Author Topic: இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு!  (Read 33782 times)

Offline Yousuf

மதீனாவில்

ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு, மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இதற்கு முன் ‘எஸ்ப்’ என்று பெயர் கூறப்பட்டு வந்த அந்த நகரம் அன்றிலிருந்து ‘மதீனத்துர் ரஸுல்’ - இறைத்தூதரின் பட்டணம்- என்று அழைக்கப்பட்டது. இதையே சுருக்கமாக இன்று ‘அல்-மதீனா’ என்று கூறப்படுகிறது. நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந்தது. மதீனாவின் தெருக்களிலும், வீடுகளிலும் இறைப்புகழும், இறைத்துதியும் முழங்கப்பட்டன. அன்சாரிகளின் சிறுமிகள் மிக ஆனந்தத்துடன் சில கவிகளைப் பாடி குதூகலமடைந்தனர்.

“நமக்கு முழு நிலா தோன்றியது.
ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து,
அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம்
நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.
எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!
பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே! ”


அன்சாரிகள் மிகுந்த செல்வ செழிப்புடையவர்களாக இல்லையென்றாலும் நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் வைத்திருந்த பிரியத்தினால் ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில்தான் தங்கவேண்டுமென ஆசைபட்டனர். ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது நபியவர்களின் வாகனக் கயிற்றை பிடித்துக்கொண்டு “அல்லாஹ்வின் தூதரே! பாதுகாப்பும், ஆயுதமும், படைபலமும், வீரர்களும் நிறைந்த எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) தன்னை அழைத்தவர்களிடம் “வாகனத்திற்கு வழிவிடுங்கள். அது பணிக்கப்பட்டுள்ளது” என்று கூறிக்கொண்டே வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனம் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தது. இறுதியில், தற்போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அமையப் பெற்றிருக்கும் இடத்தில் மண்டியிட்டுக் கொண்டது. ஆனால், நபி (ஸல்) அதிலிருந்து இறங்கவில்லை. பின்பு சிறிது நேரத்தில் அந்த ஒட்டகம் எழுந்து சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தது பின்பு முதலில் மண்டியிட்ட அதே இடத்தில் மீண்டும் வந்து மண்டியிட்டு அமர்ந்துதது.

தங்கள் ஒட்டகத்திலிருந்து நபி (ஸல்) இறங்கினார்கள். மேலும், அந்த இடம் நபி (ஸல்) அவர்களின் தாய்மாமன்களாகிய நஜ்ஜார் கிளையினருக்கு சொந்தமானதாகும். நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாஹ் அவர்களின் தாய்மாமன்களின் வீட்டிலேயே தங்குவதற்கு அருள் புரிந்தான். நஜ்ஜார் கிளையினரில் ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்களிடம் ‘நீங்கள் எங்களது வீட்டில் தங்க வேண்டும்’ என்று அழைத்துக் கொண்டிருக்கையில் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் பயணச் சாமான்களை தங்களது வீட்டிற்குள் எடுத்துச் சென்று விட்டார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) “மனிதன் அவனது சாமான்களுடன்தானே இருக்க முடியும்” என்று மற்றவர்களிடம் கூறினார்கள். அஸ்அத் இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் விருப்பப்படி நபி (ஸல்) அவர்களின் வாகனம் அவரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) “நமது உறவினர்களின் வீடுகளில் எது நெருக்கமாக இருக்கிறது” என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் “அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது வீடு. இதுதான் எனது வீட்டு வாயில்” என்று கூறினார்கள். நபி (ஸல்) “சரி! எழுந்து சென்று படுக்கும் இடத்தை சரிசெய்யுங்கள்” என்று கூறினார்கள். “ரஸுலுல்லாஹ்வே! எல்லாம் தயார், அல்லாஹ்வின் பரக்கத்துடன் -அருள் வளத்துடன்- நீங்கள் இருவரும் எழுந்து வாருங்கள்” என்று அபூ அய்யூப் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா (ரழி) அவர்களும் இரு மகள்கள் ஃபாத்திமா, உம்மு குல்தூம் மற்றும் உஸாமா இப்னு ஜைது, உம்மு அய்மன் ஆகியோர் மதீனா வந்தார்கள். இவர்களுடன் அபூபக்ரின் மகனார் அப்துல்லாஹ், அபூபக்ரின் குடும்பத்தாரையும் அழைத்து வந்தார்கள். இவர்களில் ஆயிஷாவும் இருந்தார். நபி (ஸல்) அவர்களின் இன்னொரு மகள் ஜைனபுடைய கணவர் அபுல்ஆஸ் ஹிஜ்ரா செல்ல சந்தர்ப்பமளிக்காததால் ஜைனப் (ரழி) மதீனா வர இயலவில்லை. இவர்கள் பத்ர் போருக்குப் பின் மதீனா வந்தார்கள். (ஜாதுல் மஆது)

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அப்போது மதீனா அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் மிகுந்ததாக இருந்தது. மதீனாவிற்கு அருகிலுள்ள ‘புத்ஹான்’ என்ற ஓடையில் கலங்கிய நீர் ஓடிக்கொண்டிருந்தது.

மேலும், ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூபக்ர், பிலால் (ரழி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. நான் அவர்களிடம் சென்று தந்தையே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? பிலாலே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

பொதுவாக அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்,

“ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் கலந்திருக்க...
மரணமோ அவனது செருப்பு வாரைவிட மிகச் சமீபத்தில் இருக்கிறது”


என்ற கவிதையைக் கூறுவார்கள்.

பிலால் (ரழி) அவர்களுக்கு காய்ச்சலின் சூடு சற்று குறைந்தால் வேதனையுடன் குரலை உயர்த்தி,

“இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க,
அது போன்றதொரு பள்ளத்தாக்கில் ஓர் இராப்பொழுதையேனும் நான் கழிப்பேனா?
ம்மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா?
ஷாமா, தஃபீல் எனும் இரு மலைகள் எனக்குத் தென்படுமா?”


என்ற கவிதையைக் கூறுவார்கள்.

தொடர்ந்து ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் “இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபிஆ, உமையா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி விடுவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். மேலும், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளம் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு மாற்றிவிடு!” என்று பிரார்த்தனை செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்! நபி (ஸல்) அவர்களின் இந்த துஆவை ஏற்றுக் கொண்டான். ஒரு நாள் கனவில் தலைவிரிக் கோலமான கருப்பு நிறப்பெண் மதீனாவிலிருந்து வெளியேறி ஜுஹ்ஃபா சென்றடைந்ததைப் பார்த்தார்கள். இது மதீனாவிலிருந்து அந்த நோய் ஜுஹ்ஃபாவை நோக்கி வெளியேறிவிட்டது என்பதற்கான அறிவிப்பாக இருந்தது. அல்லாஹ்வின் அருளால் மதீனாவின் தட்பவெப்ப நிலையினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் முற்றிலும் சுகமடைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் ஒரு பகுதி, அதாவது மக்கா வாழ்க்கை இத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையை சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

Offline Yousuf

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்

மதீனா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாக பிரிக்கலாம்:

1) இஸ்லாமிய சமூகத்திற்கு அடித்தளம் அமைத்தல், இஸ்லாமிய அழைப்புப் பணியை உறுதிபடுத்துதல்.

இக்கால கட்டத்தில் மதீனாவிற்குள் பெரும் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டன. மதீனாவிற்கு வெளியிலிருந்து முஸ்லிம்களை அழிப்பதற்காகவும் அழைப்புப் பணியை வேரறுப்பதற்காகவும் எதிரிகள் பெரும் போர்களை நடத்தினர். ஆனால், இக்காலகட்டம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு துல்கஅதாவில் நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியையும், ஆதிக்கத்தையும் அருளினான்.

2) மிகப்பெரிய எதியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளுதல், அரசர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தல், சதித்திட்டங்களை முறியடித்தல்.

இக்காலகட்டம் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமழான் மாதம் புனித மக்கா வெற்றியுடன் முடிவுற்றது.

3) குழுக்களை வரவேற்றல், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைதல்.

இக்காலகட்டம் மக்கா வெற்றியிலிருந்து 11 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை தொடர்ந்தது.

ஹிஜ்ரா சமயத்தில் மதீனாவில் வசித்தவர்களும், அவர்களின் நிலைமைகளும்

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்தார்கள். இந்த ஹிஜ்ராவிற்குக் காரணம் மக்காவில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களிருந்து தப்பித்துத் தங்களை விடுவித்துக் கொள்வது மட்டுமல்ல மாறாக, பாதுகாப்பான ஓர் ஊரில் புதிதொரு சமுதாயத்தை நிறுவுவதும் ஹிஜ்ராவின் நோக்கமாக இருந்தது. ஆகவே, ஹிஜ்ரா செய்ய ஆற்றல் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமும் ஹிஜ்ரா செய்து அந்தப் புதிய சமுதாயத்தைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும், அந்த ஊரைப் பாதுகாப்பதற்கும் அதன் தகுதியை உயர்த்துவதற்கும் முழு அளவில் முயற்சி செய்யவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

அந்த சமூகத்தை நிறுவுவதிலும் அதை அமைப்பதிலும் நபி (ஸல்) அவர்களே முன்னோடியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்கள். அனைத்து பொறுப்புகளுக்குரிய அதிகாரங்கள் முழுவதும் நபி (ஸல்) அவர்களிடமே இருந்தன. இதில் மற்ற எவருக்கும் எவ்வித மனக் கசப்பும் இருக்கவில்லை.

மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த மக்கள் மூன்று வகையினராக இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரின் நிலைமையும் பிறரின் நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. ஒரு வகையினரிடம் நபி (ஸல்) அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றொரு வகையினரிடம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தன.

