"த டா வின்சி கோட்" புனைகதை விளக்கத்திற்கு மறுப்பு
"த டா வின்சி கோட்" புனைகதை இயேசு பற்றிய உண்மையைத் திரித்தும், வரலாற்றுச் செய்திகளைத் தவறாக விளக்கியும், சில தகவல்களை மிகைப்படுத்தியும் எழுதப்பட்டதோடு, நூலில் வருவதெல்லாம் உண்மை போன்றதொரு பிரமையை உருவாக்கியது என்று கூறி, கிறித்தவ சபைகள் அந்நூலின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தன. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு பற்றிய உண்மையைத் தம் சமய நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ள கிறித்தவ சமயத்தை அடிப்படையின்றி விமர்சிப்பது ஏற்கத்தகாதது என்றும் கிறித்தவ சபைகள் கருத்துத் தெரிவித்தன.
லியொனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம் ஒரு இரகசியத்தை உள்ளடக்கியிருந்தது என்றும், ஓவியர் அந்த இரகசியத்தை யாருக்கும் தெரியாமல் குறியீடுகள் வழியாக மறைத்துவைத்தார் என்றும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. நாவலாசிரியர் கற்பனை செய்து ஒரு கதையை உருவாக்கிவிட்டு, தம் கற்பனை லியொனார்டோவின் ஓவியத்தில் உள்ளதைத்தான் கண்டுபிடித்தது என்று கூறுவதைப் பகுத்தறிவு ஆய்வின்படி ஏற்கமுடியாது. இதை வேண்டுமானால் "இரகசியத் திட்ட எடுகோள்" (conspiracy theory)[4]என்று கூறலாமே ஒழிய வரலாற்று உண்மை என்பது தவறு.
மேற்கூறிய சமயம் தொடர்பான மறுப்பைத் தவிர, கலை வரலாற்றாசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள் போன்றோரும் டான் பிரவுன் லியொனார்டோ டா வின்சியின் ஓவியத்துக்கு அளித்த விளக்கம் தவறானது என்று நிறுவியுள்ளனர். இந்த மறுப்புப் பற்றிய விவரங்கள் இதோ:
டான் பிரவுன் 2003இல் "த டா வின்சி கோட்" என்னும் புனைகதையை எழுதுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் "த டெம்ப்ளார் ரெவலேஷன்" (The Templar Revelation) என்னும் புத்தகத்தை லின் பிக்னெட், க்ளைவ் ப்ரின்ஸ் என்போர் வெளியிட்டிருந்தனர்[5]. டான் பிரவுன் அப்புத்தகத்திலிருந்து பல தகவல்களை அப்படியே எடுத்து (குறிப்பாக, லியொனார்டோ ஓவியத்தில் மகதலா மரியா இயேசுவின் அருகில் அமர்ந்திருப்பது, அவர்கள் இருவருக்கும் உள்ள உறவு போன்ற ஊகங்கள்), அவற்றைத் தமது நாவலின் கதைக்கு அடித்தளமாகக் கொண்டார். அந்நூலிலுள்ள ஓர் அதிகாரத்தின் தலைப்பிலிருந்து டான் பிரவுன் தம் நாவலுக்கான தலைப்பைத் தேர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
டான் பரவுன் மேற்கூறிய நூலிலிருந்து தகவல்கள் பெற்றார் என்பதற்கு இன்னொரு காரணம் அவர் அந்நூலில் இருந்த தவறான சில வரலாற்றுத் தகவல்களை அப்படியே தமது நூலிலும் உண்மைத் தகவல் போலத் தருகிறார். எடுத்துக்காட்டாக, பாரிசில் உள்ள புனித சுல்ப்பீஸ் கோவில் பற்றிய தகவல்கள் தவறாகத் தரப்படுவதைக் குறிப்பிடலாம்."சீயோன் மடம்" என்னும் நிறுவனம் கற்பனையே என்றும் அதற்கும் சுல்ப்பீஸ் கோவிலுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் ஒரு அறிவிப்புப் பலகை அக்கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. டான் பரவுனின் புனைகதையை வாசித்த பலர் அதில் வரும் தகவல்களை உண்மை என நம்பி, பாரிசில் போய் அது தொடர்பான இடங்களைத் தேடியதைத் தொடர்ந்து மேற்கூறிய அறிவிப்புப் பலகை வைக்கவேண்டியதாயிற்று.
