நண்பர்களே, உங்களுடைய குழந்தை வயது நினைவுகளை நினைத்துப் பாருங்கள். என்ன எல்லாம் நினைவிற்கு வருகிறது…? பிறந்தநாளில் நீங்கள் கொண்டாடிய விதம், நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போன்றவை ஞாபகத்திற்கு வரலாம். ஆனால், உங்களது நினைவுகள் ஒரு போதும் உங்களது மூன்று வயதிற்கு முன்னால் இருந்த நினைவுகளாக இருக்காது. அதாவது உங்களின் குழந்தைப்பருவ நினைவுகள் அனைத்தும் 3 முதல் 7 வயதுக்குள்ளதாகவே இருக்கும். குடும்ப புகைப்படங்கள் போன்ற சிலவித பொருட்களால் இந்த நினைவுகள் மேம்பட்டு இருக்கலாம். இவ்வாறு சிறு வயதில் நினைவுகளை மறப்பதற்கு “குழந்தைப்பருவ மறதியே” காரணம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த இருபது வருடங்களில் இது பற்றி செய்த ஆராய்ச்சியின் முடிவில் குழந்தைகளின் நினைவுத்திறன் பற்றிய பலவிதமான நுணுக்கங்களும், கேள்விகளும் தோன்றியுள்ளன.
குழந்தைப்பருவ மறதிக்கு, குழந்தைகளின் நினைவகப் பகுதி வளார்ச்சியடையாமல் இருக்கலாம் என உளவியல் நிபுணர்கள் ஊகித்துள்ளனர். குழந்தைகள் மூன்று வயதினை அடையும் கால கட்டத்தில் அவர்களது மூளையின் நினைவகத் திறன் வேகமாக வளர்வதாகவும் கண்டறிந்துள்ளனர். எவ்வாறு இருந்தாலும், மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகள் அதிகபட்ச நினைவுகளைச் சேகரிக்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றுள் எவை அவர்களின் நினைவில் பதியும் என்பது அவர்களின் நினைவகத்திறனைப் பொறுத்தது. அதே நேரத்தில், அவர்களது முக்கிய நிகழ்வுகளைக்கூட, நினைவகம் பதிவு செய்யாமல் போகலாம். இதனால் தான் அவர்களுக்குக் குழந்தைப்பருவத்தில் நடந்தது நினைவுக்கு வருவதில்லை என்கின்றனர்.
என்ன நண்பர்களே, நாம் குழந்தையாக இருக்கும் போது நடந்த சம்பவங்கள் ஒன்றும் ஏன் நினைவில் இல்லை என்பதற்கான காரணத்தை புரிந்துகொண்டீர்களா?