களில் ஒருவரான மஹாசாயா என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மஹாசாயாவிற்கு மிகவும் வயதாகியிருந்தது. மஹாசாயா கல்கத்தா கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், வரலாறு, அரசியல் பொருளாதாரம் என்ற மூன்று துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அப்படிப்பட்ட ஒரு உயர் கல்வியாளர் ராமகிருஷ்ணர் என்ற கல்வியறிவில்லாத ஞான சித்தரிடம் ஈர்க்கப்பட்டு சீடராக மாறியது பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ணரின் ஞான சக்தியின் மேன்மையை உணர்த்தியது. ராமகிருஷ்ணரைப் பற்றி அந்த நேரடி சீடரிடம் நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார்.
மஹாசாயா தன் குருவைப் பற்றிப் பேசும் போது புதிய மனிதராகவே மாறி விட்டார். ".....ராமகிருஷ்ணர் பணம், பதவி, புகழ், கர்வம், சொத்துக்கள் எல்லாம் ஆத்ம ஞானத்தின் முன் தூசுகளே என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தார். அந்த நாட்கள் அருமையானவை. அந்த மகான் யோக நிலைக்குச் சென்று அமர்ந்திருப்பார். சுற்றியுள்ள நாங்கள் அவரைக் குருவாக அல்லாமல் இறைவனாகவே கண்டோம்....அப்படிப்பட்ட சக்தி அவர் இருக்கும் அந்த அறையெங்கும் பரவியிருக்கும். அவர் ஒருவரிடம் இறையுணர்வு ஏற்படுத்த, தானிருக்கும் யோக நிலைக்கு இழுத்துச் செல்ல பெரிதாக எதுவும் செய்யத் தேவையிருக்கவில்ல. அவர் லேசாகத் தொட்டால் போதும். அந்த தெய்வானுபவம் கிடைத்து விடும். அந்த அனுபவத்தின் பேரானந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை......"
ஜென்ம ஜென்மங்களாக தவமிருந்து பெறக் கிடைக்கும் அனுபவத்தை தன் தொடுதலாலேயே ஏற்படுத்த முடிவது ஒரு ஒப்பற்ற சக்தியல்லவா? விவேகானந்தருக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்தி அல்லவா அவர் தன் வழிக்கு இழுத்தார். ஒரு நரேந்திரனை விவேகானந்தராக்கிய பெருமை அதனாலல்லவா கிடைத்தது.? ராமகிருஷ்ணரை நேரில் சந்திக்க முடிந்த காலத்தில் இந்தியா வராவிட்டாலும் மஹாசாயா போன்ற அவரது நேரடி சீடரைச் சந்திக்க முடிந்ததில் பால் ப்ரண்டன் மனம் நிறைவாக இருந்தது.
கல்கத்தாவில் மருத்துவராக இருந்த டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் பால் ப்ரண்டனுக்கு யோகிகள், யோக சக்திகள் மேல் இருந்த ஆர்வத்தை அறிந்து யோகி நரசிங்கஸ்வாமி பற்றி சொன்னார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா சொன்னார்.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.
அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.
தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."
இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.
(பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார். இயற்கைக்கு மாறாக மனிதனால் எத்தனையோ செய்து காட்ட முடியும் என்றாலும் அதில் அதிகக் கவனம் வேண்டும். கவனக் குறைவும், சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் அலட்சியமும் உயிரையும் குடித்து விடும் என்பதற்கு நரசிங்கஸ்வாமி ஒரு நல்ல உதாரணம்)
பால் ப்ரண்டன் சந்தித்த மற்ற சக்தியாளர்களையும் அவர் மனதில் இருந்த யோகிகளின் குணாதிசயங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர் கண்ட மஹா யோகியையும் அடுத்த பதிவில் காணலாமா?
