மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள்
மொபைல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்வை, வர்த்தகத்தை புதிய பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. எங்கு சென்றாலும் நம் தொழில் குறித்து பணி மேற்கொள்ள இவை உதவுகின்றன.
இந்த அளவிற்கு நம்மை முன்னேற்றமடைய உதவும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாம் பல பாதுகாப்பற்ற வழிகளைப் பின்பற்றுகிறோம். அவை எவை என்பதனையும், அவற்றிலிருந்து நம்மப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்திட வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம்.
1. சாதனத்தினை பூட்டி வைக்க மறத்தல்:
நம் சாதனத்தை லாக் செய்தல் பெரிய அளவில் பாதுகாப்பினை வழங்கப் போவது இல்லை என்றாலும், அதுவே நம் பாதுகாப்பு கட்டமைப்பில் முதல் படியாகும். இந்த லாக் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தற்போது வந்துள்ள ஐபோன் 5ல் தரப்பட்டுள்ள விரல் ரேகை பூட்டு முதல், சாதாரணமாக பின் (PIN) எண் அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டு போடும் முறை வரை இருக்கலாம்.
இதனுடன் கூட நம் போன் தொலைந்து போனாலும், ரிமோட் கட்டுப்பாடு முறையில் அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்திடும் வழிமுறைகளையும் பின்பற்றலாம்.
2. அப்டேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:
நாம் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை நமக்கு வழங்கிய நிறுவனங்கள், அவற்றை மேம்படுத்துகையில், புதிய வசதிகள் தருவதோடு, அவற்றிற்கான பாதுகாப்பிற்கென புதிய வழிகளையும் அமைக்கின்றன. எனவே, அப்டேட் செய்திடவில்லை எனில், நம் அப்ளிகேஷன் புரோகிராம் மட்டுமின்றி, போனும் பாதுகாப்பற்ற நிலையை அடைகிறது.
3. அனுமதியற்ற சாதனத்தில் முக்கிய டேட்டா:
அலுவலகப் பயன்பாட்டிற்கு எனத் தனியாகவும், சொந்த தொடர்புகளுக்கென தனியாகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம்.
சில வேளைகளில், அலுவலகம் சார்ந்த முக்கிய ரகசிய தகவல்களை நம் சொந்த மொபைல் சாதனங்களில் ஸ்டோர் செய்திடுகிறோம். இதனைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வகை டேட்டாவினையும் தனித்தனியே, வெவ்வேறு சாதனங்களில் ஸ்டோர் செய்வதே பாதுகாப்பானது.