அம்மூன்று வகையினர்:

1) முஸ்லிம்கள் அதாவது, சிறப்பிற்குரிய நபித்தோழர்கள்.

2) மதீனாவின் பூர்வீக குடிகளில் உள்ள முஷ்ரிக்குகள். அதாவது, அந்நேரம்வரை இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த மதீனாவாசிகள்.

3) யூதர்கள்.


மக்காவில் நபித்தோழர்களுக்கு இருந்த நிலைமையும், இப்போது மதீனாவில் அவர்களுக்கு இருக்கும் நிலைமையும் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருந்தன. மக்காவில் முஸ்லிம்கள் இஸ்லாமின் மூலம் ஒருங்கிணைந்து ஒரே நோக்கமுடையவர்களாக இருந்தும் அவர்களால் ஒரு முழுமையான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டமைக்க முடியாத நிலையில் இருந்தார்கள். ஏனெனில், முஸ்லிம்கள் பல குடும்பங்களில் பிந்திருந்தனர். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு கேவலப் படுத்தப்பட்டு பலவீனமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. முஸ்லிம்களின் எதிரிகளே, மக்காவில் முழு அதிகாரம் செலுத்தி வந்தனர். ஆகவேதான் மக்காவில் அருளப்பட்ட குர்ஆன் அத்தியாயங்களில் இஸ்லாமிய அடிப்படை விளக்கங்களும், ஒவ்வொரு தனி நபரும் மேற்கொள்ள வேண்டியக் கட்டளைகளும் குறிப்பாக கூறப்பட்டிருந்தன. மேலும் நன்மை, உபகாரம், நற்பண்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அதிகம் ஆர்வம் ஊட்டப்பட்டன. கெட்ட குணங்கள், இழி செயல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டன.

ஆனால், மதீனாவில் முஸ்லிம்கள் வசமே முழு உரிமையும், ஆதிக்கமும் இருந்தன. மாற்றார் யாரும் அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு வலுவாக, பெரும்பான்மையாக இருந்தனர். ஆகவே, இப்போது முஸ்லிம்கள் தங்கள் சமூகத்துக்குத் தேவையான சட்டங்களையும் அடிப்படைகளையும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொருளாதாரம், வாழ்வியல், அரசியல், போர், சமாதானம், ஆகுமானவை, ஆகாதவை, வணக்க வழிபாடுகள் என்று சமூகத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்பட வேண்டிய தக்க நேரம் இதுவாகவே இருந்தது.

ஆம்! பத்து ஆண்டுகளாக பல துன்பங்களையும் வேதனைகளையும் எதற்காக முஸ்லிம்கள் அனுபவித்து வந்தார்களோ, அந்த அழைப்புப் பணிக்கு வழிகாட்டியாக, ஏனைய மனித சமுதாயத்திலிருந்தும் அறியாமைக்கால சமூகத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிறந்த சமுதாயத்தை முஸ்லிம்கள் அமைக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

இதுபோன்ற சமுதாயத்தை அமைப்பது ஒரே நாளில் அல்லது ஒரே மாதத்தில் அல்லது ஒரே ஆண்டில் சாத்தியமல்ல மாறாக, சட்டம் அமைத்தல், ஒழுங்குபடுத்துதல், பயிற்சியளித்தல், கல்வி புகட்டுதல், சட்டங்களை செயல்படுத்துதல் என அனைத்தும் முழுமை பெறுவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்பட்டது. அல்லாஹ் இம்மார்க்கத்தை அமைப்பதற்கு முழுப் பொறுப்பாளியாக இருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனது சட்டங்களைச் செயல்படுத்தினார்கள், அதன் பக்கம் வழிகாட்டினார்கள். முஸ்லிம்களைச் சீர்ப்படுத்தித் தூய்மைபடுத்தினார்கள்.

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல்குர்ஆன் 62:2)

நபித்தோழர்கள் தங்களது உள்ளங்களால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனின் வசனங்கள் மூலம் தங்களுக்கு இடப்படும் சட்டங்களை முழுமையாக பின்பற்றியதுடன் அதன்மூலம் மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும் அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மேன்மேலும்) அதிகக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (அல்குர்ஆன் 8:2)

இங்கு இதுபோன்ற விஷயங்களை ஆராய்வது நமது நோக்கல்ல. எனவே, நாம் இங்கு தேவையான அளவிற்கு மட்டும் கூறுகிறோம்.

இஸ்லாமியச் சமுதாயத்தை உருவாக்குவதுதான் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் குறிக்கோளுமாகும். இதுதான் முஸ்லிம்களுக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த மிக மகத்தான பணியாகும். இது அவசரமாக செய்து முடிக்க வேண்டிய தற்காலிக பணியல்ல மாறாக, இது அடிப்படை பிரச்சனையாகும். இதை முடிப்பதற்குப் பல காலங்கள் தேவைப்படும். ஆனால், அங்கு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பல அவசர பிரச்சனைகளும் இருந்தன.

அதில் மிக முக்கியமானது அப்போதைய முஸ்லிம்களின் நிலைமை. அவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

ஒரு சாரார் தங்களது சொந்த பூமியில் சொந்த வீட்டில் சொத்து, சுகங்களுடன் இருந்தனர். இவர்களுக்கு ஒரு சராச மனிதனுக்குரிய கவலையைத் தவிர வேறு கவலை இருக்கவில்லை. இவர்கள்தான் மதீனாவாசிகளான அன்சாரிகள்! இந்த மதீனாவாசிகளுக்கிடையில் கடுமையான பகைமையும், சண்டையும் இருந்து வந்தது.

மற்றொரு சாரார் முஹாஜிர்கள் (நாடு துறந்தவர்கள்). அவர்களுக்குச் சொந்த நாடும் இல்லை சொந்த வீடும் இல்லை வாழ்வதற்குண்டான எந்த வாழ்வாதாரமும் அவர்களுக்கில்லை தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்தவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இவர்களது எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அல்லாஹ்வையும், ரஸூலையும் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு வருக்கும் மக்காவை விட்டு மதீனாவில் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு நாளும் முஹாஜிர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. மதீனாவில் செல்வ வளங்களும் அதிகம் இல்லாததால் மதீனாவின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்படைந்தது.

இந்த சிரமமான நெருக்கடியான நேரத்தில் இஸ்லாமிற்கு விரோதமான சில சக்திகள் முஸ்லிம்களுக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தின. இதனால் மதீனாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களும் வருவாய்களும் குறைந்தன. நெருக்கடி மிகுந்த சிரமமான சூழ்நிலைகள் உருவாயின.

இரண்டாவது வகையினர், மதீனாவின் பூர்வீகக் குடிமக்களில் உள்ள முஷ்ரிக்குகள்! (இணைவைப்பவர்கள்). இவர்களிடம் முஸ்லிம்களை ஆதிக்கம் செலுத்துவதற்கான எந்த அதிகாரமும் இருக்கவில்லை. அவர்களது உள்ளங்களில் இஸ்லாமைப் பற்றி பல சந்தேகங்கள் இருந்தன. தங்களது மூதாதையர்களின் மதத்தை விட்டுவிடுவது தங்களுக்கு உகந்ததா? என்று யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எந்தவிதமான விரோதத்தையும், குரோதத்தையும், சூழ்ச்சியையும் தங்களது உள்ளங்களில் மறைத்திருக்கவில்லை. சில காலங்கள்தான் இவ்வாறு கழிந்திருக்கும். அதற்குள் இவர்களும் இஸ்லாமைத் தழுவி தங்களது வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கே ஆக்கிக் கொண்டார்கள்.

இவர்களில் சிலர் மட்டும் நபி (ஸல்) அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக விரோதம் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களால் முஸ்லிம்களை எதிர்க்கும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை. சூழ்நிலைகளைக் கருதி முஸ்லிம்கள் மீது தங்களுக்கு அன்பு இருப்பதாக காட்டிக் கொண்டனர். இவர்களில் மிக முக்கியமானவன் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவனாவான். “புஆஸ்’ என்ற யுத்தம் நடந்ததற்குப் பின் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு கிளையினரும் சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவரை நியமித்துக் கொள்ள ஆலோசனை செய்தனர். அதன்படி அப்துல்லாஹ் இப்னு உபைய்யை தங்களது தலைவராக ஆக்கலாம் என்று முடிவு செய்திருந்த சமயத்தில், நபி (ஸல்) மதீனாவிற்கு வந்துவிட்டதால் மதீனாவாசிகள் இவனைக் கைவிட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பிவிட்டனர்.

எனவே, நபி (ஸல்) அவர்கள்தான் தனது தலைமைத்துவத்தை பறித்துக் கொண்டார் என்று அவர்களின் மீது மிகவும் கோபமாக இருந்தான். இருந்தாலும் சூழ்நிலைகளைக் கருதியும் எஞ்சியிருக்கும் கண்ணியத்தையும் இழந்துவிடுவோம் என்ற பயத்திலும் பத்ர் போருக்குப் பின்பு, தான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதாக அறிமுகப்படுத்தினான்.

ஆனால், உள்ளத்தில் நிராகரிப்பையே மறைத்து வைத்திருந்தான். நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான். இவன் தலைவனானால் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கலாம் என்று நப்பாசை கொண்டிருந்த இவனது தோழர்களும் இவனின் தீய திட்டங்கள் நிறைவேற இவனுக்கு உறுதுணையாக நின்றனர். சில நேரங்களில் சில வாலிபர்களையும், சில அப்பாவி முஸ்லிம்களையும் தங்களது தீய திட்டத்தை நிறைவேற்று வதற்காக யாரும் அறிந்து கொள்ளாத வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.

