40
பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்.
(ப-ரை.) பத்துக் கொடுத்தும் - பத்துப்பொருள் கொடுத்தாயினும், பதி இருந்து - உள்ளூரிலிருந்து, வாழ்வு - வாழ்தல் ,இனிது-; வித்து - விதைக் கெனவைத்த தானியத்தை, குற்று உண்ணா - குற்றியுண்ணாத, விழுப்பம் - சீர்மை, மிகவினிது -, பற்பல நாளும் - பற்பல நாட்களும், பழுது இன்றி - பழுது படாது, பாங்கு உடைய - நன்மையுடைய நூல்களை, கற்றலின் - கற்பதைப் போல, காழ் இனியது- மிக வினியது, இல் (வேறொரு செய்கை) இல்லை.
‘சில' என்னும் பொருளிற் ‘பத்து' என்னும் சொல்லை வழங்குதலுண்மையை, ‘பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி' (தேவாரம்) ‘ எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளுமாங்கே' (சிந்தாமணி, கனகமாலை - 41) என்பவற்றான்றிக.
‘பத்து' என்பதற்குப் ‘பத்துப் பொருள்' என்றுரை வகுத்தார் நச்சினார்க்கினியர்.
தன்பாற் குற்றங் கண்டு இனத்தார் கூடிப் பத்துப்பொருள் தண்டம் விதிப்பின் அது கொடாது ஊரைவிட்டுச் செல்லுதலின் அது கொடுத்து ஊரின்கண் வாழ்தலே நன்மையா மென்பார், ‘பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே' என்றார். சாதி தருமந் தவறினார்க்கு அச் சாதியார்கூடித் தண்டம் விதித்தலும், அத் தண்டஞ் செலுத்தாராயின் நெருப்பு முதலியன வுதவாதும், வண்ணான் நாவிதன் முதலிய ஊர் வேலையாட்களைக் கட்டுப்படுத்தியும் அவர் அவ் வூரின்கண் இராதபடி செய்தன் முற்கால வழக்கென்க.
இனி , ‘அரசர்க்குச் செலுத்தும் உரிய இறைப்பொருளொடு பத்துப் பணங் கூட்டிக் கொடுத்தாயினும் உள்ளூர் வாழ்தலினிது' எனப் பொருளுரைப்பினும் அமையும் ஒன்றிற்குப் பத்தாகத் தாங்கா ,இறை கொள்ளுதல் கொடுங்கோன் மன்னன் செய்கையாகலானும், கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டிலுந் கடும்புலி வாழுங் காடு நன்றாகலாலும் ‘பத்து' என்பதற்குப் ‘பதின்மடங்கு இறை' எனப் பொருளுரைத்தல் பொருந்தா தென்க.
வித்தின்றேன் மேல்விளைவு மின்றாமாகாலின், ‘வித்துக் குற்றுண்ணா விழுப்பா மிகவினிதே' என்றார். உடலொடு அழியாது புண்ணிய பாவங்கள் உயிரொடு சென்று,
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"
(குறள் - 318)
என்றவாறு, எழுமையினும் துணைசெய்தலின், வாழ்நாட்களினொன்றேனும் பழுதுபடாவாறு கற்பவை கற்க வென்பார் ‘பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினிய தில்' என்றார்.
***முற்றும்***