(தொடரும்)
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்
«
Reply #3 on:
November 17, 2011, 04:57:53 PM »
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-4
உண்மையான யோகியைக் காணல்
பால் ப்ரண்டன் சந்தித்த இன்னொரு சித்தர் விசுத்தானந்தர். அவரது சக்திகள் வித்தியாசமானவை. அவர் எந்த ஒரு பூவின் நறுமணத்தையும் தானிருந்த இடத்தில் ஏற்படுத்த முடிந்தவராக இருந்தார். ஒரு பூதக் கண்ணாடியின் மூலம் ஒரு கைக்குட்டையில் சூரிய ஒளியைக் குவித்து மற்றவர்கள் நினைத்த எந்த நறுமணத்தையும் ஏற்படுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் திபெத்தில் மட்டுமே மலரக் கூடிய ஒரு மலரை எண்ண, அவர் அந்த மலரின் நறுமணத்தையும் வரவழைத்துக் காட்டி பால் ப்ரண்டனை ஆச்சரியப்படுத்தினார்.
வேறெதாவது சக்திகள் அவரிடம் உள்ளதா என்று பால் ப்ரண்டன் கேட்க விசுத்தானந்தர் ஒரு சிட்டுக் குருவியை அவர் முன்னாலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுறது இறந்து விட்டது என்பதை பால் ப்ரண்டனை உறுதிபடுத்திக் கொள்ளச் சொன்னார். பின் தன் கையிலிருந்த பூதக் கண்ணாடி மூலம் சூரிய ஒளிக்கதிர்களை ஒன்றாகக் குவித்து இறந்த சிட்டுக் குருவியின் ஒரு கண்ணில் குவித்து மறுபடியும் உயிர்ப்பித்துக் காட்டினார். சிட்டுக் குருவி மறுபடி உயிர்பெற்று அசைந்து நடந்து சிறிது தூரம் பறந்து சென்றதைக் கண்ணால் பார்த்த பால் ப்ரண்டன் பிரமித்துப் போனார். அந்த உயிர் பெற்ற பறவை அரை மணி நேரம் வாழ்ந்து பின் இறந்து போனது.
மரணத்தையும் வெல்ல முடிந்த சக்தி படைத்த விசுத்தானந்தர் பால் ப்ரண்டன் இந்தியா வந்த காரணத்தை அறிந்து சொன்னார். "தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை..."
அதே செய்தியைத் தான் பால் ப்ரண்டன் சந்தித்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களும் சொன்னார். பால் ப்ரண்டனைப் பல இடங்களில் தொடர்ந்த ஒரு மனிதர் "நீங்கள் தேடும் யோகியை நான் காட்டுகிறேன். அவரை எனக்குத் தெரியும்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் வார்த்தையில் பால் ப்ரண்டனுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மனிதர் தொடர்வதை நிறுத்தவில்லை. கடைசியில் பால் ப்ரண்டன் அவர் சொன்ன நபரையும் சந்திப்பதில் தனக்கு நஷ்டமேதும் இல்லை என்று நினைத்து "நீங்கள் சொல்லும் யோகி எங்கிருக்கிறார்?" என்று கேட்க அவர் திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியைப் பற்றி சொன்னார்.
பால் ப்ரண்டன் ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றார்.
ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்க அவர் முன் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரமண மகரிஷி பால் ப்ரண்டனைப் பார்த்தார். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்ட ரமண மகரிஷியின் பார்வை சாதாரணமானதாக இருக்கவில்லை. அவர் பார்வை காந்தத் தன்மை கொண்டதாக இருந்தது. பால் ப்ரண்டன் தன் பார்வையை மகரிஷியிடமிருந்து விலக்க முடியாதவராக இருந்தார். திடீரென்று தன் பார்வை பால் ப்ரண்டனிடமிருந்து விலக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் பால் ப்ரண்டன் தான் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுடன் தானும் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் ஒருவித அசாதாரண சக்தியலை அவரை ஆட்கொண்டது. தன்னை மகரிஷி புறக்கணித்ததாக எண்ணிய எண்ணம் மெள்ள விலகியது. ரமண மகரிஷி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருடைய ஞான சக்தி அந்த இடமெல்லாம் வியாபித்திருந்ததாக பால் ப்ரண்டன். அவர் மனதில் ரமண மகரிஷியிடம் கேட்க எண்ணியிருந்த கேள்விகள் கூட அவர் மனதில் இருந்து தானாக உதிர்ந்தன. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரமைதியை பால் ப்ரண்டன் அந்த இடத்தில் உணர்ந்தார். கேள்விகள் இல்லாத பதில் தேவைப்படாத எதனாலும் பாதிக்கப்படாத ஒரு ஆனந்த நிலையை பால் ப்ரண்டன் அனுபவித்தார்.