கலை வரலாற்றாசிரியர்களுள் மிகப் பெரும்பான்மையோர் கூறுவது: இறுதி இராவுணவு ஓவியங்களில் நற்செய்தி நூல்களைப் பின்பற்றி, இயேசுவும் அவருடைய பன்னிரு சீடர்களும் உணவருந்துவதாகச் சித்தரிப்பதே மரபு. லியொனார்டோவின் ஓவியத்தில் இயேசு உட்பட பதின்மூன்று பேர் மட்டுமே உள்ளனர். ஆகவே, பன்னிரு சீடரும் இயேசுவோடு இருந்தால் மகதலா மரியா அங்கே இருந்திருக்க முடியாது. டான் பிரவுன் (த டெம்ப்ளார் ரெவலேஷன் நூலிலிருந்து எடுத்த தகவல்படி) கூறுவது உண்மையானால் பன்னிரு சீடர்களுள் ஒருவர் இராவுணவின்போது இயேசுவோடு இருக்கவில்லை என்றாகும். ஆனால் இது நற்செய்தி நூல்களுக்கும் கிறித்தவ மரபுக்கும் மாறுபட்ட செய்தியாகும். எனவே, டான் பிரவுனின் கருத்து ஏற்கப்பட முடியாதது.
டான் பிரவுன் தமது புனைகதையில் கூறுவது: லியொனார்டோவின் ஓவியத்தில் சீமோன் பேதுருவுக்கு முன்னால், ஒரு கை கத்தியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கையின் உடைமையாளர் யார் என்று ஓவியத்திலிருந்து தெரியவில்லை. எனவே அது ஓவியத்தில் காட்டப்படாமல், இரகசியமாக மறைத்துவைக்கப்பட்ட ஒருவரின் கைதான்.
இதற்கு, கலை வரலாற்றாசிரியகள் தரும் விளக்கம்: லியோனார்டோவின்.ஓவியத்தின்.தெளிவான பிரதிகளைப் பார்க்கும்போது, கத்தியைப் பிடித்திருக்கின்ற கை பேதுருவின் கைதான் என்று ஐயமற நிறுவ முடியும். அவர் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, உள்ளங்கை தெரியுமாறு இருக்கின்றார். அக்கையானது பர்த்தலமேயுவை நோக்கி இருக்கின்றது. பர்த்தலமேயு கத்தியால் உயிருடன் தோலுரிக்கப்பட்டார் என்னும் மரபுச் செய்தியைக் குறிக்கும் விதத்தில் இதை லியொனார்டோ சேர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இயேசுவைக் கைதுசெய்ய வந்த ஒருவரைப் பேதுரு வாளால் தாக்கிய செய்தி நற்செய்தியில் உள்ளது: "சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார்" (யோவான் 18:10). இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் விதத்தில் லியொனார்டோ பேதுருவின் கையில் கத்தியை வைத்து ஓவியம் வரைந்திருக்கலாம். இப்பொருள் குறித்து விரிவான .ஆய்வு.உள்ளது. அதன்படி, கத்தியைப் பிடித்திருக்கும் கை பேதுருவுடையதே.
டான் பிரவுன், இயேசு அணிந்திருக்கும் ஆடை போலவே அவர் அருகே இருப்பவரும் அணிந்திருக்கிறார் என்கிறார். அது உண்மையென்றால் இயேசுவைப் போலவே அவர் அருகே இருப்பவரும் ஓர் ஆண் என்று முடிவுசெய்ய வேண்டும்.
லியொனார்டோ இராவுணவு ஓவியத்தை வரைந்த அதே காலத்தில் கஸ்தாஞ்ஞோ (Castagno), தொமேனிக்கோ கிர்லாண்டாயோ (Domenico Ghirlandaio) போன்ற ஓவியர்களும் இராவுணவுக் காட்சியை வரைந்தனர் (ஆண்டு: 1447; 1480). அவர்களும் வேறு எத்தனையோ ஓவியர்களும் இயேசுவின் வலப்புறத்தில் யோவான் திருத்தூதரை அமர்த்தியிருக்கின்றனர். யோவான் இளைஞராக, பெண்தோற்றம் கொண்டவராக, நீண்ட முடியுடையவராகக் காட்டப்படுகிறார்.[9]யோவான் மற்றெல்லாத் திருத்தூதர்களை விடவும் வயதில் இளையவர்; இயேசுவுக்கு இறுதிவரை விசுவாசம்.உடையவராக இருந்து, சிலுவை அடியில் நின்றவர்; "இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, 'ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?' என்று கேட்டவர்" (யோவான் 21:20) என்னும் தகவலை யோவான் நற்செய்தி மிகத் தெளிவாகவே தருகிறது.