சிலர் திடீரென்று மீசையை பெரிதாக வைப்பது, முறுக்கி விடுவது, முடியைப் பெரிதாக விடுவது இப்படியெல்லாம் ஒரு உந்துதல் ஏற்பட்டு செய்கிறார்களே இதற்கு என்ன காரணம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இதற்கு காரணமே சனியும், ராகுவும்தான். சிகை அலங்காரம், அதற்குரிய கிரகம் சனிதான். ராகுதான் சுருட்டி சுருட்டி வைத்துக் கொள்வது, ஃபங்க் மாதிரி வைத்துக் கொள்வது, இதையே நான்கு மாதம் கழித்து வேறு மாதிரி வைத்துக் கொள்வது, பிறகு தலையில் பாம்பு போவது போல நான்கைந்து ரூட் போட்டுக்கொள்வது. இதெல்லாம் ராகுவோட ஆதிக்கம். குறிப்பாக இந்த ராகு தசை நடக்கிறவர்கள் இதை அதிகம் செய்வார்கள்.
சனி தசை இருப்பவர்கள் பெரும்பாலும் குடுமி வைத்துக் கொள்வார்கள், இல்லையென்றால் நீளமான முடி வைத்துக் கொண்டு அடிக்கடி நீவி விட்டுக் கொண்டு இருப்பார்கள். ராகு ஆதிக்கம் உள்ளவர்களும் இப்படித்தான் இருப்பார்கள். எந்த முடி எண்ணெய் விளம்பரத்தைப் பார்த்தாலும் அதை மறுநாளே வாங்கிவிடுவார்கள். பிறகு காதில் ஒரு கடுக்கணையோ, வளையத்தையோ போட்டுக் கொள்வார்கள். இவர் ராகு ஆதிக்கத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மீசையைப் பொறுத்தவரையில், அதாவது முடி என்றால் அது சனி. ஆனால் இந்த முறுக்கி விடுவதெல்லாம் செவ்வாய்தான். நரம்பு முறுக்குவதிலிருந்து, மீசை முறுக்குவதிலிருந்து, அதற்கு நெய் பூசி பராமரிப்பதிலிருந்து செய்வது செவ்வாய். மேஷம், விருட்சிகம் இந்த இரண்டும் செவ்வாயுடைய ராசி. இதில் செவ்வாய் வலிமையாக இருந்து பிறப்பவர்களெல்லாம் அப்பப்ப மீசையை நீவிவிட்டுக் கொண்டிருப்பார்கள்.
பொதுவாக செவ்வாய் வலுவாக இருந்தாலே இதுபோன்று முறுக்கி விடுவதெல்லாம் உண்டு. ஆனால், மீசையை பெரிதாக வைத்துக் கொண்டிருப்பார்களே அவர்களெல்லாம் இளகிய மனதுடையவர்களாக இருப்பார்கள். கொஞ்ச நேரம், ஒரு ஐந்து நிமிடம் பேசினாலே கணிவாக நடந்துகொள்வார்கள்.