வரும் என்று நினைக்கிறோம்
அது வருவதில்லை
வராது என்று நினைக்கிறோம்
அது வருகிறது
செத்த பின்பு எதுவும் செய்யமுடியாது
என்பதை தவிர
சாவின் மேல் எனக்கொந்த
குறையும் இல்லை
மரணம் தரும் நிம்மதியை
மரணத்தை தவிர
வேறு எதால் தரமுடியும்
மரணம் என்பது
சடுதியில் வருவது
மரணம் என்பது
சாசுவதமானது
எப்போதும் நமக்கு
ஓரடி முன்னால்
நடை பயின்று கொண்டிருக்கிறது
மரணம்
திடீரென தன் நடையை
நிறுத்திக் கொள்கிறது அது
நாம் அதன் மேல்
தடுக்கி விழுந்து
அதனுடன் ஐக்கியமாகி விடுகிறோம்
மரணம் நம் காதலி
அது இலகுவில் நம்மை
முத்தமிடாது
மரணம் பாவத்தின் சம்பளம்
நல்லவருக்கு மரணம்
பட்டுக்கம்பளம் விரிக்கும்
கெட்டவருக்கு மரணம்
முள்படுக்கையாக மாறும்