மூன்றாம் வகையினர் யூதர்கள். உண்மையில் இவர்கள் இதற்கு முன் நாம் கூறியவாறு அஷ்வர் மற்றும் ரோமர்கள் காலத்தில் தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளால் ஹிஜாஸில் குடியேறினர். இவர்கள் இப்ரானி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரபு பிரதேசத்திற்கு வந்ததால் தங்களது உடை, மொழி, கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டார்கள். தங்களது பெயர்களையும், தங்களது குலத்தின் பெயர்களையும் அரபியப் பெயர்களைப் போன்று மாற்றிக் கொண்டனர். தங்களுக்கும் அரபியர்களுக்கும் இடையில் திருமண உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், தங்களது இனவெறியை மட்டும் தக்க வைத்துக் கொண்டனர். முழுமையாக அரபியர்களுடன் ஒன்றிவிடவில்லை. தாங்கள் இஸ்ரவேலர்கள், யூதர்கள் என்று பெருமை பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அரபியர்களை மிகக் கேவலமாகக் கருதினர். அரபியர்களின் சொத்துகள் தங்களுக்கு ஆகுமானது என்றும், தாங்கள் நாடியபடி அவற்றை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கருதினர்.

Offline Yousuf

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்


நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். முதலாவதாக அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் இறங்கி “இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்” என்று கூறிவிட்டு, பின்பு அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அல்மஸ்ஜித் அந்நபவி

இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி’ (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,

“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!

இந்த சுமை கைபருடைய சுமையல்ல!

எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.”

என்று கவியாக படிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்து,

நபி பணி செய்ய, நாம் அமர்ந்தால்

அது வழிகெட்ட செயலல்லவோ!

என்று கவிபாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த இடத்தில் இணைவைப்போரின் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், ‘கர்கத்’ என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா” திசையில் வரிசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை” நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாயிலின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர்கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விரிப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.

பள்ளியின் ஒரு பக்கத்தில் கல்லாலும், மண்ணாலும் சில அறைகள் கட்டப்பட்டன. பேரீத்த மரங்களாலும், அதன் மட்டைகளாலும் அந்த அறைகளின் முகடுகள் அமைக்கப்பட்டன. இவை நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கென கட்டப்பட்ட அறைகள். இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட்டபின் நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் வீட்டிலிருந்து அந்த அறைகளுக்கு மாறிவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.

அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.

ஹிஜ்ராவின் அந்த தொடக்க காலங்களில்தான் இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க அந்த ராகம் ‘அதான்’ (பாங்கு) மார்க்கமாக்கப்பட்டது. இந்த ஒலி உலகத்தின் மூலை, முடுக்குகளை உலுக்கியது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை “லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வே உயர்ந்தவன், முஹம்மது ரஸூலுல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இவ்வுலகத்தில் உயர்ந்தது இல்லை” என்பதை பறைசாற்றுகிறது. இந்த அழைப்பு முறையை சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜைது இப்னு அப்து ரப்பி (ரழி) என்பவர் கனவில் பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கவே அதை நபி (ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதே கனவைத்தான் உமர் இப்னு கத்தாஃப் (ரழி) அவர்களும் கண்டார்கள். இதன் முழுச் சத்திரம் ஹதீஸ் நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (ஸுனனுத் திர்மிதி)

Offline Yousuf

சகோதரத்துவ ஒப்பந்தம்

ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.

இதைப்பற்றி இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும் அன்பு காட்ட வேண்டும் ஒருவர் மரணித்துவிட்டால் அவன் இரத்த உறவினர்களைவிட இவரே அவன் சொத்துகளுக்கு வாரிசாவார். ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு

இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:75)

என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.

சிலர், “நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர்களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர்களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர்ந்தவர்கள் என்பதிலும் சகோதரர்களாக இருந்ததால் அவர்களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாரிகளுடனான முஹாஜிர்களின் நிலைமை அப்படியல்ல. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.” (ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.

இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர் ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புரிதல் என்ற உணர்வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.

அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர்களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.” அப்போது அப்துர் ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார்:

அன்ஸாரிகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரில் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்துவிடுகிறேன். அவர் ‘இத்தா’ காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு “அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்” என்று அப்துர் ரஹ்மான் (ரழி) கூறினார்கள். கைனுகாவினன் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர் ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார். மறுநாளும் அவ்வாறே தொடர்ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார். பின்பு ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது அவர்மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவரிடம் நபி (ஸல்) “என்ன மகிழ்ச்சியான செய்தி?” என விசாரித்தார்கள். அவர் “நான் நேற்று ஒரு அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்தேன்” என்றார். “எவ்வளவு மணக் கொடை (மஹர்) அளித்தீர்கள்” என்று நபி (ஸல்) கேட்க, “(கால் தீனார் பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்” என அப்துர் ரஹ்மான் (ரழி) பதில் கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகள் நமக்கும் நமது சகோதரர்(களான முஹாஜிர்)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார்கள். அப்படியென்றால் எங்களுடன் அவர்கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர்களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாரிகள் கோரினர். அதனை முஹாஜிர்கள் ஒத்துக்கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர்கள் மீது அன்சாரிகள் கொண்டிருந்த ஆழமான பிரியத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர்கள் தங்களது அன்சாரித் தோழர்கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார்கள் என்பதையும் அவர்களிடமிருந்து அதை முழுமையாக அபகரித்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர்வமான தீர்வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.

Offline Yousuf

இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை நபி (ஸல்) உறுதியாக அமைத்தது போன்றே அவர்களுக்கு மத்தியில் அறியாமைக்கால மனக் கசப்புகளையும், குரோதங்களையும் அகற்றும் இஸ்லாமிய நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின் மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள்.

நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

நபியாகிய முஹம்மது (ஸல்) சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும் அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:

1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.

2) குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் ‘தியத்“”தை கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் ‘ஃபித்யா“” கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய நிலைமைக்கேற்ப தங்களுக்குள் ‘தியத்’ கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் ‘ஃபித்யா’ கொடுத்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.

3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு ‘ஃபித்யா’ அல்லது ‘தியத்’ விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.

4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள், பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.

5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது. அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.

7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.

8 ) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.

9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.

11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.

13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவன் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.

14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.

15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)
« Last Edit: November 19, 2011, 07:41:28 PM by Yousuf »

Offline Yousuf

ஆன்மீகப் புரட்சிகள்

இதுபோன்ற நுட்பமிக்க சட்டங்களால் நபி (ஸல்) புதிய சமூகத்தின் அஸ்திவாரங்களை உறுதியுடன் நிறுவினார்கள். அந்த சமூகத்தின் வெளித்தோற்றம் அது கொண்டிருந்த ஆன்மீக சிறப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்த உயர்வான ஆன்மீக சிறப்புகளை அந்த மேன்மக்கள் நபி (ஸல்) அவர்களின் தோழமையால் பெற்றிருந்தனர். மேலும், நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில் நாம் பார்ப்போம்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “இஸ்லாமில் சிறந்த அமல் எது?” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் “உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. “மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள் உணவளியுங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் இரவில் மக்கள் உறங்கும்போது நீங்கள் எழுந்து தொழுங்கள் நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.” (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் கூறினார்கள்: யாருடைய தீங்குகளால் ஒருவன் அண்டை வீட்டார் நிம்மதியற்று போவாரோ அவர் சுவனம் செல்லமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) கூறினார்கள்: எவன் நாவு, கையின் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை நீங்கள் இறைநம்பிக்கையாளராக மாட்டீர்கள்.

நபி (ஸல்) கூறினார்கள் “அனைத்து முஃமின்களும் ஒரே மனிதரைப் போலாவர். அவன் கண்ணுக்கு வலி என்றால் அவன் உறுப்புகள் அனைத்தும் வருந்துகின்றன. அவருக்கு தலைவலி ஏற்பட்டால் அனைத்து உறுப்புகளும் அதனால் வேதனை அடைகின்றன.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “பகைமை கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள் புறக்கணிக்காதீர்கள் சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.” (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்யக் கூடாது அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது யாரொருவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவன் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில் மறைத்துவிடுவான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: “பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: “தனது அருகிலுள்ள அண்டைவீட்டார் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் முஃமினாக இருக்க மாட்டார்.” (பைஹகி)

மேலும் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளரை ஏசுவது பெரும் பாவமாகும். அவரிடம் சண்டை செய்வது இறைநிராகரிப்பாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

மேலும், “பாதையில் இடையூறு தருவதை அகற்றுவது தர்மம் என்றும், அதை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி” என்றும் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: “தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல!“(முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் கூறினார்கள்: “எந்த ஒரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு ஆடை அணிவிப்பாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை பட்டாடைகளிலிருந்து ஓர் ஆடையை அணிவிப்பான். எந்த ஒரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். எந்த ஒரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் “முத்திரையிடப்பட்ட சுவன மது”வைக் குடிக்கக் கொடுப்பான்.” (ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: “ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

பிறரிடம் கையேந்துவதிலிருந்தும், யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள், போதுமென்ற மனப்பான்மையின் சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள். நிர்பந்தமின்றி யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது முகம் சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள். (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி, ஸுனன் நஸாம், இப்னு மாஜா)

மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதில் கிடைக்கும் நன்மைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தங்களின் தோழர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்கள். தங்களின் தோழர்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் குர்ஆனுடன் எப்போதும் தொடர்புடையவர்களாக ஆக்கினார்கள். எந்நேரமும் தங்களின் தோழர்களுக்கு அழைப்புப் பணியின் கடமைகளையும், தூதுத்துவத்தை எடுத்து வைக்கும்போது ஏற்படும் சிரமங்களையும் தெளிவாக உணர்த்துவதற்காக அல்லாஹ்வின் அருள்மறையை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பர்கள். தோழர்களும் அனுதினமும் குர்ஆன் ஓதும்படிச் செய்தார்கள். மேலும், குர்ஆனை விளங்க வேண்டும் அதை புரிந்துகொள்ள வேண்டும் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.

