சில வலிகள் நினைவுகளை தொடுகின்றது
சில நினைவுகள் வாதையூட்டுகிறது
வாழ்ந்திருந்தபொழுது
சாவின் கணங்களை எதிர்நோக்கியிருந்தோம்,
சாவின் விளம்பில்
வாழ்வதற்கு ஆசைப்பட்டிருந்தோம்
எல்லோரையும் போலவே
உனை பிரிந்த பின்
நீ இருந்த அறையெங்கும்
உன் சிரிப்பொலிகள் நிறைந்திருந்து
நீ விட்டுச்சென்ற ஒவ்வொரு தடயங்களும்
உன்னை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தன
கரை நோக்கி வரும் அலை போலே
வந்து, கற்களில் மோதிடும் உன் நினைவுகள்.
தத்தளிப்புகளும், இயலாமைகளும்
சூழந்த இருளினுள்ளே காத்திருந்தேன்
மீண்டும் அந்த கரையிடமே வந்து சேர்வதற்கு
எங்கெங்கோ தனியாக் நின்றிருக்கிறேன்
ஆற்றுப் பாலங்களில்,உயரக்கட்டிடங்களில்,
மலைமுகடுகளில்,
நிற்கும் இடமெல்லாம் உன்னை
தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறேன்
மீள முடியாத இடத்தை நீ அடைந்துவிட்ட பிறகும்.
திரும்பி வராத ஒன்றுக்காக காத்திருப்பதை
வாழ்வின் பிடிப்பென சொல்வதா
நிகழாத வாழ்வு ஒன்றினை
கனவாக்கி, வாழ்ந்து வாழ்ந்து பார்க்கிறேன்.
கரைப்புரண்டோடும் வெள்ளத்தின்
தத்தளிப்புகளிடையே சிக்கிக்கொண்ட
படகென நான் இருந்தேன்
உயிர் வாழவென
எதையும் பற்றிக் கொண்டு இருக்க
நான் விரும்பவில்லை.
இன்னும் சொல்லப்படாத வார்த்தைகள்
என்னிடம் மிச்சமிருந்தன
இன்னும் புரிந்து கொள்ளமுடியாத
கணங்கள் நம்மிடையே மீதமிருந்தன
ஆனால் காலம் யாருக்காகவும்
காத்திருப்பத்தில்லையே
நீ மௌனத்தின் எல்லையில் நின்று
எனக்காகவென காத்திருக்கிறாய்
நான் மீதமிருந்த சொற்களை
சேகரித்துக் கொண்டே இருந்தேன்.
புன்னகைகள் சொற்களாகி நின்றது
சொற்கள் மௌனமாகி நின்றது
மௌனம் நாடகத்தின் முடிவென நின்றிருந்தது
இந்த பெரும் நாடகத்தின் மேடையிலிருந்து
நான் ஒப்பனைகளை கலைக்க வேண்டிய நேரம் வந்திருந்தது
இந்த நாடக மேடையிலிருந்து
இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது
எல்லாவித தடைகளையும் போராட்டங்களயும்
கடந்து- நானின்று - இறுதியாய்
உன்னை அடைந்திருந்தேன்
நீ அங்கே அமைதியாய் துயில்
கொண்டிருந்தாய்
உனதருகே உன்னதமான இடம்
ஒன்றை நானும் அடந்திருந்தேன்
உனை இன்று நான் அடைந்த பின்புதான்
கடலிடம் சேரும் நதியின்
ஆதூரத்தை நான் அடைந்திருந்தேன்.
நாம் இணைந்து
சிரித்திருந்த காலமும் அழுதிருந்த காலமும்
முடிந்து, முடிவற்று நீண்டிருப்பது,
இந்த கல்லறைக்குள் அமைதியுற்று இருக்கும்
காதல் மட்டும்தான்