இறைவன் அடிக்கடி பூமிக்கு வருவதில்லை...
ஆதலால் தந்தை என்பவரை அனுப்பினாரோ...!
தினமும் நாம் வேதங்கள் கேட்பதில்லை...
ஆதலால் தந்தை சொல்லை மந்திரமாக்கினாரோ...!
நான் மொட்டாக வந்தபின்
என் தாய் காட்டிய
ஓவியம் என் தந்தை...
நான் மலராக மலர்ந்தபின்
நான் கண்டு வியந்த
காவியம் என் தந்தை...
தாய்ப்பாலின் அருமையை
என் தந்தையின்
பாச மழையிலும் உணர்ந்தேன்!
கருவறையின் பெருமையை
என் தந்தையின்
அன்பு கரங்களிலும் அறிந்தேன்!
என் வெளிச்ச கதிரவன் என் தகப்பனே...
என் வர்ண வானவில் என் தகப்பனே...
என் காடுகளை பூவனமாய்
மாற்றுபவர் என் தகப்பனே...
நான் உயரங்கள் எட்ட
ஏணியாகுபவர் என் தகப்பனே...
தந்தையின் மடியே என் சொர்க்கம்...
அவரின் அறிவுரையே என் மார்க்கம்...
தந்தையின் புன்னகையே அன்பின் அடையாளம்...
அவரின் கன்ன முத்தமே என் பொய்க்கோபத்திற்கு கடிவாளம்...
பள்ளி நாட்கள் பசுமையாகின,
என் தந்தையின் கரம்பற்றி செல்வதற்காய்...
செல்லக் கோபங்கள் வழமையாகின,
என் தந்தையின் கொஞ்சலிற்காய்...
மகள் என கர்வம் கொள்கிறேன்...
என் ராஜதந்தைக்கு இளவரசி ஆனதால்...
யுவதி என கவலை கொள்கிறேன்...
என் தந்தையின் கொஞ்சல் கிடைக்காததால்...
தந்தையின் அன்பு தோப்பில்
பட்சியாய் காற்றில் திரிந்தேன்...
தந்தையின் துடிப்பான பண்புகளால்
நல்லொழுக்கம் அறிந்தேன்...
குழந்தையாய் என்னை
அவர் தூக்கி மகிழ வைத்தார் அன்று!
குமரியாய் நானும்
அவர் பெயர் உயர்த்தி வாழ்கிறேன் இன்று!
ஆயிரம் பட்டங்கள் எனை சேரலாம்...
ஆயிரம் கௌரவங்கள் எனை சூழலாம்...
ஆயினும் அவை கண்டு எனை மறவேன்!
அவற்றை என் தந்தைக்கு பரிசாய் தருவேன்!
என் தனிப் பெயரால் நான் ஒருபோதும்
திருப்தி கொள்ளவில்லை...
என் தந்தையின் பின்னால் என் பெயர் கொண்டே
பெருமிதம் கொள்கிறேன்...
என் காலங்கள் கடக்கலாம்...
புது உறவுகள் நான் காணலாம்...
என் குணங்கள் மாறலாம்...
பல தடைகள் நான் தாண்டலாம்...
எத்தனை மாற்றங்கள் சந்திப்பினும்
என் தந்தையின் அன்பை மறவேன்...
வாழையடி வாழையாக எந்நாளும்
என் தந்தையின் புகழை கடத்துவேன்...
எழுத்துக்களால் மட்டுப்படுத்த முடியா சாகரம் என் தந்தை...
ஆயினும் அவருக்காய் ஓர் துளி கவி சமர்ப்பித்து
உச்சி குளிர்கிறது என் சிந்தை...!!!