இவ்வாறே தங்கள் தோழர்களின் சிந்தனையைச் சீர்படுத்தி, அவர்களின் ஆற்றல்களை விழித்தெழச் செய்து அவர்களின் ஆன்மீக நிலையை உயர்த்தி, உயர்ந்த பண்புகளை அவர்களிடம் வளரச் செய்தார்கள். இதன்மூலமே இறைத்தூதர்களுக்கு அடுத்தபடியாக மனித வரலாற்றில் ஒரு முழுமைத்துவம் அடைந்த சமுதாயமாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்துவிட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள் பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள். அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)

மேலும், மகத்தான வழிகாட்டியான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் உள்ளரங்கமான, வெளிரங்கமான அனைத்து சிறப்புகளையும் பண்புகளையும் சிறந்த நல்லொழுக்கங்களையும் பெற்றுத் திகழ்ந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவர்களை நேசித்தன அவர்களுக்காக அர்ப்பணமாயின் அவர்கள் எந்த ஒரு வார்த்தையைப் பேசினாலும் அதற்கு அவர்களின் தோழர்கள் முழுமையாகப் பணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல், நற்போதனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று நடந்தார்கள்.

இதன் மூலமாகவே வரலாறு காணாத, மிகச் சிறந்த, நேர்த்திமிக்க புதிய சமூகத்தை நபி (ஸல்) மதீனாவில் அமைக்க முடிந்தது. மேலும், பல காலங்களாக வழிகேட்டிலும், அறியாமை என்ற இருள்களிலும் சிக்கித் தவித்து, தீர்வு தெரியாமல் திகைத்திருந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் தீர்வு கண்டார்கள்.

இதுபோன்ற மிக உயர்ந்த உளப்பூர்வமான, உள்ளரங்கமான பயிற்சிகளின் மூலம் இந்த சமூகத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களும் முழுமை பெற்றன. மேலும், இந்த சமூகம் காலத்தின் சவால்களைச் சந்தித்து சாதனை கண்டது மட்டுமல்லாமல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.

Offline Yousuf

யூதர்களுடன் ஒப்பந்தம்

நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை அதைச் செய்யவுமில்லை.

நபி (ஸல்) யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.

3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.

4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.

6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.

8 ) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.

10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.

11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.

12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அந்நாட்டில் முழுமையான அதிகாரமும் பேச்சுரிமையும் முஸ்லிம்களுக்கே இருந்தன.

அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதன் சில விவரங்களை அடுத்துவரும் பக்கங்களில் காண்போம்.
« Last Edit: November 25, 2011, 07:16:56 PM by Yousuf »

Offline Yousuf

ஆயுதமேந்தித் தாக்குதல்

குறைஷியர்களின் அச்சுறுத்துதலும் இப்னு உபையுடன் தொடர்பும்

மக்காவில் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பாளர்கள் அளவிலா துன்பங்களைக் கொடுத்து வந்தார்கள். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல நாடிய போது அவர்களைப் பல விதத்திலும் தடுத்தார்கள். முஸ்லிம்களுக்குச் சொல்லிலடங்கா கொடுமைகளை அளித்தனர். உண்மையில் அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களிடம் போர் செய்வதும், அவர்களுடைய சொத்துகளைச் சூறையாடுவதும் தகும் என்று இதற்கு முன்னுள்ள பக்கங்களில் கூறியிருக்கிறோம். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் அந்த நிராகரிப்போர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களது அடாவடி அழிச்சாட்டியங்களை முடித்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தங்களிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களே என்ற கோபத்தால் கொதித்தெழுந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை மதீனாவிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இதற்காக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். அவன் அந்நேரத்தில் இணைவைப்பவனாக இருந்தான். அவனுடன் மக்காவாசிகள் தொடர்பு கொண்டதன் காரணம் என்னவெனில், நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் அவன்தான் மதீனாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். இதனால் அவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணைவைப்போருக்கும் கடிதம் எழுதினர். அதில் அவர்கள் கூறியதாவது:

“நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்தவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்! நிச்சயமாக நீங்கள் அவரிடம் போர் செய்ய வேண்டும் அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும். அல்லது நாங்கள் (மக்காவாசிகள்) அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்களின் போர் வீரர்களைக் கொன்று குவித்து, உங்கள் பெண்களின் கற்புகளைச் சூறையாடுவோம்”- இவ்வாறு அக்கடிதத்தில் கூறியிருந்தனர். (ஸுனன் அபூதாவூது)

ஏற்கனவே, நபி (ஸல்) தனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார் என்று அப்துல்லாஹ் இப்னு உபை எண்ணி வந்ததால், நபியவர்களின் மீது கடுமையான வகையில் பகைமை கொண்டிருந்தான். எனவே, மக்கா முஷ்ரிக்குகள் கூறிய வார்த்தையை உடனடியாகச் செயல்படுத்தினான். இது சம்பந்தமாக அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:

குறைஷிகளின் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபைம்க்கும், அவனுடன் இருந்த சிலை வணங்கிகளுக்கும் கிடைத்த போது அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் போர் செய்வதற்கு ஆயத்தமானார்கள். அவர்கள் ஆயத்தமாகும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்களை சந்திக்கப் போனார்கள். அப்போது அவர்களிடம், “குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிக பயந்துவிட்டீர்களோ! அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும் சூழ்ச்சிதான் மிக மோசமானது. என்ன! அவர்களின் சொல்லுக்கிணங்க உங்களது பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?” என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (ஸல்) கேட்டதும், கூடி இருந்தவர்கள் மறுப்பின்றி பிரிந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி)

அந்நேரத்தில் தனது தோழர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து போர் செய்வதிலிருந்து இப்னு உபை விலகிக் கொண்டாலும், சமயமேற்படும் போதெல்லாம் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்வான். அத்துடன் தனது உதவிக்காக யூதர்களையும் சேர்த்துக் கொள்வான். ஆனால், அல்லாஹ்வின் அருளால் அவர்களது வஞ்சகத் தீ மூழும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் ஞானமிக்க நடவடிக்கை அதை அணைத்துக் கொண்டே இருந்தது.

அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

இந்நிகழ்ச்சிக்குப் பின்பு ஸஅது இப்னு முஆத் (ரழி) உம்ரா செய்வதற்காக மக்கா சென்று உமய்யா இப்னு கலஃபிடம் தங்கினார்கள். உமய்யாவிடம் “நான் கஅபாவை வலம் வருவதற்காக மக்கள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அழைத்துச் செல்” என்று கூறினார்கள். உமய்யா மதிய நேரத்திற்குச் சற்று முன் அவர்களை அழைத்துக் கொண்டு கஅபாவிற்குச் சென்றான்.

அந்த இருவரையும் வழியில் அபூஜஹ்ல் சந்தித்தான். அவன் உமய்யாவிடம் “அபூ ஸஃப்வானே!” உன்னுடன் இருப்பவர் யார்?” என்று கேட்டான். அதற்கு உமய்யா “இவர் ஸஅது” என்றான். அப்போது அபூஜஹ்ல் ஸஅதிடம் “நீ மக்காவில் நிம்மதியாக தவாஃப் செய்ய வந்துவிட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ அபூ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன் திரும்ப முடியாது” என்று கூறினான். இதைக் கேட்ட ஸஅது, அவனது சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்தி “நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தவாஃப் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த விடமாட்டேன்” என்று எச்சரித்தார். (ஸஹீஹுல் புகாரி)

குறைஷிகளின் மிரட்டல்

உண்மையில், குறைஷிகள் இதைவிட மிகப் பெரிய தீமை ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற உறுதியில் இருந்தனர். அதாவது, அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். இது வெறும் கற்பனையோ அல்லது யூகமோ அல்ல! குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி (ஸல்) அவர்கள் இரவில் தூக்கமில்லாமல் இருந்தார்கள் அல்லது தங்களின் தோழர்களின் பாதுகாப்பில் இரவைக் கழித்தார்கள்.

இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) மதீனாவுக்கு வந்த காலத்தில் ஓரிரவு விழித்திருந்தார்கள். அப்போது “எனது தோழர்களில் நல்லவர் ஒருவர் இன்று இரவு என்னை பாதுகாக்க வேண்டுமே” என்றார்கள். அங்கு ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள் “அது யார்?” என்று கேட்கவே, வந்தவர் “நான்தான் ஸஅது இப்னு அபீவக்காஸ்” என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் “நீர் ஏன் வந்தீர்?” என்று வினவினார்கள். அதற்கவர் “நபி (ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறேன்” என்றார். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஸஅதுக்காக துஆ (பிரார்த்தனைச்) செய்து விட்டு தூங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் இவ்வாறு பாதுகாத்தது சில இரவுகளில் மட்டுமல்ல மாறாக, மதீனா வந்ததிலிருந்து தொடர்ந்து நபித்தோழர்களில் யாராவது ஒருவர் இரவில் கண் விழித்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்.

இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: இரவில் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாராவது ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பார்.

(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை (எந்த குறைவுமின்றி மக்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யா விட்டால் அவனுடையத் தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5:67)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) தாங்கள் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி “மக்களே! என்னிடமிருந்து திரும்பிச் செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாகப் பாதுகாத்து விட்டான்” என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

ஆபத்து நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும் இருந்தது. இதைப் பற்றி உபை இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களும் முஹாஜிர் தோழர்களும் மதீனாவில் அன்சாரிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல் குறைஷிகளும், மற்ற அரபுகளும் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதன் காரணமாக நபித்தோழர்கள் இரவு தூங்கும் போதும் காலையில் விழிக்கும் போதும் தற்காப்புக்காக ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருந்தனர்.