மற்றவர்கள் காட்டிய அபார சக்திகள் எல்லாம் இந்த அமைதியின் முன் ஒரு பொருட்டாகவே பால் ப்ரண்டனுக்குத் தோன்றவில்லை. தான் தேடி வந்த யோகியை அந்தக் கணமே பால் ப்ரண்டன் அடையாளம் கண்டார். அவருடைய தேடல் முடிவுக்கு வந்ததாக அவர் உணர்ந்தார். அங்கேயே சில காலம் தங்க பால் ப்ரண்டன் தீர்மானித்தார்.
முதல் முதலில் ரமண மகரிஷியிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது பால் ப்ரண்டன் சொன்னார். "ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் நகர சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''
மகரிஷி புரிகிறது என்பது போல் தலையசைத்தார்.
பால் ப்ரண்டன் தயக்கமில்லாமல் தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொன்னார். "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"
அருகிலிருந்த சிலர் பால் ப்ரண்டனுடைய வெளிப்படையான கேள்வியைக் கேட்டு திகைத்தனர். மகரிஷி அவரையே பார்த்தாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை. பால் ப்ரண்டன் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"
பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.
"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"
பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"
"அதை எப்படி அறிவது"
"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"
"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"
"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"
"இதில் ஒரு குரு தேவையா?"
"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"
"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"
"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"
பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.
"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"
ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."
அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.
ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."
"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"
"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."
"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"
இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். ரமண மகரிஷி அவர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?
ரமணாஸ்ரமத்தில் இருக்கும் போது பால் ப்ரண்டனுக்கு யோகி ராமையா என்னும் ஆந்திர சித்தரின் அறிமுகம் கிடைத்தது. வருடத்தில் ஒரு முறை வந்து சுமார் ஒரு மாதம் அங்கு இருந்து விட்டுப் போவார் அந்த சித்தர். ஒரு முறை பால் ப்ரண்டன் இருந்த அறையில் ஒரு கொடிய விஷமுள்ள நாகம் வந்து விட பலரும் ஓடி வந்து அதைக் கொல்ல கம்புகளை எடுக்க யோகி ராமையா அங்கு வந்து அவர்களைத் தடுத்து தன் இரு கைகளாலும் அந்த நாகத்தை எடுத்து அதை அன்புடன் பார்க்க, தன் விஷ நாக்குகளை வெளியே நீட்டினாலும் அவரை தீண்டாமல் அந்த நாகம் சீற்றம் தணிந்து அவருக்கு தலை வணங்கியது. ராமையா அதை கீழே விட யாரையும் உபத்திரவிக்காமல் அந்த நாகம் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டது. ஆச்சரியத்துடன் "உங்களுக்குப் பயமாக இருக்கவில்லையா?" என்று பால் ப்ரண்டன் கேட்டதற்கு ராமையா சொன்னாராம். "நான் மனதில் வெறுப்பு சிறிதும் இன்றி முழு அன்புடன் அதை அணுகியிருக்கும் போது பயப்பட என்ன இருக்கிறது?". மனித எண்ணங்களை உணரும் சக்தி விலங்குகளுக்கும் உண்டு என்பதையும் அவை அதன்படியே நடந்து கொள்கின்றன என்பதையும் அந்த நிகழ்ச்சி தெரிவிக்கிறதல்லவா?
ரமண மகரிஷி பெரும்பாலும் மௌன நிலையிலேயே இருப்பார். அவர் முன் வந்தமர்ந்து செல்லும் பல மனிதர்களுக்கு அந்த வார்த்தைகளற்ற சூழ்நிலையிலும் தேடி வந்ததற்கு ஒரு பதில் அல்லது கிடைத்தது. சில சமயங்களில் மட்டுமே அவர் பேச இசைந்தார். பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."
ரமண மகரிஷியைக் கண்டு அவர் காலடியில் சில காலம் தங்கி ஆன்மீக அனுபவத்தை ஆழமாக உணர்ந்த பால் ப்ரண்டன் இந்த தேசத்தில் வந்து தேடியதைக் கண்ட திருப்தியில் தன் நாடு திரும்பினார்.
(முடிந்தது)
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்