Offline Yousuf

போர் புரிய அனுமதி

முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், குறைஷிகள் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகிக் கொள்ளாமல் வம்புத்தனத்தையும், அழிச்சாட்டியத்தையும் தொடர்ந்து கொண்டே சென்றனர். இதன் காரணமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கினான். ஆனால், போரைக் கடமையாக்கவில்லை. நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதிக்கப்பட்டது.

(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:39)

மேலும், இவ்வாறு அறப்போர் செய்வது அனுமதிக்கப்பட்டதற்குரிய காரணத்தையும் அடுத்துள்ள வசனங்களில் அல்லாஹ் விவரித்தான். அதாவது, அசத்தியத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.

அவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் ஆட்சியைக் கொடுத்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள் ஜகாத்தும் கொடுப்பார்கள் நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22:41)

இந்த அனுமதி குறைஷிகளிடம் போர் செய்வதற்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்பு தேவைக்கேற்ப போருக்கான சட்டம் மாற்றப்பட்டு, பொதுவாக போர் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. குறைஷிகளுடனும் இனணவைக்கும் மற்றவர்களுடனும் போர் செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைக்குப் பிறகு ஏற்பட்ட போர்களில் நடந்த சம்பவங்களைக் கூறுவதற்கு முன் இப்போர்கள் ஏன் கடமையாக்கப்பட்டன என்பதற்கான காரணங்களை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

1) முதல் காரணம்: இணைவைக்கும் குறைஷிகளை எதிரிகளாகக் கருதியது. ஏனெனில், அவர்கள்தான் முஸ்லிம்களிடம் முதன் முதலாக பகைமையைத் தொடங்கினர். எனவே, முஸ்லிம்கள் குறைஷிகளை எதிர்த்து போர் செய்வது மட்டுமில்லாமல் குறைஷிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று எண்ணுவது நியதியே! ஆனால், குறைஷிகளைத் தவிர மற்ற அரபிகள் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்யாததால் அவர்களை எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் போர் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

2) இரண்டாவது காரணம்: இணைவைக்கும் அரபிகளில் யார் குறைஷிகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களிடமும், வேறு யாராவது முஸ்லிம்களைப் பகைத்தால் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

3) மூன்றாவது காரணம்: உடன்படிக்கை செய்து கொண்ட யூதர்களில் எவர் உடன்படிக்கைக்கு மோசடி செய்கிறாரோ அல்லது முஸ்லிம்களின் எதிரிகளாகிய இணை வைப்பாளருக்கு ஆதரவு தருகிறாரோ, அத்தகைய யூதர்களின் உடன்படிக்கையை முறித்துக் கொள்வதுடன் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

4) நான்காவது காரணம்: வேதம் கொடுக்கப்பட்டவர்களில் யார் முஸ்லிம்களைப் பகைப்பார்களோ, முஸ்லிம்களிடம் சண்டையிடுவார்களோ அவர்களிடம் போர் செய்ய வேண்டும். அவர்கள் இழிவுபட்டு வரி செலுத்தும் வரை இந்தப் போர் நீடிக்கும். “வேதம் கொடுக்கப்பட்டவர்” என்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று.

5) ஐந்தாவது காரணம்: முஷ்ரிக்கு (இணைவைப்பவர்) அல்லது யூதர் அல்லது கிறிஸ்தவர் அல்லது எவராக இருப்பினும் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முரண்படாமல் இருக்கும் வரை அவருடைய உயிர், பொருள், மானம் அனைத்தும் காக்கப்படும். அவருடைய கேள்வி கணக்கு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். அதாவது, உள்ளரங்கமான அல்லது மறைமுகமான அவரது செயல்களைப் பற்றி அல்லாஹ் விசாரணை செய்து கொள்வான். அதைக் கண்காணிக்க வேண்டியது நமது கடமையல்ல! (இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுவது என்றால், எடுத்துக்காட்டாக -கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, கிளர்ச்சி செய்வது- போன்ற செயல்களில் ஈடுபடுவது. அப்படி ஈடுபட்டால், அதற்குரிய தண்டனை உலகிலேயே அவருக்குக் கிடைக்கும்.)

போருக்கான அனுமதி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்தவுடன் குறைஷிகளின் வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம் செல்லும் முக்கிய வழியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை வகுத்தார்கள்.

முதலாவது திட்டம்:-

மக்காவாசிகளின் முக்கிய வியாபார வழித்தடத்திற்கு அருகில் வசிக்கும் கோத்திரத்தாருடனும், இந்த வியாபார வழித்தடத்திற்கும் மதீனாவிற்குமிடையில் வசிக்கும் கோத்திரத்தாருடனும் நபி (ஸல்) உடன்படிக்கை செய்து கொள்வது.

அதாவது, அந்தக் கோத்திரத்தார் முஸ்லிம்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும். அப்படி நட்புறவோடு நடந்து கொள்ளவில்லை என்றாலும் முஸ்லிம்களுடன் பகைமை காட்டக் கூடாது. இவ்வகையில் போர் சம்பந்தமான ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் ஜுஹைனா கிளையினருடனும் ஓர் உடன்படிக்கையை நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்டார்கள். இந்த ஜுஹைனா கிளையினரின் வீடுகள் மதீனாவைச் சுற்றி மூன்று இடங்களில் இருந்தன. போரின் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின் இன்னும் பல கோத்திரத்தாருடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார்கள். இதனுடைய விவரங்கள் பின்னால் வர உள்ளன.

இரண்டாவது திட்டம்:-

மக்காவாசிகளின் இந்த வியாபாரப் பாதையை நோக்கி ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல படைப் பிரிவுகளை அனுப்பி வைப்பது.

(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் ‘கஸ்வா’ என்றும் அவர்கள் கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு ‘ஸய்யா’ என்றும் கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை ‘போர்’ என்றும் ஸய்யாவை ‘படைப் பிரிவு’ என்றும் குறிப்பிடுகிறோம்.)

Offline Yousuf

இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்

போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின், மேற்கூறப்பட்ட இரண்டு திட்டங்களையும் அமல்படுத்துவதற்காக ராணுவ நடவடிக்கைகளை நபி (ஸல்) தொடங்கினார்கள். அதாவது, இந்த நடவடிக்கைகள் ஒரு கண்காணிப்பு ரோந்துப் பணிகளைப் போன்று அமைந்திருந்தன. இதனுடைய அடிப்படை நோக்கங்கள் என்னவெனில்:

மதீனாவைச் சுற்றியுள்ள அனைத்து தரை மார்க்கங்களையும், பொது வழிகளையும் நன்கு அறிந்து கொள்ளுதல் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவ்வாறே மக்காவை நோக்கி செல்லும் அனைத்து வழிகளையும் அறிந்து கொள்ளுதல்.

இந்த வழிகளில் குடியிருக்கும் அனைத்துக் கோத்திரத்தாருடனும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுதல்.

முஸ்லிம்கள் இப்போது பலமடைந்து விட்டார்கள் வலுபெற்றுவிட்டார்கள் பழைய இயலாமையிலிருந்து விடுதலையடைந்து விட்டார்கள் என்று மதீனாவில் உள்ள இணை வைப்பவர்களுக்கும், யூதர்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம அரபிகளுக்கும் உணர்த்துதல்.

அத்துமீறி நடந்து கொண்டிருந்த குறைஷிகளுக்கு அவர்களின் முடிவு என்னவாகும் என்பதை எச்சரிக்கை செய்தல். ஏனெனில், இந்த எச்சரிக்கையின் விளைவாக தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தி வரும் தங்களது அழிச்சாட்டியங்களை விட்டு அவர்கள் விலகிக் கொள்ளலாம். தங்களதுப் பொருளாதார வழிகளும் பொருளாதாரங்களும் வெகு விரைவில் மிகப் பயங்கரமாக பாதிக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படலாம். மேலும், முஸ்லிம்கள் அவர்களது நாட்டுக்குள் இருக்கும் போது அவர்களுடன் போர் செய்யும் எண்ணத்தை கைவிடலாம். பிறரை அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து தடுக்காமல் இருக்கலாம். மேலும், மக்காவிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து விலகிக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரேபிய தீபகற்பத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தைச் சுதந்திரமாக எடுத்து வைக்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் பெறுவார்கள்.

படைப் பிரிவுகளின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம்:”

1) ‘ஸய்ஃபுல் பஹர்’

ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா (ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். ‘ஈஸ்’ என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள ‘ஸய்ஃபுல் பஹ்ர்’ எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

2) ‘ராபிக்’

ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் ‘ராபிக்’ என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் ‘பத்தன் ராபிக்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.

காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல்முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.

3. ‘கர்ரார்’

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் ‘கர்ரார்’ என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் ‘கர்ரார்’ என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர்.

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

4) ‘அப்வா’ (அ) ‘வத்தான்’

ஹிஜ் 2, ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக ‘அல்அப்வா’ அல்லது ‘வத்தான்’ என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. இந்தப் போருக்குச் செல்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதாவை மதீனாவில் தனக்குக் கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள். இந்த போரின் போது ‘ழம்ரா’ கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டதாவது:

“இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது ‘ழம்ரா’ கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம். ழம்ரா கிளையினர் தங்களது உயிர், பொருள் அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே! அவர்களிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை செய்பவர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக போரில் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும் உதவ வரவேண்டும். கடல் வற்றினாலும் இந்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்.”

இதுதான் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்தார்கள். இந்தப் போரிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

5) ‘பூவாத்“

ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் ‘ரழ்வா’ என்ற மலைக்கருகில் உள்ள ‘பூவாத்’ என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக் கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆதை பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

Offline Yousuf

பெரிய பத்ர் போர்

போருக்குரிய காரணம்

“உஷைரா’ என்ற போரைப் பற்றி நாம் முன்பு குறிப்பிட்டபோது மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது என்று கூறியிருந்தோம். இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். “இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, செல்வங்களுக்குப் பதில் சண்டை நிகழுமென்று அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாததால் இப்பயணத்தில் கலந்து கொள்வது அவரவரின் விருப்பம் என்று நபி (ஸல்) விட்டு விட்டார்கள். இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.

இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள். அவர்களுடன் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். அதாவது 82 அல்லது 83 அல்லது 84 முஹாஜிர்களும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 61 அன்ஸாகளும், கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 170 அன்ஸாகளும் இருந்தனர். மதீனாவிலிருந்து வெளியேறும் போது எவ்வித ஆரவாரமும் இல்லாமல் குறைவான தயாரிப்புடன்தான் முஸ்லிம்கள் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளே இருந்தன. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறிமாறி பயணம் செய்தனர். நபி (ஸல்) மற்றும் அலீ, மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி (ரழி) ஆகிய மூவரும் ஒரே ஒட்டகத்தில் மாறிமாறி பயணம் செய்தனர்.

இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா’ என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.

இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை ‘முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த’ (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.

படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.

1) முஹாஜிர்களின் படை: இதற்குரிய கொடியை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இக்கொடிக்கு ‘உகாப்’ என்று சொல்லப்பட்டது.

2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைகளின் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.


படையின் வலப் பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப் பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.

இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

நபி (ஸல்) அவர்கள் சரியான தயாரிப்பு இல்லாத இப்படையுடன் மதீனாவின் வலப் பக்கத்திலிருந்து வெளியேறி மக்காவை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் சென்றார்கள். ‘ரவ்ஹா’ என்ற கிணற்றை அடைந்து, அங்கு தங்கிவிட்டு மக்காவின் பிரதான பாதையை தனது இடப்பக்கத்தில் விட்டுவிட்டு வலப்பக்கமாக ‘நாஸியா’ என்ற இடம் வழியாக வெளியேறி பத்ரை நோக்கி சென்றார்கள். ‘நாஸியா’ என்ற இடத்தின் ஓரமாக பயணித்து அங்குள்ள பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். அந்தப் பள்ளத்தாக்கிற்கு பெயர் ‘ருஹ்கான்’ எனப்படும். அது நாஸியா மற்றும் ‘ஸஃப்ரா’ என்ற இடத்திற்கு மத்தியிலுள்ள பள்ளத்தாக்காகும்.

பின்பு ஸஃப்ராவின் குறுகலான வழியாகச் சென்று ஸஃப்ராவை அடைந்தார்கள். ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கி, பஸ்பஸ் இப்னு அம்ர் அல் ஜுஹனி, அதி இப்னு அபூஸக்பா அல் ஜுஹ்னி (ரழி) ஆகிய இருவரையும் பத்ர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தின் செய்தியைத் துப்பறிந்து வருமாறு அனுப்பினார்கள்.

Offline Yousuf

மக்காவில் எச்சரிப்பவர்

வியாபாரக் கூட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அபூஸுஃப்யான் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்தார். மக்காவின் பாதை இப்போது ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் அறிந்திருந்தார். எனவே, செய்திகளைச் சேகரித்தவராகத் தனக்கு எதிர்வரும் வாகனிகளிடம் நிலைமைகளை விசாரித்துக் கொண்டே பயணித்தார். அப்போது முஹம்மது (ஸல்) தங்களது தோழர்களை அழைத்துக் கொண்டு இந்த வியாபாரக் கூட்டத்தை கைப்பற்ற புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தது. அபூஸுஃப்யான் உடனடியாக ழம்ழம் இப்னு அம்ர் அல்கிஃபா என்பவருக்கு கூலி கொடுத்து, மக்காவிற்குச் சென்று தங்களின் வியாபாரக் கூட்டத்தை காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு குறைஷிகளுக்கு அறிவிப்புச் செய்ய அனுப்பி வைத்தார். ழம்ழம் மக்காவிற்கு விரைந்து ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் ஒட்டகத்தின் மீது நின்றவராக கூக்குரலிட்டார். மேலும், ஒட்டகத்தின் மூக்கை அறுத்து அதன் மேலுள்ள கஜாவா பெட்டியையும் மாற்றி அமைத்து தனது சட்டையையும் கிழித்துக் கொண்டார். பின்பு “குறைஷிகளே! வியாபாரக் கூட்டம்! வியாபாரக் கூட்டம்! அபூ ஸுஃப்யானுடன் வந்து கொண்டிருக்கும் செல்வங்களை முஹம்மது தன் தோழர்களுடன் வழிமறிக்கக் கிளம்பிவிட்டார். அது உங்களுக்குக் கிடைக்குமென்று நான் கருதவில்லை. உதவி! உதவி! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று உரக்கக் கத்தினார்.

மக்காவாசிகள் போருக்குத் தயார்

இதைக் கேட்ட மக்காவாசிகள் அங்குமிங்கும் ஓடலானார்கள். “என்ன! முஹம்மதும் அவரது தோழர்களும் எங்களது வியாபாரக் கூட்டம், இப்னுல் ஹழ்ரமியின் வியாபாரக் கூட்டத்தைப் போன்று ஆகிவிடுமென்று எண்ணுகிறார்களா? ஒருக்காலும் அவ்வாறு ஆகாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எதிர்பார்க்காதது நடக்கப் போகிறது. அதை அவர் நன்கு அறிந்து கொள்வார்” என்று பேசிக் கொண்டனர். மக்காவில் உள்ள அனைவரும் வெளியேறத் தயாரானார்கள். அப்படி தன்னால் முடியவில்லையானாலும் தனக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பி வைத்தார்கள். மக்காவிலுள்ள பிரசித்திபெற்ற பிரமுகர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ள முடியாத அபூலஹப் மட்டும் தனக்குக் கடன் தரவேண்டிய ஒருவரை தனக்குப் பகரமாக அனுப்பினான். மேலும், குறைஷிகள் தங்களைச் சுற்றியுள்ள அரபியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தனர். ‘அதீ’ கிளையினரைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் அதில் கலந்து கொண்டனர். ‘அதீ’ கிளையினரிலிருந்து ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை.

மக்கா நகர படையின் அளவு

மக்கா படை புறப்படும் போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான். இப்படைக்கு செலவு செய்வதற்குரிய பொறுப்பைக் குறைஷிகளின் ஒன்பது முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் ஒன்பது ஒட்டகம் மற்றொரு நாள் பத்து ஒட்டகம் என அறுத்து உணவளித்தனர்.

பக்ர் கிளையினரை அஞ்சுதல்

மக்காவின் படை புறப்படுவதற்கு ஒன்றுகூடிய போது பக்ர் கிளையினரைப் பற்றிய நினைவு அவர்களுக்கு வந்தது. குறைஷிகளுக்கும் இவர்களுக்குமிடையில் நீண்ட காலமாகப் பகைமை இருந்தது. இவர்கள் பின்புறமாகத் தங்களை தாக்கிவிட்டால் இரு நெருப்புக்கிடையில் சிக்கிக் கொள்வோமே என்று பயந்து பின்வாங்கினர். ஆனால், அந்நேரத்தில் பக்ர் கிளையினரின் முக்கிய பிரிவான கினானாவின் தலைவர் சுராகா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமின் உருவத்தில் ஷைத்தான் தோற்றமளித்து “கினானா கிளையினர் உங்களுக்குப் பின்புறமாக தாக்குவதிலிருந்து நான் பாதுகாப்பளிக்கிறேன். நீங்கள் துணிந்து செல்லலாம்” என்று கூறினான்.

மக்காவின் படை புறப்படுகிறது

இப்படை தங்களது இல்லங்களிலிருந்து புறப்பட்ட நிலையை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்:

“பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ர்’ போருக்குப்) புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர்...” (அல்குர்ஆன் 8:47)

அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்வதற்காக, தங்களது முழு தயாரிப்புடனும் ஆயுதங்களுடனும் புறப்பட்டனர். மேலும், முஸ்லிம்கள் தங்களது வியாபாரக் கூட்டத்தைத் தாக்குவதற்குத் துணிவு கொண்டதைப் பார்த்து மிகுந்த கோபத்துடனும் வெறியுடனும் புறப்பட்டனர்.

மிக விரைவாக பத்ரை நோக்கி மக்காவின் வடப்புற வழியாக பயணித்தனர். ‘உஸ்வான்’ பள்ளத்தாக்கு, பிறகு குதைத், பிறகு ஜுஹ்பாவை அடைந்தனர். அது சமயம் அபூ ஸுஃப்யானிடமிருந்து புதிய தகவல் ஒன்று வந்தது. அதாவது, “நீங்கள் உங்களது வியாபாரக் கூட்டத்தையும், உங்களது செல்வங்களையும், ஆட்களையும் பாதுகாப்பதற்காகத்தான் மக்காவிலிருந்து புறப்பட்டீர்கள். அல்லாஹ் அவை அனைத்தையும் பாதுகாத்து விட்டான். ஆகவே, நீங்கள் திரும்பி விடுங்கள்” என்று அபூஸுஃப்யான் எழுதியிருந்தார்.

வியாபாரக் கூட்டம் தப்பித்தது

அபூ ஸுஃப்யானின் நிலைமைப் பற்றி சிறிது பார்ப்போம்:

அபூ ஸுஃப்யான் மக்காவை நோக்கிய பிரதான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மிகவும் சுதாரிப்புடன் நிலைமைகளை நன்கு அலசி ஆராய்ந்து கொண்டு தன்னுடைய வியாபாரக் கூட்டத்தை வழிநடத்திச் சென்றார். பத்ருக்கு அருகில் மஜ்தீ இப்னு அம்ரை சந்தித்தார். அவரிடம் “மதீனாவின் படைகளை நீங்கள் பார்த்தீர்களா?” என்று விசாரித்தார். அதற்கவர் “நான் இங்கு புதிதாக யாரையும் பார்க்கவில்லை. எனினும், இரு வாகனிகள் இந்த நீர் தடாகத்திற்கு அருகில் தங்களது ஒட்டகங்களைப் படுக்க வைத்தனர். பின்பு, தங்களது தோல் பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்” என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன், அபூ ஸுஃப்யான் அவர்கள் ஒட்டகங்களைப் படுக்க வைத்திருந்த இடத்திற்கு விரைந்தார். அந்த ஒட்டகங்களின் சாணங்களைக் கிளறி அதில் பேரீத்தங்கொட்டைகள் இருப்பதைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது யஸ்ப் (மதீனா) வாசிகளின் ஒட்டக உணவாகும் என்று கூறி தனது வியாபாரக் கூட்டத்திடம் விரைந்து வந்து அதன் பயண திசையை மேற்கே, கடற்கரை பகுதியை நோக்கி மாற்றினார். பத்ர் வழியாக மக்கா நோக்கி செல்லும் பிரதான பாதையை இடது பக்கத்தில் விட்டுவிட்டார். தனது இந்த தந்திரத்தின் மூலம் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். இதற்குப் பின்பே நாம் முன்பு கூறிய கடிதத்தை மக்காவின் படையினருக்கு எழுதியனுப்பினார்.

திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

அபூஸுஃப்யான் எழுதிய கடிதம் குறைஷிகளுக்கு கிடைத்த போது அவர்கள் அனைவரும் திரும்பிவிடலாம் என்றே எண்ணினர். ஆனால், குறைஷிகளின் அட்டூழியக்காரன் அபூஜஹ்ல் கர்வத்துடன் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் திரும்பமாட்டோம் நாங்கள் பத்ருக்குச் செல்வோம் அங்கு மூன்று நாட்கள் தங்குவோம் ஒட்டகங்களை அறுத்து சமைத்து சாப்பிடுவோம் மது அருந்துவோம் அடிமைப் பெண்கள் இசைப்பாடுவர் எங்களைப் பற்றியும் எங்களது பயணத்தைப் பற்றியும், எங்கள் கூட்டத்தைப் பற்றியும் அரபிகள் கேள்விப்படுவார்கள். அதனால் எங்களை எப்பொழுதும் பயந்தே வாழ்வார்கள்” என்று கூறினான்.

அபூஜஹ்லுக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே ஆக வேண்டுமென்று ஆலோசனைக் கூறினார். ஆனால், அவரது பேச்சைப் பலர் செவிமடுக்கவில்லை. ஆனால், இவருக்கு நண்பர்களாக இருந்த ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். இந்தப் போரில் ஜுஹ்ராவினருக்கு அக்னஸ்தான் தலைவராக இருந்தார். எனவே, ஜுஹ்ரா கிளையினரில் எவரும் போரில் கலந்து கொள்ளாமல் அக்னஸுடன் திரும்பி விட்டனர். இவர்கள் ஏறக்குறைய 300 நபர்கள் இருந்தனர். பத்ர் போர் நடந்து முடிந்தபின் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியையும் நஷ்டத்தையும் பார்த்த ஜுஹ்ரா கிளையினர் அக்னஸின் ஆலோசனையை பெரிதும் மெச்சினர். அதற்குப் பின் அக்னஸ் ஜுஹ்ராவனரிடம் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் என்றென்றும் இருந்தார்.

ஹாஷிம் கிளையினரும் திரும்பிட நாடவே நாங்கள் திரும்பும் வரை நீங்கள் திரும்பக் கூடாதென அபூஜஹ்ல் அவர்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்றான்.

இவ்வாறு ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் போரிடாமல் திரும்பிவிடவே, மீதமுள்ள 1000 பேர் கொண்ட படை பத்ரை நோக்கிக் கிளம்பியது. இவர்கள் தொடர்ந்து சென்று பத்ர் பள்ளத்தாக்கில் ‘அல் உத்வதுல் குஸ்வா’ என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.

Offline Yousuf

இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

மதீனா படையின் ஒற்றர்கள், நபி (ஸல்) ‘தஃபிரான்’ பள்ளத்தாக்கில் இருக்கும் போது அபூஸுஃப்யானின் வியாபாரக் கூட்டம் மற்றும் மக்கா படை ஆகியவற்றின் நிலைமைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வந்தனர். ஒற்றர்கள் கூறிய செய்திகளை நன்கு ஆராய்ந்த பின் கண்டிப்பாக அபாயகரமான போரைச் சந்திக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நபி (ஸல்) வந்தார்கள். மக்கா படைகளை எதிர்க்காமல் விட்டுவிட்டால் அந்தப் பகுதியில் அவர்கள் தங்களின் ராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தி விடுவார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு அந்தப் பகுதி மக்களிடம் கேவலமும் அவமானமும் ஏற்படலாம். இஸ்லாமிய அழைப்புப் பணி தனது வலிமையை இழந்து விடலாம். இஸ்லாமின் மீது வெறுப்பும் பகைமையும் கொண்ட ஒவ்வொருவரும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய துணிவு கொள்ளலாம். இவற்றை கருத்தில் கொண்டு நபி (ஸல்) மக்கா படையினரை எதிர்த்தே ஆகவேண்டுமென்ற உறுதியான முடிவுக்கு வந்தார்கள்.

முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பி விடுவதால் மக்கா எதிரிகள் மதீனாவரை படையெடுத்து வரமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்திரவாதமுமில்லை. ஆகவே, ஒருவேளை முஸ்லிம்கள் மதீனா திரும்பியிருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரும் மற்றவர்களிடம் அவர்களைப் பற்றிய அச்சமற்றத் தன்மையும், துணிவும் பிறந்திருக்கும்.

ஆலோசனை சபை

திடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை சபையைக் கூட்டினார்கள். அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது படையினருடனும் அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள். அப்போது சிலருடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கின. இரத்தம் சிந்தும்படியானப் போரை பயந்தனர். இவர்களைப் பற்றிதான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இந்த உண்மையான விஷயத்தில் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! (அல்குர்ஆன் 8:5, 6)

ஆனால், படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள் அழகாகப் பேசி முடித்தார்கள். பின்பு உமர் (ரழி) எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள். பின்பு மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,

“மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.” (அல்குர்ஆன் 5:24)

என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ‘பர்குல் ஃகிமாது“” என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத்துணிவுடன் வருவோம்.” இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறிமுடித்தார்.

அவன் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

இந்த மூன்று தளபதிகளும் முஹாஜிர்களில் உள்ளவர்கள். முஹாஜிர்கள் படையில் மிகக் குறைவானவர்களாக இருந்ததால், நபி (ஸல்) அன்சாரி தளபதிகளின் கருத்துகளை அறிய விரும்பினார்கள். ஏனெனில், இவர்கள்தான் அதிகமாக இருந்தனர். மேலும், போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அன்சாரிகளையே அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நபி (ஸல்) அகபாவில் செய்து கொண்ட உடன்படிக்கையில் அன்சாரிகள் மதீனாவிற்கு வெளியில் சென்று போர் புரிய வேண்டுமென்ற நிபந்தனை இல்லாமலிருந்தது. ஆகவே தான் நபி (ஸல்) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு “மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே” என்றார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:

“நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவிமடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மை யாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.”

மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டிவிடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்’ பகுதியில் உள்ள ‘பர்க்’ என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்” என்று ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

ஸஅதின் பேச்சையும் அவன் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு “நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போது பார்ப்பதைப் போன்று இருக்கின்றது” என்று கூறினார்கள்.

Offline Yousuf

இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

பின்பு நபி (ஸல்) ‘ஃதபிரான்’ என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, அஸாஃபிர் வழியாகச் சென்று, ‘தப்பா’ என்ற இடத்தை அடைந்து, பின்பு அங்கிருந்து மலை போன்ற மிகப் பெரிய மணற் குன்றான ஹன்னானை வலப்பக்கம் விட்டுவிட்டு பத்ருக்குச் சமீபமாக வந்திறங்கினார்கள்.

கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

அங்கிருந்து நபி (ஸல்) தனது குகைத் தோழர் அபூபக்ருடன் மக்கா படைகளைக் கண்காணிக்கப் புறப்பட்டார்கள். அவ்விருவரும் மக்கா படையினர் எங்கு கூடாரமிட்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு வயது முதிர்ந்தவரைப் பார்த்தார்கள். அவரிடம் “குறைஷிகளைப் பற்றியும் முஹம்மது மற்றும் அவரது தோழர்களைப் பற்றியும் உமக்குத் தெரியுமா?” என்று விசாரித்தார்கள். அவர் தங்களை யார் என விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள் இரு படைகளைப் பற்றியும் விசாரித்தார்கள். ஆனால், அந்த வயது முதிர்ந்தவரோ “நீங்கள் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாத வரை நான் உங்களுக்கு எந்த செய்தியையும் கூறமாட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நாங்கள் கேட்டதை நீர் கூறினால் நாங்கள் யார் என்பதை உமக்குக் கூறுவோம்” என்றார்கள். அதற்கு அந்த வயோதிகர் “அவ்வாறுதானே!” என்று கேட்க அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள்.

அதற்குப் பின் அந்த வயோதிகர் “முஹம்மதும் அவன் தோழர்களும் இன்ன நாளில் மதீனாவிலிருந்து வெளியேறினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இந்த செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இந்த இடத்தில் இருப்பார்கள்” என்று மதீனாவின் படை இருந்த இடத்தை சரியாகக் கூறினார். மேலும், “குறைஷிகள் இந்த நாளில் மக்காவிலிருந்து கிளம்பினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இச்செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இன்ன இடத்தில் இருப்பார்கள்” என்று மக்கா படை தங்கியிருந்த இடத்தைச் சரியாகக் கூறினார்.

“பின்பு நீங்கள் யார்?” என்று அவர் கேட்க, நபி (ஸல்) “நாங்கள் (மாஃ) தண்ணீலிருந்து வந்திருக்கிறோம்” என்று கூறி, அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் “என்ன! தண்ணீலிருந்து வந்தவர்களா? எந்தத் தண்ணீலிருந்து...? இராக் நாட்டு தண்ணீலிருந்தா...?” என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

அன்றைய மாலை எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வருவதற்காக முஹாஜிர்களில் உள்ள மூன்று முக்கிய தளபதிகளை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அலீ இப்னு அபூ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்கள். இவர்கள் பத்ரின் தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) தொழுது கொண்டிருந்தார்கள். அவ்விருவரிடமும் இஸ்லாமிய படையினர் விசாரிக்கவே அவர்கள், “நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம்” என்றனர். இவர்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தினராக இருக்கலாம் என்றெண்ணி இவர்களின் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையாக அடித்தனர். அடிக்குப் பயந்த அவ்விருவரும் “ஆம்! நாங்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்” என்றனர். உடனே அவ்விருவரையும் அடிக்காமல் விட்டுவிட்டனர்.

நபி (ஸல்) தொழுது முடித்தவுடன் தங்களது படையினரை கண்டிக்கும் விதமாக “அவ்விருவரும் உங்களிடம் உண்மை கூறியபோது அடித்தீர்கள். ஆனால் பொய் கூறியபோது அவர்களை விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரும் உண்மையைத்தான் கூறினார்கள். அவர்கள் குறைஷிகளுக்காக வந்தவர்களே!” என்று கூறினார்கள்.

பின்பு அவ்விருவரையும் அழைத்து “குறைஷிகளைப் பற்றி நீங்கள் எனக்கு சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) கேட்கவே, “நீங்கள் பார்க்கும் அந்தப் பெரிய மேட்டிற்குப் பின் குறைஷிகள் இருக்கிறார்கள்” என்றனர். “அவர்கள் எத்தனை நபர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “மிக அதிகமாக இருக்கின்றனர்” என்று அவர்கள் கூறினார்கள். “அவர்களிடம் எப்படிப்பட்ட தயாரிப்புகள் உள்ளன” என்று நபி (ஸல்) கேட்கவே, அவர்கள் “தெரியாது” என்று கூறினர். நபி (ஸல்) “அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “ஒரு நாள் ஒன்பது. மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) “அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை இருக்கலாம்” என்றார்கள். பின்பு அவர்களிடம் “குறைஷி பிரமுகர்களில் யார் யார் வந்திருக்கிறார்கள்?” என்று நபி (ஸல்) கேட்க “உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஹக்கீம் இப்னு ஜாம், நவ்ஃபல் இப்னு குவைலித், ஹாரிஸ் இப்னு ஆமிர், துஅய்மா இப்னு அதி, நழ்ர் இப்னு ஹாரிஸ், ஜம்ஆ இப்னு அஸ்வத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உமய்யா இப்னு கலஃப் ஆகியோரும் மற்றும் பலரும் வந்திருக்கிறார்கள்” என அவ்விருவரும் கூறினர்.

நபி (ஸல்) மக்களை நோக்கி “இதோ! மக்கா தனது ஈரக் குலைகளை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கிறது” என்றார்கள்.

மழை பொழிதல்


அல்லாஹ் அன்றிரவு மழையை இறக்கினான். அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக இருந்தது. அது அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கோ அது மென்மையான தூறலாக இருந்தது. அம்மழையினால் அல்லாஹ் முஸ்லிம்களைச் சுத்தப்படுத்தினான். ஷைத்தானின் அசுத்தத்தை அவர்களை விட்டும் அகற்றினான். அங்கிருந்த மணற்பாங்கான பூமியை முஸ்லிம்கள் தங்குவதற்கு வசதியாக இறுக்க மாக்கிக் கொடுத்தான். மேலும், அவர்களது உள்ளங்களையும் பாதங்களையும் உறுதியாக்கினான்.

Offline Yousuf

முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

இணைவைப்பவர்கள் வருவதற்குள் பத்ர் மைதானத்திற்கருகில் உள்ள நீர்நிலைகளுக்கு நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) தனது படையை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் அந்த நீர்நிலைகளை எதிரிகள் கைப்பற்ற விடாமல் தடுக்க முடியும். அல்லாஹ்வின் அருளால் இஷா நேரத்தில் பத்ரின் நீர்நிலைகளில் ஒரு நீர்நிலைக்கு அருகில் நபி (ஸல்) வந்திறங்கினார்கள். அப்போது போர் தந்திரங்களை நன்கறிந்த (ராணுவ நிபுணர்) அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நீங்கள் தங்கியதைப் பற்றி எனக்குக் கூறுங்கள். நாம் இவ்விடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது என அல்லாஹ் முடிவு செய்த இடமா இது? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும், போர் தந்திரமுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “இல்லை. இது ஒரு யோசனையும் போர் தந்திரமும்தான்” என்றார்கள்.

அதற்கவர் “அல்லாஹ்வின் தூதரே! இது தங்குவதற்குரிய இடமல்ல. நீங்கள் மக்களை அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நாம் குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்று தங்குவோம். பின்பு மற்ற அனைத்து நீர்நிலைகளையும் நாம் அழித்து விடுவோம். மேலும், ஒரு நீர் தடாகத்தை ஏற்படுத்தி அதை தண்ணீரால் நிரப்பி விடுவோம். நாளை போர் நடக்கும் போது நாம் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது” என்றார். நபி (ஸல்) அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு, “நிச்சயம் நீர் நல்ல யோசனை கூறினீர்” என்றார்கள்.

உடனே நபி (ஸல்) தங்களது படையை அழைத்துக் கொண்டு எதிரிகளுக்கு சமீபமாக உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் வந்திறங்கினார்கள். அந்நேரம் இரவின் பெரும் பகுதி கழிந்திருந்தது. பின்பு, தங்களுக்குச் சிறிய சிறிய நீர்த் தடாகங்கள் சிலவற்றை அங்குக் கட்டிக் கொண்டு மற்ற அனைத்து கிணறுகளையும் அழித்துவிட்டார்கள்.

படையை வழி நடத்துவதற்கான இடம்

முஸ்லிம்கள் அந்த கிணற்றுக்கருகில் தங்கிய போது, ஸஅது இப்னு முஆது (ரழி) “படையை வழிநடத்துவதற்காக நாங்கள் தங்களுக்கென பாதுகாப்பான ஒரு தனி இருப்பிடத்தை ஏற்படுத்துகிறோம். அப்போதுதான் அங்கிருந்து அவசர நடவடிக்கைகள் எடுக்க முடியும் வெற்றிக்குப் பதிலாக தோல்வி ஏற்பட்டாலும் அதற்குரிய சரியான திட்டத்தை நீங்கள் தீட்ட முடியும்” என்று நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனைக் கூறினார்கள்.

இதோ அவரது ஆலோசனை! அவர் கூறக் கேட்போம்:

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக உயரமான ஒரு பரணி வீட்டை கட்டுகிறோம் அதில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்குத் தேவையான வாகனங்களையும் அதற்கருகில் ஏற்பாடு செய்கிறோம் பின்பு நாளை எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது அல்லாஹ் நம்மை மிகைக்க வைத்தால், நமக்கு வெற்றி அளித்தால், அது நாம் விரும்பியவாறே நடந்ததாக இருக்கட்டும். இல்லை! அதற்கு மாற்றமாக ஏதாவது நடந்தால் நீங்கள் இந்த வாகனத்தில் அமர்ந்து எங்களுக்குப் பின்னுள்ள எங்களது கூட்டத்தனரிடம் சேர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதரே! இன்னும் பலர் இங்கு வரவில்லை எங்களை விட அவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நீங்கள் போரைச் சந்திப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை விட்டு ஒருக்காலும் அவர்கள் பின்தங்கியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் சென்றால் அவர்கள் மூலம் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அவர்கள் உங்களிடம் உண்மையுடன் நடந்து, உங்களுக்கு ஆதரவாக போரும் புரிவார்கள்.” இவ்வாறு ஸஅது (ரழி) தங்களின் சிறந்த ஆலோசனையை நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தார்.

ஸஅது (ரழி) அவர்களின் இந்த யோசனையை நபி (ஸல்) அவர்கள் கேட்டு, அவரைப் புகழ்ந்து அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். முஸ்லிம்கள் போர் மைதானத்திற்கு வடக்கிழக்கில் இருந்த உயரமான ஒரு திட்டின் மீது பரணி வீட்டை, அதில் இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்களை சுற்றி பாதுகாப்பிற்காக ஸஅது இப்னு முஆத் (ரழி) தலைமையில் சில அன்சாரி வாலிபர்களின் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

பின்பு நபி (ஸல்) தனது படையை ஒழுங்குபடுத்தினார்கள். போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று “இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தங்களது விரலால் சுட்டிக் காட்டினார்கள். பின்பு நபி (ஸல்) அங்குள்ள ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதரவுடன் இரவைக் கழித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி)

(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அதுசமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)

அது ஹிஜ்ரி 2, ரமழான் மாதம் பிறை 17 வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது. இதே மாதம் பிறை 8 அல்லது 12ல் இந்தப் படை மதீனாவிலிருந்து பத்ரை நோக்கி புறப்பட்டது.